‘அவனுக்கு ஏன் இந்தக்காதல் வந்தது. அதுவும் என்மீது. அவனைவிட பத்துமாதங்கள் மூத்த பெண்ணின்மீது எப்படி ஒருவனால் காதல் கொள்ள முடிந்தது. இது தவறல்லவா?. அதை எப்படி இந்த உலகம் ஏற்கும். அதிலும் நான் இன்னொருவருக்கு சொந்தமாகக்கூடியவள் என்று அறிந்தும் எதற்காக இப்படி ஒரு பைத்தியகாரத்தனத்தை வளர்த்துக்கொண்டான் தன்னுடைய திவா. அது என்னையும் சேர்த்து வாட்டுகிறதே. அவன் கோரிக்கையை ஏற்று அவன் வேதனையைக் குறையேன் என்று என்னையும் குத்திக்கூறுபோடுகிறதே. அவனைவிட ஒருநாளாவது பின்னே பிறந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கத்தையும் என்னுள் விதைக்கிறதே. நான் என்ன செய்வேன் கடவுளே.’ என்றெல்லாம் உள்ளூற கலங்கித் தவித்தவள் நொடிகள் சில பெரிய பெரிய மூச்சுக்களை எடுத்துவிட்டு, நீர்திரண்ட விழிகளைச் சிமிட்டி கண்ணீரை சிதறவிடாமல் தடுத்து நிமிர்ந்து அவனை ஏறிட்டவள், “ஹா ஹா ஹா… குட் ஜோக் திவா குட்ஜோக் பார் தி டே” என்று வயிற்றைப்பிடித்துக்கொண்டு சிரிக்கத்தொடங்கிவிட்டாள் சம்யுக்தா.
“நீ என்ன லவ் பண்றியா? வாட் எ காமெடி திவா… லிப்லாக் பண்ண உடனே ஒருத்தனுக்கு லவ் வந்துச்சுன்னா அப்றம் எதுக்குடா மனுஷன் தாஜ்மஹால் கட்டுறவர ரிஸ்க் எடுக்கறான்.” என்று மீண்டும் உரக்கச் சிரித்து, “உன்னவிட பெரிய பொண்ணப்போய் காதலிக்கிறேன்னு சொல்றியே உனக்கு வெட்கமா இல்ல. அதுவும் அண்ணியாகப்போறவளை.” என்று சிரிப்பை நிறுத்திவிட்டுச் சீறியவள், “உனக்குள்ள இப்டி ஒரு அழுக்கு இருக்கும்னு நான் நெனச்சுக்கூட பாக்கலடா. நம்ம வீட்ல நம்மமேல எவ்ளோ நம்பிக்கை வச்சு பழகவிட்டுருக்காங்க. நவீன்மாமா மேரேஜ் முடிஞ்சாலும் நீங்க இப்டியே இருங்கன்னு எவ்ளோ பெருந்தன்மையா சொன்னாங்க. ஆனா நீ எல்லாத்தையும் குழிதோண்டி புதைச்சுட்டடா. நவீன் மாமாக்கு பெரிய துரோகம் பண்ணிட்ட… ச்சீ” என்றவளை…
“யுகி ப்ளீஸ்டி… என்ன புரிஞ்சுக்கோ. நான் யாருக்கும் துரோகம் பண்ண நினைக்கலடி. எனக்குள்ள எப்டி இந்தக்காதல் வந்துச்சுன்னு எனக்கே தெரியலடி. ஒவ்வொரு நிமிஷமும் நீ எனக்கானவ. உன்ன நான் யாருக்கும் கொடுக்கக்கூடாதுன்னு மட்டும் என் இதயம் துடியாதுடிக்குதுடி. உன்னவிட சின்னவனா பிறந்தது என்தப்பா யுகி? இல்ல எனக்குள்ள இருந்த காதலை நான் உணரும்முன்னவே உன்ன நவீனுக்கு பேசிவச்சது என்தப்பா?” என்று உயிரை உருக்கி வார்த்தைகளாய் கோர்த்தவனுக்கு தொண்டை அடைத்து கால்கள்கூட நிற்க மறுத்தது.
அவன் தவிப்பு அவளது உள்ளத்தையும் தகிக்க வைத்ததில், விரைவில் இங்கிருந்து செல்ல வேண்டும் என்றுமட்டும் எண்ணியவள், “ஜஸ்ட் ஷட்அப் தி நான்சன்ஸ் டாக் திவா. உன்னோட டெஸ்டோஸ்டீரான் விளையாட்டுக்கெல்லாம் நான் பதில்சொல்ல முடியாது. அன்னிக்கு ஏதோ ஹார்மோன் பிரச்னையால உணர்ச்சிவசப்பட்டு முத்தம் கொடுத்துட்டன்னு உன்ன மன்னிச்சு, மறந்து உன்னோட பேசவந்தா நீயும் உன்னோட ஆம்பள புத்திய காட்டிட்டில்ல. உங்களுக்கெல்லாம்
ஒரு பொண்ணு நெருங்கிப்பழகினாலே அது காதல்தானா?” என்றும் எடுத்தெறிந்து பேசியவள்,
“இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. உனக்கு வந்துருக்க ஹார்மோன் சேஞ்சஸ்குலாம் லவ்னு பேர்வச்சு என்கிட்ட உளர்ன மாதிரி வேறயார்கிட்டயும் சொல்லி இந்த மேரேஜ் உன்னால நின்னுச்சுனா என்ன நீ உயிரோடவே பாக்கமுடியாது” என்றும் பெண்ணவள் எய்த வார்த்தையில் அம்புதுளைத்த புறாவாய் அடிபட்டு நிமிர்ந்தவனிடம், “இது என்மேல சத்தியம் திவா” என்றும் இரக்கமே இல்லாது கூறியவள் படிகளில் தடதடத்து இறங்கிச் சென்றுவிட…
“யுகீ… போகாதடி” என்று அப்படியே மடங்கி அமர்ந்து சுவரோடு சாய்ந்து கலங்கித்தவிக்கத் தொடங்கினான் ப்ரித்திவராஜ்.
‘எப்படியான வார்த்தைகளை சொல்லிச்சென்றுவிட்டாள் தன்னவள். என்னுடைய கள்ளமில்லாக்காதலை ஹார்மோன் விளையாட்டு என்று எப்படி பேச முடிந்தது அவளால்?. அன்று அகமும் புறமும் அவளுக்கே என்று உணர்ந்து நெஞ்சைமுட்டும் நேசத்தில் என் உயிர் உருகி நான் இட்ட முத்தத்தை உணர்வுப்பெருக்கு என்று எப்படி கூற முடிந்தது அவளால். நான் அவளைவிட பத்துமாதங்கள் பின்னர் பிறந்ததால் அவளைக் காதலிக்க நான் தகுதிஇல்லாதவன் ஆகிவிட்டேனா???” என்று மருகித் துடித்தவனுக்கு இவை எல்லாவற்றையும் கூட ஜீரணிக்க முடிந்தது.
ஆனால் இறுதியாக இது நவீனுக்கு செய்யும் பெரும் துரோகம் என்றதையும், அவன் காதலை வெளியே சொல்ல முயன்றால் அவள் உயிரையே விட்டுவிடுவேன் என்று அவள் சொல்லிச்சென்றதிலும், “உன் உயிரவிட என்னோட காதல் அப்டி ஒன்னும் பெரிசில்லடி. சொந்த அண்ணனுக்கே துரோகம் பண்ற அளவு நான் அவ்ளோ மோசமானவனும் இல்லடி” என்று உணர்வுகள் மரத்த குரலில் கூறிக்கொண்டவன் எப்படி அங்கிருந்து அவன் அறைக்குச்சென்றான் அடுத்தடுத்த நாட்களை எப்படிக் கடந்தான் என்று அவனுக்கும், அவனைப் பத்துமாதங்கள் பின்னே படைத்த கடவுளுக்குமே வெளிச்சம்.
வலிக்கவைக்க வேண்டும் என்றே பேசப்பட்ட வார்த்தைகள்தான். அவனை மேற்கொண்டு எதுவும் செய்யவிடாது கட்டிவைக்க வென்றே சொல்லம்புகளை அவனுள் எய்துவிட்டு வந்தவளும் அன்று மட்டுமல்லாது அடுத்துவந்த நாட்களிலும், “திவா மன்னிச்சுடுடா. என்ன மன்னிச்சுடு கண்ணா. நான் உனக்கு பொருத்தம் இல்லாதவடா. நான் உன்னவிட மூத்தவதிவா. என்னால உன்ன காதலனா, கணவனா பாக்கமுடியாதுடா. ஏன்டா என்னப்போய் காதலிச்ச???” என்று கண்ணீருக்கு இரையாகியவள்,
‘இந்தகல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரியாகிடும். திவாவும் அப்றம் என்ன மறந்துடுவான்’ என்று ஒருவாறு நிதர்சனத்தை ஏற்று நவீனுடனான திருமணத்திற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டாள்.
தங்களை ஆட்டுவிக்கும் நூல்கள் கடவுள் கையில் உள்ளதை உணராமல்.
நாட்கள் அதன்போக்கில் நகர, இன்னும் ஒரு திங்களில்(வாரம்) நிகழவிருக்கும் திருமண விழாவிற்கு யுவாவின் வீடே விழாக்கோலாம் பூண்டிருந்தது.
வெகுநாட்களுக்குப்பிறகு நடக்க இருக்கும் இரட்டை விசேஷம் என்பதால் பத்துதினங்கள் முன்பே யுவாவீட்டின் பெண்பிள்ளைகள் எல்லாம் குழந்தைகுட்டிகளோடு பிறந்தகம் வந்து சீராடிக்கொண்டிருக்க, அருகில் இருக்கும் உறவினர்கள் அவ்வப்பொழுது வருவதும் போவதுமாக அரண்மனைவீடே கலகலப்பிற்கு பஞ்சமில்லாது இருந்தது.
ஜானு மருத்துவமனையைவிட்டு அதிகம் வரமுடியாத காரணத்தால் இரண்டு மருமகள்களையும் மலரும் காயுவும் தங்களோடே வைத்துப் பார்த்துக்கொள்ள, இன்னும் ஐந்தாறு நாட்களில் மனைவியாகப் போகிறவளிடம் தானாகச் சென்றது நவீனின் பார்வை.
காதல் பார்வை இல்லாவிடினும்
மனைவியாகப்போகிற ஒரு அழகுப்பெண்ணிடம் இயல்பாகத் தோன்றும் சாதாரண ஈர்ப்புக்கூட அப்பார்வையில் இல்லை. இன்னும் சில தினங்களில் மாமன்மகனை மணம்புரியப்போகிற பெண்ணின் முகம் இத்துணை பொலிவிழந்தா காணப்படும் என்கின்ற ஆராய்ச்சிப்பார்வைதான்.
அன்று இரவு உணவிற்கு அனைவரும் மேசையில் கூடியிருக்க, அன்னையின் நச்சரிப்பில் வேண்டா வெறுப்பாய் இறங்கி வந்து உணவை அளைந்து கொண்டிருந்த ப்ரித்திவிற்கோ அந்தப்பார்வையைக் கூட சிறிதும் ஜீரணிக்க முடியவில்லை.
‘இவன் எப்படி அவளை அப்டி பார்க்கலாம்?’ என்று உள்ளூறக் குமுறியவன், ‘இதுமட்டும் புராணக்காலமா இருந்திருந்தா அந்த ப்ரித்திவராஜ் குதிரைல வந்ததுபோல என் சம்யுக்தையை கடத்திட்டாவது
போயிருப்பனே. நவீன காட்டியும், உன்மேல சத்தியம்னு சொல்லியும் என் கையக்கட்டிப்போட்டியேடி ராட்சசி.” என்று உள்ளம் உலைகளனாய் கொதித்துக் கொண்டிருந்தவனிடம் திரும்பிய யுவாவோ,
“நாளக்கி சாயங்காலம் சென்னைல இருந்து ஆதிமாப்பிள்ளையும், ஆத்விக்மாப்பிள்ளையும் ப்ளைட்ல வர்றாங்க. நீ போய் கூப்டு வந்துடுப்பா” என்று சொல்ல…
“இல்ல என்னால முடியாது. இதுக்கும் அவனையே போகச்சொல்லுங்க” என்று சட்டென்று நவீனை நோக்கி கடுப்பாகச்சொன்னான் ப்ரித்திவ்.
அதைக்கேட்டு அவனுக்குமேல் கடுப்பாகிய அவன் தந்தையோ,
“என்னடா பேசுறநீ அவன் புதுமாப்பிள்ளடா. வீட்டுமாப்புள்ளைக எப்ப வந்தாலும் நீதானடா போய் கூட்டிட்டு வருவ?” என்று மீண்டும் சொல்ல…
தன் காதல் முளைவிடும் முன்னே காதலியாலே வெட்டி ஏறியப்பட்ட ஏமாற்றத்தில் இருந்தவனோ, “அதான் இப்போ போகமுடியாதுன்னு சொல்றேன்ல. புரிஞ்சுக்கோங்க. எனக்கு ஹாஸ்பிடல்ல வேலைஇருக்கு. அவன் வெட்டியாதான இருக்கான். அப்றம் என்னய ஏன் இவ்ளோ டார்ச்சர் பண்றீங்க” என்று ஏகமாய் கத்தியவனுக்கு, ‘சும்மா வீட்டுக்குள்ளயே இருக்கதாலதான என் யுகிய அப்டி பாத்துவச்சான்’ என்று இன்னும் சிலநாட்களில் அவளை ஒட்டுமொத்த உரிமையாக மாற்றிக்கொள்ளப் போகும் நவீனின் மீது அத்துணை அகங்காரம் வந்தது.
மகனின் எடுத்தெரிந்த பேச்சில் மேலும் சினம் கொண்ட யுவாவும்,
“என்ன பேச்சுடா இது. அவன் அண்ணன்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா உனக்கு?” என்று ஏகத்துக்கும் பொரிய…
“யுவிப்பா அதான் தம்பி வேலை இருக்குன்னு சொல்றான்ல. மூர்த்தி அண்ணன அனுப்புனாலே போதும்பா” என்று சூழலை இலக்குவாக்க முயன்றனர்.
அதற்குள் ப்ரித்திவின் சப்தத்திலே சம்யுவைவிட்டு எப்பொழுதோ பார்வையை திருப்பிஇருந்த நவீனோ, “சித்தப்பா அவன் ஏதோ டென்ஷன்ல இருக்கான்போல. அதான் இப்டி பேசுறான். ஒன்னும் பிரச்னையில்லை. நானே போய் மாமா ரெண்டு பேரையும் கூப்ட்டு வர்றேன்” என்று பொறுமையாகவே சொன்னவன், “ட்ரைவர மட்டும் அனுப்புனாவுலாம் நல்லா இருக்காதுக்கா” என்று சித்தப்பா மகள்களிடமும் கூறியவனின் ஆராய்ச்சிப்பார்வை இப்பொழுது தம்பியிடம் கூர்பார்வையாகத் திரும்பியிருந்தது.
நவீனின் அந்தப் பொறுமையும் விட்டுக்கொடுத்தலும் ப்ரித்திவின் புத்தியில் உரைத்து ஏற்கனவே குன்றியிருந்தவனை மென்மேலும் குற்ற உணர்ச்சி கொள்ளச்செய்ய, ஊடுருவும் அவன் விழிகளையும் சந்திக்க இயலாதவன் சற்றே தன்னை நிதானித்து, “இல்லடா நீ புதுமைப்பிள்ளை. நானே போயிக்கறேன்” என்றுமட்டும் வெற்றுக்குரலிலே கூறிவிட்டு விறுவிறுவென்று தன்னறைக்குள் நுழைந்து, “யுகீ… என்னால முடிலடி… ரணவேதனையா இருக்குடீ…” என்று படுக்கையில் விழுந்து விழிகளை மூடிக்கொண்டான் ப்ரித்திவ்.
இத்துணை தினங்கள் அளவில்லா அன்பைக் கொட்டிய நேசப்பெண்ணின் ஒதுக்கமும், உதாசீனமும், அவள் பேசிய வார்த்தைகளின் தாக்கமும், இன்னும் சிறிதொரு நாளில் அவள் வேறு ஒருவனுக்குச் சொந்தமாக போகிறாள் என்ற அவஸ்தையும் அவனை அவனாகவே இருக்கவிடாது பிச்சியைப்போல் ஆக்கிஇருந்தது.
ஆடவனின் கையறுநிலையில் பெண்ணின் உள்ளமும் ஊமையாய்க் கதறினாலும் அவனின் காதல் முறையற்றது என்று அதை ஏற்க இயலாது தவித்தவள், கண் இருந்தும் குருடியாய் வாளாவிருந்து விட்டாள்.
அடுத்து வந்த நாட்களிலும் இதே நிலையே நீடிக்க, இப்பொழுதெல்லாம் ப்ரித்திவ் வீட்டிலே இருப்பதில்லை. ஜானுவிற்கு உதவியாய் அவர்களின் சிறு மருத்துவமனையிலும், முக்கால்வாசி வேலைகள் முடிந்திருக்கும் நிலையில் அவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் பெரியளவு மருத்துவமனையின் கட்டுமானப்பணிகளை பார்வையிடுகிறேன் என்ற பெயரிலும் பகல் பொழுதை மொத்தம் வெளியிலே கழிக்கத் தொடங்கியிருந்தவன் இரவும்கூட தாமதமாகவே வீட்டிற்கு வரத்தொடங்கியிருந்தான்.
மேலும் இரு தினங்கள் கழிந்து இன்னும் மூன்று நாட்களில் திருமணம் முதல் நாள் மாலை நிச்சயம் என்னும் நிலையில் இரவு மணி பனிரெண்டை நெருங்கும் சமயம் ப்ரித்திவ் வீட்டிற்குள் நுழைய, அத்துணை நேரமும் அவனுக்காக காத்திருந்த அவன் அன்னை மலரோ மகனைப்பார்த்ததும், “ப்ரித்விமா…” என்று அவனிடம் விரைந்தவள், “ஏம்பா இப்போல்லாம் ரொம்ப லேட்டா வர்ற. மணி எவ்ளோ ஆகுது பாத்தியா? நாளைக்கு நிச்சயத்த வச்சுக்கிட்டு எதுக்குப்பா வெளில அலையுற” என்று கேட்டவாறே உணவுகளை எடுத்து வைக்க…
அதைக்கேட்ட அவன் மகனோ சாப்பிடும் நிலையிலா இருக்கிறான்.
“ம்மா எனக்கு பசியில்ல. நான் அப்றம் சாப்புட்டுக்கறேன்.” என்றவன், “எனக்காக முழிச்சுருக்க வேணாம்னு நான்தான் போன் பண்ணி சொன்னேன்ல. போங்க போய் தூங்குங்க?” என்றும் கடிந்துவிட்டு உணவு வகைகளை திரும்பிக்கூடப் பாராமல்
வரவேற்பறையைக் கடக்க…
“இப்போவே பன்னண்டு ஆச்சுப்பா. இனி எப்போ சாப்புடப்போற.” என்று கேட்டு தன்முகம் பார்க்கக்கூட மறுத்துச் செல்லும் மகனையே கணங்கள் பல பார்த்து நின்ற மலருக்கு
ஒரு அன்னையாய் மகனின் தவிப்புகள் புரிந்ததோ, ‘ரெண்டு வருசத்துக்கு முன்னஇருந்தே என்புள்ள ஏதோபோலவே இருக்கானே. சரியா பேசமாட்டிறான், சிரிக்கமாட்டிறான், இப்போ சாப்புடாமக்கூடப் போறான்.’ என்று புலம்பியபடியே வேறுவழியில்லாது தனதறை நோக்கி நடந்தாள்.
அத்துணைநேரம் அங்கு நடந்தவற்றை எல்லாம் பார்வையிட்ட நாச்சியம்மையோ
வரவேற்பறையைக் கடந்து மாடிப்படைகளில் ஏற முயன்ற ப்ரித்திவை, “ராசா…” என்று அழைத்தவர், “ஏன் ராசா ராவுல சாப்பாடு வேணாம் சொல்ற. உன் அம்மா எவ்ளோ வருத்தப்பட்டுப்போறா பாத்தியா” என்றவர்…
“ஆமா ராசா… நீ ஏன் இப்போல்லாம் கப்பக்கவுந்தபோலவே(கப்பல்) இருக்க? என் சுருக்குபைலயிருந்து ரூவாயும் எடுக்கறதில்ல. உன் மனசுல என்ன வெசனம்னு என்கிட்ட சொல்லுப்பு” என்றும் வாஞ்சையாக வினவினார்.
அவரின் கூற்றில் “அப்பத்தா…” என்று நெகிழ்ந்து அவர் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டவன், “ஒரு ஆண் தன்னவிட கொஞ்சம் வயசுல மூத்தபொண்ண காதலிக்கிறது பெரியதப்பா அப்பத்தா?” என்று கேட்க…
பேரனின் கூற்றில் சிலநொடிகள் யோசித்து முதுமையில் சுருங்கிய முகத்தை மேலும் சுருக்கியவரோ, “இல்லப்பு அப்டின்னு யார் சொன்னது? அன்புக்கு எதுக்குப்பு வயசு?” என்று பேரனிடம் பதில் கேள்வியை எழுப்பினார்.
நான்கு தலைமுறை கண்ட அப்பத்தாவின் இடுங்கிய தீட்சண்யவிழிகள் தன் மனக்கதவை உடைப்பதை உணர்ந்து சடுதியில் சுதாரித்து சிறு புன்னகையை உதிர்த்தவனும் தன் நண்பன் ஒருவன் தன்னவிட பெரியபெண்ணை காதலிப்பதாகவும் அதை அந்தப்பெண் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறி அதனால் நண்பன் வருந்துவதாகவும் மழுப்பியவனிடம்…
“அந்தப்பொண்ணு காதலை ஏத்துக்கலைன்னா என்னப்பு.
உன் சினேகிதனோட நேசம் நேசமில்லாது போகுமா?” என்றவர் “அவன் அந்தப்புள்ளமேல வச்சுருக்கது உசுரான நேசம்னா அது அவகள சேத்துவைக்கும்ப்பு. நம்மாள முடியாதத நம்மள படச்சவன்ட்டவிட்டுடனும். அவன் எல்லாம் பாத்துப்பான். இப்போபோய் நீ தூங்கு ராசா” என்ற அப்பத்தாவின் வார்த்தைகள் நாளை நடக்கவிருக்கும் எதையும் மாற்றாது என்று உணர்ந்தாலும், ஒருவித இதம் மனதினுள் பரவ
“சரிங்கப்பத்தா” என்று எழுந்து கொண்டவன் என்ன நினைத்தானோ அங்கிருந்த பூஜை அறைக்குள்ளும் நுழைந்து கொண்டான் ப்ரித்திவ்ராஜ்.
இதுவரை தனக்கென்று எதுவும் கேட்டு அவ்வறைக்குள் நுழைந்திராதவன் அங்கிருந்த கடவுள் படங்களின் முன்னால் சில நிமிடங்கள் விழிமூடி நின்று, அனைத்தும் ஆள்பவனிடம் தன் பாரத்தை இறக்கி வைத்தவன் வெளியே வந்து தனதறை நோக்கி நடக்க…
வழியில் இருந்த அறைக்குள் இருந்து ஒரு பெண்ணின் மெலிதான விசும்பல் சத்தமும், “ம்ச்.. ம்ச்.. ம்ச்..” என்று எதற்க்கோ முத்தமிடும் சத்தமும் அவன் செவியை வந்து நிறைத்தது.