அவனது காதலையும், காலையில் நடந்த திருமணத்தையுமே ஏற்றுக்கொள்ள முடியாதவளால் அவனின் இதுபோன்ற நெருக்கங்களை ஜீரணிக்க இயலுமோ???. கூடவே அவனது நெருக்கம் அவளுள் உண்டாக்கும் மாற்றங்களையும் ஏற்கமுடியாது தங்கள் வயது வித்தியாசத்தை முன்னிறுத்தி தன்னைத்தானே வெறுத்தாள் சம்யுக்தா.
சற்றுமுன்னர் அத்துணை கத்தியவள் தற்சமயம் ஊமையாகி அமர்ந்துவிட்டதை தன்னை விளக்கக் கிடைத்த வாய்ப்பாக எடுத்து அவள் அருகில் அமர்ந்தவன் அவள் மோவாயை மென்மையாக பற்றி நிமிர்த்தி, “இங்க பாரு யுகி. நம்மளோட கல்யாணம் பத்தி பேசினப்போ உனக்கு எவ்வளவு அதிர்ச்சியோ அதைபோல எனக்கும் அதிர்ச்சிதான். சந்தனா நவீன லவ் பண்றான்னு தெரிஞ்சப்பகூட ஏற்பாடுபண்ண கல்யாணம் நின்னாப் போதும்னுதான் நான் ஆசைப்பட்டேன். அதுக்குபின்ன உன்கிட்ட பொறுமையாபேசி எவ்ளோநாள் ஆனாலும் என்காதல உணரவச்சு உன் முழுவிருப்பத்தோட நம்ம கல்யாணம் நடக்கனும்னு தான்டி நானும் நினைச்சிருந்தேன். ஆனா அதெல்லாம் அம்மா உன்னகட்டிக்கன்னு சொல்றவரைதான் யுகி.” என்று நிறுத்திவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவள் விழியில் மௌனமாய் வழிந்த கண்ணீரை பெருவிரல் கொண்டு துடைத்தவாறே ஒரு பெருமூச்சு விட்டுத்தொடர்ந்தான்.
“நான் ஒதுக்கறேன் யுகி. நம்ம கல்யாணம் விஷயத்துல நான் சுயநலமாதான் நடந்துகிட்டேன். உன்ன என்னுடையவளா ஆக்கிக்க எனக்கு வேற வழியும் தெரியலடி. நீ என் காதல ஒரு பொருட்டாவே எடுக்காம நவீன கட்டிக்க ரெடியானதுல நான் ரொம்பவே அரண்டுட்டேன் யுகி.
ஆனா அன்னிக்கு அப்பத்தா பாட்டி சொன்னாங்க உன் நேசம் உண்மையா இருந்தா அதுதானா உன்கைசேரும்னு. அன்னக்கி நைட்டுதான் சந்தனா பிரச்னை என்கண்ணுலபட்டு மறுநாள் அம்மா நம்ம கல்யாணத்தை பேசுனாங்க. அப்போ என்னால சுத்தமா மறுக்கமுடியலடி. இனிமேலும் உன்ன யாருக்கும் விட்டுக்கொடுத்துறக்கூடாதுன்னு ஒரு எண்ணத்துலதான் நான் இந்த கல்யாணத்த நிறுத்த நினைக்கலடி. அத்தோட இனிமேல் அதப்பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்ல. நம்ம ஏஜ்ஜ முன்வச்சு இந்த மேரேஜ்ஜ ஏத்துக்க உனக்கு கஷ்டமா இருந்தாலும் நமக்குள்ள கடவுள் போட்ட முடிச்சாதான் நான் இத பாக்குறேன். நீ… நீ… நீயும்
இத அக்செப்ட் பண்ண முயற்சிபண்ணுடா” என்று நீண்ட கெஞ்சலும் கொஞ்சலுமாய் விளக்கம் கொடுத்து நிறுத்தியவனை இப்பொழுது சலனமே இல்லாது ஏறிட்டவள்…
“நம்ம மேரேஜ்ஜ அக்சப்ட் பண்ணிட்டு??? சொல்லு அக்சப்ட் பண்ணிட்டு, நான் இப்போ உன்கூட முதலிரவு கொண்டாடனும்னு சொல்றியா?” என்று கூர்பார்வையினூடே கேட்டவள், “ஆனா அது ஜென்மத்துக்கும் நடக்காது.” என்று சீறியவள்,
“வீட்ல எல்லாரும் என்மனச புரிஞ்சுக்காதப்போகூட எனக்கு இவ்ளோ கஷ்டமா இல்லடா. ஆனா நீ, நீ கூட என்ன புரிஞ்சுக்கலல்ல? என் மறுப்ப ஒரு பொருட்டாகூட மதிக்கலல்ல” என்று சிறு பிள்ளையாய் தேம்பியவளை, “யுகீ இல்லடி…” என்று அவன் மீண்டும் அணைக்கமுயல…
“தொடாத” என்று மேலும் தள்ளிவிட்டவள், “காலைல கல்யாணம் நடக்குறப்போகூட என்திவா என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பான். காலம் முழுசும் நாம பிரண்ட்ஸ்ஸாவே வாழலாம்னு எவ்ளோ நம்பிக்கையா இருந்தேன். ஆனா கொஞ்சம்முன்ன நீ செஞ்ச செயல்ல உனக்கு என்கிட்ட என்னவேணும்னு நீ ஆணியடிச்சமாறி சொல்லிட்ட” என்று ஆவேசமாக எழுந்து நின்றவள், “இவ்ளோ நடந்த அப்றமும் உன்னோட ஒரே இடத்துல என்னால இருக்கமுடியாது. நான் கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்கனும்னு நினைச்சா தயவுசெஞ்சு ரூமவிட்டு வெளியபோ” என்று கையெடுத்து கும்மிட்டவளை…
‘திரும்பவும் முதல்ல இருந்தா?’ என்று ஆயாசமாகப் பார்த்திருந்தான் ப்ரித்திவராஜ்.
தங்கள் திருமணப்பேச்சு எழும்வரையில்கூட குடும்பத்தினர் தங்கள் காதலை ஏற்கமாட்டார்கள், தங்கள்வயது வித்தியாசத்தை பெரிதாக பேசுவார்கள் என்று அவள் மறுப்பதாகத்தான் அவன் நினைத்திருந்தான். ஆனால் காலம் முழுதும் நண்பர்களாக வாழலாம் என்ற தற்போதைய பெண்ணின் பேச்சு அவன் புருவத்தை முடிச்சிடவைக்க…
அவளோ அதற்குள், “தயவுசெஞ்சு வெளியபோ. போ திவா போ” என்று மீண்டும் அதே பல்லவியை பாடத்தொடங்கினாள்.
அதில் அவனுக்கும் சினம் திரும்ப, “போ போன்னா இந்த நைட் நேரத்துல எங்கடி போறது? வீட்ல இருக்கவங்கள பொருத்தவரை இது ஃபர்ஸ்ட்நைட் ரூம் வெளிய எல்லாரும் இருக்காங்க. இப்போ போனா என்ன ஏதுன்னு பலகேள்விகள் வரும். அத்தோடு இது என்னோட ரூம் நான் இங்கதான் இருப்பேன்” என்று அவனும் உறுதியாகக்சொன்னான்.
அது இன்னும் அவள் ஆத்திரத்தை அதிகரிக்க, “ஆமால்ல இது உன்னோட ரூம்தான். நீ போகமாட்ட. நீ போகவும் வேணாம். நான்போறேன்” என்றவள், “ஏய் நில்லுடி” என்று அவன் தடுப்பதற்குள் ஓடிச்சென்று கதவைத்திறக்க
அந்தப்புறம் நின்றிருந்தது என்னவோ அவளின் அத்தை
மலர்விழிதான்.
கதவைத்தட்டுவதற்காக வந்துவிட்டு எப்படி தட்டுவது என்ற சிந்தனையுடன் அறையின் முன்னே நின்ற மலர்விழியைப்
பார்த்து பேயரைந்தபோல் நின்றுவிட்டாள் சம்யுக்தா.
வெளியே நின்ற அன்னையைப் பார்த்ததும் ப்ரித்திவும் சம்யுவின் பின்னேயே நின்று விட, பேய்முழி முழித்து நின்ற மருமகளை பார்த்த மலரோ, “முதலிரவுக்கு பால்சொம்பு எடுத்துட்டு வந்தியே டம்ளரை எடுத்துட்டு வந்தியா?.” என்று தொடங்கியவள், “இந்தாமா கிளாஸ்னு கத்திட்டே இருக்கேன் அதுக்குள்ள ஓடிவந்துட்ட. அப்டி என்னதான் அவசரமோ… ம்ம்ம்” என்று அவள் பேசுவதற்குக்கூட இடம் கொடாது ஒரு பெருமூச்சோடு நொடித்துக் கொண்டவள், “இது நம்ம பரம்பரை டம்ளர். பொண்ணும் பையனும் இதுலதேன் பாலக்குடிக்கனும்னு அப்பத்தா ஸ்டிரிக்ட்டா சொல்லிருக்காங்க” என்று அவள் கையில் அந்த வெள்ளிடம்ளரைத் திணித்தாள்.
அதற்குள் அந்த அறைக்கு சற்று தள்ளி அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்த கூட்டத்தில் இருந்த உறவுப்பெண் ஒருவளோ, “ஏன் காயுக்கா. முதராத்திரில பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இந்த டம்ளரா முக்கியம்னு இந்தநேரத்தில எடுத்துட்டு வந்தீக?” என்று கேலிக்குரலில் வினவ…
அதைக்கேட்டபடி தங்கைக்குபின்னே நின்ற காயுவும், “அத சொன்னா அந்த அப்பத்தாக்கு எங்கடி புரியுது?. எல்லாம் என் நேரம்” என்று கழுத்தை வெட்டிக்கொண்டவள் “அடியே மலரு நல்லநேரம் பத்துமணிக்குமேலதான். அதுவரை பேசிட்டு மட்டும் இருக்கச்சொல்லுடி” என்றும் சற்று உரக்கவே சொல்லிவிட்டுச் சென்றாள்.
மலர்விழியும், “கேட்டுச்சுல்ல” என்பதுபோல் வெறுமனே சம்யுவை பார்த்துவிட்டு காயுவுடன் இணைந்துகொள்ள…
இங்கு சம்யுவோ அத்தைகளின் வார்த்தையில் தொணித்த அர்த்தத்தில் அப்படியே மண்ணிற்குள்ளே புதைந்துவிட மாட்டோமா என்று கூனிக்குறுகி மீண்டும் உள்ளேயே சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.
கதவை அடைத்துவிட்டுத் திரும்பியவள், தன்னையே பார்த்தபடி அங்கே நின்ற ப்ரித்திவை மேலும் காளியாய் முறைத்து, “அத்த என்ன பேசிட்டு போறாங்கன்னு பாத்தில்ல. எல்லாம் உன்னால தான்டா பொறுக்கி.” என்று அந்த வெள்ளி டம்ளரையும் அவன் மீதே தூக்கிஎறிந்தாள்.
சீரும் தோட்டாபோல் அவன் இடையை நோக்கிப் பாய்ந்துவந்த வெள்ளி டம்ளரை சுதாரித்து சட்டென்று கைப்பற்றியவன், “ஜஸ்ட்மிஸ் புடிச்சேன். இல்லன்னா பர்ஸ்ட்நைட்டையே அன்னிக்கே லாஸ்ட்நைட்டா ஆக்கிருப்பா
” என்று சொல்லிக்கொண்டு அதை அங்கேஇருந்த மேசைமேல் வைக்க, அதற்குள் மேலும் ஒருசில பொருட்களை எடுத்து மீண்டும் அவன்மீதுவீசியவள்,
“நீ அன்னிக்கு பண்ண பொறுக்கித்தனத்தாலதான் அத்த என்னயும் இப்போ தப்பா நினைக்கிறாங்க” என்று மறுபடியும் அழத்தொடங்கிய சம்யுவின் தோற்றம் பாவமாகவும், சிறுபிள்ளை போன்ற அவளின் செயல்கள் சிரிப்பாகவும இருந்தாலும்
அதையும்தாண்டி, ‘இவ ஏன் எல்லாத்தையும் இவ்ளோ சீரியஸா எடுக்குறா?’ என்ற ஆற்றாமையும் மிதமிஞ்சி நின்றது ஆணிற்கு.
இப்போதைக்கு அவள் இருக்கும் நிலையில் தான் எதுபேசினாலும் அவள் புரிந்து கொள்ளமாட்டாள் என்று அவன் அமைதியாகவே அவளைப்பார்த்திருக்க…
“என்னால இனி வெளியவும் போக முடியாது. இதுக்குதான நீ ஆசைப்பட்ட. இப்போ உனக்கு சந்தோசமா?” என்றுவிட்டு படுக்கையில் இருந்த போர்வையை எடுத்தவள் பின்பு அவனைத்திரும்பி பார்த்து அதை அங்கேயே போட்டுவிட்டு அவள்மட்டும் விரைந்து உப்பரிகைக் கதவைத் திறந்துகொண்டு அங்கிருந்த கல்இருக்கையில் சென்று நீட்டி நிமிர்ந்து படுத்துவிட்டாள்.
இத்தனை நேரம் அவள் செய்வதை எல்லாம் பார்த்து இருந்தவனுக்கு அவள் உப்பரிகையின் இருக்கையில் சென்று படுக்கவும் தூக்கிவாரி போட்டது.
ஆந்தைகூட அடுப்பிற்குள் இடம் தேடும் ஆடிமாதக்குளிர்காற்றில் படுத்தால் அவளது உடம்புக்கு ஒப்புக்கொள்ளாதே என்று பதறி அவளை நெருங்கியவன், “யுகீ என்னடி செய்ற? என்மேல உள்ள கோவத்துல லூசுமாறி எதுவும் பண்ணாத. ப்ளீஸ் உள்ளவந்து படுடி. வாடக்காத்து உனக்கு சேராதுடி. வீசிங் ஹெவியா வரும்” என்று அவள் கையைப்பற்றி எழுப்பமுனைய…
அவளோ, “நான் லூசுதான்டா. அத்த முன்னவே சொன்னாங்க உன்கிட்ட அளவா வச்சுக்கசொல்லி நான்தான் என்னோடதிவான்னு உன்ன அவ்ளோ நம்பினேன். அதுக்குதான் இப்போ அனுபவிக்கிறேன் எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். எனக்கு வீசிங் வந்து செத்தாலும் பரவால்ல நான் உன்னோட ஒரே ரூம்ல இருக்கமாட்டேன்” என்று அவளும் அசையாது அடம்பிடிக்க…
இப்படியொரு பிடிவாதக்கார யுகியை முதன் முதலில் எதிர்கொண்டவன் திருமண விஷயத்தில் மிகவும் அவசரப்பட்டுவிட்டோமோ என்று காலம்கடந்து ஞானோதயம் கொண்டான். கூடவே சற்று முன்னர் கோபம் குறைக்கிறேன் என்று தான்செய்த மடத்தனமும் புத்தியில் உரைக்க, “இனிமேல் உன் விருப்பமில்லாமல் உன் விரலக்கூட தொடமாட்டேன் டி. நம்ம கல்யாண விஷயத்துலயும் நான் பண்ணது தப்புதான்டி. நான் பண்ண தப்புக்கு என்ன என்ன வேணா பண்ணுடி. ப்ளீஸ் நீ உள்ள வந்து படுடி” என்று மேலும் மருகித்தவித்தவனை கண்டு அவர்களின் வளர்ப்பு பிராணிகள் கூட கத்திக்கூச்சலிட,
பாவையவளுக்குத்தான் இரக்கம் என்பது இம்மியும் இல்லையோ.
கல்விருக்கையின் அருகிலேயே அமர்ந்து தன்னைத் தூக்க முயன்றவனிடம், “என்னை இங்க படுக்க விடவிலன்னா நான் கீழபோய் தோட்டத்துபுல்தரைல படுத்துருவேன் திவா” என்று மிரட்டிவிட்டு விழிகள் இரண்டும் மூடிக்கொள்ள…
அதன்பின் அவளை நெருங்க முடியாதவனும், “யுகீ. ஏன்டி இவ்ளோ பிடிவாதம் பிடிக்கிற?” என்று கத்தியபடி அங்கேயே தரையில் சாய்ந்து அமர்ந்துவிட்டான்.
திருமணம்செய்து அவளைத் தன் அருகிலேயே வைத்துக் கொண்டால் எப்படியும் தன் காதலை அவளுக்கு உணர்த்தி அவள் நேசத்தையும் வெளிக்கொணரலாம் என்று இருமாந்து இருந்தவனுக்கு
உன் காதலே பெரும்பாவம் என்பதுபோல் பிடிவாதமாய் தன்னைப்புரிய மறுக்கும் பெண்ணின்மனதை எப்படி மாற்றப்போகிறோம் என்ற கேள்வியும் பூதாகரமாக எழுந்து அவனை செயல் இழக்கச்செய்திருந்தது.
எத்துணையோ குழந்தைகளை பேச்சாலும் சிரிப்பாலும் முகம் சுளிக்கா வைத்தியத்தாலும் வசீகரித்துவைத்திருப்பவன் பிடிவாதக்குழந்தையாய் மாறி தன்முன்னே வீற்றிருக்கும் தன்னவளை தன் வசப்படுத்தும் மார்க்கமற்று தவித்து நின்றான் அந்த காதல்மருத்துவன்.