சம்யுவின் கேள்வியில் ‘யுக்தாவிற்கு என்னைப் பிடிக்கவில்லையா. அதனால்தான் இருவருடங்கள் முன்பும் திருமணம் வேண்டாம் என்று என்னிடம் அழுதாளா. தன்னைப்பிடிக்காத ஒருத்தியுடனான திருமணத்தை எண்ணியா இத்துணை நாள் கனவுகண்டு சுற்றிக்கொண்டு இருந்தேன்’ என்று நவீனிற்கோ தலையை தரையில் புதைத்துக்கொள்ள மாட்டோமா என்று அத்துணை அவமானமாகவும், ‘என்னை மணம்செய்ய பிடிக்கவில்லை என்றால் அவள் முன்பே என்னிடம் சொல்லிஇருக்கலாமே’ என்று பெரும் குழப்பமாகவும் இருந்தது.
சம்யுவின் கேள்வியில் மற்ற அனைவரும்கூட பேசபதில் இல்லாது திகைத்து விழிக்க, “நாங்க உன்கிட்ட கேக்காம கல்யாணம் பேசுனது தப்புதான். அதுக்காக எங்கள மன்னிச்சுடு. இன்னும் ரெண்டுநாள்ள கல்யாணம்னு எல்லாருக்கும் சொல்லியாச்சு. அது நடக்காம நின்னுச்சுன்னா ஊருக்குள்ள நம்ம குடும்பத்துக்கே ரொம்ப தலைக்குனிவா போகும். அதெல்லாம் மனசில வச்சு இப்போ ஒரு நல்ல முடிவா சொல்லு யுக்தா? அவசரப்பட்டு வார்த்தைய விடாத” என்று முதலில் திகைப்பில் இருந்து மீண்டு கணீர்குரலில் கேட்டான் யுவா.
ஆசை மருமகளிடம் எப்பொழுதும் யுக்தாமா என்ற அழைப்பிற்க்கு மறுசொல் சொல்லாதவன் இன்று இறுகிய குரலில் கேட்ட கேள்வியே அவன் ஏமாற்றத்தையும், கோபத்தையும் பட்டவார்த்தனமாக்க, மாமனின் அந்தக்குரலில் ஒருவலியோடு அவனை ஏறிட்ட சம்யுவிற்கு, தான் கூறப்போகும் பதில் தன் மாமனை எத்துணை வருந்தச்செய்யும் முற்றும் முழுதாக அவன் வெறுப்பை சாம்பாதித்துக் கொடுக்கும் என்று தெரிந்தே இருந்தாலும் வேறு வழியில்லாது,
“என்ன என்ன மன்னிச்சுடுங்க மாமா. நான் ஒரு டாக்டர். எனக்குனு சில லட்சியங்கள் இருக்கு. என்னோட சேந்து பயணிக்க நவீன் மாமா பொருத்தமா இருக்கமாட்டாங்கன்னு தோணுது. சந்தனாமாறி ஒரு சராசரி பொண்ணுதான் அவங்களுக்கு பொருத்தமா இருக்கும். நீங்கவேணா அவகிட்ட கேட்டு அவளையேகூட கட்டிவச்சிடுங்க. கல்யாணமும் நிக்காது. ஊருக்குள்ள உங்க மரியாதைக்கும் பங்கம் வராது.” என்று மிகவும் கடினப்பட்டு வரவழைக்கப்பட்ட இலகுக்குரலில் இரவு முழுதும் மனப்பாடம் செய்த வார்த்தைகளை தன் மாமனின் முன்னால் நிமிர்ந்து நின்றே கூறியவளின் பேச்சில்
அவள் அன்னை ஜானுவோ, “ஏய் யாரப்பாத்து என்னடி பேசுற? உன்ன டாக்டரா ஆக்குனதே என் அண்ணன்தானடி” என்று அவளை இழுத்துப்போட்டு அடிக்கவே துவங்கி விட…
அங்கிருந்த மற்றவர்களுக்கும்கூட யுவாவே இத்துணை சொல்லியும் சிறிதும் இறங்கி வராத சம்யுவின் பேச்சு மிகுந்த சினத்தையே தூண்டியது.
ஆனால் தங்கையை யாரும் தவறாக நினைத்து அவள்மேல் எந்த கலக்கமும் வந்துவிடக்கூடாதென்றும், நவீனும் சந்தனாவும் தன்னை ஒதுக்கி அவர்கள் திருமணத்திற்கு தயாராகவேண்டும் என்றும்தான் அவள் தன்னையே கெட்டவள்போல் காட்டி இப்படியெல்லாம் பேசுகிறாள் என்று அறிந்திருந்தவனோ, அப்பேச்சைக் கேட்பவர்கள் அடைந்த வேதனையைவிட அதைப் பேசியவளே அதற்காக அதிகம் துடித்திருப்பாள் என்றும் அவளை உணர்ந்திருந்த ஒருவன் மட்டும், “அத்தை விடுங்க அவள. அவதான் இந்தக்கல்யாணம் பிடிக்கலன்னு சொல்றாள்ள அப்றம் ஏன் போர்ஸ் பண்றீங்க?” என்று சந்தனாவின் காதலுக்கு உதவும் முனைப்பிலும் ஜானுவிடமிருந்து அவளைப்பிரித்து தன் கைவளைவில் நிற்க வைத்துக் கொண்டான் ப்ரித்திவ்ராஜ்.
என்னதான் தங்கைக்காக திடமான பெண்ணாக அன்னையை எதிர்த்து நின்றாலும் அனைவரின் முன்னிலும் இப்படிக் காட்சிப்பொருளாய்க் கூனிக்குறுகி நிற்பதில் மனம் நொந்து போனவளுக்கு ப்ரித்திவின் அந்த அருகாமை யானை பலத்தைக்கொடுக்க, அவளும் அவனைவிட்டு விலக முயலாது அவனோடு ஒட்டிநின்றே லேசாக விசும்பத் தொடங்கியிருந்தாள்.
அதில் அவன் அணைப்பு இன்னும் இன்னும் இறுகி, “ஹேய் யுகி அழாதடி” என்று அவள் காதிலும் கிசுகிசுக்க…
ப்ரித்திவின் பிடியில் நின்றிருந்த சம்யுவை ஒரு முறை முறைத்த ஜானுவோ… கலங்கி நின்ற நவீனிடம் ஓடியவள், “நவீகண்ணா நவீமா… இவளுக்கு புதுசா டாக்டர்னு திமிரு வந்துருக்கு. இவ உனக்கு வேணாம்பா. உன் அத்த நான் சொல்றேன் நீ சந்தனாவை கட்டிக்க. அவ உன்ன சந்தோசமா பாத்துப்பா” என்றவள் இளைய மகளிடமும் திரும்பி, “சந்துமா நீ
நீ நீ நவீன கட்டிப்பதான. அவளமாதிரி மாட்டேன்னு சொல்லமாட்டில்ல? அவனப்போல அன்பானவன் தேடினாலும் கிடைக்கமாட்டான்டி” என்று இளையமகளின் கையைப்பற்றிக் கேட்டவளுக்கு பேசிவச்சபடி திருமணம் வைக்காவிட்டால் சின்ன அண்ணனிற்கும் பெரியண்ணன் மகனிற்கும் பெருத்த மரியாதை குறைவாகிவிடும் என்ற கலக்கமே மேலோங்கி நின்றது.
பணமும் பதவியும் அதிகமாக இருந்தால் மனிதன் பலவற்றிற்கும் பயப்பப்பட்டுத்தான் ஆக வேண்டும் போல.
அத்துணை நேரமும் சம்யுவின் கூற்றிலே அதிர்ச்சியாகி அனைத்தும் பார்த்திருந்த மலரின் பார்வை தற்சமயம் ப்ரித்திவும் சம்யுவும் நின்ற நெருக்கத்தில் யோசனையாய் சுருங்கி, இரண்டு வருடங்களுக்கு முன்னான நிகழ்வுகளை அவள் சிந்தனையில் கொண்டுவந்து நிறுத்தியது.
அத்தோடு மகன் முகத்தில் நேற்றுவரை இருந்த இறுக்கமும் இன்று சம்யுவிற்கான அவனது துடிப்பும் அனைத்தும் ஒன்று சேர்த்து இருவரும் விரும்புதாகவும், ஏதோ ஒரு காரணத்தால் அதை வெளியே சொல்லத் தயங்குவதாகவும் அவளே ஒரு முடிவுக்கு வந்துவிட்டவள் நொடியும் தாமதியாது சம்யுவை நெருங்கி, “உனக்கு டாக்டர் மாப்புள்ளதான வேணும். அப்போ நீ பிரித்விய கல்யாணம் பண்ணிக்க.” என்று திடீரென்று சொல்ல…
மலரிடமிருந்து இப்படி ஒரு கூற்றை எதிர்பாராத சம்யுவோ சற்றுமுன் தான் மற்றவர்களுக்கு கொடுத்ததை விடவும் ஆயிரம் மடங்கு அதிர்ச்சிக்குத் தள்ளப்பட்டாள்.
சம்யு மட்டுமல்லாது அவள் அறைக்குள் நின்றிருந்த யுவா, நவீன், காயு, ஜானு, மலர், ராஹித்தியா, அவள் கணவன் ஆதித்யா என்று அனைவருமே அதிர்ச்சியின் உச்சிக்கே செல்ல அதற்குள் சுதாரித்த சம்யுவோ, “அத்த என்ன சொல்றீங்க. நான் எப்டி திவாவ கட்டிக்கமுடியும். அவன் என்னவிட சின்னவன் அத்த. இப்போ அதுக்கு என்ன அவசியம், அவசரம் அத்த?” என்று பதற…
ப்ரித்திவின் தமக்கை ராஹித்தியாவும், “ம்ம்மா… என்னமா உளறல் இது” என்று அவர்களை நோக்கி எட்டுவைக்க, யுவாவும்கூட, “விழி என்னடி விளையாடுறியா?” என்று கடுப்பாகவே மனைவியை முறைத்து வைத்தான்.
அதற்குள் கணவனை நெருங்கிய மலர்விழியோ, “இல்லத்தான் பிள்ளைக கல்யாண விஷயத்துலபோய் நான் விளையாடுவனா? நான் பேசுறது கொஞ்சம் பொறுமையா கேளுங்கத்தான்” என்று கணவனை அமைதிபடுத்தியவள், “அவசியம்தான் யுக்தா” என்று மீண்டும் அவர்களை நெருங்கி, “அந்த அவசியம் இதாலதான் வந்தது?” என்றும் அவர்கள் நெருக்கத்தை விரல்நீட்டி சுட்டிக்காட்டியவளின் பேச்சில்தான் மற்றவர்களின் பார்வையும் அவர்கள் மேல்படிய, அச்சமயம் ராஹியின் கையைப்பற்றி நிறுத்தியிருந்த அவள் கணவனின் பார்வையும், “கொஞ்சம் பொறு” என்பதுபோல் அவர்களின் நெருக்கத்தைதான் சுட்டிக்காட்டியது.
ஏதோ ஒரு இக்கட்டில் மாட்டிமீண்ட ஆருயிர் மனைவியை அவளது ஆசைக்கணவன் இறுக்கி அணைத்து அவள் தவிப்பை குறைப்பதுபோன்ற தோற்றத்தில் இம்மியும் இடைவெளியின்றி நின்றிருந்தவர்களைக் கண்டு ராஹியும் ஏதோ புரிப்பட்டவளாய் கணவனின் பிடியில் அமைதியாக நின்றுவிட, யுவாவின் பார்வையும் கூர்மையாகமாற, மலரின் கூற்றில்தான் சுற்றம் உணர்ந்த சம்யுவோ சட்டென்று ப்ரித்திவைவிட்டுப் பிரிந்தாள்.
அதைப்பார்த்து, “இப்போ பிரிஞ்சா சரியாப்போச்சா?” என்ற மலரோ, “அந்த சுமதி கோவில்ல பேசின அன்னக்கே சொன்னேன். ரெண்டுபேரும் தொட்டுகிட்டு பழகவேணாம்னு. ஆனா யாரு என் பேச்சை கேட்டிங்க?” என்று தோள்வளைவில் இடித்துக் கொண்டவள், “இப்போ நீ சொல்ற வார்த்தைபடி நவீனுக்கும் சந்தனாக்குமே கல்யாணத்தை முடிக்கிறோம்னே வை. நாளைக்கு ஏன் பொண்ண மாத்திட்டிங்கன்னு கேக்குறவங்களுக்கு என்னடி பதில் சொல்றது?” என்று கடுமையாகவே கேட்டவள், “அன்னைக்கு கோவில்லயே சுமதி என்ன பேச்சு பேசினான்னு நீயும் கேட்ட இல்ல. அவளைப்போல வம்புக்குன்னே வர்றவங்க வாய்க்கு நீயும் இவனும் அவல் ஆகப்போறிங்களா?” என்று நிறுத்தியவள், “யாரும் நாக்குமேல பல்லைப் போட்டு பேசுற முன்னாடியே உங்க கல்யாணத்தையும் ஒன்னாவே வச்சுடலாம். இதுதான் என் முடிவு” என்றும் சம்யு பேசுவதற்கு இடமே கொடாது பேசியவள், அன்று கோவிலில் நடந்ததையும் யுவாவிற்கு எடுத்துக்கூற…
அவனோ, “இத ஏன் மொதோவே என்கிட்ட சொல்லல விழி?” என்றுவிட்டு, “ஆனா யாரோ ஏதோ பேசுனாங்கங்கறதுக்காக நம்ம புள்ளைகள தப்பா நினைச்சு இப்போ நீ சொல்றவிஷயம் சரியில்லை விழி” என்று அப்பொழுதும் மருமகள் மேல் நம்பிக்கையோடே பேசினான் யுவா.
அதில், ‘அய்யோ மக்கு மாமா’ என்று மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டவள், “நான் அதுக்காக மட்டும் சொல்லலத்தான். வேற ஒரு பெரிய விஷயமும் இருக்கு” என்று நிறுத்திவிட்டு சம்யுவைப்பார்க்க…
அவளோ அப்பார்வையிலே எச்சில் கூட்டி விழுங்கியவள், “அத்த” என்று வேகமாக அவள் கையைப்பற்றிக் கொண்டு தவிப்பாய் ஏறிட்டாள்.
அன்று அவர்களுக்குள் நடந்த முத்தபரிமாற்றத்தை மாமாவிடம் சொல்லவேண்டாம் என்று சொல்லாது சொல்லும் மருமகளின் செயலிலே அன்றைய நாளைப்பற்றி அவளுள் இருந்த சிறு சந்தேகமும் உறுதியாக, “அப்போன்னா இந்த கல்யாணத்துக்கு ஒப்புக்க யுக்தா” என்று மிரட்டல் போலவே சொன்ன மலர்விழிக்கு நவீனைப்பற்றிய கவலை ஒருபுறம் இருந்தாலும், அவர்களின் வயசுவித்தியாசமும் உறுத்தினாலும் அனைத்தையும் புறந்தள்ளி முன்னே வந்து நின்றது. நேற்றிரவு உணவைக்கூட மறுத்துவிட்டு உயிரற்ற உடலாய் நடந்துசென்ற மகனின் தோற்றமே.
கூடவே தன்கணிப்பு உண்மையென்றால் ப்ரித்திவை விரும்பும் சம்யுவை நவீனுக்கு மணமுடித்து வைப்பது நவீனின் வாழ்க்கையையும் பாதிக்கும் என்று தனக்கு தெரிந்தவகையில் யோசித்தவள் மீண்டும் சம்யுவை ஏறிட்டு, “ஒன்னு பேசிவச்சபடி நவீன கட்டிக்க. இல்லன்னா நீ விருப்பப்பட்டபடி” என்று நிறுத்தி… அதில் மேலும் அதிர்ந்து நிமிர்ந்த சிறியவளை திருப்தியோடு பார்த்துவிட்டு, “நீ கொஞ்சம் முன்ன விருப்பப்பட்டபடி டாக்டரான ப்ரித்விய கட்டிக்கோ. நீயும் சந்தனாவும் நம்மவீட்டு மருமகள்களா வரனும்னுதான் உங்க மாமாவோட ஆசையும். நான் சொன்னபடி நடந்தா, எல்லாரோட ஆசையும் நிறைவேறும். நீ சொன்னபடி நவீனுக்கு சந்தனாவ கட்டனும்னா நீ ப்ரித்விய கல்யாணம் பண்ணித்தேன் ஆகனும்” என்று சம்யுவோடு அனைவரையுமே பார்த்து திட்டவட்டமாக பேசிமுடித்த மலர் அங்கிருந்த படுக்கையில் சென்று அமர்ந்துகொள்ள, சம்யுவோ மூத்தவளின் பேச்சில் மேலும் விக்கித்துப்போய் நின்றுவிட்டாள்.
சம்யுவின் கூற்றில் உறைந்து நின்ற மகனைத் தேற்றும் வழியறியாத காயத்ரியும் தங்கையின் பேச்சைக்கூட உணராது அமர்ந்திருக்க, மலரிடம் சிறுபிள்ளை குணங்கள் இருந்தாலும் அவளின் இதுபோன்ற உறுதியான பேச்சில் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும் என்று அவளை அறிந்திருந்த மற்ற உறவுகளோடு யுவாவும்கூட சம்யுவின் பதிலை பெரிதாக எதிர்பார்த்தான்.
அன்னையின் கூற்று ஆயிரமாயிரம் இன்பவிதைகளை ப்ரித்திவின் மனதில் தூவிவிட்டுச்சென்றாலும், இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கி நேற்று இரவுவரை கலங்கித் தவித்த மனது தற்போதைய அன்னையின் கூற்றை அப்படியே ஏற்று உன்னவளை உனதாக்கிக்கொள் என்று உளியாய் கொத்தினாலும், இப்படி ஒரு இக்கட்டில் அவளை அடைய விரும்பாதவன் பெண்ணவள் முகத்தை ஏறிட்டுப்பார்க்க, அவளோ அதற்காகவே காத்திருந்தார்போல்,
“வேணாம் திவா” என்று தவிப்பாய் தலையை ஆட்டினாள்.
கையைக்காலைக்கட்டி கடலில் தூக்கிப்போடப் போவதைப்போல் மருகித்தவித்த முகத்தோடு தன் முகம் நோக்கியவளைப் பார்த்தபின் அவனது மகிழ்ச்சி எல்லாம் துணிகொண்டு துடைத்தார்போல் வாடிப்போனது.
இருந்தும், ‘என் யுகி என்ன விட்டு எங்க போயிறப் போறா’ என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டவன், “ம்மா…” என்று அன்னையை அழைத்து அவள் கூற்றை மறுக்க முயன்றவனின் முயற்சி மட்டுமே அவனைதாக இருக்க, அடுத்த நொடி, “ப்ரித்வி உனக்கு என்ன வேணும், எது நல்லதுன்னு எனக்குத்தெரியும். நீ அம்மாவை உண்மையாவே மதிக்கிறதா இருந்தா உன்கிட்ட இருந்து எந்த மறுப்பும் வரக்கூடாது. எதுவா இருந்தாலும் அவளே முடிவு எடுக்கட்டும். இது என்மேல சத்தியம்” என்று அழுத்தம் திருத்தமாய்க்கூறிவிட…
எப்பொழுதும் இலகுவாக இருக்கும் மலரின் இன்றைய உறுதியான பேச்சில் மற்றவர்களும் ஏதோ காரணம் இருக்கிறது என்று அவள் கூற்றை ஆமோதிப்பது போல் மௌனம் காக்க…
அதன்பின்னான பொழுதுகளை கேட்கவும் வேண்டுமா???
முற்றும் முழுதாக கையறு நிலையில் நிறுத்தப்பட்டவளுக்கு அன்னையின் கூற்றை மீறமுடியாத ப்ரித்திவின் உதவியும் கிட்டாதுபோக, சற்றுமுன்னர் நவீனை வேண்டாம் என்று இலகுவாகச் சொல்ல முடிந்தவளாள் இக்கணம் தன்னுடைய திவாவை அப்படிச் சொல்லிவிடத்தான் முடியுமா என்ன.
அப்படிச் சொன்னால் தங்கை உயிருக்குயிராய் நேசிக்கும் நவீனை தான் மணக்கவேண்டி வருமே அதனால் வேறுவழியில்லாது நீ சம்மதம் சொல்வதுதான் சரி என்று அவள் மூளை கூவிக்கூவிச் சொன்னாலும், அவள் உள்மனம் மட்டுமே அறிந்த உண்மையோ ‘நம்பிட்டோம்’ என்று அவளை எள்ளிநகையாட, அவர்களுக்குள் இருக்கும் வயசு வித்தியாசமும் அவளைக் கூனிக்குறுக வைக்க,
மாபெரும் குழப்பத்தோடும் கலக்கத்தோடுமே தன் திவாவுடனான திருமணத்திற்கு தன் சம்மதத்தைப் பகர்ந்தாள் சம்யுக்தா.
சம்யு சம்மதம் சொல்லும் கடைசி நொடி வரையிலும் கூட, ‘மருமகள் தன் விருப்பத்திற்கு மாறுசெய்ய மாட்டாள். இந்தவிழி ஏதோ தெரியாம உளறிட்டிருக்கா’ என்று சிறு நம்பிக்கை கொண்டிருந்த யுவா அவள் ப்ரித்திவை கட்டிக்கொள்ள சம்மதித்தநொடியே மகனோடு சேர்த்து மருமகளையும் ஒரு அற்பப்பார்வை பார்த்துவிட்டுச் சென்றுவிட, கிட்டத்தட்ட சம்யுவின் நிலையைப் போலத்தான் தற்பொழுது நவீன் சந்தனாவின் நிலையும்.
இத்துணை தினங்கள் மனைவியாகப் போகிறவள் என்ற நிலையில் இருந்த பெண் திடீரென தன்னை அவளுக்கு பொருத்தமில்லாதவன் என்று கூறியதிலே மாபெரும் குழப்பத்திருக்கும் கலக்கத்திற்கும் ஆளானவன் வீட்டினரின் வார்த்தைகளை ஏற்று சாவிகொடுத்த பொம்மைபோல் சந்தனாவுடனான திருமணத்திற்குச் சம்மதிக்க…
சந்தனாவிற்க்கும், ‘திடீரென தமக்கை ஏன் இப்படி பேசுகிறாள் ப்ரித்திவ்மாமா என்னபத்தி சொல்லிருப்பாங்களா? ஆனா நான்தான் சத்தியம் வாங்கிட்டேனே’ என்ற பலவித குழப்பங்கள் இருந்தாலும் சம்யு நவீனை மறுத்துவிட்டு ப்ரித்திவை மணம்புரிய சம்மதித்ததிலே தமக்கை ப்ரித்திவைத்தான் காதலிக்கிறாளோ என்றும் எண்ணி அவளுள் இருந்த காதலியும் விழித்துக்கொள்ள, உள்ளூற சிறு மகிழ்ச்சியோடே சந்தனாவும் திருமணத்திற்கு சம்மதம் கூற… அந்த அரண்மனை வீட்டிலே இரு ஜோடிகளுக்குமான திருமண நிகழ்வுகள் சிறப்பாகவே நடந்தேறத் தொடங்கியது.