“மாட்டவே மாட்டேன், நீ எடு, உனக்கு பிடிச்சது எடு, நிறைய எடு, மிச்சம் எனக்கு குடுப் போதும்!” என்றாள்.
“அது என்ன நிறைய எடு, மிச்சம் குடு!” என்று இளவரசி கோபப்பட…
“அக்கா கல்யாணம் முடிவாகிடுச்சு சரி, மாப்பிள்ளை இஷ்டப்பட்டு கட்டுறார் அது வேற, ஆனா நீ எதுவும் குறைவா அந்த வீட்டுக்குப் போகக்கூடாது. மாப்பிள்ளைக்கு இஷ்டம், அதனால நகை நட்டு கம்மின்னாலும் கட்டுறாங்கன்னு யாரும் ஒரு வார்த்தைக் கூட சொல்லக்கூடாது”
“தாத்தா இப்போ நகை குடுக்கலைன்னாலும், நான் ஏதாவது இடம் வித்து உனக்கு நகை நிறைய வாங்கணும், அம்மாவோடது இருக்கு அது பத்தாது சொல்லியிருந்தேன். பார்க்கலாம் பார்க்கலாம் சொன்னார், அவர் இந்த முடிவுல இருக்குறது எனக்குத் தெரியாது. பணம் உன் பேர்ல பேங்க்ல இருக்குறது அப்படியே இருக்கட்டும். அதுல கைவைக்க வேண்டாம். நாளைக்கு நீ மேல படிக்க நினைச்சாலும் நீ யார் கையையும் எதுக்கும் எதிர்பார்க்க வேண்டாம் இளா” என்றாள் தெளிவாய்.
ஜெகதாம்பிகை அந்த வார்த்தைகளில் இன்னும் அடி வாங்கினார். ஆம்! இதுவரை தந்தையின் கையை எதிர்பார்த்து தானே. பெரிதாய் கஷ்டங்கள் எதுவும் அண்டியதில்லை. எதற்கு கேட்டாலும் பணம் கிடைக்கும். ஆனால் கேட்கத் தேவையில்லை எனும் நிலைமை இல்லையே.
“நான் தாத்தாக்கிட்ட பேசினேன். நீ இங்க இருந்து சீரும் சிறப்புமா தான் போகணும். அப்பா அம்மா இருந்திருந்தாக் கூட இப்படி செய்வாங்களான்னு எல்லோரும் மூக்குல விரல் வைக்கணும்னு… ஜீவரத்தினம் பொண்ணு ஏனோ தானோன்னு போகக் கூடாது அக்கா. எதுவும் வேண்டாம்னு சொல்லக்கூடாது”
“மாமாவும் டாக்டர், நீயும் டாக்டர், நாளைக்கு நீ மேல படிப்ப, ஏன் மாமாவை விடக் கூட நீ இன்னும் பேர் புகழ் பெறலாம், எது வேணா நடக்கும்!”
“ஆனா இன்னைக்கு கல்யாணச் சந்தையில அவர் டாக்டர் அப்படின்றப்போ பையனுக்கு பிடிச்சிருக்குன்னு சுமரானா இடம்னா கூடக் கொண்டு வந்துட்டாங்கன்னு யாரும் சொல்லக் கூடாது. நாம ஒன்னும் வசதி வாய்ப்புல குறைவு கிடையாது. அவங்களை விட ஒரு படி மேல தான். அவங்க தாத்தா மந்திரின்னா நமக்கு என்ன? அப்படி ஒன்னும் அரசியல் பெரிய விஷயம் கிடையாது. இன்னைக்கு இருக்குறவங்க நாளைக்கு கிடையாது. அவ்வளவு தான். அவங்க தாத்தா மந்திரின்னா அவங்க வரைக்கும்!”
“திரும்பவும் சொல்றேன் அவங்க நமக்கு ஒன்னும் கிடையாது. நாம தான் அவங்களுக்கு மேல, ஏதோ பையன் நல்லவனா இருக்கப் போய் குடுக்கறாங்கன்ற பேச்சு தான் இருக்கணும்” என்றவளின் வார்த்தைகளில் அவ்வளவு கர்வம்.
“என்னமா பேசறாடா இவ, இவ்வளவு திமிரா?” என்று தாரகனுக்கு தோன்ற. மீண்டும் தப்பு செய்தான். அது அவளின் கர்வம் என்று புரிவில்லை.
“அதனால வீட்ல நாங்க என்ன பண்ணினாலும் நீ எதுவும் சொல்லக் கூடாது. நீ அவங்க வாழ்க்கைல போறது அவங்களுக்குத் தான் அதிர்ஷ்டமா இருக்கணும். அவங்களைக் கட்டுறது உனக்கு அதிர்ஷ்டமா இருக்கக்கூடாது” என்று பேச…
வீடே “ஆங்” என பார்த்தது, சேதுபதி பார்க்கவில்லை. ஏனென்றால் முன்னமே அலர் இதைப் பற்றி தாத்தாவிடம் பேசி விட்டாள். அதுவுமன்றி இந்த பேச்சுக்களில் எல்லாம் மகனை தான் பார்த்தார். அவரின் மகன் கடைசி நிமிடம் வரை அவரை பார்க்கவேயில்லையே. அத்தனை வைராகியம்! அத்தனை வீம்பு!
“பாருடா இந்த வயசுல என்னமா நினைக்கறா? நமக்கு இப்படி எல்லாம் தோணாது. அமைச்சர்ன்னு நாம கூட மரியாதை குடுக்கறோம். இவ என்னன்னா மந்திரியாவது ஒன்னாவது நான்தான் பாஸ்ன்னு பேசறா. ம்ம் சரியான ஆள் தான்!” என்று தோன்றியது.
“எந்த இடத்துலையும் நாம கீழ போகக் கூடாது தாத்தா, நம்ம வீட்ல பொண்ணு கட்டுறது அவங்களுக்கு கௌரவம், குடுத்து வைக்கணும்னு தான் எல்லோரும் பேசணும். அக்காவைப் பார்க்கறவங்க வேற பேச வாய்ப்பில்லை. இருந்தாலும் எதுவும் நாம குறைவா செய்யக்கூடாது” என்று விட்டாள்.
சிறு பெண் இப்படி எப்படி யோசிக்கிறாள் என்று சேதுபதிக்கு வியப்பாய் இருந்தது.
அலருக்கு அனிதா நல்ல மாதிரியாய் தெரிந்தாலும், கஜேந்திரன் அன்று பேசிய பேச்சு எல்லாம் பிடிக்கவில்லை. அவருக்கு ஒரு இளக்காரம் என்று புரிந்தது. அந்த இளக்காரம் அவர் காண்பிக்க முடியாதபடி எல்லாம் சிறப்பாய் இருக்க வேண்டும் என்று அன்றே முடிவெடுத்துக் கொண்டாள்.
இந்த பத்து வருடங்களாக, எதுவும் எதுவும் அந்த வீட்டில் தாரகனுக்கு தெரியாமல் நடந்ததில்லை. இதோ இந்த விஷயங்கள் அலர் பேசியது தெரியவில்லை, தாத்தாவும் எதுவும் சொல்லவில்லை.
அதுவும் திருமணச் சந்தையில் மாணிக்கவேல் டாக்டர் அவனுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று அவள் சொல்லும் போது எங்கேயோ எதுவோ, தான் ஒன்றுமில்லாததாய் உணர்ந்தான். ஏன் தாத்தாவே விசாகனுக்கு தானே இளவரசியை சொன்னார். படிப்புமில்லை, பணமுமில்லை, தாரகன் சேதுபதி என்று அப்பாவின் பெயரையும் சேர்த்து ஜெகதாம்பிகை மகனுக்கு பேர் வைத்திருந்தாலும், செல்வத்தில் தான் சேதுபதி குடும்பம் இல்லை என்று மண்டையில் உரைக்கும் படி உரக்க தாத்தாவும் அடித்து விட்டார், சொந்தங்களும் அவனுக்கு பெண் கொடுக்க அப்படி ஒன்றும் நீ நான் என்று போட்டியிடவில்லையே. மனது என்னென்னவோ நினைத்தது. அப்படி ஒரு வருத்தம் மனதில் சூழ்ந்த போதும் ஒன்றும் முகத்தில் காண்பிக்கவில்லை.
இன்னம் தாத்தா அவனிடம் கேட்காது எதுவும் செய்ததில்லை. ஆனால் இளவரசியின் திருமணத்தில் இப்படி செய், அப்படி செய் என்று சொல்ல தான் செய்தார், செய்வோமா என்று கேட்கவில்லை.
இப்போது புரிந்தது சொல் எல்லாம் அலரினது… செயல் மட்டுமே தாரகன் அதுவும் சேதுபதி வாய் மொழியாக தான் எல்லாம் வந்தது.
அலர் அவன் எப்போது கைபேசியை எடுக்கவில்லையோ, தன்னை மிக அலட்சியமாக எல்லோர் முன்னும் கீழிறக்கி பேசினானோ, அன்றிலிருந்து அவளாக எதுவும் பேசுவதில்லை.
என்ன தான் பார்வைகள் தொடர்ந்தாலும் வார்த்தை என்பது கிடையாது.
எல்லாம் அலரின் முடிவு என்பது வீட்டினர் அனைவருக்கும் ஆச்சர்யம். எங்கோ அலரிடம் சேதுபதி தன் மகனை காண, அவள் சொல்வதற்கு அவர் பெரிதாய் மறுப்பதே இல்லை.
இதோ நிச்சயம் நடந்து கொண்டிருக்க, மந்திரி வீட்டு திருமணம் தான், ஆனால் ரிசப்ஷன் மட்டுமே கட்சியில் இருப்பவர்களுக்கு அழைப்பு, வேறு நிகழ்வுகளுக்கு திருமணதிற்கு எல்லாம் இல்லை.
இதோ நிச்சயம் நடக்க, சேதுபதியின் ஜனக் கட்டை பார்த்து வைரவேல் அசந்து விட்டார். பெரிய ஆள்ன்னு தெரியும். இத்தனை ஓட்டு கைவசம் வெச்சிருக்கானா என்பது போல தான் அவரின் யோசனை.
நிச்சயமே வாழப்பாடியில் பெரிய மண்டபத்தில் வைத்திருந்தனர். நிச்சயம் பெண் வீட்டார் நிகழ்வு. வைரவேல் தங்கள் உறவுகளோடு வர, ஒரு வகையில் கஜேந்திரன் அவர்களுக்கு உறவு தானே, ஆனால் எந்த உறவுகளும் அவர் வீட்டு சார்பாய் இருக்கவில்லை, எல்லாம் சேதுபதியின் சார்பாய் அவர்கள் முன்பே வந்து விட்டனர்.
வைரவேல் வரும்போது அனிதாவின் உறவுக் கட்டு தான், கஜேந்திரன் புறம் யாருமில்லை.
ஆனால் யாருமில்லை என்ற குறை தெரியாமல் அனைவரையும் தூக்கி சாப்பிடவென்று, அவரின் இளைய மகன் ராஜவேல், சிங்கப்பூரில் இருந்து படிப்பில் விடுமுறை எடுத்து வந்திருந்தான்.
அதுவரை அடக்கி வாசித்திருந்த கஜேந்திரனிற்கு ராஜவேல் வந்ததும் அப்படி ஒரு பலம்.
அதுவும் மாணிக்கவேலிற்கு சரியாக எதோ மாப்பிள்ளை போல வந்திருக்க, “டேய் மாமா, பாருடா இந்த வெண்ண வெட்டிய, மாப்பிள்ளைக்கு போட்டியா மாப்பிள்ளை மாதிரி வந்திருக்கான். பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, கூலிங் க்ளாசு, எதுக்கு இத்தனை நகை, ஏதோ இந்த சினிமால தாதா எல்லாம் போட்டுட்டு வர்ற மாதிரி, அது தெரியணும்னு சட்டையோட ரெண்டு பட்டன் வேற போடலை, பெரிய கிறுக்கனா இருப்பான் போல இருக்கு” என்று அவனை அக்கு வேறு ஆணிவேராய் அலசி அகிலன் விசாகனிடம் குறைபட்டான்.
ராஜாவேல் உள்ளே வரவும், கூலிங் கிளாஸ் கழற்றி சட்டையில் மாட்டியவன், கண்களில் அப்படி ஒரு அலட்சியத்தை தாங்கி நாங்கள் பெரிய ஆட்கள் என்று அவன் வர, அப்படி ஒன்றும் அவர்கள் அங்கே பெரிய ஆட்கள் போலத் தெரியவில்லை.
ஏதோ அண்ணன் இஷ்டப்பட்டான் என்று பெண் கொண்டுவருகிறார்கள் என்று நினைத்திருக்க, “ம்ம்ம், பெரிய இடம் தான் போலவே” என்று தான் தோன்றியது. அதுவும் இளவரசியைப் பார்த்த பிறகு “அட, அண்ணி போட்டோ விட நேர்ல பேருக்கு தகுந்த மாதிரி இளவரசி தான்” என்று தோன்றியது. நிமிடங்களில் அவனின் எண்ணங்கள் மாறிவிட்டன.
உறவுகளுக்கு கொடுக்கும் மரியாதையை, மாப்பிள்ளை வீட்டாருக்கு அது சற்றும் குறையாமல் சேதுபதியின் அத்தனை உறவுகளும் கொடுத்தனர்.
சேதுபதி எதற்கும் கஜேந்திரனையும் அனிதாவையும் முன் நிறுத்த வில்லை, எல்லாம் வைரவேலும் அவர் மனைவியையும் தான் செய்ய வைத்தார். பெண்ணின் புறம் சேதுபதியும் தேவகியும் நிற்க, அது யார் கண்களையும் உறுத்தவில்லை.
என்னவோ நாங்கள் பெரிய ஆட்கள் மாப்பிள்ளை வீட்டினருக்கு எந்த நினைப்பும் வரவேயில்லை.
அலர் சொல்லியபடி, அவர்களின் ஏற்பாடுகளும் ஜனக்கட்டும் நடந்து கொள்ளும் முறையும் அவர்களை குறைத்துக் காட்டவேயில்லை. மாப்பிள்ளை வீட்டினரை விட மேலே தான் காட்டியது.