“பொண்ணு பார்க்க தானடா போறோம்.ஏதோ போருக்குப் போற மாதிரியே முகத்தை வச்சிருக்க. கொஞ்சம் சிரிச்ச முகமா வாயேன்ப்பா!” என்றதும்
அவன் இரு இதழ்களையும் பற்கள் தெரிய விரிச்சுக் காட்டி,” இவ்வளவு சிரிச்சது போதுமா?” என்றான் எரிச்சலாக.
“நீ சிரிக்கவே வேண்டாம்டா. மூஞ்சி மேல எமோஜி ஒட்ட வச்சா மாதிரி இருக்கு” என்று அவன் தந்தை கலாய்த்து விட ,
“அட ஆமா நான் கூட இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேங்க” என்றார் அவன் தாயும் சேர்ந்து கொண்டு.
‘குடும்பமாடா இது?’ என்று மனதில் அர்சித்து வெளியே முறைத்து வைத்தான் அவன்.
“என்ன?, குடும்பமா இதுனு மனசுக்குள்ள கவுண்ட்டர் தர்றியாக்கும்.”என்ற அவனின் அம்மாவை முறைத்தவன்,” உங்க கிட்ட ஒரு மைன்ட் வாய்ஸ் கூட பேசித் தொலைக்க முடியல” என்று அலுத்துக் கொண்டான்.
“விட்றா மவனே, இதெல்லாம் ஒரு விஷயமா?” என்று அதற்கும் கிண்டல் செய்ய
“அட போங்கய்யா, நான் பேசவே இல்ல.” என வெளியில் வேடிக்கைப் பார்க்கத் துவங்கி விட்டான்.
“ஏன் ப்பா கிராமம்னா பச்சை பசேலென இருக்கும்’னு சொல்வாங்க. இங்க என்னப்பா எங்கே திரும்பினாலும் பொட்டல் காடா இருக்கு. சஹாரா பாலைவனத்துக்கு தங்கச்சி ஊரா இருக்குமோ?” என்று பேசிக் கொண்டே அவன் வர,
“ப்ப்ச்” என்ற சலிப்பு சத்தம் கேட்டது பின்பக்கத்தில் இருந்து.
‘பேசக்கூட கூடாதா?’என்று முணுமுணுத்துக் கொண்டே வேடிக்கைப் பார்க்கத் துவங்கி விட்டான் அவன்.
“ஏங்க இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு?” என்று வித்யா கேட்க
“கொஞ்ச தூரம் தான் மா,ஏன் உட்கார முடியலையா?” அக்கறையாய் வினவினார் தனஞ்செயன்.
“ஆமா இடுப்பு லைட்டா வலிக்குது.” என்று முகத்தைச் சுருக்க
“டிரைவர் வண்டியை ஒரு நிமிஷம் நிறுத்துங்க.” என்று சொல்லவும் உடனேயே வண்டி ஓரமாக நிறுத்தப்பட்டது.
“கீழே இறங்குமா, கொஞ்ச நேரம் வாக் பண்ணா இடுப்புவலி தெரியாது.” என தனஞ்செயனும் இறங்கிக் கொள்ள
மகனோ,”ம்ம்ம் ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க” என்று அவனும் இறங்கிக் கொள்ள
“நீ ஏன்டா இறங்கின?” என மனைவியின் கையைப் பிடித்து இறக்கிவிட்டபடி கேட்க
“ப்ப்ச், அவசரமா வந்திடுச்சுப்பா” என்று இறங்கி ஒற்றையடி பாதையில் ஓட
“அடேய்! நல்லவேளை நிறுத்தினேன். இல்லாட்டி பொண்ணு வீட்டுக்குப் போய்…” என சொல்ல வந்ததை சொல்லாமலேயே நிறுத்த, தூரம் சென்றவன்,” தனஞ்செயன்னு பேர் வச்சுக்கிட்டு தங்கதுரை ஜோக்கெல்லாம் சொல்லாதப்பா “என்று சத்தமாக அவன் அங்கிருந்தே கத்த
“அப்படி ஒரு பிள்ளை இப்படி ஒரு பிள்ளை. ஒண்ணு மியூசியத்தில் வைக்க வேண்டியது ரேர் பீஸ், இன்னொண்ணு மிருககாட்சி சாலையில் இருந்து கொண்டு வந்தது அதுவும் ரேர் பீஸ் தான்.” என்றார் முனகலாக.
“சத்தமா பேசாத வித்தி, அவன் காதில் விழுந்துடப்போகுது.” என்றார் தனஞ்செயன்.
“கேட்டா மட்டும், ஒரே ஒரு பார்வை பார்ப்பான். வேற என்ன செய்வான் ?”என்று அதற்கும் அவர் பதில் தர, அவன் வித்யா கூர்ந்து பார்த்தான் முறைப்புடன்.
“சீக்கிரம் ஏறுடா. உன் நொண்ணன் பார்வையிலேயே பஷ்பமாக்கிடுவான் போலருக்கு” என்று முனகிட,
அவினாஷ் வேகமாக காரில் ஏறிக் கொள்ள வித்யாவும், தனஞ்செயனும் வந்தமர்ந்தனர்.
மீண்டும் ஓர் அமைதிப்பயணம்.
அழகினியன் வித்யா தனஞ்செயன் தம்பதியின் மூத்தப் புதல்வன். பெயருக்கேற்ற அழகு கொட்டிக் கிடந்தது தான் ஆனால் இனியன் என்ற பெயருக்கு அவன் நியாயம் செய்யவில்லை இதுவரை. முகத்தில் எப்போதும் ஒரு கடினம், இறுக்கம், இளக்கமில்லாத ஒரு பேச்சு, காதல் தோல்வி படத்திற்கு நாயகனாகும் அத்தனை தகுதியும் அவனுக்கு உண்டு.
அவனுக்கு அப்படியே நேர்மாறான ஆள் அவனின் இளவல் அவினாஷ். கலகலப்பான பேச்சும், எதையும் இயல்பாய் எடுத்துக் கொள்ளும் குணம், எப்போதும் புன்னகை உறைந்த இதழ்கள் தான் அவனின் தோற்றம்.
இப்படி ஓர் பிள்ளை அப்படி ஓர் பிள்ளை அந்த கலகலப்பான தம்பதிக்கு.
**********
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க. பலகாரம் எல்லாம் எடுத்துவை காந்தா.” என்ற குரலில் அடுக்களைக்குள் நின்றிருந்த பெண்மணி வெளியே எட்டிப் பார்த்தார்.
“எல்லாம் எடுத்து வச்சாச்சு. பால் மட்டும் இன்னும் வரலை. என்னன்னு கேளுங்க!” என்றார் சத்தமாக.
“நானே வாங்கியாந்துட்டேன். வீட்டுல இருக்கிற அத்தனையும் அசமஞ்சமா இருக்குதே” என்று நொடித்தவர்,”அவ எங்க ரூமுக்குள்ள இருக்காளா…? வெளியே வந்துடகிந்துடப் போறா. இதுக்குத்தான் சொன்னேன் பெரியவர் வீட்டுக்கு அனுப்பிடலாம்னு யாரு தான் எம்பேச்சைக் கேட்குறீங்க?” என்றார்.
“அவளை அப்புடியே ஒளிச்சே வச்சுக்க முடியுமா.? எப்படியும் நமக்கு ரெண்டு மகளுகனு தெரியாமலா போயிரும்…”எனும்போதே,” யம்மோவ்!” என்ற சத்தம் கேட்டது.
“சரிடா, சரிடா எல்லாத்துக்கும் அதிலேயே வந்து நிக்க வேண்டியது.”என்று மகனை சமாதானம் செய்த காந்தா,” பாலைக் கொண்டாங்க” என கணவனிடம் தூக்குவாளியை வாங்கிக் கொண்டார்.
காந்தவள்ளி மணியரசு தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் வளவன், ஓவியமலர், சித்ரபாலா. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் சிறிய அரிசிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். சொந்த ஊர் இருங்களூர். விவசாய நிலங்கள் இருந்தாலும் சொந்தத்தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், தான் விளைய வைக்கும் அரிசியை விற்பனை செய்து வருகிறார். மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசிக்கு பிரசித்தி பெற்ற ஊர்.
வளவன் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் என்ஜினியராக இருக்கிறான். தற்போது தான் அவனுடைய திருமணம் முடிந்தது. மனைவி ஷண்மதியுடன் துவாக்குடியில் குடியிருக்கிறான்.
ஓவியமலர் வளவனுக்கு அடுத்துப் பிறந்தவள். பி. காம் முடித்துவிட்டு அதோடு வீட்டில் இருக்கிறாள் கடந்த மூன்று வருடங்களாக. இவளுக்கு அடுத்து சித்ரபாலா போன வருடம் தான் மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிசிஏ படிப்பை முடித்தாள். எம்சிஏ படிக்கவேண்டும் என்று கேட்டவளை வேண்டாமென மறுத்து வீட்டில் இருக்க வைத்துவிட்டனர். முதல் காரணம் வளவனின் படிப்பிற்காக வாங்கிய கடன் இரண்டாவது மூத்தமகளின் திருமணத்திற்காக வாங்கிய கடன் என அவரின் கழுத்தை நெரிக்க இளையமகளின் படிப்பை போதுமெனக் கூறிவிட்டார் மணியரசு.
அதில் மூத்தவர்களின் மீது சற்று மனத்தாங்கலில் இருந்தாள் சித்ரபாலா.
இப்போது திருமணம் செய்ய பேசவும் இன்னும் அவளது கோபம் அதிகமாகியது.
“ஏன் மா கல்யாணத்துக்கு செய்யிற செலவை எனக்கு படிக்க செலவு செய்யலாமில்ல ?”என்று கேட்டு சலித்துவிட்டாள்.
“உங்கப்பாட்ட கேளேன்.” என்ற காந்தவள்ளியை முறைக்கத் தான் முடிந்தது அவளால்.
“பேசாம பொண்ணு பார்க்க வர்ற மாப்ளை கிட்டயே வேண்டாம்னு சொல்ல சொன்னா?’ பக்கத்துவீட்டுத் தோழியிடம் ஆலோசனை கேட்க
“எத்தனை மாப்பிள்ளை கிட்ட சொல்லுவ?, அதெல்லாம் ஒத்துவராதுடி சித்ரா. நீ பேசாம கல்யாணத்துக்கு ஒத்துக்க. இப்பவெல்லாம் கட்டிக்கிற பசங்க பொண்ணுகளை படிக்க வைக்கிறாங்களாம். நம்ம மேற்கிதெரு சத்யாக்கா இப்ப டீச்சரா இருக்கு தெரியுமா, அது புருஷன் வீட்டுல போய்தான் படிச்சு வேலை வாங்கி இருக்கு. அப்பறம் நம்ம கூட பத்தாவது படிச்சாளே செல்வி… அவளும் இப்ப நர்சா வேலை பாக்கிறாளே அது இங்கயா படிச்சா புருஷன் வீட்ல தான் படிச்சா. நீயும் உன் வீட்டுக்காரரை ஐஸ் வச்சு படி. உன்னைப் பார்க்க வர்ற மாப்ளை வேற ஏதோ வெளிநாட்டு மாப்ளைனு கேள்விபட்டேன்.” என்றாள் அவள்.
சித்ரபாலா தோழியின் பேச்சில் சற்று தெளிவடைந்தவள், பெண்பார்க்க வருவதற்கு ஒப்புக் கொண்டாள் .
மணியரசு தன் சொந்தத்தில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தபோது வந்த வரன் தான் அவினாஷ். அங்குதொட்டு இங்குதொட்டு தூரத்து சொந்தமாக இருந்த தனஞ்செயன் மச்சான் முறையில் வர, பெண் இருப்பது கேள்விபட்டு தன் மகனுக்காக கேட்டிருந்தார் மணியரசுவிடம்.
“காந்தா! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க” என்று மணியரசு சொல்லிக் கொண்டே காரிலிருந்து இறங்கியவர்களை இருகரம் கூப்பி வரவேற்றார்.
“வாங்க வாங்க… மச்சான் வாம்மா தங்கச்சி வாங்க மாப்பிள்ளை” என்று வரவேற்றிட தனஞ்செயன் குடும்பத்துடன் உள்நுழைந்தார்.