பூஞ்சோலையின் அரண்மனை வீடு வெகு வருடங்களுக்குப்பிறகு
கல்யாணக்களை கட்டி இருந்தது.
அவ்வீட்டுப் பெண்மகவுகளின் திருமணங்களுக்குப் பின்னால் பல வருடங்கள் கழித்து அவ்வீட்டில் நடக்க இருக்கும் ஆண்வாரிசுகளின் திருமணத்திற்கு துணிமணிகளில் தொடங்கி மேளதாள வாந்தியங்கள் செட்டிநாடு உணவுவகைகள்வரை அனைத்து ஏற்பாடுகளும் வெகு விமரிசையாகவே தயாராகி இருந்தது.
திருமணத்தை நம்வீட்டிலே வைப்பதுதான் தனக்கு ஆசை என்று முன்பே நவீன் சொல்லிவிட்டமையால் மண்டபத்தைவிடவும் அளவில் பெரிதாக இருந்த அந்த அரண்மனை வீட்டை திருமணத்திற்கு தக்கபடி மிக மிக அழகாகவும், ஆடம்பரமாகவுமே தயார் செய்திருந்தனர் யுவாவீட்டினர்.
வீட்டிலே திருமணம் என்றதால் பின்னாளில் வரவேற்பு வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் என்று உறவினர்கள், மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருக்க, அதை ஏற்று வந்திருந்த ஜனத்திரளுக்கே அவ்வரண்மனைவீடு நிரம்பி வழிந்தது.
ஒருமாதம் முன்பு நவீன் சம்யுவின் திருமணம் என்று பேசிய தினம்தொட்டே அவ்வீட்டு பெரிய ஆண்கள் அவ்வைபவத்திற்கு அனைத்தும் பார்த்து பார்த்து ஆயத்தம் செய்திருந்தனர்.
ஆனால் இருநாட்கள் முன்பு சம்யு கொடுத்த அதிர்ச்சியாலும் அதன்பின் ஒரு திருமண வைபவம், இருதிருமணங்களாய் மாற்றப்பட்ட நிகழ்வாலும் சற்று அதிருப்தியுற்ற பெரியவர்கள் மனம் ஓய்ந்து அமர்ந்து விட்டாலும் தற்சமயம் அப்பணிகள் மொத்தம் யுவா மற்றும் தனாவின் மருமகன்கள் முன்னின்று ஏற்று, மச்சினன்களின் திருமணவைபவங்களில் எந்தக் குறையுமில்லாது சிறப்பாகவே வழிநடத்தத் தொடங்கியிருந்தனர்.
நவீனுடனான திருமணத்தை மறுத்த சம்யுவின் பேச்சிற்குப்பிறகு மகனின் திடீர்மணம் பற்றி மனைவியிடம் தனிமையில் பேசி இருவருக்கும் பிடித்தம் என்று மேலோட்டமாக அறிந்துகொண்டவனுக்கு தன் ஆசைமருமகள் முன்பே தன்னிடம் தன் விருப்பத்தை ஏன் தெரிவிக்கவில்லை என்று மகனோடு சேர்த்து மருமகளின் மீதும் அளவில்லாத சினமே எழுந்தது யுவாவிற்கு.
ஆனால் வயதில் சிறியவன்மேல் இப்படி ஒரு எண்ணம் வந்ததற்காக அவள் தன்னைத்தானே நொந்து, மருகிக்கொண்டு இருப்பதை அவன் மட்டுமல்ல யாரும் அறிந்திருக்கவே இல்லை.
தம்பியின் கோபத்தைத் தணிப்பதே தனாவிற்கு முழுநேரப் பணியாகமாற இருவரும் ஒரு இடத்தைப்பிடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்து விட்டனர். கூடவே யுவாவின் மாமன் மகனும் மூத்த சம்பந்தியுமான அஸ்வினும் உடன் இருந்து அவர்களிடம் பேசி இயல்பாக்கியபடி இருக்க, நண்பன் கதிரும்கூட நண்பனின் சோர்ந்த தோற்றத்தில் மகள் சம்யுவை என்றும் இல்லாதளவு கடிந்து விட்டிருந்தவன் யுவாவைவிட்டு விழியைக்கூட அசைக்கவில்லை.
சம்யு நவீனை வேண்டாம் என்று சொன்ன கோபம் காயுவுக்கும் ஜோடி மாற்றிய உறுத்தல் மலருக்கும் உள்ளூற இருந்தாலும் இருவருமே குடும்பத்தலைவிகளாகவும் அன்னைகளாகவும் தங்கள் பொறுப்பை எண்ணி நேற்று நடந்த அனைத்தும் ஒதுக்கி மகன்களின் விசேஷத்தில் சிறு பெண்கள் போல் ஓடியாடி வேலைசெய்து கொண்டிருக்க, அவர்களோடு அஸ்வினின் மனைவி மதியும் பெண்களின் அன்னை ஜானுவும் மணநிகழ்வுக்கான சம்பரதாய வேலைகளையும் கவனித்துக்கொண்டிருந்தாலும் கணவன்கள் புறமும் அவ்வப்பொழுது சென்று வேண்டியதுபார்த்துச் செய்தனர் பெரிய பெண்கள்.
பெரியவர்களின் கவலையெல்லாம் இளையவர்களுக்கு இல்லைபோல. இணையைத் தேர்ந்தெடுப்பது அவர்அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்ற வகையில் சம்யுவின் செயலை பெரிதுபடுத்தாது ஒதுக்கி இருந்த நவீனின் தமக்கை சுஜாவும் ப்ரித்திவின் இரட்டைத் தமக்கைகள் ராஹித்யா சாஹித்யாவும் அத்தைமகள்களான மணப்பெண்களை ஆயத்தம் செய்யும் பெயரில் ஒரு வழி செய்து கொண்டிருக்க, ஒருசில உறவுப்பெண்களும் அவர்களோடு இணைந்து கேலி கிண்டல் என்று மணமகள் அறையையே சிரிப்பலைகளால் நிரம்ப வைத்திருந்தனர்.
சகோதரிகள் இருவருமே அழகுகலை நிபுணர்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டதால், ராஹித்யா ஒருபுறம் சம்யுவிற்கு தலைவாரிக் கொண்டிருக்க, சாஹித்யா சந்தனாவிற்கு நகைகளை அணிவித்துக் கொண்டிருந்தாள்.
சுஜாவும் மற்ற பெண்களும் அவர்கள் கேட்பதை எடுத்துக் கொடுத்து உதவி செய்து கொண்டிருக்க அறைக்கதவு மெல்லத் தட்டப்பட்டது.
சுஜா சென்று பார்த்துவிட்டு, “ஏய் ராஹி… ஆதி மச்சான் டி” என்று சொல்ல…
ராஹியோ பெண்ணுக்கு தலை வாருவதை விட்டுவிட்டு ஓடிவந்து என்னவென்று கேட்டாள்.
அவனும், “இங்க பொண்ணுக்கு போடுற மாலை இருக்காம் தியா. பூஜைக்கு வைக்கணும்னு ஐயர் கேக்குறாங்க” என்று தலையைக் கோதியபடி சொல்ல…
பட்டுவேஷ்டி சட்டையில் அத்துணை கம்பீரமாய் நின்ற கணவனை பார்வையால் பருகியபடியே ராஹித்யா அவன் கேட்டதை எடுத்துக் கொடுத்தாள்.
மனைவியைப் பார்க்கவென்றே இச்சிறு வேலைக்கு ஓடோடி வந்தவனும் பட்டுப்புடவையும் அணிகளுமாய் நின்றவளைப் பார்வையாலே கபளீகரம் செய்தபடி அவள் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டவன், “ஐயர் இன்னும் ஏதோ கேட்டாங்களே ஹனி?” என்று யோசிக்கும் பாவனையில் அவ்விடம் விட்டுச் செல்லாமலே நின்றிருக்க…
அவளும் அவன் பார்வையால் சிவந்தபடி, “என்ன ஆதித்தான் நல்லா யோசிங்க” என்று அவனை ஒட்டி நின்று கள்வனின் கிறக்கத்தைக் கூட்டினாள்.
அவர்கள் இருவரின் காதல் நாடகத்தில் பொறுமையை கைவிட்ட சுஜாவும்,
“டீ சாஹி இன்னிக்கு உன் தம்பிகளுக்குதானடி கல்யாணம்?” என்று ராஹியின் இரட்டையிடம் சற்று உரக்கவே கேட்க…
அவளும், “ம்ம்ம் ஆமக்கா” என்றாள்.
அதற்கு சுஜாவோ, “எனக்கென்னவோ இங்க நடக்குறதெல்லாம் பாத்தா உன் ட்வினும் ஆதிமச்சானும்தான் ஏதோ விசேஷத்துக்கு ரெடியாகுறபோல தெரியுது.” என்று அதையும் உரக்கவே சொன்னவளின் பேச்சில் சுயஉணர்வை அடைந்த ஆதி, “நான் போய் அகைன் ஐயர்ட்ட கேட்டு வர்றேன் தியா” என்று ஓடோடிச் சென்றுவிட ராஹியும் தன் பணிக்குத் திரும்பினாள்.
கன்னம் ரெண்டும் சிவக்க மீண்டும் சம்யுவின் அருகில் வந்த ராஹியிடம், “ஏன்டி… உங்களோட ரொமன்ஸ்க்கு ஒரு அளவே இல்லியா. ஆ ஊன்னா அவர் தியான்னு வந்துர்ராரு. நீயும் ஓடிப்போய் உரசிட்டு நின்னுக்கற” என்று அவளை ரசித்தபடியே வம்பிழுக்க…
அவளோ, “போ சுஜாக்கா அப்டிலாம் ஒண்ணுமில்ல. அத்தான் நிஜமாவே மாலை வாங்கதான் வந்தாங்க” என்று கணவனுக்கு வக்காலத்து வாங்கினாள்.
அதைக்கேட்டு, “ம்ம்ம் நம்பிட்டேன்டி” என்றவள், “இப்போ பாரு ஐயர் சந்தனம் கேட்டாங்க குங்குமம் கேட்டாங்கன்னு ஆதி மச்சான் திரும்ப வந்து நிக்கலைன்னா என் பேரை மாத்திக்கிறேன்” என்று மேலும் அவள் கேலி பேசிக்கொண்டிருக்கையிலே கதவும் மீண்டும் தட்டப்பட்டு இம்முறை ஆதியோடு சேர்ந்து சாஹியின் கணவன் ஆத்விக்கும் வந்து தத்தம் இணையிடம் ஏதோ கேட்டு மீண்டும் இரட்டை காதல்காட்சி அரங்கேறியது.
அதைபார்த்து இப்பொழுது இருவரையுமே கேலி செய்து கொண்டிருந்த சுஜா மீண்டும் கதவு தட்டப்படவும், “அய்யோ இந்த கொசுத்தொல்லை தாங்கலைப்பா” என்று புலம்பியபடி சென்று கதவைத் திறக்க, அங்கோ அவள் கணவன்தான் நின்றிருந்தான்.
அவனும் ஐயர் ஏதோ வாங்கி வரச்சொன்னதாகக்கேட்டு வாங்கிக்கொண்டவன் செல்லும்பொழுது, “இந்த கலர் சீலை உனக்கு எடுப்பாஇருக்கு சுஜி” என்றுவேறு கிசுகிசுத்துச் செல்ல…
அவனை அனுப்பிவிட்டு அசடு வழியத்திரும்பியவளை இப்பொழுது அனைவரும் சேர்த்து ஏகத்துக்கும் கிண்டல் பேசிச்சிரிக்க, அதில் சந்தனாவும் சேர்ந்து சிரிக்கத் தொடங்கியிருந்தாள்.
ஆனால் இதில் எதிலுமே கலந்து கொள்ளாது உம்மென்று அமர்ந்திருந்த சம்யுவின் மனதிலோ, ‘இத்திருமணம் எப்படி சாத்தியமாகும். ப்ரித்திவை நான் எப்படி கணவனாக எண்ணமுடியும்.’ என்று பலவித குழப்பங்களே சூழ்ந்திருந்தது.
ஓரளவு அவள் நிலையைப்புரிந்திருந்த ராஹித்தியாவோ, “ஹேய் யுக்தா… ஏன் இப்டிஇருக்க? இன்னாருக்கு இன்னார்னு கடவுள் எழுதிவச்சபடிதான் எல்லாம் நடக்கும். உன்திவாவோட உன்னோட திருமணவாழ்க்கை நீ எதிர்பார்க்காத அளவு சந்தோசமா இருக்கும்மா. வீணா கண்டதும் போட்டு மனச குழுப்பிக்காம சிரிச்சமாறி இருமா” என்று சமாதானம் சொல்ல…
அப்பொழுதும் முகம் தெளியாமலே அமர்ந்திருந்தவளுக்கு,
“ஏன் என்ன யாருமே புரிஞ்சிக்கமாட்டிராங்க. என்னவிட சின்னவனோட நான் எப்டி? இவங்க யாருக்குமே எங்களுக்கிடையில் இருக்க ஏஜ் டிப்ரண்ட் கண்ணுக்குத் தெரியலையா” என்று ஆயாசமாக வந்தது.
கூடவே, ‘இதெல்லாம் அன்னிக்கு அவனோட முத்தத்துல இழையறப்போ யோசிச்சிருக்கனும்’ என்று அவள் மனசாட்சியே அவளை அற்பமாய் பேசியதில் மேலும் முகம் வாடிப்போனவளை இன்னும் வாடவைக்கவென்று வந்து சேர்ந்தார்கள் அவர்களின் உறவுக்காரப் பெண்கள் சிலர்.
திருமணத்தில் பெண்கள் மாறியதும், ப்ரித்திவ் சம்யுவின் திடீர் திருமணமும் அவர்களின் நெருங்கிய உறவுகளுக்கு சற்று குழப்பத்தைக் கொடுத்தாலும், ஊர்த்தலைவரான யுவாவிடம் அதைக்கேட்டு, அவனைப் பகைத்துக்கொள்ளும் தைரியம் அங்கிருந்த ஆண்களுக்கே இல்லாததால் அனைவரும் சிரித்த முகத்தோடே திருமணத்தை பார்வைஇட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் எதை எப்படி எங்கு பேசினால் தனக்கு பாதகம் இல்லாமல் பேசலாம் என்று நன்கு அறிந்திருந்த பெண்கள் கூட்டமோ,
அப்பொழுதுதான் மருமகள்கள் தயாராகி விட்டார்களா என்று பார்க்க வந்திருந்த மலரையும் காயுவையும் விசாரிப்பு என்கிற பெயரில் பிடித்துக்கொள்ள, அதில் தலைவியாய் இருந்த சுமதியோ,
“என்னண்ணி நான் அன்னிக்கு கோவில்ல சொன்னப்போ அப்டி சிலித்துக்கிட்டு பேசுனீக. இப்போ சோடியவே மாத்தி வச்சுருக்கீகளே? என்ன விஷயம்?” என்று சிரித்தமுகமாகவே வம்பிற்கு பிள்ளையார்சுழி போட்டாள்.
அதற்கு, “அது ஜாதகத்துல கொஞ்சம் பிரச்சனை சுமதி. அதான்” என்று இழுத்த மலரிற்கும் அன்று கோவிலில் பேசியதுபோல் பட்டென்று பதில்கூற முடியவில்லை.
‘சுமதி வம்புக்கென்றே பேசினாலும் அவள் கேள்வியில் நியாயம் உள்ளதே
தவறுசெய்தது தங்கள்வீட்டுப் பிள்ளைகள் அல்லவா’ என்ற எண்ணத்தில் சற்றே இறங்கிய குரலில் பதில் சொன்னவளின் அமைதியே சுமதியை இன்னும் வம்பு பேசத்தூண்ட…
“எதுக்கண்ணி இப்டி பூசி மொழுகுறீக. நான்தான் அன்னிக்கே சொன்னேன்ல. ஆம்புளப்புள்ளையும் பொம்பளபுள்ளையும் பழக்கறதுக்குன்னு ஒரு வரைமுறை இருக்கு. கொஞ்சம் சொல்லி வைங்கன்னு. ஆனா நீங்கதே எங்கவீட்டுப் பிள்ளைகள ரொம்ப நல்லமாறின்னு ரொம்ப சிலித்துக்கிட்டீக” என்றவள் அப்பொழுதும் நிறுத்தாமல், “திடீர்னு பொண்ணு மாறுனதுக்கு என்ன காரணம் அண்ணி? சும்மா சொல்லுங்க? நான்தானே” என்று மலரை இம்மியும் அசையவிடாமல் சிரித்தமுகத்தோடே வம்புபேசியவளைக் கண்டு மலருக்கே முகத்தை எங்காவது புதைத்துக் கொள்ளலாம்போல் இருந்தது.
எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் மலர்விழியின் அமைதியிலே மேலும் குதூகலமாகிய சுமதியோ, “சும்மா சொல்லுங்கண்ணி. என்கிட்டதான சொல்லுறீக. விஷயம் கிணத்துல போட்ட கல்லுமாறி கிடக்கும். வெளிய சொல்ல முடியாதளவு ஏதும் கசமுசாவா?” என்று இன்னும் விடாது புறணிக்கு அலைய, அதற்குள், “இங்க என்னமா வெசனம்?” என்று அங்கு வந்து சேர்ந்த நாச்சியம்மையோ…
“ஏன்டி சுமதி நீ இங்கனதான் இருக்கியா? போனமாசம் உன்றமவன் டெல்லில வேலை செய்யுற இடத்தில இருந்து யாரோ இந்திக்காரப்புள்ளைய கூட்டிட்டு ஓடிவந்துட்டான்னு ஊர்பூராம் பேச்சா பேசுச்சே, அந்த பொண்ணு இதுதானா?” என்று அவள் அருகில் தட்டைகுச்சிபோல் நின்ற இளம்பெண்ணை ஏற இறங்கப்பார்த்தவர், “எத்தா உன் பேரென்னத்தா. உன்ற அப்பாம்மாலாம் எந்த ஊரு?” என்று சுமதியின் வீட்டு விவகாரத்தை சபை ஏற்றினார் அப்பத்தா.
அதைக்கேட்டு, ‘இந்த தாய்க்கெழவிக்கு வயசுதேன் ஆகுதே ஒழிய வாய் இன்னும் அப்டியேத்தேன் இருக்கு’ என்று வெலவெலத்துப்போன சுமதியும்,
“நான் ஒரு கிறுக்குச் சிறுக்கி கல்யாண வீட்டுகாரவகளுக்கு எடஞ்சலா நின்னுகிட்டு” என்றவள் “நான் இன்னொரு நாள் மருமகள வீட்டுக்கே கூட்டியாறேன் பெரியாத்தா.” என்றுவிட்டு விட்டால் போதும் என்று அப்பெண்ணையும் இழுத்துக்கொண்டு ஓடியே சென்று விட்டாள்.
அவள் செல்லவும் மலர் காயுவின் புறம் திரும்பிய அப்பத்தாவும், “ஏத்தா… நல்லவுக எப்பையும் அடுத்தவீட்டு விஷயத்துக்கு அலைய மாட்டாக. அப்டி அலையிற ஆளுகளுக்கு நாம நல்லவுகளா இருக்கனும்னு அவசியம் இல்லத்தா. அந்தச்சிறுக்கி என்னலாம் பேசுறா. அவளுக்கு பதில் கொடுக்காம நீங்க ஏன் மருகிப்போய் நீக்கீக” என்று சொல்ல…
அதைக்கேட்டு மலர் எதுவும் சொல்லாது இருந்தாலும் அருகில் நின்ற காயத்ரியோ, “தப்பு நம்மமேலதான இருக்குது அப்பத்தா? நம்ம வீட்டு பொம்பளப் புள்ளையே நம்ம பேச்சை கேக்காதப்போ அடுத்தவளை பேசி என்ன செய்ய?” என்று தோளில் இடித்துக் கொண்டவளின் பேச்சில் அங்கிருந்த அனைத்து இளம் பெண்களுக்குமே முகம் ஒருமாதிரியாகிப் போக சம்யுக்தாவின் நிலையோ வார்த்தைகளுக்கு அப்பார்பட்டிருந்தது.
மலரைவிடவுமே காயத்ரி அன்பான பெண்மணிதான். ஆனால் பத்திரிகைகூட கொடுத்துவிட்ட நிலையில் மருத்துவர் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று அவளது மகனை மட்டம்தட்டி மறுத்துவிட்ட சம்யுவை முன்புபோல் கொஞ்சி சீராட்டும் அளவிற்கு அவளுக்கு அத்துணை பெருந்தன்மை எல்லாம் இருக்கவில்லை.
ஒரு அன்னையாக அன்று மகனின் வேதனையைப் பார்த்தவளுக்கு, அவளையும் மீறியே வார்த்தைகள் வந்துவிழ, அந்தத்தாயின் தவிப்பைக் குற்றம் சொல்ல முடியாத மலரும் மௌனமே மொழியாகிப்போக, காயத்ரியின் பேச்சு இன்னும் இன்னும் குற்ற உணர்ச்சியில் மூழ்க வைத்துக் கொண்டிருந்தது சம்யுவைத்தான்.
எது நடந்துவிடக்கூடாது என்று மனதை இரும்பாக்கி இரண்டு வருடங்களாய் தவித்துக் கிடந்தாளோ, அவள் நேசிக்கும் வீட்டினருக்கு அவளால் சிறு கசப்பும் வந்துவிடக் கூடாது என்று தன் உயிரானவனின் காதலையும் துச்சமாய் அன்று தூக்கி எரிந்தாளோ அது இன்று தங்கைக்காக அவள் எடுத்த முடிவால் அலுங்காமல் அரங்கேறிக் கொண்டிருந்தது.
அனைவரின் மனதிலும் சம்யுவிற்கும் ப்ரித்திவிற்கும் விருப்பம் அதனால்தான் அவளின் மறுப்பு என்றும் ஒரு பிம்பம் தானாகவே உருவாகி விட்டிருந்தது.
குறைந்தபட்சம் ப்ரித்திவ் உடனான திருமணத்திற்கு சிறிது கால அவகாசம் அளித்திருந்தால் கூட அவளுக்கு இத்துணை மனஉளைச்சல் இருந்திருக்காதோ என்னவோ.
குடும்பம், மானம், மரியாதை என்று மலரும், காதலியை கைப்பற்றும் முனைப்பில் அவள் மகனும் திருமணத்திற்குக் காட்டிய முனைப்பில் தன்னைவிடச் சிறியவனை எப்படித் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்கமுடியும் என்று மருகித்தவிக்கும் சம்யுவின் மனநிலையை அங்கிருந்த யாருமே புரிந்துகொள்ள முயலவில்லை.
பெண்ணவள்தான் இப்படியான கலக்கங்கள் கொண்டு தவித்திருந்தாளே ஒழிய, நடைபழகிய காலம் தொட்டு அவள் வாசத்தையும் உடன் பயின்றவனோ பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல் உள்ளம் முழுதும் பொங்கி பெருகிய பரவசத்தோடே அங்கு மணமகன் அறையில் ஆயத்தமாகி நின்றிருந்தான் ப்ரித்திவ்ராஜ்.
நவீனின் மீதான சந்தனாவின் காதலை அறிந்தப் பின்னும்கூட இப்போதைக்கு இத்திருமணம் நின்றுவிட்டால் போதும் என்ற அளவில்தான் அவனின் எண்ணமும் வேண்டுதலும் இருந்தது.
ஆனால் அவன் அன்னை திடீரென தங்கள் திருமணத்திற்கு வற்புறுத்தியது அவனுக்கும் மாபெரும் அதிர்ச்சியே இன்ப அதிர்ச்சி.
அவன் நினைத்திருந்தால் அன்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அன்னையிடம் உறுதியாக திருமணத்தை மறுத்திருக்க முடியும்தான். ஆனால் இரண்டு வருடங்கள் அவளைப் பிரிந்திருந்த அவனது உயிர்வலியும், தன்காதலைச் சொன்ன அன்று அவள் அதை ஹார்மோன் விளையாட்டு என்று எள்ளி நகையாடியதும் அவனைச் சற்று பலவீனமாக்கி இருந்தது.
அவனுடைய யுகியை உடையவள் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலில் அவளது கையறு நிலையை பயன்படுத்திக் கொண்டவன், இப்போதைக்கு அவளைத்தன் உடமையானவள் ஆக்கிக் கொண்டால் பின்பு அவளை சமாளித்துக் கொள்ளலாம் என்று இலகு மனநிலையோடே இளமை ததும்ப மணமகன் அவதாரம் பூண்டிருந்தான் அந்த மருத்துவன்.
ஆனால் வாழ்க்கை அத்துணை இலகுவானதாக இருக்குமா அவனுக்கு.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, நேரம் யாருக்கும் நில்லாது நகர்ந்து முகூர்த்த நேரத்தையும் அழைத்து வந்திருக்க, “மாப்பிள்ளைகள அழச்சிண்டு வாங்கோ” என்ற ஐயரின் கூற்றில் திருமணத்திற்கே உரிய பாரம்பரிய உடையான பட்டுவேஷ்ட்டி சட்டையில், ரோஜாவும் சம்மங்கியும் கலந்துகட்டிய ஆள்உயர மாலைகள் இட்டு, இரண்டு இன்ச் உயர வித்தியாசத்தில், சற்றுமுன்னர் ஒட்டவழித்து சவரன் செய்யப்பட்டதால் கண்ணாடியாய் பளபளக்கும் மோவாயோடும், ஆண்களுக்கே உரிய ஆண்மை ததும்பும் அழகாக கத்தரிக்கப்பட்ட கருத்தடர்ந்த மீசையோடும் மணமகன்களுக்கே உரிய கல்யாணக்களையோடும் ஒன்றாகவே நடந்து வந்து,
மணமகன்களை அமரவைத்து சிறிதுநேரம் மந்திரங்கள் ஓதி பூஜை செய்த புரோகிதர்
மணப்பெண்களையும் அழைத்துவரச் சொல்ல,
மாம்பழ வண்ண காஞ்சிப்பட்டில், பெப்சிப்ளூ என்று சொல்லக்கூடிய அடர்ந்த நீலத்தில் ஒரு அடி உயரம் தங்கஜரிகை கலந்து, ஒன்று சொன்னார்போல் முதல் நாள்தான் நெய்து வாங்கிய கண்ணைப்பறிக்கும் பட்டுப்புடவையில், காதிலும் கழுத்திலும் கையிலும் நிறைத்த தங்க ஆபரணங்களோடும் இறுக்கப் பின்னிய பின்னலில் மல்லிச்சரங்கள் கணக்கில்லாது வழிய எந்த செயற்கை முகப்பூச்சும் இல்லாது, சிறிதளவு அஞ்சனம் மட்டுமே தீட்டிய விழிகள் ஆழியாய் உள்ளிழுக்கும் இயற்கை கொஞ்சும் அழகோடும் ஒரே உயரத்தில் இருந்த சம்யுக்தாவும் சந்தனாவும் மணப்பெண்களாய் அன்னமென நடந்துவந்து அவரவர் இணைகளின் அருகில் அமர…
அதுவரை ஒரு திருமணம் திடீரென இருதிருமணங்களாக மாற்றப்பட்டத்தின் காரணத்தை
ஆளுக்கொன்றாய் கதைபேசி சலசலத்திருந்தவர்கள்கூட இரு ஜோடிகளுக்கும் உள்ள ஜோடிப்பொருத்தத்தைப் பார்த்து பேசாமடைந்தகளாக விழி விரித்து அமர்ந்துவிட்டனர்.
அக்கறை கொண்டு விசாரித்த நெருங்கிய உறவுகளிடம் மட்டும் ஜாதகப்பொருத்தம் இவர்களுக்குத்தான் இருக்கிறது என்று கடவுள் போட்ட முடிச்சை மனதில் வைத்துக் கூறியிருக்க, அதை அரசல் புரசலாக செவியுற்ற மற்றவர்களின் வீண்பேச்சுக்களும் வெட்டிவாதங்களும்கூட மணமக்களின் மனம் கவர்ந்த அம்சத்தில் பெருமூச்சுக்களாய் வெளியேறி காற்றோடு கலந்து காணாது போனது.
அத்துணை நேரமும் ஜோடி மாறிய திருமணத்தால் சிறு நெருடலோடும், உறவுகளுக்கு பதில்கூறும் படபடப்போடும் ஒட்ட வைத்த புன்னகையோடு சுற்றிவந்த பெற்றோர்களும்கூட மணஜோடிகளின் தோற்றப் பொருத்தத்தில் தங்களை மறந்த மகிழ்வில் மனம் பூரித்து ஜோடியாகவே மணமேடைஏறி அவர்களை ஆசிர்வதிக்க ஆயத்தமாக, அவர்களோடு இணைந்து மற்ற உறவுகளும் மணமக்களைச்சூழ மாங்கல்யம் இடுவதற்கான இறுதிகட்ட சம்பிரதாயங்கள் முடிந்து “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்ற ஐயரின் கூற்றோடு நாதஸ்வரமும் மேளதாளமும் அதிர்ந்து ஒலித்தது.