“அஞ்சலி ஏந்ரு அஞ்சலி. அஞ்சலி ஏந்ரு அஞ்சலி” என்ற அஞ்சலி திரைப்பட வசனம் போல்…
“குட்மார்னிங்டா எரும. எஞ்சிட்டியா? குட்மார்னிங்டா எரும. எஞ்சிட்டியா?” என்ற பெண்ணவளின் தேன் குரல் மீண்டும் மீண்டும் அலைபேசியின் அலாரமாய் ஒலித்துக்கொண்டிருக்க, அதன் முதல் சப்தத்திலே விழித்துவிட்ட ஆடவனோ அந்த அலாரத்தை நிறுத்தமட்டும் முயற்சிக்கவே இல்லை.
அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது
என்ற அறிகுறிகூட இல்லாது ஆண்கள்விடுதி அறையில் அசையாது விட்டத்தை வெறித்துப் படுத்திருந்தவனின் எண்ணம் மட்டுமல்ல அவன் ஊனிலிருந்து உள்ளம்வரை, நாடிநரம்பு அனைத்திலும் நிறைந்திருப்பவள் அவனது யுகி யுகி யுகி மட்டுமே.
அவளின் அமைதிக்காகவென்று அன்று ஏதோ ஒரு வேகத்தில் கிளம்பி வந்தவனுக்கு அவளில்லாத நாட்கள் இப்படி ஒரு நரகமாய் இருக்கும் என்று
அவனே அறிந்திருக்கவில்லை.
மூன்று மாதங்கள் முன்பு உயிரை பூஞ்சோலை கிராமத்திலே விட்டுவிட்டு வெறும் கூடாய் சென்னை மண்ணில் கால்வைத்தவனை வரவேற்க நின்றிருந்தவர்கள் அவனின் அக்கா ராஹித்யாவும் அவள் கணவன் ஆதித்யாவும்தான்.
அவர்களைப்பார்த்ததுமே இது அன்னையின் வேலை என்று கண்டுகொண்டவனுக்கு அவர்களிடம் சிரித்து பேசும் மனநிலைகூட சுத்தமாக இல்லை.
சிந்தனை சூழ்ந்த முகத்துடனே தொடர்வண்டியில் இருந்து இறங்கியவனை, “வெல்கம் டு சென்னை, ப்ரித்வி” என்று ஆதித்யா வரவேற்க…
“துரை இப்போ பெரிய டாக்டர் ஆகிட்டிங்கபோல. சென்னை வர்றேன்னு ஏன்டா என்கிட்ட சொல்லல?” என்று உரிமைச் சண்டையோடு வரவேற்றாள் அவன் தமக்கை ராஹித்தியா.
எப்பொழுதும் அவர்கள் வருகை அறிந்தால் துள்ளிக்குதித்து ஆர்ப்பாட்டம் செய்து அவர்கள் மழலைகளுக்கு விளையாட்டு பொருட்கள் எல்லாம் வாங்கிவைத்து வரவேற்பவன்
இன்று தன்னை வரவேற்பதற்காக வேண்டி அவர்கள் வேலை எல்லாம் ஒதுக்கிவிட்டு ரயில்நிலையம் வந்து நிற்கும் தமக்கையையும் மாமனையும் கண்டு அவன் இதழ்கள் சிறிதாக விரிந்தாலும் அவன் உள்ளம் என்னவோ இம்மியும் சந்தோஷிக்க மறுத்தது.
அவன் சந்தோசத்தை எல்லாம் மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பவள் அவனுடன் இல்லாதபொழுது யாருடனும் சீராடும் நிலையில் ஆடவன் இல்லையே.
தன்னை ஆவலாய் வரவேற்ற உறவுகளிடம், “க்கா… மாமா” ஒரு மெல்லிய சிரிப்பை மட்டும் உதிர்த்தவனின் கையை பற்றி, “அப்றம் எப்பிடறா இருக்க, ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்ற ராஹித்தியா, “நானும் மாமாவும் எவ்ளோ தடவ சென்னையில வந்து படிடான்னு சொன்னப்போலாம் வராம இப்ப என்னடா திடீர்னு கிளம்பி வந்துருக்க. உனக்கும் யுக்தாக்கும் பெரிய சண்டையா?. உன்னோட யுகி உன்ன அடிச்சு துரத்திட்டாளா?” என்றும் கிண்டல் குரலில் கேள்விக்கணைகளை அடுக்க…
அது கேலி என்று புரிந்தாலும் தமக்கையின் கூற்றில் ஆடவனின்
பிறந்து வளர்ந்த இத்துணை வருடங்களில் அவன் அவளைவிட்டு பிரிந்து இத்துணை தூரம் வந்திருப்பது இதுதானே முதல்தடவை. இப்பிரிவிற்கு காரணமும் அவனாகவல்லவோ ஆகிப்போனான்.
எப்பொழுதும் மனைவிக்குச் சமமாக வாயாடும் மச்சினனின் அமைதியிலே ஏதோ புரிந்து கொண்ட அவனின் மாமனும்,
“ஹேய் ஹனி அவன் பீல் பண்றான் போலடி” என்று ராஹியின் தோளில் இடித்தவன், “வா ப்ரித்வி நடந்துகிட்டே பேசலாம்” என்று அவனையும் இயல்புக்கு கொண்டுவர முயன்று அவன் பயணப்பையும் தூக்கிக்கொண்டான்.
அதில் சிந்தை கலைந்த ப்ரித்திவும், “அய்யோ மாமா… நானே கொண்டுவர்றேன். வெயிட்டா இருக்கும்” என்று பதற…
அவனின் மாமனோ, “உன் அக்காவோட சுமையே இவ்ளோ வருசமா சுமக்குறேன். இதுலாம் ஒரு வெயிட்டா” என்று வசீகரப்புன்னகையை உதிர்த்தவன் தன்னுடைய பஹானியை நோக்கி நடந்தான்.
கணவன் தோளை இடிக்கவும் என்னவோ ஏதோவென்று தம்பியிலே பார்வை பதித்திருந்தவள், அப்பொழுதுதான் கணவனின் கூற்றை கவனித்து, “ஆதித்தான் நான் உங்களுக்கு சுமையா?” என்று பல்லைக்கடிக்க…
அவனோ கையிலிருந்த பையை டிக்கியில் வைத்து பூட்டிவிட்டு, “ம்ம்ம்… சுகமான சுமைடி” என்று கண்ணடித்துச்சிரித்தவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.
அதில் செக்கர்வானமாய் சிவந்தவளும், ‘அய்யோ எப்பவும் இவருக்கு இதே வேலைதான்’ என்ற வெட்கச்சிரிப்போடு மறுபேச்சின்றி தம்பியுடன் ஏறி அமர்ந்துகொள்ள…
அதைப்பாராது பார்த்த ஆடவனுக்கோ, “தானும் யுகியும் இப்படி ஒரு காதல்வாழ்வு வாழும் காலம் கிட்டுமா?” என்ற ஏக்கம் செல்லாய் அரிக்கத் தொடங்கியது.
எப்பொழுதும் கலகலப்பிற்கு பஞ்சமில்லாது இருப்பவனின் இன்றைய அமைதியில், “ஹேய் ப்ரித்வி. உண்மையிலே யுகிக்கும் உனக்கும் பெரிய சண்டையாடா? நான் வேணா அவகிட்ட பேசவா?” என்று தமக்கையாய் பரிதவித்தாள் ராஹித்தியா.
தமக்கையின் அன்பில் உருகியவனும், ‘பேசிட்டா மட்டும் கேக்குற ஆளாக்கா அவ. அப்டியே அவசின்னமாமாவோட ஜெராக்ஸ்கா’ என்று எண்ணிக்கொண்டவன்…
“இல்லக்கா அப்டிலாம் எதுவும் இல்லை. யுகிதான் நான் மாஸ்டர் பண்ணனும்னு சொன்னா. நான் mbbs முடிச்ச காலேஜ்சார் இங்க ஒரு காலேஜ் வித் ஹாஸ்பிடல் ரெக்கமண்ட் பண்ணாரு. அதான் பிராக்ட்டிஸ் பண்ணிட்டே பிஜியும் பண்ணலாம்னு கிளம்பி வந்துட்டேன்” என்று வரவழைக்கப்பட்ட புன்னகையோடு சொன்னவன், பெயருக்கு அவர்களோடு மேலும் சிரித்துப்பேசி அவர்கள் வீட்டிற்கும் சென்று மற்றொரு தமக்கை, அவள் கணவன் என்று அனைவரிடமும் அளவளாவியவன் அவர்கள் எத்துணை சொல்லியும் அவர்கள் வீட்டிலே தங்க மட்டும் மறுத்து விட்டான்.
அவனது யுகியில்லா வெறுமையை கழிக்க அவனுக்கு தனிமை தேவைப்பட்டதுவோ.
அவர்கள் வீடு அவன் பணியிடத்திற்கு வெகுதூரம் என்று அவன் முன்வைத்த காரணத்தை மறுக்க முடியாதவர்களும் அன்று முழுதும் அவனை உபசரித்துவிட்டு அவன் பணியிடம் தங்குமிடம் எல்லாம் விளாவாரியாகக்கேட்டு அறிந்துகொண்டே மறுநாள் அனுப்பிவைக்க, ஆண்கள்விடுதியின் முன்னே அவனை இறக்கிவிட்ட அவன் தமக்கை கணவனோ, “உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம் ப்ரித்வி. என்ன பிரச்னைனாலும் இந்த மாமாவ மறந்துராத” என்று தோளில் தட்டிவிட்டுச்செல்ல…
அவன் மச்சினனுக்கோ, “நான் யுகிய லவ் பண்றேன் மாமா என்னோட அவள சேத்து வைங்க” என்று அவன் தோள்சாய்ந்து கதற வேண்டும் போல் இருந்தது.
இருந்தும் காதலை இன்னும் காதலிப்பவளிடமே கூறாதவன் வேறு யாரிடமும் கூற மனமற்று, “தேங்க்ஸ் மாமா” என்று அவனுக்கு விடை கொடுத்தவன் அந்த மகிழுந்தோடே உதட்டளவில் இருந்த புன்னகையும் வழியனுப்பி விட்டு இயந்திரமாக தன் நாட்களை கடத்தத்தொடங்கினான்.
ஆரம்பத்தில் அது அவனுக்கு மிகவும் சவாலாகத்தான் இருந்தது.
பெண்ணவள் முகம் காணாத நாட்கள் புலரமறுக்க, அவள் குரல் கேளாத பொழுதுகளை நெட்டித்தள்ளமுடியாது தோற்றவன் அலைபேசியில் இருந்த பெண்ணின் நகலையும், அவள் முன்பு குறுஞ்செய்திகளாக அனுப்பியிருந்த ஒலிக்கற்றைகளையுமே துணைக்கு வைத்து கொட்டக் கொட்ட விழித்து கிடந்தான்.
பகல்பொழுதுகள் முழுதும் பணியிடம், பயிற்சிக்கல்வி என்று ஓரளவு சுமூகமாய் கழிந்தாலும் இரவு உறங்கும் சமயமும், இரைதேடும் ஆந்தையாய் அவள் அண்மையைத் தேடி அதிகாலை உறங்கி காலை உறக்கம் கலைந்தபின்னும் பெண்ணவளின் நினைவுகளில் தன்னைத்தானே வெறுத்தான் ப்ரித்திவ்ராஜ்.
“தான் அன்று அவசரப்பட்டு அப்படி ஒரு காரியம் செய்யாவிட்டால் இன்று யுகியைப்பிரியும் நிலை ஏற்பட்டுஇருக்காதே” என்று புலம்பிக்கொண்டவன்,
“ஆனா அன்னிக்கு நமக்குள்ள நடந்த அந்த நிகழ்வுதான்டி உன்னைப்பிரிஞ்சு இருக்கற தெம்ப எனக்கு கொடுத்துருக்கு. இவ்ளோநாள் நமக்குள்ள என்ன உறவுன்னுலாம் நான் யோசிச்சதே இல்ல, பப்ளி. ஆனா அன்னிக்கு நாளுக்குப்பிறகு நீ எனக்காகவே பொறந்தவன்னு நான் புரிஞ்சுகிட்டேன்டி. நமக்குள்ள இப்போ இருக்க இந்த பிரிவுதான் நம்ம இணைக்கபோற பாலமா நினைச்சு இதநான் ஏத்துக்கறேன்டி. நீ ஆசைப்பட்டமாறி pg முடிச்சுட்டு உன்னோட திவா உன்கிட்ட வர்றேன் யுகி. வந்து உன் கண்ணப்பாத்து என் காதல சொல்லுவேன்டி. அப்போ என்ன ஏத்துக்குவிள்ள கன்னுகுட்டி?” என்றெல்லாம் வழக்கம்போல் அலைபேசியில் சிரித்த சம்யுவிடம் புலம்பித்தள்ளிவிட்டு எழுந்து அமர்ந்தவன் ஆழ்ந்தமூச்சை இழுத்துவிட்டு அதில் தெரிந்த பெண்ணின் நகலுக்கு ஒரு முத்தமும் இட்டுவிட்டு தன் காலைநேரப்பணிகளில் இயந்திரம் போலவே ஈடுபட்டான்.
குளித்து முடித்து ஆயத்தமாகியவன் “ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்” என்ற பணக்காரவர்க்கத்தினர் பயிலும் சென்னையிலே மிகப்பெரிய கல்லூரியும் அதைச்சேர்ந்த மருத்துவமனை இருக்கும் வளாகத்திற்குள்ளும் நுழைந்தவன் வெள்ளைஅங்கியை மணிக்கட்டில் தொங்கவிட்டவாறே தன் வீறுகொண்ட நடையால் அங்கிருந்த மாணவர்களை எல்லாம் கடந்து சென்று கொண்டிருக்க, அவனையே வைத்தகண் வாங்காது பார்த்திருந்தனர் மருத்துவக்கல்லூரி மாணவிகள்.
சந்தனவண்ண டெனிம் ஜீன்சும் கருநீல நிறத்தினாலான உடலை ஒட்டிய allen solly டிசர்ட்டும் அணிந்து, சட்டையின் தோள் பகுதியிலிருந்து நான்கு இன்ச் இறக்கம் மட்டுமே இருந்த அதன் கைப்பகுதியை மேலும் ஒரு இன்ச் மடித்துவிட்டு இருக்க, அதன் வழியாக வெளிப்போந்த திண்மையான புஜத்தினால் வேகநடையின் உபயத்தில் முன்னே வந்து விழுந்த கற்றைக்குழலை கோதி அடக்க முயன்றபடி நடந்து சென்றவனைக் கண்டு அன்றும் வாய்பிளந்து நின்றிருந்தது மங்கையர் கூட்டம்.
வயதுக்கு மீறிய உடல்வளர்ச்சியால் சற்றே இறுக்கிப்பிடித்த அந்த சாதாரண டீசர்ட் உடையே ஆடவனின் ஆண்மையை மென்மேலும் எடுத்துக்காட்ட, தன்னவள் பாராத சிரிப்பை யாருக்கும் தரமாட்டேன் என்று சொல்வதுபோல் ஆடவனின் சிவந்த அதரங்கள் சிரிப்பைமறந்து இருந்தாலும், அதனால் கூட அவன் வசீகரத்தை சிறிதும் குறைக்க முடியவில்லை.
அத்துணை பெண்களும் தன்னையே வைத்தகண் வாங்காது பார்ப்பதைக்கூட உணராமல் வகுப்பிற்குள் நுழைந்து அவன் இருக்கையில் அமர்ந்தவன் மறுகணம் அலைபேசியை எடுத்து, “யுகீ… க்ளாஸ்கு வந்துட்டேன்டி. காலேஜ் கேண்டின்லயே தோசை சாப்ட்டேன். நீ என்ன சாப்ட்ட? உனக்கு பிடிச்ச பலூடா இங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்குமாம். ஆனா உன்னவிட்டு சாப்பிட மனசில்லாம நான் இதுவரை வாங்கலடி. ஊப் ரொம்ப அறுத்துட்டனா?. ஓகே… இனி டூ அவர்ஸ் உனக்கு டிஸ்டர்ப்பன்ஸ் இருக்காது. நீயும் கிளாஸ்லதான இருப்ப. கேரியான் பப்ளி” என்ற புன்னகை சிந்தும் எமோஜிகளோடு ஒரு ஒலிக்கற்றையைப்பேசி வாட்ஸ்ஆப் செயலியில் குறுஞ்செய்தியாக சம்யுவிற்கு அனுப்பியவன் அதன்பின்னர்தான் சுற்றுப்புறத்தையே கவனித்தான்.
சென்னை வந்த நாள்தொட்டு அவன் செய்யும் முக்கியவேலையும் இதுதான்.
அவன்மேல் உள்ள கோபத்திலும், வருத்தத்திலும், கூடவே அவன் செய்துவிட்டு வந்த செயலால் உண்டான கலக்கத்திலும் அவன் கைபேசி அழைப்புகள் எதையும் ஏற்காத பெண்ணின்மேல் இம்மியும் சினம் கொள்ளாதவன் அவனது நாளின் செயல்கள் அனைத்தும் சிலமணி நேரங்களுக்கு ஒருமுறை ஒலிக்கற்றைகளாய் பேசி அனுப்பி வைப்பவன், உருவத்தால் உன்னைவிட்டு விலகி இருந்தாலும் என் உணர்வுகள் என்றும் உனக்கானது. என்று அழுத்தம் திருத்தமாய் அவளுக்கு உணர்த்திக்கொண்டிருந்தான்.
செய்தி அனுப்பிய பின்னேயும் அவள் பார்த்துவிட்டாளா என்று அலைபேசியிலே விழி பதித்திருந்தவன், அடுத்த இரண்டே நொடிகளில் இரண்டு நீலடிக் வரவுமே, “பப்ளி பப்ளி. ஐ மிஸ் யூ சோ மச் டி.” என்றும் முகம் கொள்ளாப் புன்னகையோடே வேகமாக எழுதி அனுப்பியவன் வழக்கமாய் பாடும் பல்லவியாய், “பதிலாச்சும் அனுப்புடி” என்றும் விடாது அனுப்ப அடுத்த நொடியே பெண்ணின் வலைப்பின்னல் மூடியதாக அலைபேசி காட்ட அவனும், “பேசுடின்ன உடனே ஆப்லைன் போயிடுவா ராட்சசி. அப்டி என்னதான் பிடிவாதமோ?” என்று சிறு சிரிப்பினூடே அலைபேசியை அணைத்து வைத்தான்.
தன்னோடு பேசாவிடினும் தான் அனுப்பும் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் நொடியும் தாமதியாது கிடைக்கும் இரட்டை நீலடிக்கே அவனுக்கான அவளுடைய தேடலை சொல்லாது சொல்லியதில் ஆடவனின் ஊனும் உள்ளமும் ஒருசேர மலர்ந்தது. அவளது பிரிவை தாங்கி அவனை சென்னையிலே பிடித்துவைத்திருப்பதும் பெண்ணவளுடனான அந்தத் தொடர்புகள்தான். இதுவும் இல்லை என்றால், ‘போடி நீயுமாச்சு உன்கோபமும் ஆச்சு’ என்று அவன் பிடுங்கி அடித்து பூஞ்சோலை ஓடியிருப்பான். இல்லை என்றால் அவனுக்கு பைத்தியமே பிடித்திருக்கும்.
அன்றைய நாள் வகுப்புகளில் இரண்டு மணி நேரங்கள் கழிய, மீதம் இருந்த பொழுதுகள் எல்லாம் கல்லூரியோடு ஒட்டியிருந்த மருத்துவமனையில் மருத்துவனாக பணிசெய்து தன் பொழுதைக்கழித்தான் ப்ரித்திவ்ராஜ்.
சம்யுவின் முயற்சியால் மருத்துவத்தை ஓரளவு ஒழுங்காகவே பயின்றுவிட்டு வந்தவனை அந்த மருத்துவமனையும், அதனோடு இணைந்த கல்லூரியும் இருகரம் நீட்டி வரவேற்க, அவனுக்கும் தன் கற்றலை மேலும் வளர்த்துக்கொள்ளவும் மேம்படுத்தவும் அங்கு ஆயிரமாயிரம் விஷயங்கள் இருந்தது. கூடவே அனுபவம் வாய்ந்த பெரிய மருத்துவர்களின் நட்புகளும் கிடைக்க அவன் நாட்கள் இறக்கை கட்டிப்பறந்தது. சம்யு உடன் இல்லையே என்ற இமாலய துன்பத்தோடே.
நாட்கள் சக்கரமாய் சுழல இன்றோடு அவன் சென்னை சென்று முழுதாக ஒன்றரை வருடம் முடிந்திருக்க, இத்துணை நாள் கோபத்தில் அவனோடு பேசாது இருப்பவள் தற்சமயம் எங்கே தான் பேசினால் அவன் கற்றலை பாதியில்விட்டு வந்துவிடுவானோ என்ற அச்சத்தினாலும், தினமும் கணக்கில்லாது வந்துகுவியும் குறுஞ்செய்திகளில் இலைமறைகாயாய் அவன் வெளிப்படுத்திக்கொண்டிருக்கும்ஏற்க இயலா உணர்வுகளாலும் பெரிதாய் கலங்கியிருப்பவள் இதயத்தை இரும்பாய் மாற்றி மௌனமே மொழியாய் தன் மேற்படிப்பை திருநெல்வேலியிலே தொடர்ந்திருந்தாள் சம்யுக்தா.
பெண்ணவள் பேசாமல், அவள் கோபம் குறையாமல் ஊருக்குச் செல்லக்கூடாது என்ற வைராக்கியத்தில் அன்னையிடம் கூட அலைபேசி தொடர்பு மட்டுமே வைத்து இருப்பவனும், அவளது ஆசைப்படி மேற்படிப்பும் முடித்துவிட்டே அவள்முன் சென்று நின்று என்னை ஏற்றுக்கொள்ளடி பெண்ணே என்று அவள் கண்களுக்குள் ஊடுருவி காதலைச்சொல்லி, அன்றுபோல் அவளின் தேன்அதரங்களையும் கொய்யவேண்டும் என்றெல்லாம் காதல் கோட்டைகளை கட்டிவைத்திருந்தான் ப்ரித்திவ். அதை அவனவளே இடித்து தரைமாட்டமாக்கப்போவதை அறியாமல்.