அவன் அவளின் இதழ்களை அன்றி விழிகளை அல்லவா கண்டுகொண்டான். களவும் கொண்டுவிட்டான்.
அதை அறியாதவள் விழிகளை திருப்பிக்கொண்டு அவ்விடம் விட்டு நகர நினைக்க ஐவிரல்களையும் சிறகாய் விரித்து காண்பித்து அவளை நோக்கி எட்டெடுத்து வைக்க ஆரம்பித்தான் ஆரோன் ரிஷபன்.
மெல்ல மெல்ல இருள் விலகி வெளிச்சம் பரவ துவங்க அவனின் அருகாமை நெருங்க நெருங்க சௌபர்ணிகா மனம் மத்தளம் கொட்டியது.
அவன் அன்று தன்னை பார்க்கவில்லை, கண்டுகொள்ளவில்லை, கவனம் பெறவில்லை என்று தவித்ததை விட இன்றைக்கு மலையளவு தவித்து போனாள்.
‘இந்த கவனம் வேண்டாம். இந்த பார்வை வேண்டாம். இந்த நெருக்கம் வேண்டாம். பேச்சும் வேண்டாம். அவனும்’ என்று மூளை எடுத்துரைக்க சட்டென அவனும் வேண்டாம் என்று நினைத்தவளால் அதனை நிறைவு செய்யவும் முடியவில்லை.
“எவ்வளோ நேரம் இப்படியே பேசாம இருக்கறதா ப்ளான்?…” என ஆரோனே மௌனத்தை உடைத்து பேச,
“ரிஷபன்…” என்று ஒரு வேகத்தில் சொல்லி அழைக்க,
“ஒன்ஸ் அகைன்…” என்றான் ஆரோன் ரிஷபன்.
மையலாய் புன்னகைக்கும் அவனின் அந்த பார்வையில் சௌபர்ணிகா பின்னடைய,
“ஓகே, கேட்கலை. சொல்லுங்க…” என தன் ஆர்ப்பரிப்பை காட்டிக்கொள்ளாமல் அவன் கேட்க,
“ஹாங், இல்லை. சும்மா தான்…” என்றவள்,
“நீங்க என்ன இங்க?…” என்றாள் பேச்சை மாற்றும் விதமாய்.
“இதுக்கு தான் அந்த ரிஷபனா?…” புருவம் சுருக்கி ஆரோன் கேட்கவும் பதில் சொல்லாமல் அவள் விழிக்க,
“ஸ்யப்பா, முடியலை. உண்மையை சொல்லட்டுமா?…” என அவளை நேரடியாக பார்த்து நின்றவன்,
“உன் வாய் ஒன்னு சொல்லுது. கண்ணு ஒன்னு பேசுது. ஆனா உண்மை என்னவோ உன் கண்ணு என்கிட்ட எதையும் மறைக்க விரும்பலை. ஆனா உன் வாய். நீ பேசினாலே அவ்வளவும் பொய்…” என படபடவென்று சொல்லியேவிட்டான்.
அவன் இப்படி ஒருமையில் பேசியதோடு அவன் சொல்லியதும், சொன்ன விதமும் சௌபர்ணிகாவை ஸ்தம்பிக்க செய்ய,
“ஷிட்…” என்று தலையை கோதிக்கொண்டவன் முகத்தில் அவள் அதிர்வாய் பார்த்த அந்த பார்வையில் உண்டான புன்னகை.
“சும்மா ஒரு ஷாக். கூல்…” என சட்டென அவன் கண் சிமிட்ட தன்னை கண்டுகொண்டானோ என்ற பதட்டம் வளைத்தது சௌபர்ணிகாவை.
“இன்னும் தெளியலையா? ஏன் இன்னும் சிலை மாதிரி நின்னுட்டீங்க?…” என்றவன் அவளை பாதாதிகேசம் நிதானமாக பார்வையிட்டான்.
அடர்ந்த மஞ்சள் நிறத்தில் மெல்லிய தங்க ஜரிகை இழைந்திருக்க மாம்பழ இளம்பச்சையில் பாடர் வைத்த சாப்ட் சில்க்.
சிலையே தான். மின்னும் சிலை. கண்களை மட்டுமல்ல அவனையே மொத்தமாய் பறித்துக்கொள்ளும் அழகு.
கண்ணை எடுக்கமுடியவில்லை. அவனின் பார்வையோட்டத்தை இன்னுமே உள்ளூர கொதிக்கும் உணர்வுடன் பார்த்தவள் அதற்கு மேல் அவனின் முன் நிற்க முடியாமல் விலக நினைக்க கால்கள் ஒத்துழைக்கவில்லை.
“யுனீக் டிஸைன். லவ்லி…” என்று ரசித்து சொல்ல அவன் விழிகள் சொட்டிய ரசனையை அவள் மனது கள்ளத்தனமாய் அள்ளிக்கொண்டது.
“நான் கிளம்பறேன்….” என சொல்ல,
“அதுக்குள்ளையா?…” என்றான் அவளோடு அவனும் ஒரு அடி எடுத்து வைத்து.
“ப்ச், சாமி கும்பிடனும். நான் உங்க கூட பேச வரலை…” என்று சொல்ல,
“அப்போ பேச வாங்கன்னு கூப்பிட்டா வருவீங்களா?…” என்றான் ஆரோன்.
“ரிஷபன். என்ன வேணும் உங்களுக்கு? ஏன் இவ்வளோ டிஸ்டர்ப் பன்றீங்க?…” என ஆற்றமாட்டாமல் கேட்டுவிட,
“ரொம்ப படுத்தறேனா நான்?…” என்றான் இதழ் விரியா புன்னகையுடன்.
‘ஆமான்னு சொல்லு, சொல்லு. தூங்க கூட முடியலைன்னு சொல்லிடு. எல்லாமே சொல்லிடு’ என அவளுள்ளம் அவன் பால் அவளை பிடித்து தள்ளியது.
‘எந்த நம்பிக்கையில்?’ புத்தி கயிறு கட்டி இழுத்து நிறுத்த சட்டென விழிகள் சிவந்து கலங்கியது சௌபர்ணிகாவிற்கு.
அதே கலக்கத்துடன் ஆரோன் ரிஷபனை பார்க்க அதை எதிர்கொண்டவன் உள்ளம் அலை மேல் படகாய் தள்ளாடியது.
அவளின் இந்த பரிதவிப்பும், சஞ்சலமும் எதனால் என தெரியவில்லை. ஆனால் இந்த நொடி அது தன்னாலா, தனக்காகவா என பிரித்தறிய முடியாமல் பார்த்தான்.
ஆனால் தன்னை கொண்டு என்று மட்டும் புரிந்தவன் ஆழ்ந்து மூச்செடுத்துக்கொண்டான்.
“போ…” என்று அவளிடம் சொல்ல இன்னுமே சௌபர்ணிகா கண்ணில் நீர் நிறைந்தது.
“உன்னை தான். போன்னு சொன்னேன்…” என்றான் மெல்லிய புன்னகையுடன்.
அவனின் புன்னகையின் அளவும், அழகும் அந்த நொடி குறைந்ததை போலிருக்க சௌபர்ணிகாவால் அதனை எளிதில் கடக்க முடியவில்லை.
இன்னுமே தன் முகம் பார்த்துக்கொண்டே அவள் நிற்க அவளின் அருகில் இரண்டடி முன் வைத்து நின்றவன்,
“கோவிலுக்கு தானே? தூக்கிட்டு போகட்டுமா பிரபஞ்ச ப்யூட்டி?…” என்று கண் சிமிட்டவும் தன்னுணர்வு பெற்றவள்,
“கெட் லாஸ்ட்…” என்றாள் சுளீரென்று.
இத்தனை நேரம் அவனின் பார்வை மட்டுமே தன்னை சிறை பிடித்து நிறுத்தி இருக்க அதனை அறவே வெறுத்தாள்.
அவனருகில் அவள் அவளாக இருக்க முடியவில்லை. விருப்பத்தை சொல்லாமலும், சொல்ல முடியாமலும் இருக்கும் பொழுதே தன்னை இப்படி செயலற்று போக செய்கிறானே என்று துவண்டு போனாள்.
“கேட்க வேண்டியது தானே? என்னை இப்படி கேட்க எவ்வளோ தைரியம் உங்களுக்குன்னு? ஏன் உனக்குன்னு கூட கேட்கலாம். தப்பில்லை…” என்று அதற்கும் அவன் கண் சிமிட்டி புன்னகைத்தான்.
அவன் கேட்டதற்கும் எதிர் கேள்வியோ, பதிலோ இல்லை. இதழ்கள் அழுத்தமாய் பூட்டை போட்டுக்கொண்டது.
அவன் விளையாட்டாய் பேசுகிறானோ, இல்லையோ. ஆனால் தான் கேட்டு தன் விருப்பம் போல் ஆமாம் என்றுவிட்டால்?
அந்த நிகழ்வை அறவே தவிர்க்க நினைத்தாள் சௌபர்ணிகா. வேண்டாம் என்ற முடிவை அவள் மாற்றவில்லை.
தன் விருப்பம் தன்னோடு போகட்டும் என மனதையும் பூட்டிக்கொண்டவள் அவனிடம் வார்த்தையாடவில்லை.
“கமான், கேளுங்க பிபி…” என மீண்டும் வம்பிழுக்க,
“எல்லாரையுமே நீங்க ப்யூட்டின்னு தான் கூப்பிடுவீங்களா?…” என தாளமாட்டாமல் அவளிதழ்கள் அவிழ்ந்தது.
“ஓஹ். ஹ்ம்ம்…” என தலையசைத்து சிரித்துக்கொண்டவன் விழிகள் குறுகுறுவென அவளின் முகத்தை மொய்க்க,
“கேட்டா பதில் சொல்லனும். இதென்ன பார்வை?…” என்றாள் கோபத்துடன்.
“இதுவரைக்கும் அப்படித்தான் கூப்பிட்டேன்…” என்று அவன் நிறுத்தி அவளின் இதயத்தை எதிர்பார்ப்பில் தடதடக்க செய்து,
“இனியும் அப்படித்தான் கூப்பிடுவேன். அழகை ரசிக்கனும். ரசனையோட எதையும் பார்த்தா இந்த உலகமே அழகு தான். பிரபஞ்ச ப்யூட்டிக்கு இந்த பதில் போதுமா?…” என்று கேட்க,
“போதும். இன்னொருதடவை என்னை இதை சொல்லி கூப்பிட்டீங்க…” என்று கனன்ற முகத்துடன் அவனை எச்சரிக்கும் விதமாய் அவள் சொல்ல,
“ஓஹ், அப்போ அடுத்து எங்க மீட் பன்றோம்?…” என்று சிரிப்புடன் கேட்க அவளின் கோபம் அங்கே மதிப்பற்று போனது.