அப்பொழுதுதான் மண்ணில் தோன்றி எடுத்த மஞ்சள் கிழங்கின் வாசத்தோடு பதினோரு பிடி நீளத்தில் இருந்த மஞ்சள்சரட்டில் அவர்களின் பரம்பரை மாங்கல்யம் கோர்க்கப்பட்ட தாலியை மூத்தவன் என்ற முறையில் முதலில் நவீன் சந்தனாவின் சங்குக்கழுத்தில் தன் இறுகிய கரங்களால் அணிவித்து இரண்டு முடிச்சுகளை இட்டு தன்னவளாய் ஏற்றுக்கொள்ள மூன்றாம் முடிச்சை அவள் தமக்கையான சுஜாவந்து போட்டு பூர்த்திசெய்து வைத்தாள்.
அதேசமயம் அதேபோன்ற தாலிச்சரட்டை சம்யுவின் கழுத்தைச் சுற்றிக் கொண்டு சென்ற ப்ரித்திவின் விழிகளோ பெண்ணவளின் நயனங்களை ஆவலோடு ஏறிட அங்கு இருந்தது என்னவோ, “நமக்குள்ள இது வேணான்டா” என்ற மருகல்தான்.
அத்தோடு புன்னகை நிறைந்திருக்க வேண்டிய பாவயவளின் பனிஇதழ்களும்
“நீ என்னவிட சின்னவன்டா” என்று அச்சூழலிலும் மறுப்புமொழி பேச…
அதைக்கண்டு சற்றே சுருங்கி விரிந்த விழிகளோடு ஏமாற்றத்தில் இறுகிய ஆணின் அதரங்களோ, “நான் நல்லவன்தான்யுகி. உனக்கே உனக்காக உன்னையே இன்னொருத்தனுக்கு விட்டுக் கொடுக்கத் துணிஞ்ச ஏமாளிதான். ஆனா அதே ஏமாளித்தனத்த திரும்பவும் செய்ய நான் முட்டாள் இல்லடி. ஏஜ் ஜஸ்ட் எ நம்பர் யுகி” என்று மகிழ்ச்சி துடைக்கப்பட்ட குரலில் கூறியவனின் கரங்களோ அதுபாட்டில் பாவயவளின் பவளக் கழுத்தில் மூன்று முடிச்சுக்களும் இட்டு ஆரம்பித்த வேலையை இனிதே முடித்தும் வைத்திருந்தது.
சுஜாவைப்போல அவனின் இரட்டை தமக்கைகள் நாத்தனார் முடிச்சிட வந்ததையும் பொருட்படுத்தாது ப்ரித்திவே மூன்று முடிச்சுக்களையும் இட்டு தன்னுடைய யுகியை தன்னின் சரிபாதியாக ஏற்றுமுடிக்க, “என்னடி இது. அவனே போட்டுட்டான்?” என்று சாஹியைப்பார்த்து ராஹி உதட்டை வளைக்க…
“நம்ம தொம்பிக்கு அவ்ளோ அவசரம்போல. பரவாயில்ல விடுடி” என்ற சாஹி தோளை குலுக்கிவிட்டு ஐயர் கேட்ட குங்குமத்தட்டை நகர்த்திக் கொடுத்தாள்.
அதைக்கேட்டு அதிருப்தியோடு தலையாட்டிக்கொண்ட ராஹியின் அருகில் நின்று அவர்கள் சாம்பாசனையை கேட்டிருந்த அவள் கணவனோ, “மாமன் எவ்வழியோ மச்சினனும் அவ்வழியே ஹனி. நீ பீல்பண்ணாத.” என்று புடவைமறைவில் அவள் இடையை வளைக்க முயல…
“ம்க்கும் நீங்கதான் மெச்சிக்கனும். அக்காவா தங்கச்சியான்னு தெரியாமயே அவசரத்துல மூனு முடிச்சையும் போட்டு தாலிகட்டுனவரு நீங்க. அதுக்கு என்தம்பி பால்லோ வேறயா. விளங்கிடும்” என்றவள் தனது கைக்குட்டையை நீட்டி, “ரொம்ப வழியிது துடைச்சிக்கங்க” என்று சிரித்து அவன் கரத்தையும் தட்டிவிட்டாள்.
மனைவியின் கிண்டலை இதழ்விரிந்த புன்னகையோடே ரசித்துக்கொண்டவனும், “வழியிறது பிடிக்கலைன்னா நீயே துடைச்சுவிடு ஹனி. ஆனா டோன்ட் யூஸ் ஹேண்ட்.” என்று அவள் இதழ்களைப் பார்த்தபடி பதில் கூறியவனின் பேச்சில்,
“ச்சீ போங்க ஆதி” என்று மணப்பெண்போல் ராஹி தலையைக் குனிந்து கொள்ள…
அச்சமயம் அவர்களை நெருங்கிய சுஜாவோ, “ம்க்கும்… கல்யாணம் உன் தம்பிக்குடி” என்று தொண்டையை கனைத்து அவர்களை கிண்டல் செய்தவள், “யுக்தாவோட நெத்திச்சுட்டிய நகத்திபிடிடி” என்றும் சொல்லிவிட்டு சந்தனாவின் பின்னே சென்று நின்றாள்.
சுஜாவின் பேச்சில் சுற்றம் உணர்ந்த ராஹியும், சம்யுவின் பின்னே நின்று நெற்றிச்சுட்டியை நகர்த்திப்பிடிக்க, அதற்காகவே கையில் குங்குமத்தோடு காத்திருந்த ப்ரித்திவோ
அவள் தலையைச்சுற்றி கையைக்கொண்டு சென்று பெண்ணவளின் உச்சியில் அழுத்தமாய் திலகத்தை இட்டதோடு அதன் அருகினிலே உரசினால்போல் சிறு முத்தமும் பதித்து உணர்வாலும் உயிராலும் நீயே எந்தன் சரிபாதி என்று சொல்லாது சொல்ல, சிலிர்ப்பைக் கொடுக்க வேண்டிய அத்தருணமோ சம்யுவின் விழிகளை கலங்கத்தான் வைத்தது.
‘என் உணர்வுகளை நீ கூடப் புரிந்து கொள்ளவில்லையே?’ என்ற ஆதங்கத்தோடு துளிநீர் சிந்திய பெண்ணவளின் செயலில் ஆனந்தக்கூத்தாடும் ஆணின் உள்ளம் ஊசிபட்ட பலூனாய் வாடிப்போனாலும் இருந்த இடம் கருதி அவளை அணைத்து ஆற்றுப்படுத்த முனைந்த கரத்தினை அடக்கி மாங்கல்யத்திலும் சிறிது குங்குமம் வைத்தான் அவளவன்.
அதேநேரம் சற்றுத்தள்ளி இருந்த ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்திருந்த நவீனும் தன் இணையாளின் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டு மாங்கல்யத்திலும் வைக்கும் சமயம் அவனையும் அறியாமல் அவன் விழிகள் பெண்ணவளின் பால்முகத்தை நோக்க, வாய்ப்பே இல்லை என்று எண்ணியிருந்த காதல் கைக்கூடி தன் உள்ளம் கவர்கள்வனே கேள்வனாய் தன்னை ஏறெடுத்துப்பார்த்த கணவனைக்கண்டு பால்பாவையவளின் இதழ்களோடு விழிகளும் மகிழ்ச்சியில் விரிய…
அதைக்கண்ட நொடி அதுவரை அவன் மனதில் இருந்த ஒருவித வெறுமை மறைந்து, சம்பிரதாய சிரிப்பே ஆனாலும் அவன் இதழ்கள் அவனையும் அறியாது சிறிதாக விரிந்து அவன் இணையாளுக்கான முதல் நகையை உதிர்த்தது.
இரு ஜோடிகளுக்கும் தாலி கட்டும் சம்பிரதாயம் இனிதே நிறைவுற, அடுத்தடுத்த சாங்கியங்களும் தொடர்கதைபோல் நீள, அனைத்தும் செய்து முடித்த மணமக்கள் நால்வரும் பெற்றோர்களிடமும் உற்றார்களிடமும் ஆசிபெற்று முடித்தனர்.
திருமண வைபவங்களும் திருப்தியாக முடிவை நெருங்க, வந்திருந்த அனைவரும் பந்தியை நிறைத்த எண்ணிலடங்கா நெல்லை உணவுகளையும் ஒரு கைபார்க்கத் தொடங்கினர்.
அதன்பின் அனைவருக்குமே நிமிடங்கள் நொடிகளாகக் கடக்க, ஒருவழியாக பந்தியும் சிறப்பாக முடிந்த பின்னர் மணமக்களையும் வாழ்த்திவிட்டு விருந்தினர்கள் அனைவரும் ஒவ்வொருவராக தங்கள் வீடுநோக்கி கிளம்பினர்.
அதன்பின்னர் ஆண்களும் சற்று ஓய்வாக அமர்ந்துவிட, இங்கு மலர் காயு ஜானுவும் அவர்களோடு மதியும் சேர்ந்து ஜோடியாய் வீட்டிற்குள் நின்ற மணமக்களை பூஜைஅறை அழைத்துச்சென்று
பெண்களை விளக்கேற்ற வைத்து மீண்டும் நடுக்கூடத்தில் அமரவைத்து பாலும் பழமும் கொடுக்க, அத்துணை மணித்துளிகள் கடந்தும் சம்யுவின் விழிகள் அவளவனை ஏறிடவும் இல்லை. மருந்துக்குக் கூட அவள் இதழ்கள் புன்னகைத்து விரியாமல் இறுகிப்போயே இருந்தது. ‘இத்திருமணம் முழுக்க முழுக்க ப்ரித்திவின் காதலாலும் கூடவே தங்களுக்குள் அன்று நடந்த முத்தபரிமாற்றத்தாலும் அதை மலர்விழி பார்த்துவிட்ட காரணத்தால் மட்டுமே நடந்தது. தன்திவா நினைத்திருந்தால் இதைத் தடுத்திருக்க முடியும். ஆனாலும் என்மறுப்புத் தெரிந்தும் என்னை அடைவதற்கான வழியாக இதை ஆக்கிக்கொண்டான்.” என்று திருமணச் சடங்குகள் நீடிக்க நீடிக்க அவளின் ஆற்றாமையும், கையறு நிலையும் ப்ரித்திவின் மேல் கடும்கோவமாக உருமாறிக் கொண்டிருந்தது.
கூடவே யுவா வெளிப்படையாகவும் நவீனின் அன்னை காயு மறைமுகமாகவும் அவளிடம் காட்டிய பாராமுகமும், எப்பொழுதும் சிரித்த முகத்தோடு உலாவரும் நவீனின் இன்றைய வருத்தம் தோய்ந்த முகமும் “இத்திருமணம் பெரும் தவறு. இதற்கு நான் சம்மதித்திருக்கவே கூடாது” என்ற காலம் கடந்த கருமையை அவளுள் விதைத்து மென்மேலும் அவளை மனஉளைச்சலுக்கு ஆளாக்க எப்பொழுதடா தனிமை கிடைக்கும் என்று காத்திருந்தவள் பால்பழம் கொடுத்து முடியவும் மலரிடம் கூறிவிட்டு தனியறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
அத்துணை நேரம் அவளையே கவனித்து இருந்த ப்ரித்திவும், ‘இப்போதைக்கு அவளுக்குத் தேவை தனிமைதான்’ என்று அவன் அறைக்குள் சென்று விட்டவன் சில நாட்கள் கழியவும் நவீனிடம் அனைத்தும் சொல்லவேண்டும் என்றும் எண்ணிக்கொண்டான்.
ஆனால் சம்யுவிற்கு முற்றிலும் மாறாக சுற்றியிருந்த இளம்பெண்களின் சிறுசிறு கேலிகளில் நாணிச்சிவந்த முகத்தில் புன்னகைமாறா இதழ்களோடு, ஓரக்கண்ணால் கணவனை ரசித்தவாறு அமர்ந்திருந்த சந்தனாவை ஒதுக்கிவிட்டு ஏனோ நவீனால் எழுந்து செல்லவே இயலவில்லை.
அதிலும் அவன் காலையில் தாலிகட்டி முடித்து திலகமிடும் சமயம் தன் புன்னகைக்கு பதில் புன்னகை அளித்ததில்வேறு மேலும் அவன்மீது பித்தான பாவையின் வைரமாய் மின்னிய விழிவீச்சை பக்கவாட்டாக உணர்ந்தவனின் கால்கள் அவன் அன்னை அறைக்குச்சென்று ஓய்வு எடுக்குமாறு கூறியும், ‘சந்தனா பாத்துட்டே இருக்காளே. என்கிட்ட ஏதும் சொல்லனும்னு நினைக்கிறாளோ. எப்டி அவளைவிட்டுப்போறது’ என்றெல்லாம் எண்ணி நகராமல் சண்டித்தனம் செய்தது.
பார்வை பரிமாற்றங்களிலே இன்னும் சிறிதுநேரம் கரைய மீண்டும் அங்குவந்த காயுவோ, “நைட்டு சடங்குக்கு இன்னும் நேரமிருக்கு. அதுவரை ரெண்டுபேருமே கொஞ்சம் ஓய்வுஎடுங்க. சந்தனா நீயும் வாமா” என்று பெண்ணவளை அழைத்துச் சென்றப்பின்னரே, “சடங்கா! என்ன சடங்கு? அய்யகோ இதை எப்படி மறந்தேன் கடவுளே” என்று தலையில் கைவைத்தபடி தனதறைக்குள் நுழைந்து கொண்டான் நவீன்.
அவன் அறைக்குள் நுழைந்த சற்றுநேரத்திற்கெல்லாம் சம்யுவிடமிருந்து, “என்னோட இந்த முடிவு உங்கள ஹர்ட் பண்ணிருந்தா என்னை மன்னிச்சுடுங்க மாமா. என்னவிட சந்தனாதான் உங்களுக்கு பொருத்தமானவ என்மேல இருக்க கோபத்த என் தங்கச்சிகிட்ட காட்டிடாதீங்க. அவசின்ன பொண்ணு. அவள சந்தோசமா பாத்துக்கங்க” என்று இரண்டு வரிகள் குறுஞ்செய்தியாக வந்திருக்க…
அதைப்படித்தவனுக்கோ, ‘என்ன வேணாம் சொன்ன இவமேலையே எனக்கு எந்தக்கோவமும் வரல. வீட்ல சொன்னாங்கன்னு ஒருகாரணத்துக்காக மறுவார்த்த பேசாம என்ன கட்டிக்கிட்ட என் பொண்டாட்டிமேல எனக்கு ஏன் கோவம் வரப்போகுது’ என்று சம்யுவின் பேச்சு அவனுக்கு புன்னகையே கொடுத்தது.
எதையும் ஆர்ப்பாட்டம் செய்யாமல் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் குணம் கொண்டவன் தன்வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய (ஏ)மாற்றத்தையும்
அதே நிதானத்தோடுதான் எதிர்கொண்டான்.
தான் சற்றுமுன்னர் நினைத்ததையே சம்யுவிற்கு அவள் மனம்நோகாத வார்த்தைகள் இட்டு அனுப்பி வைத்தவன் அப்படியே படுக்கையில் சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டவனுக்கு ப்ரித்திவிற்குள்ளும் சம்யுவிற்குள்ளும் இத்துணை நாளாக இருந்தது தான் நினைத்ததுபோல் உயிர் கொடுக்கும் நட்பு அல்ல உயிரையே உருகவைக்கும் ஆழமான நேசம் என்ற ஒருவிஷயம் இப்பொழுது நன்கு தெளிவாகி இருந்தது.
சிறுவயதில் இருந்தே அவர்கள் அன்பின் ஆழத்தை அறிந்திருந்தவன் இல்வாழ்க்கையிலும் அவர்கள் இணைந்ததுதான் சரி, அவர்கள் இருவருக்கும்தான் பொருத்தம் என்றும் எண்ணி, இனிமேல் சம்யுவை எண்ணிப் பார்ப்பதுகூடத் தவறு என்றும் உள்ளத்தில் உறுப்போட்டுக் கொண்டவனுக்கு, ‘இதை அவர்கள் முன்பே தன்னிடம் கூறி இருக்கலாமே அப்படி கூறியிருந்தால் நானே முன்னின்று அவர்கள் காதலை இணைத்து வைத்திருப்பேனே.’ என்ற ஆற்றாமை மட்டுமே தற்சமயம் இருக்க, இன்று நடந்து முடிந்த திருமணங்களால் அநியாயமாக சிறு பெண்ணான சந்தனாதான் தன்னிடம் மாட்டிக் கொண்டதாக எண்ணினான் அந்த நல்லவனுக்கெல்லாம் நல்லவன்.
சந்தனாவைப்பற்றி எண்ணியவுடனே அவளின் பால்நிலா முகமதில் மாங்கல்யம் கட்டும் பொழுதும், சற்றுமுன் கூடத்தில் அமர்ந்திருந்த பொழுதும் அவனுக்காக உதிர்ந்த மென் புன்னகையும் இக்கணம் ஆடவனின் கண்முன் தோன்றி அவன் இதழ்களையும் மெல்லிதாக விரிய வைத்து, ஆழ்ந்த உறக்கத்திற்கும் அவனை இழுத்துச் சென்றது.
அப்படியே நிமிடங்கள் கரைந்து மணிகளாகக்கடக்க, இருஜோடிகளையும் இரவு உணவுக்கு அழைத்த பெரியவர்கள் உணவருந்தி முடிக்கவும் இனிய இரவுக்கும் அவர்களை ஆயத்தம் செய்யும் பொறுப்பை அவ்வீட்டின் பெண்பிள்ளைகளிடமும் மாப்பிள்ளைகளிடமும் ஒப்படைக்க, மச்சான்களை ஆண்களும் தம்பிமனைவிகளை நாத்திகளும் அலங்காரம் செய்து அவரவர் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.
வாழ்க்கை எனும் மேடையில் கடவுளின் கரங்களில் நூற்பொம்மைகளாகிப்போன மனிதகுலத்தில் பிறந்த சம்யுவும் அனைத்தும் பொறுத்துக் கொண்டு பல்லைக்கடித்தபடி ப்ரித்திவின் அறைக்குள் நுழைய, அங்கு சந்தனாவும் பெரிதான எதிர்பார்ப்புகள் இல்லாவிடினும் மிகச்சந்தோசமாகவே நவீனின் அறைக்குள் நுழைந்தாள்.