சபர்மதி பார்வை மகளை தான் பார்த்துக்கொண்டிருந்தது இப்பொழுது. வேகமாய் தனது போனில் கால் டாக்சியை அழைக்க முயன்றுகொண்டிருந்தாள் அவள்.
“இப்பவா? அதெல்லாம் வேண்டாம் இஷாந்த். நீ சமாளி. நாங்க கிளம்பறோம்…” என்று அவர் சொல்ல,
“எங்க கிளம்பறீங்க மேம்?…” என்றவன் குரலில் தாய், மகள் இருவருமே திடுக்கிட்டு பார்த்தனர்.
ஆரோன் ரிஷபன் தான் வந்திருந்தான் இஷாந்துடன். அழகாய் ஒரு புன்னகை பார்வையுடன் சௌபர்ணிகாவை பார்த்துவிட்டு,
“ஹாய் மேம். நான் ஆரோன் ரிஷபன்…” என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் சபர்மதியிடம்.
“ஹலோ…” என்ற சபர்மதி மகளை பார்க்க அவள் அவன் பக்கம் திரும்பவில்லை.
“இவ்வளோ தூரம் வந்துட்டு எங்க ஈவன்ட்க்கு வராம கிளம்பினா எப்படி? அம்மா கூட சொன்னாங்க நாங்க வரோம்ன்னு. நான் தான் உங்களை கூட்டிட்டு வரதா சொல்லிட்டு வந்தேன். ப்ளீஸ் கண்டிப்பா நீங்க ரெண்டுபேரும் வரனும்…” என்றான் தன்மையாக ஆரோன் ரிஷபன்.
‘எவ்வளோ நல்லவனாட்டம் பேசறான். இவன் வாய் இத்தனை அடக்கமில்லையே?’ என சௌபர்ணிகா உள்ளுக்குள் சொல்லிக்கொண்டாலும் முகத்தில் எதையும் காண்பிக்கவில்லை.
“போகலாம் சௌபி…” என்ற தாயை மறுக்க முடியாமல் உடன் சென்றாள் சௌபர்ணிகா.
அந்த பகுதிக்குள் நுழைந்ததுமே ஆராதனாவும், ஸ்டீபனும் வந்துவிட்டனர் சபர்மதியை வரவேற்க.
“வாங்க மேம். எப்படி இருக்கீங்க?…” என ஆராதனா அவர்களிடம் மிக தெரிந்தவர் போலவே தான் பழகினார்.
“உன்னோட சேரி செலெக்ஷன் ரொம்ப அருமைம்மா. இன்னைக்கும் நான் அதை தான் கட்டியிருக்கேன்…” என சௌபர்ணிகாவிடம் அன்று அவள் பரிசாய் தந்த புடவையை காண்பிக்க,
“தேங்க்ஸ் மேம்…” என்றாள் அவளும்.
அதன்பின் ஆரோன் மேடைக்கருகே சென்றுவிட, ஸ்டீபன் இஷாந்தை அழைத்துக்கொள்ள சபர்மதியும், ஆராதனாவும் தொழிலை பற்றிய பேச்சுக்களில் இறங்கிவிட அனைத்திலிருந்தும் தனித்து நின்றாள் சௌபர்ணிகா.
ஒவ்வொரு பெண்களும் மேடையில் நடந்து வந்து கைதட்டல் பெற்று வர அவர்களை உற்சாகப்படுத்தியபடி இருந்தான்.
விழா முடிந்திருக்க அத்தனைபேரையும் கைகுலுக்கி, பாராட்டி, அணைத்து விடுத்து அன்று அவனின் செயல்கள் ஒவ்வொன்றும் கல்வெட்டாய் இங்கே சௌபர்ணிகா மனதில் பதிந்துகொண்டிருந்தது.
முகத்தில் எதையும் காண்பிக்காமல் அவள் நின்ற இடத்திலிருந்து நகராமல் அவற்றை பார்வையிட அவளின் பார்வையின் குறுகுறுப்பில் ஆரோன் திரும்பி பார்க்க தன் விழிகளை திருப்பிக்கொண்டாள் சௌபர்ணிகா.
அவள் நின்றிருந்த விதம் நிச்சயம் அவள் தன்னை பார்க்கவில்லை என்பதை போலிருக்க வேறு யார் என்று யோசனையுடன் தன்னுடன் நின்றவர்களிடம் பேசினான் ஆரோன் ரிஷபன்.
ஆனாலும் உள்மனது சொல்லியது அவன் மீதான பார்வையின் தாக்குதலை. அவன் உணர்ந்தான்.
சட்டென்று திரும்பி பார்க்காமல் சிறிது நேரம் மெல்ல நகர்ந்து இங்குமங்குமாய் நிற்க அப்போதும் அதே போல் உணர்வு.
இங்கே ஆயிரம் பேரிருக்க அனைவரும் அவனை கவனிப்பார்கள் தான். ஆனாலும் இது என்ன புதிதாய். மனதை துளைப்பதை போல?
மீண்டும் சட்டென திரும்ப சௌபர்ணிகா தனது கை பேசியை காதில் வைத்தபடி இலகுவாய் நின்றிருந்தாள்.
அவனை பாராததை போல அவள் நின்றிருந்தாலும் அவள் விழிகளில் கண்ணீர் பளபளப்பு அவளாக தான் இருக்க கூடும் என்று ஆரோனுக்கு தோன்ற லேசாய் ஒரு புன்னகை.
‘இருக்குமோ?’ என்று தான் தோன்றியது அவனுக்கு. இதுவரை தான் பார்க்கவேண்டும் என நினைத்த பெண்களின் மத்தியில் தன் பார்வையிலிருந்து விலக முயலும் அவள் அவனுக்கு வித்தியாசமாய் தெரிந்தாள்.
‘ஏன்?’ என்ற கேள்வியில் மெல்ல பார்வையை திருப்பியவன் அருகிலிருந்த கண்ணாடியில் அவள் பிம்பம்.
இப்போது திரும்பவில்லை ஆரோன். உஷாவை அழைத்து பேசியபடி அங்கேயே நின்றிருக்க சௌபர்ணிகாவின் காதிலிருந்த போன் கீழிறங்க அவள் பார்வை அவன் மீது.
“பாஸ் பிரபஞ்சம் மேம்…” என்றாள் உஷா சௌபர்ணிகா அவனை பார்ப்பதை கண்டு.
“ஷ்ஷ்ஷ்ஷ், அமைதியா இரு. என்ன பன்றாங்கன்னு பார்ப்போம்…” என்று ஆரோன் குறும்பாய் சொல்ல,
“பாஸ்…” என்று உஷா சிரித்துவிட்டாள் அவனின் ரகசிய பேச்சில்.
“ப்ச், என்ன இப்போ? ஆமா, உன் ஹஸ்பண்ட், குழந்தை எங்க?…” என அவன் கேட்க,
“இங்க தான் இருந்தாங்க. கூட்டிட்டு வரேன்…” என்று உஷா நகர பார்க்க,
“ஹேய் ப்யூட்டி நில்லு. பேசிட்டிருக்கேன்ல…” என உஷாவின் கையை பிடித்து நிறுத்தினான்.
“பாஸ், இதென்ன புதுசா?…”
“எனக்கும் தெரியலையே? நான் பார்த்தா அந்த பிரபஞ்ச ப்யூட்டி என்னை பார்க்கமாட்டேன்றாங்க. என்னவா இருக்கும்? நீ சொல்லேன்…” என்றான் சிரிப்புடன்.
“இன்னைக்கு என்னாச்சு உங்களுக்கு?…” என மீண்டும் அவள் கேட்க ஆரோன் ரிஷபன் சட்டென திரும்பி சௌபர்ணிகாவை பார்த்துவிட்டான்.
இப்படி சடுதியில் அவன் திரும்பி பார்ப்பான் என எண்ணாதவள் சுதாரிக்க முடியாமல் திடுக்கிட்டு போனை கீழே போட்டுவிட,
“நீ போ. வரேன்…” என்றவன் அவளை தேடி வந்துவிட்டான்.
கீழே விழுந்த போனை எடுத்துக்கொள்ளவும், ஆரோன் அவள் அருகில் வந்து நிற்கவும் சரியாய் இருந்தது.
எப்போதும் வம்பிழுத்து வாய் ஓயாமல் பேசுபவன் விழிகள் மௌனமாய் ஒரு புன்னகையை சிந்த, மூச்சடைத்து பார்த்தவள் முகத்தை இலகுவாய் வைக்க முடியாமல் விழிகள் படபடத்தது.
“எப்பவும் பிரபஞ்ச ப்யூட்டி சில்க் சேரி தான் கட்டுவீங்களா?…” என்றான் சம்பந்தமில்லாமல் அவளிடம்.
பதில் சொல்லாமல், பதில் சொல்ல முடியாமல் பார்த்தவள் அவனை விட்டு விலகி நடந்தாள்.
“ம்மா கிளம்புவோம்….” என சபர்மதியிடம் வர,
“ஓகே, நாங்க கிளம்பறோம். கண்டிப்பா ஒருநாள் நீங்க எங்க வீட்டுக்கு வரனும்…” என்று சொல்லிவிட்டு தான் எழுந்தார் சபர்மதி.
“டின்னர் முடிச்சிட்டு போகலாமே?…” ஆராதனா சொல்ல,
“இல்லை. இன்னொரு வேலை இருக்கு. திரும்ப மீட் பண்ணும் போது சாப்பிடலாம்…” என்று அவரிடம் சொல்லி சபர்மதி விடைபெற சௌபர்ணிகா ஆராதனா, ஸ்டீபனிடம் மட்டும் சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்.
காரின் அருகே சென்றவள் கதவை திறக்கும் நேரம் திரும்பி பார்க்க, அவன் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தவன் இவள் பக்கம் திரும்பவில்லை.
அவன் பார்த்த நேரம் சௌபர்ணிகா காரினுள் ஏறி அமர்ந்துவிட அவனின் மனது அவளின் கலங்கிய விழிகளில் நின்றுகொண்டது.
“என்ன சௌபி, டயர்டா இருக்கியா?…” என்றார் சபர்மதி.
மகளின் முகத்தில் கிஞ்சித்தும் சிரிப்பில்லை. எனவோ தவிப்பும், தத்தளிப்புமாக முகத்தில் ஆயிரம் உணர்வுகள் வலம் வந்தது.
“வா அம்மா மடில சாய்ஞ்சுக்கோ…” என்று சொல்லவும் மௌனமாக தலையசைத்து உடலை குறுக்கி அவரின் மடியில் தலைவைத்து கண்ணை மூடிக்கொண்டாள்.