“நாளன்னிக்கு இந்நேரம்லாம் நீங்க அக்காக்கு சொந்தமாகிடுவீங்கள்ள மாமா. ஆனாலும் என்னால உங்கள மறக்கமுடியலயே. இன்னிக்கு ஒருநாள் மட்டுமாச்சும் உங்கபோட்டோவ நான் ஆசைத்தீர கொஞ்சிக்கிறேன் மாமா” என்று விசும்பலோடு இணைந்த குரலில் சந்தனா அவள் அறைக்குள் அமர்ந்து கையில் இருந்த ஒரு புகைப்படத்திடம் பேசிக்கொண்டிருக்க…
அதைக்கேட்டு ஜன்னல் புறம் சென்ற ப்ரித்திவோ ஒரு பெண்ணின் அறை என்பதால் தயங்கி தயங்கி உள்ளே எட்டிப்பார்த்தவன், அவள் கையில் இருந்த நவீனின் புகைப்படத்தைக்கண்டு ஏகமாய் அதிர்ந்தான்.
அவளுக்குப்பக்கத்திலே நவீன் எப்பொழுதோ வாங்கிக்கொடுத்திருந்த பேனாவில் தொடங்கி, அவன் அவளுக்கென்று வாங்கிக்கொடுத்த பலவித பொருட்களோடு அவன் உபயோகித்த கைக்குட்டை, அவன் தலைவாரும் சீப்பு, அவன் எப்பொழுதாவது மெல்லும் சுவீங்கத்தின் காகிதம் என்று ஒரு குப்பைத்தொட்டியே படுக்கையில் பரத்திக்கிடக்க அனைத்தையும் தொட்டு தொட்டுப்பார்த்து, “நீங்க ஏன் மாமா என்கிட்ட அவ்ளோ அன்பா சாப்டா நடந்துகிட்டீங்க. ப்ரித்விமாமாமாதிரி ஒரு கொட்டாவது வச்சிருந்தா எனக்கு உங்கள பிடிச்சே இருக்காதுல்ல” என்று இன்னும் இன்னும் தேம்பி தேம்பித் அழுத்துகொண்டிருந்தாள்.
அதை எல்லாம் பார்த்து அதிர்ச்சியில் சில நொடிகள் அப்படியே நின்றிருந்தவன், “இவ என்ன நவீன் போட்டோவ வச்சி கொஞ்சிட்டிருக்கா? அப்போ இவ நவீன?” என்று நிமிடத்தில் அவன் மனம் ஏதேதோ கற்பனைகளைத்தூண்ட, நொடியும் தாமதியாது அவள் கதவைத்தட்டிய ப்ரித்திவ் அவள் யாரென்று கேட்டு திறந்துவிடவும் சட்டென்று உள்நுழைந்து அறையை ஆராய்ந்தவன், “இவ்ளோநேரம் யார்கிட்ட பேசிட்டிருந்த?” என்று கேட்க…
அக்கேள்வியில் தூக்கிவாரிப்போட்டு நிமிர்ந்தவளோ, “இல்லியே இல்லியே நான்…” என்று தொடங்கி அவனின் உஷ்ணப்பார்வையில் நடுங்கியவள், “போன் போன்ல பேசிட்டிருந்தேன்” என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்த்தாள்.
ஆனால் அனைத்தும் கண்டுவிட்டே கதவைத்தட்டியவனிற்கு பெண்ணின் அழுது சிவந்திருந்த முகமே அவன் சந்தேகத்தை உறுதிபடுத்த சட்டென்று அவள் கைபேசியை எடுத்து அழைப்புகள் வரலாறை
(கால் ஹிஸ்ட்ரி) பார்த்தவன், “இல்லையே ஒருமணி நேரத்துக்கிடைல எந்த காலும் வரலியே” என்றவாறு…
வாட்ஸ்அப்பில் சென்று, “அக்கா ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லனும் உன்கிட்ட. உடனே. என்னோட ரூம்க்குவாக்கா ப்ளீஸ்” என்று சந்தனா அனுப்பியது போல் ஒரு குறுஞ்செய்தியை சம்யுவின் எண்ணிற்கு அனுப்பியவன் அவள் பார்த்துவிட்டது தெரிந்தே அதை தூரவைத்துவிட்டு…
“ம்ம்ம் சொல்லு? யார்கிட்ட பேசிட்டிருந்த? கைல ஏதோ போட்டோகூட வச்சிருந்தியே?” என்று மீண்டும் அமைதியாகவே வினா எழுப்பினான்.
அவளோ அப்பொழுதும், “போட்டோவா என்ன போட்டோ… அதெல்லாம் இல்லையே” என்று அழ ஆரம்பிக்க…
‘இவ இவ அக்காக்கு மேல இருப்பா போல’ என்று எண்ணியவன் “இப்போ நீ உண்மைய சொல்லப்போறியா. இல்ல எல்லாரையும் கூப்புடவா?” என்று அவனும் மிரட்டலை கையிலெடுத்தான்.
அதற்குள் தங்கையிடமிருந்து வந்த குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டு என்னவோ என்று அவள் அறையை நெருங்கிய சம்யுவை…
“நான் தப்பு பண்ணிட்டேன் மாமா. என்ன மன்னிச்சுடுங்க” என்ற தங்கையின் அழுகுரல் அறைக்கு வெளியேயே நிற்கவைக்க…
அவள் அடுத்து கூறிய விஷயங்களில் சம்யுவின் மூச்சே நின்றுவிடும் போல ஆனது.
தமக்கையின் வருகையை உணராத சந்தனாவோ சிறுவயதில் இருந்தே நவீனை மிகவும் பிடிக்கும் என்றும், கடந்த இரண்டு வருடங்களாக அவளையும் அறியாது அந்த பிடித்தம் நேசிப்பாய் மாறிவிட்டதாகவும், இது தவறு என்று தெரிந்தும் தன்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை என்றும் அழுகையினூடே கொட்டித் தீர்த்துவிட்டாள்.
சற்றுமுன்னர் அவன் எதிர்பார்த்ததுதான். அதனால் அவனுக்கு அதிர்ச்சி எல்லாம் இருக்கவே இல்லை. மாறாக இனம்புரியாத மகிழ்ச்சிதான் மனதில் துள்ளி எழும்பியது.
அவள் சொன்னது அனைத்தும் பொறுமையாக கேட்டு முடித்தவன், “நவீன ரெண்டுவருசமா லவ் பண்றவ ஏன் வீட்ல சொல்லல? இப்டி அவன் போட்டோ வச்சு அழுதுட்டிருந்தா சரியாப்போச்சா? கொறஞ்ச பட்சம் அவன்கிட்டயாவது சொல்லிருக்கலாம்ல. இல்லன்னா உன் அக்காட்ட சொல்லிருந்தாக்கூட இந்த கல்யாண ஏற்பாடாவது நடந்துருக்காதில்ல” என்று சற்றே குரல் உயர்த்தி வினவியவனிடம்
“அய்யோ… இல்ல மாமா… நவீன்மாமாக்கும் அக்காக்கும்தான் கல்யாணம்னு வீட்ல பேசிவச்சுருக்கப்போ நான் எப்டி இத சொல்லமுடியும். அப்டிசொன்னா எங்கம்மாவே என்ன கொன்னு புதைச்சுருவாங்க. இது தப்புமாமா. என் அக்காவோட வாழ்க்கைய நானே எப்டி பறிப்பேன். அத்தோட நவீன்மாமாக்கு என்னவிட அக்காவதான் ரொம்ப பிடிக்கும்” என்றும் தேம்பி தேம்பி அழத்தொடங்கினாள் சந்தனா.
அதைக்கேட்டு, ‘இந்த பொம்பளபுள்ளைக ஏன்தான் இப்டி இருக்குகளோ. காதலிக்கிறது பெரிய தப்புன்னு நெனச்சு நம்மளையும் சேத்து சுத்தல்ல விடுதுக.’ என்று அவள் அக்காவையும் எண்ணி தலையை குலுக்கி கொண்டவன்…
“ஹேய் லூசு மாறிப்பேசாத. காதல் ஒன்னும் அவ்ளோ தப்பான விஷயமில்ல. நவீன இவ்ளோ லவ்பண்ற நீ அவன மனசுல வச்சுட்டே நாளைக்கு என்கூட நிச்சயம் பண்ணிப்பியா?” என்று ஆத்திரமாகவே கேட்க…
அப்பொழுதுதான் அவளுக்கு நாளை நடக்கவிருக்கும் தங்களது நிச்சயதார்த்த வைபவமும் ஞாபகம் வந்தது.
அதில் இன்னும் ஓவென்று கத்தி அழுதவளுக்கு சாதாரண விஷயத்திற்குக்கூட தன்னைக் குட்டி அழவைக்கும் ப்ரித்திவின் இன்றைய பொறுமையான அணுகல் அவனிடம் ஒரு நட்பைத் தோற்றுவித்திருக்க, “மாமா ப்ளீஸ் மாமா நாளைக்கு நடக்கப்போற நிச்சயத்த மட்டும் எப்படியாவது நிறுத்திடுங்க. நான் காலம் முழுசும் நவீன் மாமாவ நினைச்சிட்டேகூட இருந்துடுவேன். என்னால அவங்களத் தவிர யாரையும் புருஷனா நினைக்க முடியாது மாமா. அதேசமயம் என்னால அக்கா வாழ்க்கைலையும் குறுக்க போகமுடியாது. அது நவீன் மாமாக்கும் பிடிக்காது. ப்ளீஸ் நம்ம நிச்சயத்த மட்டும் நிறுத்திடுங்க. நீங்க வேற நல்ல பொண்ணாப் பாத்து கட்டிக்குங்க” என்று அவன் கையைப்பற்றிக் கொண்டு கதறிய சிறுபெண்ணின் அழுகை ப்ரித்திவின் மனதையே பிசைய, வெளியே நின்று அனைத்தும் கேட்டிருந்த சம்யுவிற்கும் அவள் அறியாது கன்னங்களில் நீர் இறங்கத் தொடங்கியது.
நவீனின் மீதான சந்தனாவின் நேசம் அவனுடைய நேசத்தையும் அது மறுக்கப்பட்ட தினத்தையும் அவனது நினைவடுக்கில் கொண்டுவந்து நிறுத்த, “பீல் பண்ணாத சந்தனா. இந்த விஷயத்துல நான் உனக்கு எவ்வளவு தூரம், எந்தமாதிரி ஹெல்ப் பண்ண முடியும்னு எனக்குத் தெரியல. ஆனா உன்காதல் உண்மையா இருந்தா அதுவே உன்ன நவீன்கூட சேத்து வைக்கும்.” என்று சற்றுமுன்னர் அப்பத்தா அவனிடம் சொல்லிய வார்த்தைகளைச் சொன்னவனிடம், “இல்லமாமா நவீன்மாமா எனக்கு கிடைக்காட்டியும் பரவாயில்ல. அவங்க ஆசைப்பட்டபோல அக்காகூட சந்தோசமா வாழ்ந்தா போதும். ப்ளீஸ் இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லிராதீங்க. அப்டி சொன்னா அக்காவுக்கு பேசிவச்ச பையன நீ எப்டி காதலிக்கலாம்னு எல்லாரும் என்னதான் திட்டுவாங்க மாமா. அத என்னால தாங்க முடியாது. இது எதையும் அக்காகிட்டக்கூட சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க ப்ளீஸ்” என்று ஏற்கனவே தமக்கை அனைத்தும் கேட்டு விட்டதை அறியாது சத்தியம் கேட்டவளின் கையில் வெறுமனே தன் கரத்தை வைத்து அழுத்திவிட்டு வெளியேறியவனுக்கு தற்சமயம் சம்யுவின் மனநிலையை அறிந்தால் மட்டுமே நிம்மதி என்ற நிலைதான்.
முதலில் அவளிடம் இதைப்பற்றிப் பேசவேண்டும் என்று வேகமாக வெளியேறியவனின் கணிப்பைப் பொய்யாக்காமல் அத்துணை நேரமும் அவர்கள் சம்பாசணை எல்லாம் கேட்டு முடித்தவள் அசையக்கூடத் தோணாது சிலைபோல் நின்றிருந்தவளும் எத்துணை அதிர்ச்சிகளைத் தான் தாங்குவாள்.
இத்துணை வருடங்கள் உயிரில் கலந்த உணர்வாக இருந்தவன் திடீரென்று காதலன், கணவன் என்ற உறவாக மாற ஆசை கொண்டிருப்பதே பெரும் கலக்கத்தைக் கொடுத்திருக்க இங்கு தங்கையின் விஷயமோ பேரதிர்ச்சியாக இருந்தது.
சம்யு நின்றிருந்த தோற்றமே அவள் மனதின் உளைச்சலை அவள் உயிரானவனுக்கு உணர்த்தியதில் தங்கையின் அறையையே வெறித்து நின்றவளின் கரத்தை சட்டென்று பற்றியவன், “யுகி… வா… நாம கொஞ்சம் அப்டிபோய் பேசலாம்” என்று தோட்டப்பகுதி நோக்கி அழைத்துச்செல்ல, அவளும் எந்த மறுப்பும் சொல்லாது அவனைப் பின்தொடர்ந்து நடந்தாள்.
யார் விழிகளுக்கும் படாது மல்லிகைப் பந்தலுக்குள் அவளை அழைத்து வந்தவன், “யுகீ… ரிலாக்ஸ்டி… சாக்கைக்குற… எந்த பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கும்டி” என்று அவள் தோளில் கைவைக்க…
“திவ்வா…” என்று அவன் கரத்தைப்பற்றிக் கொண்டவளும், “சந்துவ நான் நான் சின்ன பொண்ணுன்னே நினைச்சேன்டா. ஆனா அவ நவீன் மாமாவ இவ்ளோ லவ் பண்ணிருப்பான்னு நினைக்கலடா. அவர் கிடைக்காட்டியும் அவர நினைச்சுட்டே வாழ்ந்துருவேன்னு சொல்றாளே” என்று இரண்டு வருடங்களாக அவனிடம் காட்டிய பாராமுகம் மறந்து தன் மனபாரத்தை அவன் தோளில் இறக்கி வைக்க…
இங்கு ப்ரித்திவிற்கோ நெஞ்சில் காதல் பாரம் ஏறத்தொடங்கியது.
அவளின் கடைக்கண் பார்வைக்குக் காத்துக் கிடந்தவனை வெகுநாளைக்குப் பிறகான பெண்ணின் அருகாமை அன்றைய தினத்தில் பெண்ணவளின் பேச்சால் அவனுள்ளே அமிழ்ந்து கிடக்கும் நேசம் மொத்தம் தட்டி எழுப்ப…
தன் முகம் நோக்கி நின்றவளை இழுத்து அணைத்து நெஞ்சுக்குள் புதைக்கத் தூண்டிய கரத்தை, “அவ தங்கச்சி பிரச்னைக்கு ஆறுதலாதான் மேடம் உன்ன பிடிச்சிருக்காங்க. ரொம்ப பொங்காத” என்று அடக்கியவன் மற்றொரு கரத்தால் அவளின் இன்னொரு கரத்தையும் பற்றிக்கொண்டு, “காதல் எப்போ, எங்க, யாருமேல வரும்னு யாராலையும் சொல்லமுடியாது யுகி. இதுக்கு இவ்ளோ சாக்லாம் தேவையே இல்ல.” என்றவன்,
“ஆனா சந்தனாவோட லவ்வ நீ லவ்னு சொன்னதே எனக்கு சந்தோசமா இருக்கு. அதையும் ஹார்மோன் பிரச்னைனு சொல்லிருவியோன்னு நான் நிஜமாவே பயந்தேன்டி” என்றும் உண்மையாகவே அவன் உணர்ந்ததைச் சொல்ல…
அவளுக்கோ அன்று அவனைத் திட்டித் தீர்த்ததும், அவன் காதலை வார்த்தைகளாலே கட்டிப் போட்டதும் நினைவடுக்கில் வந்து அவள் முகத்தைக் கூம்பச் செய்தது.
‘அன்று அவனது காதலை அப்படி மட்டம் தட்டியதற்குத்தான் இன்று இப்படி ஒரு இக்கட்டை கடவுள் தனக்குத் தந்திருக்கிராரோ?’ என்று எண்ணியவளின் கூம்பியமுகம் கண்டு தன்னையே நொந்து கொண்டவன், “ஹேய் கூல்டி நான் வேணும்னு சொல்லல” என்று கைப்பற்றுதலில் அழுத்தத்தைக் கூட்டிவன்,
“நாம ஒன்னு செய்வோமா? சின்னதா ஒரு கபிவை பண்ணா உன்னோட மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். அப்றம் யோசிச்சா எல்லாமே சிம்பிளா இருக்கும்டி ட்ரை பண்லாமா?” என்றும் அவளை இயல்பாக்க வேண்டி குறும்புமின்ன வினவினான்.
அவன் கூற்றில்தான் தங்கள் நெருக்கத்தை உணர்ந்தவளோ அவன் கரத்தை சட்டென்று உதறிவிட்டு, “சந்தனா விஷயம் எனக்கு பெரிய அதிர்ச்சிதான். ஆனா இதசாக்கா வச்சு நீ என்கிட்ட அட்வான்டேஜ் எடுக்க நினைச்சா உன்ன கொன்னே போடுவேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தவள் அவளே அவனிடமிருந்து இரண்டடி தள்ளிவந்து நின்று கொண்டாள்.
“சந்தனாவிற்கும் நவீனுக்கும் திருமணமே நடந்தாலும் உன் கோரிக்கையை நான் ஏற்கப் போவதில்லை” என்று சொல்லாது சொல்லிய பெண்ணின் செயல் அவனுள் சிறிது ஏமாற்றத்தை விதைத்தாலும் அவளின் இயல்பு மீண்டு விட்டதிலும், அவள் எச்சரித்த பாவத்திலும் சட்டென்று சிரித்துவிட்டவன், “ஹேய் பப்ளி… நான் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுக்கனும்னு நினைச்சா எனக்கு ரீசன்லாம் தேவையே இல்லடி” என்று மட்டும்கூறி…
மீண்டும் அவள் கரத்தை பற்ற முனைந்த கரங்களை அணிந்திருந்த க்ரே வண்ண கால்சராய் பாக்கெட்டுகளுக்குள் நுழைத்துக்கொண்டவாறே, “லிசன் டூ தி பாய்ன்ட் யுகி. இப்போதைக்கு நம்ம பிரச்னைய கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு சந்தனா பிரச்னைக்கு வா” என்று தொடர்ந்தவன், “இதுக்கு நீ மட்டும்தான் சொல்யூசன் பண்ண முடியும். அவபேசுனது கேட்டயில்ல. நவீனுக்கு நீதான் பொருத்தம்னும் நீங்க லவ் பண்றதாவும் நினைச்சுட்டு இருக்கா. நீயே அவன வேணாம்னு சொன்னாதான்
அவ நவீன கட்டிப்பா. நமக்குள்ள இருக்க பிரச்னையோட இதப்போட்டுக் குழப்பிக்காம நல்லதா ஒருமுடிவு எடு யுகி. நீ எடுக்கப்போற முடிவுலதான் நம்ம நாலு பேரோட நிம்மதியும் சந்தோசமும் இருக்கு” என்றவனின் வார்த்தையில் விலுக்கென்று நிமிர்ந்தவள் ஏதோ சொல்ல முனைவதற்குள்,
“இரு நான் பேசிர்றேன்” என்றுவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.
“நீ நினைக்கிறது சரிதான் யுகி. இந்த கல்யாணம் நின்னுச்சுன்னா அதிகமா சந்தோசப்படக் கூடியவன் நான்தான். ஏன் இந்தக் கல்யாணம் எப்படியாவது நின்னு என் யுகிய எனக்கே எனக்கா என்கிட்ட கொடுத்துடுன்னு கொஞ்சம் முன்னகூட நான் சாமிகிட்ட வேண்டுனதும் உண்மைதான்.” என்று சிறுநகை ஒன்றை உதிர்த்தவனை…
“யூ யூ யூ… திவா…” என்று பெண்ணவள் பலமாக முறைக்க…
அவனுக்கோ அது பாதாம்கீர் சாப்பிட்டப்போல ஜில்லென்றுதான் இருந்தது.
இப்போதைக்கு அவள் தன் காதலை ஏற்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தாலும், சந்தனாவின் காதலால் இந்த திருமணம் நின்றால் அவள் நவீனுக்கும் சொந்தமாகப் போவதில்லையே என்று உணர்ந்து அதையே தன் காதலுக்குக் கிடைத்த வெகுமதியாய் உணர்ந்தவன் முகம் கொள்ளா புன்னகையோடே,
“ஆனா இப்டி ஒரு ட்விஸ்ட் நானே நிச்சயம் எதிர்பாக்கலைடி. சந்தனா ரெண்டு வருசமா நவீன லவ் பண்ணுரான்னு உன்னால கண்டு பிடிக்க முடிஞ்சுதா?” என்று
அவளிடமே கேட்டவனின் பேச்சில் அவளது பாரமும் வெகுவாகக் குறைந்திருக்க…
தென்றல் காற்றில் அசைந்தாடிய மலர்போல் இடமும் வலமும் அசைந்த பெண்ணின் செயலில் அவளை ரசனையாக நோக்கிவிட்டு மீண்டவனோ,
“காதல் யாரையும் எப்டியும் செய்ய வைக்கும் யுகி. அது யார்மேல யாருக்கு வரும்னும் நாம கணிக்க முடியாது” என்று சொல்லி மீண்டும் அவளது முறைப்பில், “ஹேய் நான் எனக்காக சொல்லல” என்று தொடர்ந்தவன்…
“சந்தனாவும் எனக்கு அத்தை பொண்ணுதான். அவவாழ்க்கை மேல எனக்கும் அக்கறை இருக்கு. அதே அக்கறை நவீன் மேலையும் இருக்கு. நிச்சயம் நவீனுக்கு உன்னவிட சந்தனாதான் சிறந்த மனைவியா இருக்கமுடியும். அது உனக்கே தெரியும்னு எனக்குத் தெரியும்டி. அவனுக்கும் இப்போ கஷ்டமா இருந்தாலும் பின்னாடி சந்தனாவோட காதல புரிஞ்சிப்பான். இப்போதைக்கு முடிவு உன்கைல யுகி. டேக் யூர் டைம்.” என்றும் அவள் கண்களைப் பார்த்துக் கூறிவிட்டு அவன் அங்கிருந்து சென்றுவிட…
அவன் வார்த்தைகளில் இருந்த கனிவும், அது அவளுக்கு அளித்த தெளிவும், கண்களை ஊடுருவிச் சென்ற அவன் காந்த விழிகள் காட்டிய உண்மையும், ‘இவனுக்கு இப்டிலாம் பேசத்தெரியுமா என்ன?’ என்ற எண்ணத்தைக் கொடுக்க அவன் சென்று மறையும் மட்டும் அவனையே வைத்தகண் வாங்காது பார்த்திருந்தவள் மறுநாள் ஒரு தெளிவான முடிவோடு தன் அன்னையின் முன்னே நின்றாள்.
இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்ற நிலையில் எனக்கு இந்தக்கல்யாணம் வேண்டாம் என்று தன் முன்னே நின்ற மகளைக்கண்டு,
“என்னடி சொல்ற… இப்போ வந்து இப்டி சொன்னா நான் என்னடி செய்வேன்?” என்று கத்தி கூச்சல் போட்ட ஜானுவின் சப்தத்தில் யுவா வீட்டில் இருந்த எல்லா உறவுகளும் என்னவோ ஏதோவென்று அடித்துப் பிடித்து அங்கே ஓடிவந்தனர்.
அதைக்கூட கவனியாத ஜானுவோ, “இப்டி சொல்ல உனக்கு எப்படிடி மனசு வந்தது. உன்ன நம்பித்தான அவ்ளோ ஏற்பாடும் பண்ணிருக்காக எங்கண்ணன்க. இப்போ வந்து எனக்கு டாக்டர் மாப்புளதேன் விருப்பம்னு சொல்றியே. இது உனக்கே நல்லாயிருக்காடி.” என்று மேலும் கத்தியபடி சம்யுவை அடிப்பதற்குப்பாய…
அதைக்கேட்டப்படியே அங்குவந்து சேர்ந்த அனைவரின் முகமும் பலமான அதிர்ச்சியால் தாக்கப்பட்டது.
ஆனால் யாருடைய அதிர்ச்சியும் பெரிதாக எண்ணாத சம்யுவோ,
“ம்மா… போதும்மா நிறுத்துங்க. நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு இப்டி கத்தறீங்க? டாக்டர் md படிச்சுருக்க நானு வரப்போற புருஷன் டாக்டரா வரனும்னு ஆசைப்படுறது ஒரு குத்தமா? ப்ளீஸ் இந்தக் கல்யாணம் எனக்கு வேணாம்மா. இந்தக் கல்யாணத்த நிறுத்திடுங்க” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல…
அதற்குள் அங்குவந்து சேர்ந்திருந்த ஆண்களின் முகமும் சம்யுவின் பேச்சில் ‘யுக்தா ஏன் திடீர்னு இப்டி சொல்றா?’ என்று பெரிதாகக் குழம்ப, சம்யுவின் வாயால் இப்படி ஒரு கூற்றை கனவில்கூட கேட்டிறாத நவீனின் முகமோ வேதனையில் சுருங்கியது.
கல்யாணம் வரை வந்துவிட்டு ஒரு பெண் தன்னை வேண்டாம் என்று சொன்னால் எந்த ஆணால்தான் தாங்கிக்கொள்ள முடியும்.
ஆரம்பகட்ட அதிர்ச்சி முடிந்து சம்யுவை சூழ்ந்து கொண்ட அவளின் அத்தை காயுவும், அண்ணிகளும் கூட , “யுக்தா உனக்கு என்னாச்சு? ஏன்மா திடீர்னு இப்டிலாம் பேசுற. உன்ன கேட்டுத்தானேமா எல்லா ஏற்பாடும் பண்ணோம்” என்று பொறுமையாக வினவ…
“என்னைக் கேட்டிங்களா??? ம்ம்ம் கேட்டிங்க. கல்யாணம் எப்போ எப்டி வைக்கலாம். எந்த புடவை, நகை எல்லாம் கேட்டிங்கதான். ஆனா மாப்பிள்ளை பிடிச்சிருக்கா இந்த மாப்பிள்ளைய கட்டிக்க உனக்கு விருப்பமான்னு யாராச்சும் கேட்டிங்களா?” என்று சம்யு கேட்ட எதிர்கேள்வியில் அங்கிருந்த ஒருவரின் முகத்திலுமே ஈயாடவில்லை.
அவள் கேட்பதும் நியாயம்தானே. இங்கு மட்டுமல்ல. பெரும்பாலான குடும்பங்களில் பெண்ணின் விருப்பம் கேளாமலேதானே அவளின் திருமணம் உறுதி செய்யப்படுகிறது