“டேய் என்னங்கடா ரொம்ப துள்ளுறீங்க… என் அண்ணன் கிட்ட சொன்னா என்ன நடக்கும் தெரியுமா?? இப்படி சவடால் பேசுற வாய்ல பல்லு இருக்காது..” என்று கெத்தாய் சட்டை காலரை தூக்கிவிட்டு திமிராய் நெஞ்சை நிமிர்த்தி பாலா சொல்ல,
அவனை சுற்றி இருந்த மூவருக்கும் லேசாய் பயம் தொற்றியது. பாலாவின் ‘அண்ணன்’ என்ற மந்திரம் நன்றாகவே வேலை செய்தது.
ஈசனை பற்றி அறியாதவர் ஆண்டிபட்டியில் உண்டா என்ன??
ஆனாலும் அதிலொருவன் பயத்தை வெளிக்காட்டாது, “ஏய் என்ன டா, உங்க அண்ணன் பேரை சொன்னா நாங்க பயந்து நடுங்கிடுவோமா?? உனக்குவேணா உங்கண்ணன் பெருசா இருக்காலம்…” என்று முன்னே வர,
“சரி பயமில்லை தான, பின்ன எதுக்குடா எங்கண்ணன் கிட்ட வந்து பேச இம்புட்டு பம்முறீங்க…??” என்று பாலா எகத்தாளமாய் பேச,
அந்த பொட்டல் நில பரப்பில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் செடிகளும், புதர்களும் இருக்க, இவர்கள் நால்வர் பேசினாலும் ஒரு அமைதி நிலவத்தான் செய்தது அங்கே.
‘புழுதி பறக்கும் பாரு…’ அதுபோல அந்த பொட்டல் காட்டில் ஆள் ஒருவர் நடந்து போனாலே புழுதி கிளம்பும் அப்படியிருக்க அங்க சூழ்ந்திருந்த அமைதியை எல்லாம் தாண்டி சற்று தொலைவில் புல்லட் வரும் சத்தம் கேட்க, லேசான புழுதி படலம் படர அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். விட்டால் ஓடிவிடலாம் தான்.
ஆனால் அடுத்து இதே ஊரில் தானே இருக்க வேண்டும். என்றிருந்தாலும் ஈசன் கண்ணில் படாமல் இருக்கத்தான் முடியுமா?? இல்லை அவனும் தான் அப்படியே விட்டுவிடுவானா? ஈசன் தேடி வந்து பிடரியில் ஒரு தட்டு தட்டமாட்டான் என்பது என்ன நிச்சயம்??
ஈசனின் புல்லட் சத்தம் கேட்டதுமே, “இதெல்லாம் சரியேயில்ல பாலா.. பேசிக்கலாம்னு வர சொல்லிட்டு, இப்போ உங்க அண்ணன கூப்பிட்டு இருக்க.. உன்கிட்ட தான பேச வந்தோம்…” என்று சொல்லியபடியே மூவரும் ஓட தயாராக,
“பேச வர சொன்னதே எங்கண்ணன் தான்டா…” என்று இருவரின் சட்டை காலாரை பின்னிருந்தபடி கொத்தாய் இழுத்து பாலா நிறுத்த, மற்றொருவன் இருப்பதா ஓடவா என்பது போல் பார்க்க, அதற்குள் புல்லட் இவர்களை வட்டம் அடித்தது.
பாலாவின் கையில் அகப்பட்டவர்களோ திமிறிக்கொண்டு ஓட முயல, எஞ்சியிருந்த ஒருவனோ,
“அண்ணா அண்ணா எங்களை விட்ருங்கண்ணா… ப்ளீஸ்… நாங்க இனிமே இப்படி செய்யமாட்டோம்..” என்று ஈசனை நோக்கி கெஞ்ச துவங்க,
“எப்படி செய்யமாட்டீங்க…??” என்றபடி கையில் இருந்த காப்பை லேசாய் முறுக்கிவிட்டு புல்லட்டில் இருந்து இறங்கி, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே கேட்ட ஈசனை காணவே இவர்களுக்கு குளிர் ஜுரம் வந்தது போல உடல் நடுங்கியது.
அவனது உயரத்திற்கும், உடல் வாகிற்கும் சாதரணமாய் அவன் வந்து நின்றாலே சபை நிறையும். இன்றோ ஈசன் ருத்ர மூர்த்தியாய் வந்து நிற்க, எதிரே நிற்பவர்களுக்கு முதுகு தண்டு ஜில்லிட, நடுங்கிய குரலில் பேசும் அவர்களை காண ஈசனுக்கு சிரிப்புத்தான் வந்தது.
“வெத்து வேட்டுக்கள்…” என்று நினைத்துக்கொண்டான்.
“அண்ணா வேண்டாண்ணா ப்ளீஸ் ண்ணா…”
“ப்ளீஸ் சொன்னா விட்டுடனுமா..?? ஏன்டா அறிவில்ல, அஞ்சறிவு இருக்க மாடு மேய்ச்சலுக்கு வந்தா வேணும்ணே வெடி போடுறது, ஊர்லையே வண்டி உங்களுக்கு தான் ஓட்ட தெரிஞ்ச மாதிரி நடுவுல வர்றது… அதுபாட்டுக்கு ஒரு ஓரமா வரிசையா தானே போகுது… உங்களுக்கு எங்கடா வலிக்குது…” என்றபடி நின்றிருந்தவனின் நெஞ்சில் பார்த்து தன் நீள கால்களை தூக்கி ஒரு மிதி மிதிக்க,
அவனோ, “ஐயோ… அம்மா….” என்று அலறியபடி தான் விழுந்தான்.
“என்னடா அம்மா???!!!!! நீங்க பண்ண வேலைக்கு அந்த மாடுங்களும் அம்மா அம்மான்னு தானே கத்துச்சு…” என்று சொன்ன படி மற்ற இருவரையும் கீழே தள்ளி மிதிக்க,
“அண்ணா சாரிண்ணா.. ப்ளீஸ் ண்ணா.. இனி அப்படி பண்ண மாட்டோம்..” என்று மூவரும் ஒரேதாய் இவன் காலை பிடிக்க,
“ச்சே விடுங்கடா.. தைரியம் எல்லாம் வாயில்லா பிராணிங்க கிட்ட மட்டும் தான் போல…” என்று ஈசன் உறும,
“அண்ணா இவனுங்களை சும்மா விடக்கூடாதுண்ணா…” என்று பாலா வேறு எடுத்துக்குடுக்க,
அவர்கள் என்ன கெஞ்சியும் ஈசனுக்கு கோவம் குறையவே இல்லை. அடித்து கொல்லும் வேகம் தான் இருந்தது. போயும் போயும் இவர்களது வீரத்தை வாயில்லா ஜீவன்கள் மீது காட்டும் தொடை நடுங்கிகள் என்றே தோன்றியது.
“அண்ணா வேண்டாண்ணா வலிக்கிது… நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறோம்ணா…” என்று மூவரும் கோரஸ் பாட,
“ஓ!!! டீலிங் பேசுறீங்களா டா… அதுவும் என்கிட்ட..” என்றவனுக்கு சட்டென்று ஒரு யோசனை வர, அடிப்பதை நிறுத்தினான்.
“அண்ணா இவனுங்கள விடக்கூடாது இன்னிக்கு கெஞ்சிட்டு நாளைக்கு மறுபடியும் திமிர்த்தனம் செய்வானுங்க…” என்று பாலா சொல்ல,
“இல்லடா.. பொறு…” என்றவன்
“நாளைக்கு விடிய அஞ்சு மணிக்கு என் வீட்டு வாசல்ல மூணு பேரும் நிக்கணும்.. இல்லை நடக்கிறதே வேற…” என்றுமட்டும் சொல்லி பாலாவையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் ஈசன்.
“ஏன்ணா அவனுங்கள சும்மா விட்ட…” என்று தம்பி கேட்ட கேள்விக்கு, ஒரு புன்னகை மட்டும் தான் ஈசனிடம் பதில்.
ஈசன் புன்னகையின் காரணம் புரிந்ததுவோ என்னவோ பாலாவும் புன்னகைத்துக்கொண்டான். எப்பொழுதுமே பாலாவிற்கு தன் அண்ணன் எது சொன்னாலும் சரி, எது செய்தாலும் சரி அதை அப்படியே ஏற்றுக்கொள்வான். அவனுக்கு ஈசன் தான் ஹீரோ..
அண்ணனும் தம்பியும் இப்படி ஒருப்பக்கம் வண்டியில் வந்துகொண்டு இருக்க, அதே நீண்ட சாலையின் மற்றொரு பக்கத்தில் இருந்து இரு பெண்கள் பேசிக்கொண்டு வந்தனர்.
“டி லட்சுமி… என்ன டி இப்படி கனா கண்டுக்கிட்டே வர… சீக்கிரம் வா டி.. பஸ் போக போகுது.. இன்னிக்குனு பார்த்து ஏன் டி இப்படி பண்ற…” என்று இழுத்த ரேவதியை கண்டுகொள்வதாகவே இல்லை லட்சுமி.
அவள் சிந்தனை எல்லாம் வேறெங்கோ இருக்க, ரேவதியோ பஸ் போய்விடும் என்று அவாசரத்தில் பறக்க, லட்சுமியோ மிதந்து வருவது போல் தான் நடந்துவந்தாள். என்றுமே லட்சுமி தான் வேகமாய் கிளம்பி ரேவதியை முடுக்குவாள். இன்று நேர்மாறாய் இருந்தது.
தன் நீண்ட ஜடை ஆட, வானில் மிதக்கும் மேகங்களை போல எதோ கனவுலகில் நடந்து வருபவளை போல நடந்து வந்தாள் லட்சுமி.
“ஏய்… என்ன டி… இன்னிக்குன்னு பார்த்து இம்புட்டு கழுத்தறுக்குற… சீக்கிரமா வா டி லட்சுமி….” என்று ரேவதி அவள் கையை இழுக்க,
தன் மோன நிலை கலைந்த கடுப்பில் “ஏய் சும்மா வா டி… நானே இன்னிக்கு செமினார்னு டென்சன்ல வரேன்.. இவ வேற சீக்கிரம் வா சீக்கிரம் வான்னு உசுர எடுத்துட்டு… நீ வேணும்னா சீக்கிரம் போ..” என்று ரேவதியின் தோளை பிடித்து தள்ள,
“ஓஹோ..!!!! அதான் இவ்வளோ அமைதியா வரியா??? அதுசரி தான்… சரி சரி நல்லா எடுப்பியா இல்லை வழக்கம் போல புக்ல இருக்கிறத வாசிச்சிட்டு வருவியா??? ” என்று ரேவதி வம்பிழுக்க, அவளை முறைத்தபடியே வந்தாள் லட்சுமி.
“இந்த முறைப்பெல்லாம் இங்க வேணாம்டி… உன் வீரத்தை வந்து செமினார்ல காட்டு…” என்று இதுதான் வாய்ப்பென்று ரேவதி வம்பிழுக்க, அவ்வளவு தான் இத்தனை நேரம் அமைதியாய் வந்தவளின் வாய் பூட்டு கழண்டது.
“ஆமாமா இவ மட்டும் அப்படியே அருவியா கொட்டி கிளாஸ் எடுப்பா போடி போ… நானாவது புக்ல இருக்கிறத ரீட் பண்ணிட்டு வருவேன்.. நீ அதுவும் செய்ய மாட்ட. அங்க நின்னு நீ பிடிக்கிற அபிநயம் எல்லாம் எங்களுக்கு தானே தெரியும்..” என்று சொல்லியபடி இடது தோளில் தொங்கும் காலேஜ் பேக்கை சரி செய்தபடி, பார்வையை எல்லாம் ரேவதியின் அஷ்ட கோணலாய் மாறின முகத்தில் வைத்திருந்தவளுக்கு, எதிரே வந்த புல்லட் சத்தம் காதில் விழவில்லை, புல்லட்டில் வந்தவனும் கருத்தில் பதியவில்லை.
புல்லட்டின் நேரே, அருகில் வருபவளிடம் வாயடித்துக்கொண்டு வந்தவளை கவனித்த ஈசன் தான் வண்டியை வேகமாய் திருப்பி தள்ளி நிறுத்தினான். பதறிபோய் பாலா இறங்க, கண்ணில் தெறிக்கும் அனலோடு ஈசன் இறங்க,
“ஐயோ இன்னிக்கு நேரமே சரியில்ல போலவே…” என்று முனுமுனுத்தபடி எதிரே நின்ற அண்ணன் தம்பி இருவரையும் கண்டவளுக்கு இதுவரை மனதில் செமினாருக்கு என்று தேற்றி வாய்த்த தைரியம் எல்லாம் காணமல் போனது.
“அடி ரேவதி வா இப்படியே ஓடிடுவோம்…” என்று ரேவதியின் கைகளை இழுக்க,
“என்ன பாலா காலேஜுக்கு வரலியா???” என்று ரேவதி பாலாவை பார்த்து கேட்டபடி ஈசனை பார்த்து சிரிக்க,
“ஐயோ இவ இப்படி ப்ரேக் போட்டு நிக்கிறாளே..” என்றிருந்தது லட்சுமிக்கு.
பெயருக்கு கூட அவள் ஈசன் பக்கம் திரும்பவே இல்லை. அய்யனார் போல் இருப்பவன் சும்மாவே ஆடுவான் அதுவும் இப்பொழுது சொல்லவும் வேண்டுமா??
“என்ன லட்சுமி.. இன்னிக்கு செமினார் தான…” என்று பாலா சிரித்தபடி கேட்க,
“ம்ம்…” என்று மட்டும் சொன்னவள்,
“இப்ப நீ வரியா இல்லையா டி…” என்று ரேவதியை பார்த்து கேட்க, அவளும்
“சரிண்ணா நாங்க கிளம்புறோம்… நீயும் சீக்கிரம் வந்திடு பாலா…” என்று ஆண்கள் இருவருக்கும் பொதுவாய் சொல்லிவிட்டு ரேவதி இவளோடு நடக்க தொடங்கினாள்.