மணமக்கள் இருங்களூர் வந்திறங்கிவிட்டனர். திருமணத்திற்கு வராதவர்கள் எல்லாம் வீட்டிற்கு வந்திருந்தனர் மணமக்களை காணுவதற்கு.
வந்தவர்கள் உணவருந்தி விட்டு வாழ்த்தியதோடு சென்றிருக்கலாம் ,மலர் வீட்டிலிருந்து வந்தார்களா என கேட்டு விட்டும் சென்றனர்.
ஓவியாவோ,” மண்டபத்துக்கு வந்துட்டு அப்படியே கிளம்பிட்டாங்க. பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும் இதுக்கெல்லாம் வராம இருப்பாங்களா என்ன.?” என்று அடக்கி வைத்தாள். பொய் தான் என்று தெரியும் ஆனாலும் இந்த கேள்விக்கு இப்படி பதில் தந்தால் தான் அவர்கள் வாயை மூட முடியும் என்று எண்ணி ஏற்கனவே ஷன்மதியிடம் சொல்லி இருந்தாள்.
“என்னம்மா இப்படி ஆஃப் பண்ணிட்ட அவங்களை?” என கேட்ட வித்யாவிடம்,” எத்தனை பேர் கிட்ட விளக்கமா சொல்லணும்த்தை. இவங்களுக்கு எல்லாம் அவங்க வந்து பிரச்சினை பண்ணது தெரியாதா என்ன?, வேணும்னே வாயைக் கிண்டுற வேலை இது. வரலைன்னு சொன்னா பேச்சை வளர்ப்பாங்க அதுக்கு இது எவ்வளவோ தேவலாம் இல்லையா?” என்று சொல்லி விட்டாள்.
‘இந்தப் பொண்ணுக்கு இதில் இருக்கிற தெளிவு, புகுந்த வீட்டில் என்ன பிரச்சனைனு சொல்றதில் இருந்திருக்கலாம் ‘என்று நினைத்துக் கொண்டார் வித்யா.
ஓவியா வீட்டிற்கு பின் சென்று அமர்ந்து விட்டாள். கூட்டம் போகட்டும் அங்கேயே இருந்தால் ஏதாவது கேட்டு நிற்பார்கள் என்ற எண்ணம் தான் அவள் மனதில்.
“பாருங்கண்ணி இவ பண்றதை, இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் கிளம்பிடுவேன். என் கூட இருக்கலாம் இல்ல. அதை விட்டுட்டு பிடிக்காத மாதிரி தனியா உட்கார்ந்து இருக்கா.” என்று சித்ரா ஷன்மதியிடம் வருத்தப்பட
“ஏய் !அவளுக்கு அசந்து வந்திருக்கும். நீ ஏன் கண்டதையும் கற்பனை பண்ற நீ உன் வீட்டுக்காரர் கூட இருப்பன்னு நினைச்சிருக்கலாம். தப்பாவே நினைக்க கூடாது சித்து. “என்று ஷன்மதி கண்டித்தாள்.
“நான் அவர் கூட இருக்கிறதனால நம்ம இப்படி இல்லையேன்னு வருத்தமா இருக்குமோ அண்ணி. அதான் ஃபீல் பண்றாளா?” என மீண்டும் கேட்டு வைக்க
“உன்னை அப்படியே நறுக்குனு கொட்டலாமானு வருது எனக்கு. இன்னும் சின்னப்பிள்ளை மாதிரியே யோசி. அவ அப்படி எல்லாம் நினைக்க மாட்டா, லூசு” என திட்ட
“போங்கண்ணி உங்களுக்கும் அவளைத்தான் பிடிக்கும்.” என்று அலுத்துக் கொள்ள
“உன்னை வச்சு எப்படி தான் அந்த தம்பி குடித்தனம் பண்ணப் போகுதோ?” என்று சிரித்தவள்,” நல்லபடியா அங்க இருக்கணும் சித்து. ஏதாவது சந்தேகம்னா தயங்காம என்னைக் கேளு. அதுக்காக எல்லாத்தையும் கேட்டு வைக்காதடி” என்றாள்.
“எல்லாத்தையும்னா… “திருதிருவென்று விழிக்க,” உன் வீட்டுக்காரர் கிட்ட கேளு விளக்கமா சொல்லுவார்.” என ஜகா வாங்கினாள் ஷன்மதி.
“இங்க என்னம்மா பண்றீங்க?, மாப்பிள்ளை அங்க தனியா உட்கார்ந்து இருக்கார் ,சித்து நீ போய் அவர் கூட இரு. மதி நீ வா என் கூட” என காந்தவள்ளி அவளை அழைத்துச் சென்று விட சித்து மெதுவாய் வெளியே வந்து அவினாஷை எட்டிப் பார்க்க, அவன் தனியாக தான் அமர்ந்திருந்தான் கைபேசியை பார்த்தபடி.
“ப்ப்ச் அங்க போய் உட்காருடி “என்று அவளை அனுப்பி விட்டுத் தான் காந்தவள்ளி தன் வேலையை கவனித்தார்.
“உங்களுக்கு போர் அடிக்குதா என்ன?” என்று கேட்க
அவினாஷோ தலையை மெதுவாக அவள் பக்கம் சாய்த்து,” போர் அடிக்குதாவா ஏன் மா கேட்க மாட்ட ?,கூட்டத்துல அம்போனு விட்டுட்டு போயிட்டு கேள்வியைப் பாரு” என்று கிசுகிசுக்க
“டிவி பார்க்கறீங்களா போர் அடிக்காது” என்றிட ,”நீ இவ்வளவு அறிவா இருக்க வேண்டாம் கையில் மொபைல் வச்சிருக்கேன் தானே அப்படியுமே போர் அடிக்குதுன்னா கொஞ்சம் மனுஷன் ஃபீலிங்ஸை புரிஞ்சுக்கோம்மா” என்றான் கூடத்தில் வைத்து உடைத்து சொல்லவும் முடியாமல் ,மறுக்கவும் முடியாமல்
“அப்போ டிவி மொபைல் ரெண்டுமே பாருங்க ஜாலியா இருக்கும்” என்று சொல்ல
‘உன் புத்திசாலித்தனத்தை கண்டு நான் வியக்கேன் போ’ என்று தனக்குள்ளேயே நொந்தவன் ,”அவி நீ ரொம்ப பாவம்யா” என்று தன்னையே சொல்லிக் கொண்டான். வேறு வழி
“அவி ப்ரெஷ் ஆகிட்டு வாங்க சாமி கும்பிட்டு கிளம்ப வேண்டியது தான் “என்று தனஞ்செயன் வந்து சொல்ல
“சரிங்கப்பா!” என்று எழுந்தவன் தன் அண்ணனைத் தேடினான்.
“அழகு ஃபோன் பேசிட்டு இருக்கான்டா, அவன் தான் கிளம்பச் சொன்னான்.” என்றதும் சித்ராவை அறைக்குச் செல்ல பார்த்தான்.
“சித்து ரூமிற்கு கூட்டிட்டுப் போ தம்பி காஃபி சித்துகிட்ட தந்துவிடுறேன்” என்றாள் ஷன்மதி.
“தேங்க்ஸ் கா.!” என்று சித்துவின் பின்னோடு நடந்தான்.
இங்கோ ஓவியா தன் மகவோடு தானாக பேசிக் கொண்டிருந்தாள்.
‘உன் சித்தி லைஃப் செட்டில்டா பாப்பா. இனி அம்மாவும் நீயும் கிளம்பலாம். என்ன நீ வெளியே வரும் போது தான் கஷ்டமா இருக்கும் ஆனா அம்மா சமாளிச்சுடுவேன் நீ பயப்படாதே சரியா…’என்று தனக்குள்ளேயே பேசியிருந்தாள்.
ஓவியா குழந்தையை வருடுவதும், வயிற்றைத் தடவி முத்தமிடுவதுமாய் இருக்க அது அழகினியன் பார்வையில் ஓவியமாய் பதிந்தது.
‘இந்த பொண்ணுக்கு குழந்தை கிட்ட பேச தான் பிடிக்கும் போல!’ என்றெண்ணிக் கொண்டான்.
அடுத்தடுத்து மணமக்கள் சென்னை திரும்ப, ஷன்மதி வளவன் இருவரும் சித்துவோடு கிளம்பினர்.
இரண்டு நாட்கள் கழித்து விருந்திற்காக ஓவியாவின் குடும்பத்தினர் சென்னை செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
அனைவரும் சென்னை கிளம்ப ஆயத்தமாக ,ஓவியா வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள் தன் மொத்தக் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்கும் விதமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு.
இங்கே தன் வாழ்வு துவங்கிய நேரத்தில் ஓவியா இந்த முடிவை எடுத்ததால் சித்ராபாலா அதீத கோபத்தில் வார்த்தையை விட்டிருந்தாள் ஷன்மதியிடமும், காந்தவள்ளியிடமும்.
அதனைக் கேட்ட அழகினியனோ கொதித்துப் போய்விட்டான்.
“என்னம்மா பேசுற நீ.? அந்த பொண்ணு எதுக்காகவும் இந்த முடிவு எடுத்திருக்கட்டும் ஆனா ஒரு சிஸ்டரா நீ இப்படி பேசலாமா…?உன் மேரேஜ் இவ்வளவு அமைதியா நடக்கக் காரணமே அந்தப் பொண்ணு தான். அவங்க புகுந்தவீட்டை பத்தி சரியான நேரத்தில் எனக்கு தகவல் தந்து, நான் ஃபோலீஸ் உதவியோட இந்த மேரேஜை நடத்தியிருக்கேன்” என்று திட்டிவிட்டான் அவளை.
‘இது எப்போது?!’ என்று அனைவரும் வியப்புடன் பார்க்க சித்ராவிற்கு அப்படி ஓர் அழுகை.
“அவ ஒழுங்கா அங்கே இருந்திருந்தா என் கல்யாணம் ஏன் பிரச்சினையில் நடக்கப் போகுது?” என்று அழுகையோடு சொல்லி விட்டாள் சித்ரா.
அழகினியனுக்கு சுத்தமாய் இந்தப் பேச்சு பிடிக்கவில்லை.