“ஐ லவ்ட் இட் சௌபர்ணிகா…” என அடுத்த நொடி அவன் சொல்ல வெடவெடத்து போனாள் அவள்.
விழிகளில் அப்பட்டமான மிரட்சி தெரிய தொண்டைக்குழி ஏறி இறங்கியது பளிங்காய்.
அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் அணு அணுவாய் அசைபோட்டு விழிகளால் விழுங்கிக்கொண்டவன்,
“நீங்க கூப்பிடற இந்த ரிஷபன் பிடிச்சிருக்கு. அதை தான் சொன்னேன்…” என்றதும் மெல்ல அவள் விழிகள் மூடி திறந்து ஆசுவாசம் பெற்றது.
“ஏன் இவ்வளோ பதட்டம்? வேற என்ன சொல்லுவேன்னு நினைச்சீங்க பிபி?…” என இதழ்களுக்குள் அதக்கிய புன்னகையுடன் அவன் கேட்க,
“ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. போயா…” என்றாள் ஆத்திரம் மிகுந்து.
அந்த விழிகளில் கனன்ற நெருப்பின் தகிப்பில் ஆரோன் விழிகள் புன்னகையில் மின்ன,
“பவர்ஃபுல் அன்ட் பெயின்ஃபுல்…” என்றான் அப்போதும் இதழ்களில் இளமுறுவல் ஜொலிக்க.
அவனை எந்த வகையிலும் விலக்கி வைக்க முடியவில்லை. ‘தன்னை தெரிந்தே தன்னிடம் இப்படி பேசினாலும் வேண்டாம்’ என நினைத்தவள் திரும்ப அங்கே இஷாந்த் வந்துகொண்டிருந்தான் அவர்களை நோக்கி.
“ஹாய் ஆரோன்…” என்ற இஷாந்தின் அழைப்பில்,
“ஹாய்…” என்றவன் ப்ரோவை தவிர்த்தான்.
‘முறையை மாத்தாதடா ரிஷபா’ என குறுஞ்சிரிப்புடன் வருங்கால மச்சானை பார்த்து கையசைத்தான் ஆரோன் ரிஷபன்.
“சௌபி உன்னை அம்மா கூட்டிட்டு வர சொன்னாங்க…” என்று சொல்ல,
“கால் பண்ணியிருக்கலாமே ண்ணா…” என்றாள் அவள்.
“உன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப். அதான் நானே வந்தேன்…” என்று இலகுவாய் சொல்ல தன் கையிலிருந்த போனை பார்த்தாள் சௌபர்ணிகா.
உள்ளங்கை வியர்த்திருக்க அதில் நழுவிவிடாமல் கைபேசியை இறுக்கி பிடித்ததனால் அதனை அணைத்திருக்கிறோம் என்று புரிந்து போனது.
தன்னைப்போல் அவள் பார்வை ஆரோனிடம் செல்ல, அவனும் அவள் கைபேசியை கண்களால் காண்பித்து. ‘இதுக்கு என்ன அர்த்தம்?’ என்றான் விழிகளால் புருவம் உயர்த்தி.
“ப்ச், கவனிக்கலை…” என்று முன்னே சென்றாள் வேகமாய்.
“அப்பறம் ஆரோன், இங்க உங்களை பார்ப்பேன்னு நினைக்கலை. எப்படி இருக்கீங்க? அன்னைக்கு கடைக்கு வந்துட்டு அவசரமா கிளம்பினதோட சரி….” என நாளை குறிப்பிட்டு இஷாந்த் சொல்ல முன்னால் நடந்து சென்ற சௌபர்ணிகா நடை ஒரு நொடி நின்று பின் நகர்ந்தது.
‘ஆக அன்றைக்கு அவன் கடைக்கு சென்றிருக்கிறான். ஆனால் இஷாந்த் மேற்பார்வையில் இருக்கும் கடைக்கு’ என புரிந்துபோனது.
இது தெரியாமல் அவனை தேடி தவித்து எத்தனை அல்லாடி போனோம் என தன்னை குறித்தே கோபம் பொங்கியது.
“நீங்க என்ன இந்த நேரம் இங்க?…” என இஷாந்த் கேட்க,
“சென்னையில ஒரு வேலை. அதான் வரவேண்டியதா போச்சு…” என்றான் ஆரோன்.
“நல்லதா போச்சு. வாங்களேன் அப்படியே சாமி கும்பிட்டு போகலாம்…” என்ற இஷாந்த்,
“கோவிலுக்கு வருவீங்க தானே?…” என சிறிது தயக்கத்துடன் கேட்டான்.
“வொய் நாட்? கண்டிப்பா வருவேன். அம்மா சரியான பக்தி பழம். நான் போகாத கோவிலே கிடையாது. எல்லா கோவில்லையும் இருக்கறது சாமி தானே…” என்றவன்,
“என்ன எதுவும் ஸ்பெஷலா? எல்லாருமே ஸ்பெஷாலா தான் இருக்கீங்க?…” என்றான் கோவிலுக்குள் நுழைந்ததும் தூரத்தில் தெரிந்த சபர்மதி, இஷாந்த் குடும்பத்தை பார்த்துகொண்டே.
“உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் தம்பி…” என்ற சபர்மதி,
“வாங்க பூஜையை முடிச்சிட்டு பேசலாம்…” என அழைத்து,
“இஷாந்த் கூட்டிட்டு வாப்பா…” என்று முன்னே நடந்தார்.
சபர்மதியின் பார்வையில் என்னவோ இருப்பதை ஆரோன் சடுதியில் கண்டுகொண்டான்.
இஷாந்த் அவன் யார் என ஜெயந்தனுக்கு அறிமுகம் செய்துவிட்டு பூஜைக்கு செல்ல சில நொடிகளில் மனமுருகிய வேண்டுதல் சௌபர்ணிகாவிற்கும், அவளை குறித்து சபர்மதிக்கும்.
சாமி கும்பிட்டு முடித்ததும் கோவிலில் பிரசாதம் வழங்கப்பட இன்னும் வானம் இருட்டிக்கொண்டு வந்தது.
“நீங்க வந்து உட்காருங்க தம்பி…” என்ற சபர்மதி ஒரு தட்டில் பிரசாத உணவுடன் அவனருகில் வந்தமர்ந்தார்.
டேபிள் போடப்பட்டு அங்கே வருவோருக்கெல்லாம் சந்தனாவும், இஷாந்தும், சௌபர்ணிகாவுடன் உணவை தந்துகொண்டிருந்தனர்.
பிள்ளைகள் இருவரும் ஜெயந்தனோடு விளையாடியபடி இருக்க சபர்மதி அங்கே ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“எங்க தங்கி இருக்கீங்க?…” என்றார் ஆரோன் ரிஷபனிடம்.
“இங்க எங்க ஸ்டூடியோ பக்கத்துல ஒரு ப்ளாட் இருக்கு. சென்னை வரும்போது எல்லாம் அங்க தான் ஸ்டே…” என்றான் சாப்பிட்டுக்கொண்டே.
“வேலை விஷயமா வந்திருக்கீங்களா?…” என அவர் கேட்டதும் மௌனமாய் சிரித்துக்கொண்டவன்,
“இப்போ இந்த ட்ரிப் வேலை விஷயமா இல்லை. ஆனா மும்பைல ஒரு கான்செர்ட். அதுக்காக ரெண்டுநாள்ல போயிருவேன். அங்க வேலை முடிய பத்துநாளுக்கு மேலாகும். அதான் அதுக்குள்ள இங்க ஒரு விசிட்…” என்றான்.
“ஓஹ்…” என்ற சபர்மதி மேலும் கேட்கும் முன்,
“அம்மா, அப்பா எல்லாம் ஹைதராபாத்ல. அங்கயே வீடு இருக்கு. அம்மாவோட நேட்டிவ் இங்க தான் சென்னை. வேளச்சேரி. சில ரிலேட்டிவ்ஸ் கூட இங்க தான் இருக்காங்க…” என்றவன்,
“என்னோட பர்சனல் ஜாப்ன்னு பார்த்தா ஒரே இடத்துல இருக்கற வேலை கிடையாது. ஊர் ஊரா, நாடு நாடா போய்ட்டே இருக்கனும். நானும் கொஞ்சம் நல்ல பையன் தான். என்னை நானே தானே சொல்லிக்கனும். என்னோட கான்பிடன்ட் லெவல் அது…” என்று சொல்லி புன்னகைக்க,
“ஹ்ம்ம், நல்ல பையன் மட்டுமில்லை. ரொம்ப புத்திசாலியும் கூட…” என்றார் சபர்மதி.
“வேற ஏதாவது கேட்கனுமா?…” என்று ஆரோன் கேட்க,
“இதுவுமே சும்மா தான் கேட்டேன். நீங்க எங்க பூஜைக்கு வந்திருக்கீங்க. அதான்…”
“ஓஹ், பூஜைக்கு வந்தா இவ்வளோ விவரம் கேட்பாங்களா? இவ்வளோ நாள் எனக்கு இந்த விவரம் தெரியாம போயிருச்சே…” என்று சொல்லி குறும்பாய் புன்னகைக்க சபர்மதிக்கும் புன்னகை தான்.
“ம்மா, மாலை, தாம்பாளத்தை கார்ல வச்சிடறேன். நீங்க பிள்ளைங்களை கூட்டிட்டு காருக்கு வாங்க. மழை வர மாதிரி இருக்கு…” என அங்கே வந்த சௌபர்ணிகா சொல்லி செல்ல,
ஆரோன் ரிஷபன் கிளம்பவும் தூறல் வலுக்க ஆரம்பித்தது. பிரசாதம் தந்து கொண்டிருந்தவற்றை எல்லாம் மழை படாமல் உள்ளே எடுத்து வைத்து நனையாமல் நின்றுகொண்டார்கள் சபர்மதி குடும்பத்தினர்.
“எங்கம்மா சௌபி?…” என இஷாந்த் கேட்க,
“பூஜை பொருளை எல்லாம் கார்ல வச்சிடறேன்னு போனா இஷாந்த். மழை பெருசாகிடுச்சு. கார்ல தான் இருப்பா…” என்றார் சபர்மதி மகனிடம்.
சட்டென ஓடிவிடும் தூரம் இல்லையே. மழை வேறு அடித்து பெய்து கொண்டிருந்தது.
கோவிலை விட்டு வெளியே வந்த ஆரோன் ரிஷபன் கண்ணில் பட்டது மழையில் நனைந்தபடி எதையோ தேடிக்கொண்டிருந்த சௌபர்ணிகா தான்.
காரில் பூஜை பொருட்களை வைத்து பூட்டிவிட்டு மீண்டும் கோவிலை நோக்கி நடக்க மழை வேகமாய் பெய்யவும் புடவை தடுக்கி கீழே விழ போனவள் சுதாரிக்கும் முன் கையிலிருந்த கார் சாவி விழுந்திருந்தது.
அதனை தேடி எடுப்பதற்குள் அவள் தெப்பமாய் நனைந்திருக்க மழையின் வேகம் கண்ணை திறக்க விடவில்லை.
கண்களை சுருக்கி தன் எதிரில் வந்து நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள் சௌபர்ணிகா.
தேடி எடுத்து கையில் வைத்திருந்த கார் சாவியை இறுக்கமாய் பிடித்தவள் அவனை கடந்து செல்ல முற்பட மீண்டும் மறித்து நின்றான் ஆரோன் ரிஷபன்.
“ப்ச், மழை பெய்யுது. வழி விடுங்க. நீங்களும் நனையாம கிளம்புங்க…” என்று சொல்ல,
“கேட்கலை…” என்றான் காதில் கை வைத்து காண்பித்து.
“ப்ச், மழை…” என்றவள் அவனை கடந்து சென்று தன் காரில் ஏறும் முன் திரும்பி பார்க்க ஆரோன் ரிஷபன் அதே இடத்தில் தான் நின்றிருந்தான்.
“இவனோட…” என அவனும் நனைவதை கண்டு கடுப்புடன் அருகில் வந்தவள்,
“வாங்க…” என்று அழைக்க,
“எங்க?…” என புன்சிரிப்புடன் பார்த்து பிடிவாதமாய் நிற்க,
“படுத்தறானே?…” என பல்லை கடித்தவள் அவனின் கார் எங்கே என்று பார்க்க கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
“உங்க கார் எங்க?…” என்றாள் சத்தமாய் அவனிடம்.
அதற்கும் பதில் சொல்லாமல் மழைத்துளிகள் ஒட்டி உறவாடிய அவளின் முகத்தை பார்த்தபடி நின்றான்.
நெற்றியில் பட்டு, கன்னம் தொட்டு, இதழ்களில் தவழ்ந்து, கழுத்தில் இறங்கிய நீரின் மேல் அத்தனை ஆவேசம்.
“ப்ளடி ஃபெல்லோ…” என்று அவஸ்தையாய் பற்களை கடிக்க அவனின் உணர்வுகள் புரியாமல் தவிப்புடன் பார்த்தாள் இப்படி நனைகிறானே என்று.
பலத்த இடி அடுத்தடுத்து தாக்க அதன் சத்தத்தில் மிரண்டவள் வேறு யோசிக்கவே இல்லை.
“ஜஸ்ட் ஒரு ஹெல்ப்பிங் மைன்ட் தான்…” என்று சொல்லி அவனின் கையை பிடித்தவள் விறுவிறுவென அருகில் இருந்த தன் காரில் அமர வைத்து தானும் அமர்ந்த பின்னர் தான் தான் செய்துவைத்த காரியத்தின் வீரியம் புரிந்தது.
காருக்குள் அமர்ந்தவள் அவனை திரும்பி பார்க்க அவன் அவளை மட்டுமே பார்த்திருந்தான்.
“ஆனா ப்ச், ஒன்னு சொல்லனுமே. எப்படி சொல்ல? அடி வாங்கிடுவேனோ?…” என்று கேட்டு அவளை சூடேற்ற இதழ்களை கடித்து அவன் புறம் திரும்பாமல் நீர் திவலைகள் வழியும் கண்ணாடியில் பார்வையை பதித்தாள் சௌபர்ணிகா.
வெளியே மழை அடைத்து ஊற்ற அதன் குளுமை கொஞ்சமும் அண்டாமல் காருக்குள் வெம்மை சூழ்ந்தது.