சிறுவயதிலிருந்து ஒன்றுக்குள் ஒன்றாய் வளர்ந்து இருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக உள்ளம் நிரம்பி வழியும் நேசமதை உரியவளிடம் சேர்ப்பிக்கும் பரவசநாளை எண்ணிக்கொண்டிருந்தவனை அலைபேசியில் வந்த நவீன் சம்யுக்தாவின் திருமணச்செய்தி அவன் உள்ளத்தையே ஆட்டம் காண வைத்திருக்க…
அடுத்தநாளே அடித்துபிடித்து சென்னையிலிருந்து பூஞ்சோலை வந்து இறங்கியவனை யாரோபோல் பார்த்த தனது ஒற்றை பார்வையால் அவனை அந்நியனாக்கி நிறுத்தியிருந்தாள் அவனின் யுகி.
அலைபேசியில் திருமணச் செய்தியை கேட்டபொழுதுகூட அவன் இத்துணை அதிர்ச்சி அடைந்திருக்கவில்லை.
அதைவிட அவனுக்கு பெரிதான ஏமாற்றத்தையும் கலக்கத்தையும் அளித்தது, முழுமனத்துடன் திருமண நிகழ்வில் பங்கேற்று மணப்பெண்ணாய் நின்றிருந்த அவனது யுகியின் செயல்கள்தான்.
கையில் ஏந்திய சிறு பயணப்பையுடன் நவீன் பின்தொடர வீட்டிற்குள் நுழைந்தவனை, “ஹேய் ப்ரித்வி… வாடா வாடா. எப்டிஇருக்க?” என்று ஆரவாரத்தோடு வரவேற்றனர் அவனின் இரட்டை தமக்கைகளும் நவீனின் தமக்கை சுஜாவும்.
பெரும்பாலும் விசேஷங்களில் மட்டுமே ஒன்று கூடும் தமக்கைகளின் வரவிலும், அதிலும் பட்டுப்புடவையும் அணிமணிகளும் பூட்டி நின்ற வீட்டுப்பெண்களைப் பார்த்தும், ‘அலைபேசியில் கேட்ட செய்தி உண்மைதான்’ என்று ப்ரித்திவின் இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள, அடுத்த சில நொடிகளில் அங்கிருந்த அறைக்கதவைத்திறந்து, “ராஹிண்ணி” என்ற அழைப்போடு வந்த சம்யுக்தாவின் ஒப்பனை தோற்றத்தையும் புன்னகை முகத்தையும் பார்த்து ஆடவன் மனதால் மரித்துதான் மீண்டான் என்றால் அது துளியும் மிகையில்லை.
அவளது புன்னகை முகம் பார்க்கும் வரையிலும்கூட, இது பெரியவர்களின் ஏற்பாடுதான். யுகிக்கு நிச்சயம் இத்திருமணத்தில் விருப்பம் இருக்காது என்றே நம்பிவந்தவனை, “சுஜாண்ணி ராஹிண்ணி இந்த சேலைக்கு இந்த வளையல் ஓகே தானே?” என்று கேட்டபடி வந்து நின்றவளும் அவனை அச்சமயம் அவனை எதிர்பாராதது போல் ஒரு நொடி ஸ்தம்பித்துத்தான் நின்றாள்.
அவளின் அதிர்ச்சி அவனின் வரவிற்காக மட்டுமல்ல என்று அவளின் விரிந்தவிழிகளே சொல்ல…
இரண்டு வருடகாலத்தில் நான்கு வயது கூடியதுபோலும், இரண்டு அடி வளர்ந்ததுபோலும் ஓங்குதாங்காய் நிமிர்ந்து நின்றவனின் கற்றைமீசையும் கொத்துமீசையாய் அடர்ந்திருக்க, எப்பொழுதும் களைந்தே இருக்கும் சிகைக்கு இன்று ஜெல்வைத்து வாரிஇருப்பானோ ஒன்றுகூட சலம்பாமல் தெளிந்த ஓடையாய் நெளிந்து வளைந்து படிந்திருக்கிறதே என்றெல்லாம் நொடியில் அவனின் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டவள், பின் சட்டென்று சுதாரித்து மீண்டு,
“ஹேய் வா திவா. எப்போ வந்த?” என்று அந்நியனை வரவேற்பது போல் வரவேற்று அவனை தட்டாமாலை சுற்றவைத்திருந்தாள்.
எப்பொழுதும் அவனைக்கண்டதும் ஆவலாய் ஓடிவந்து கரங்களை இணைத்து அவனிடம் பல்லாயிரம் கதைகள் பேசுபவள் இன்று அவன் கண்களைக்கூட சந்திக்க மறுத்து வார்த்தைக்கு வலிக்குமோ என்று அளவாய் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு, “நான் போய் ரெடி ஆகிட்டு வந்தர்றேன் அண்ணி. அத்த வெளியபோனும்னு சொன்னாங்க” என்று மீண்டும் அறைக்குள் நுழைந்துகொள்ள…
அவன், ‘என்ன ஏன் எப்படி எதற்காக?’
பரவாயில்லையா?” என்று தங்கை மகனை வரவேற்றபடி வந்த காயுவோ, “படிக்கப்போனா எங்கள எட்டிக்கூட பாக்கக்கூடாதுன்னா இருக்கு?. தீபாவளி பொங்கலுக்குக்கூட வரமாட்டின்னு சொல்லிட்டியே” என்று ஆதங்கப்பட…
இரண்டு வருடங்களில் நான்குமுறை சென்னை சென்று அவனைப்பார்த்து வந்திருந்தாலும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு வீட்டிற்குள் வந்துநின்ற மகனைப் பார்த்ததும் கண்ணீர் மாலையாக வெளியேற, “ப்ரித்விக்கண்ணா” என்று மகனை ஓடிவந்து அணைத்துக்கொண்ட மலர்விழியோ, “எப்டி இருக்க ப்ரித்வி. இன்னிக்குதான் வீட்டுப்பக்கம்வர தோணுச்சா உனக்கு. அதுவும் நவீக்கு கல்யாணம்னு போன்போட்டபின்னதான் வந்துருக்க” என்று சிறுபிள்ளைபோல் தேம்பத் தொடங்கினாள்.
பெரியன்னைக்கு ஒரு கட்டாயப்புன்னகையை பதிலாய் தந்தவனும், “அச்சோ இல்லவிழி. பிஜியும் பிராக்டிஸும் சேந்து பண்ணதால ஊருக்குவர நேரமே கிடைக்கல்ல.” என்று அன்னையைத் தேற்றியவன்,
“நான் என்ன உன்னோட யுவித்தான் மாறி புட்பாக்டரியா வச்சுருக்கேன். நான் ஒரு டாக்டர்விழி. எனக்குன்னு நிறைய பொறுப்புகள் இருக்கு. ஒரு டாக்டரோட நேரம் அவங்களுக்கானது இல்ல” என்று உண்மை கலந்து கூறினாலும் குறும்புப்பாலகனாய் தந்தையையும் வாரிவிட்டு அன்னை கையால் சிறுஅடியும் வாங்கிக் கொண்டவனின் கூடு மட்டுமே அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தது.
அவன் கண்களும் சிந்தையும், “கன்னுகுட்டி உனக்கு என்னாச்சுடி. ஏன்டி யாரோபோல நடந்துக்குற? ரெண்டு வருஷமாகியும் இன்னும் உன் கோவம் தீரலையா? நான் அன்னிக்கு செஞ்ச செயலாள என்ன முற்றும் முழுசா வெறுத்திட்டியா யுகி?” என்று அடைத்தகதவிலே பார்வை பதித்திருந்தான் ஆடவன்.
அதற்குள் அவன் வரவை அறிந்து, “என்ன சொல்லுது உன் சென்னை படிப்பு. எல்லாம் முடிஞ்சுதா? இல்ல, அடுத்து ஆந்த்ராக்கு ஏதும் போகனுமா?” என்று வினவியபடி அங்குவந்த யுவாவின் விழிகளும் மகனை தலைமுதல் காலோடு பார்த்து அவன் நலனை உறுதி செய்துகொண்டது.
அவன்பின்னே வந்த தனாவும் யுவா விழியால் செய்ததை, “உடம்புக்குலாம் சுகம்தானே தம்பி?” என்று வாயால் வினவ…
இருவருக்கும் உரிய பதிலை வழங்கியவனின் உள்ளக்குமுறலைத்தான் யாரும் அறிந்திருக்கவில்லை.
அச்சமயம் ஜானுவும் கதிரவனும் அங்கு வந்து சேர்ந்து ப்ரித்திவை நலம் விசாரித்துவிட்டு, யுவாவிடம் திரும்ப…
அவனும், “கல்யாணம் நிச்சயம் ரெண்டுக்கும் இன்னும் பசங்களுக்கு பட்டுத்துணி எடுக்கலியே. பத்திரிக்கை டிசைனும் பாக்கல. அதான் இன்னிக்கு போயிட்டு வந்துரலாம்னு வரச்சொன்னேன்மா” என்று தங்கையிடம் கூறியவன்…
“அவன சாப்டு கொஞ்சம் தூங்கி எழுந்து வரச்சொல்லு நவீன். எல்லாரும் போய்ட்டு, உங்க கல்யாணத்துக்கும் அவங்க நிச்சயத்துக்கும் உடுப்பு எடுத்துட்டு பத்திரிக்கையும் அடிக்க கொடுத்துட்டு வந்துரலாம்” என்று சொன்னவன்,
“கொஞ்சம் வெளியபோயிட்டு வந்துர்றேன் எல்லாரும் ரெடியா இருங்க” என்று மனைவி மகள்களையும் நோக்கி சொல்லிவிட்டு தனாவோடு வெளியேறிவிட…
இங்கே ப்ரித்திவோ, “நிச்சயம் யாருக்குடா?” என்று நவீனிடம் கேட்டு அவன் பதிலையும் பெற்றுக்கொண்டவன் மொழிய பதிலில்லாது ஊமையாகி நின்றிருந்தான்.
பிறந்ததினம் தொட்டு இத்துணை வருடங்கள் ஒருத்தியை உயிரில் வைத்து நேசித்து அது நேசிப்புதான் என்று கண்டு, உறுதியும் செய்தப்பின்னர் அவளை அண்ணனுக்கே ஆனாலும் வேறு ஒருவனுக்கு தாரைவார்க்க நேரந்திருக்கும் கூற்றையே தாங்க முடியாதவன் அதேநாளில் அவள் தங்கையோடு தனக்கு நிச்சயம் என்ற கூற்றில் ஆற்றாமையோடு சினமும் எழும்ப,
“யுகி என்னடி நடக்குது இங்க?” என்று இன்னும் இறுக மூடியிருந்த கதவையே பார்த்தபடி அவ்விடம் விட்டு அகன்று தனதறைக்குள் நுழைய…
தற்போதைய சூழ்நிலையும், இரண்டு வருடகால மருத்துவக்கற்றலும் கொடுத்திருந்த பக்குவத்தில் சற்று அமைதி காத்தவன் இரண்டு வருடங்கள் கழித்து சொந்தவீட்டிற்கு வந்திருக்கும், அதிலும் மேற்படிப்பு முடித்து md பட்டம் வாங்கவிருக்கும் மகிழ்ச்சி சிறிதும் இன்றி பெயருக்கு உண்டு உறங்கி எழும்ப, அடுத்த மூன்று மணி நேரத்தில் அவனையும் அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை பெண்களுக்கு உடை எடுக்க அனைவருமே கிளம்பிச் சென்றனர் திருநெல்வேலியை நோக்கி.
மணப்பெண்ணாய் இருந்ததாலோ அல்லது வேண்டுமென்று தவிர்த்தாளோ, இல்லாவிடில் இனி இப்படித்தான் என்று அவனுக்கு பாடம் சொல்ல விளைந்தாளோ.
ஜவுளிக்கடைக்கு செல்லும்பொழுதும் சரி, அங்கு உடைகள் தேர்வின் போதும், வீட்டிற்கு திரும்பி வந்தும்கூட ப்ரித்திவிடம் ஒருவார்த்தைகூட பேசவே இல்லை. அவன் முகத்தைக்கூட பார்க்கவில்லை சம்யுக்தா.
ஏற்கனவே இரண்டு வருடங்கள் முன்னால் சிறுதவறை செய்துவிட்டு அவள் கோபத்திற்கு ஆளாகிச்சென்றவனை இன்று பார்வையாலே எட்டநிறுத்தி அவனை கொல்லாமல் கொன்று புதைத்து கொண்டிருந்தாள் அவனின் யுகி.
அத்தோடு இன்னும் சிலநாட்களில் கணவனாகப்போகிறவன் என்ற முறையிலோ என்னவோ அவள் நவீனிடம் நெருக்கம் காட்டுவது போலும் தோன்ற ப்ரித்திவால் அதை சிறிதும் ஏற்கவும்முடியாது, எல்லோர் முன்னிலும் எதையும் வெளிக்காட்டவும் இயலாது பித்துப் பிடிப்பதுபோல் உலாவந்தவன்,
அவளும் அவனுடனான கண்ணாமூச்சி விளையாட்டை முடித்துக்கொள்ள எண்ணினாளோ, அவன் இறுதியாய் அனுப்பிய குறுஞ்செய்திக்கு, “இரவு மொட்டைமாடிக்கு வந்துவிடு” என்றுமட்டும் பதில் அனுப்பிஇருக்க…
அடுத்த ஐந்தாவது நிமிடம் இவன் மொட்டைமாடியில் நின்றிருந்தான்.
அலைகடலென ஆர்ப்பரிக்கும் ஆடிமாதக்குளிர்காற்றில் ஆடவனின் அடர்ந்தசிகை கருவண்ண நாணலாய் அசைந்தாட, அவற்றோடு விளையாடும் எண்ணம் சிறிதும் இன்றி, “ப்ச்” என்ற சலிப்போடு விரல்கொண்டு அதைக் கோதி அடக்கியவனின் வெறுமை நிறைந்த விழிகளோ அந்த வெள்ளிநிலவைப்பார்த்திருந்தது.
ஜில்லென்ற பனிக்காற்றின் குளுமை அவன் என்புகள் வரை ஊடுருவியும் சிறிதும் அசைந்து கொடுக்காது இருகைகளையும் கால்சராய் பாக்கெட்டுக்குள் விட்டு, கைபிடிச்சுவற்றில் சற்றே சாய்ந்து நின்றவனின் கம்பீர முகத்தில் இருந்த கலக்கரேகைகளில் அந்தநிலவு மகள்கூட அவனைவிட்டுச் செல்லமனமில்லாது அவனது கண்பார்வையிலே கட்டுண்டு இருக்க…
ஆடவனின் அத்தைமகளோ அவனது அரைமணி நேரக்காத்திருப்பிற்குப் பின்னேயே மொட்டைமாடிக்கு வந்து சேர்ந்தாள்.
பார்த்து இரண்டு வருடங்கள் ஆனதால் அவன் நலனை ஆராய்ந்தாளோ???
அல்லது இனிமேல் இதுபோல் பார்க்க முடியாதே என்று அவனை உச்சாதிபாதம் படம்பிடித்து உள்ளமதில் பூட்டிக்கொண்டாளோ???
அவளே அறிவாள்.
நிலவொளியில் நின்றிருந்தவனின் வரிவடித்தையும் வசீகர வதனத்தையும், படிப்பா, வயதா, உயரமா எது கூடியதால் வந்தகளை இது என்று நிமிடங்கள் சில அவனையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.
நிமிடங்கள் பல பார்வையாலே கரைய, காற்றினில் மிதந்துவந்த வாசமதில் அவள் வாசத்தை ஆடவன் உணர்ந்தானோ???
“யுகீ…” என்று மாடிபடிகள் நோக்கி
அவன் திரும்பவும் இவளும் சட்டென்று பார்வையை மாற்றிக்கொண்டவள்
ஆழமூச்செடுத்தவாறே அவனை நெருங்கினாள்.
அதற்குள் ஈரெட்டில் அவளை நெருங்கியிருந்தவன், “யுகீ வந்துட்டியா” என்று அவளின் இருகரங்களையும் பற்றிக்கொண்டு பெண்ணவளை தோளோடு அணைக்க முயன்றான்.
ஆனால் அவன் செய்யவிளைவதை ஊகித்து இருந்தவளோ, “திவா என்ன செய்ற நீ? என்னவிடு” என்று அவனைப்பிடித்து தள்ளிவிட்டவள்…
“இனி ஒருதடவை இப்டித்தொட்டு பேசுனன்னா நான் மனுசியாவே இருக்கமாட்டேன்டா” என்றும் விரல்நீட்டி எச்சரித்தாள்.
அவள் பேச்சில் விக்கித்துப்போனவனோ, “யுகீ யுகீ… உனக்கு என்னாச்சுடி?. ஏன் ஏன்டி என்கிட்ட இப்டி நடந்துக்கற? நான் உன் திவாடி” என்று திணறியவனை அவளாலும் பார்க்க இயலவில்லையோ???
“இவ்ளோ நடந்தப்புறமும் நான் உன்கிட்ட எப்டி நெருங்கிப்பழகட்டும் திவா?. அதுமட்டுமில்லாம இன்னும் பத்துநாள்ள நவீன்மாமாக்கும் எனக்கும் கல்யாணம். இனிமேல் எல்லாம் இப்படித்தான். நான் உனக்கு அண்ணியாகிடுவேன்
மீண்டும் அவளை நெருங்கி வலுக்கட்டாயமாக அவள் கையைப்பற்றிக்கொண்டவன்,
“யுகி யுகி வேணான்டி அப்டிலாம் சொல்லாத. இந்தக்கல்யாணம் நடக்கக்கூடாது யுகி. நான் உன்ன யாருக்கும் விட்டுத்தரமாட்டேன்டி. நீ எனக்கு வேணும் யுகி” என்று அவளைவிடவும் அழுத்தமாய்க்கூறினான்.
அவ்வழுத்தக்குரல் அவளுள்ளும் குளிர்பரப்பினாலும், “லூசுமாறிப்பேசாத திவா. இது எப்பயோ முடிவு பண்ண கல்யாணம். இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாதுன்னா என்ன அர்த்தம். அத்த உன்ன சின்னப்பையன்னு சொல்றது சரியாதான் இருக்கு.” என்று அவளும் அவனை விலக்கும் முயற்சியில் ஈடுபட்டாள்.
அவள் பேச்சில் கலக்கத்தோடு சினமும் துளிர்க்க, “முன்ன எப்டியோ இருக்கட்டும் பப்ளி. ஆனால் இப்போ இப்போ நவீன் மட்டுமில்ல. யாருக்கும் உன்னநான் கொடுக்கமாட்டேன்.
நீ என்னுடையவடி. இந்தக் கல்யாணத்த நிறுத்திடலாம் யுகி” என்று சிறுபிள்ளையாய் கெஞ்சியவனின் உறுதியான குரலும் தோற்றமும் நீ சொல்லும் சிறுவன் நானல்ல என்று சொல்லாதுசொல்ல…
முயன்று அதை புறந்தள்ளியவளோ, “சின்னப்புள்ளயிலிருந்து நீ மாமாமகன் நான் அத்தமகன்னு இருக்கதுதானேடா. இப்போ மட்டும் புதுசா என்னடா வந்துச்சு. லூசுமாறி உளராம கீழபோலாம் வாதிவா” என்று படிகள் நோக்கி எட்டுவைத்தாள் பெண்.
அதற்குள், “யுகீ நில்லுடி” என்று அவளை இழுத்துப்பிடித்து நிறுத்தியவன் “இப்போ மட்டும் என்னாச்சுன்னு கேட்டில்ல. இப்போ நான் நான் உன்ன உன்ன” என்று ஒருகணம் விழிகளை மூடித் திறந்தவன், “நான் உன்ன காதலிக்கிறேன்டி. உயிருக்கு உயிரா நேசிக்கிறேன். வாழ்க்கை முழுசும் உன்ன நேசிச்சுகிட்டே இருக்க ஆசைப்படுறேன் யுகி. இது நேசம்தான்னு அன்னிக்கு உன்ன கிஸ்பண்ணப்போதான் நானே உணர்ந்தேன்டி. நீ இவ்ளோ நாளா கோவத்துல இருந்ததால,
நீ ஆசைப்பட்ட மாறி பிஜியும் முடிச்சிட்டு உன்னோட திவாவா உன்முன்னாடி நின்னு என் காதலை உன்காலடி கொட்டனும்னு ரெண்டு வருசமா காத்துக்கிட்டு இருக்கேன்டி” என்று முகத்தில் இருந்த அழுத்தத்திற்கு சம்மந்தமே இல்லாது தொண்டை கரகரக்க காதல் உரைத்து முடித்தவனின் பேச்சில் நொடிகள் பல அப்படியே விழிகள் மூடி நின்று விட்டாள் சம்யுக்தா.
எந்த வார்த்தைகளை அவன் சொல்லிவிடக்கூடாது என்று அவனோடு இரண்டு வருடங்கள் மௌனவிரதம் கடைபிடித்தாளோ எதை தன்னால் ஏற்க இயலாது என்று அஞ்சி அவன் விழிகளைக்கூட ஏறிட மறுக்கிறாளோ அந்த வார்த்தைகளை அவன் கூறியேவிட்டான்.
அன்று மூச்சைமுட்ட வைக்கும் முத்தத்தால் உணர்த்த முயன்றதை இன்று நெஞ்சை நெகிழ்த்தும் வார்த்தைகளால் அழுத்தம் திருத்தமாய் உடைத்து உரைத்தே விட்டான்.
உன்னை உயிராய் நேசிக்கிறேன் என்ற ஆணின் வார்த்தைகள் ஒரு பெண்ணிற்கு இத்துணை வேதனை அளிக்குமா??? அளிக்கிறதே. இதயத்தை ரெண்டாய் பிளப்பதுபோல் வலிக்குமா??? வலிக்கிறதே…