சித்ரபாலா அவினாஷ் திருமணம் இனிதே நடந்தேறியது. பலரின் வாழ்த்துகளோடும் சிலரின் வயிற்றெரிச்சலோடும் .
“கங்கிராட்ஸ் மிசர்ஸ் அவினாஷ் !”என்று மெல்லிய குரலில் வாழ்த்து தெரிவித்தவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நாணத்தில் தலைகுனிந்திருந்தாள் சித்ரபாலா. பெயரில் மட்டும் சித்திரமில்லை உருவத்திலும் அப்படித்தான் அமர்ந்திருந்தாள் பாலா.
அழகினியன் தம்பியைக் கண்டு மனம் குளிர்ந்து போனான். தன் பெற்றவர்களைக் கண்டும் தான் அவனது மகிழ்ச்சி முகத்தில் நிறைந்திருந்தது. தான் நிறைவேற்றாததை தம்பி செய்ததில் அத்தனை மகிழ்ச்சி அவனுக்கு.
‘பிரம்மாண்டமா மேடை போட்டு ரெண்டு குடும்பமும் பக்கம் பக்கம் நிக்க ஊரே அட்சதை தூவி கல்யாணம் பண்ணிக்கணும் ப்யூட்டி. உன்னை வெள்ளை வேஷ்டி பட்டுச் சட்டையில் நெத்தியில சந்தன குங்குமம் சகிதம் மாலையோட பார்க்கணும் எனக்கு. உன்னைப் பார்க்க பார்க்க எனக்கு வெட்கமா வரணும், அவ்வளவு அழகா என் அழகு இருக்கணும்’ என்று தன் கல்யாணக் கனவை விவரித்துக் கொண்டிருந்தாள் ஆத்யாவின் அம்மா.
“ஸ்யூர் ஸ்யூர்… ஏன் இல்லாம அதெல்லாம் சூப்பரா பண்ணுவோம். எப்போதும் எல்லாரும் செலக்ட் பண்ற மாதிரி பட்டு சாரி உனக்கு கிடையாது. இந்த மல்லிகை பூ வொய்ட் கலர்ல பிங்க் பார்டர் வச்ச டிசைனர் பட்டுப்புடவை தான் எடுக்கணும். ஜிவெல்ஸ் கூட முத்து தான் எல்லாமே அப்படி இருக்கணும் நீ’தன் ஆசையை வெளிக்காட்டினான் அழகு.
இது எதுவுமே நிறைவேறாமல் நிற்கதியாக தான் நின்றிருக்க, கையிலிருந்த குழந்தை கவிதையாய் சிரித்தாள் உறக்கத்தில்.
அலையாய் அடித்த மனதைக் கட்டுப்படுத்தி மண்டபத்தின் வாயிலுக்கு வந்தான்.
ஓவியா தனியே அமர்ந்திருந்தாள். கையில் டம்ளர் வைத்திருந்தபடி மணமேடையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
என்ன நினைத்தானோ சுமதியிடம் மகளை கொடுத்து விட்டு,மீண்டும் நாற்காலியில் அமர்ந்து கொண்டான். இன்னும் உறவினர்களிடத்தில் அவனது வாழ்வு அலசி ஆராயப்பட்டுத்தான் கொண்டிருந்தது.
‘குழந்தையின் அம்மா ஓடிவிட்டாள் போல, இல்லை பிரசவத்தில் இறந்து விட்டதாக என என்னென்னவோ வதந்தி வலம் வந்த வண்ணம் தானிருந்தது.
ஒரு சிலர் அறிவுரை என்ற பெயரில் அவன் காதை ஓட்டை போட்டுக் கொண்டிருக்க எதற்கும் பதில் இல்லை அவனிடத்தில். எல்லாவற்றுக்கும் ஒரு அழுத்தமான பார்வை அவ்வளவு தான் பேச வந்தவர் சத்தமின்றி நகர்ந்திடுவார்.
‘ஆனாலும் வித்யா மவனுக்கு தெகிரியம் சாஸ்தி தான்!’ என்று அங்கலாய்த்தபடி தான் நகர்ந்தனர்.
*******
“என்ன மலரு தனியா ஒக்காந்துட்டவ?” என்றபடி ஒரு பெண்மணி ஓவியாவின் அருகில் வந்து அமர்ந்தார்.
“சும்மாதான் த்தை!” என்றவள் பார்வையை அலைய விட
“ஆமா விருந்து முடிஞ்சு ஒம்மாமியா வீட்டுக்கு போறதான ?”என்று நேரிடையாக கேட்டு விட,
ஓவியாவின் முகம் ,உடல் இறுகியது.
“ஏன் சொல்றேன்னா சித்ராவும் புருஷன் வீட்டுக்குப் போயிருவா. நீ மட்டுந்தான் இருப்ப, நீ உன் புருஷன் வீட்டோட போயிட்டா அப்பறம் வள்ளியும், அண்ணனும் திருச்சிக்கு போவாங்க” என இழுக்க
“போயிருவேன்த்த நீங்க ஏன் இவ்வளவு வருத்தப்படுறீங்க?”.
“நான் என்னத்துக்கு வருத்தப்படுறேன். எல்லாம் எம்மவ கவலை தான். வெளிய காட்டிக்கலைன்னாலும் அவளுக்கும் உள்ளார இருக்கும்ல “என்றவர் லேசாக விசும்பினார்.
மீண்டும் அவரேத் தொடர்ந்து,” அதான் அவ திருச்சியை விட்டு வாரதே இல்ல. பெத்தவ என்னைப் பாக்கவும் வாரதில்லை” என்றார்.
“இனிமே வருவாங்கத்த.”என ஓவியா கூற
“நா ஒன்னைய வெரட்டுறதா நெனைக்காத மலரு. ஏதோ எனக்கு ஒரு ஆதங்கம். நீயும் புருஷனோட சந்தோஷமா இருக்கணும்ங்கிறது தான் என் எண்ணமும். வாழப்போன புள்ள நீ சொகமா இருந்தா தானே வாழவந்த என் மக சந்தோஷமா இருப்பா….” என்றவர் ,”ஆமா உன் புருஷன் வீட்டுல இருந்து ஒருத்தரையும் காணல. வருவாங்க தான.?” என்று சந்தேகமாய் கேட்க
“வருவாங்க!”என்றவள் எழப் போக, அவளைத் தடுத்து
“இதை எல்லாம் என் மக கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காத ஏதோ நானே உன்னை விரட்டினதா சண்டைக்கு நிப்பா” என்றார் படபடப்பாக.
“அதெல்லாம் சொல்ல மாட்டேன்த்தை” என்று எழுந்து செல்ல அவரும் ஆசுவாசமாய் அமர்ந்தார்.
“ஏக்கா எதுக்கு அந்த புள்ளைய புருஷன் வீட்டுக்குப் போவ சொல்றதிலேயே குறியா இருக்க. ஏன் உன் மகளை வேலை வாங்குறாளா என்ன ?”என்று கேட்க
“
ப்ப்ச் எல்லாம் நேரக் கெரகம் வேற என்னத்த சொல்ல நானு. “என்று அலுத்துக் கொள்ள ஷன்மதி வந்துவிட்டாள்.
“
ம்மா ,வா சாப்பிட போவோம் சித்தி நீங்களும் வாங்க “என்று அழைக்க
“
மத்தவங்களை கவனிடி என்னையே கவனிச்சா ஆச்சா ?”என ஷன்மதியின் தாய் சொல்ல
“
அதெல்லாம் கவனிக்கிற நேரத்தில் பாரபட்சம் இல்லாமல் கவனிச்சிடனும், என்ன சித்தி “என்றபடி தாயை முறைத்தவள் வலுக் கட்டாயமாக இழுத்துச் சென்றாள்.
“
எதுக்குடி இப்புடி இழுக்குற?” என அவர் அலுத்தபடி கையை விலக்க
“
உன்னை என்ன சொல்லி இருக்கேன் நான். மலர் கிட்ட அப்படி பேசாதன்னு சொல்லிருக்கேனா இல்லையா?” என்று அதட்ட
“
ம்ம்க்கும், எனக்கென்ன வேண்டுதலா அவ கிட்ட அப்படி பேச… அவளைப் பார்த்துட்டு தான் உன் மாமனார் மாமியார் உன் கூட இருக்க மாட்டேங்கிறாங்க, நீ எவ்வளவு கஷ்டப்படுற…?”என்று கேட்க
“
நான் சொன்னேனா கஷ்டப்படுறேன்னு. அவ்வளவு அக்கறை இருந்தால் கூட வந்து இருக்க வேண்டிய தானே?” என்று நக்கலாய் கேட்டாலும் ஷன்மதிக்கு அத்தனை ஆற்றாமை.
“
என்னால முடிஞ்சா நான் ஏன் இவகிட்ட புலம்பப் போறேன்.?அதுவுமில்லாம….”எனும் போதே இடை நிறுத்தியவள்,” ஒரு மருமகளை வச்சுக்கிட்டு உன்னாலேயே ஆகலை, அப்புறம் ஏன் அவங்களை குறை சொல்ற .எல்லாரும் உன்னை மாதிரி மகளை விட்டுட்டு மருமகளை தாங்க மாட்டாங்க .”என ஆதங்கமாய் சொல்லி விட
“
அவ ஒடம்புக்கு முடியலை அதனால கூட இருந்தேன்.”என்று அவரும் பதிலிறுக்க
“
நீ உன் குடும்பத்தை பாரு, நான் என் குடும்பத்தைப் பார்த்துப்பேன், இதோட மலர் கிட்ட பேசுறதை விடு “என்றவள் அங்கே நிற்கவே இல்லை .
மனதினுள் அத்தனை ஆதங்கம் அவளுக்கு இரு மாதங்களுக்கு முன்பு தான் இரண்டு மாதக் கரு கலைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள் ஷன்மதி . நோயாளியை விசாரிக்க வந்தது போல பழம் ,பிரட்டுடன் வந்து பார்த்து விட்டு மாலையே கிளம்பிய அன்னையை எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தாள் .காந்தவள்ளி தான் முழுவதும் கவனித்துக் கொண்டது .ஆனாலும் அவராலுமே வீட்டில் வந்து தங்க முடியாத நிலை .அதனால் திருச்சியில் இருந்து நேரே இருங்களூருக்கு அழைத்து வந்துவிட்டார். வளவனை தனியே விட்டு வந்தது வருத்தமளித்தாலும் ஷன்மதிக்கு வேறு வழியிருக்கவில்லை .தன் தாய் நினைத்திருந்தால் திருச்சியில் இருந்தே பார்த்திருக்கலாம் ,ஆனால் மருமகள் காய்ச்சலில் இருக்கிறாள் என்று சாக்கு சொல்லி வரவில்லை அவர். உண்மையில் அவருக்கு ஒரு படுக்கையறை கொண்ட அரசாங்கம் கொடுத்த மருமகனின் வீட்டில் தங்க விருப்பம் என்றுமே இருந்ததில்லை .ஒற்றை மருமகள் தானே காந்தவள்ளி பார்க்கக் கூடாதா என்ற வருத்தத்தை தான் வெளிக்காட்டினார் . காந்தவள்ளி அத்தனை கவனித்துமே அவர் மீது குற்றம் கூறியது ஷன்மதிக்கு விருப்பமில்லை இப்போது மலர் இருப்பதால் தான் ஷன்மதியோடு சென்று தங்கவில்லை என்று அவளை பேசவும் இன்னுமே கோபம் அவளுக்கு.
ஷன்மதியின் அம்மாவிற்கு வருத்தம் அது மட்டும் இருக்கவில்லை. மருமகன் அரசு ஊழியர் இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டால் மகள் தன் குடும்பமென இருந்து கொள்வாள் பிறந்தகம் வந்து தங்காமல் இருந்தால் தன் மகன் மருமகளிடம் மல்லுக்கட்ட வேண்டியது இல்லை என்று நினைத்தார். ஆனால் இப்போது மலர் புகுந்த வீட்டில் பிரச்னை செய்து விட்டு பிறந்தகம் வந்ததால் தன் மகளின் நிம்மதி பாதிக்கப்படுமோ என்று பயம் கொண்டதாலேயே மலரை மீண்டும் புகுந்த வீட்டிற்கு அனுப்புவதில் குறியாக இருந்தார்.
*********
உறவினர்களின் வருகை குறையவும், தனஞ்செயனும் வளவனும் மண்டபத்திற்கு பணம் கொடுக்கச் செல்ல மணமக்களை இருங்களூர் அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்தான் அழகு.
அது முறையாகாது தம்பி. கிராமத்துல பெண்ணழைப்பு மறுவீடு எல்லாம் முறையா செய்ய நினைப்பாங்க “என்று சொல்ல அழகும் வேறெதுவும் பேசாமல் மறுவீட்டிற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.
“
அழகு அதெல்லாம் எதுவும் ஆகாது. அங்க இருக்கிற ஸ்டேஷன்ல சொல்லி வச்சிருக்கேன். இங்க இருந்து கூட ரெண்டு பேர் அனுப்புறேன் நீங்க கவலைப்பட வேண்டாம்.” என்று அழகனின் நண்பன் அனுப்பிய காவலதிகாரி சொல்லியிருக்க, அப்போது தான் நிம்மதியாக இருந்தது அவனுக்கு.
ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்திருந்தான் தம்பிக்காக.
இங்கு சுந்தரேசன் குடும்பத்தினர் வந்து சேரவே இல்லை. காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போதே கற்பகம் அழைத்து விட்டாள் சுந்தரேசனின் பெரியம்மா நெஞ்சுவலியால் துடிக்கிறார் என.
அதன் பிறகு எங்கே திருமணத்திற்கு செல்ல இதில் சிவகாமி வேறு இந்நேரம் கல்யாணமே முடிஞ்சிருக்கும் என்றிருந்தார்.