இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் அதனால் சென்னை கிளம்பவேண்டும். அழகினியன் பரபரப்பாய் கிளம்பிக் கொண்டிருந்தான். டெடி பார்பி பொம்மையை வார்த்தெடுத்தது போல தயாராகி உறங்கிக் கொண்டிருந்தாள்.
“எல்லாம் எடுத்து வச்சுட்டியாப்பா…?” என்று வந்த சுமதி பால் டம்ளரை நீட்ட, வாங்கிக் கொண்டான்.
“அல்மோஸ்ட் முடிஞ்சது கார் வந்ததும் கிளம்பலாம்.” என்றதும் சுமதி தயங்கியபடி,” பாப்பாவை பத்தி யாரும் கேட்டா?” என்றார்.
வாய் ஓரத்தில் உதிரியாய் பிஸ்கெட் ஒட்டியிருக்க, ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்தபடி மற்றொரு கையில் அதை துடைத்து விட்டு தண்ணீரைக் கொடுத்தான்.
“பட்டுமா தூங்குறியாடா?” என்று கேட்க,” வேணா டாதி!”என பொம்மையோடு விளையாடத் துவங்கி விட்டாள்.
“அத்தை நீங்க படுத்துக்கங்க. சாப்பிட எழுப்புறேன்” என்றவன் பாதையில் கவனம் வைத்தான். மாருதி ஸ்விப்ட் பெங்களூரு டூ சென்னை சாலையில் வழுக்கிக் கொண்டு போனது. நண்பனிடம் தந்திருந்த கார் நேற்று தான் அவன் கைக்கு வந்தது. மகளை அவசரத்திற்காக வெளியே அழைத்துச் செல்ல தொலைதூர பயணம் இதெற்கெல்லாம் தேவைப்படும் என்றே சேமிப்பை கரைத்து வாங்கியிருந்தான்.
‘சுமதி அத்தையும் இல்லாவிட்டால் குழந்தையை எப்படி வளர்த்திருப்போம்? ‘என்ற எண்ணம் பெருமூச்சாய் வெளியே வந்தது அவனுக்கு.
டெடியை பார்த்தவனுக்கு அவளின் அம்மாவின் நினைவு வந்தது.
‘பாப்பா உன்னை மாதிரியே. என்ன தான் நான் வளர்த்தாலும் உன் மேனரிசம் தெரியுது அவ கிட்ட’ என்று சிரித்துக் கொண்டான். மறுநொடியே அது மறைந்தும் போனது.
“சாரிம்மா!” என முணுமுணுத்துக் கொண்டே வண்டியை ஓட்டினான்.
பயணம் தொடர்ந்தது. இடையில் நிறுத்தி சுமதிக்கும் தனக்கும் சாப்பிட வாங்கினான். மகளுக்கு தானே ஊட்டி விட்டு சுத்தம் செய்தான்.
“அத்த, இதுக்கு மேல டெடி தூங்கிடுவா பின்னால வச்சுக்கங்க.” என்றவன் மகளுக்காக மெத்தை பொம்மை ,விரிப்பு என எல்லாம் தயார் செய்தான்.
“டெடி டெடினு சொல்லி பாப்பா ஒரிஜினல் பேரே மறந்து போயிடுச்சு” என்ற சுமதியிடம்,” தியா… ஆத்யா!” என்றான் புன்னகையாக.
வித்யா வாசலிலேயே நடந்து கொண்டிருக்க கார் வந்து நின்ற சத்தத்தில் அத்தனை மகிழ்ச்சியோடு ஓடினார்.
அழகினியன் வண்டியை உள்ளே திருப்பி நிறுத்தி விட்டு சுமதியை எழுப்பினான்.
“வாங்கண்ணி !உள்ளே போங்க. பாப்பாவை தூக்கிட்டு வர்றேன்” என்று சுமதியை உள்ளே அனுப்பி விட்டு பேத்தியை தேடினார்.
“டெடி… எங்க தம்பி, பாப்பா?” வித்யாவின் பார்வை அலைமோதியது பேத்தியைக் காண
“பின்னால தூங்குறாம்மா.” என்றவன் கதவைத் திறந்து உறங்கும் மகளை பூப்போல கவனமாய் தூக்கினான்.
“அப்பா எங்கம்மா…?”என்று கேட்டபடி முன்னே நடக்க
“அவர் கடைக்குப் போயிருக்கார். கல்யாண மளிகை சாமான் எல்லாம் மண்டபத்துக்கு கொண்டு போகணுமில்ல, அதான் அட்ரஸ் எல்லாம் சொல்லிட்டு இங்க வர்றவங்களுக்கு சமைக்க சாமான் எல்லாம் வாங்க போயிருக்கார். “
“ஏன் அவி என்ன செய்றான்?” என்றதும்
“அவனுக்கு லீவ் அதிகம் இல்லைல்லப்பா, அதான் வேலை பார்த்துட்டு இருக்கான். “என்றபடி குழந்தையை வாங்கிக் கொண்டார்.
“இளைச்சா மாதிரி இருக்காளே!?” என்றதும்,” வளர்றாம்மா அதான் அப்படி தெரியுது உங்களுக்கு” என லக்கேஜை தூக்கிக் கொண்டு நடந்தான்.
வந்தவன் குழந்தையை தனது அறைக்குள் படுக்கவைத்து விட்டு தந்தைக்கு உதவியாக கிளம்பிவிட சுமதியோடு பேச ஆரம்பித்து விட்டார் வித்யா.
*******
ஓவியமலர் தனியாய் அமர்ந்திருக்க, சித்ரா உள்ளே இருந்தாள்.
“ஏன்டி தனியா உட்கார்ந்து இருக்கவ… போய் படுக்க வேண்டியது தானே?” என்று பக்கத்து வீட்டு பெண் கேட்க
“இல்ல சும்மா தான்கா !”என்றவள் வேறெதுவும் பேசிடவில்லை. அந்த சும்மாவில் ஆயிரம் வருத்தமிருந்தது.
“உன் புருஷன் ஃபோனுகினு போட்டாரா மலரு…?” வந்த வேலையை உடனே துவங்கிவிட்டார் அவர்.
“ம்ம்ம் கா!” என்றவள் ,”அசதியாக இருக்கு உள்ளே போறேன்” என்று எழுந்து செல்ல
அவரோ ,”இப்ப என்னடி கேட்டுட்டேன் வெடுக்குனு போற” என்றதும்,” அப்படி எல்லாம் இல்லைக்கா. அம்மா சமைக்க சொல்லுச்சு, இப்ப தான் நினைப்பு வந்தது அதான் போறேன்” என்று விறுவிறுவென்று உள்ளே சென்று விட்டாள். நின்று மேலும் பதில் அளித்தால் இன்னும் வாயைக் கிளறுவார்கள் என அமைதியாய் போய்விட்டாள்.
எப்படி எல்லாம் நடந்த திருமணம் எத்தனை கனவு எத்தனை ஆசைகள் அத்தனையும் ஒரு சேர மண்ணில் புதைத்துவிட்டானே என்று நொந்து போனாள்.
பெற்றவர்கள் பார்த்து வைத்த திருமணம் என்று எத்தனை அமைதியாய் எது நடந்தாலும் சகித்துக் கொண்டு இருந்தோம் என தன்னையே நிந்தித்துக் கொண்டாள்.
சில மணி நேரம் கழித்து “சித்ரா தண்ணி கொண்டாம்மா!” என்றபடி உள்ளே வந்தார் காந்தவள்ளி.
மணியரசுவிற்கு இன்னும் உடல் நிலை சரியாகததால் பெருமாளையும், அவரது மனைவியையும் அழைத்துக் கொண்டு தூரத்து உறவினர்களுக்கு பத்திரிக்கை வைக்க கிளம்பியிருந்தார்.
காலையிலேயே சென்றிருந்தவர் உள்ளே வரவும், ஓவியா தான் தண்ணீரை நீட்டினாள்.
“அவ எங்கம்மா நீ ஏன் அடுப்படியில நிக்கிற…?”என்று கேட்டபடி தண்ணீரை குடிக்க
“இல்லம்மா… சமைக்கலாம்னு போனேன்.” என்றாள்.
“ஏன் அவ என்ன செய்றா…? போனும் கையுமா இருக்காளா…? எப்ப பாத்தாலும் இதே வேலை தான் ,ஏ சித்ரா!” என ஓங்கி குரல் கொடுத்ததும் தான் ஓடி வந்தாள் பாலா.
“எதுக்குமா கத்துற…?”என முறைக்க
“ஏன்டி புள்ளத்தாச்சியை அடுப்படியில விட்டுட்டு நீ என்ன செய்ற…? சோறு கீறு ஆக்கினியா இல்லையா?” என்றதும் அப்போது தான் அவளுக்கு சமைக்க சொன்னார்களே என்ற நினைவே வந்தது.
“என்னைய கூப்பிட வேண்டியது தானே? நீயே எதுக்கு உள்ள போன… ?உன்னால எனக்கு எப்போ பாரு இம்சை தான்” என்று ஓவியாவை திட்டிவிட்டு அறைக்குள் தான் சென்றாள். அப்போதும் சமைக்கச் செல்லவில்லை அவள்.
மணியரசு கட்டிலில் படுத்து இருந்தவர்,” எம்மா மலரு இங்க வா!” என்று அழைக்க அங்கே சென்று விட்டாள் மலர்.
“சொல்லுங்கப்பா தண்ணி எதுவும் வேணுமா?” என்று கேட்க
“அதெல்லாம் இல்ல நீ இங்க உட்காரும்மா என தனதருகில் இடம் காட்ட ,மலர் அமைதியாக அமர்ந்து கொள்ள
“அப்பா மறுபடி மறுபடி கேட்கிறேன்னு நினைக்காத. அங்க என்ன பிரச்சினைனு சொல்லும்மா. உன் புருஷன் எங்க தான் இருக்காரு அதையாச்சும் சொல்லும்மா இல்ல போலீஸ் புகார் தரலாமா…? இப்படி வயித்துல புள்ளையோட தனியா நிக்குறியே ?”என்று விசும்ப மலருக்கும் கண்கள் கலங்கிவிட்டது
சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டவள்,” அப்பா சித்ரா கல்யாணம் முடியட்டும் எல்லாம் சொல்றேன். நான் சரியாகிடுவேன்ப்பா நீங்க வருத்தப்பட்டுக்காதீங்க” என்றவள் வெளியே போக
காந்தவள்ளி உணவுடன் வந்தார்.
“அம்மாடி இதை இப்ப சாப்பிடு அம்மா சீக்கிரம் சமைச்சிடுறேன் என்ன?” என்று உணவுப் பொட்டலத்தை கொடுக்க
“அப்பாவுக்கும்மா அவங்க பசியோட இருப்பாங்க”
“அவருக்கு கஞ்சி காச்சிடுவேன்டி ,நீ சாப்பிடு. நான் வரையில் சாப்பிட்டு தான் வந்தேன்.” என சமையலறைக்கு ஓடினார்.
‘எத்தனை சிரமம் அவருக்கு ‘என்று எண்ணியபடி உணவைப் பிரித்தவள் சித்ராவுக்கு தனியே எடுத்து வைத்துவிட்டு தான் உண்டாள்.
“ஏன்மா, வாங்கினது தான் வாங்கின ரெண்டா வாங்கக் கூடாது. நான்னா உனக்கு எப்பவுமே எளப்பம்தான்” என திட்டியபடி சித்ரா வர
“வந்தேன் வெளக்கமாறு பிஞ்சுபோவும். புள்ளத்தாச்சியை பட்டினி போட்டுட்டு பேசுறா பேச்சு” என உள்ளிருந்தை அவர் அதட்ட
“அவளுக்கு மட்டும் தான் வயிறா, எனக்கெல்லாம் சாக்குக் கோணியா?” என்று முனகியபடி செல்ல முற்பட
“சித்து உனக்கு எடுத்து வச்சிருக்கேன் வா” என்று மலர் அழைத்ததும் முகம் மலர சென்றாள் சித்ரா.
காந்தவள்ளி பார்த்துவிட்டு தலையிலடித்துக் கொண்டவர்,” இதைக் கட்டிட்டு போறவரு என்ன பாடுபட போறாரோ தெரியல “என்று திட்டிக் கொண்டே கணவனுக்கு கஞ்சியை எடுத்துக் கொண்டு சென்றார்.
காலையில் வைத்த கஞ்சியில் பாதி இருக்கவும் சூடு செய்து எடுத்துச் சென்று விட்டார்.
“அக்கா… சாரி நெசமா வேணும்னு சமைக்காம இல்ல, அவர் கிட்ட பேசிக்கிட்டே இருந்தேனா மறந்துட்டேன். அம்மா வந்ததுமே திட்டவும் உன் மேல அதைக் காட்டிட்டேன்” என்றாள் சித்ரா பாவமாக.
“உனக்கு பசிச்சா கோவம் வரும்னு எனக்குத் தெரியும் தானே. பரவாயில்லை விடு.” என்று சமாதானம் செய்ய,” நீயும் சாப்பிடுக்கா” என்றாள் வேகமாக.
“இந்தா அவ்வளவு தான்!” என்று தக்காளி சாதத்தை உண்ண, காந்தவள்ளி வடகத்தை வறுத்துக் கொண்டு வந்து வைத்தார்.
மகளின் அருகில் அமர்ந்தவர்,” இப்படி எனக்கென்னன்னு இருக்காதடி. புருஷன் வீட்டுக்குப் போனாலும் அதே பழக்கம் வந்திடும். அவங்க எவ்வளவு தன்மையா, வெகுளியா இருக்காங்க அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க. “என்று சின்ன மகளிடம் அறிவுரை கூற
“சரி சரி விடும்மா எல்லாஞ்சரியாப் போகும் .எனச் சொல்லியவள்
“ஏன் மா இந்த சம்மந்தம் முன்னாடியே வந்திருந்தா… மலரக்காவை பெரியவருக்கும், என்னை சின்னவருக்கும் கட்டிக் குடுத்திருப்பீல்ல… ரெண்டு பேரும் ஒரே வீட்டுல வாழப் போயிருப்போம்.”என்றதும் காந்தவள்ளி நெஞ்சில் கைவைத்தபடி பதறினார்.
“அடியேய் !எதையாச்சும் உளறாத. யார் காதுலயாவது விழுந்திடப் போகுது?” என்று சொல்ல
“அடப் போம்மா சும்மா சொன்னேன், அதுக்கே பதறுவ. ஒரு வேளை அக்காவை அப்படி கட்டிக் குடுத்திருந்தா இப்படி வந்து பரிதாபமா உட்கார்ந்து இருக்க மாட்டான்னு நினைச்சு சொன்னேன். என்னையும் அந்த ரௌடி கும்பல் கெழவனுக்கு பொண்ணு கேட்டு வந்திருக்காதுல்ல “என்று கூறியபடி எழுந்து செல்ல, ஓவியமலர் மனதில் அழகினியன் வந்து சென்றான்.