அழகினியன் விறுவிறுவென அவர்கள் வீட்டிற்குள் நுழைய, பின்னால் மொத்தக் குடும்பமும் வால் பிடித்தாற்போல நடந்தது.
கூட்டத்தை எல்லாம் அவன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
உள்ளே நுழைந்தவனின் பார்வையில் பட்டதென்னவோ கலைந்த ஓவியம் போல இருந்த ஓவியமலரைத் தான். ஐந்து மாதக் கரு வயிற்றில் சற்று மேடிட்டுத் தெரிய, அதன் மேல் கையை வைத்திருந்தாள் தனியே ஒரு தூணில் சாய்ந்தபடி.
சித்ரபாலாவோ தந்தையின் அருகில் அழுதபடி அமர்ந்திருக்க, காந்தவள்ளி பாலா அருகில் அமர்ந்திருந்தார்.
“இப்ப என்ன நடந்து போச்சுனு எல்லாரும் உட்கார்ந்து கெடக்கீங்க. சும்மா நடந்ததையே பேசிட்டு இருந்தா ஆச்சா.? இந்தா மலரு ஏந்திச்சுப் போய் காப்பியை போடு, சாங்காலம் வாரவங்களுக்கு நான் போய் பலகாரத்துக்கு ஏற்பாடு செய்யணும் “என்றார் ஒருவர்.
“அண்ணே வளவன் வந்திடட்டும்.” மெலிதான குரலில் காந்தவள்ளி பேச
“அவேன் எப்ப வாரது…?இந்தா இருக்க திருச்சி. சீக்கிரம் வரமாட்டானா உம்மவன். மதுரையில இருந்து நானே வந்துட்டேன்.” என்றார் அவர் சற்று அதட்டலான குரலில்.
“யார் என்ன சொன்னாலும் சரி இதுக்கு நா ஒத்துக்க மாட்டேன்.”மெல்லிய குரலில் கூறினாலும் அழுத்தமாக பேசினாள் பாலா.
அழகினியன் உள்ளே வரவும், காந்தவள்ளி யாரென்று பார்த்தவருக்கு கண்கள் இடுங்கியது.
“இந்த தம்பி இங்க வருது!” என முனகியபடி எழ, அதற்குள் அவன் மணியரசுவை பார்த்தான்.
வித்யா கவனித்தவர்,” என்னம்மா ஆச்சு, ஏன் கட்டு போட்ருக்கீங்க.?” என்று பதறி அருகில் நெருங்கி விட்டார்.
அவினாஷிற்கு பாலாவைக் கண்ட நொடி மனம் திடுக்கிட்டது.
அழுதழுது அவள் முகமே வீங்கிப் போயிருந்தது.
“வாங்க !”என்று அழைக்கக் கூட நாவெழவில்லை காந்தவள்ளிக்கு.
‘இருக்கின்ற பிரச்சினை போதாது என்று இவர்கள் வேறா?’ என்ற எண்ணம் தான் வந்தது அவருக்கு.
“யார் நீங்க ?”என்று கேட்டார் இதுவரை பேசிக் கொண்டிருந்தவர்.
“சித்ராவ போன வாரம் பொண்ணு பார்த்துட்டுப் போனாங்க “என்று கூறிய காந்தவள்ளி அவர்களை அமர செய்தார்.
“மன்னிக்கணும், இங்க இப்ப சூழ்நிலை சரியில்லை. அதனால என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா …?”என காந்தவள்ளி இழுக்க
அழகினியனோ, மணியரசுவை கைகாட்டி,” அவங்களுக்கு என்ன ஆச்சு?” என்றான்.
“தம்பி இருப்பா!” என்ற தனஞ்செயன்,” ம்மா நாங்க சித்ராவை எங்க பையனுக்கு கட்டி வைக்க ஆசைப்படுறோம்” என்று பட்டென்று கூறியதும் காந்தவள்ளி கேவி அழுதுவிட்டார்.
“என்னாச்சு மா…?ஏதாவது பிரச்னையா?” என்று கேட்கவும்
“நீங்க கிளம்புங்க இந்த சம்பந்தம் நடக்காது. சித்ராவுக்கு வேற எடத்துல மாப்ள தகைஞ்சிடுச்சு. அவளால அவ அக்காவும் நல்லா வாழப் போறா” என்றார் அந்த மதுரைக்காரர்.
“வாட் ?”அவினாஷ் அதிர்ந்து எழுந்துவிட, சித்ரா முகத்தை நிமிர்த்தவே இல்லை.
“ப்ப்ச் இருடா!” என்ற அழகு கண்ணை மூடி திறந்தான்.
ஓவியமலரோ எதற்குமே அசைந்து கொடுக்கவில்லை.
“பத்திரிக்கை அடிச்சுட்டிங்களா?” என அழகு கேட்க, அனைவருக்குமே திகைப்பு தான்.
“இன்னிக்கு பேசி முடிச்சு அடிச்சிருவோம் தம்பி. அதெல்லாம் எதுக்கு நீங்க கேட்குறீங்க, அதான் சொல்லியாச்சுல்ல கிளம்புங்க “என்றார் அவர் அதட்டலாக.
“நீங்க இவங்களுக்கு என்ன வேணும்? உங்க பேரு?” என்று அவன் அடுத்த கேள்வியை கேட்க
பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றாலும்,’ இவன் போக மாட்டான் போலவே !’என்றெண்ணியபடி
சொல்லலைன்னா வயசு அதிகமா இருக்க ஆளுக்கு மைனர் பெண்ணை கட்டி வைக்கப் போறீங்கன்னு கம்ப்ளைன்ட் தருவேன் என்றான் அசட்டையாக.
ஏதே போலீஸ்ல புகார் தருவியா.. ஏலேய் யார்டே நீயி. நான் யாருண்டு தெரியுமா என்று அவர் வேட்டியை மடித்துக் கட்டி சண்டைக்கு வர
யார் னு தான் சொல்லிட்டீங்களே என்றவன் ஆமா உங்க தம்பி பேர் என்ன… இது தான் முதல் கல்யாணமா இல்லை என்றவன் அவி போலீஸ்க்கு 100 தானே டயல் பண்ணனும் என கைபேசியை எடுக்க அவரோ சற்று பின்வாங்கினார்.
“தம்பி நீங்க கிளம்புங்க.” என்று காந்தவள்ளி அழகை கிளப்புவதிலேயே குறியாக இருக்க
“நான் ஏன் கிளம்பணும்?” என்றான் நிதானமாக.
சித்ரா வேகமாக எழுந்து கொண்டாள்.
அழுத முகத்தை துடைத்து விட்டு,” நீங்க தான் இப்படி ஏமாத்துற குடும்பத்தில் பொண்ணெடுக்க மாட்டோம்னு சொன்னீங்களே சார், அப்புறம் எதுக்கு இங்க வந்து இப்போ பேசுறீங்க. போங்க முதல்ல…. யார் என்னன்னு தெரியாம பேச வேண்டியது, அப்புறம் வந்து நிற்க வேண்டியது. இது எங்க பிரச்சினை நாங்க பார்த்துப்போம்” என வெடித்தாள் அவள்.
“அப்படி சொல்லு சித்ரா “என்று சுந்தரேசன் வர
“உங்களையும் சேர்த்து தான் சொல்றேன். போங்க இங்கிருந்து, எங்கக்கா வாழ்க்கையை எப்படி சரி செய்யணும்னு எனக்குத் தெரியும்.” என்று அவரையும் கத்தினாள்.
“இந்தா புள்ள, என்ன வாய் நீளுது ?”சுந்தரேசன் அடிக்க கை ஓங்க அவினாஷ் அவர் கையை இறுக்கமாக பிடித்துவிட்டான்.
“என்ன கையெல்லாம் ஓங்குற ?”என கேட்டபடி உறுத்து விழித்தவன்,”பொண்ணு எனக்கு தான். போய் வேலையை பாருங்க “என்றான்.
“என்னங்கடா குடும்பமா மிரட்டுறீங்களா?, ஏ ஆளுக வந்தாக அப்பறம் தெரியும்.” என்று அவர் எகிற
“ஏன் இப்பவே வரச் சொல்லுங்க. நாங்க வெய்ட் பண்றோம்” என்ற அழகு சித்ராவை பார்த்து,” போய் ஃபேஸ்வாஷ் பண்ணிட்டு வாம்மா .பேசிப்போம் “என்றான்.
“நீங்க…” எனும் போதே ,”உன்னைப் போக சொன்னேன் மா” என்றான் அதட்டலாக.
“அவங்களுக்கு ஏதாவது சாப்பிட கொடுங்க” என காந்தவள்ளியிடம் ஓவியாவை கைகாட்டினான்.
தான் அதிகாரம் செய்த வீட்டில் வேறொருவன் நின்று ஆட்டிவைப்பது சுந்தரேசனுக்கு சுத்தமாக பிடித்தமில்லை.
சண்டைக்கு செல்லலாம் என்றால் அவினாஷ் இறுகிய உடல்கட்டோடு அவர் முன்பு முறைப்பாக நின்றிருந்தான்.
***********
சித்ரபாலா முகம் கழுவி வரவும்,வித்யா அவளிடம் பழச்சாறை நீட்டினார்.
“குடிம்மா ஓஞ்சி போய் இருக்கியே…!” என்றதும் அவளுக்கு மீண்டும் அழுகை வரப் பார்த்தது.
அவளை தனியாக அழைத்துச் சென்றவர்,” என்னாச்சு மா… அப்பாக்கு எப்படி அடிபட்டது?” என கேட்க
“நீங்க கிளம்பி போனதும் அக்காவோட மாமியார் வீட்டில் இருந்து வந்தாங்க.” என்றாள்.
“ம்ம்ம் !”என்றவர்,’ஏன் அக்காவை பற்றி எங்களுக்கு கூறவில்லை?’ என்று கேட்கவில்லை
“அக்காவை பத்தி ஏன் பேசலைனு நீங்க கேட்கலாம் ஆன்ட்டி “எனும் போதே ,”அத்தை ,அத்தம்மா, அம்மா இப்படி கூப்பிடணும் சரியா?!”என்றவர்,’ மேலே சொல்’ என்பது போல நின்றார்.
“அக்காவை பத்தி என்ன சொல்ல…?அவ வாழ்க்கை இப்படி போனதுக்கு காரணம் எதையுமே விசாரிக்காம செஞ்சது தான் அத்தம்மா. வேணுன்னு மறைக்கலை நாங்க. சொல்லக்கூடாதுன்னும் நினைக்கலை. நீங்களே முதல் முதலா பொண்ணு பார்க்க வந்திருக்கீங்க. உங்க கிட்ட அக்கா லைஃப் பத்தி பேசி, அதுக்கு விளக்கம் தரன்னு பெருசா போகும். அக்காவே பத்தி வேத்து மனுசங்க கிட்ட தப்பா எடுத்துக்காதீங்க அத்தம்மா. சம்பந்தமே பேசி முடிக்காத நிலையில் நீங்க வேத்து மனுசங்க தானே எங்களுக்கு. அதனால தான் அக்கா பத்தி பேசலை. ஒவ்வொரு தடவையும் என்னை பொண்ணு பார்க்க வரும்போது அவளை பத்தி விசாரிச்சு, உச்சு கொட்டி சம்பந்தம் வேண்டாம்னு சொல்றவங்க தான் அதிகம். “என்றவள்
“இதுவரை என்னை பார்க்க அம்பது மாப்பிள்ளை வந்தாச்சு, உங்க பிள்ளை தான் அந்த ஐம்பதாவது ஆள். அத்தனை பேரும் அக்காவையே விசாரிச்சு அவ ரணத்தை கிளறி விட்டா, என்ன செய்றதுனு சொல்லுங்க. இப்ப கூட நீங்க உறுதியா சம்பந்தம் பண்ணிக்கலாம்னு சொல்லுறதால தான் நான் இதை சொல்றேன்.” என்றாள்.
வித்யாவிற்கு மனம் இளகியது அவள் பேச்சில்.
“நிச்சயம் பண்ணின பிறகு தெரிஞ்சாலும் அது இன்னும் ரிஸ்க் ஆச்சேடா?!” என்று கேட்கவும் கலங்கி நின்றாள் பெண்ணவள்.
“அதுக்குத் தான் அத்தம்மா எனக்கு கல்யாணம் பண்ணிக்கவே பிடிக்கலை. அக்கா மேலயும் கோபம் எனக்கு. அவளாலயும், அண்ணனாலயும் என் படிப்பே போயிடுச்சு. நான் மேல படிச்சா நல்ல வேலைக்குப் போய் அவளை நல்லா பார்த்துப்பேன் இந்த தரங்கெட்ட குடும்பத்தில் இருந்து என் அக்காவை காப்பாத்திடுவேன்” என்றாள் சிறுபிள்ளை போல.
“ஏன்மா ஓவியா வீட்டுக்காரர் சரியில்லையா?” என கேட்க
“அதுதான் தெரியலை. மாமியார் வீட்டில் ஏதோ பிரச்னைனு புரியுது, பட் என்ன பிரச்னைனு சொல்ல மாட்டேங்கிறா. அவங்க வர்றப்ப எல்லாம் இவளை வீட்டுக்கு கூப்பிடுறாங்க” என்றாள்.
அதிலிருந்தே தெரிந்தது சித்ராவிற்கு சரியாக விஷயம் தெரியவில்லை என்று.
“சரிம்மா எதுவா இருந்தாலும் பார்த்துப்போம். நீ தான் என் வீட்டு சின்னமருமக, வா போகலாம்” என உள்ளே அழைத்துச் செல்ல, அவினாஷ் எதிர்பார்ப்புடன் பார்த்திருந்தான்.