அன்று திங்கள்கிழமை காலை வழக்கமாய் ப்ரித்திவிடம் இருந்து வரும் காலைநேர குறுஞ்செய்தி இன்னும் வந்திருக்காது இருக்க, கைபேசியும் கையுமாக குட்டிபோட்ட பூனையாய் உலவிக்கொண்டிருந்தாள் சம்யுக்தா.
அப்பொழுதுதான் கையில் ஒரு தூக்குவாளியோடு உள்ளே நுழைந்த நவீனோ, “யுக்தா இந்தா பால்பாயசம். சாப்பிடு” என்று அதை அவளிடம் நீட்ட…
அதை எல்லாம் சிறிதும் கவனியாதவளோ, “மாமா…” என்று பதட்டமாய் அவனை நெருங்கி, “காலைல எந்திரிச்ச உடனே திவா எனக்கு மெசேஜ் பண்ணிடுவான் மாமா. ஆனா இன்னிக்கு இவ்ளோ நேரம் ஆகியும் பண்ணல. நீங்க கொஞ்சம் போன் போட்டு பேசுங்க. உடம்பு ஏதும் சரியில்லையோன்னு பயமாயிருக்கு” என்று பதற,
அவள் பதற்றம் அவனையும் தொற்றிக்கொண்டது.
“நானும் நேத்து காலைல பேசுனது” என்று சொல்லிக்கொண்டவன்,
“இரு யுக்தா” என்றுவிட்டு அலைபேசியை எடுத்து ப்ரித்திவிற்கு அழைக்க…
நல்ல தூக்கக்கலக்கத்தில் இருந்தவன் மூன்று முறை அடித்து ஓய்ந்தப்பின்னேயே அலைபேசியை எடுத்து செவியில் வைத்தவன், “சொல்லுடா?” என்றான் சுரத்தேஇல்லாமல்.
இவனும், “என்னடா மணி பத்தாகுது. இன்னும் ஹாஸ்பிடல் போலையா? உடம்பு ஏதும் சரியில்லையா? குரலே ஒருமாதிரி இருக்கு?” என்று பதற்றம் மாறாமலே வினவ…
அவனும், “இல்லடா… உடம்புக்குலாம் ஒன்னுமில்ல. நேத்து நைட் ஒரு எமர்ஜென்சி கேஸ்டா. அஞ்சு வயசுப்பொண்ணுக்கு மூளையில ஒருகட்டி. பெரிய டாக்டர் சர்ஜரி பண்ணி ரிமூவ் பண்ணாரு. அப்புறமும் குழந்தைக்கு பல்ஸ் நார்மல் ஆக ரொம்ப நேரம் ஆச்சு. நானும் டாக்டர் கூடவே இருந்தேன்டா. அஞ்சுமணிக்கு தான் வந்து படுத்தேன்” என்று நீண்ட விளக்கம் சொல்லி முடித்தான் ப்ரித்திவ்.
அதைக்கேட்டு, “அச்சோ பாவமே” என்று அக்குழந்தைக்காக வருந்திய நவீனும், “இப்போ பாப்பா ஓகேதானேடா?” என்று கேட்டவனுக்கு அவனும், “ம்ம்ம் ஓகேடா ஷி இஸ் பைன்” என்க…
நவீனும், “அப்போ சரிடா நீ தூங்கி எந்திருச்சு அப்றம் கூப்டு” என்று அலைபேசியை அணைக்கப்போனான்.
அதற்குள், “டேய் இருடா இருடா” என்று கத்தியவன், “போன கொஞ்சம் ஸ்பீக்கர்ல போடு” என்று சொல்ல…
அவனோ, “எதுக்குடா?” என்றான்.
அதற்கு இவனும், “ம்ம்ம் உன்ன போன் போட்டு விசாரிக்க சொன்னவங்ககிட்ட நான் ஒன்னு சொல்லனும்” என்று சொல்ல அப்பொழுதுதான் அவனுக்கு எந்த உடல்நலக்குறைவுமில்லை என்று மூச்சை இழுத்துவிட்டவளுக்கு ‘எப்படி கண்டுபிடித்தான்?’ என்று
உடனே அவனும், “ஹேய் யுகி… காலைல மெசேஜ் பண்லன்னதும் பயந்துட்டியா? நான் நல்லாயிருக்கேன்டி.” என்று தொடங்கியவன், “அஞ்சுமணிக்கு வந்து படுக்கும்போதே உனக்கு வாய்ஸ்நோட் அனுப்பிரலாம்னு போன் எடுத்தேன். அப்போதான் ரீசார்ஜ் முடிஞ்சுதுன்னு தெரிஞ்சது. அப்போவும் பக்கத்துகடையில போய் ரீசார்ஜ் பண்லாம்னு போனேன். ஆனா கடை துறக்கலடி. ரொம்ப டையர்டாவேற இருந்துச்சா அதான் தூங்கிட்டேன். சாரிடி.” என்றவன் அந்த குழந்தைக்கு என்ன நோய் எப்படி சரிசெய்தார்கள் என்றும் சிறிது விளக்கியவன்…
“ரீசார்ஜ் பண்ணிட்டு மெசேஜ் பண்றேன் பப்ளி. அதுக்காச்சும் ரிப்ளை பண்ணுடி ப்ளீஸ்டி ப்ளீஸ்டி. மிஸ் யூ சோ மச்டி.” என்றும் கூறிவிட்டு அழைப்பைத்துண்டிக்க…
‘தன்னை இத்துணை புரிந்திருப்பவனுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்?அவனுடைய அளவில்லாத அன்பிற்கு நான் தகுதியானவள்தானா?’ என்ற புதிதான கேள்விகளில் பெண்ணவள் சிலையாகி நின்றிருந்தாள்.
சற்று முந்தைய ப்ரித்திவிற்கான சம்யுவின் தவிப்பும், அதை புரிந்து கொண்ட ப்ரித்திவின் பேச்சும் தற்சமயம் அவர்களுக்கு பாலமாக இருந்த நவீனிற்கும், ‘இவர்களுக்குள் இத்துணை புரிதல் எப்படி சாத்தியம்?’ என்று சிறிது பொறாமையாகக்கூட இருந்தது.
பின்பு, ‘ச்சே ச்சே நானே இப்டி பொறாமை படலாமா?’ என்று தலையை உலுக்கிக் கொண்டவன் இன்னும் கனவில் மிதப்பவள்போல் நின்ற சம்யுவிடம், “இதுக்கு நீ நேரடியா அவன்கிட்டயே பேசியிருக்கலாம் யுக்தா. அவனும் பாவம்தான இவ்ளோநாளா பேசாம இருக்க அளவு அவன் என்னதான் பண்ணான்?” என்று இத்துணை மாதங்களாய் தான் கேட்கும் கேள்வியைக்கேட்க…
அதைக்கேட்ட நொடி பூவாய் மலர்ந்திருந்த பெண்ணின் நயனங்கள் குழம்பியகுட்டையாய் மாறிநீரும் திரளத் தொடங்கியது.
வழக்கம்போல் அதைஎல்லாம் கவனியாது, “அவன் பேச்ச எடுத்தாலே அப்பப்போ சைலன்ட் மோட்கு போயிடுற யுக்தா” என்றவன், “சரி இந்தா இப்பவாவது பாயசத்தை சாப்பிடு. ஆறிடும்” என்று சொல்லி மீண்டும் தூக்குவாளியை அவளிடம் நீட்டினான்.
அவன் பேச்சில் சற்று இயல்பாகியவளும், “இன்னிக்கு என்ன விசேஷம் மாமா?” என்று கேட்டு பாத்திரத்தை வாங்க…
அவன் முகமோ ட்ரையரில் போட்டு எடுத்த துணிகளைப்போல் சுருங்கித்தான் போனது.
அதற்குள், “வா நவீன்மா. பிறந்தநாள் வாழ்த்துக்கள்பா” என்று மருமகனை வரவேற்ற ஜானு அவள் அறைக்குள் இருந்து வெளிவர…
தன்னைறையில் இருந்து ஓடிவந்த சந்தனாவும், “ஹாப்பி பர்த்டே மாமா” என்று சொல்லிக்கொண்டு ஜிகினாத் தாள் சுற்றப்பட்ட பரிசுப்பொருள் ஒன்றை அவனிடம் தந்தாள்.
நவீனும் இருவருக்குமே பதில் சொல்லிவிட்டு, ‘இவள்ளாம் நம்ம பிறந்தநாள ஞாபகம் வச்சுருக்கா. ஆனா வைக்க வேண்டியவ. வைக்கலியே?’ என்று சகோதரிகள் இருவரையும் ஒரு பெருமூச்சோடு பார்த்துக்கொண்டவன் இளையவள் கொடுத்த பரிசையும் வாங்கிக்கொண்டு நன்றி நவின்றான்.
தாய் தங்கை இருவரின் கூற்றிலும்தான் அன்று நவீனின் பிறந்தநாள் என்றே ஞாபகம்வந்த சம்யுவும், ‘ச்சே இதெப்படி மறந்தேன்?’ என்று மானசீகமாய் தலையில் தட்டிக் கொண்டவள், “சாரிமாமா ஏதோ யோசனைல மறந்துட்டேன்” என்று கையை மட்டும் நீட்டி தன் வாழ்த்தை தெரிவிக்க…
“பரவாயில்ல யுக்தா. நன்றி” என்று அவள் கையைப்பற்றிக் குலுக்கியவனுக்கு, ப்ரித்திவின் பிறந்தநாளை அவள் ஆர்ப்பாட்டமாய் கொண்டாடும் தருணங்கள் எல்லாம் அவனையும்மீறி அவன் கண்முன்னே வந்துவிரிந்தது. கூடவே அவர்களின் தற்போதைய பிரிவிலும், “இவ்ளோ புரிதலா அன்பா இருக்கவ இவ்ளோ நாளா ஏன் அவன்கூட பேசாம இருக்கா” என்று அவன் புருவங்களையும் யோசனையாய் சுருங்க வைத்தது.
எத்துணை யோசித்தும் ஒன்றும் புலப்படாது தன்னைத்தானே தேற்றிக் கொண்டவன் ஜானுவிடம் திரும்பி, “அப்றம் அத்த இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?” என்று மூக்கை உறிய…
அவளும், “உனக்கு பிடிச்ச சுறாப்புட்டு பண்ணிருக்கேன் நவீன். மாமா நைட்தான் கன்னியாகுமரில இருந்து கொண்டுவந்தாங்க. வா சாப்புடலாம்” என்று அழைத்துச் சென்றவள் அவனோடு சேர்த்து அனைவருக்குமே உணவைப் பரிமாறினாள்.
அன்றைய நாள் அப்படியே கழிய, மேலும் சில மாதங்கள் சென்ற நிலையில், யுவாவிடம் இருந்து தங்கை வீட்டிற்கு வருவதாகவும் சம்யு வீட்டில் இருக்கிறாள்தானே என்றும் கேட்டு செய்தி வந்திருந்தது.
அனைவரும் வருகிறார்கள் என்ற அலைபேசி அழைப்பிலே ஓரளவு காரணத்தை ஊகித்து விட்டவளுக்கு,
“இன்னிக்கு கோவிலுக்கு போனோம் ஜானுமா. அங்க எதற்சையலா நம்ம ஜோசியரபாத்தோம். நவீன் ஜாதகப்படி இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள கல்யாணம் முடிக்கணும்னு சொல்லிருக்காரு. யுக்தா மேற்படிப்பும் முடியப்போகுதுல்ல சீக்கிரம் கல்யாணம் வச்சுடலாம். அதுக்குள்ள ப்ரித்திவும் வந்துடுவான். அவனுக்கும் சந்தனாமாக்கும் கூட அப்டியே நிச்சயம்மாறி பண்ணிடலாம். நீ என்னடாமா சொல்ற?” என்று இந்தமுறை யுவாவே முன்மொழிந்த கூற்றை அவன் ஆசைமருமகளால் மறுக்கத்தான் முடியுமா???
அல்லது மறுப்பிற்கான காரணத்தை யாரிடமேனும் விளக்கத்தான் முடியுமா???
ஆடவனின் நினைவுகளும், அவன் விட்டுச்சென்ற அன்றைய நாளின் நிகழ்வுகளும் அவள் நெஞ்சில் இன்னும் பச்சைமண்ணாய் இருந்தாலும் பெண்கள் எப்பொழுதும் சூழ்நிலைக்கைதிகள்தானே.
மகன் ஊருக்குச் சென்றதினால் குற்றஉணர்ச்சி பெருகிய மலர்விழிகூட தற்சமயம் திருமணப்பேச்சில் அமைதியாகத்தான் இருந்தாள்.
ஆனால் இம்முறை நவீனின்ஜாதகம் மூலம் விதி விளையாடிஇருக்க, தன்முன்னே மாமன் வைத்த கேள்வியில் அவன் மகன் இரண்டு தினங்கள் முன் அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று அவள் சிந்தையில் உதித்தது.
அன்றையநாள் இரவுணவு முடிந்து படுக்கையில் விழுந்தவள் அலைபேசியில் தன் திவாவின்
நிழற்படங்களின் தொகுப்புகளை பார்வை இட்டுக்கொண்டிருக்க, ஒவ்வொரு புகைப்பத்திலும் அவனின் அழகிய பரிணாமங்களில் வழக்கம்போல் அவள் இதழ்கள் மலர்ந்து விரிந்து
அன்றைய நாட்களின் இனிமையான நினைவுகளையும் அவள் உள்ளத்தில் உசுப்பிவிட்டுக் கொண்டிருந்தது.
இறுதியில் அவன் சென்னையில் எடுத்து அனுப்பிய புகைப்படங்களிலும் பார்வை படிய, “திவா…அன்னிக்கு ஏன்டா அப்டிபண்ண? இந்தப்பிரிவு என்னால முடிலடா” என்ற வலிமிகுந்த வார்த்தைகளோடு அவன் முகம்வருட, அவள் வேதனையை அவனும் உணர்ந்தானோ???
அடுத்தநொடி, “யுகி தூங்கிட்டியா? இல்லதான?” என்று கேட்டு அவனின் குறுஞ்செய்தி ஒன்று வந்து சேர்ந்தது.
‘எப்பிட்றா நான் உன்ன நினைக்கும் போதெல்லாம் கரெக்ட்டா கூப்பிடுற’ என்ற சிறு சிரிப்பனூடே அதைப்படித்தவளின் அடையாளமாய் இரட்டை நீலடிக்குகள் விழவும்,
“யுகீ இன்னிக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்டி” என்றவன், “நீ ஏன்னு கேட்கமாட்ட அதனால நானே சொல்லுறேன்” என்று தொடர்ந்தவன்…
“இன்னிக்கு தாரான்னு இங்க படிக்கிற ஜுனியர் பொண்ணு ஒன்னு என்கிட்ட வந்து லவ் சொல்லுச்சு யுகி” என்று தொடங்க இங்கே சம்யுவின் முகத்தில் இருந்த புன்னகையோ துணிகொண்டு துடைத்தார்போல் ஆனது.
எதற்கு முறைக்கிறோம் என்று புரியாமலே அவன் நிழற்படத்தை முறைத்தவாறே அவள் அடுத்த ஒலிகற்றைகளைக் கேட்க…
அதிலோ, “ஆனா அது இல்லைடி மேட்டர், அந்தப்பொண்ணு ஐ லவ்யூன்னு சொல்லி என் கையபிடிச்சப்ப எனக்குள்ள வந்த அருவருப்புலதான் எனக்கு ஒன்னு உறுதியாச்சு யுகி.” என்று புதிர்போட்டவன்,
“இது அதுதானா, இதுசரிதானான்னு இவ்ளோநாள் எனக்குள்ள சின்னதா உறுத்திட்டிருந்த ஒருவிஷயம் ஆணியடிச்சபோலன்னு சொல்வாங்கள்ள அதுபோல என் மனசுல இப்போ உறுதியாகி சிகரம் போல வளந்து அப்டியே என்ன கொலையா கொல்லுதுடி. இந்த பீலிங்ஸ் என்னால எக்ஸ்ப்ரெஸ்ஸே பண்ணமுடில. ஐம் மெல்டிங்யுகி. ஐம் ஸ்பீச்லெஸ். ஐம்பிரீத்லெஸ்.” என்று துள்ளல் குரலில் சொன்னவனின் கூற்றில் அபாயமணி அடித்து நிமிர்ந்து அமர்ந்தாள் சம்யுக்தா.
அத்துணைநேரமும் அவன் அந்த பெண்ணிற்கு என்ன பதில் கூறினான் என்ற சிந்தனையிலே இருந்தவள் ப்ரித்திவின் இறுதி வார்த்தைகளில்தான் அவனுள் உறுதியாகி இருக்கும் அந்த உணர்வும், அவன் சுவாசத்தை தடைசெய்து கொண்டிருக்கும் உணர்வும் என்னவென்று புத்தியில் உரைத்து, அவள் விழிகள் சொல்லொணா தவிப்பைத் தத்தெடுக்க, அதன்பின் வந்த எந்த ஒலிநாடாவையும் கேளாது கைபேசியை அணைத்து வைத்துவிட்டாள் சம்யுக்தா.
ப்ரித்திவினுள் தோன்றி இருக்கும் அந்த உணர்வு ‘யாராலும் ஏன் என்னாலே ஏற்றுக்கொள்ள முடியாதது, எதிர்காலம் அற்றது’ என்று அதன்பின் வந்த நாட்களில் தனக்குத்தானே கூறிக்கொண்டவள், தங்களின் மேல் இத்துணை அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் நவீனின் முகத்தையும் கண்முன் கொண்டு வந்துநிறுத்தி, இக்கணம் தன்முன்னே மாமன் வைத்த திருமணம் பற்றிய கேள்விக்கு, “உங்க இஷ்டம் மாமா” என்று அனைவருமே எதிர்பார்த்த பதிலைக்கூறினாள்.
அடுத்த சில நாட்களில் அச்செய்தி ப்ரித்திவையும் எட்ட…
செவியில் கேட்ட செய்தியில் உறைந்துநின்றவன், மறுநாளே அடித்துபிடித்து பூஞ்சோலை வந்து இறங்க, அவனை வரவேற்றது என்னவோ திருமணக்கோலம் பூண்டிருந்த அவர்களுடைய அரண்மனைவீடும், அண்ணனுக்கு மணப்பெண்ணாய் நின்றிருந்த அவனுடைய யுகியும்தான்.