சுந்தரேசன் தன் சொந்தங்களுடன் வந்திறங்கியபோது வரவேற்கும் விதமாக வந்ததென்னவோ அழகினியன் தான். கையில் காஃபி கப்புடன் இலகுவான டீசர்ட் ட்ராக் ஃபேண்ட் சகிதம் வெளியே வந்து நின்றிருந்தான்.
இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை சுந்தரேசன்.
‘எப்படியும் வந்த அன்றே கிளம்பி இருப்பார்கள் மறுநாள் போய் சொந்தங்களுடன் நின்றால் யாரால் என்ன செய்ய முடியும் ?’என்ற இறுமாப்புடன் தான் தன் படைகளை திரட்டிக் கொண்டு வந்திருந்தார். ஆனால் இப்போது மனம் திடுக்கிடத் தான் அவனைப் பார்த்தார்.
‘இவனென்ன கல்யாணம் ஆன புதுமாப்பிள்ளையாட்டம் வெளியே வர்றான். இவனுக ஊருக்கு போகலையா.?’என்று முனக
அழகினியனோ “வளவன் யாரோ வந்திருக்காங்க” என குரல் கொடுக்க சுந்தரேசனுக்கு அதிர்ச்சி தான்.
‘நேற்று அத்தனை பேசினான் இன்று யாரோ என்கிறானே… ஒரு வேளை மறந்து விட்டானோ?’ என்றெண்ணியபடி,” தம்பி நான்… !”எனும் போதே வளவன் வெளியே வந்து விட்டான்.
“யார் இவங்க, உங்க ரிலேஷனா…?ஓஓஓ பங்ஷனுக்கு வந்திருக்காங்களா?” என்று கேட்டபடி அங்கிருந்த நெகிழி நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான் அழகு.
காஃபியை மிடறு மிடறாக ரசித்து உறிய, உள்ளிருந்த வித்யாவோ,” ஏன் அவி நேத்து அந்த மனுஷன் கிட்ட அந்த பேச்சு பேசினான், இப்ப யார்னேத் தெரியாத மாதிரி பேசுறான் நிஜமாவே மறந்துட்டானோ?” என்று அவினாஷிடம் சந்தேகமாய் கேட்க
“ம்மா அவன் இப்பவும் அவரை கலாய்ச்சுட்டு இருக்கான். சிரிக்காம பேசுறான் பாருங்க” என்ற அவினாஷ் தயாராக சென்று விட்டான்.
பக்கத்து வீட்டு பெருமாள் தான் தங்களோடு தனஞ்செயன் குடும்பத்தை தங்க வைத்திருந்தார்.
“இங்கன இருந்தே எல்லாம் பண்ணிக்கலாம் தம்பி, ஏன் அலையிறீங்க “என்று சொல்ல,’ இப்படி ஒரு மனுஷனா!?’ என வியந்து தான் போயினர் தனஞ்செயன் குடும்பத்தினர்.
அதன்பின் அழகினியன் சளைக்கவே இல்லை அடுத்தடுத்த காரியங்களில் இறங்கி விட்டிருந்தான்.
“இங்க என்ன நடக்குது, சம்பந்தக்காரங்க வீட்டுல முன்னபின்ன தெரியாத ஆளுகளை தங்க வைப்பீங்களா?” என சுந்தரேசன் குதிக்க
வளவனின் மனைவி ஷன்மதி தான் பதிலளித்தாள்.
“முன்ன பின்ன தெரியாத ஆளுங்க இல்லையே…! நம்ம சித்ராவுக்கு மாமியார் வீடு இன்னைக்கு பூ வச்சு பேசி முடிக்க வந்திருக்காங்க” என்றாள் இலகுவாக.
“என்ன பேசி முடிக்கவா…?”என்றவர் ,” வெளையாடுறீங்களா நான் நேத்து சொல்லிட்டுத் தானே போனேன். எந்தம்பிக்கு நிச்சயம் பண்ணிக்கலாம்னு “என்று காந்தவள்ளியிடம் குதிக்க
“நாங்களும் நேத்து சொன்னோமே, அந்த நிச்சயத்தில் விருப்பம் இல்லைனு “என்றாள் ஷன்மதி.
“இந்தாம்மா, நீ சின்னப்புள்ள ஒனக்கு ஒன்னும் தெரியாது.” என்று அவளை அதட்ட
“ஆஹான்!, சின்னப் பிள்ளையா இருந்தாலும் இந்த வீட்டு மருமகள் இப்போ நான் தானே இங்கே பேசியாகணும் என்னத்தை?” என கூறி,” நிச்சயத்தன்னைக்கு கூப்பிடலாம்னு இருந்தோம் இன்றைக்கு நீங்களே வந்ததால நிச்சயத்தையும் சேர்த்தே பண்ணிடலாம். கல்யாணத்துக்கு விரிவா சொல்லிக்கலாம். என்னங்க சரி தானே?!” என்று கணவனிடம் கேட்க
“நீ சொன்னா சரியா தான் இருக்கும்”என்றான் வளவனும் .
“என்ன எங்களை அவமானப்படுத்துறீங்களா?, உங்க மக…” எனும் போதே வளவன் இடைபுகுந்தான்.
“மலரு இப்பவும் எங்க வீட்டுல தானே இருக்கா, பெருசா என்ன வாழ்ந்துட்டா?” என்று கேட்க
“அதனால எங்க வீட்டு மருமகள் இல்லைனு ஆகிடுமா…? எம்மவன் இப்ப இங்க இல்லை தான். ஆனா என்னைக்கிருந்தாலும் எங்க வீட்டுல தானே வாழ்ந்தாகணும்” என சுந்தரேசன் மனைவி கேட்க
“நாங்க இல்லைன்னு சொல்லவே இல்லையே. மலர் உங்க மருமகள் தான், அதை நீங்க ஒத்துக்கிட்டதுக்கும் நன்றி. அதுக்காக உங்க இஷ்டத்திற்கு நாங்க ஆடணும்னு இல்லையே” என்றவன்,” சம்பந்தக்காரங்களா நின்னு இந்த நிச்சயத்தை நடத்தினாலும் சரி. இல்ல முடியாதுன்னு கிளம்பினாலும் சரி” எனக் கூறிவிட்டான்.
அதற்குள் ஊர்ப் பெரியவர்கள் வந்துவிட்டனர்.
“நீங்களே நியாயத்தை கேளுங்க!” சுந்தரேசன் வந்தவர்கள் பக்கம் திரும்பிட
“இந்தாருங்க.. இந்த தம்பி நேத்தே வந்து நம்ம சித்ராவை அவர் தம்பிக்கு கட்டி வைக்க பிரியப்படுறதா சொல்லி நிச்சயத்துக்கு அழைப்பும் விட்டுச்சு. வளவனும் எங்களுக்கு இந்த சம்பந்தம் புடிச்சி இருக்கு மாமா, நீங்க தான் முன்ன நின்னு நடத்தணும்னு சொன்னாப்டி. மணியரசு இங்க மதிப்பான மனுஷன். சரிப்பான்னு நாங்களும் ஒத்துக்கிட்டோம். நீங்க முன்னாடி வந்து பொண்ணு கேட்டது எல்லாம் வாஸ்தவம் தான், சொந்தக்காரங்களும் வேற, ஆனா ஒரு விஷயத்தை நீங்களும் யோசிக்கணும். பொண்ணு கேட்கிறது மலர் புருஷனோட அண்ணனுக்கோ, தம்பிக்கோ கேட்டா பரவாயில்லை. நீங்க சித்தப்பனுக்குல்ல கேட்குறீங்க.” என்றவர்
“மலருக்கு அவர் சின்ன மாமனார்னா சித்ராவுக்கும் அதானே மொறை, மாத்தி வராதே…!?அப்படி இருக்கும் போது இருவது வருஷ வித்தியாசத்துல புள்ளையை கட்டிக்க கேட்கிறது உங்களுக்கு அநியாயமா படலையா?” என்றார் பெரியவர் ஒருவர் .
சுந்தரேசனோ,” இது எங்க வீட்டு வெவகாரம் வெளியாளுக தலையிட வேண்டிய அவசியம் இல்லை” என்றார் மிதப்பாக.
“ஓ வீட்டு வெவகாரமா…? பின்ன என்னத்துக்கு வந்ததும் நியாயத்தை நீங்களே கேளுங்கனு சொன்னீங்களாம், இதோப்பாருங்க இங்கன மணியரசுக்கு நாங்க எல்லாம் சொந்தக்காரங்க தான் ,எனக்கு அவர் பங்காளி மொறையாவுது. புள்ளைகளுக்கு நான் சித்தப்பன் மொறை, அப்பறம் நான் கேட்காம வேற யாரு கேட்பா?, எங்க ஊட்டுப் புள்ளையை இப்படி வயசான கெழடுகட்டைக்கு கட்டிக் குடுக்க விருப்பம் இல்லை, வேற ஏதாச்சும் பேசணுமா?” என மற்றொருவர் கேட்க
சுந்தரேசன் அடுத்து பேசத் தெரியாமல் நின்றிருக்க
சுந்தரேசன் மனைவியோ ,” இந்தாபாருங்கப்பு மூத்தவ ஏ வீட்டு மருமவ, அவ வாழணும்னு நெனைக்கிறிகளா என்ன?,சித்ராவை என் கொழுந்தனுக்கு கட்டி வச்சா மூத்தவளும் வந்து செலாத்தலா வாழலாம் இல்லையா வாழாவெட்டியா இங்கினயே குப்பைக் கொட்ட வேண்டியது தான்.” என்று கூறவுமே அத்தனை சலசலப்பு கூட்டத்தில்.
“என் நாத்தனா இப்ப மட்டும் உங்க வீட்டுலயா வாழுறா…?என்னத்த சொன்னீங்களோ கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் அங்க இருந்தா. இப்ப வரைக்கும் இங்க தானே இருக்கா இதுல என்னத்த பெருசா வாழ்ந்துட்டா?” என்று ஷன்மதி கேட்க
“அதுக்குத்தான் சொல்றேன். எம்மவன் தன் சித்தப்பன் கல்யாணம் ஆகாம இருக்கிறதால தான் பொண்டாட்டி கூட ஒண்ணுமண்ணா இருக்க முடியாம வெளியூர் போயிட்டியான்.” என்றவர்
“அதுக்கு?” என்று வேகமாய் வந்த அவினாஷை பிடித்து நிறுத்தினான் அழகன்.
“உள்ளே போய் மாப்ளையா லட்சணமா உட்காருடா” என்று உள்ளே அனுப்பியவன்,” முகூர்த்த நேரம் வந்திடும் நீங்க பேசி முடிச்சா நாங்க அடுத்த வேலையை பார்ப்போம்” என்றான்.
“அதானே, எங்கண்ணன் அசருவான்” என முனகியபடி அவினாஷ் உள்ளே செல்ல மீண்டும் சலசலப்பு.
இறுதியாய்,” அவ்வளவு தானே பொண்ணு எங்களுக்கு இல்லைனு சொல்லிட்டீங்கள்ள, செரி விடுங்க. இனிமே இந்த வூட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மலரு கெளம்பு போவலாம், இனி ஒனக்கு ஆத்தா அப்பன் வீடெல்லாம் கிடையாது.”என சுந்தரேசன் மனைவி சிவகாமி ஓவியாவை தன் பக்கம் இழுக்க முயல
அவளோ திடமாக நின்றவள்,” உங்க பையனை வந்து கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க “என்றாள்.
“எது எம்மவன் வரணுமா?” என துள்ள
“ஆமாம். அவர் வந்தா நான் வர்றேன் இல்லையா எவ்வளவு வருஷம் ஆனாலும் இங்க தான் இருப்பேன்.”என்றாள் அழுத்தமாக.
“நீ வாழாவெட்டியா இங்கினயே…” எனும் போதே “இருந்துட்டு போறேன்” என்றாள்.
“இவ்வளவு தெகிரியம் ஒனக்கு எங்கருந்து வந்துச்சு?, புது சொந்தம் வந்த பவுசோ?” என்று கத்தியவர்கள் ஆத்திரமாய் கிளம்பி சென்றனர்.
ஓவியாவோ அமைதியாய்,” நீங்க போய் விசேஷம் நடக்க ஏற்பாடு செய்ங்க” என்று தன்னறை போய்விட்டாள்.
அத்தனை சலசலப்பும் அடங்கிய பின் அவினாஷ் சித்ரபாலா நிச்சயதார்த்த விழா முந்தைய சலசலப்பின் சுவடின்றி நடந்தேறியது.