அவன் காதல் என்றதே ஆச்சர்யம். எத்தனையோ பெண்கள் அவனிடம் விருப்பம் சொல்லியிருந்தாலும் அதை விளையாட்டாய் மறுத்துவிடுவான்.
ஆனால் வார்த்தைகளில் சொல்லாமல் இந்தளவுக்கு மகனை பாதித்திருக்கும் அவள் யாராக இருக்க கூடும் என்னும் பேராவல் இப்போதே ஆராதனாவை தொற்றிக்கொண்டது.
“ஒருவேளை மத்தவங்களை மாதிரி அவங்களும் நல்லா பேசி, சிரிச்சு, லவ் சொல்லியிருந்தா எனக்கு பெருசா தெரிஞ்சிருக்காதோ? நான் கவனிச்சிட கூடாதுன்னு நினைச்சாங்க தெரியுமா? ப்ச்….” என்று சொல்ல,
“ரிஷி, ரிலாக்ஸ். என்ன இப்போ? லவ் வந்தா உடனே சொல்லிடனுமா? அதை எல்லாம் இன்னும் ஆழமா மனசுக்குள்ள வச்சுக்கனும். வெய்ட் பண்ணு. அவசரப்படாத…” என்று ஆராதனா சிரிக்க,
“உங்களுக்கு என்ன? நீங்க சிரிப்பீங்க. ஆனா எனக்கு…” என நெற்றியில் கையை வைத்தபடி பின்னால் சாய்ந்துகொண்டான் படுக்கையில்.
“சரி, எத்தனை நாளா தெரியும்? இன்னைக்கு தான் சொல்ற நீ?…” என்றார் ஆராதனா.
“ப்ச், இன்னைக்கு தான் கன்பார்மா தெரியும். கொஞ்சம் முன்னாடி….” என மகன் சொல்லவும்,
“என்ன? கொஞ்சம் முன்னாடியா?….” என்றவர் இதனை எதிர்பார்க்கவே இல்லை.
“அப்போ நீ ஏன் வெய்ட் பன்ற? நீயே சொல்லிடு…” என்றார் ஆராதனா.
“ம்ஹூம். இல்லை ம்மா. இப்போ வேண்டாம்…” என்றான் சன்னமான புன்னகையுடன்,
“ரிஷி…”
“ஹ்ம்ம், எனக்கு சொல்ல தோணனும். சொல்லனும். ஆனா அதுக்கு முன்னாடி இந்த…” என்றவன்,
“காட், நான் உங்ககிட்ட என்னலாம் சொல்லிட்டிருக்கேன். நீங்களும் கதையா கேட்கறீங்க. பை, குட் நைட்…” என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.
“அடேய் உளறல். என்ன பண்ணிட்டிருக்க நீ? ராஸ்கல்…” என கண்ணாடியின் முன் நின்று தன் முகத்திலேயே கைவிரல்களை மடக்கி லேசாய் குத்திகொண்டான் ஆரோன் ரிஷபன்.
“ஹ்ம்ம், இப்ப சொல்லவேண்டாம். எனக்கு இந்த தவிப்பு பிடிச்சிருக்கு. முணுமுணுன்னு இதென்ன வலி. பட் இதுவும் பிடிச்சிருக்கு. பார்க்கலாம். ஹாட் ப்யூட்டி சொல்வாங்களா இல்லையான்னு…” என்றவன் மீண்டும் தனது போனை எடுத்து சௌபர்ணிகாவின் தனிப்பட்ட கணக்கிற்கு சென்றான்.
இதுவரை அவர்களின் கடையின் கணக்கை தான் தொடர்ந்திருந்தவன் இன்று அவளை தனிப்பட்ட விதத்திலும் தொடர முயன்றான்.
“நீ பண்ணலைன்னா என்ன? நான் ஃபாலோ பண்ணிட்டு போறேன்…” என்றவன்,
“ஃபாலோ போட்டாச்சு. கன்பார்ம் பண்ணுவாங்களா ஹாட்?…” என்று சொல்லி சிரிக்க, அங்கே சௌபர்ணிகா தனக்கு வந்திருந்த செய்தியை பார்த்து விழிவிரித்தாள்.
ஒருநிமிடம் அவளுக்கு குப்பென மூச்சடைத்தது. இப்படி தன்னை தொடர விருப்பம் தெரிவிப்பான் என்று நினைக்கவில்லை அவள்.
அதனை ஏற்கவா வேண்டாமா என சடுதியில் ஓராயிரம் கேள்விகள். மனமே இருபக்கமும் வேண்டாம், வேண்டும் என்றது.
மூளைக்குள் பட்டிமன்றம் நடக்க, விழிகள் அவன் அனுப்பியிருந்தை பார்க்க, விரல்கள் விருப்பத்தை ஏற்று அவனை உள்ளே அனுமதித்தே விட்டது.
“அச்சோ…” என்று அதனை மீண்டும் எடுக்கும்முன் குதித்துக்கொண்டு அவன் செய்தி.
“மேடம் ரொம்ப மரியாதை தெரிஞ்சவங்க. ப்ளாக் பண்ணமாட்டீங்கன்னு நினைக்கறேன்…” என்று குறும்பு பொம்மை கண்ணடிக்க குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் ஆரோன் ரிஷபன்.
“இவனை…” என பற்கள் நறநறத்தாலும் விழிகள் அவன் அனுப்பியதிலேயே வட்டமிட்டது.
“வாவ் சம் செகெண்ட்ஸ் போயிருச்சே. இன்னும் ஃபாலோல இருக்கேன். எனிவே ஹேவ் எ நைஸ் டே அன்ட் ஸ்வீட் ட்ரீம்ஸ் பிபி…” என்று அனுப்பி வைக்க,
“அதென்ன பிபி?…” தயக்கம் உடைத்து இவள் பதிலுக்கு கேள்வி எழுப்பினாள்.
ஒருவேளை தன் கோபத்தை சொல்கிறானோ? என்ற எண்ணம் பிறக்க அதற்கும் புசுபுசுவென அனல் மூச்சு பொங்கியது.
‘பதில் சொல்லட்டும் இருக்கு’ என்று நினைப்புடன் அவன் எதுவும் சொல்வானா என பார்த்திருக்க இல்லை எந்த பதிலும் வரவில்லை.
ஆனால் ஆரோன் ரிஷபன் இணைப்பில் தான் இருந்தான் இன்னும். அவளுக்கான பதிலை தராமல் வேண்டுமென்றே காக்க வைத்தான்.
“ஆன்லைன்ல இருந்துட்டே இதென்ன எதுவும் சொல்லாம? மெசேஜ் பார்த்தும்…” என பல்லை கடித்தவள் மேலும் ஐந்து நிமிடங்கள் காத்திருந்தாள்.
அவன் சொல்வதை போல தெரியவில்லை. அதென்ன பிபி? தெரிந்தாகவேண்டும் என மனது உந்தியது.
“ஹலோ, கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை…” என அனுப்பி வைக்க, அதனை பார்த்தவன் முகமெல்லாம் குறுஞ்சிரிப்பு ரோஜாவாய் மலர்ந்து மணம் பரப்பியது.
“உடனே சொல்லனுமா?…” என்றான்.
“ஆமா…” சௌபர்ணிகாவுக்கு பொறுமை இல்லை.
“இப்பவே சொல்லிட்டா எப்படின்னு யோசிக்கறேன்…” என்று அவளை இழுத்து பிடித்தான்.
“ப்ச், இப்போ சொல்ல போறீங்களா இல்லையா?…” என அங்கே பட்டாசாய் வெடிக்க காத்திருந்தாள்.
இப்படி கேட்டும் சொல்ல மறுத்து தேட வைக்கிறானே என்று ஆத்திரமாகவும் இருந்தது. அவஸ்தையாகவும் இருந்தது.
“சொல்லிடுவோம். அதுக்கு முன்ன என்னை ஃபாலோ பண்ணுங்க. எடுத்த ஹார்ட்ஸ் எல்லாம் திரும்ப குடுங்க. சொல்லிடறேன்…” என்று மயக்கும் புன்னகையுடன் தனது புகைப்படத்தையும் அப்போதே எடுத்து சேர்த்து அனுப்பி வைக்க பார்த்தவள் ஸ்தம்பித்து போனாள்.
ஒற்றை கண் சிமிட்டி, சுட்டுவிரலை அவளை நோக்கி காண்பித்து கன்னம் குழியும் புன்னகையுடன் மனம் பறித்தான்.
அவளை எழவே விட்டுவிட கூடாதென்னும் விதமாய் இருந்தது அவனின் புன்னகையும், வசீகரமும்.
“இன் கோவா. செம்ம கிளைமேட். லேசா மழை. கொஞ்சம் நானும் நனைஞ்சுட்டேன்…” என்று அனுப்ப சௌபர்ணிகா உடனே மீண்டும் அந்த புகைப்படத்தை பார்த்தாள்.
நனைந்ததை போலில்லை. ஆனால் தலை துவட்டியும் துவட்டாமலும் கலைந்து இருந்தது தென்பட்டது.
“பார்த்தாச்சா?…” என்று அடுத்த செய்தி அனுப்ப திடுக்கிட்டு போனாள்.
“என்ன? எதை?…” என சௌபர்ணிகா படபடப்புடன் அனுப்ப,
“அதையும் இப்போ சொல்லமாட்டேன்…” என்றான்.
“கோ மேன்….” என்று கடுப்பில் கோபத்துடன் சௌபர்ணிகா அனுப்ப,
“ஓகே பை…” என்று விடைபெற்றுவிட்டான் உடனே.
“என்ன பட்டுன்னு போயாச்சு?…” என்று தான் தோன்றியது சௌபர்ணிகாவிற்கு.
மனதிற்குள் மலர்ந்திருந்த புன்னகை நொடியில் வாட்டம் பெற்றுவிட அதையே வெறித்தபடி மீண்டும் மீண்டும் அந்த உரையாடலை வாசிக்க ஆரம்பித்தாள் சௌபர்ணிகா.
ஆரோன் ரிஷபனின் நினைவில் அவள் உழல, அவன் மனதில் அவள் முழுதாய் படர்ந்தாள்.
இதயத்தின் இடுக்குகளை கூட மிச்சம் வைக்காமல் அத்தனையிலும் கிளைபரப்பி விருட்சம் பெற்றிருந்தாள் சௌபர்ணிகா.
“ரிஷபன் சொல்லவே இல்லை நீ?…” என கேட்டு தனக்குள் சிரித்துக்கொண்டவன்,
“என் தூக்கம் போச்சு. நீயும் தூங்கிடாத ப்யூட்டி…” என்று புலம்பியபடி மீண்டும் கடற்கரையோரம் வந்து நின்றான்.
ஆரோனின் வாலிபம் காதலெனும் வர்ணம் பூசிக்கொண்டது. நழுவும் இரவுகள் வெம்மை கொள்ள ஆரம்பிக்க இதுவரை உணராத ஒரு அவஸ்தை அவனை சுகமாய் வதைத்தது.
அதன்பின் தினமும் எதையாவது பேச, வம்பிழுக்க என சில நொடிகளில் இருவருக்குமான உரையாடல் அன்றாடம் தொடர்கதையானது.
பதிலை அனுப்பமாட்டேன் என்பவளிடம் பெற்றுக்கொள்ளும் வித்தையை அவன் கற்றிருந்தான் போலும்.
‘ஸ்டாப்பிட்’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாலும் அந்த ஓரிரு குறுஞ்செய்திகள் சௌபர்ணிகாவின் தேடலை அதிகப்படுத்தியது.
அதற்கு இணையான பயத்தையும் சேர்த்தே அதிகமாக்க அத்தகைய நிமிடங்களில் ஆரோன் ரிஷபனின் எண்ணை தன் தொடர்பில் இருந்து முடக்குவதும், பின் அவளாகவே விடுவிப்பதுமாக இருந்தாள்.
இதில் ஒருமுறை கூட எதற்கு என அவன் அவளிடம் கேட்காததே அதிகமாய் அவளை சுழன்றடித்தது.
——————————————————
இன்னும் இருள் பிரியாத காலை. பெசன்ட் நகர் கடற்கரையில் அமைந்திருந்த அஷ்டலட்சுமி கோவில் முன் சௌபர்ணிகா அவளின் குடும்பத்துடன்.
இஷாந்த், சந்தனா, பிள்ளைகள் இருவர், சபர்மதி, இவர்களுடன் ஜெயந்தனும் வந்திருந்தார்.
அன்று இஷாந்தின் திருமண நாளும், பிள்ளைகளின் பிறந்தநாளும் என்பதால் கோவிலில் காலை வேளை பூஜைக்கு சொல்லியிருக்க இதோ வந்தாகிற்று.
பூஜைக்கான வேலைகள் கோவிலுக்குள்ளே நடந்துகொண்டிருக்க கடற்கரையோரம் நின்றிருந்தாள் சௌபர்ணிகா.
“பூஜை ஆரம்பிக்கவும் சொல்லுங்கம்மா வரேன். அப்படியே சன்ரைஸ் பார்த்துட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு வந்திருந்தாள்.
அங்கேயே நிற்க நிற்க ஜெயந்தன் எதையாவது கேட்டுக்கொண்டே இருந்தார் அவளிடம்.
அங்கே இருக்கவும் பிரியமற்று, கிளம்பி செல்லவும் மனமற்று இருந்தவள் வெளியே வந்து நின்றுவிட்டாள்.
ஜனசந்தடி இல்லாத காலை நேரம் குளுமையும், மெல்லிய காற்றுமாய் உடலை தழுவ, கடலிலிருந்து மஞ்சள் நிற கதிர்கள் பிரமாண்டமாய் மேலே எழும்ப ஆரம்பித்தது.
“லவ்லி…” என சற்று தொலைவில் நின்றவளை பார்த்துக்கொண்டிருந்தான் ஆரோன் ரிஷபன்.
ஆம், அவனின் வேலைகள் முடிந்து ஓய்வு கிடைத்திருக்க கிளம்பி வந்துவிட்டான் சென்னைக்கு.
சௌபர்ணிகாவின் நினைவுகள் ஆக்கிரமித்த நொடியிலிருந்து அவனின் தவிப்புகள் கூடிக்கொண்டே சென்றது.
அவள் சூரியனை பார்க்க அவன் அவளை பார்த்தான். அவளின் முகத்தில் பட்டு தெறிக்கும் கதிரொளியின் மினுமினுப்பை ரசித்தான்.
ரசிகன் அவனின் விழிகள் ரசனை கொஞ்ச யோசிக்கவில்லை. சௌபர்ணிகாவின் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியை அவசரமாய் அனுப்பியவன் தன்னுடைய கேமராவில் அவளை புகைப்படம் எடுத்துக்கொண்டான்.
“பர்மிஷன் கேட்டுட்டோமே? கஞ்சத்தனமா எடுக்காம கர்ணனா அள்ளிக்கோடா ரிஷபா…” என சொல்லிக்கொண்டே புன்சிரிப்புடன் புகைப்படம் எடுத்து முடிக்கவும் சௌபர்ணிகா அவன் புறம் திரும்பவும் சரியாய் இருந்தது.
இப்போதும் அன்றைய இரவில் கலங்கிய விழிகளுடன் தான் பார்த்துவிட கூடாதென வேகமாய் விலகி ஓடியவளின் அந்த முகம் அவனை இம்சிக்கத்தான் செய்தது.
இதோ தன்னை பார்த்ததுமே அவள் விழிகள் பெரிதாய் விரிய, ஆச்சரியமும், அதனைவிட இன்னொரு பாவமும் ஆரோனை புரட்டியது.
“டோட்டலா சாய்ச்சிட்டா. ஓஹ் காட். சிரிக்க கூட இல்லை. ஆனா அதென்ன அந்த கண்ணு இப்படி சுண்டி இழுக்குது…” என பொங்கும் உணர்வுகளை அடக்கி கீழுதட்டை உள்ளிழுத்துக்கொண்டான் ஆரோன் ரிஷபன்.
இருவரின் விழிகளும் சிக்கிக்கொள்ள பார்வையை விலக்கமுடியாமல் அவனும், விலகி செல்ல முனைந்து அவளும்.