இத்தணைக்கும் அப்படி ஒன்றும் பலமாகவெல்லாம் கத்தி அவன் விரலில் பாய்ந்திருக்கவில்லை. ஆனாலும் அவன் கரத்தில் ரத்தத்தைப்பார்த்த மறுநொடி தங்கள் ஊடல் அனைத்தும் மறந்தவளாய் துள்ளித்துடித்து ஓடிவந்தவள், “திவா ஏன்டா? எதுக்கு உனக்கு வேண்டாத வேலை?” என்று பரிதவித்து, தான் ஒரு மருத்துவர் என்பதையும் மறந்து அவன் விரல்களைப்பற்றி உறிஞ்ச…
மனைவியின் அந்த நெருக்கத்தில் மயக்கமருந்து கொடுக்கப்பட்ட நோயாளிபோல் கிறங்கிப்போய் நின்றிருந்தான் அவள் கணவன்.
அவன் விரல் அவள் வாயில் இருந்ததால் வெகு அருகில் தன்னை ஒட்டி நின்றிருந்த பெண்ணவளின் நெருக்கத்தில் இத்துணை தினங்கள் அவள் அருகாமை கிட்டாது, பெண்ணவளின் நிலா முகம்தனை நேருக்குநேர் பாராது தவித்துக் கிடந்த ஆணின் ஒவ்வொரு அணுவிலும் இன்பவெள்ளம் பாய்ந்தது.
அதிலும் காயம்பட்ட விரலை ரத்தம் நிற்பதற்காக வேண்டி வாயில் வைத்து உறிஞ்சியவள் அதை அவ்வப்பொழுது வெளியே எடுத்து ஊப் ஊப் என்று ஊதிவிட்டு “வலிக்குதாடா?” என்றுவேறு கேட்டு மீண்டும் மீண்டும் வாயில் வைக்க, ஆடவனின் உள்ளமோ, ‘உன்னோட இந்த நெருக்கம் கிடைக்கும்னா என் உடம்பு பூராம்கூட காயம்படத் தயாரா இருக்கேன்டி’ என்று உள்ளே காதல் வசனங்களை எழுதிக்கொண்டிருந்தது.
பெண்ணவளின் அண்மை கொடுத்த இன்பத்தில் நொடிகள்சில அப்படியே நின்றவனுக்கு அப்பொழுதுதான் உள்ளிருந்த மருத்துவன் விழித்துக்கொள்ள, “டேய் கன்னுகுட்டி… வெட்டுப்பட்ட காயத்துல வர்ற பிளட்ட வாயில வச்சா அந்த இடத்துல இருக்க ஜெர்ம்ஸ் எல்லாம் உன் வயித்துக்குள்ள போகும்னு உனக்குத் தெரியாதா? விடு யுகி சின்னக்காயம் தான்டா கொஞ்சம் ஆயின்மென்ட் போட்டா சரியாப்போயிடும்.” என்று
வேகமாக அவள் வாயிலிருந்த விரலை இழுத்துக் கொண்டான் ப்ரித்திவ்.
அவன் விரலை இழுத்துக் கொண்டதும், கூடவே கன்னுகுட்டி என்று அழைத்து அவன் பேசியதிலும்தான் அவளது மூளையும் விழித்துக்கொள்ள, அப்பொழுதுதான் தாங்கள் இருவரும் இருந்த நெருக்கமும் அந்த மூளைக்கு எட்டியது.
காற்றுக்கு மட்டுமே இடைவெளிவிட்டு நெருங்கி நின்றிருந்தவளை தன்னுடைய மற்றொரு கரத்தால் இடையைச்சுற்றி வளைத்து அழுத்தம் கொடுக்காது லேசாக அணைத்து நின்றிருந்தவனின் நெருக்கத்தில் தூக்கிவாரிப்போட்டு நிமிர்ந்தவள் தன்னவனின் விழியில் வழியும் கிறக்கம் கண்டு தீயைத் தொட்டதுபோல் சட்டென்று அவனைவிட்டு விலகினாள் சம்யுக்தா.
விலகியதோடு, ‘என்னகாரியம் செய்துவிட்டோம்? அன்று முதலிரவு அன்று நீ இருக்கும் அறையில்கூட இருக்கமாட்டேன் என்று அவனை அத்துணை ஏசிவிட்டு இப்பொழுது அவன் கையை வெட்டிக்கொண்டதும் அனைத்தும் மறந்து அவன் அணைப்பில் நின்று’ என்று கலங்கிப்போய் நின்றவளின் விழிகள் அப்பொழுதும் அவன் கைவிரலை ஆராய்ந்து ரத்தம் நின்றுவிட்டதா என்றும் உறுதி செய்து கொண்டது.
அவள் விலகவும் தன்னிலை அடைந்தவனும் தன்னைவிட்டு இரண்டடி தள்ளிப்போய் நின்றவளை, “யுகி ஐம் ஓகேடி…” என்று மீண்டும் கண்கள் மின்ன நெருங்கப்போக…
அவனை கைநீட்டித் தடுத்தவளும்,
“சின்னப் புள்ளைலயிருந்து தூக்கி வளர்த்த மாமா பையன்னு பாசத்துல உன்கைல ரத்தத்த பாக்கவும் கொஞ்சம் பதறிட்டேன். அத சாக்காவச்சி நீ என்ன நெருங்க நினைக்காத திவா” என்று அவன் முகம் கூடப் பாராது கூறியவள் எதற்கோ பயந்தவள்போல் ஓடிச்சென்று தனதறைக்குள் நுழைந்து கொண்டவளுக்கு எதற்கு என்றே புரியாது அத்துணை அழுகை வந்தது.
“கடவுளே எனக்கு ஏன் இந்தச் சோதனை தந்தாய். எங்கள் உறவில் எதற்கு இந்த விரிசல் வந்தது? எங்களுக்குள் ஏன் காதல் நுழைந்தது. அதை ஏற்க முடியாது ஏன் என்னை பெரியவளாய் படைத்தாய். என்னவனை நெருங்கவும் முடியாத விலகவும் இயலாத பந்தத்திற்குள் எங்களை ஏன் பிணைத்தாய்?” என்றெல்லாம் உலன்று தவித்தவளுக்கு சற்றுமுன்னர் உணர்ந்த ஆடவனின் அருகாமைவேறு காலம் முழுதும் அந்த நெருக்கம் வேண்டும் என்ற எண்ணத்தையும் ஆழ்மனதில் தூண்டிவிட அதில் அரண்டு விழித்தவள், ‘அவன் உன்னைவிடச் சிறியவன். இது வெறும் ஈஸ்ட்ரோஜன் மாற்றம்தான்.’ என்று தன்னைத்தானே ஏமாற்றி அழுகையில் கரைந்தாள் சம்யுக்தா.
அவள்தான் இப்படி குழம்பித் தவித்தாளே ஒழிய, அங்கே பெண்ணின் கடைக்கண் பார்வைக்காக காத்துக்கிடந்தவனோ வெகு நாளைக்குப்பிறகான அவளின் அக்கறை கலந்த அண்மையில் முற்றும் முழுதாய் கரைந்திருந்தவன் அவள் ஓடோடிச் செல்லவும், ‘கன்னுகுட்டி இவ்ளோ அன்ப உள்ளவச்சுக்கிட்டு ஏன்டி உன்னையும் கஷடப்படுத்திட்டு என்னையும் தவிக்கவிடுற. காதல் எப்பவும் புனிதமானதுடி. நம்மளோட காதல் நம்ம உறவ மென்மேலும் புனிதமாக்கி அழகான உறவா செதுக்கும்னு நம்பு யுகி. நான் உன்னோட திவாடி. என்கிட்ட எதுக்கு யுகி இந்த இடைவெளி. காதலுக்கு வயசு ஒரு தடையில்லைடி தகர்த்து எறிஞ்சிட்டு என்கிட்ட வந்துடுடி” என்று அவள் சென்ற திசையைப் பார்த்து சொல்லிக்கொண்டவன் கையில் பட்டிருந்த காயத்தில் சிறு பேண்டேஜைச் சுற்றிக்கொண்டு முழுமூச்சாய் சமையலில் இறங்கினான்.
தன்மேல் மிதமிஞ்சிய கோபம் இருக்கும் நிலையிலும் தனக்கான அவளின் அத்துணை பரிதவிப்பைப் பார்த்தபின்னும் அவனால் அவளைவிட்டு இம்மியும் விலகி இருக்க முடியவில்லை.
அவளின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து காதலனாய் கணவனாய் அவளை நெருங்காது அவளுக்கான தனிமையை கொடுத்தவன் அந்த சம்பவத்திற்க்குப் பிறகு அவளுடைய திவாவாய் அவளை ஆதர்சிக்கக் கிளம்பியவன், தங்கள் இருவருக்குமான காலை உணவை தயாரித்து முடிக்க, அச்சமயம் அவளும் குளித்து முடித்து வந்தவள் வரவேற்பறையின் நீள்விருக்கையில் சென்று அமர்ந்தாள்.
அதற்காகவே காத்திருந்தவனும் மிகவும் சிரத்தை எடுத்து செய்திருந்த காய்கறி சூப்பையும் முறுகலான முட்டைதோசையையும் தட்டில்வைத்து எடுத்துக்கொண்டு அவள் முன்னே சென்று வைத்தவன் அவள் முகத்தை நிமிர்ந்துபார்க்க, குளித்துவிட்டு வந்திருந்தாலும் வெகுநேரம் அழுததற்கான அடையாளமாக கண்இமைகள் தடித்து கண்கள் சிவந்து காணப்பட்டது வஞ்சியவளின் வதனம்.
அதைக்கண்டதும், ‘ஏன்டி கன்னுகுட்டி எதுக்குடி இவ்ளோ அழுகை’ என்று தவித்தவன் அவளை அப்படியே இழுத்து தன் நெஞ்சுக்குள் புதைத்து முத்திரையாலே அவள் கலக்கம் களையத்துடித்த ஊனையும் உள்ளத்தையும் சிரமப்பட்டு அடக்கி, “யுகீ… நீ சாப்பாட வாயில வச்சி ஒருவாரம் ஆகுது. என்மேல இருக்க கோவத்தை புட்ல காட்டாத. உனக்கு பிடிச்ச முட்டை தோசை ஊத்திட்டு வந்துருக்கேன் இந்தா சாப்பிடுடா” என்று அவள் முன்னே இருந்த தட்டை சற்றே அவள்புறம் நகர்த்தி வைத்தான் ப்ரித்திவ்.
அவன் சொன்னது செவியில் விழுந்ததற்கு அடையாளமாக கருந்திராட்சையை ஒத்த கருமணிகளை மட்டும் மெல்ல உருட்டி அவன்மீது நிலைக்க விட்டவள்,
“என்னடா… ஒருவாரம் பேருக்கு புள்ளபூச்சிமாதிரி இருந்துட்டு இன்னிக்கு உன் வேலைய காட்டறியா” என்றவள், “காலைல கத்தில அறுத்துக்கிட்டு சீன்போட்டு என்ன பதறவச்ச. இப்போ சாப்பாடு செஞ்சு குடுத்து என்ன இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றியா?” என்று மெதுவாகத் தொடங்கிய குரல் அவள் சொல்லி முடிக்கும் பொழுது அளவில்லா இறுக்கத்துடனே வெளி வந்தது.
ஆனால் அவள் கூற்றை கேட்ட அவனுக்கோ சிரிப்புதான் வந்தது.
இப்பொழுது சிரித்தானா என்று எண்ணும் படியாக வாயை அகலத்திறக்காமல் அழகான மென் புன்னகை ஒன்றை மீசைக்கடியில் நெளியவிட்டவன், “வாட் எ ஜோக் யுகி” என்றுவிட்டு,
“நீ என் உணர்வுலையும் நான் உன் உயிரிலையும் எப்பவோ கலந்து போனப்பின்ன உன்ன இம்ப்ரெஸ் பண்ணனும்னு எனக்கு என்ன அவசியம் இருக்கு கன்னுகுட்டி” என்று கேட்டவனை அவள் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் பார்வையை சட்டை செய்யாது அதே புன்னகை மாறாது தொடர்ந்தவன், “நான் முன்னவே உன்கிட்ட சொல்லிருக்கேன்டி. நீ, நான்கிறது நம்மளைப் பொறுத்தவரை நாம்தான். என் வயித்துல இருக்க சிறுகுடல் பெருங்குடலத் தின்னுட்டிருக்கு. எனக்கே இப்டின்னா உனக்கும் அதே நிலைதான்னு எனக்குத் தெரியும். ஆனா உன் மூளை சாப்பாடு வேணாம்னு அடம் பிடிக்கிற மாதிரி என் மூளையும் அவளே சாப்பிடாதப்போ உனக்கென்னடா சாப்பாடுன்னு என் வயித்த காயப்போடுது. அதான் உனக்கும் சேத்து கொண்டு வந்தேன். இது உனக்காகன்னு நீ நெனச்சுக்காத. இது முழுக்க முழுக்க எனக்காக” என்றும் நீளமாகப் பேசியவனின் பேச்சில், ‘எனக்கு சாப்பாடு தேவை. ஆனா நீ சாப்பிடாம நானும் சாப்பிடமாட்டேன்’ என்ற மறை பொருளை உணர்ந்து முறைப்போடு சேர்த்து அத்துணை கோபத்திலும் சிறிதான சிரிப்பும் பிறந்தது பாவைக்கு.
‘இப்போல்லாம் நல்லா பேச கத்துருக்கான்’ என்ற முனுமுனுப்போடு அதை அதரங்களுக்குள்ளே புதைத்தவள், “என்னடா…
நீ சாப்பிட்டாதான் நானும் சாப்புடுவேன்னு எமோஷனல் பிளாக்மெயில் பண்றியா? எனக்கு பசியில்ல இதெல்லாம் மொதோ எடுத்துட்டுப் போயிரு” என்று விரல்நீட்டி எச்சரிக்க…
அவனோ, “டீ பப்ளி. நீலாம் யாரு உன்னப்போய் மிரட்ட முடியுமா?” என்று கோபத்தில் கோவைப்பழமாய் சிவந்துப்போன பெண்ணவளின் நாசியழகை ரசனையாகப் பார்த்தபடி அவள் எதிரிலே அமர்ந்து கொண்டவன், “நான் ஏதோ ட்ரெயின்ல, பஸ்ல நம்மகூட டிராவல் பண்றவங்களுக்கு ஷேர் பண்ற மாதிரிதான் உனக்கு இதக் கொண்டு வந்தேன். நீ சாப்புடுறதும் சாப்பிடாததும் உன் விருப்பம்” என்று அவள் முகத்தையே பார்த்திருந்தான் ப்ரித்திவ்.
அவன் உதடுகள் உன்விருப்பம் என்று சொன்னாலும் அவன் விழிகளின் இறைஞ்சல் வேறுமொழி சொல்ல தன்முன்னே இருந்த உணவுத் தட்டையும் அவன் முகத்தையும் மாறிமாறிப் பார்த்தவள், ‘நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது’ என்று அப்பொழுதும் அசையாது அமர்ந்திருந்தாள்.
நிமிடநேரக் காத்திருப்பிற்குப்பின் அவள் உண்ண மாட்டாள் என்று உணர்ந்து, “ராங்கி” என்று சிறுவலியோடு தன் உணவையும் சேர்த்து அங்கேயே மூடிவைத்துவிட்டு எழப்போனவனைக் கண்டு அதற்குமேல் அவளால் பிடிவாதத்தை பிடித்து வைக்க இயலவில்லை.
இத்துணை தினங்கள் தன்னோடு சேர்ந்து அவனும் பட்டினி கிடந்ததை அவனின் ஒடுங்கிய கன்னமே காண்பித்துக் கொடுக்க, சற்று முன்னர் பசி என்று சொன்னவன், தற்சமயம் தான் உண்டால் மட்டுமே அவனும் உண்பான் என்று நன்கு உணர்ந்திருந்தவளுக்கு இப்படி ஒரு அன்பைப்பெற என்ன தவம் செய்தேன் என்று இனம்புரியா இன்பமே உள்ளமெங்கும் பரவ, “ம்ம்க்கும்” என்று லேசாக செருமியவள் “நானும் கோ பேசஞ்சரா நினைச்சு உன்னோட ஆபர்ர ஏத்துக்கறேன்” என்று மட்டும் கூறி தன்முன்னே மூடியிருந்த உணவை எடுத்து உண்ணத் தொடங்கினாள் சம்யுக்தா.
அவள் பேச ஆரம்பித்ததுமே எழுந்தவன் மீண்டும் அமர்ந்து கொள்ள அவள் உண்ணத் தொடங்கியதும் வானத்தையே வளைத்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது மன்னவனின் மனம்.
சற்று முன்னர் பசியில்லை என்று சொன்னவள் இக்கணம் பஞ்சத்தில் அடிபட்ட பாவைபோல் விக்கல் வருமளவு வேகமாக உண்டு கொண்டிருப்பவளை முகம் கொள்ளா புன்னகையோடு தனை மறந்து பார்த்திருந்தவன்,
“அதான் உன் சாப்பாடு அங்க இருக்குள்ள அப்றம் ஏன்டா எரும என்னையே பாக்கற. எனக்கு வயிறுவலி வந்துடும்டா. உன்சாப்பாட சாப்பிடு” என்று சொன்னவளின் பேச்சில்தான் அவள் முகத்தில் நின்றும் வலுக்கட்டாயமாக பார்வையை நகர்த்தி தன் உணவில் கவனம் செலுத்தினான் ப்ரித்திவ்ராஜ்.
பிறந்ததிலிருந்து இணைபிரியாது இருந்தவர்களுக்கிடையில் காதலும் காலமும் சிறு இடைவெளியை ஏற்படுத்தி இருந்தாலும் இணையில்லாத அவர்களின் அன்பு அவர்களை மீண்டும் இணைக்கும் பாலமாகி இருக்க, அன்றைய நாளுக்குப்பின் அவர்கள் இருவரின் நாட்கள் இலகுவாக இல்லாது போனாலும் சற்றே இறுக்கம் தளர்ந்து தொடர்ந்தது.
இருவரும் முன்புபோல் ஒட்டி உறவாடவில்லையானாலும் இத்துணை தினங்கள் ஒரே வீட்டில் இரு துருவம்போல் இருந்தவர்களின் உணவுக்கான நேரங்கள் மட்டும் தற்சமயம் ஒன்றாகக் கழிந்தது.
ஆரம்பத்தில் சிரமெடுத்து அவன் செய்து வந்து கொடுக்கும் உணவை மறுக்க முடியாது அவனோடு இணைந்தே உண்ணத் தொடங்கியவள் அவன் உணவுத் தயாரிப்பில் திணறுவதைப் புரிந்து தற்பொழுது அவளே இருவருக்குமான உணவைத் தயாரிக்க முன்வந்திருந்தாள்.
அதற்கு, “உனக்கு எதுக்குடி சிரமம். எல்லாம் நான் பண்றேன் பப்ளி” என்று அவன் மறுத்த பொழுது, “நான் ஒன்னும் உன்மேல அக்கறைப்பட்டு பண்ணல. நீ சுட்டுத்தற முட்டைத்தோசையும் காஞ்ச ரொட்டியும். டோஸ்ட் பிரட்டும் சாப்ட்டு சாப்ட்டு என் நாக்கு செத்துப்போச்சு. அதனால இனிமேல் நானே செய்றேன்” என்று அவன் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கியவள், “உப்பும் இல்ல உரப்புமில்லாம சாப்பாடு செய்றானாம் சாப்பாடு . பெரிய வெங்கடேஷ்பட்னு நினைப்பு” என்றபடி அங்கு அவன் குதறி வைத்திருந்த மீனை சுத்தம் செய்ய ஆரம்பிக்க… அவள் பேச்சில் சினம் துளிர்க்க வேண்டியவனுக்கோ அவள் விழிகள் வெளிக்காட்டிய பாவத்தில் அவள் மீதான நேசமே பொங்கிப்பெருகி வழிந்தது.
அவள் சமைக்கிறேன் என்று சொன்னப்பின்னும் அவளை தனியே விட்டுச்செல்லாது, “அப்போ நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் யுகி” என்றுவிட்டு வெங்காயம் வெள்ளைப்பூண்டு உரிப்பது, தேங்காய் துருவிக் கொடுப்பது, காய்கறிகள் வெட்டிக் கொடுப்பது போன்ற மேல் வேலைகளை பார்த்துக் கொடுக்கத் துவங்கினான் ப்ரித்திவ்.
அவள்முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்று எண்ணியவன் என்னவோ சிறு இடைவெளிவிட்டு நின்று இயல்பாகத்தான் அவ்வேலைகளைச் செய்து கொடுத்தான்.
ஆனால் இவளுக்குத்தான் அவன் தன்னை சமீபிக்கும் பொழுதில் எல்லாம் அவன் மீதிருந்து வெளியேறிய வியர்வையோடு சேர்ந்த நறுமணப்பூச்சின் மணம் நாசியைத்தாக்கி அவன் அணைப்பில் இருந்த பற்பல தருணங்களையும், இரண்டு முறை அவன் முத்தமிட்ட நிகழ்வுகளையும் அவள் மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்தி அவளுக்கு ஒருவித நூதன அவஸ்தையைக் கொடுத்தது.
இப்படியே தாமரை இலைத்தண்ணீராய் அவர்களின் நாட்கள் கழிய, அவர்கள் படித்த கல்லூரியில் இருந்து பணிசெய்வதற்கான அழைப்பும் வந்திருந்தது அவர்கள் இருவருக்கும்.
அதை அவளிடம் கூறிய ப்ரித்திவோ, “யுகி எவ்ளோ நாளைக்குடி இப்டி வீட்லயே அடஞ்சு கெடக்குறது. இந்த ஆபர யூஸ் பண்ணிக்கலாமா? ராஜேஷ் சாரும் காலைல போன் பண்ணிருந்தாரு” என்றான். பணிக்குச் செல்லத் துவங்கினாலாவது அவள் இயல்புக்குத் திரும்புவாள் என்ற எதிர்பார்ப்பு நிறைந்த குரலில்.
வேலைக்கான பேச்சில் அவளது வாய்பூட்டும் அவிழ்ந்து கொள்ள,
“இது நல்ல ஆபர்தான். ஆனா புது ஹாஸ்பிடல் ஸ்டார்ட் பண்ற வரை அம்மா ஹாஸ்பிடல்கு போறதாதானே நம்ம பேசிருந்தோம்” என்று வினவ…
அவனும், “ஆமா யுகி… ஆனா அங்க மட்டும் போனா நமக்கு பெருசா வேலை இருக்காது. புது ஹாஸ்பிடல் ஸ்டார்ட் பண்ணாலும் நல்லா ரன் ஆகுறவரை இந்த ஆபரும் நமக்குத்தேவைடி. அங்க மார்னிங்கும், இங்க ஈவ்னிங்கும் டூட்டி பாத்துக்கலாம். என்ன சொல்ற?” என்று கேட்டவனின் பேச்சு அவளுக்குமே சரியாகப்பட்டதில் அடுத்து வந்த நாட்களில் இருவரும் தாங்கள் படித்த மருத்துவமனையோடு ஜானுவின் மருத்துவமனைக்கும் தினமும் சென்று பணி செய்யத் துவங்கியிருந்தனர்.
25 வருடங்கள் முன்பு ஜானுவிற்கு யுவா கட்டிக்கொடுத்த சிறு மருத்துவமனை ஊரின் எல்லையில் இருந்தது. வெறுமனே ஐந்து படுக்கைகள் போடப்பட்டு ஓபிக்கென்று பெரிய ஹாலும் ஊசிபோடுமிடமும், பிரசவம் பார்க்கும் அறை ஒன்றும் கொண்ட அந்த சிறிய மருத்துவமனையும் அதில் மருத்துவம் பார்க்கும் ஜானுவும்தான் பல வருடங்களாகவே அவ்வூர் மக்களுக்கு மட்டுமல்லாது அதைச்சுற்றி இருக்கும் பல ஊர் ஜனங்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாய் இருக்கின்றன.
சாதாரண காய்ச்சல் தலைவலியில் தொடங்கி கர்ப்பினிப் பெண்களுக்கு சுகப்பிரசவம்வரை மிகக்குறைந்த ஊதியம் வாங்கிக்கொண்டு இரண்டு செவிலிப்பெண்களின் துணையுடன் மருத்துவத்தை ஒரு சேவையாகவே செய்து வருகிறாள் சம்யுவின் அன்னை ஜானு.
இடப்பற்றாக்குறையாலும் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததாலும் மற்ற பெரிய பெரிய நோய்களுக்கெல்லாம் அனைவரும் திருநெல்வேலிக்கும் இன்னும்பிற பெரும் நகரங்களுக்கும் சென்று ஆயிரக்கணக்கில் பணம் இழக்க வேண்டிய கட்டாயமே தற்போது நிலவ, அதைப்போக்கும் முயற்சியாகத்தான் திருநெல்வேலி உட்பட பல ஊர்களின் முக்கிய சாலைகள் எல்லாம் இணையும் பூஞ்சோலையின் வடக்கு எல்லையில் மருத்துவமனை கட்டவென்று பல ஏக்கர் மனையை மகனும் மருமகளும் மருத்துவத்துறையில் சேர்த்துவிட்ட சமயமே வாங்கிப்போட்டிருந்தான் யுவா.
ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாது அனைத்து மக்களுக்கும் அனைத்து விதமான சிகிச்சைகளும், அளவான செலவில் கொடுக்கும் படியான மிகப்பெரிய குழுமமாய் அதை செயல்படுத்த வேண்டும் என்ற மருமகளின் ஆசையையும் அவர்கள் படிப்பை முடித்த சமயம் அறிந்தப்பின் அத்துணை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவுமே அவ்விடத்தில் பெரிய மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை துவங்கவும் செய்திருந்தான் யுவா.
அப்பணிகள் முடிந்து புது மருத்துவமனையை செயல்படுத்தும் வரைதான் இருவரும் திருநெல்வேலியில் அவர்கள் படித்த கல்லூரியின் மருத்துவமனையிலும் ஜானுவின் மருத்துவமனையிலும் பணி செய்யலாம் என்று முடிவெடுத்து இருவரும் ஒன்றாகவே சென்றுவரத் துவங்கி இருந்தார்கள்.
அப்படியே இருவாரகாலம் சென்றிருக்க அன்று மாலை நான்குமணி அளவில் திருநெல்வேலியில் இருந்து பணியை முடித்துக்கொண்டு பழைய டாட்டா இன்டிக்கோவில் தங்கள் மருத்துவமனைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர் ப்ரித்திவும் சம்யுவும்.
தற்போது அவர்களுக்குள் சூழல் சிறிதளவு சரியாகி இருந்தாலும் அன்று பண்ணைவீடு செல்லும் அன்று நான்கு சக்கர வாகனத்திற்கு மாற்றப்பட்ட அவர்களின் போக்குவரத்துப் பயணத்தை இன்னும் பிளாக்கிக்கு மாற்றாமல்தான் இருந்தனர் இருவரும்.
அன்றும் அதுபோலத்தான் இருவரையும் சுமந்துவந்த அந்த வாகனம் அவர்கள் ஊர் எல்லையைத்தாண்டும் சமயம் பேருந்து நிறுத்தத்தில் கையில் குழந்தையோடு நின்றிருந்த இளம்பெண் ஒருத்தி அவர்கள் வாகனத்தை கைநீட்டி மறித்தாள்.
அதைப்பார்த்துதும் சம்யு, “யாரோ குழந்தையோட ஊருக்குள்ள போறதுக்கு நிக்கிறாங்கபோல” என்று முனுமுனுப்பாய் சொல்ல…
அவனும், “இந்த நேரத்துல யாரு” என்றபடி அப்பெண்ணின் அருகில் சென்று வாகனத்தை நிறுத்தி கதவையும் திறந்தான்.
வாகனம் நின்று கதவும் திறக்கப்பட்டதும் உள்ளே குனிந்து பார்த்த அந்தப்பெண்ணோ, “அடியாத்தி டாக்டரு மச்சானா.!” என்று ஆச்சர்ய பாவம் காட்டியவள்,
“உங்களுக்கு ஆயுசுநூறு மச்சான். காலைல இருந்து குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு உங்கட்ட காட்டிட்டுப் போலாம்னுதேன் இங்க பஸ்ஸுக்கு நிக்கேன். வெயில் அதிகமா இருக்கேன்னு யோசிச்சுட்டு இருக்கப்போதேன் நம்மவீட்டு வண்டியப்பாத்துட்டு கைய மறிச்சேன். ஆனா கும்மிடபோன தெய்வம் குறுக்க வந்தபோல நீங்களே வண்டில இருக்கிகளே மச்சான்” என்று ஆர்ப்பாட்டமாய் பேசி தன்னிலையும் விளக்கினாள். யுவாவின் ஒன்றுவிட்ட தங்கை மகளான அந்த இளம்பெண்.
சிறு வயதில் தங்களோடு விளையாடித் திரிந்த உறவுப்பெண் என்ற வகையில் அவளைப் பார்த்து சிறு புன்னகையை உதிர்த்த ப்ரித்திவும், “குழந்தைக்கு என்னாச்சு தேன்மொழி?” என்று வினவியவாறு வண்டியைவிட்டு இறங்கியவன் குழந்தையையும் வாங்கி அதன் கண்கள் மூக்கு தொண்டை என்று ஆராய…
அதை வியந்து பார்த்தவளும், “காலைல எந்துருச்சதுலயிருந்தே கத்திகிட்டே கிடக்கு மச்சான். காச்சல்கூட இல்லை. என்னன்னே தெரியல” என்றும் சொன்னாள்.
அதற்கு, “அப்படியா?” என்று கேட்டவனும், இப்பொழுது குழந்தையின் வயிற்றை தட்டிப்பார்த்தபடி, “நைட்டு புள்ளைக்கு என்ன சாப்பாடு கொடுத்த தேன்மொழி?” என்று கேட்டவனுக்கு, “எப்பவும்போல இட்லிதேன் தீத்துனேன் மச்சான்” என்றவள் தொடர்ந்து, “அச்சோ நான் ஒரு மடச்சி. நீங்க எவ்ளோ சோலிக்காரவக. உங்களபோய் ரோட்ல நிக்கவச்சு பேசிட்டிருக்கேனே. அக்காவேற காத்துக் கிடக்காக.” என்று சம்யுவையும் பார்த்து சிரித்து நலம் விசாரித்துக் கொண்டவள், “அய்த்தைக கடைத்தெருவுக்கு போயிட்டு வாராகலோன்னுதேன் வண்டிய மறச்சுபோட்டீன். நீங்க போங்க மச்சான். நான் பின்னாடியே பஸ்புடிச்சு ஆஸ்பத்திரிக்கு வந்துர்றேன்” என்றும் அவன் கையில் இருந்த குழந்தையையும் வாங்கிக் கொண்டாள்.
அவள் சிரிப்பிற்கும் நலம் விசாரிப்பிற்கும் சம்யு வெறும் தலையசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுக்க…
தேன்மொழியின் கூற்றை தலையாட்டி மறுத்த ப்ரித்திவோ, “பரவாயில்ல தேன்மொழி. நீயும் கார்லஏறு. நாங்களும் அங்கதான் போறோம்” என்று சொல்லி பின்கதவைத் திறந்து விட்டான்.
அதற்கு, “இல்ல மச்சான் பரவாயில்ல. நான் பஸ்லயே வர்றேன்” என்று தயங்கி நின்ற தேன்மொழியிடம்,
“வெயில்வேற ரொம்ப அதிகமா இருக்கு. குழந்தைவேற விடாம அழுதுட்டிருக்கு. ஏறுமா” என்று அவன் மீண்டும் சொல்லவும்…
கைகுழந்தையை வைத்துக்கொண்டு வெயிலில் தவித்த பெண்ணும், “அப்டியே எங்க மாமாவப் போலவே தாராள மனசுதேன் எங்க மச்சானுக்கும்” என்று வாயெல்லாம் பல்லாய் மொழிந்தவள் பின் இருக்கையிலும் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அவள் அமர்ந்ததும் கதவைப் பூட்டிவிட்டு முன்னே வந்தவனும் உள்ளே அமர்ந்து மகிழுந்தைக் கிளப்பியவன் அப்பொழுதுதான் சம்யுவைப் பார்க்க, அவள் முகத்திலோ எள்ளும் கொள்ளும் அளவில்லாது வெடித்துக் கொண்டிருந்தது.
அதைப்பார்த்து, “என்னாச்சு இவளுக்கு? ஏன் ஒருமாதிரி இருக்கா? தேன்மொழிட்டகூட சரியாப்பேசல” என்று குழம்பியவாறே மகிழுந்தைச் செலுத்தி வந்து தங்கள் மருத்துவமனையில் நிறுத்தியவனின் அடுத்த இரண்டு மணி நேரங்கள் சிகிச்சைக்கு வந்த குழந்தைகளுக்கு வைத்தியம் பார்ப்பதில் கழிய, சம்யுவும் மற்ற சிகிச்சைகளுக்கு வந்திருந்த பெண்கள், மற்றும் பெரியவர்களை கவனிக்கத் தொடங்கினாள்.
அவர்களோடு மகிழுந்தில் வந்த பெண்ணின் குழந்தைக்கும் உடலில் என்ன கோளாறு என்று பார்த்து நன்கு செரிமானம் ஏற்படுவதற்குண்டான மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் எல்லாம் வழங்கிய ப்ரித்திவோ அதற்குண்டான பணத்தைக்கூட வேண்டாம் என்று மருத்துவிட, அதில் அகம் மகிழ்ந்துபோன அந்தப்பெண்ணும், “ரொம்ப ரொம்ப நன்றிங்க மச்சான். உங்க உதவிய நான் மறக்கவே மாட்டின் மச்சான்” என்று ஆயிரம் மச்சான்கள் போட்டு விட்டுச்செல்ல…
அதையெல்லாம் கேட்டு பல்லைக்கடித்தபடி வேறு ஒரு பெண்ணின் கையில் ஊசியை செலுத்திக் கொண்டிருந்த சம்யுவிற்கு அந்தப்பெண் ப்ரித்திவை மச்சான் என்று அழைக்க அழைக்க அத்துணை ஆத்திரம் வந்தது.
அதிலும் அவளின் மச்சான் என்ற அழைப்பைத் தடுக்காது ப்ரித்திவ் அவளுடன் சகஜமாகப் பேசுவதை அவளால் ஏற்கவே இயலவில்லை.
மருத்துவமனையில் இருந்து அந்தப்பெண் சென்றப்பின்னரும் அடுத்த ஒருமணிநேரம் இருவரும் பணிசெய்து முடித்து வீட்டிற்கு வந்தப்பின்னரும்கூட
‘அவதான் மச்சான் மச்சான்னு குழைஞ்சா இவன் எப்படி அத தடுக்காம அவகூட சிரிச்சு சிரிச்சு பேசலாம். அன்னிக்கு காலேஜ்ல என்ன மச்சான்னு கூப்பிட சொன்னவன் இன்னிக்கு எப்டி அவள மச்சான்னு கூப்பிட அலோவ் பண்ணலாம். நானும் அவளும் அவனுக்கு ஒன்னா’ என்று உள்ளூற பொருமிக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.
ஆனால் அவளின் மனநிலை எதையும் உணராமலே வீட்டிற்குள் நுழைந்து குளித்து முடித்து இலகு உடைக்கு மாறியவன், கையில் ஒரு உணவுப்பாத்திரத்தைக் கொண்டுவந்து சம்யுவின் முன்னால் நீட்டியவன்,
“யுகி இந்தா தேன்குழல் எடுத்துக்கோ. ஹாஸ்பிடல்ல
தேன்மொழி கொடுத்தா. அவளே பண்ணதாம். ரொம்ப டேஸ்டா இருக்கு” என்று
சொன்னதுதான் தாமதம்போல் காளிதேவியாய் இருக்கையில் இருந்து எழுந்தவள், “எதுவும் வேண்டாம். எனக்குப் பிடிக்கல.” என்று அந்த உணவுப்பாத்திரத்தை ஒரே தள்ளாக தள்ளிவிட்டிருந்தாள்.
அதில் பாத்திரத்தில் இருந்த தேன்குழல் மொத்தம் தரையில் சிதற, அவளை அதிர்ந்து பார்த்தவனோ அவள் இருக்கும் மனநிலையில் அவளை திட்டவும் இயலாது, “நான் கொடுத்தது உனக்குப் பிடிக்கலைன்னா வாய்ல சொல்லிருக்கலாம்ல. என்மேல இருக்க கோவத்தை ஏன்டி புட்ல காட்டுற” என்று வருந்தும் குரலில் சொல்லியவாறே கீழே இருந்த இனிப்பை அந்த பாத்திரத்திலே சேகரித்தான்.
அவன் செயலில், ‘பொண்டாட்டி பக்கத்துல இருக்கான்ற நினைப்புகூட இல்லாம ஹாஸ்பிடல்ல அவள மச்சான் மச்சான்னு கொஞ்சவிட்டது பத்தாதுன்னு அவகொடுத்த தேன்குழல தட்டிவிட்டாலும் விடமாட்டியா நீ.’ என்று இன்னும் ஆத்திரமாகியவள் அங்கிருந்த தண்ணீர்க்குவளையை எடுத்து அந்த பாத்திரத்தோடு சேர்த்து அவன்மீதும் கவிழ்த்தவள்,
“இங்க உன் பொண்” என்று தொடங்கிவிட்டு சட்டென்று சுதாகரித்து நாக்கைக்கடித்துக் கொண்டவள், “நான் இங்க தலைவலியோட அவஸ்தை பட்டிட்டிருக்கேன். என்ன ஏதுன்னு ஒருவார்த்தை கேக்காம உனக்கு அந்த தேன்மொழி கொடுத்த தேன்குழல்தான் அவ்ளோ முக்கியமாப்போச்சா” என்று கத்தியவள், ஏன் எதற்கு எதனால் இப்படி ஒரு கோபப்படுகிறோம் என்று உணராமலே அதற்கும் சேர்த்து அவனையே முறைத்துவிட்டு அப்படியே தலையைப்பற்றிக்கொண்டு நீள்விருக்கையில் சாய்ந்து விட்டாள் சம்யுக்தா.
அத்துணை நேரமும் அவளுக்கு எதற்கு இந்த திடீர்கோபம் என்ற யோசனையிலே இருந்தவன் அவள் தலைவலி என்று சொன்ன மறுநிமிடமே கையிலிருந்த தேன்குழல் பாத்திரத்தை தூக்கி தூரப்போட்டுவிட்டு ஈரெட்டில் அவளை நெருங்கியவன், “யுகி…
தலைவலியா ஏன்டா முன்னவே சொல்லல. ரொம்ப வலிக்குதா?” என்று பதறியவன், “இரு அஞ்சே நிமிசத்துல வர்றேன்” என்றுவிட்டு உள்ளே சென்று திரும்பியவன் கையில் எட்டுவீடு தாண்டி மணமணக்கும் சுக்குமல்லிக்காபியும், கால்பால் மாத்திரை ஒன்றும் இருந்தது.
அவள் சற்றுமுன்னர் அவள் முகத்தில் ஊற்றிய நீரானது இன்னும்கூட அவன் நாடியில் நின்றும் சொட்டிக்கொண்டிருக்க, அதை துடைக்கக்கூடத் தோணாது சொன்னதுபோலவே ஐந்தே நிமிடத்தில் தனை நெருங்கி காபியோடு மாத்திரையும் நீட்டியவனைப் பார்த்து பெண்ணவளின் உடனடித் தலைவலி மட்டுமல்ல, தேன்மொழியின் மச்சான் என்ற அழைப்பால் தூண்டப்பட்டிருந்த கோபம்கூட நீர்தெளிக்கப்பட்ட கொதிபாலாய் அவளுள்ளே அமிழ்ந்துதான் போனது.
“ஒன்னும் வேணாம் போ” என்று வேண்டுமென்றே சிலபல மறுப்புகள் செய்து அவன் கெஞ்சிக் கொஞ்சிக் கொடுத்த சுக்குமல்லி காபியையும் சொட்டின்றி சுவைத்து முடித்தவள் அவன்கொடுத்த மாத்திரையை மட்டும் கையில் வாங்கிக்கொண்டு, “தாங்க்ஸ்” என்றுமட்டும் சொல்லிவிட்டு தனதறைக்குள் நுழைந்து கொண்டவளுக்கு முகமெல்லாம் அப்படி ஒரு சிரிப்பு.
ஆறடி ஆடவனை தன் ஆட்காட்டி விரலால் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கும் கர்வமும் அவள் விழிகளில் பொங்கிவழிந்தது.
“திவா நல்லா ஏமாந்தியா? யார்கிட்ட? அவஉன்ன மச்சான்னு கூப்பிட்டு தேன்குழல் கொடுத்துவிடுவா அத உன்ன சாப்பிடவிட்டு ரசிப்பேன்னு நினைச்சியா?.” என்று முறைப்போடே சிரித்துக்கொண்டவள், “இனிமேல் உன்ன தீண்டுற காத்துகூட என்னதாண்டிதான்டா உன்கிட்ட வரனும்” என்று கட்டிலில் படுத்தவாறு வழக்கம்போல் கைபேசியில் இருந்த அவன் நிழற்படத்தைப்பார்த்து சொல்லிக்கொண்டவள், ‘இனிமேல் ஏனாம் அப்டி? நீ அவன் பொண்டாட்டி ஆகிட்டதாலையா? இல்ல உன்மனசில அவன கணவனா ஏத்துக்கிட்டியா?’ என்றுகேட்ட மனசாட்சியின் கேள்வியில் உடல் அதிர்வுற்று எழுந்தமர்ந்தாள் சம்யுக்தா.
மனசாட்சியின் கேள்வியில் உடல் தூக்கிப்போட்டு எழுந்து அமர்ந்தவள், “இல்லையே இல்லையே நான் எப்டி அவன கணவனா நினைக்க முடியும். அவன் அவன் என்னவிடச் சின்னவன்” என்று மறுக்கத் தொடங்கியவளை…
“இல்ல நீ பொய்சொல்ற. கொஞ்சம் முன்ன நீயே உன் பொண்டாட்டின்னு தான சொல்ல வந்து சுதாரிச்ச? அத்தோட நீ அவனோட காதலை ஏத்துக்கவும் தொடங்கிட்ட அதான் தேன்மொழி மச்சான்னு கூப்பிட்டதுக்கு அவ்ளோ கோபம் வருது உனக்கு.” என்று மனசாட்சியும் அவளோடு மல்லுக்கு நின்றது.
அப்பொழுதும் அடங்காதவள், ‘அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. அவன் என்னோட திவா அவன்மேல எனக்குத்தான் முழு உரிமையும் இருக்கு. அதான் அப்டி கோவம் வந்துச்சு அதுக்குமேல நீ சொல்றமாதிரி எதுவும் இல்ல. அத்தோட வயசுல சின்னவன காதலிக்கிற அளவு நான் முட்டாளும் இல்ல. நீ போ முதல்ல” என்று மனசாட்சியே இல்லாது மனசாட்சியை துரத்தி விட்டவளின் விழிகள் அவளையும் அறியாது உவரிநீரைச் சிந்தியது. அவனைவிட ஒருநாள் முன்னே பிறந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கமும் அவ்விழிகளில் நிரம்பி வழிந்தது.
அப்படியே நாட்கள் நகர, அன்றைய நாளுக்குப்பிறகு அவன் உன் கணவன்தானே என்று தினம் தினம் அவளோடு மல்லுக்கட்டும் மனசாட்சிக்கும் பதில்கூற இயலாது சிலநேரம் குளிர்வதும், பலநேரம் காய்வதுமாய் தன்னோடு சேர்த்து அவனையும் துளிதுளியாய் சிதறடித்து வேடிக்கை பார்த்தாள் சம்யுக்தா.
அவளோடு நெருங்கவும் முடியாது, விலகவும் இயலாது தவித்தவன் தன்னவள் தன் காதலைப் புரிந்து, தன்னை கணவனாய் ஏற்காவிட்டாலும் பரவாயில்லை, அவளுடைய பழைய திவாவாக அவள் தன்னை உணர்ந்தால் போதும் என்பதே தற்பொழுது ப்ரித்திவின் ஏக்கமாக இருக்க, அவர்கள் பண்ணை வீட்டிற்கு வந்து இன்றோடு நான்கு மாதங்களும் கடந்திருந்தது.
பண்ணை வீடு அதைவிட்டால் மருத்துவமனை, கூடவே தங்களது வளர்ப்பு பிள்ளைகள் (பறவைகள் மீன்கள் செடிகள்) என்று தன்னைச்சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டு தனிமையை மட்டுமே துணையாக வைத்திருப்பவளுக்கு அந்த பண்ணை வீட்டில் அவன் மட்டுமே அரணாக இருந்தான் என்றால் அது துளியும் மிகையில்லை.
அவளை பண்ணை வீட்டிற்கு அழைத்து வந்ததற்கு அவளுக்கு தனிமை தேவை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், யுவாமற்றும் காயுவின் பாராமுகமும், நவீனின் வருத்தமும் அவளை எங்கணமும் தாக்கிவிடக்கூடாது என்பதிலும் மிகவும் கவனமாக இருந்தவன் கடந்த நான்குமாத காலங்களில் மலர்விழி அத்துணைமுறை அலைபேசியில் இருவரையும் வீட்டிற்கு வந்துவிடுமாறு கூறியும், “அவளக்கூட்டிட்டு வந்தா அந்த மீசைக்காரரும் உங்க உடன்பிறப்பும் அவகிட்ட பாசமா பேசுவாங்களா?” என்ற ஒற்றைக் கேள்வியில் தாயின் வாயை அடைத்து விட்டவன் அவன் மட்டுமே சென்று இரண்டுமுறை வீட்டினரை பார்த்துவிட்டு வந்திருந்தான்.
தன்னவளின் தனிமைக்கு எந்தவித இடையூறும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தாங்கள் பண்ணை வீட்டில் இருக்கும்வரை பண்ணையின் பொறுப்பைக்கூட தற்சமயம் தானே பார்த்துக் கொள்வதாயும் நவீனிடம் கூறி இருந்தவன் கடந்த மாதங்களில் சொன்னதை சிறப்பாக செயலாற்றிக்கொண்டும் இருப்பவனுக்கு பெண்ணவளின் நிலாமுகம் காணும் கணங்கள் மட்டுமே தேவகணங்களாய் கழிய, அதுகூட பொறுக்கவில்லை போல அந்த விதி என்னும் ஆட்டக்காரனுக்கு.
நாட்கள் அப்படியே நகர,
அன்று காலை வேளை பணிக்குச் செல்ல ஆயத்தமாகி வந்தவன் மணி எட்டரையை நெருங்கியும் இன்னும் திறக்கப்படாது இருந்த சம்யுவின் அறைக்கதவை பார்த்துவிட்டு விழிகள் சுருங்க கதவைத் தட்டினான் ப்ரித்திவ்.
மூன்றுமுறை விடாது தட்டியும், “ம்ம்ம்” தவிர எந்த பதிலும் இல்லாதுபோக வெறுமனே சாத்தப்பட்டிருந்த கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன் கண்டது என்னவோ படுக்கையின் அருகிலே கோணல் மாணலாய் தரையில் விழுந்து கிடந்த சம்யுவைத்தான்.