யுவாவின் தங்கை ஜானவியின் மூத்த மகள்தான் சம்யுக்தா. ஐந்தேகால் அடி உயரத்தில், பாலில் ரோஜாவைக் கலந்த வர்ணத்தில் ஜானுவின் அழகோடு, அவளின் தைரியத்தையும், குறும்பையும் கூட அன்னையிடமிருந்து பறித்துக் கொண்டு பிறந்தவள் மருத்துவத் துறையில் இருக்கும் அன்னையைப் பார்த்து வளர்ந்ததாலும், அவர்கள் கிராமத்திற்கு மருத்துவர்களின் தேவை அதிகம் என்று உணர்ந்ததாலும் வேண்டி விரும்பி மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்து தற்சமயம் இறுதி வருடத்தில் கால் பதித்திருப்பவள் ப்ரித்திவிராஜை விட பத்து மாதங்கள் முன்னேயே பூமியைப் பார்த்தவள்.
அப்படியே தங்கையை அச்சில் வார்த்தது போல் இருக்கும் சம்யுவின் மேல் யுவாவிற்கு மட்டுமல்லாது அவ்வீட்டில் அனைவருக்குமே அளவு கடந்த அன்பும் பாசமும் இருக்க, அவர்களைப் போலவே மாமன்களின் குடும்பத்தாரிடம் அளவில்லாத நேசம் வைத்திருப்பவளுக்கும் அன்னை தந்தையின் வார்த்தைகள் கூட இரண்டாம் பட்சம்தான்.
மாமன்களின் வீட்டிற்கு வருகை தராது சம்யுவின் ஒரு நாள் கூட அவள் வாழ்வில் இருந்ததே இல்லை.
குளிக்கவும் தூங்கவும் மட்டுமே அவள் வீடு என்பது போல் காலை எழுந்ததும் குளித்து உடைமாற்றிவிட்டு புத்தகப் பையோடு மாமன் வீட்டிற்கு வந்து விடுபவளுக்கு மூனுவேளை உணவு டீ காபி எல்லாமே அவர்கள் வீட்டில் தான்.
மீண்டும் உறங்குவதற்கு மட்டுமே அவளது வீட்டிற்குச் செல்பவளுக்கு மாமன் மகனாய், உறவினனாய், வகுப்புத் தோழனாய், நலம்விரும்பியாய், அவள் நினைத்ததை முடிக்கும் அன்பனாய், அவளை அரவணைக்கும் நண்பனாய் நொடியும் விலகாது அவளுடனே இருப்பவன் யுவாவின் மகன் ப்ரித்திவிராஜ் தான்.
அவளை விட மூன்று வயது மூத்தவனான நவீனிடமும் மாமன் மகனாக அன்பும் பாசமும் கொண்டிருந்தாலும் சில மாதங்கள் இடைவெளியில் பிறந்ததாலோ சிறுபிள்ளையில் இருந்து ஒன்றாகவே வளர்ந்து படிப்பிலும் கூட பிரிவினை இல்லாது இருப்பதாலோ ப்ரித்திவிக்கும் சம்யுவிற்கும் வரையரைக்குள் அடங்காத தோழமையும் நெருக்கமும் அவர்களையும் அறியாமலே அவர்களிடம் வேரூன்றி விட்டிருக்க, அவர்களின் அந்தப் பிணைப்பு அவர்களைச் சூழ்ந்து இருக்கும் உறவுகளின் சந்தோசத்தையும் கூட இன்னும் இன்னும் மெருகேற்றிக்கொண்டு தான் இருந்தது.
நீலநிற கம்பளம் விரிக்கப்பட்ட மாடிப்படிகளில் தடதடத்து ஏறியவள் வெறுமனே சாத்தப்பட்டிருந்த ப்ரித்திவியின் அறைக்குள் நுழைந்து கட்டிலை நெருங்க, அவனோ தலைமாட்டில் காலை வைத்து கைகள் இரண்டும் படுக்கையில் பரத்தியவாறு காலை நேரத்தின் சுகமான நித்திரையில் இருந்தவன் “கர் கர்” என்ற குறட்டையையும் சப்தமாக வெளியேற்றினான்.
அதைப் பார்த்து கடுப்பாகிய சம்யுவோ, “விடுஞ்சு எவ்ளோ நேரம் ஆச்சு இன்னும் என்னடா தூக்கம்?. எந்திரிடா மங்க்கி” என்று குவளையில் இருந்த நீரை எடுத்து அவன் மேல் கவிழ்க்க…
அதில் அடித்துப் பிடித்து எழுந்து கண்களைக் கசக்கியவன் கையில் குவளையோடு நின்ற சம்யுவைப் பார்த்து விட்டு, “அடிங்க… இப்போ எதுக்குடி என்மேல தண்ணிய ஊத்துன குந்தாணி” என்று கட்டிலை விட்டு இறங்கி அவளை அடிப்பதற்காகத் துரத்தினான்.
அவளும், “இப்போ மணி என்ன தெரியுமா? உன்னால மாமா கீழ எவ்ளோ டென்ஷனா இருக்காங்க நீ இங்க ஹாயா தூங்கிட்டிருக்க. கும்பகர்ணா… கும்பகர்ணா” என்று பதில் கொடுத்தபடியே கட்டிலைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்க…
அவனும், “என்னவாம் அந்த காட்பாதருக்கு?. அவரு டென்ஷன் ஆகாம இருந்தாதான ஆச்சரியம்” என்று தந்தையை வாரியபடி அவள் ஜடையைப் பற்றி இழுத்திருந்தான்.
அதில், “ஆ ஆ ஆ விடுடா பப்பல்லோ” என்று கத்திவிட்டு மீண்டும் விலகி ஓடியவள், “எங்க மாமாவ டென்ஷன் ஆக்குறதே நீதானடா. நேத்து நீ எக்ஸாம் கட்டடிச்சிட்டு எங்கடா போன. அதான் மாமா கோவமா இருக்காங்க. நவீன் மாமாலாம் எவ்ளோ சமத்து. அவங்களைப் பாத்தாச்சும் கத்துக்கோடா டாங்கி” என்று ஏகத்துக்கும் திட்டியவளை…
“காலைல தூங்குற சுகமே தனிசுகம். அதக் கெடுத்துவிட்டுப் பேச்சா பேசுற… உன்ன” என்று ஒரே தாவாகத் தாவி இழுத்து கட்டிலில் தள்ளி அவள் செய்தது போலவே குவளையில் மீதமிருந்த நீரை அவள் மேல் ஊற்றிவிட்டு படுக்கையில் அமர்ந்தவன், “ஐயா எங்க போனேன்னு தெரிஞ்சா
நீ எனக்கு கோவில் கட்டிக் கும்மிடுவடி குந்தாணி” என்று தலையணைக்கடியில் இருந்த ஒரு உரையை எடுத்தான் ப்ரித்திவ்.
“எக்ஸாம் முடிச்சி வந்து நான் உன்ன எங்கெல்லாம் தேடுனேன் தெரியுமா?” என்றும் முகம் கூம்பச் சொல்ல…
“நீ தேடுனது மட்டுமில்ல எதுக்கு தேடிருப்பன்னு கூட எனக்குத் தெரியுமே மச்சி” என்று சட்டை அணியாது இருந்ததால் உள் பனியனை தூக்கிவிட்டுக் கொண்டவன் கையில் இருந்த உறையையும் அவள் முன்னே ஆட்டி ஆட்டிக் காண்பித்தான்.
அதில் ஆர்வம் பெருக அவனைப் பார்த்தவளும், “என்னடா சொல்ற? இது என்ன ப்ரித்திவா?” என்று அந்த உறையைப் பறிக்க முனைய…
“மேடம் இதுக்குத்தான என்னத் தேடுனீங்க. நேத்து காலேஜ் போறப்போவே நான் போஸ்டர பாத்துட்டேன். ஏ ஆர் ரஹ்மான் லைவ் சிங் இன் திருநெல்வேலி நேரு ஆடிட்டோரியம். வர்ற சண்டே 6 pm” என்றும் சொன்னான்.
அதைக் கேட்டு விழிகளை விரித்தவளோ, “அப்போ டிக்கட் வாங்கிட்டியா திவா?” என்று கூச்சலிட்டு அவனை நெருங்கியவளிடம் இப்பொழுது மறுக்காமல் உறையை நீட்டியவன்…
“ய்ய்யா மச்சி…” என்று கண்ணடித்துச் சிரித்தான் ப்ரித்திவிராஜ்.
வேகமாக உறையை வாங்கி பிரித்து அவன் கூற்றை உறுதி செய்து கொண்டவள், “ஹே தாங்க்ஸ்டா திவா… தங்கியூ சோ மச்டா. இத மொதோ அந்த மொன்னமூக்கி மகிளாட்ட காட்டணும்டா” என்று அவன் கையை பற்றி மழலையாய் ஆர்ப்பரிப்பு செய்தவளின் கையை எடுத்து தன் தோள் மேல் வைத்தவாறே “ம்ம்ம்ம்ம்ம் காட்டு காட்டு” என்றவன், “அப்றம் உன் தாங்க்ஸத் தூக்கி அந்த வேஸ்ட் பின்ல போட்டுட்டு இந்த சோல்டர கொஞ்சம் அமுக்கி விடு நேத்து செம்ம கூட்டம் டிக்கட் வாங்குறக்குள்ள போதும் போதும் ஆகிடுச்சு. உடம்பெல்லாம் ஒரே வலிடி” என்று சொன்னவனுக்கு இதழ் நிறைந்த புன்னகை ஒன்றை பரிசளித்தவளும் மறுப்பு சொல்லாது பிடித்து விடத் தொடங்கினாள் அவன் தோள்களை.
இது அவ்வப்பொழுது நடப்பது தான் என்பது போல் சற்று முன்னர் அவனைத் திட்டியதற்கும் சேர்த்து அங்கே இங்கே என்று அவன் காட்டிய இடங்களை எல்லாம் பிடித்து விட்டவள் ஏதோ தோன்றியவளாய், “ஆனாலும் இந்த டிக்கட்க்காக நீ எக்ஸாம் கட்டடிச்சிட்டு போனது ரொம்ப தப்புடா. மாமா உனக்காக எவ்ளோ மெனக்கெடுத்து மெடிக்கல்ல சேத்து விட்டாங்க. இது பைனல் இயர் வேற திவா” என்று அவன் படிப்பில் அக்கறை கொண்டு கவலைக் குரலில் பேசினாள் பெண்.
அதில் அவளை சலிப்பாகப் பார்த்தவனும், “போதும் யுகீ
நீயும் உங்க மாமாவ மாறி ஆரம்பிக்காத. இது இன்டர்னல் எக்ஸாம் தான. நெக்ஸ்ட் மந்த் அரியர்ல எழுதி ஈக்குவல் பண்ணிடுவேன். ஆனா உனக்குப் பிடிச்ச மியூசிக் டெரக்டர் நம்ம ஊருக்கு வந்து லைவ் ப்ரோக்ராம் பண்றப்போ நான் எப்படிடி சும்மா இருக்க முடியும். கொஞ்சநேரம் முன்னாடி உன் முகத்துல தெரிஞ்சுதே ஒரு சந்தோசம் அதுக்காக நான் என்ன வேணா பண்ணுவேன்” என்று அவள் வாயை அடைத்தவனை முறைப்பும் பூரிப்பும் கலந்து பார்த்தவள்…
“நீ என்ன சொன்னாலும் என் மனசு கேக்கல திவா. மெடிக்கல் படிப்பு மத்தபடிப்பு போல ஈஸி இல்லைடா. எந்த பீல்ட்ல தவறு நடந்தாலும் பணமோ பொருளோ தான் நஷ்டம் ஆகும். ஆனா ஒரு டாக்டர் தப்பு பண்ணா அது ஒரு உயிருக்கே ஆபத்தா முடியும். இந்த உலகத்துலயே நம்மாள திரும்ப கொண்டுவர முடியாதது உயிர் மட்டும் தான திவா. நாம இந்த வருஷம் முடிஞ்சு கைல எடுக்கப்போறது வெறும் ஸ்டெதஸ்கோப் மட்டுமில்லடா. இவன் நம்மள காப்பாத்துவான்னு நம்பி அவங்களையே ஒப்படைக்குற ஒரு உயிரோட நம்பிக்கை. எனக்காகவே ஆனாலும் நீ படிப்பு விஷயத்துல கேர்லெஸ்ஸா இருக்கது என்னால ஏத்துக்க முடியாது திவா. அத்தோட உன்ன மாமா திட்டும் போதெல்லாம் எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?” என்று பேசிக் கொண்டே சென்றவளின் குரலில் சற்று முன்னர் இருந்த துள்ளல் எல்லாம் மறைந்து அவன் மேல் கொண்ட அளவிலா அன்பும் அக்கறையும் கூடவே ஒரு மருத்துவருக்கான பொறுப்பும் அப்பட்டமாக வெளிப்பட்டது.
அவளுக்கு மருத்துவத்தில் இருக்கும் ஈடுபாட்டை அறிந்திருந்தவன் அவளின் அந்தக் குரலையும் உணர்ந்தவனாய், “ஹேய் யுகீ… இப்போ என்ன நடந்துச்சுன்னு நீ இவ்ளோ சீரியசாப் பேசுற” என்று அவள் கன்னம் தாங்கியவன்…
“நான் அடம்பிடிச்சி மெடிக்கல்ல சேந்தது வேணா உனக்காக இருக்கலாம் மச்சி. ஆனா நம்ம படிச்சி முடிச்ச இந்த நாலு வருசத்துல ஒரு நாள் பாடத்தைக் கூட நான் விட்டதில்லைனு உனக்கே தெரியும்லடி. நேத்துக் கூட இன்டர்னல் எக்ஸாம்னால தான்டி கட்டடிச்சேன். இந்த இயர் முடியறப்போ ஒரு சின்சியரான டாக்டரா நான் உன் முன்னாடி நிப்பேன் யுகீ என்ன நம்புடி. அப்பா என்ன இன்னிக்கு நேத்தா திட்டுறாங்க. இதுக்குப் போய் ஏன்டி இவ்ளோ பீல் பண்ற. நான் இனிமேல் ஒழுங்கா இருக்கேன்டி” என்று அவளுக்கு மேல் இப்பொழுது அவன் பொறுப்பின் சிகரமாய்ப் பேசியவன் இன்னும் அவள் உம்மென்று இருப்பதைக் கண்டு…
“என்ன மச்சி இன்னும் ஏன் முகத்த இப்டி வச்சுருக்க. நான் சொன்னத நம்பலையா நீ. இனிமேல் உனக்குப் பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன்னு நான் வேணா குலசாமி மேல பிராமிஸ் பண்ணவா. இல்லன்னா என்மேல. இல்ல இல்ல உன்மேல” என்று அவள் தலையில் கைவைத்தவனின் கரத்தைத் தட்டி விட்டவள்…
அவளின் கூற்றில் இருந்தே அவள் இயல்பாகிவிட்டதை உணர்ந்து, “ச்சீ ச்சீ அப்டிலாம் இல்லடி” என்றவன், “உன்ன பையானு கூப்பிடாத சொல்லிருக்கேன்ல” என்றும் சொல்ல…
அவளோ, “நீ என்ன விட பத்து மாசம் சின்னவன் தான. நான் பையானு தான் கூப்பிடுவேன் பையா” என்று வேண்டுமென்றே பல பையாக்கள் போட்டுச் சிரித்தாள் சம்யு.
அதில் முறைப்பை தனதாக்கியவன், “நான் உன்ன விடச் சின்னவன் தான். யாரு இல்லன்னா. நீ என்ன தம்பின்னு கூட கூப்டுக்கோ. ஆனா பையானு மட்டும் சொல்லாத எரிச்சலா இருக்கு” என்க…
அவளோ, “ஏன் ஏன் ஏன் எரிச்சல்?. உன்ன பையான்னு சொல்ற உரிமை அந்த ஹிந்திக்கார பொண்ணுக்கு மட்டும் தான் இருக்கா பையா?” என்று மேலும் சீண்டியவளை, “யுகீ ஏன்டி. அவளே என் மேல இருக்க கடுப்புல அப்டி கூப்பிடுறா. நானே டெய்லி அவ டார்ச்சர் தாங்காம மறைஞ்சு மறைஞ்சு கிளாசுக்குப் போறேன்” என்று முகத்தைச் சுண்டினான் ப்ரித்திவ்.
அதில் இன்னும் அகலச் சிரித்த சம்யுவோ, “பின்ன கடுப்பாகாமா?உன் அழகுல மயங்கி லவ் சொல்ல வந்த பொண்ணப் போய் நீ என்னோட ராஹிக்கா மாதிரியே இருக்கன்னு சொன்னா. கொஞ்சுவாளா உன்ன? ஏன் பையா அந்த ஹிந்திப் பொண்ணு பாக்க கலரா அழகாத்தான இருக்கா. வேணாமா?” என்று ஏகமாய் கிண்டல் செய்தவளை…
“அம்மா தாயே ஆளவிடு. எனக்கு ஹிந்தியும் வேணாம். ஹிந்திப் பொண்ணும் வேணாம்.
தமிழன தமிழனா மட்டும் இருக்க விடுங்கடி. நான் உனக்கு மாமா மகன் தான அழகா மாமா மச்சான்னு தமிழ்ல கூப்பிடு மச்சி. எதுக்கு பையா நொய்யான்னு ஹிந்திய திணிக்கிற” என்று மேடைப் பேச்சாளர் போல் உரக்க மொழிந்தவனின் பேச்சில்…
“ஹே போதும்டா திவா முடியல” என்று அடக்க மாட்டாது சிரிக்கத் தொடங்கினாள் பெண்.
அவள் சிரிப்பதையே சில நொடிகள் திருப்தியாகப் பார்த்தவன், “தட்ஸ் மை பப்ளி. இப்டி சிரிச்சா தான் பாக்க நல்லாயிருக்கு” என்று கன்னம் நிமிண்டிச் சொல்ல…
“அப்போ இவ்ளோ நேரம் பாக்க சகிக்காம இருந்தேனா?” என்று மீண்டும் நீட்டி முழக்கினாள் சம்யுக்தா.
அதற்கு கிண்டல் சிரிப்பொன்றை உதிர்த்தவனும், “அத என் வாயால வேற சொல்லனுமா யுகீ?” என்று விட்டு அவள் எதிர்வினையை அறிந்தவன் போல் ஓடோடிச் சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டதைத் தொடர்ந்து…
“உன்ன… கிங்காங், மங்கி, பப்பல்லோ. நீதாண்டா பாக்க சகிக்காம குரங்காட்டம் இருக்க” என்ற வசவுகளோடு குளியலறைக் கதவில் வந்து விழுந்தது அங்கிருந்த தண்ணீர்க் குவளை.
அதைக் கேட்டு இன்னும் இன்னும் கலகலத்துச் சிரித்துவிட்டு அவள் சற்றுமுன் பேசியவைகளையும் அசைபோட்ட வண்ணம் குளித்து முடித்தவன், “இனிமேல் யுகிக்கு பிடிக்காத எதையும் செய்யக்கூடாதுடா ப்ரித்திவா…” என்று தன் மனதுக்கும் மூளைக்கும் கட்டளையிட…
அதுகளோ பின்னாளில் அவன் செய்யப்போவதெல்லாம் அறிந்தது போல், அவனைப் பார்த்து வில்லங்கமாகச் சிரித்து வைத்ததுகள்.