நன்றாக இருள் கவிழ்ந்துவிட ஆரோன் ரிஷபன் நடந்தே வெகு தூரம் வந்துவிட்டான்.
மனம் முழுவதும் சௌபர்ணிகாவின் எண்ண அலைகள் அவனை சுருட்டி சுழற்றியது.
காதல். நினைக்கையில் உதடுகள் இளமுறுவலை சிந்த சுகமாய் ஒரு உணர்வு பரவியது அவனுடலில்.
இதுவரை அதை எல்லாம் நினைத்ததில்லை. திருமணம் செய்வது பற்றி பெரிதாய் என்றும் யோசித்ததில்லை. எதிர்பார்ப்பும் இருந்ததில்லை.
வீட்டில் தாய் தந்தையுடன் விளையாட்டாய் பேசுவானே தவிர்த்து தீவிரமாய் நினைத்ததில்லை.
“ப்ச், இப்ப என்ன அவசரம்? கொஞ்ச நாள் போகட்டும்…” என்பவனை அவன் தாயும் தந்தையும் வற்புறுத்தியதில்லை.
ஆராதனா, ஸ்டீபன் இருவருக்கும் காதல் திருமணமாக இருந்தாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த திருமணம் தான்.
சொந்தத்தில் இருபக்கத்திலும் உறவு பெண்கள் இருந்தும் அவற்றை சிந்திக்கவில்லை ஆரோன் ரிஷபன்.
“அவன் அம்மாவே சொந்தம் வேண்டாம்ன்னு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா. இவன் எங்க கேட்க போறான்?…” என்று ஆராதனாவின் காதுபடவே ஸ்டீபனின் சொந்தங்கள் கிண்டல் செய்கிறேன் என்று இதனை குத்திக்காட்டியும் பேசித்தான் பார்த்தனர்.
“எஸ் அப்கோர்ஸ்…” என்று இலகுவாய் கடந்துவிடுவார் ஆராதனா.
“இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா ஸ்டீபன்? என் வாழ்க்கையை நான் முடிவு பண்ணின மாதிரி என் பிள்ளையோட வாழ்க்கையை அவன் தான் முடிவு செய்யனும்…” என்றிருந்தார் ஆராதனா.
ஸ்டீபனுமே அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. எந்தெந்த சொந்தங்களை எந்த எல்லையில் நிறுத்த வேண்டும் என்பதில் மிக தெளிவு அவர்.
அதனாலேயே இன்றுவரை கணவன், மனைவிக்கான புரிதலும், நெருக்கமும் அவர்களிடம் அதிகத்திற்கும் அதிகமே.
சில நேரங்களில் குடும்பத்தின் பொதுவான நிகழ்ச்சிகளில் வாக்குவாதங்கள் வருவதும் உண்டு.
அதுவும் ஸ்டீபன் சம்பந்தப்பட்டவர்களாக இருக்க அவரில்லாத நேரம் ஆராதனாவை பேசுவதை வழக்கமாக வைத்திருக்க அதற்கு தக்க பதிலடி கொடுக்க ஆராதனாவும் தயங்கியதில்லை.
“உன் பொண்டாட்டி எங்களை என்ன பேசினா தெரியுமா?…” என ஸ்டீபனிடமும்,
“உங்க மருமக இப்படி சொல்லிட்டா…” என ஸ்டீபன் பெற்றோரிடமும் யாரும் சொல்லிவிட முடியாது.
“நீ என்ன பேசின?…” என்று தான் அவர்கள் கேட்பார்கள்.
அந்தளவிற்கு ஆராதனா அந்த குடும்பத்தில் வேரூன்றி இருந்தார். அப்படி இருப்பவரின் மகன் அவரை போலவே எல்லாவற்றிலும் நடுநிலையாக இருக்க சொந்தத்தில் பெண் எடுப்பார்கள் என்று யாரும் எதிர்பார்ப்பு கூட வைக்க முடியவில்லை.
“ஆரோன் ஓகே சொன்னா நல்லா தான் இருக்கும். சொல்லனுமே?…” என்று பெருமூச்சு விடுவதோடு சரி.
சொல்லிவிட முடியாது. எடுத்தால் என்ன என்றும் கேட்டுவிட முடியாது. அதற்கே அவர்கள் எல்லையில் நிற்க பழகிக்கொண்டனர்.
திருமணம் என்ற அந்த புள்ளியில் மானசீகமாக தன்னை போல சென்று நின்றவன் மனதில் இவை எல்லாம் சேர்ந்தே வலம் வந்தது.
இப்படி ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்று தான் போய் சொன்னால்? தனக்குள் சிரித்துக்கொண்டான் ஆரோன் ரிஷபன்.
“ஹ்ம்ம், ப்யூட்டி ஹாட் தான்…” என்று மீண்டும் சௌபர்ணிகாவை மனதினுள் நிறுத்தி பார்த்து சொல்லியவன் சட்டென நடையை நிறுத்தினான்.
நொடியில் நாக்கை துறுத்தி, கீழுதட்டை உள்ளிழுத்து கடித்துக்கொண்டவன் விழிகள் இறுக்கமாய் சுருங்கி பின் சங்கோஜமாய் விரிந்து, விளக்கு வெளிச்சத்தில் பாய்ந்து வந்த அலையை பார்த்து இதழ்கள் அழுந்த புன்னகை வீசியது.
“தப்பு, தப்புடா ஆரோன்…” என்று சொல்லியவன் பின்,
“ப்ச், ம்ஹூம். இல்லை, இல்லை ரிஷபன்…” என்று தலையசைத்து சிரித்துக்கொண்டான்.
“கொஞ்ச நேரத்துல என்னை தனியா புலம்ப வச்சிட்டாளே? ஓஹ் காட். இப்ப என்ன செய்யறது?…” என்று தன் குடிலுக்கு வந்த பின்னர் தான் தன்னையே கவனித்தான்.
அணிந்திருந்த உடை நனைந்திருந்தது. திரும்பி வெளியே பார்க்க மெல்லிய தூறல் சத்தமின்றி கடலில் கலந்துகொண்டிருக்க அதனை கூட உணராத ஒரு பயணம்.
அதுவும் கூட ஒருவித அலாதியான சுகானுபவம் தான் என்று தோன்றியது அவனுக்கு.
அறைக்குள் சென்றவன் மீண்டும் உடலை கழுவி உடை மாற்றிவிட்டு வர அவனின் போனில் இரண்டுமுறை அழைப்பு.
ஒன்று உஷா அழைத்திருக்க, இன்னொன்று ஸ்டீபன் அழைத்திருந்தார். இரண்டும் அடுத்தடுத்து வந்திருந்தது.
முதலில் ஸ்டீபனுக்கு அழைக்க அவர் எடுக்கவில்லை. ஆராதனா தான் அழைப்பை ஏற்றார்.
“அப்பா இன்னொரு கால்ல இருக்காங்க ரிஷி…” என்றவர்,
“ஆட் ஷூட்டிங் முடிஞ்சதா?…” என்றார் மகனிடம்.
“இன்னும் சில போட்டோஸ் மட்டும் தான் மாம். மார்னிங் எடுக்கனும்…” என்றான்.
“ஓகே, டின்னர் முடிஞ்சதா? கிளைமேட் எப்படி இருக்கு ரிஷி?…” என்றபொழுது மீண்டும் அவரின் அழைப்பை கவனித்தவனுக்கு அன்று புதிதாய் தெரிந்தது.
“ம்மா, என்ன சொன்னீங்க?…” என்றான் சிரிப்புடன்.
“என்ன சொன்னேன்? கிளைமேட் எப்படி இருக்குன்னு கேட்டேன். நீ சாப்பிட்டியான்னும் கேட்டேன்…” என்றார் மகனின் கேள்வி ஏன் என புரியாமல்.
“ம்ஹூம். என்ன சொல்லி கூப்பிட்டீங்க?…” என்று கேட்க,
“இதென்னடா புதுசா இருக்கு? எப்பவும் போல தான் கூப்பிட்டேன். நீ பிறந்ததுல இருந்து உன்னை நான் எப்படி கூப்பிட்டேனோ அப்படி…”
“ம்மா…” என்று பலமாய் சிரித்தவன்,
“அதான் அந்த பேர் தான். சொல்லுங்க கேட்போம்…” என்றான் சின்னதாய் பிடிவாதமும், அடமுமாய்.
“என்னாச்சு ரிஷி?…” ஆராதனா குழம்பி போனார்.
“ஹ்ம்ம், இது, இதுதான். ரிஷி. ரிஷபன்…” என்று சொல்லிக்கொள்ள அங்கே ஆராதனாவுக்கு இதழ்கள் விரிந்தது புன்னகையில்.
“அப்படி உன்னை யார் கூப்பிட்டா ரிஷி? இவ்வளோ சந்தோஷமா அனுபவிச்சு கேட்கிற நீ?…” என்றதும் அவன் மறைக்கவெல்லாம் இல்லை.
“கூப்பிட்டாங்க. ரொம்ப அழகா இருந்தது. அது ஒரு ஃபீல்…” என்றவன்,
“பசிக்கலை ம்மா. டைம் கூட இப்ப தான் பார்த்தேன். சாப்பிடுவோம். ஆனா ஒருமாதிரி படபடன்னு அடிச்சுக்குது மனசு. இப்படித்தான் இருக்குமா?…” என்று குழந்தை போல அவன் கேட்க,
“ரிஷி…” என சிரித்துவிட்டார் ஆராதனா.
“ப்ச், நீங்க தான் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணியிருக்கீங்களே? அதான் கேட்டேன். சொல்லனும்ன்னா சொல்லுங்க…” என்றவன்,
“இங்க இருந்து ரொம்ப தூரம் நனைஞ்சுட்டே போய்ட்டேன். மழை பெய்ஞ்சது கூட தெரியலைன்னா பார்த்துக்கோங்க. பட் எனக்கு இது ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு…”
“யார் அந்த பொண்ணு ரிஷி?…” என்றார் ஆர்வத்துடன்.
“சொல்றேன். சொல்றேன். உங்ககிட்ட காமிக்காம எப்படி? மேடம் இன்னும் என்கிட்டையே லவ் சொல்லலை. நாங்க முதல்ல ப்ரப்போஸ் பண்ணிக்கறோம். அதுக்கப்பறம் உங்களுக்கு இன்ட்ரோ குடுக்கறேன். அதுவரைக்கும் இது உங்களுக்கு தெரிஞ்ச சீக்ரேட்டாவே வச்சுப்போம்…”
“அப்போ அப்பா?…”
“அது உங்க சைட். எப்படியும் அப்பாக்கிட்ட நீங்க சொல்லாம இருக்க போறதில்லை. ஸோ நோ இஷ்யூஸ். என்னை மனுஷன் ஓட்டாம இருந்தா சரி…” என்றான் அட்டகாசமான சிரிப்புடன்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. கொஞ்சம் பயமாவும். அவங்க ரொம்ப சீரியஸ் பெர்சனாலிட்டி…”
“இருக்கட்டும். எல்லாரும் ஒரே மாதிரி இருந்தா இன்ட்ரெஸ்ட்டா இருக்காதே? லைஃப் உனக்கு இன்னும் சுவாரஸியமா இருக்கும் ரிஷி…”
“புரியுதும்மா, எப்படி சொல்ல? ஹ்ம்ம்…” என்றவன் தலையை கோதியபடி யோசித்தான்.
“பர்ஸ்ட் மீட் கூட செம்ம ஃபயர். நான் தான் கொஞ்சம் கலாட்டா பண்ணிட்டேன். ரொம்ப டென்ஷனாகிட்டாங்க. துளியளவாவது சிரிக்கனுமே? ம்ஹூம். முகம் அப்படியே கோபத்துல சிவக்கும்…” என்றான் சௌபர்ணிகாவை முதலில் தான் பார்த்த அன்று நடந்தவற்றை மனதில் இருத்தியபடி.
“நீ தானே கலாட்டா பண்ணியிருக்க…”
“ஆமாமா. ஆனா எப்படி?…”
“என்ன எப்படி? என்னாச்சு ரிஷி?…” என மீண்டும் ஆராதனா புன்னகைக்க,
“என்னென்னமோ ஆகிருச்சு. அவங்களுக்கு எப்படி என்னை பிடிச்சது? எனக்கு இப்ப வரைக்கும் தெரியலை…” என்றான் கொஞ்சமாய் கவலையுடன்.
“ஏன் ரிஷிக்கு என்னவாம்?…” ஆராதனா கேலியாய் கேட்க,
“அதான் சொன்னேனே என்னவோ. ப்ச், லவ் பண்ணினா இப்படி எல்லாம் தோணுமா? நிறைய ப்ரப்போசலை வேண்டாம்ன்னு சொல்லியிருக்கேன். அவங்களை ஹர்ட் பண்ணாம தான். ஆனா அப்போ எல்லாம் எதுவுமே தோணினதில்லை. ஆனா இப்போ…” என்றவன் ஆழ்ந்த மூச்செடுத்தான்,
“ம்மா, உங்களுக்கு புரியுதா? என்கிட்ட இப்பவரை அவங்க எதையும் காமிச்சிக்கிட்டது இல்லை. எப்பவும் அவங்களை ஒரு நிமிஷம் கவனிக்க வச்சாங்க. இப்ப எனக்கு ஒரு மாதிரி இருக்கு. எதுவுமே சொல்லாம போயிருவாங்களோன்னு…” என்றான்.