பிடிவாதமாய் அமர்ந்திருந்தவனை என்ன செய்யவென்று தெரியாமல் விழித்தவர்கள் கையைப் பிசைந்து கொண்டு நின்றனர்.
“தம்பி அதுவந்து…” என வித்யா இழுக்க
“கார் எடுத்துட்டு அப்படியே சுத்தி பார்த்துட்டு வர்றேன். கிளம்பும்போது கால் பண்ணுங்க.” என்றவன், ட்ரைவரை பார்க்க, அவர் சாவியை தந்துவிட்டார்.
“ம்ம்க்கும் அதுக்கு எதுக்கு இங்கவரை வரணும்?” என்று மனதினுள் சலித்துக் கொண்ட வித்யா, வெளியே எதுவும் பேசிடவில்லை.
மகன் பார்க்கும் பார்வையிலேயே சுட்டெரித்துவிட மாட்டானா…
“சரி தம்பி நாங்க பேசி முடிச்சதும் ஃபோன் பண்றோம்.” என்ற தனஞ்செயன் அவினாஷோடு முன்னே நடந்தார்.
அதன்பிறகு மகிழுந்து அங்கே நிற்கவில்லை. காற்றுக்கு இணையான வேகத்தில் அந்த குறுக்கு சந்தில் செல்லமுடியாதே என்று நிதானித்து மெதுவாக சென்றான் அவன்..
“அப்பா என்னப்பா இது?, ஏன் அண்ணனை போகச் சொன்னீங்க.?” என அவி மனத்தாங்கலுடன் கேட்க
“விடுடா தம்பி, நீ வற்புறுத்தி கூப்பிட்டா மட்டும் அவன் இருந்திடுவானா?” என்ற வித்யா,” இவனை என்ன சொல்லறதுனே தெரியலைங்க.” என்றார்.
“விடும்மா!, எல்லாம் தெரிஞ்சகதை தானே?” என அதற்கும் தனஞ்செயன் சமாதானம் செய்ய ,
“என்னவோ போங்க.” என்றபடி உள்ளே செல்ல மணியரசு வாசலிலேயே நின்று வரவேற்றார்.
“வாங்க வாங்க முன்னவே வருவீங்கனு நினைச்சேன். பிரயாணம் எல்லாம் சௌகரியம் தானுங்களே…? இங்கன ரோடு தான் சரியில்லை.” என்றவர் மூவருக்கும் நாற்காலியை எடுத்துப் போட்டிருந்தார்.
காந்தவள்ளி வேகமாக தண்ணீருடன் வந்தவர், அதை தனஞ்செயன் கையில் கொடுத்துவிட்டு வரவேற்க இயல்பான புன்னகை நால்வரிடத்திலும்.
“பொண்ணைப் பார்த்துடலாமா?” என்று வித்யா எடுத்த எடுப்பிலேயே கேட்டுவிட
மணியரசு தயங்கி,”இந்தா கூப்பிட சொல்றேன். அக்கம் பக்கம் வீட்டுல இருந்தும் வருவாக அதான் காத்திருந்தோம்.” என்று சொல்ல
“சரி வரட்டுமே அவங்க வர்றப்ப ஒருதடவை பார்த்துட்டா போச்சு, இப்ப வரச் சொல்லுங்க நிறுத்தி நிதானமா பார்த்துப்போம்.” என வித்யா சொல்ல
“அம்மா !”என்றான் அவினாஷ் சிறு கடுகடுப்புடன்
“அதனால என்னங்க?” என்ற காந்தவள்ளி,” சித்ரா டீ கொண்டு வாம்மா.” என குரல் கொடுக்க பக்கத்து வீட்டுப் பெண் அவளை அழைத்து வந்தாள்.
அதற்குள் சிலர் உள்ளே நுழைய, அனைவரையும் வரவேற்று அமரவைத்தார் மணியரசு.
“இதுதான் மாப்ளையா?, நல்ல லட்சணமா தான் இருக்காரு. ஏன் தம்பி துபாய்லயா வேலை செய்றீங்க?” என ஒருவர் கேட்க
“இல்லைங்க தம்பி, சிலிக்கான் வேலில இருக்கான்.” என தனஞ்செயன் சொல்ல
“வேலி கட்டுற வேலையா…?அதையா வெளிநாட்டுல போய் பார்க்குறீங்க, ஆமா தினக்கூலி எம்புட்டு.? வேலி கட்டுற வேலைதான்னா நாம கூட போவலாமில்ல.” என்று வயதான ஒருவர் சொல்லவும், சித்ரபாலா முணுக்கென்று சிரித்து விட்டாள்.
“சுத்தம் !”என முனகிய அவி,” ஏன்ப்பா?” என்று தந்தையைப் பார்த்தான் பரிதாபமாக.
“இப்படி ட்விஸ்ட் ஆகும்னு நினைக்கலேடா மகனே!” என்றார் அவரும் பதிலுக்கு.
“வேலி கட்டுறதா… அடடா அதில்லைங்க. தம்பி அங்கே கம்ப்யூட்டர் இஞ்சினியரா இருக்கான்.” என்றார் வித்யா விளக்கமாக.
“அட ஐடினு சொல்லுங்க”என்றதும்,” இதெல்லாம் தெரியுது. அப்ப நம்மளை கிண்டல் பண்ணிருப்பாங்களோ” என பார்க்க, அவர்கள் சாதாரணமாக இருந்தனர்.
“சரி சரி மேற்கொண்டு பேசுங்க. மாப்ளைக்கு பொண்ண புடிச்சாமாதிரி தான் தெரியுது. ஆகவேண்டியதை பேசுங்க”என்று ஒருவர் சொல்ல
“ம்மா!” என்று வித்யாவை சுரண்டினான் அவி.
“டேய்!, ஏன் டா சொரண்டி சதையை பிக்கிற ?என்ன வேணும்?”என்றார் அவர் முகத்தை சிரிப்பது போல வைத்து நெளிந்தபடி.
“ப்ப்ச் பொண்ணு கிட்ட பேசணும். சும்மா பார்க்கிறதுக்கா கூட்டிட்டு வந்தீங்க. ஒழுங்கா பேச வைங்க இல்ல…” என்று அவன் மெல்லிய குரலில் மிரட்ட
“அப்ப பொண்ண புடிச்சிருக்கு, அப்படி தானே…?!”என்று அவர் கேட்டதும்
“அதுவந்து அவன் பேசலை நான் தான் பொண்ணு கிட்ட தனியா பேசணும்னா பேசிடுடானு சொன்னேன். வேண்டாம்மா நீங்க பார்த்து உங்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும்னு சொல்றான்.” என்று வித்யா சமாளிக்க சித்ரபாலாவுக்கு கோபமாய் வந்தது.
‘இது சரியான அம்மா கோண்டு போலவே…?இது சரிவராது’ என எண்ணியபடி நிற்க
“இப்ப இதெல்லாம் சகஜம். நீங்க போய் பேசிட்டு வாங்க தம்பி, என்ன இருந்தாலும் நீங்க நேரடியா பேசிக்கிறது ஒரு மாதிரி தான!” என்றார் அங்கிருந்த வயதான பெண்மணி.
‘பார்றா பாட்டி நமக்கு ஹெல்ப் பண்றதை..’ என்று சிரித்துக் கொண்டு எழுந்துவிட்டான் மணியரசு மறுப்பதற்குள்.
கூட்டத்தில் அவராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.
சித்ரபாலாவும், அவினாஷும் தனித்து விடப்பட, பக்கத்து வீட்டுப் பெண் அவர்களுக்கு சற்று பார்வைபடும் தூரத்தில் நின்றிருந்தாள்.
“இதோப் பாருங்க முதல்லயே நான் பேச வேண்டியதை பேசிடுறேன் நீங்க அப்புறமா முடிவெடுங்க.” என்றவள் தனது படிப்பு ஆர்வத்தை அவனிடம் விளக்கினாள்.
அவினாஷ் மெல்லிய சிரிப்புடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தவன்,” அப்புறம் அடுத்து என்ன கோர்ஸ் படிக்கலாம்னு நினைக்கிறீங்க? எங்கே அப்ளிகேஷன் வாங்கலாம்?” என்று சூசகமாக கேட்க
அவளுக்குத் தான் விளங்கவில்லை.
“ப்ப்ச் ,அது என் பிரச்சினை. இந்த டீலிங் ஓகேவா இல்லையா அதைச் சொல்லுங்க. அப்புறம்…” என்றவளை நிதானமாகப் பார்த்தவன்,”உங்களுக்கு எந்த காலேஜ் ல நான் அப்ளிகேஷன் வாங்கட்டும்னு கேட்டேன். புரியுதா…. பாலா… டிட் யூ அன்டர்ஸ்டான்ட்” என்று ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக கேட்க, அப்போது தான் அவளுக்கு அவன் சொல்லியதே விளங்கியது.
“அப்போ உங்களுக்கு ஓகேவா?!, நான் படிக்கலாமா…?வேலைக்குப் போகலாமா ?”என்று விழிவிரித்து கேட்க
“நான் காலேஜ்ல அப்ளிகேஷன் வாங்க விசாரிக்கிறேன் இப்போ போகலாமா…?”என்றதும்
“அதுவந்து என்னைப் பிடிக்குதா இல்லையா எதுவுமே சொல்லலை.”என்று எதிர்பார்ப்புடன் கேட்க
“நீ அந்த அளவுக்கு மக்கு இல்லைனு நினைக்கிறேன். இருந்தாலும் நான் பேசினதை ரீகால் பண்ணிக்கோ புரியும்.”என்றவன் முன்னே நடந்தபடி,” உங்க ஃப்ரெண்ட் ஃப்ரீஷ் ஆகிட்டாங்க கூட்டிட்டு வாங்க.” என பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டே நகர்ந்தான்.
“அடி சித்து உன்னை அவருக்குப் பிடிச்சிருக்காம் வா. ஏன்டி இப்படி நிக்கிறவ அடியேய்…!” என்று உலுக்கி பாலாவை அழைத்து வருவதற்குள் அவளுக்குத்தான் நாக்குத் தள்ளியது.
பெண்பார்க்கும் படலம் முடிந்து,’ இன்றே பூ வைத்து உறுதி செய்து கொள்ளலாம்.’ என முடிவெடுக்க தனஞ்செயன் குடும்பத்தினருக்கு மூத்த மகன் வந்து விட்டால் தேவலாம் எனத் தோன்ற, அதற்கு எதிர்மாறாக மணியரசு தன் மூத்த மகள் வந்துவிடக் கூடாது என எண்ணிக் கொண்டிருந்தார்.
மணியரசுவின் வேண்டுதல் பலிக்காமலேயே போனது.
“இந்த வீடு தானா?”அழகினியனின் அதட்டல் குரல் ஓங்கி ஒலிக்க, அருகில் மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல நடுங்கிக் கொண்டு நின்றிருந்தாள் ஓவியமலர்.