சித்ராவின் நிச்சயம் முடிந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்டிருந்தது. நிச்சயம் முடிந்ததிலிருந்து அவினாஷிடம் தான் அத்தனை உரையாடலும் அவளுக்கு.ஏதோ ஒரு மோனநிலையிலேயே இருந்து கொண்டிருந்தாள்.
ஓவியாவிடம் அவள் இதுவரை பேசவே இல்லை.
‘ ஏன் தற்கொலை செய்ய போனாய்?,உனக்கென்ன பிரச்சினை? என்று எதுவுமே கேட்கவில்லை. ‘இவளுக்கு எனக்கு ஒரு நல்லது எப்பவும் நடந்திடக் கூடாது. கெட்டெண்ணம் புடிச்சவ’ என்று தான் தவறாய் அவளை நினைத்துக் கொண்டாள்.
காந்தவள்ளி தான்,” மலரு என்ன பிரச்சினைனு சொல்லுடி. ஏன் இப்படி செஞ்ச?” என விதவிதமாய் கேட்டுப் பார்த்தாலும் பதிலில்லை அவளிடத்தில்.
“ஏன் மா நான் இங்க இருக்கிறதையே மறைச்சீங்க ?என்றவள் ,”நான் இருக்கிறது பிடிக்கலைன்னா வீட்டை விட்டு வெளியே போயிடவா?” என்றாள்.
“ஏன்டி இப்படி பேசுற ?”மனதே ஆறவில்லை அவருக்கு.
“வேணும்னா சம்மந்தி வீட்டில் போய் நானும் அப்பாவும் பேசவா மலரு.?”
“மறுபடியும் சித்துவை பொண்ணு கேட்பாங்க மா. நிச்சயம் ஆனாலும் பரவாயில்லை என் தம்பிக்கு கட்டி வைங்கனு சொல்வாங்க தேவையா நமக்கு?” என்றதும் காந்தவள்ளி யோசனையானார்.
“விடும்மா சித்து கல்யாணம் முடிஞ்சதும், நான் ஒரு வழி பண்றேன்.” என்று முடித்து விட்டாள்.
*********
அழகினியன் மீண்டும் ஊருக்கு கிளம்பியிருந்தான்.
“நான் போயிட்டு பாப்பாவை அழைச்சுட்டு வர்றேன்.” என்று கூற,” சரிப்பா !”என்றார் வித்யா.
பெங்களூரு ஜெயநகரில் இருந்தது அவனது டெடியின் உறைவிடம். சிலிக்கான் வேலியில் பணியில் இருந்தவன் இங்கே மாற்றல் வாங்கிக் கொண்டு வந்துவிட்டான். கடந்த சில வருடங்களாக இங்கிருப்பவன் மகளை வித்யாவிடம் கூட விட்டு வளர்க்கவில்லை. தானே வளர்க்கிறான் தன் அத்தையின் உதவியுடன். வித்யா எத்தனையோ முறை கேட்டுப் பார்த்தும் பலனில்லை. அவராலும் போராட முடியாமல் விட்டுவிட்டார்.
“டெடிக்குட்டி !”உறங்கிக் கொண்டிருந்த மகளின் கன்னத்தில் இழைய, அவளோ சிணுங்கியபடி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் உறக்கத்திலேயே.
“முழிச்சுக்கோடா பட்டு “என்று கன்னத்தை நிமிண்ட மெல்ல விழி மலர்த்தினாள் அவள்.
“டாதி…!”என்று இன்னும் அவன் தோள்ப்பட்டையில் புதைந்து கொள்ள
“ப்ரெஷ் ஆகலாமா… ?வர்றிங்களா?” என்று தூக்கிக் கொண்டான்.
“ம்ம்ம் ம்ம்ம்” என்ற குழந்தை தந்தை சொல்லியது போலவே செய்தாள்.
முகம் கழுவி நீர்த்திவலை ஆங்காங்கே இருக்க, ஊட்டி ரோஜாவில் தண்ணீரைத் தெளித்தது போல இருந்தாள் அவனின் மகள்.
“க்யூட்டிஃபை… சரி சொல்லுங்க டெடிக்கு என்ன சாப்பிட வேணும்.?அதுக்கு முன்ன இந்த பால் குடிப்பீங்களாம்!” என்றதும் சமத்தாய் வாக்கிக் கொண்டாள் குழந்தை.
இருவரும் அமர்ந்திருக்க அவனின் அத்தை சுமதி வந்தார்.
“இட்லி செஞ்சிருக்கேன் இனியா. பாப்பாக்கு சாம்பார் மட்டும் குடு.”
“நோ பாத்தி, காத சட்னி” என்று சிணுங்கினாள் டெடி.
“அச்சோ காரச்சட்னி சாப்பிட்டு இங்க புண் வந்தது தானே அது வேணாம்டா டெடி. “என்று சுமதி சொல்ல
“டாதி. ப்பீஸ் டாதி” என்று அழகினியனிடம் செல்லம் கொஞ்ச
“அப்பா காரச்சட்னி தருவேன். அது சாப்பிட்டதும் இது கேட்க கூடாது” என்று சர்க்கரையை காட்ட, டெடி திருதிருவென்று விழித்தாள். சர்க்கரைக்காக தானே காரச்சட்னியே கேட்டது. அதுவே இல்லையென்றால்.
“ஸேடா இருக்கவங்களுக்கு நோ பார்க்” என்றதும் குழந்தைக்கு பல்ப் எரிந்து விட்டது முகத்தில்.
“பாரேன் அழகு. சட் சட்டுனு பாவனையை மாத்துறதை” என்று சிரித்த சுமதி மதியம் என்ன சமைக்கட்டும் என கேட்க
“அத்தை நான் பார்த்துக்கிறேன் நீங்க எவ்வளவு வேலை செய்வீங்க?” என்றான் கரிசனையாக.
“ஆமா ஆமா பெரிய வேலை. சமைச்சு தர்றது ஒரு வேலையா?” என்றவர் சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.
சுமதி தனஞ்செயனின் ஒன்று விட்ட அக்கா. பூப்படையாத காரணத்தினால் திருமணம் செய்து கொள்ளவில்லை. இத்தனை நாளும் கிராமத்தில் இருந்தவரை தனஞ்செயன் தான் தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
வேலையின் பொருட்டு தனஞ்செயன் தம்பதிக்கு மகன்களோடு இருக்க முடியாத நிலையில் சுமதி தான் அவினாஷ் அழகினியன் இருவரையும் கவனித்துக் கொண்டது. சிலிக்கான் வேலி கிளம்பியபோது அழகு தனியாக தான் இருந்தான். அதன் பிறகு அவினாஷிற்கு வேலை கிடைத்ததும் மீண்டும் சுமதிக்கு பெறாத மகன்களோடு தான் இருப்பிடம். மிகச் சரியாக அவினாஷ் சுமதி வரவும் தான் அழகினியன் ஒரு பெண் குழந்தையோடு இருக்கிறான் என்ற விபரமே பெற்றவர்களுக்கும் தம்பிக்கும் தெரிந்தது. அதுவரையிலுமே எதையும் கூறியிருக்கவில்லை அவன்.
தனஞ்செயன் கேட்டதற்கு,” என் குழந்தை, இவளுக்கு அம்மா இல்லை.” என்றான்.
வித்யா மனம் பதறி,” அம்மா இல்லைன்னா…நீ என்ன சொல்ல வர்ற? எங்களுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” என கேட்க
“கல்யாணம் ஆகலை. ஆனா இவ என் குழந்தை.” என்றான் திடமாக.
தனஞ்செயன் அவனை அடித்தே விட்டார். கல்போல நின்றிருந்தான். ஆனால் என்ன ஆனது எதுவும் சொல்லவில்லை கல்லூளிமங்கன் போல நிற்கும் மகனை வெறுத்து ஒதுக்கவும் முடியவில்லை. மேலும் பேசிடவும் முடியவில்லை.
வித்யா தான் கெஞ்சி மன்றாடி நொந்து போனார் அவனிடத்தில்.
“என் குழந்தை மா, நான் வளர்த்துப்பேன்.” என்று மூன்று மாத சிசுவை வருட அவினாஷ்,” அவனை எதுவும் கேட்காதீங்க” என்று கூறிவிட்டான்.
“நாளைய பின்ன சொந்தக்காரங்க கிட்ட எப்படி டா பேசுவோம்.? உங்கப்பாவுக்கு தலையிறக்கமா போயிரும்டா” என்று வித்யா அழ
“ஏன் தம்பி இப்படி பண்ற?” என்ற தனஞ்செயன்,” சரி உன் விருப்பம்.இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்லை. படிச்சவன் உனக்கே நல்லா இருந்தா சரி” என்று கூறி விட்டார்.
‘மகனுக்கு எப்படி எல்லாமோ திருமணம் நடத்த வேண்டும்’ என்று கனவுடன் இருந்தவரின் மனதை சல்லி சல்லியாக நொறுக்கியிருந்தான்.
வருடங்கள் கடக்க ,மெல்ல மெல்ல தங்களை சமாதானம் செய்து கொண்டனர் இருவரும். ஆனால் இதுவரை சொந்தங்களுக்கு அழகினியனுக்கு குழந்தை இருப்பதே தெரியாது. அவன் இங்கு வந்தால் தானே தெரியும். அப்படியே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வந்தாலும் தனியாகத் தான் வருவான். எப்போது திருமணம் என்று கேட்பவர்களிடம் பதிலே பேசமாட்டான். அவன் இயல்பிலேயே அமைதியாதலால் அவனிடத்தில் சொந்தங்களும் அவ்வளவாக நெருங்கிப் பழகமாட்டார்கள்.
வித்யாவிடம் யாராவது பெண் அங்கு இருக்கிறாள், இங்கிருக்கிறாள் மூத்தவனுக்கு பொருத்தமாக இருக்கும் என்று ஆரூடம் கூறினால் ஜாதகத்தில் இளையவனுக்கு முடித்து தான் மூத்தவனுக்கு முடியுமாம் அதனால் முதலில் அவினாஷிற்கு தான் என்று கூறி அவர்களை வாயடைக்கச் செய்திடுவார்.
இப்படியே நான்கு வருடங்கள் கடந்து விட்டது.
“என்னத்தை, பால் பொங்குறது கூட தெரியாமல் அவ்வளவு யோசனை?” என்றபடி அடுப்பை அணைத்தான்.
“ஒன்னுமில்லை தம்பி” என்று நகர
“அப்போ ஏதோ இருக்கு?” என்று சொல்லியவனை ஆழ்ந்து பார்த்தவர்,” ஏன் சாமி அத்தை ஒன்னு சொல்லுவேன் கேட்பியா?” என்று பீடிகை போட
“நீங்க சொல்லி கேட்காமலா சொல்லுங்க” என்றான் சிரிப்புடன்.
“சின்னவனுக்கே கல்யாணம் பண்ணி வைக்கிற வயசு வந்திடுச்சு” என்றவர்,” நீயும் ஒரு கல்யாணம் பண்ணிக்க சாமி” என்றார் அவனது கன்னம் வருடி.
மஞ்சளில் தோய்த்தெடுத்தாற் போல அழகுமுகம் அவருக்கு. காதோரத்தில் இப்போது தான் நரைதட்ட ஆரம்பித்திருந்தது. அதிலும் மஞ்சள் நிறமே ஒட்டியிருக்க மதுரை மீனாட்சி போல இருந்தார் சுமதி.
“டெடியை என்ன செய்ய? வர்றவங்க வளர்ப்பாங்களா இல்ல யாரோ பெத்த குழந்தைக்கு ஆயாவேலை பார்ப்பாங்களா?” என்றான் சிரிப்பு மாறாமலேயே.
“நா.. நான் உசுரோட இருக்க வரைக்கும் நா வளர்த்திடுறேன் சாமி, நீ மட்டும் ம்ம்ம் னு சொல்லு பெரியக்கா மக உனக்கு தோதா இருப்பா” என்று படபடக்க
“அத்தை!” என்று சிரித்தவன்,” என் சுமையை என்னைப் பெத்தவங்க கிட்ட கூட தரக் கூடாதுன்னு தான் நானே டெடியை பார்த்துக்கிறேன். சுமைனு கூட சொல்ல முடியாது அவளை. என் சொத்து அவ அவளை விட்டுத்தர மாட்டேன் அத்தை “என்றவன்
“எனக்கு கல்யாண யோகமெல்லாம் கிடையாது. அப்பா ஆகற யோகம் மட்டும் தான்.” என்றவன் போய்விட்டான்.
நாலுவார்த்தை சேர்த்தாற்போல பேசாதவன் இவ்வளவு நீளமாக பேசியதே அதிசயம்.