ரேவதி, பாலாவிற்கும் ஈசனுக்கும் ஒருவகையில் சித்தப்பா பெண் என்றால், லட்சுமி ஒன்றுவிட்ட அத்தையின் மகள். ரேவதி எப்பொழுதும் இவர்களை கண்டால் பேசுவாள். ஆனால் லட்சுமியோ பாலாவிடம் நன்றாய் பேசினாலும் ஈசனை முகம் நிமிர்ந்து கூட பார்த்திட மாட்டாள். ஏனோ அவளுக்கு அவனிடம் அத்தனை ஒதுக்கம். ஒதுக்கம் என்பதை விட உன்னை நான் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்ற வைராக்கியம் நிறையவே அவளிடம் இருந்தது.
இதற்கு சின்ன பிள்ளையில் அண்ணா… மாமா… என்று அவன் பின்னே சுற்றிய கூட்டம் தான் இவர்கள் எல்லாம். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு லட்சுமி அப்படியே ஈசனிடம் இருந்து ஒதுங்கிவிட்டாள்.
“ஏன் டி லட்சுமி இப்படி பண்ற.. ஈசண்ணா உன்ன பாத்து தான வண்டிய நிறுத்தினாங்க.. ஒரு வார்த்தை பேசுனா என்னவாம்…” என்று ரேவதி நொடிக்க,
“ஏன்.. உங்க அண்ணன் பெரிய துரை.. வந்து நின்னா உடனே பேசிடனுமா.. போடி போ… நாங்க பேசலைன்னா உங்க அண்ணனுக்கு அப்படியே நெஞ்சு வலிக்கும் பாரு.. ஆளும் அதுவும் எப்படி வந்து நிக்கிறது…” என்றவளின் பேச்சு ரேவதியிடம் இருந்தாலும், பார்வையோ பின்னே ஒரு முறை திரும்பி பார்த்தது.. ஈசன் இருக்கிறானா கிளம்பிவிட்டானா என்று..
பாலாவோடு எதோ பேசியபடி புல்லட்டில் ஈசன் ஏற, கண்ணாடி வழியே லட்சுமி இவனை திரும்பி பார்ப்பது நன்றாகவே தெரிய, தன் சிறு கண்கள் கொண்டு உற்று நோக்கினான்.
கண்ணாடி வழி அவள் பார்வை தெரிந்ததா இல்லை அவள் பார்வை சொன்ன சேதி புரிந்ததா இவனுக்கு என்று தெரியவில்லை. ஆனாலும் பார்த்தான்.. அவளாய் முகம் திருப்பும் வரைக்கும் பார்த்தான்.
சிறு பிள்ளையாய் இருக்கும் பொழுதே மாமா மாமா என்று பின்னே சுற்றி திரிந்தவள், அதன் பிறகு அப்படியே மாறிப்போனாள்.. சரி வயதுக்கு வந்துவிட்டாள் அந்த ஒதுக்கம் என்று நினைத்தவனுக்கு இப்பொழுதெல்லாம் அவள் இவனை கண்டு முகம் திருப்புகையில், அப்படியில்லையோ என்று தோன்றியது.
என்னவாக இருக்கும் என்று யோசித்தாலும் அவனுக்கு பெரிதாய் எக்காரணமும் புலப்படவில்லை. சரி இதற்குமேல் அவள் விருப்பம் என்று இருந்துவிட்டான். ஆனாலும் மனம் சில சமயம் முரண்டியது. சாதாரண பேச்சு, தெரிந்தவர் என்ற ஒரு புன்னகை ம்ம்ஹும் மருந்துக்கும் கூட எதுவும் இல்லை. எதுவோ விரோதியை கண்டது போல் தான் முகம் திருப்புவது..
இதற்கும் ஈசன் வீட்டிற்கும் லட்சுமி வீட்டிற்கு நடுவே ஒரு சிறு சந்து தான் இடைவெளி.. எல்லாம் அக்கால வீடுகள்.. ஜென்னல் வழியாய் நின்று ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு பேசிக்கொள்ளலாம்.. சிறு வயதில் அப்படி அனைவரும் விளையாண்டதும் உண்டு..
இப்பொழுது அனைவரின் மனதிலும் அந்த நியாபகங்கள் மட்டுமே.. வாழ்க்கை அதன் ஓட்டத்தில் அனைவரையும் இழுக்க, அடுத்தடுத்து படிப்புகள் கூட, ஈசன் பெரியவனாகிவிட்டான்..
ரேவதி எப்பொழுதும் போல் பேசுவாள். பாலாவிற்கு எப்பொழுதுமே தன் அண்ணன் ஒரு ரோல் மாடல் தான். ஈசன் எது செய்தாலும், சொன்னாலும் அது சரியாக மட்டுமே இருக்கும் என்று நம்பும் ஒருவன் பாலா. ஈசனுக்கும் தம்பி மீது அதீத பாசம் தான் ஆனால் வெளிக்காட்ட மாட்டான்..
மாட்டானா இல்லை அவனுக்கு வெளிக்காட்ட தெரியாதா என்று அவனுக்கே தெரியவில்லை. இப்படியான தன் எண்ணங்களோடு ஈசன் பயணிக்க, அங்கே கல்லூரி பேருந்தில் எரிய லட்சுமிக்கோ மனம் எரிந்தது.
நிஜமாகவே எரிந்தது..
‘ஈஸ் மாமா…. ஈசன்…. அப்படின்னு பேர் வச்சா இவன் பெரிய இவனா…?? திமிர் பிடித்தவன்.. எவ்வளோ உதாசீனம்… எவ்வளோ கர்வம்… தான்கிற அகம்பாவம்… இந்த ஈஸ் மாமா பார்த்தா தான் பேசிடனுமா…” என்று நினைத்தவளுக்கு அவளையும் அறியாமல் பழைய நியாபகம்.
அப்பொழுது தான் லட்சுமியின் தந்தை மரணித்த சமயம், அவள் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள். ஈசன் என்ஜினீயரிங் கடைசி வருடம்.. தந்தையின் செல்ல மகளாய் அத்தனை நாட்கள் வீட்டில் சுற்றி வந்தவளுக்கு இன்று அவர் இல்லையென்ற செய்தியே பயங்கரமாய் இருந்தது. ஒரு பாதுகாப்பற்ற உணர்வை அவளுக்கு நிறையவே தந்தது.
லட்சுமியின் அம்மா பேச்சியோ அழுது அழுது ஓய்ந்து போய் கிடக்க, இவள் உண்டாளா உறங்கினாளா என்றெல்லாம் கவனிக்கும் நிலையில் அவர் இல்லை.. அவரை பார்த்துக்கொள்ளவே ஆள் தேவைப்பட்டது. இப்படியான சூழ்நிலையில் மிகவும் தவித்து தான் போனாள் லட்சுமி. அழுது அழுது கண்ணீரும் வற்றி இருந்தது. நாட்கள் செல்ல செல்ல, வீட்டிற்கு வந்திருந்த கூட்டம் குறைய குறைய, தாயும் மகளும் தனித்து இருக்க நேர,
ஈசனின் அப்பா கஜேந்திரன் தான் தன் ஒன்றுவிட்ட தங்கையான பேச்சியிடம் லட்சுமியின் சித்தப்பாவை வீட்டில் சேர்த்துக்கொள்ளுமாறு சொல்ல அவர் சொல்வதும் பேச்சிக்கு சரியென்றே பட்டது.
விவசாயம்.. அது போக நான்கைந்து கடைகள் மற்றும் வீடுகளின் வாடகை, இன்னும் பிற சொத்துக்கள், லட்சுமி மற்றும் பேச்சி பேரில் ஏற்கனவே இருந்த வங்கி கணக்குகள் என்று அனைத்தும் இவர்களுக்கு இருந்தது..
இது போக பொது சொத்தும் இருக்க லட்சுமியின் அப்பா சக்திவேலும் சித்தப்பா வேலாயுதமும் சேர்ந்து தான் பார்த்துகொண்டனர்.. இப்போது சக்திவேல் இல்லாமல் போக ஆண் துணை இல்லாமல் எப்படி தனியே இவர்களை விடுவது கஜேந்திரன் இம்முடிவை எடுக்க, தனி வீட்டில் இருந்த லட்சுமியின் சித்தப்பா வேலாயுதமும் தன் மனைவி முத்தரசியோடும், மகன் மனோஜோடும் அண்ணன் குடும்பத்தாரோடு இணைந்துகொண்டார்.
வீட்டில் மனிதர்கள் கூடவும் சற்றே தனிமை குறைந்தது லட்சுமிக்கு. ஆனால் தந்தையிடம் உரிமையாய் கேட்பது போல் சித்தப்பாவிடம் கேட்க முடியுமா?? தன் வீட்டிலேயே உரிமையாய் எதையும் கேட்க முடியாத சூழல் உருவாக, பேச்சியிடம் அவ்வபோது அழவும் நேர்ந்தது.
“என்ன டி இப்படி எல்லாத்துக்கும் கண்ண கசக்குற.. சித்தப்பா சொல்றத கேட்டு நட… நமக்கு நாளைக்கு ஒண்ணுன்னா செய்றதுக்கு ஆள் வேணாமா…” என்று சொல்லி மேற்கொண்டு வேலைகளை பார்க்க பேச்சி செல்ல, இவளுக்கோ மனதில் ஒரு தனிமை உருவானது.
இத்தனைக்கும் மனோஜ் இவளிடம் நன்றாகவே பழகுவான்.. அக்கா அக்கா என்று இவளிடம் தான் வருவான். ஆனாலும் என்னவோ தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் அத்தனை நாள் அந்த வீட்டில் பவனி வந்தவள் இன்று அனைத்திற்குமே ஒரு தயக்கம் ஒரு யோசனை செய்து நடக்கவேண்டும் என்ற நிலை வர, அதனை சட்டென்று ஏற்றுகொள்ள முடியவில்லை.
இப்படியிருக்க பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வும் நெருங்க, ஏனோ இவளுக்கு மனம் ஒருநிலையில் இல்லை படிக்க. பாலா வீட்டுக்கு வாத்தியாரே வந்து மாலை வேளையில் பாடம் எடுக்க, இவள், ரேவதி எல்லாம் அங்கே சென்று தான் படிப்பர்.
அன்று விடுமுறை தினமென்பதால் மூவரும் சேர்ந்தமர்ந்து படித்துக்கொண்டிருக்க, லட்சும்மிக்கு மனம் ஒருநிலை படுத்தி படிக்கவே முடியவில்லை.. படிப்பில் கவனமில்லாமல் இனம் புரியா ஒரு கலக்கம் வந்து சூழ்ந்தது. கத்தி அழ வேண்டும் போல இருந்தது. அவளின் தந்தை நியாபகம் போட்டு பாடாய் படுத்தியது.. ஒவ்வொரு பரிட்சைக்கும் தன் தந்தை புது பேனா வாங்கித் தருவதும், முதல் நாளே அவளுக்கு பிடித்த உணவை வாங்கி கொடுப்பதும் என்று மகளை அப்படி உற்சாக படுத்துவார் மனிதர்.
ஆனால் இன்றோ… என்ன படிக்கிறாய் என்றுகூட கேட்க ஆள் இல்லை.. பேச்சிக்கு அத்தனை படிப்பறிவும் இல்லை. எதோ மகள் படிக்கிறாள், பள்ளிக்கூடம் செல்கிறாள் என்றளவே அவருக்கு..
புத்தகத்தில் பார்வை பதித்திருந்தவளுக்கு கண்ணீர் கோர்க்க, அக்கண்ணீர் துளிகளோ அவள் புத்தகத்தை தழுவியது. ரேவதியும் பாலாவும் இதை கவனித்து என்னவென்று கேட்க, இவளோ பதிலே சொல்லாமல் எழுந்து தன் வீட்டிற்கு ஓடிவிட்டாள்.
இந்த செய்தி அப்படியே பாலா வழியாக ஈசனிடம் செல்ல, இவர்களில் பெரியவனான ஈசனுக்கு லட்சுமியின் மனநிலை நன்றாகவே புரிந்தது. இரண்டொரு நாட்கள் லட்சுமியை கவனிக்கவும் செய்தான்.
பாலாவிடம் பரிட்சை என்று என கேட்டுக்கொண்டவன், முதல் நாள் மூன்று புதிய பேனாக்களை வாங்கி பாலாவிற்கும் ரேவதிக்கும் லட்சுமி வருவதற்கு முன்னமே கொடுத்தும் விட்டு அவளிடம் இதை சொல்லவேண்டாம் என்றும் சொல்லிவிட்டு, அவள் வந்த பிறகோ,
“லஷ்மி….” என்றழைக்க, இவளும் “என்ன மாமா… ” என்று போய் நின்றாள் கடனே என்று.
சில நொடி ஈசன் அவள் முகத்தை தான் பார்த்தான். எப்பொழுதும் புன்னகை ஒட்டிக்கொண்டு இருக்கும் முகத்தில் இன்று துளியும் சிரிப்பு கூட இல்லை. எதிலும் யாரிடமும் ஒரு பிடிப்பற்ற பாவம் இருக்குமே அதுபோலவே வந்து நின்றாள்.
ஏனோ அவனுக்கு லட்சுமியை காணும் போதெல்லாம் மனதில் ஒரு இறக்கம் சுரந்தது. உடன் வளர்ந்தவள் என்ற பாசமிருந்தாலும் அதனையும் தாண்டிய ஒரு கவனிப்பு அவளிடம் தோன்றத்தான் செய்தது.
அழைத்தும் ஒன்றும் பேசாமல் இருப்பவனை கண்டு, “ஈஸ் மாமா.. எதுக்கு கூப்பிட்டீங்க…” என்று கேட்டவளின் குரலில் அத்தனை சலிப்பு.
அவளது குரலில் தன்னிலைக்கு வந்தவன், “ஹா லஷ்மி… நாளைக்கு எக்ஸாம்ல.. அதுவும் டென்த் வேற… சோ விஷ் பண்ணணும்ல.. இந்தா என்னோட சின்ன கிப்ட்… ஹீரோ பென்… நல்லா எழுதணும்….” என்று பேனாவை நீட்ட, அவளுக்கோ கண்களோடு சேர்த்து முகமும் அப்படியே மலர்ந்தது.
இது நிஜமா?!! என்ற யோசனை இருந்தாலும்.. இது எனக்கா.. எனக்கே எனக்கா.. ஐயோ நம்பவே முடியவில்லை என்ற பாவனைகள் அவள் முகத்தில் மாறி மாறி தோன்ற, இன்னமும் கூட அவன் நீட்டிய பேனாவை வாங்கிடவில்லை.
“ஹேய் லஷ்மி.. என்ன பார்க்கிற.. இது உனக்கு தான்… இந்தா பிடி..” என்று இன்னமும் அவள் முன்னே நீட்ட,
அவளை பார்க்கவே அத்தனை பாவமாய் போனது ஈசனுக்கு. மகிழ்வாய் சுற்றி திரியவேண்டிய வயது, இப்படி தனக்குள்ளேயே சுருண்டு மருகுகிறாளே என்று தோன்றியது.
ஆனாலும் அவளை சகஜமாக்கும் பொருட்டு “பின்ன உனக்கில்லாம இது யாருக்காம்.. லஷ்மி பிடி முதல்ல.. இங்க் எல்லாம் ஊத்திருக்கேன்.. எழுதி மட்டும் பார்த்துக்கோ…” என்று பேனாவை அவள் கரங்களில் திணிக்க,
இத்தனை நாள் மனதில் இருந்த வெறுமை அடியோடு ஓடிப்போக, தனக்கென்று யாருமே இல்லையோ என்ற பயம் பயந்து ஓடிப்போக, அகமும் முகம் விகசிக்க,
“தேங்க்ஸ் மாமா….” என்றாள் இதழில் நடுங்கும் புன்னகையுடன்..
“தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்… நல்லா படிச்சு நல்லபடியே மார்க் எடுத்தா இனி ஒவ்வொரு எக்ஸாம்க்கும் இதே போல ஹீரோ பென் வாங்கித்தருவேன்…” என்று அவனும் மெல்ல சிரித்தபடி கூற,
அதற்கும் “தேங்க்ஸ் மாமா.. தேங்க்ஸ் தேங்க்ஸ்….” என்று குதித்தவள், அப்படியே அவள் வீட்டுக்கும் ஓடிவிட்டாள்.
“ஏ லஷ்மி.. பார்த்து போ.. விழுந்து கிழுந்து வைக்காத…” என்று அக்கறையாய் சொன்ன ஈசனின் குரல் அவளுக்கு எட்டியதோ என்னவோ, அவன் முகத்தில் சிரிப்பு நிறைந்தே இருந்தது. அவளது சிரிப்பு அவனையும் தொற்றிக்கொண்டது போல..
ஊருக்கெல்லாம் லட்சுமி என்றால் இவனுக்கு மட்டும் லஷ்மி.. அது என்னோவோ ‘ட்சு ’ வரவில்லை போல..