“ஹா ஹா… அண்ணா.. சத்தியமா சொல்றேன்ணா… உன்னால மட்டும் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும்..” என்று பாலா சத்தமாய் சிரிக்க, தம்பியின் சிரிப்பு லேசாய் தொற்றியதோ என்று ஈசனும் மெல்லிசாய் புன்னகைக்க, அவர்களின் எதிரே நின்றிருந்த அம்மூவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
இதற்கு ஈசன் இன்னும் நான்கு அடிகூட அடித்திருக்கலாம் என்றே தோன்றியது. மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை தொல்லை செய்தவர்களை மறுநாள் விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் வரவும் சொல்லியிருந்தான் ஈசன். அது போல் அவர்களும் வந்து நிற்க, அவன் அவர்களுக்கு சொன்ன முதல் வேலை மாட்டு கொட்டகையை சுத்தம் செய்வது. கேட்டதும் அதிர்ந்து தான் போனார்கள்..
“அண்ணா….!!!” என்று அதிர்ந்து விழிக்க,
“மாடெல்லாம் இப்போதான் மேய்ச்சலுக்கு போயிருக்கு.. வர்றதுக்குள்ள எல்லாம் சுத்தமா இருக்கணும்…” என்றவன் அவர்களை கொட்டகைக்குள்ளே விட்டு கதவையும் அடைத்துவிட்டான்.
இதற்கு அன்றே அவன் காலில் விழுந்து ஒரேதாய் மன்னிப்பு கேட்டிருக்கலாம். இனி ஈசன் பக்கமும் சரி அவன் மாடுகள் பக்கமும் சரி பார்வை கூட படக்கூடாது என்றெண்ணியபடி, கொட்டகை முழுவதும் சுத்தம் செய்து வைக்கவும், மேய்ச்சலுக்கு போன மாடுகள் வந்து நிற்கவும் சரியாய் இருந்தது..
“அண்ணா நீங்க சொன்னது மாதிரி எல்லாம் சுத்தம் செஞ்சிட்டோம்….”
“அப்படியா.. இதுமட்டும் தான் வேலைன்னு சொன்னேனா…??” என்று சந்தேகமாய் புருவம் உயர்த்த, அவர்களோ கெஞ்சலாய் பார்த்தனர்.
“என்னங்கடா பாக்குறீங்க.. மாடு போகும் போது வண்டிய குறுக்க விட்டு, அது பயந்து கத்துரத பார்த்து ரசிக்க முடிஞ்சதுல.. உடம்புல கொழுப்பிருக்க போயிதான அதெல்லாம் செய்ய தோணுது… ” என்று இரண்டு அடி ஈசன் முன்னே வைக்க,
“இல்லண்ணா…” என்று அவர்கள் பின்னே நகர்ந்தனர்.
“ம்ம்…” என்று அவர்களை பார்த்தபடி, “முத்து…” என்றழைக்க, முத்துவும் வேகமாய் ஓடிவந்தான்..
“புதுசு தான்… வேலைக்கா என்னன்னு அடுத்து இவனுங்க நடந்துக்கிறத வச்சு தான் இருக்கு…” என்றவன், “முத்து சொல்றதை கேட்டு ஒழுங்கா செய்யணும்.. வேலை முடியவும் வந்து பாருங்க…” என்றுவிட்டு சென்றுவிட்டான்.
முன்னை விட இப்போது மாடுகளின் எண்ணிக்கை கூடியிருந்தது.. முத்துவுடன் சேர்ந்து இன்னும் இருவரும் தான் இவ்வேலையை செய்வர்.. இன்று இவர்களுக்கு ஒரு பாடம். அப்படி அனைத்து வேலைகளையும் முடித்து வந்து நின்றவர்களை பார்த்து தான் பாலா அப்படி சிரித்தது.
“அண்ணா… நீ இவனுங்கள வரச்சொல்லும் போது கூட நான் என்னவோன்னு நினைச்சேன்.. ஆனா இப்படி ஒரு வேலை குடுப்பன்னு நினைச்சே பார்க்கலை…” என்று சொல்லி மீண்டும் சிரிக்க, எதிரே நிற்பவர்கள் பல்லை கடித்து நிற்கவேண்டி இருந்தது.
“இனிமே மேய்ச்சலுக்கு போற மாட ஏதாவது செய்வீங்களா???” என்று ஈசன் அதிகார தொனியில் கேட்க,
“இல்லண்ணா… இல்லண்ணா…” என்று வேகமாய் மண்டையை உருட்டினர் அம்மூவரும்.
“ம்ம்… இனிமே உங்க வால் நீண்டுச்சு.. ஆயுசு முழுக்க இங்க வேலை பார்க்கணும்…” என்றவன் அவர்களிடம், “இது நீங்க வேலை செஞ்சதுக்கு சம்பளம்…” என்று ரூபாய் நோட்டுகளை நீட்ட, அப்படியே அனைவரின் பார்வையும் மாறிவிட்டது.
இது தான் ஈசன்… எந்த ஒரு விசயத்திற்கும் அவனிடம் தக்க சன்மானம் உண்டு.. ஆனால் அது விஷயங்களை பொறுத்து..
இந்த கதையை எல்லாம் பாலா ரேவதியிடமும், லட்சுமியிடமும் சொல்ல, ரேவதி வாய் பிளந்து தனது அண்ணன் பெருமையை கேட்க, லட்சுமியோ “ஆமா இவனுக்கு வேற வேலை இல்ல.. இவன் அண்ணனுக்கு வேற பொழப்பில்ல…” என்ற பாவனையில் நின்றிருந்தாள்.
ஈசனது சூப்பர் மார்கெட்டில் தான் மூவரும் நின்று கதையடித்தது. எதோ வாங்கவேண்டும் என்று ரேவதி தான் லட்சுமியை கடைக்கு இழுத்து வந்திருந்தாள்.
“ஏன்டி இந்த ஊர்ல உங்க நொண்ணன் கடைய விட்டா வேற கடையே இல்லையா??” என்றபடிதான் லட்சுமியும் இங்கே வந்தாள்.
இன்னமும் கூட லட்சுமிக்கு அந்த வலி அப்படியே இருந்தது. காரணம் அவளறியவில்லை. அவன் சொன்ன சொற்களின் வடு மாறவில்லை, மறையவில்லை மறக்கவும் இல்லை. ஆகையால் தான் ஒவ்வொரு முறையும் ஈசனை காணும் போதெல்லாம் முகம் திருப்புவதும், அவனாய் ஏதாவது பேசினால் மௌனம் காப்பதுமாய் இருந்தாள்.
ஈசனை பொருத்தமட்டில் அதெல்லாம் மறந்த ஒன்று.. சொல்லபோனால் இப்படியெல்லாம் நடந்ததா என்று கூட அவனது நியாபகத்தில் இருக்காது.. இவளை பொருத்தமட்டில் அதெல்லாம் மறக்கமுடியாத ஒன்று..
“ஏன்டி லட்சுமி.. ஈசண்ணா பத்தி பேசுனாலே உன் மூஞ்சி இப்படி மாறுது…” என்று ரேவதி கேட்க,
“நீயும் இவனும் தான் வேற வேலையில்லாம உளறிக்கிட்டு இருக்கீங்க.. எனக்கு வேற வேலையில்ல பாரு…” என்று நொடித்தாள்.
லட்சுமி இப்படித்தான். பிடித்தம் பிடித்தமில்லை என்பதை அப்பட்டமாய் காட்டும் ரகம். ஈசனோ அதற்கு நேர்மார். அதுவும் அனிதாவின் சங்கதிக்கு பிறகு அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதே யாரும் அறியாத ஒன்று. உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டும் வீடு வருவதால் அவன் என்ன நினைக்கிறான் என்பதெல்லாம் ஒருத்தருக்கும் புரியவில்லை. புரியவில்லை என்பதனை விட ஈசனிடம் எதுவும் கேட்கும் தைரியம் யாருக்குமில்லை. ஏனெனில் அனிதாவுடனான முறிவு அனைவரும் அறிந்த ஒன்று.
மரகதம் கூட மகனிடம் எதுவோ கேட்க வர, “நீங்க இதுக்குதானே ஆசை பட்டீங்க.. நடந்திடுச்சு சந்தோசமா இருங்க..” என்று முடித்துவிட்டான்.
கஜேந்திரனும் ஈசனிடம் இதை பற்றி யாரும் இனிமேல் பேசவேண்டாம் என்று சொல்லிவிட, தனக்குள்ளே அனைத்தையும் புதைத்துக்கொண்டான் ஈசன்..
ஆனால் லட்சுமியோ கண்ணாடி போன்றவள், நீ சிரித்தால் நானும் அப்படியே. நீ எதுவோ அதையே நானும் பிரதிபலிப்பேன் என்று, ஈசனின் அன்றைய உதாசீனம் அவளை இன்றளவும் அவனை உதாசீனப் படுத்த வைத்தது. உன்னை உதறி சென்ற ஒருத்திக்காக என்னை நீ நோகடித்தாயே என்ற எண்ணம் வேரோடி போனது அவள் மனதில்.
பாலாவிற்கும், ரேவதிக்கும் இவர்களுக்குள் நடந்தது எதுவும் தெரியாது. ஆனாலும் காரணமில்லாமல் லட்சுமியும் எதுவும் செய்யமாட்டாள் என்று தெரியுமாதலால் இவர்கள் விசயத்தில் எதுவும் தலையிடுவது இல்லை.
இருந்தாலும் அன்று பாலா, “ரொம்பதான் லட்சுமி… அப்புறம் எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா இப்படியெல்லாம் கழுத்த திருப்ப முடியாது ஆமா…” என்றான் நக்கலாய்..
“ஏய் என்னடா…” என்று ரேவதி கேட்க, லட்சுமியும் இவன் என்ன சொல்கிறான் என்பது போல் பார்த்தாள்.
ஏனெனில் அன்று காலை தான் பேச்சியும், முத்தரசியும் லட்சுமியின் திருமணம் பற்றி பேசிக்கொண்டு இருந்தது காதில் விழுந்தது. அதனையொட்டி பாலாவும் இப்படிச் சொல்ல, லட்சுமி கேள்வியாய் பார்த்தாள்..
“லூசு… சொல்றதை முழுசா சொல்லு…” என்று ரேவதி சொல்ல,
சரியாய் அதே நேரம் ஈசனும் அங்கே வர, அவர்களது பேச்சும் அப்படியே நின்றுபோனது. மூவரையும் ஒருசேர பார்த்தவனின் விழிகள் லேசாய் ஒரே நொடி லட்சுமியிடம் தங்கி தேங்கி நகர்ந்ததுவோ என்று தோன்றியது. வழக்கம் போல லட்சுமி முகத்தில் ஒரு காட்டம் தெரிய,
“பாலா…” என்ற ஈசனின் குரலிலும் மிளகாய் நெடி தான்.
“அண்ணா…” என்று பாலா முன்னே நகர, ரேவதியும் “அண்ணா இந்த சாமானெல்லாம் வேணும்னு அம்மா சொல்லி விட்டுச்சு…” என்று ஒரு லிஸ்ட்டை நீட்ட,
“இதை என்கிட்டே குடுக்கிறதுக்கு என்னவாம்…” என்று பாலா முறைத்தான்.
“பேசிட்டு இருந்ததுல மறந்தே போச்சு…” என்று ரேவதி இளிக்க, இத்தனை பேச்சிற்கும் அங்கே லட்சுமி அமைதியாய் நின்றிருந்தாள்.
‘ஈஸ் மாமா கேபிளுக்கு போறத பார்த்துட்டு தான ரேவதி கூட இங்க வந்தேன்.. இப்ப எதுக்கு இங்க வந்தாங்க..?? இந்த கிறுக்கு பைய பாலா வேற எதோ மருமக அது இதுன்னு சொல்லிட்டு இருக்கான்….என்ன நடக்குது…’ என்று தன் கழுத்து சங்கிலியை வாயில் வைத்து கடித்தபடி யோசிக்க, ஈசனின் பார்வை நொடிக்கு ஒருமுறை அவளை தான் தொட்டு மீண்டது.
“நிக்கிறா பாரு… பண்ணைக்கு பால் வாங்க வருவா… அந்த படம் போடு இந்த படம் போடுன்னு கேபிளுக்கு போன் செஞ்சு சொல்லுவா… இங்கயும் வருவாளாம்… ஆனா பேசுனா பேச மட்டும் மாட்டாளாம்… கொழுப்பு.. மாமா மாமான்னு இளிச்சிட்டு வந்ததெல்லாம் மறந்திட்டா போல…”என்றெண்ணியபடி அவன் நிற்க, பாலா அவனிடம் பேசியது எல்லாம் காதில் விழவே இல்லை.
அங்கே மனோஜும் வந்தவன், “அக்கா… பெரியம்மா உன்னை கூப்பிட்டு வர சொல்லிச்சு..” என, லட்சுமியும் மற்றவர்களை பார்த்தபடி,
“நான் கிளம்புறேன்…” என்றுவிட்டு நகர, இம்முறை ஈசன் முகத்தை திருப்பிக்கொண்டான்.
ஆனாலும் வாசல் வரைக்கும் சென்ற லட்சுமி மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்க, ஈசனும் பார்த்துகொண்டு தான் இருந்தான். இது இவர்களுக்குள் வழக்கமாய் நடக்கும் ஒன்று. ஒவ்வொருமுறை முகத்திருப்பலுக்கும் பின்னே இப்படி அவளும் திரும்பி பார்ப்பாள், அவள் பார்ப்பதை ஈசனும் காண்பான்.. அவள் திரும்புவாள் என்று அவனுக்கும், அவனும் பார்பான் என்று இவளுக்கும் மிக நன்றாகவே தெரியும்..
எப்போதும் பாலாவும் ரேவதியும் இதை பெரிதாய் எடுப்பதில்லை. ஆனால் இன்றோ பாலாவின் பார்வை சற்றே மாறித்தான் இருந்தது.
என்னவோ ஈசனுக்கு ஒரு அளவுக்கு மேல் லட்சுமியிடம் வழிய சென்று பேச பிடிக்கவில்லை. வேறு யாராவது இப்படி செய்தால் நடக்கும் கதையே வேறு. ஆனால் லட்சுமியிடம் அப்படியெல்லாம் கோவம்கொள்ள முடியவில்லை. ஈசன் வேண்டுமானால் லட்சுமியை சிறு பெண் என்று நினைத்திருக்கலாம், ஆனால் அவளுக்கும் வயது இருபத்தியிரண்டு ஆகிவிட்டதே.. ஆகையால் திருமண பேச்சும் தொடங்கிவிட்டது..
பேச்சி மகளிடம் மாப்பிள்ளை பார்க்கவா என்றெல்லாம் கேட்கவில்லை. நாம் சொன்னால் மகள் சரியென்று சொல்வாள் என்ற நம்பிக்கை. லட்சுமி வீட்டில் மட்டுமில்லை, ஈசனின் வீட்டிலும்.
அன்றிரவு உண்ணும் பொழுது கஜேந்திரன் ஈசனிடம், “ஈசா…” என்று பேச்சை தொடங்க,
“சொல்லுங்கய்யா…” என்றான் அவனும்.
“உனக்கு ஒரு கல்யாணம்….” என்று அவர் தொடங்க,
“வேண்டாம்யா…” என்று முடித்திருந்தான்.
கையில் எடுத்த உணவை வாய்க்கு கொண்டு செல்லாது கஜேந்திரன் ஈசனையே பார்க்க, ஈசனோ தனக்கு இப்பொழுது உண்பது மட்டும் தான் வேலை என்பது போல் இருந்தான். மகன் செய்வது கணவருக்கு கோவத்தை கொடுக்கும் என்று தெரிந்து, மரகதம் கலவரமாய் பார்க்க,
கஜேந்திரன், “இது தான் உன் முடிவா ஈஸா…” என, பார்வையை மட்டும் தன் தந்தையை நோக்கி உயர்த்தியவனின் கண்களில் என்ன இருந்ததோ, நிச்சயம் அப்படி ஒரு பார்வையை யாராலும் எதிர்கொள்ள முடியாது.
ஆனால் கஜேந்திரன் அவனை பெற்றவர் அல்லவா?? தீர்க்கமாய் அவரும் ஈசனை தான் நோக்கினார்.
“ஆமாங்கய்யா…” என்றவனின் குரலிலும் அதே தீர்க்கம் இருக்க, ஒருநொடி தன் மனைவியை நோக்கியவர், “ம்ம்…” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
அவர் மனதில் என்ன இருக்கிறது, இவன் மனதில் என்ன இருக்கிறது என்றெல்லாம் யாருக்கும் தெரியவில்லை.. இதற்குமேல் விதி என்ற ஒன்று இவர்களை வைத்து என்ன செய்ய காத்திருக்கிறது என்று யாருக்குமே தெரியாதே..
மரகதம் செய்வதறியாது கணவர் போன பக்கமும், ஈசன் முகத்தையும் நோக்க, பாலாவும் அதையே தான் செய்துகொண்டு இருந்தான்.
‘கல்யாணம்…’ இந்த ஒரு சொல் ஈசனுக்குள் பல நியாபகங்களை கிளப்பிவிட்டு இருந்தது.
‘அனிதா…’ அவனை பொறுத்தமட்டில் அவன் காதல் நிஜம் தான். உண்மையாய் பழகினான். அனிதாவை திருமணம் செய்யும் முடிவில் எவ்வித மாற்று கருத்தும் அவனுக்கு இருந்தது இல்லை. ஆனால் அவள் இப்படி பணம்… பகட்டு.. பந்தா இந்த மோகத்திற்காகவா அவனை தூக்கி எறிந்தாள் என்று இன்னமும் கூட அவனுக்கு நம்ப முடியவில்லை.
என்ன இல்லை அவனிடம்???
எதோ ஒரு ஊரில், கார் பங்களா என்று வசதியாய் வாழ்வதை விட, சொந்த ஊரில், அதுவும் பிறந்து வளர்ந்த ஊரில், சொந்த பந்தங்களோடு, அவர்களின் கண் முன்னே உயர்ந்து நல்ல நிலையில் வாழ்வது எத்தனை அழகானது. அதை தானே ஈசனும் விரும்பினான். ஈசனை நிஜமாகவே அனிதா விரும்பியிருந்தால் அவனது விருப்பமே அவளது விருப்பமாக அல்லவா ஆகியிருக்கும்.
இதோ அவள் ஆசைப்பட்டது போலவே வெளிநாட்டு வாழ்வு தான் அவளுக்கு. ஆனால் ஈசனுக்கோ இன்னும் அந்த வடு மாறவில்லை.
தனியாய் நிற்பது அவனல்லவா??
ஏனோ அதன் பிறகு காதல் கல்யாணம் என்பதில் எல்லாம் விருப்பமே இல்லாமல் போய்விட்டது. அவனது முழு கவனமும் தொழில் தொழில் தொழில் மட்டுமே.
முதல் வருடம் பால் பண்ணை, அடுத்த ஆண்டு கேபிள்ஸ், இதோ இந்த வருடம் சூப்பர் மார்கெட் என்று அடுத்தடுத்து முன்னேற, அதுவும் தன் சொந்த உழைப்பில் முன்னே வர, ஈசனுள் ஒரு கர்வம் இருக்கத்தான் செய்தது. அது அவன் உழைப்பு கொடுத்த கர்வம்.
அந்த கர்வமே அவனை பிறரிடம் இருந்து சற்று வித்தியாசப்படுத்தி காட்ட, பெற்றவர்களுக்கு தன் மகனது முன்னேற்றம் கண்டு பேருவகை என்றாலும், அவனும் குடும்பம் குழந்தை என்ற இருந்தால் தானே வாழ்வு முழுமையடையும் என்றே விரும்பினர்.
ஆனால் ஈசனின் விருப்பம்?? அவனே அறியாத ஒன்று..
ஏதேதோ எண்ணங்கள் எல்லாம் மனதில் உலா வர, கைகளை பின்னே கட்டியபடி மொட்டைமாடியில் உலாத்திக்கொண்டு இருந்தான். உறக்கம் வருவதாக இல்லை.
இத்தனை நாள் உடல் அலுப்பில், வந்து படுத்ததுமே கண்கள் சொருக உறங்கும் ஈசனுக்கு இன்று ஏனோ அது முடியாமல் போனது. ஈசனை போலவே இன்னொரு ஜீவனும் தன்னுறக்கதை தொலைத்து ஜன்னல் வழியே வானில் பளீரிடும் நிலவை பார்த்துகொண்டு இருந்தது..
லட்சுமி.
பேச்சி அழைப்பதாய் மனோஜ் வந்து அழைத்ததும் சென்றவள் கண்டது தன் அன்னையின் மகிழ்ந்த முகமே.. பல வருடங்கள் கழித்து பேச்சியின் முகத்தில் இப்படி ஒரு புன்னகை.
“என்னம்மா சிரிப்பு பலமா இருக்கு…” என்றபடி வந்த மகளை கண்டு நெட்டி முறித்தார் பேச்சி.
“மனசு நிறைஞ்சு இருக்குடி அதான்..” என்று அடுத்தநொடி அவளின் திருமண பேச்சை பற்றி கூற, அவளுக்கோ இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்தாலும் இவ்விசயம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. படிப்பு முடிய இன்னும் ஆறு மாதம் இருக்கே என்று கூட சொல்லி பார்த்தாள்.
“அது என்னவோ வீட்ல இருந்துக்கிட்டே செய்யலாம்னு மனோஜ் பைய சொன்னான்…” என்று பேச்சி மனோஜை காண, ப்ராஜெக்ட்டை தான் அவன் சொல்லியிருக்கிறான் என்பது புரிய,
“அதுக்கென்ன தாரளாமா போயிட்டு வா..” என்றவர் மேலும் மேலும் பேச, லட்சுமியோ பேசா மடந்தையாகி போனாள்.
‘திருமணமா?? தனக்கா… இந்த பாலா வேற எதுவோ சொன்னானே..’ என்று யோசித்தவளுக்கு, ஒன்றும் தெரியவில்லை.
நடக்கும் என்று தெரிந்த விஷயம் நாம் எதிர்பாராத நேரத்தில் நடக்கும் போது, அது நமக்கு அதிர்ச்சியைத்தானே கொடுக்கும். அப்படிதான் ஆனது லட்சுமிக்கும்.
தன்னறையில் விளக்கை கூட அமர்த்தாமல், ஜன்னல் திண்டின் மீதேறி அமர்ந்து வானை நோக்கியவளுக்கு, அந்தபக்கம் மொட்டை மாடியில் யாரோ நடப்பது தெரிய, இந்நேரத்தில் யார் என்பது போல கண்களை கூர்மையாக்கி அவ்விருட்டில் யார் நடப்பது என்று பார்க்க,
ஈசனும், அத்தனை நேரம் நடந்துகொண்டு இருந்தவன் அப்பொழுது தான் கவனித்தான் லட்சுமியின் அறையில் விளக்கு எரிவதை. இந்நேரம் வரை என்ன செய்கிறாள் என்ற எண்ணத்தில் அவனும் லேசாய் அப்பக்கம் பார்வையை திருப்ப, அவளும் அதே நேரம் இவனை காண,
ஈசன் தன்னை காண்கிறானா என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை, அவன் தான் இருட்டில் இருந்தானே. ஆனால் அவன் தன்னறை பக்கம் நோக்கி நிற்பதே அவன் பார்க்கிறான் என்று உணர்த்த, தன் பார்வையை விளக்க வேண்டும் என்று முயற்சித்தவளுக்கு அது முடியாமலே போனது.
லட்சுமி வெளிச்சத்தில் அமர்ந்ததால் அவள் பார்ப்பது நன்றாகவே ஈசனுக்கு தெரிய, ‘எப்போ பார் இப்படி ஒரு பார்வை…’ என்றெண்ணியவன் தன் கண்களை நகர்த்த முயல, ஏனோ நினைத்தை சாதிக்கும் அவனுக்கும் அது முடியாமல் போனது.