என்ன சொல்ல, ஏது சொல்ல, சொல்வதற்கு ஒன்றுமே இல்லையா?? இல்லை சொல்லத் தெரியவில்லையா என்றெல்லாம் தெரியவில்லை லட்சுமிக்கு. அவளை பொருத்தமட்டில் அவள் வாழ்வில் எவ்வித மாற்றமும் இல்லை. சிறப்பாய் போவது போலவும் இல்லை, ஒன்றுமே இல்லை என்பது போலவும் இல்லை.
வாழ்வின் போக்கில் அவளும் ஓடிக்கொண்டே தான் இருந்தாள். பத்தாம் வகுப்பு பரீட்சை முடிந்து, பதினொன்பதாம் வகுப்பில் கணினி பிரிவும் எடுத்து, இதோ அதற்கு அடுத்த ஆண்டும் வந்துவிட்டது.
ஒவ்வொரு பரீட்சைக்கும் ஈசனிடம் இருந்து புது பேனா வந்துவிடும், பேனா மட்டுமில்லை அவ்வபோது ஏதாவது பேசுவான். வெளியே கடை தெருவில் பார்த்தால் ஏதாவது வாங்கி கொடுப்பான்.
அன்றொரு நாள் கூட அப்படித்தான் பள்ளிக்கூடம் விட்டு வரும் போது, பேசிக்கொண்டே வந்ததில் சாலையில் கல் இருந்ததை கவனிக்காது, இடறி கீழே விழுந்தாள் லட்சுமி. ரேவதியும், பாலாவும் பட்டென்று சிரித்துவிட, இவளுக்கோ அவமானமாய் போய்விட்டது.
விழுந்த வலியை விட, அவர்கள் சிரிப்பு கொடுத்த வலி அதிகமாய் இருக்க, கண்ணில் நீர்கோர்க்க உதடு பிதுக்கி நின்றிருந்தாள். சரியாய் அந்தப்பக்கம் வந்த ஈசன் என்னவென்று கேட்க, பாலா சிரித்தபடி சொல்ல, தம்பியை ஏகத்துக்கும் முறைத்தான் ஈசன்.
“உன்கூட வந்தா இதுதான் நீ அவளை பாத்துக்கிற லட்சணமா…??” என்று எகிறிவிட்டு, லட்சுமியை சமாதானம் செய்ய, இப்படியே ஒவ்வொரு முறையும் எதோ ஒரு வகையில் உனக்கு நான் இருக்கிறேன் என்பதை அவளுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தான்.
பதின் பருவம் வேறல்லவா.. ஈசன் அவள் மீது காட்டும் அக்கறையும், அன்பும் பசுமரத்து ஆணிப்போல் லட்சுமி மனதில் பதிந்து போனது.
சும்மாவே பாலா வேறு அண்ணன் அண்ணன் என்று திரிவானா, அதற்கேற்றார் போல ஈசனும் தனக்கான உயரத்தை கூட்டிக்கொண்டு இருந்தான். படித்தது என்ஜினீயரிங் என்றாலும் வேலைக்கு செல்லவெல்லாம் அவனுக்கு இஷ்டம் இல்லை. அதற்காக வெட்டியாக திரியவும் இல்லை.
காடு களனி என்று பார்க்க நிறைய இருந்தது. ஆனால் அதெல்லாம் ஈசனின் தந்தை, தாத்தா சம்பாரித்தது. பரம்பரை சொத்து. அவன் தேடுவது எல்லாம் அவனுக்கான அடையாளம். ஏற்கனவே அவர்கள் வீட்டில் நான்கு பசுமாடுகள் இருந்தது. அதனோடு சேர்த்து இன்னும் பத்து மாடுகள் வாங்கி பால் பண்ணை வைக்க ஏற்பாடு செய்துகொண்டு இருந்தான்.
சிறுவயதில் இருந்தே அவனுக்கு மாடுகள் மீது ஒரு தனி பிரியம் வேறு. ஆகையால் தான் அதை சார்ந்த தொழிலே தேர்ந்தெடுக்க, வங்கியில் கடன் வாங்கி ஏற்பாடு செய்துகொண்டு இருந்தான். இதற்கு அவர்கள் வீட்டில் இல்லாத காசு பணமில்லை. இந்த விசயத்தில் ஈசனுக்கும் அவன் தந்தை கஜேந்திரனுக்கும் மன பிணக்கு வேறு.
“ஏன் நான் தரமாட்டேனா…” என,
“வேணாம்யா… நானே பார்த்துக்கிறேன்…” என்று முடிவாய் சொல்லிவிட்டான்.
கஜேந்திரனுக்கு வட்டி லேவாதேவி. ஈசனுக்கு அதில் துளியும் விருப்பமில்லை. நம்மிடம் என்ன இல்லையென்று இந்த வட்டி தொழில் செய்யவேண்டும் என்பான். அவரோ இது என் தந்தை ஆரம்பித்தது விட முடியாது என்ற பிடிவாதம். முன்பெல்லாம் சக்திவேலும் கஜேந்திரனும் தான் கூட்டாய் இதை செய்தது. அவர் மரணத்திற்கு பின், வேலாயுதம் இணைந்துகொண்டார்.
“வந்து கணக்கு வழக்கெல்லாம் பாரு ஈசா….” என்று கஜேந்திரன் எத்தனை அழைத்தும் அசரவில்லை ஈசன். பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை தான்.
ஆனால் ஈசனுக்கு பிடித்தமானதாகவும் ஒரு விஷயம் இருந்தது. விஷயம் என்பதை விட ஒருத்தி என்று சொல்ல வேண்டும். அனிதா… ஈசனின் ஜூனியர்..
துணிவு, நிமிர்வு, பட்டென்று பதில் பேசும் விதம், அழகு என்று எல்லாமே ஈசனுக்கு அவனையும் அறியாது ஒரு ஈர்ப்பு அவள்மேல் வர, அனிதாவுக்குமே ஈசன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது போல.
காரண காரியம் இல்லாமல் எதுவும் இல்லை என்பது எல்லாம் காதலில் இல்லை போல், சில நாட்களிலேயே இவர்களது காதலும் கை குலுக்கியது. கல்லூரி படிக்கும் போதிருந்தே ஈசன் என்றால் அனைவர்க்கும் ஒரு மரியாதை தான்.
அது அவனாய் உருவாக்கிக்கொண்டது.. குடும்பத்தின் மரியாதை கௌரவத்திற்கும் தாண்டி இது ஈசனுக்கானது என்று அவனே அவனை ஒவ்வொரு நொடியும் செதுக்கிக்கொண்டான்.. காலமும் கை கொடுத்தது… காதலும் கை கொடுத்தது..
கல்லூரி மூன்றாம் வருடத்தில் இருந்து காதல் இதோ இன்னமும் தொடர்கிறது. ஈசன் ஒன்றும் அனிதாவை ஊருக்கும் வீட்டுக்கும் தெரியாமல் எல்லாம் காதலிக்கவில்லை. இதில் என்ன தப்பிருக்கிறது என்ற எண்ணம் அவனுக்கு. ஒருவேளை அந்த வயது தந்த மிதப்போ என்னவோ.
“ஈசா… உங்கய்யா கிட்ட யாரோ வந்து சொன்னாங்களாம்… நீயும் அந்த ஜவுளிக்கடைகாரர் பொண்ணு அனிதாவும் வண்டில வந்தீங்கன்னு…” என்று மரகதம் தயக்கமாய் கேட்க,
“ஏம்மா வந்தா தப்பா….???” என்றான் சலனமே இல்லாமல்..
“இல்லைய்யா…. உங்கய்யா கிட்ட யாரோ….”
“என்ன யாரோம்மா… அய்யா கேட்கிறதுன்னா என்கிட்டே நேராவே கூப்பிட்டு கேட்க வேண்டியது தான..”
“அது… அதில்ல ஈசா…”
“ம்மா… நானும் அனிதாவும் லவ் பண்றோம்.. அவங்க குடும்பம் எல்லாம் உங்க எல்லாருக்கும் தெரியும் தான.. நான் சொல்லும் போது பேசி முடிங்க அவ்வளோதான்…”
மரகதம் அப்படியே வாயை மூடிவிட்டார். அரசல் புரசலாய் இந்த பேச்சு அவர் காதுக்கு வந்தாலும், மனதில் ஒரு நப்பாசை. மகன் அப்படியெல்லாம் செய்திட மாட்டான் என்று. குடும்பம், குளம், அந்தஸ்து என்று மகன் பார்ப்பான் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் காதலில் அதெல்லாம் இல்லை என்பது அவருக்கு தெரியவில்லை போல. இந்த பேச்சு அப்படியே கஜேந்திரனிடம் சொல்ல, முகத்தை சுருக்கினார் அவர்..
“நம்ம கவுரிதி என்ன… நம்ம எங்க?? அவங்க எங்க?? என்னவோ ஜவுளிக்கடை வச்சு இப்ப வசதியா இருக்காங்க.. நமக்குன்னு ஒரு பேர் இருக்கு. தலைமுறைக்கு பேர் சொல்ற அளவு பரம்பரை இருக்கு… ஆனா அவங்க எங்க.. நான் காசு பணம் பத்தி பேசல.. குடும்பத்த பத்தி பேசுறேன்… ஆனா நம்ம வீட்டுக்கு மருமகளா வர்ற தகுதி அந்த பொண்ணுட்ட இல்ல…” என்று மனைவியை முறைக்க,
“இல்லைங்க.. கொஞ்சம் விட்டு பிடிப்போம்.. இப்போ என்ன ஈசனுக்கு இருபத்தி நாலு தான ஆகுது…” என்று தன்மையாய் எடுத்து சொல்ல,
“ஈசன விட்டா பிடிக்க முடியாது அதான் சொல்றேன்…” என்றவர் நேராய் சென்று பேசிய இடம் அனிதாவின் வீடு
ஈசனை ஒரேடியாய் இறுக்கிப் பிடித்தால் அவன் என்ன முடிவெடுப்பான் என்று யோசிக்க கூட முடியாது. திருமணமே முடித்துக்கொண்டு வந்தாலும் வருவான். அவன் அப்படிபட்டவன் தான். ஆகையால் கஜேந்திரன் வேறொரு முயற்சி எடுக்க நினைத்தார்.. அதன் பலனே அனிதாவின் வீட்டில் பேசியது.. கொஞ்ச நாட்களில் அனிதாவின் வீட்டில் எப்பொழுது திருமணம் என்ற பேச்சு தொடங்க, அவளோ ஈசனை பிடித்து நச்சரித்தாள்.
“ஷ்.. கொஞ்ச நாள் பொறு அனி… பேங்க் லோன் வந்திடும்.. பண்ணை ஆரம்பிச்சுட்டா நமக்குன்னு வருமானம் வரும்.. இப்போ என்ன ஏஜ் ஆகுது.. கொஞ்ச நாள் போகட்டுமே.. நீ வேணும்னா வேலைக்கு ட்ரை பண்ணு.. படிச்சிட்டு ஏன் சும்மா இருக்க..” என்று தன் கனவை ஈசன் அவிழ்த்து விட,
அவன் வேலைக்கு போ என்று சொன்னது எல்லாம் மனதில் பதியவில்லை, ஈசன் பண்ணை வைக்க போகிறான் என்பதே மனதில் ஏற, “என்னது,. பண்ணை வைக்க போறியா…??” என்று அதிர்ந்தாள்.
“ஏன் இதை தான முன்னாடிருந்து சொல்லிட்டிருக்கேன்..” என்று சற்று காட்டமாகவே ஈசன் சொல்ல,
“இல்ல.. கொஞ்ச நாள் எங்கயாவது வேலை பார்த்திட்டு… அதுக்கு அப்புறம்..” என்று அனிதா இழுக்க,
“இது சம்பளம் குடுத்த கை.. எவன்கிட்டயும் கை நீட்டி காசு வாங்காது…” என்றான் தீர்மானமாய்.
இதோ நாளையோ, நாளை மறுநாளோ, அவனுக்கு பேங்கில் இருந்து பணம் வந்துவிடும். பண்ணைக்கான மற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயாராய் இருக்கிறது..
இத்தனை நாட்கள் ஜீன்ஸ் பேன்ட்டில் சுற்றியவன் அவ்வப்போது தானாகவே வேட்டிக்கு மாற, அதுவே அவனுக்கு ஒரு பெரிய மனித தோரணை கொடுத்தது. இன்னும் இரண்டொரு நாளில் தன் கனவு நனவாக போகிறதென்ற மகிழ்ச்சியில் இருந்தான்.
ஆனால் அனிதாவின் ரூபத்தில் விதி விளையாடியது.
“எனக்கு ஃபாரின் மாபிள்ளையே கேட்டு வர்றாங்க.. நான் தான் உன்னை லவ் பண்ணிட்டேனே.. எனக்காக கொஞ்சம் நீ மாறக் கூடாத.. கொஞ்ச நாள் நம்ம வெளிநாடு போவோமே.. கை நிறைய ரெண்டுபேருமே சம்பாதிப்போம். அப்புறம் இங்க வரலாம்.. இதுக்கு ஓகேன்னா தான் எல்லாமே…” என்று அவள் இலகுவாய் சொல்லிட
“என்ன சொல்ற அனி..???!!” என்று ஈசன் உறுமினான்..
அவளோ தான் சொன்னதில் உறுதியாய் இருந்தாள். காதலி மனைவியாக வேண்டும் என்றால் இவன் வேறு யாரிடமோ கை ஏந்த வேண்டுமா?? அது ஈசனால் முடியுமா??
ஏன் இந்த வாழ்வில் என்ன குறை?? ஈசனின் பெயரில் இருக்கும் சொத்துக்களே எத்தனையோ. பின்புலம் எப்படி என்று அனைவருக்குமே தெரியும் அப்படியிருக்க இதில் இதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல என்ன இருக்கிறது.
அவனால் முடிந்த அளவு எடுத்து கூறினான். ஆனால் அவளோ முடிவாய் இருந்தாள். வெளிநாட்டு ஆசை அவள் பேச்சிலேயே நன்றாய் தெரிந்தது. ஓரளவுக்கு மேல் இழுத்து பிடிக்க முடியவில்லை. காதலுக்காக இவளிடம் கெஞ்ச வேண்டுமா என்றிருந்தது ஈசனுக்கு. ஆனாலும் விட்டுவிடவும் மனமில்லை.
சரி நேரில் சென்று பேசலாம் என்றால் அதற்கு அவள் வாய்ப்பே அளிக்கவில்லை. ஆனாலும் விடாபிடியாய் அவளை பிடித்து சந்திக்கவும் செய்தான். அவளோ பிடி கொடுத்து பேசவேயில்லை. அவள் சொந்தத்தில் யாரோ வெளிநாட்டு மாப்பிளைக்கு பெண் கொடுத்து இருக்கிறார்களாம், ஆகையால் இவர்கள் வீட்டிலும் ஆசையாம் என்று கதை சொல்ல,
“ஆசை உனக்குன்னு சொல்லு… ” என்றான்.
“ஏன் அதிலென்ன தப்பு.. உங்களுக்கு எப்படி உங்க ஆசையோ அதுபோல எனக்கு இருக்க கூடாதா.. ஏன் நான் சொல்றதுக்காக கொஞ்ச நாள் ஃபாரின்ல போனா என்ன??…” என்று சொல்ல,
இவனுக்கு ச்சே என்றானது.. ஆரம்பத்தில் இருந்து எத்தனையோ முறை சொல்லியிருக்கிறான். அப்பொழுதெல்லாம் சரி சரி என்றுவிட்டு, இப்படி கடைசி நேரத்தில் வந்து கழுத்தருக்கிறாள். முடிவாக அவள் முடிவு என்னவென்று கேட்க, அவளோ தான் சொல்வதை தான் நீ செய்யவேண்டும் என்று சொல்ல, ஈசனின் குணம் அதற்கு இடம்கொடுக்க வில்லை. அவனும் முடியாது என்று சொல்ல, அப்போ இதை இங்கேயே முடித்திடுவோம் என்று சென்றுவிட்டாள்..
எடுத்தெறிந்து பேசிச் செல்பவளை அப்படியே இழுத்து அறையலாமா என்று கூட வந்தது ஈசனுக்கு. ஆனால் இவளிடம் கெஞ்சவேண்டுமா?? என்று மனம் கேட்க, ஈசனுக்கு தன்மானமே பெரிதாய் இருந்தது. எப்படி இவளால் இப்படி ஒரு முடிவை எடுக்க முடிந்தது?? ஈசனை வேண்டாம் என்று ஒருத்தி சொல்வதா??
இதே எண்ணங்களோடு வீடு வந்தவன் மனத்தில் அத்தனை கடுப்பு… கோவம் எல்லாம்.. தன்னைவிட இவளுக்கு பெரிய இவனாய் எவன் வந்துவிட போகிறான். நானும் பார்க்கத்தானே போகிறேன் என்றெல்லாம் மனதில் குமைந்தபடி மாடியில் நடந்துகொண்டு இருந்தவனை
“மாமா….” என்ற லட்சுமியின் உற்சாக குரல் அழைத்தது.
ஒரு நொடி… ஒரே நொடி கண்களை இறுக மூடி திறந்தவன். அவள்புறம் திரும்பாமலேயே “என்ன லஷ்மி…” என்றான்.
“ஹ்ம்ம் நாளைக்கு எங்களுக்கு எக்ஸாம் மாமா…”
“அதுக்கென்ன…??”
அதுக்கென்னவா… இவன் எப்பொழுது வாழ்த்து சொல்லி பேனா கொடுப்பான் என்று காத்திருந்தால் இப்படி சொல்கிறான் என்று ஒருநொடி ‘ஞே..’ என்று முழித்தவள், “இல்ல மாமா… அது….” என்று இழுக்க,
“ம்ம்ச் உனக்கு என்ன வேணும் லஷ்மி.. படிக்காம இங்க வந்து என்ன பேச்சு.. போ….” என்று அவனும் துரத்த, அவளுக்கோ கண்ணீர் கோர்த்துவிட்டது.
மூக்கை உறுஞ்சி அழ ஆரம்பிக்க, அவனுக்கோ எரிச்சலாய் இருந்தது. சுத்தமாய் அவளை தான் இதற்கு முன் எப்படி நடத்தினோம் என்பது எல்லாம் அவன் கருத்திலேயே இல்லை.
“ஏய்.. அறிவில்ல… நாளைக்கு எக்ஸாம்னா படிக்கிற வேலைய பார்க்க வேண்டியது தான.. அதைவிட்டு இங்க வந்து நின்னு அழுதா என்ன அர்த்தம்.. கொஞ்சமாவது படிப்பு மேல கவனம் இருக்கணும்.. எப்போ பாரு பேச்சு பேச்சு பேச்சு மட்டும் தான்.. போ… போய் உருப்படற வழிய பாரு…”
“இல்ல மாமா.. அது… ”
“என்ன என்ன அது?? இப்போ எதுக்கு இங்க வந்த.. சொல்லு?? எதுக்கு வந்த?? உங்களுக்கு எல்லாம் வாய் கிழிய பேசமட்டும் தான் வரும்.. வேறென்ன வரும். மனுஷன் இருக்கிற நிலைமை தெரியாம வந்து அது இதுன்னு பேசிட்டு…” என்று லட்சுமியை காய்ச்சிவிட்டு சென்றுவிட்டான்.
திக் பிரம்மை பிடித்தது போலத்தான் நின்றிருந்தாள் லட்சுமி. இதுவரைக்கும் யாரும். யாருமே அவளிடம் இப்படி பேசியது இல்லை. அழுகை கட்டுக்கடங்காமல் வந்தது..
அதுவும் ஈசன்…. இவனாக தானே வந்தான். ஒவ்வொரு பரீட்சைக்கும் பேனா கொடுத்தான், காணும் போதெல்லாம் அக்கறையாய் பேசினான். இப்பொழுது இவனாகவே இப்படி உதாசீனமாய் பேசினால் என்ன அர்த்தம்?? அழுதபடி வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
ஆனாலும் மறுநாள் பரீட்சைக்கு அவன் வாங்கி கொடுத்த பழைய பேனாவை வைத்து தான் எழுதினாள். யாரிடமும் பேசவில்லை. பரீட்சையை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது ரேவதி தான்,
“லட்சுமி… உனக்கு விஷயம் தெரியுமாடி.. அந்த அனிதாக்கா இருக்குல அது நம்ம ஈசண்ணாவ வேணாம் சொல்லிடுச்சாம்…” என்று பெரிய விஷயம் போல் சொல்ல, இவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
“என்னடி…” என்று சலிப்பாய் முகம் காட்ட,
“ஆமாடி.. அவங்க எப்பவும் பார்த்துப்பாங்கள்ல அந்த அய்யனார் கடை சந்து அங்க தான்… எனக்கு நீ வேணவே வேணாம்னு சொல்லிட்டு போயிடுச்சாம்.. ஈசண்ணா ஒரே கோவம் போல….” என்று தனக்கு தெரிந்த நாலு வரியை அவள் கண் காது மூக்கு வைத்து கூற,
லட்சுமிக்கு நன்றாகவே புரிந்தது, ஆக இந்த கடுப்பில் தான் நேற்று தன்னை அப்படி பேசினானா என்று. நன்றாய் வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
“மாமா நல்லா வேணும்… அந்த அனிதா நினைப்புல நீங்க என்னை எப்படி பேசிட்டீங்க…?? நானா வந்து உங்கக்கிட்ட பேனா கேட்டேன்.. நீங்களா தான குடுத்து பழக்கம் பண்ணீங்க.. நானா வந்து பாசமா பேசினேன்.. நீங்களா தான பேசினீங்க.. இப்போ எவளோ ஒருத்தி உங்கள வேணாம் சொன்னா, அதுக்கு என்னை தூக்கி எரிஞ்சு பேசுவீங்களா… இனி நானும் உங்கட்ட பேச மாட்டேன்.. லட்சுமி என்ன உங்க வீட்டு கிள்ளு கீரைன்னு நினைச்சீங்களா..?? நீங்க இல்லாட்டி எனக்கு ஒன்னும் உலகமே இடிஞ்சு போயிடாது…” என்று மனதினுள் கூறிக்கொண்டவள்,
அன்றிலிருந்து இன்றுவரையும் ஈசனிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. ஏனோ சொல்லமுடியாத ஒரு கோவம், இன்னொருத்திக்காக என்னை உதாசீன படுத்தினானே என்ற எண்ணம் மிக ஆழமாய் அவள் மனதில் பதிந்து போனது.
ஈசனும் ஒன்றும் குறைந்து போகவில்லை. அனிதா விட்டுச் சென்றுவிட்டால் அவன் வாழ்வே இடிந்து போகுமா என்ன?? அவன் நினைத்தது போல ஈசன் பால் பண்ணை ஆரம்பித்து, அதன் பின் ஈசன் கேபிள்ஸ் தொடங்கி, இதோ போன மாதம் கூட ஈசன் சூப்பர் மார்க்கெட் தொடங்கியிருந்தான்.
ஒரு உந்துதல், ஒரு வெறி வாழ்வில் முன்னேறிக்கொண்டே போகவேண்டும் என்று.. அவன் உழைப்பில் ஒரு வேகம் இருந்தது.. வீட்டில் தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டான். அத்தனை எளிதில் யாரையும் நெருங்க விடுவது இல்லை. அவன் தம்பியை தவிர..