தழையத்தழைய கட்டிய சந்தனவண்ண சன்னக்கரை பனாரஸ் பட்டுப்புடவையில், கழுத்திலும் காதிலும் கையிலும் தங்கத்தால் ஆன சிறு சிறு நகைகள்பூட்டி, இடைதாண்டி நீண்டிருந்த கருநாகப்பின்னலில் கணக்கில்லாது மல்லிச்சரங்கள் வழிய, சிறிதான வெட்கமும் மகிழ்ச்சியும் போட்டிப்போடும் முகத்தோடு அன்னமென நடையிட்டு வந்தவள், இப்பொழுதுதான் முதல்முதல் அவ்வறைக்குள் நுழைவதால் அறையை சுற்றிமுற்றியும் பார்த்தபடியே, “மாமா ரூமை ரொம்ப நீட்டாவே வச்சிருக்காங்க” என்று எண்ணிக்கொண்டு நவீனைத்தேட…
அவனோ இன்னும் கல்லூரியின் மேற்படிப்பைக்கூட முடிக்காத சிறுபெண்ணை வலுக்கட்டாயமாக தனக்கு கட்டிவைத்ததோடு இப்படி ஒரு ஏற்பாட்டைவேறு செய்துவிட்டார்களே என்று வீட்டினரை நொந்தபடி தோட்டத்தில் அல்லவோ நின்றிருந்தான்.
சிறிதுநேரம் கழித்தே, “எதற்கும் ஓடி ஒளிவதைவிட நேருக்கு நேர் எதிர்கொள்வதே சாலச்சிறந்தது” என்ற முடிவுக்கு வந்தவனாய் அறையை நெருங்கி ஒரு பெருமூச்சோடு தன்அறைக்குள் நுழைந்தவன் கண்டது என்னவோ குறிப்பேடு புத்தகத்தில் எதுவோ எழுதிக்கொண்டிருந்த சந்தனாவைத்தான்.
கதவைத்திறந்து இவன் உள்ளே வந்ததைக்கூட உணராமல் மும்முறமாக எழுதிக்கொண்டிருந்தவளைப் பார்த்ததும், ‘ச்சே எவ்ளோ பெரிய மடத்தனம் பண்ணிட்டோம். இன்னும் படிப்பக்கூட முடிக்காத பொண்ணப்போய் கல்யாணம் பண்ணி’ என்று மேலும் தன்னைத்தானே திட்டித்தீர்த்தவன் அவளை அழைக்கத் தோணாது நின்றிருக்க, சற்றுநேரத்தில் எதற்ச்சையாக நிமிர்ந்த சந்தனாவோ அவனைப்பார்த்ததும்,
“மாமா” என்று வாரிச்சுருட்டி எழுந்து கொண்டவளின் மடியில் இருந்து குறிப்பேடும் பேனாவும் கீழேவிழுந்தது.
அவன் இருந்த மனநிலையில் அந்தப்பேனை எப்பொழுதோ தான் வாங்கிக்கொடுத்தது என்றுகூட உணராத நவீனோ, “ஹேய் மெல்லமா. என்ன அவசரம்” என்று ஓடிச்சென்று அதை எடுத்துக்கொடுக்க, அதைவாங்கி வேகமாக அலமாரியினுள் வைத்தவள் சொம்பில் இருந்த பாலை ஊற்றி அவன்முன்னே நீட்டினாள்.
பட்டாம்பூச்சியாய் படபடக்கும் விழிகளோடு இன்னும் பால்முகம்மாறாத பருவக்கன்னியாய் தன் முன்னே நின்றவளிடம் அதை மறுக்க முடியாது வாங்கிக்கொண்டவன், “உனக்கு… உனக்கு… நீயும் குடி சந்தனா” என்று சொல்ல…
அவளோ, “நீங்க குடிச்ச மிச்சம்தான் நான் குடிக்கனும்னு அத்த சொல்லிவிட்டாங்க நவீத்தான்” என்றாள் சிறு வெட்கப்புன்னகையோடே.
தன்மீதான தங்கையின் காதலுக்காகத்தான் சம்யுக்தா தன்னை மறுத்தாள் என்று அறியாதவன் சந்தனாவும் தன்னைப்போலவே சூழ்நிலைக்கைதியாய்தான் தன்னை மணந்து கொண்டிருக்கிறாள் என்றே எண்ணிக்கொண்டிருப்பவனுக்கு அவள் காலையில் திலகமிடும் சமயம் சிரித்ததும், சற்றுமுன்னர் தன்னையே பார்த்திருந்ததும் அவனுக்கு ஒரு இதத்தை கொடுத்திருக்க…
தற்சமயம் பெண்ணின் அந்த நவீத்தானில் அவனுள் இனம் புரியா மொட்டொன்றும் அவிழத் தொடங்கியது.
அதில் அவனையும் அறியாது அவள் சொன்னபடி பாதிப்பாலை அருந்திவிட்டு மீதியை அவளிடம் நீட்டியவனுக்கு அடுத்து என்ன பேசவென்றோ செய்யவென்றோ ஒன்றுமே புலப்படவில்லை.
அவனுக்கு சம்யுவின்மேல் ப்ரித்திவைப்போல் உயிர்க்காதல் எதுவும் இல்லைதான் ஆனாலும் அவள் கொடுத்த நிராகரிப்பின் சுவடைக் கடந்துவர நிச்சயம் காலஅவகாசம் வேண்டும் என்று எண்ணியவன்,
“சந்தனா… சந்தனா… நான், நான்… உன்கிட்ட” என்று ஏதோ சொல்லவந்து பின் தயங்கியடி நின்றான்.
அதைப்பார்த்து, “அய்யோ நவீத்தான்… என்கிட்ட பேச ஏன் இப்டி தந்தியடிக்கிறீங்க?” என்று கலகலத்துச் சிரித்தவள்,
“நமக்கு திடீர்னு கல்யாணம் ஆகிடுச்சுதான். அதுக்காக அடுத்தடுத்து நடக்கவேண்டியதும் உடனே நடக்கனும்னு எந்த கட்டாயமும் இல்லை. தெரிஞ்சோ தெரியாமலோ சின்னவயசுல இருந்து ஆசைப்பட்ட கல்யாணம் நின்னதுல, அதுவும் அக்காவே” என்று சிறு இடைவெளிவிட்டுத் தொடர்ந்தவள், “அக்காவே நிறுத்துனதுல உங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்னு எனக்குப் புரியுதுத்தான். ஆனா அவளும் ஏதும் காரணம் இல்லாம அப்டி பண்ணிருக்கமாட்டா நவீத்தான்” என்று வருத்தம் கொண்டு கூறினாள்பெண்.
உனக்காக நவீனை விட்டுக் கொடுக்கிறேன் என்று சொன்னால் சந்தனா ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்ற எண்ணத்தில் சம்யுக்தா தங்கையிடமும் எதையும் கூறியிருக்கவில்லை.
இருந்தும் தமக்கையைப் புரிந்துகொண்டு தற்சமயம் கணவனின் நிலையும் உணர்ந்தவளாய்ப் பேசியவள், “அதனால இப்போதைக்கு ஒரு ரூம்மேட் போல நாம இங்க இருப்போம்த்தான். ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று முடித்துவிட்டு படுக்கையில் இருந்து போர்வையும் தலையணையும் எடுத்தவளிடம் இப்படி ஒரு புரிதல் கிடைக்கும் என்று அவன் கனவில்கூட கண்டிருக்கவில்லை.
சிலகணங்கள் அவள் பேச்சில் விக்கித்து நின்றவன் அவள் போர்வையை தரையில் விரிப்பதைப்பார்த்து, “அய்யோ சந்தனா… நீ… நீ… இப்போ எதுக்கு கீழ படுக்கப்போற?” என்று பதற…
அவளோ, “அப்றம் எங்க படுக்குறதுத்தான்?” என்று இடுப்பில் கைவைத்துக்கேட்டாள்.
அவள்கேட்ட தோரணையில் அவன் இதழ்கள் அன்னிச்சையாக விரிய, “நீதான நாம ரூம்மேட்னு சொன்ன. ரூம்மேட்னா கட்டிலும் சேர் பண்ணிக்கலாம். தப்பில்லை.” என்று நிறுத்தியவன், “நீயும் செல்லமா வளந்த பொண்ணு உன்ன கீழ படுக்கவச்சா எனக்குத் தூக்கம் வராதுமா.” என்று தயங்கித்தயங்கிக் கூறியவனை இறுக்ககட்டி அணைத்து முகமெல்லாம் முத்தாடவேண்டும் போல் தோன்றியது அவன் இணையாளுக்கு.
அவனே ஆயிரம் குழப்பத்தில் இருந்தும் அவள் நலன்கருதி பேசியவனின் பேச்சில் அவளும், “ம்ம்ம் சரித்தான்… ரெண்டுபேரும் கட்டில்லயே படுத்துக்கலாம். ஆனா நான் கையகால தூக்கிப்போடுவேனே? அதனால இடையில தலைகாணி வேணா வச்சுக்கலாம் நவீத்தான்” என்று கேள்வியும் கேட்டு பதிலையும் கூறியவள் சொன்னதுபோல படுக்கையின் நடுவில் தலையணையை வைத்துவிட்டு அந்தப்புறம் சென்று படுத்துக்கொள்ள…
இவனும், “ஓகே சந்தனாமா தேங்க்ஸ்.” என்று அனைத்துக்கும் பொதுவாய் முனுமுனுத்துவிட்டு இந்தப்புறம் வந்து படுத்துக்கொண்டான்.
முதலிரவு ஏற்பாட்டிற்காய் மலர்கள் கொண்டு அலங்கரித்த இனிமையான சூழல்தான். மலர்கள் மற்றும் ஊதுப்பத்தியின் மணத்தோடு ஏசிக்காற்றின் உபயமும் சேர்ந்து குளிரூட்டப்பட்ட இதமான அறைதான். நான்குநபர்கள் படுக்குமளவு அகலமும் அரையடி ஆழம் புதையும் பஞ்சுமெத்தையும் நிம்மதியான உறக்கத்திற்குப் போதும்தான்.
ஆனால் இத்துணை தினங்கள் அந்நியர்கள் போல் இருந்த ஆணும் பெண்ணும் இச்சமயம் உறவால் ஒன்றுபட்டு இருந்தாலும் இன்னும் உள்ளம் ஒன்றுபடாத நிலையில் நித்திரையும் கூட அவர்களை ஒதுக்கி வைத்ததோ.
கண்மூடிக்கிடந்தாலும் கட்டிலின் மறுபுறம் ஏற்பட்ட அசைவிலே ஆணவனின் நிலையை அறிந்தவள் மெல்ல அவன்புறம் திரும்பிப்படுத்து, “நவீத்தான்…” என்றழைத்து, “தூக்கம் வரலையாத்தான்?” என்று கேட்டவள், “ஏதாவது மெலடி சாங்க் கேட்டா நல்லா தூக்கம்வரும்னு அப்பா சொல்லிருக்காங்க. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா” என்றவள் முடிக்கும் முன்னேவே,
நிமிடநேரப் பிணைப்பிலே தன் நெஞ்சை முட்டிக்கொண்டு வெளிக்கிளம்பிய நேசத்தை அடக்கும் முயற்சியாய் பெண்ணவள் வேகமாக எழுந்து கைபேசியை எடுத்து அழகான பாடலை ஒலிக்கவிட்டாள்.
அவள் ஒலிக்கவிட்டபாடல் அவனுக்கு உறக்கத்தை கொடுத்ததோ இல்லையோ தனக்காக யோசித்த பெண்ணின் செயலில் இதயம் இறகாகப்பறந்து ஆழ்ந்த உறக்கத்திற்குள் ஆடவனை இழுத்துக்கொள்ள…
சற்றுநேரத்தில் அவன்புறமிருந்து வந்த மெல்லிய மூச்சுக்காற்றின் ஓசையைகேட்டப்பின்னே பெண்ணின் விழிகளும் தாமாக மூடிக்கொண்டது.
வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டவர்களின் இரவு இனிமையாக இல்லாவிடினும் இயல்பாகக் கரைந்திருக்க…
அங்கே கையறுநிலையில் நின்று காதலனைக் கைபிடித்த காரிகையோ அக்காதலின் ஆழமதை உணரமறுத்து காளிதேவியாய் ப்ரித்திவின் அறைக்குள் நுழைந்தாள்.
தனக்கும் அவளுக்கும் திருமணம் என்று பேசியதினம்தொட்டே பெண்ணவளின் முகம்காட்டிய கலங்கங்களில் அவனும் கலங்கித்தவித்து, தன்னவளை அணைத்து ஆற்றுப்படுத்த எப்பொழுதடா தனிமைகிட்டும் என்று காத்திருந்தவன் சம்யு அறைக்குள் நுழைந்த மறுகணம், “யுகி” என்று ஆவலோடு அவளை நெருங்க…
அதில் உருகிக்கரைய வேண்டியவளோ,
“அப்டிக்கூப்புடாதடா” என்று கத்தியவாறே கையிலிருந்த
பால் சொம்பையும் அவன் முகத்தின்மீதே விட்டெறிந்திருந்தாள் சம்யுக்தா.
அது அவன் முகத்தில் படாது சற்று தள்ளியிருந்த மரஅலமாரியின் மீது மோதினாலும் அதில் இருந்த பால்மொத்தம் அவன் தலையில் கொட்டி முகம் முழுதும் வழிந்து அவனுக்கு பாலாபிசேகம் நடத்த…
இப்படியொரு முதலிரவுக்காட்சியை அவன் எந்த சினிமாவிலும் கூட கண்டிருக்க மாட்டான்.
அப்டிக்கூப்பிடாத என்று சம்யு பெருங்குரலில் கத்தியதிலே அதிர்ந்து நின்றவன் பெண்ணவளின் செயலில் மேலும் உறைந்துநிற்க…
ஆனால் அவனவளோ நில்லாது அவனை நெருங்கியவள், “ஏன்டா ஏன் ஏன் இப்டிப்பண்ண? ஏன் என் நிம்மதியக் குழைச்ச? எதுக்காக எனக்கு அன்னிக்கு முத்தம் கொடுத்த?. நான் வேணாம்னு சொல்லியும் ஏன் இன்னிக்கு எனக்கு தாலிகட்டுன” என்று அவன் சட்டையைப்பிடித்து உலுக்கி அவன் நெஞ்சிலே சரமாரியாகத்தாக்கத் தொடங்கினாள்.
அதில் அதிர்ச்சியில் இருந்து மீண்டவன், “யுகி ரிலாக்ஸ்டி. ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருடி. சின்னப்புள்ளயிலிருந்து உயிராப்பழகுன உன்மேல காதல் வந்தது என்னோட தப்பாடி. அன்னிக்கும்சரி இன்னிக்கும்சரி நான் வேனும்னு எதுவும் செய்யலடி.” என்று அவள் கையைப்பற்றிக் கெஞ்ச…
அவளோ, “பொய் சொல்லாத… அன்னிக்கு நீ வேணும்னு ஏதும் பண்ணலன்னா, இன்னிக்கு நான் வேணாம்னு சொல்லியும் ஏன்டா இத என் கழுத்துல கட்டுன?.” என்று கழுத்தில் தொங்கிய தாலியைத் தூக்கிக் காட்டியவள், “நீ மட்டும் யுகிய கட்டிக்கமாட்டேன்னு ஒருவார்த்தை சொல்லிருந்தா அவங்க கல்யாணம் மட்டும் நடந்துருக்குமே. இப்போபாரு நாம தப்பா பழகிருக்கோம்னு நினைச்சு தான் மலர் அத்தை நமக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.
காயு அத்தையும் வயசுல சின்னவன காதலிச்சியான்னு என்ன அற்பமா பாக்குறாங்க. மாமாவும் என்ன தப்பா நெனச்சு என்கூட பேசவே இல்லைடா.” என்று இப்பொழுது தன் முகத்திலும் அறைந்து கொண்டு அழுதாள் சம்யுக்தா.
அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்று தெரியும்தான். ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவள் இத்துணை தவிப்பாள் என்று
எண்ணியிராதவன், “யுகீ… நீ நினைக்கிறபோல யாரும் நம்ம தப்பா நினைக்க மாட்டாங்கடி. சின்ன, வயசு வித்தியாசத்துல இருக்கவங்க காதலிக்கிறது தப்பான விஷயமுமில்லடி. அந்தக்காதல் புரிஞ்சதாலதான் அம்மாவும் நமக்கு கல்யாணம் பேசிருக்காங்க. அது உனக்கு புரியலயா யுகி. ஏஜ் டிப்ரண்ட்லாம் இப்போ ஒரு விஷயமே இல்லடி. அதுக்குப்போய் ஏன்டி இப்டி அழற? மூச்சுவாங்குது கண்ணா ப்ளீஸ் அழாதடா” என்று அவளுக்கு புரிய வைக்கும் முனைப்பில் ஏதேதோ பேசியவன் அழுது கொண்டிருந்தவளின் கண்ணீரைத் துடைக்க முயன்றான்.
அவனின் அந்த கரிசனம் அவளை மேலும் கடுமையாக்க, “ச்சீ திரும்ப திரும்ப உன்னோட டெஸ்டோஸ்டீரான் விளையாட்டுக்கு காதல்ன்னு பேர் வைக்காத. ஆம்பளங்க உங்களுக்கு எதுவுமே பெரிய விஷயமில்லல. உன்னவிட பெரிய பொண்ண உன்னால எப்டிடா?. அய்யோ கடவுளே நான் என்ன செய்வேன். நம்மள மாதிரி பாசமா நட்பா யாரும் இந்த உலகத்துலயே இருக்க மாட்டாங்கன்னு நான் எவ்ளோ கர்வப்பட்டிருக்கேன். அதுல காதல்னு சொல்லி கல்லத்தூக்கிப் போட்டதல்லாம இத என் கழுத்துலகட்டி என் வாழ்க்கையே அழிச்சுட்டியேடா பாவி. நான் வேணாம் வேணாம் சொல்லியும் ஏன்டா என்ன கல்யாணம் பண்ண?” என்று அவனைத் தொடவிடாது தள்ளிவிட்டு அகங்காரமாய் கத்தியவளுக்கு இப்பொழுது மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
அழுகையும் கோபமும் கலந்து கலங்கிச் சிவந்த முகத்தோடு மூச்சுக்குத் திணறிய
பெண்ணவளின் நிலையில் அவள் பேசியவை எல்லாம் பின்னுக்குச் செல்ல, “யுகீ… இப்டிலாம் பேசாதடி நான் எப்பவும் இப்பவும் உன்னோட திவாதான்டி ப்ளீஸ் அழாதடி. ரொம்ப மூச்சிரைக்குது பாரு” என்று மீண்டும் அவளை நெருங்க…
அவளோ, “ம்ஹூம்… என்ன என்னத்தொடாத. என்கிட்டவராத. யூ யூ ஆர் எ சீட்டர். நீ நீ என்னோட திவாஇல்ல. என்னோட என்னோட திவாவா இருந்திருந்தா எனக்கு பிடிக்காதத செஞ்சுருக்கமாட்டான்” என்று திணறல்களுக்கு இடையே கூறியவளுக்கு விம்மலும் அதிகரித்து பெரும் அழுகையாய் வெடிக்க, மூச்சுக்குத் திணறிக் கொண்டிருந்தாலும் அவன் அவளை நெருங்க நெருங்க அவன் கைகளுக்கு கிட்டாது பின்னோக்கிச் சென்றுகொண்டே இருந்தவளைக் கண்டு பரிதவிப்போடு முதன்முறை சிறு பயமும் சூழ்ந்தது ப்ரித்திவிற்கு.
அவள் அவனது காதலை ஏற்காதவள்தான். அவளுக்கு அவன்மீது காதல் உள்ளதா என்றுகூட அவனுக்கு சந்தேகம்தான். ஆனால் சிறுவயதில் இருந்து தன்மேல் மட்டற்ற நேசத்தை பொழிபவள் தங்கள் திருமணம் நடந்தால் மனம்மாறி தன் காதலையும் ஏற்றுக்கொள்வாள் என்று அவன் எண்ணியிருக்க, அவளோ தன் காதலினாலே தங்கள் உறவின் புனிதமே கெட்டுப் போனதைப் போல் பேசியதைக்கேட்டு அவனுக்கு உள்ளும் புறமும் ஆட்டம் காணத் தொடங்கியது.
‘காதல் என்ற வார்த்தையே புனிதமானதுதானே. அது எனக்குள் வந்ததால் எங்களுக்குள் இருக்கும் எதுவும் மாறிவிடப் போவதில்லையே பின்பு ஏன் என்னுடைய யுகி இப்படியெல்லாம் பேசுகிறாள்’ என்று மேலும் கலங்கித் தவித்தவன், இன்னும் நிலை மாறாது தவித்தவளைக் கண்டு தன்னையே நொந்து கொண்டவனாய் மீண்டும் அவளை நெருங்கி இருந்தான்.
நெருங்கியதோடு நில்லாமல்
திமிரத்திமிர அவளை இறுக்கிப்பிடித்து கைவளைவுக்குள் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டவன், “யுகீ… நான் பண்ணது தப்புன்னா அப்றம் என்ன என்னவேணா பண்ணு. ஆனா இப்போ கொஞ்சம் நேரம் மட்டும் அமைதியா இருடி” என்று அவளது இன்ஹேலரை எடுத்து அவள் வாயிற்குள் பீய்ச்சியவன்
“நீ நினைக்கிறமாதிரி காதல்” என்று ஏதோ சொல்ல வந்தவனை இப்பொழுது மின்னலென பிடித்துத் தள்ளி விட்டவள்,
“போதும் நீ பண்ணதெல்லாம் போதும். இதுக்கு மேலயும் என்கிட்ட எந்த பேச்சு வார்த்தையும் வச்சுக்க வேணாம் போயிரு இங்கிருந்து போயிரு. என்முன்னாடி நிக்காத” என்றும் அங்கே மேசையில் இருந்த பொருள்களையும் எடுத்து அவன்மீது வீசத்தொடங்கினாள்.
அது அவனுக்கும் சிறிதுசிறிதாக சினத்தைக் கொடுக்க, “யுகீ போதும் நிறுத்துடி. நானும் தப்பு என்பக்கம்னு பொறுத்துப்போனா யூர் கிராஸ் த லிமிட் யுகி” என்று அவளை இயல்புக்குக் கொண்டு வரும் பொருட்டு கத்த…
அதையெல்லாம் செவியிலோ ஏற்றாதவளோ, “வெளியபோ திவா. வெளியபோ. எனக்கு உன்னப்பாக்கவே பிடிக்கல. என்கண்ணு முன்னயே நிக்காத. வெளியபோ” என்று கண்ணை மூடிக்கொண்டு கத்திக்கொண்டே இருந்தாள்.
அவளது மூச்சுக்காற்றின் வாசத்திலே வாழ்க்கை முழுதும் தொலைக்க ஆசை கொண்டவனின் நேசத்தை புரிந்து கொள்ளாது, கண்ணெதிரேயே நிற்காதே என்று கத்திக் கொண்டிருப்பவளின் பேச்சில் அவனது சினமும் எகிற, இப்படியே கத்திக் கொண்டிருந்தால் அவளது நிலையும் மிகமோசமாகும் என்றும் உணர்ந்தவன் மீண்டும் ஈரெட்டில் எக்கி அவளை வளைத்துப் பிடித்து அணைத்தவன் அவள் என்ன ஏதென்று உணரும் முன்னேயே
சினம் மிகுதியால் சிவந்திருக்கும் சின்னஞ்சிறு செவ்விதழ்களை தன் மீசைமூடிகள் மறைத்திருக்கும் முரட்டு இதழ்கள் கொண்டு ஆவேசமாக அடைத்தான் ப்ரித்திவ்ராஜ்.
அவள் கத்துவதை நிறுத்துவென்று தொடங்கிய முத்தம்தான். ஐந்து நிமிடம் முன்னர் வரையில் கூட அவளை முத்தமிடும் எண்ணம் எல்லாம் அவனுக்கு இல்லவே இல்லைதான்.
ஆனால் கோபம் குறைக்க வென்று கொய்யப்பட்ட கொவ்வை இதழ்கள் ஆடவனின் காதல் நரம்புகளை தூண்டிவிட்டிருக்க,
நேசப்பெண்ணவளின் பனிரோஜா குளுமையில் தன்னையே தொலைத்தவன் இன்னும் இன்னும் ஆழப்புதைந்து வார்த்தையில் அவளுக்கு உணர்த்த முடியாத காதலை முத்த முற்றுகையால் உணர்த்தத் தொடங்கியிருந்தான் ஆடவன்.
உடல் பலத்தால் அவனை எதிர்க்க முடியாதவளின் மறுப்பு நடவடிக்கைகளை எல்லாம் ஒற்றை கையாலே முறியடித்தவன்
நொடிகள் பல நீண்ட ஆழ்ந்த முத்தமதிலே போதும் போதுமட்டும் காதலைக்கொட்டிவிட்டு மெல்ல அவளை விடுவித்தவனின் செயலில் பேச்சுக்கூட வராது விக்கித்துப்போய் அமர்ந்துவிட்டாள் சம்யுக்தா.