மூன்றுமுறை விடாது தட்டியும் சரியான பதில் இல்லாது போக, வெறுமனே சாத்தப்பட்டிருந்த கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன் கண்டது என்னவோ படுக்கையின் அருகில் தரையில் கிடந்தபடி ஆடவனின் சப்தத்தில் வேகமாக எழ முயற்சித்த மனைவியைத்தான்.
பெண்ணவள் கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்ததும் கையிலிருந்த ஸ்டெத்தையும் வெள்ளை அங்கியையும் தூக்கி வீசிவிட்டு, “யுகீ என்னாச்சுடி?” என்று ஈரெட்டில் அவளை நெருங்கியவன் அவள் கரத்தைப் பற்றித் தூக்க முனைந்தான்.
அதில் அவன் கரத்தை தட்டி விட்டவளும், “ஒ ஒ ஒன்னுமில்ல விடுடா என்ன” என்று அவளே எழப் பார்க்க, அந்தோ பரிதாபம் அவள் காலிலும் தரையிலும் இருந்த தேங்காய் எண்ணெய் அதே இடத்திலே அவளை மீண்டும் விழ வைத்திருந்தது.
அதில் இன்னும் பதறியவன்,
“யுகீ ஏண்டி இப்டி பண்ற. நான் தொட்டா நீ ஒன்னும் கரஞ்சு போய்டமாட்ட” என்று அவள் மறுப்பையும் மீறி அவள் தோள்களைப் பற்றித் தூக்கி படுக்கையில் அமர வைத்தவன், “எப்டி கீழ விழுந்த யுகீ? எண்ணெய் எப்டி கொட்டுச்சு? உனக்கு அடி ஏதும் பட்டிச்சா? பாத்து நடக்க மாட்டியா?” என்று அவள் மேனி முழுதும் பார்வையை ஓட்டினான்.
ஆடவனின் அந்த பதற்றத்தில் சிதறத் துடித்த மனதை அரும்பாடு பட்டு அடக்கியவள், “எனக்கு ஒன்னும் இல்லை திவா. ஜஸ்ட் ஆயில்ல கால் வச்சு ஸ்லிப் ஆகிட்டேன். நீ போ. நான் பின்னாடியே வர்றேன்” என்றவளுக்கு அந்த நான்கு வார்த்தைகளை சொல்லி முடிக்கும் முன்னேவே முகம் வலியில் அப்பட்டமாகச் சுருங்கி விரிந்தது.
இன்று சற்று தாமதமாக எழுந்ததால் மருத்துவமனை கிளம்ப வேண்டும் என்ற அவசரத்தில் வேகமாக எட்டுவைத்தவள், இரவு உறக்கத்தில் அவளே தட்டி விட்டிருந்த எண்ணெய் குப்பியை கவனியாமல் அதில் கால்களை வைத்திருக்க, சர்ரென்று வழுக்கி தரையிலும் விழுந்திருந்தாள்.
விழுந்த கோணத்தில் அவளின் வலதுகால் மடங்கி அதன் மேலேயே அமர்ந்து விட்டவளுக்கு நிமிடங்கள் பல கழிந்தும் கொட்டியிருந்த எண்ணெயாலும் காலில் தோன்றிய சுருக்கென்ற வலியாலும் எழும்ப முடியாது போனது.
சிறிது முன்னர் ப்ரித்திவின் சப்தத்தில் தான் விழுந்த இடத்திலிருந்து வேகமாக எழ முயற்சித்தவளுக்கு கரண்டை மொழியில் ஏற்பட்ட வலி, குறைந்த பட்சம் சுளுக்கின் அறிகுறியோ என்ற சந்தேகத்தையும் கொடுத்தது.
ஆனாலும் அதை அவனிடம் காட்டாது மறைத்தவள், “நீ போ திவா. நான் கொஞ்ச நேரத்துல கிளம்பி வர்றேன்” என்று ப்ரித்திவை விரட்டுவதிலே குறியாக இருந்தாள்.
ஆனால் அதற்கெல்லாம் அசருபவனா அவன்.
அவள் முகத்தை பார்த்தே அவள் நிலையை யூகித்தவன்,
“என்மேல இருக்க கோவத்துல நீ பொய் சொல்லாத யுகீ. உன் முகமே சொல்லுது உனக்கு எங்கையோ அடிபட்டிருக்குன்னு” என்று அவள் அருகில் அமர்ந்து கொண்டவன், “எங்க அடிபட்டுச்சுன்னு சொல்லு யுகி? கையா?, இடுப்பா?, காலா?” என்று அவள் கைகளைப் பற்றியும் ஆராய, அவளுக்கோ அடுத்து அவன் இங்கும் ஆராயக்கூடுமோ என்று தோன்றிய இடத்தை எண்ணி உடல் தூக்கி வாரிப்போட்டது.
அவள் எண்ணியது போலவே கைகளை ஆராய்ந்து முடித்தவன், “கைல அடிபடல. வேற எங்க வலிக்குதுன்னு சொல்லு யுகி நான் பாக்கறேன்?” என்று அவள் இடைச் சேலையை நோக்கி கையை நகர்த்திய நொடி, “அய்யோ திவா, கால்ல தான்டா அடிபட்டிருக்கு” என்று கத்தியே விட்டாள் சம்யுக்தா.
அவள் அப்படி கத்தியப் பின்புதான் தான் தீண்டச் சென்ற இடமே அவன் கருத்தை நிறைக்க,
விரல்களை இறுக்க மூடித் திறந்து கரத்தை பின்னே இழுத்தவன், “இத மொதல்லயே சொல்லிருக்கலாம்ல?” என்று விட்டு சட்டென்று தரையில் அமர்ந்து அவள் பாதங்களைத் தூக்கி மடியில் வைத்தான்.
பெண்ணின் வலக்காலை மடியில் வைத்ததோடு நில்லாமல் கெண்டை கால் வரையிலுமே அடி எங்கே என்று ஆராய்ந்து முடித்தவன், “நல்லவேளை, அடிபட்ட இடம் மொலியா இருந்தாலும் பிராக்ச்சர் ஏதும் இல்லை. சின்ன அடிதான். ஜெல் தடவினா சரியாப்போகும்” என்று கரண்டை மொலி அருகில் சற்று நிறம் மாறி இருந்த இடத்தை தேய்த்துக் கொடுக்க, அவளுக்கோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
அவன் மடியில் அவள் காலை வைத்திருந்ததிலும் ஆடவனின் மயிலிரகான வருடலிலும் கால்களின் கூச்சத்தை தாள மாட்டாது நெளிந்தவள், “ஜெல் தானே திவா. அத நானே தடவிக்கிறேன். நீ ஹாஸ்பிடல் கிளம்பு” என்று தன் கால்களை இழுத்துக் கொண்டு வேகமாக எழுந்து நின்றவள் மின்னல் வெட்டியது போன்ற திடீர் வலியால், “ஆஆஆ” வென்று மீண்டும் படுக்கையிலே அமர்ந்து விட்டாள்.
அதில் அவளை ஏகத்துக்கும் முறைத்தவனும் மேஜை இழுவையில் இருந்த அடிப்பட்டதற்கு தடவும் ஜெல் மருந்தையும் எடுத்து வந்து மீண்டும் அவளருகில் அமர்ந்து கொண்டவன், “இதப்பாரு யுகீ. நீ என்ன காதலனா, கணவனா, இல்லை ஒரு டாக்டரா கூட பாக்கவேணாம். நான் இப்போவும் எப்பவும் உன்னோட திவாதான்னு நினைச்சின்னா காலைக் கொடு” என்று கையைநீட்ட…
ஆடவனின் விழியில் கொட்டும் நேசத்தை உதர இயலாப் பெண்ணும் வெண்தாமரைப் பாதங்களை மெல்ல மெல்ல அவன் கரத்தினில் வைத்தாள்.
அதில் விழிகள் ஒளிர, மலர் போன்ற பாதமதை அந்த மலரின் மிருதுவைவிட மென்மையாகப் பற்றியவன், “கொஞ்சம் பொறுத்துக் கன்னுகுட்டி” என்று ஜெல்லை எடுத்து அடிபட்ட இடம் முழுதும் நன்றாக தடவிவிட்டு மசாஜும் செய்துவிட ஆடவனின் கண்களோடு கரம் கூட வெளிப்படுத்திய நேசமதை தாள முடியாதவளோ அலையில் ஆடும் மீனாய் திண்டாடித்தான் போனாள்.
அடிபட்ட காலுக்கு மருந்தை இட்டு முடித்தவன், காலை மெல்லத் தூக்கி தலையணையில் வைத்துவிட்டு, “இரு வந்தர்றேன்” என்று சென்றவன் திரும்பி வந்த பொழுது அவன் கரத்தினில் காலை உணவும் தேநீரும் இருக்க, அதைப் பார்த்த சம்யுவிற்கு அப்பொழுது தான் அவள் பல்கூட துலக்கவில்லை என்று ஞாபகமே வந்தது.
அதில், “நான் அப்றம் சாப்டுக்கறேன் திவா. நீ ஹாஸ்பிடல் கிளம்பு. டைம் ஆச்சு” என…
“உன்ன இப்டியே விட்டுட்டு அங்க போய் என்னால நிம்மதியா வேலை பாக்க முடியும்னு நீ நினைக்கிறியா?” என்றவன், “ரெண்டு பேருக்குமே ரெண்டு நாளைக்கு லீவு சொல்லிட்டேன்.” என்று பேசிக்கொண்டே உணவுத்தட்டை மேசையில் வைத்துவிட்டு குளியலறை நுழைந்து வந்தவனின் கரத்தில் இப்பொழுது இருந்தது என்னவோ படுக்கையில் அமர்ந்தவாக்கிலே பல் துலக்கி முகம் கழுவ தேவையான பொருட்கள் தான்.
சிறியதோர் நெகிழி டப்பும் பல் துலக்கும் பேஸ்ட் பிரஸ்ஸும் குவளையில் நீரும் எடுத்து வந்தவனைக் கண்டு, “திவா…! இதெல்லாம் எதுக்கு நீ?” என்று அவள் வார்த்தைகள் வராது தடுமாறித்தான் போனாள்.
அதையெல்லாம் கருத்திலே ஏற்காதவனோ,
“ம்ம்ம் சீக்கிரம் பல்ல தேய் யுகி. இட்லி ஆறிடப்போகுது” என்று அவளை துரிதப்படுத்தி பல் துலக்க வைத்தவன் கொண்டு வந்த இட்டலிகளையும் மிச்சமில்லாது உண்ண வைத்திருந்தான்.
அவள் உணவருந்தி முடித்ததும் வலி நிவாரணி மாத்திரை ஒன்றையும் கொடுத்தவன்,
“எதைப்பத்தியும் யோசிக்காம நல்லா ரெஸ்ட் எடு யுகி. நான் கிச்சன்லதான் இருப்பேன். ஏதாவது வேணும்னா நீயா எந்திரிக்காத. திவா னு ஒரு குரல் மட்டும் குடு. டோரையும் லாக் பண்ணாத” என்று மூச்சுவிடாது பேசியவன் அறையை விட்டு வெளியேற, அவன் சென்ற திசையையே பார்த்து இருந்தவளுக்கு ஆடவனின் நெஞ்சை நெகிழ்த்தும் நேசத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இன்றி தான் போனது.
மருத்துவப் பணியில் இருப்பதாலோ என்னவோ அவளின் அன்னையிடமிருந்து கூட இதுவரை அவளுக்கு இப்படி ஒரு கவனிப்பும், ராஜ உபச்சாரமும் கிடைத்ததில்லை அல்லவா
தரையில் கால்படாமல் பார்த்துக் கொள்வது என்று பெண்ணவள் கதைகளிலும் சினிமாக்களிலும் கேள்வி பட்டிருக்கிறாள் தான். ஆனால் அது எப்படி இருக்கும் என்று நிமிடத்திற்கு நிமிடம் செய்கையால் உணர்த்திக் கொண்டிருந்தான் ப்ரித்திவ்ராஜ்.
அன்று மட்டுமல்லாது மறுநாள் காலை வரையிலும் கூட பெண்ணவளின் பாதம் தரையைத் தீண்டாது அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்தவனின் அலப்பறையை தாங்க முடியாது,
“அய்யோ இப்போ எனக்கு கால்ல சுத்தமா வலியே இல்லடா” என்று மீண்டும் சப்தமிடுபடிதான் ஆனது பெண்ணிற்கு.
அதற்கும், “சுயர் யுகி? அப்போ டுமாரோ ஹாஸ்பிடல் போக முடியும் தானே?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களின் ஒட்டு மொத்த பண்ணையையும் பராமரிக்கும் பொன்னுச்சாமி விரைந்து வந்தவன், “ஐயா மாட்டுப்பண்ணையில் செவப்பி பசு கன்னு போட்டிருக்குங்கையா. வழக்கமா கன்னு போட்டதும் பெரியய்யாவும் அம்மாவும் தான் வந்து பாத்துட்டு புதுப்பிள்ளைக்கு பேரெல்லாம் வைப்பாங்க. ஆனா இப்போ எல்லாமே நீங்களே பாக்குறதால” என்று நிறுத்தி தயக்கமாய் ஏறிட்டவனிடம்,
“நீ போ பொன்னுசாமி, நான் அப்பாட்ட சொல்லிட்டு பின்னாடியே வர்றேன்” என்றவன் “யுகி நீ கொஞ்ச நேரம் பத்திரமா” என்று சம்யுவின் புறம் திரும்ப…
அதற்குள் அவ்ளோ, “கேர்ள் பேபியா, பாய் பேபியா பொன்னுசாமியண்ணே? கன்னுகுட்டி என்ன கலர்? எப்டி இருக்கு? செவப்பி நல்லா இருக்கா?” என்று ஆர்வமாக வினவத் தொடங்கியிருந்தாள்.
அவள் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்த பொன்னுசாமியும், “அப்போ நான் போறேன் சின்னய்யா. நீங்க நேரம் கிடைக்கும் போது வாங்க” என்றுவிட்டு அவன் பணிகளை பார்க்க விரைய…
அவனுக்கு வெறும் தலையசைப்பை மட்டுமே கொடுத்தவனின் பார்வையோ சம்யுவின் ஆவல் கொண்ட முகத்தில்தான் நிலைபெற்று நின்றது.
பொன்னுசாமி செல்வதையே பார்த்திருந்தவளும் தன் அடிபட்ட காலையும் குனிந்து பார்த்து
சிறு பெருமூச்சை விட்டுக் கொண்டவள் அறைக்குள் செல்லத் திரும்பிய வேளை,
“யுகி கிளம்பு பண்ணைக்கு போலாம்” என்று அவள் நடையை நிறுத்தியிருந்தான் அவளவன்.
அதில் ஆர்வத்தோடு அதிர்ச்சியும் கலக்க, “இல்லை திவா அடிபட்ட காலை வச்சுட்டு பண்ணை வரை நடக்க முடியாது. நீ மட்டும் போய்ட்டு வா” என்றவளின் விழியில் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அப்பட்டமாகத் தெரிந்தது.
பெண்ணின் ஆதியோடு அந்தமும் அறிந்தவனுக்கு அவளின் ஆசைகளையா தெரியாது???
“ஏன் யுகி நீ தான கொஞ்சம் முன்ன கால்ல வலி இல்லன்னு சொன்ன? அப்போ வா” என்று அழைக்க…
காலில் வலியே இல்லாவிட்டாலும் சிறு கைத்துணையாவது இல்லாமல் அத்துணை தூரம் நடக்க இயலாது என்று உணர்ந்தவள், “இல்லை திவா
சொன்னா புரிஞ்சுக்கோ. நான் வரல” என்று மனமே இல்லாது மறுத்தாள்.
அவள் பார்வையின் தவிப்பை வைத்தே அவள் சொல்லாது விட்டதையும் சேர்த்தே புரிந்தவன் அடிமேல் அடிவைத்து பெண்ணவளை நெருங்கி,
“என் கையைப் பிடிச்சுட்டு வரணுமேன்னு தான இப்போ பண்ணைக்கு வர மறுக்கற?” என்றவன், “இப்போ மட்டும் நீ என்னோட வரலன்னா உன்ன அலேக்காத் தூக்கிட்டே போவேன்” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தவனின் செயலிலும் பேச்சிலும் உடல் சிலிர்த்து ஏறிட்டவளைப் பார்த்து, “பண்ணை வரைக்குமே” என்று கண்சிமிட்டிச் சொல்ல…
அதற்கு மேலும் பிடிவாதம் பிடிப்பாளா அவனவள்.
செவியோரம் உணர்ந்த அவன் மூச்சுக் காற்றின் வெப்பத்தையே தாளாது விலகிக் கொண்டவள், “என்ன இப்போல்லாம் ஓவரா மிரட்டுறான்?” என்று முனகியபடி முகம் கழுவி வர, அவளைப் பார்த்து இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவனும் ஆயத்தமாக அடுத்த அரைமணி நேரத்தில் அந்த மிகப்பெரிய பண்ணையின் வலது புறம் அமைக்கப் பட்டிருந்த மாட்டுப் பண்ணையை நெருங்கி இருந்தனர் இருவரும்.
அவளை அதிகம் சோதிக்காது அவள் விரல்களை மட்டுமே பற்றி அழைத்து வந்தாலும், அவளுக்கு ஈடாக அடிமேல் அடிவைத்து அவளோடு இணைந்தே நடந்தவன், அவள் நடக்கும் பாதையில் இருந்த மட்டைகள் ஓலைகள் எல்லாம் காலாலே அப்புறப்படுத்தியவாறு வந்தவனின் செயலில் அவன் காலடியில் வீழத் துடித்த இதயத்தை இழுத்துப் பிடிப்பதே பிரம்ம பிரயத்தனமாகித்தான் போனது பெண்ணிற்கு.
அவர்கள் பண்ணையை நெருங்க நெருங்க அவள் இதயம் அவனையல்லவோ நெருங்கத் துடிக்க, இனம்புரியா பரிதவிப்பில் சிக்கிக் கொண்டவளை காப்பாற்றவென்றே துள்ளிக் குதித்து ஓடி வந்தது சற்று முன்னர் இப்பூவுலகில் உதித்த சின்னஞ்சிறு கன்றுக்குட்டி.
வெள்ளையும் கருப்பும் கலந்த நிறத்தில் புசுபுசு ரோமங்களோடு, புள்ளிமான் போல் துள்ளி வந்த இளங்கன்றைப் பார்த்து சுற்றம் எல்லாம் மறந்தவளாய், “ஹேய் க்யூட்டி. எங்கடா ஓடுறீங்க?” என்று கன்றை அலேக்காகத் தூக்கிக் கொண்டாள் சம்யுக்தா.
தூக்கியதோடு நில்லாமல், “ஹேய் திவா இங்க பாருடா. எவ்ளோ க்யூட்டா இருக்காள்ள” என்று அவர்கள் ஊடல் எல்லாம் மறந்து அவனை இன்னும் நெருங்கி நின்றவளைக் கண்டு இரண்டில் எந்த கன்றுக்குட்டியைப் பார்க்க என்று திணறித்தான் போனான் ஆடவன்.
காலை பதினோரு மணிக்குமேல் உச்சிப் பொழுதாக இருந்தாலும் அதிக வெயில் இல்லாத இதம் பரப்பும் சூழலில், சுற்றி இருந்த தென்னை, மா, பலா போன்ற மரங்களிலிருந்து வீசிய தென்றல் காற்று அவர்களுக்கு சங்கீதம் இசைக்க, வெகு நாளைக்குப் பிறகான பெண்ணவளின் அண்மையில், “ம்ம்ம் கன்னுகுட்டியத்தான் பாக்கறேன். கண்ணையே எடுக்க முடியல” என்று விழிகளால் அவளையே பாடலாக்கி படித்திருந்தான் ப்ரித்திவ்.
நிமிடங்கள் சில கடந்தப் பின்னேயே அவன் பார்வை மாற்றத்தைக் கண்டு, அவன் வார்த்தையின் பொருளையும் உணர்ந்து கொண்டவளுக்கு உச்சி முதல் பாதம்வரை பலநூறு பட்டாம்பூச்சிகள் படபடக்கத் தொடங்கியது.
அதன் பின்னரே தங்கள் ஊடலும் நினைவுவர சட்டென்று அவனை விட்டு விலகியவள் ஓடாத குறையாக மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு விரைய, அதன் பின்னான நேரங்கள் எல்லாம் அவர்களின் பதின்ம காலங்களுக்குள் அவளை இழுத்துச் சென்றது என்று சொன்னால் அது துளியும் மிகையில்லை.
ஆம் அவளின் செல்லப்பெயரான கன்னுகுட்டியைக் கூட பத்து வருடங்கள் முன்னால் இப்படி ஒரு சூழலில் தானே அவளவன் அவளுக்குச் சூட்டியிருந்தான்.
அதுவரை யுகி என்று மட்டுமே அழைத்து வந்தவன், பத்து வருடங்கள் முன்பு அன்றைய நாள் ஈன்ற கன்று குட்டியின் புசுபுசு ஸ்பரிசத்தோடு தன்னவளின் மென்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தவன், “ஹேய் யுகி உன்னோட ஸ்கின்னும் கன்னுகுட்டி போலவே ரொம்ப சாப்ட்டா இருக்கு. அதனால நான் இனிமேல் உன்னயும் கன்னுகுட்டினு தான் கூப்பிடுவேன். சரியா?” என்று அவள் கைபிடித்து அவன் அன்று உணர்த்திய அளவில்லா நேசமதை இம்மியும் குறைக்காது இன்று காதலாக்கி கண்களாலே கடத்திக் கொண்டிருந்தான் ப்ரித்திவ்ராஜ்.
இளம்கன்று பயமறியாது என்பது போல் இன்று பிறந்த சிறு கன்று தான் கண்ட புதுவுலகில் துள்ளி துள்ளி ஓடும் பொழுதெல்லாம் அவர்கள் இருவரும் விபரம் தெரியா நாள் தொட்டு கரம் கோர்த்துத் துள்ளித் திரிந்த பொழுதுகள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக இருவரின் மனதையும் நிறைக்க, இருவரும் ஒருவரை ஒருவர் விழிகளாலே நிறைக்கத் தொடங்கினர்.
அவர்களைப் பார்த்ததும் விரைந்து வந்த பொன்னுச்சாமியும் பொன்னியும்,
“வந்துடீகளா சின்னய்யா, அடடே சின்னம்மாவும் வந்துருக்காகளா?” என்று வரவேற்றவர்களோடு இணைந்து கன்று ஈன்ற மாட்டையும் பார்த்து கால்நடை மருத்துவரிடம் அதன் நலனையும் கேட்டறிந்து கொண்டவர்கள் இளம் கன்றுக்கு இனியா என்ற பெயரும் சூட்டி முடிக்க, இருவரின் முகத்திலுமே அளவில்லா மகிழ்ச்சியும் பரவசமும் போட்டி போட்டு வழிந்தது.
அப்படியே மெல்ல மெல்ல நடையிட்டு பண்ணையின் சுற்றுப்பகுதியிலும் உலா போனவர்கள் கிணற்றிலிருந்து போர் மூலம் மரங்களுக்குப் பாய்ந்த ஓடைநீரில் கை கால்களும் நனைத்துவிட்டு வீட்டை நோக்கி நடக்க, அவளையும் அறியாமலே பெண்ணின் வலக்கரம் ஆணின் இடக்கரம் நோக்கி நீண்டது.
அதில் ஆர்ப்பரிக்கும் மனதோடு பெண்ணவளை நெருங்கி விரல் கோர்த்துக் கொண்டவன்,
“பாத்து நடடா. ஈர டிரஸ் தட்டி விட்டுடப்போது” என்று சொல்லி முடிக்கும் முன் சிறுகல் தடுக்கி தடுமாறி விழப்போனவள் அடுத்த கணம் அந்தரந்தில் மிதந்திருந்தாள்.
அவள் என்ன ஏதென்று உணரும் முன்னவே பூபோல் அவளை ஏந்திக் கொண்டவன், “இதுக்குதான் சொன்னேன் யுகி. ஆர் யூ ஓகே?” என்று வினவியபடி இலகுவாக வீட்டை நோக்கி நடக்க…
அதில் உச்சி தொட்டு உள்ளம் வரை சிலிர்த்துக் கொண்டு கிளம்பியதில் அதிர்ச்சியிலும் நாணத்திலும் சர்ப்பமாய் நெளிந்தவள், “அய்யோ என்ன இறக்கி விடு திவா நானே நடந்து வர்றேன்” என்று தன் படபடப்பை மறைத்து இறங்க முற்பட்டாள்.
ஆனால், “ம்ஹும்” என்று மறுத்து அவள் விழிகளோடு விழிகள் கலக்க விட்டவனோ, “வாழ்க்கையோட எல்லை வரை உன்ன அவன் நெஞ்சுகுள்ளவே சுமக்க ஆவல் கொண்டவன்டி உன்னோட திவா. அட்லீஸ்ட் இன்னிக்கு வீடுவரை அவன் கைகளுக்காவது அந்த பரிசைக் கொடு” என்று சொன்னவனின் கூற்றில் அவனையே விழியெடுக்காது பார்த்திருந்தவளுக்கு மிகப்பெரும் பிரளயமாய் கிளம்பிய ஆழிப்பேரலை ஒன்று அவள் கட்டுப்பாட்டையும் மீறி அவனை நோக்கி அவளை அடித்துச் செல்லத் தொடங்கியது.
கூடவே அவள் உள்ளும் புறமும், ‘இவன் உன்னவன். உனக்கே உனக்கானவன், உன்னவனோடு உனக்கென்ன ஊடல்?’ என்று அவள் உள்ளத்தை உளி கொண்டு உடைக்க, காளையவனின் கரையில்லாக் காதல் பரிணாமங்களில் நீரில் கலந்த தேனாய் கரையத் தொடங்கினாள் பாவை.
“தையில் தரையைப்பிளக்கும். மாசியில் மச்சப்பிளக்கும்” என்று
பனி வெயில் இரண்டுக்குமே பொருந்தும்படியாக தமிழில் இயற்றப்பட்ட சொற்றொடருக்கு ஏற்றார்போல் மாசிமாசத்தின் பனிப்பொழிவின் அதிகாலை வேளையில் தங்கள் அறைபடுக்கையில் சுகமான நித்திரையில் இருந்தாள் சந்தனா.
தான் அணைத்துப்படுத்து துயில் கொண்டிருக்கும் இடத்தின் மென்மையிலும், பார்க்க திண்மையாக இருந்தாலும் அவளின் பால்போன்ற முகத்தை பஞ்சைப்போல் இதமாய் ஏந்தி இத்துயில் களையவேகூடாது என்று பெண்ணவளின் ஆழ்மனதை கட்டிவைத்திருக்கும் ஆடவனின் நெஞ்சமஞ்சத்தில் ஆழ்ந்த சயனத்தில் இருந்தவளை
அணைத்து படுக்கவில்லையானாலும்
இரவில் உறங்கும்சமயம் மட்டும் தன்னையே அறியாது இப்படி வந்து அணைத்துக்கொள்பவளை விலக்கிவிடும் எண்ணம் சிறிதும்இன்றி விழிகளை மூடிப்படுத்திருந்தான் நவீன்ராஜ்.
வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய பெண்ணை அவனும் இதயத்தில் இருந்து அகற்றி கடவுள் தனக்கென்று கொடுத்த பெண்ணை முழுமனதுடன் மணந்து கொண்டவனுக்கு அவளுடனான தன் திருமணவாழ்வு இத்துணை இலகுவாக இருக்கும் என்று அவன் எண்ணிக்கூடப் பார்த்திருக்கவில்லை.
அவர்களின் திருமணமும் முடிந்து இன்றோடு நான்கு மாதங்கள் கடந்திருக்க, தங்கள் திருமணம் நடந்ததற்கான காரணம் தன்னுடைய காதல்தான் என்று உணராமலே காதலித்தவனையே கரம்பற்றிவிட்ட பரவசத்தில் ஆழ்ந்திருக்கும் பெண்ணவள் வார்த்தைகளால் இல்லாவிடினும் அவனை கணவனாய் கரம்பிடித்த தினம்தொட்டு ஒவ்வொரு நொடியும் தன் மாசற்ற அன்பால் ஆணவனின் அகத்தை அழுங்காது கொய்யத் தொடங்கியிருந்தாள்.
வீட்டில் மூத்த ஆண்வாரிசாய் பொறுப்புகள் பல கொண்டு இருந்தவன் இதுவரை அவனுக்கென்று எதையும் யோசித்ததில்லை. ஏன் அவனுடைய அன்றாட தேவைகளுக்குகூட அன்னையின் உதவியை அதிகம் நாடாது அவனுடைய பணிகள் மொத்தம் அவனே செய்துகொள்ளும் பழக்கம் கொண்டவன் அவன்.
ஆனால் என்று மனைவியாய் பெண்ணின் கரம் பற்றினானோ அன்றிலிருந்து அவனது வாழ்க்கை மொத்தம் தலைகீழாய் மாறி இருந்ததோடு ஒரு பெண்ணின் அன்பு இத்துணை சுகமானதா என்ற ஆச்சரியத்தையும் அவனுள் விதைக்கத் தொடங்கியிருந்தாள் அவனின் மனையாள்.
இன்னும் கல்லூரியின் மேற்படிப்பைக்கூட முடித்திராத பெண்ணவளை அவன் சிறுபெண் என்று நினைத்திருக்க, அவளோ காலையில் எழுபவனுக்கு காபி கொடுப்பதுமுதல் அவனுக்கு குளிப்பதற்கு சுடுநீர் போட்டுகொடுத்து, குளித்து வருபவனிற்கு தலையைக்கூட துவட்டிவிடுகிறேன் என்று அலப்பறை செய்து, “இன்னிக்கு இது போடுங்க நவீத்தான்.” என்று உரிமையாய் உடைகளை எடுத்து தேய்த்து வைப்பது பின்பு அவன் வயிற்றை நிறைத்து வேலைக்கு அனுப்புவது. மதியம்கூட அழைப்புவிடுத்து வீட்டில்தான் சாப்பிடவேண்டும் என்று அன்புகட்டளைகள் விதித்து
அவனை மழலையாய் மாற்றி தன் மனதுக்குள் புதைத்துக்கொள்பவள்
இரவு உறங்கும்சமயமும், நடுவில் தலையணைகளை அடுக்கியபடியே அன்றைய நாள் அவனுக்கு எப்படிக்கழிந்தது என்று கேட்டு தன்னுடைய நாளின் நிகழ்வுகளையும் அவனோடு பகிர்ந்து காலம் முழுமைக்கும் ஒரு சிறந்த தோழியாகவும் நான் உனக்கு இருப்பேன் என்று நவீனின் நாட்களை இதுவரை இல்லாத அளவு அழகினும் அழகாய் மாற்றத் தொடங்கியிருந்தாள்.
ஆரம்பத்தில் சம்யு கொடுத்த ஏமாற்றத்தை எண்ணி மனைவியிடம் ஒதுங்கி இருந்தவன் அவனை கவனித்துக் கொள்வதற்காகவே கல்லூரிப் படிப்பைக்கூட பாதியில் நிறுத்தி விடுகிறேன் என்று நின்றவளின் ஈடில்லா அன்பில் தற்சமயம் தன்னையே இழக்கத் தொடங்கியிருந்தான் நவீன்.
வழக்கமான கிராமத்துப் பெண்ணாய் மணமானதும் படிப்பை விட்டுவிடுகிறேன் என்று சொன்னவளை எக்காரணம் கொண்டும் படிப்பை மட்டும் விடக்கூடாது என்று நவீன் கண்டிப்பாகக் கூறிவிடவும், கணவனின் கூற்றையும் வேதவாக்காய் ஏற்று தற்சமயம் கரஸ்ஸில் படிப்பைத் தொடர்ந்தபடி அவனையும் உயிர் உருக நேசித்துக்கொண்டு இருப்பவள்…
தன்னை மணந்து கொள்ளப்போகும் பெண் கடைசி நேரத்தில் அவனை வேண்டாம் என்று மறுத்தும் அவளிடம் சிறு சிறுமுகச் சுளிப்பைக்கூட காட்டாத, இதுநாள் வரை அவளைப்பற்றி ஒரு வார்த்தைகூட தவறாகப் பேசியிராத ஆடவனை தேவன் மகனாகத்தான் தன் நெஞ்சில் வடித்திருந்தாள் சந்தனா.
அவனைக் கண்ணால் கண்டாலே உள்ளும் புறமும் மகிழ்ந்து, “நவீத்தான்” என்று விழிகளில் வழியும் நேசத்தாலே அவனை வசியம் செய்பவளின் அருகாமையில் அனிச்சம்போல் குழையத் தொடங்கியிருப்பவனுக்கு இக்கணம் தன் மார்பில் துயில் கொண்டிருப்பவளை எழுப்ப துளியும் மனமில்லை என்றாலும் பெரியவர்களின் வார்த்தைகளுக்காக மட்டுமே மனைவி தன்னை மணந்து கொண்டதாய் எண்ணி இருப்பவன், அவளை அப்படியே இறுக அணைத்து நெஞ்சினுள்ளே அடைகாக்கச் சொல்லிய கரங்களையும் முயன்று அடக்கி பெண்ணின் செவிக்கருகில் மெல்லக்குனிந்து, “ஹேய் சந்தனாமா. கொஞ்சம் எழுந்திருக்கிறியா?” என்று கேட்க…
அதற்கு, “ம்ம்ம்” என்று லேசாக முனகியவளும் தன் கைக்குள் இருந்த கணவனின் தேகத்தை தலையணை என்று எண்ணி இருகையாலும் இன்னும் இறுக்கியவள், “ஏன்த்தான். எப்பவும் வாக்கிங் போயிட்டு வந்துதானே காபிகுடிப்பிங்க. நீங்க வாக்கிங் போய்ட்டு வாங்க நவீத்தான். நான் ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் தூங்கிட்டு
நீங்க வர்றதுக்குள்ள காபி போட்டர்றேன்” என்று நீளமாகப் பதிலுரைத்தாள்.
அவளின் இறுகிய அணைப்பிலும், பதிலிலும், “அய்யஹோ கொல்றாளே” என்று முனுமுனுத்துக் கொண்டவனோ,
“அஞ்சு நிமிஷம் இல்லை அரைமணி நேரம்கூட நீங்க தூங்கலாம் மேடம். ஆனா என்ன மட்டும் கொஞ்சம் விட்டிங்கன்னா நானும் எந்திருச்சு என் வேலையைப் பார்ப்பேன்ல” என்று சொன்னவனின் பேச்சில் ஏதோ புரிந்தவளாய் விழிகளை அகலத் திறந்தவள் அப்பொழுதான் தான் மஞ்சம் கொண்டிருப்பது கணவனின் நெஞ்சம் என்றும் உணர்ந்து,
அவள் எழுந்ததும் ஒரு பெருமூச்சை வெளியேற்றியபடி அவனும் எழுந்து அமர குற்றம் செய்த குழந்தையாய் அவனை கடைகண்ணால் ஏறிட்டவளோ, “அச்சோ… இன்னிக்கும் தூக்கத்துல என் பாடர கிராஸ் பண்ணி வந்துட்டேனா?… சாரி நவீத்தான்.” என்று இமைகளை கொட்டியவளைக் கண்டு அவன் உதடுகளோடு கண்களும் சிரித்தது.
“இன்னிக்கு மட்டுமில்ல சந்தனா நீ டெய்லியும் பாடர கிராஸ் பண்ணிட்டுதான் இருக்க” என்று தலையாட்டிச் சிரித்தவனின் சிரிப்பில் இவளும் அசடு வழிந்து சிரித்தவள், “இதுக்குத்தான் நான் பர்ஸ்ட்நைட் அன்னிக்கே கீழ படுக்க போனேன். ஆனா நீங்கதான் ரூம்மேட்னா பெட்டும் சேர் பண்ணிக்கலாம் தப்பில்லைனு சொல்லி மேலயே படுக்க சொன்னீங்க” என்று உதட்டைச் சுழித்துக் கொண்டவள், “நாளையிலிருந்து இன்னும் ரெண்டு தலைகாணி எக்ஸ்ட்ரா வச்சு சீனபெருஞ்சுவர பலமா கட்டிர்றேன்த்தான். அப்போதான் உங்கபக்கம் வராம இருப்பேன்” என்று உள்ளேபோன குரலில் சொல்ல…
அதைகேட்டு இன்னும் அகல மலர்ந்த இதழ்களோடு மேலும் விரிந்த ஆடவனின் விழிகளோ அங்கே படுக்கையை சுற்றிலும் விழுந்துகிடந்த பத்துக்கும் மேற்பட்ட தலையணையைப் பார்த்துவிட்டு அவளையும் புருவம் தூக்கிப் பார்த்தது.
தன்னை கட்டம்கட்டிச் சாய்க்கும் கணவனின் அந்தப்பார்வையே, ‘இன்னும் எத்துணை தலையணைகள் வைத்தாலும் அவை எல்லாமே காலையில் இப்படித்தான் கிடக்கும். நீயும் என்மேலேதான் கிடப்பாய்” என்று சொல்லாமல் சொன்னதில், “ம்ம்ம்… போங்க நவீத்தான். என்ன வார்ரதே உங்களுக்கு வேலையா போச்சு” என்று முகம் சிவந்தவளின் அதரங்கள் மலர்ந்து விரிந்தாலும்,
“இந்த தலையணைகளுக்கெல்லாம் இனிமேல் அவசியமில்லையடி பெண்ணே. என் நெஞ்சம் மட்டுமல்ல. உச்சிமுதல் பாதம்வரை நான் முற்றும் முழுதாகவே உனக்கானவடி” என்று ஆடவனின் இதழ்கள் உதிர்க்கும் அந்த நிமிடங்களுக்காக காத்துக் கிடந்தாள் பெண்ணவள்.
ஆனால் அவளவனோ, ‘சிறுவயதில் இருந்து ஒருத்தியை மனைவியாய் நினைத்துவிட்டு பெரியவர்களின் வார்த்தைக்காக மட்டுமே தன்னை மணம்புரிந்து கொண்ட, அவளின் தங்கையை இத்துணை சீக்கிரம் என்மனம் மனைவியாக எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்? ஆனால் அவள் அருகாமை அளவில்லா இதத்தையும் இன்பத்தையும் எனக்கு அளிக்கிறதே. இது எதனால்? அதே இன்பம் என்னருகில் அவளுக்கும் கிட்டுகிறதா? வெறும் கணவன் மனைவி என்ற பந்தம் மட்டுமே தங்கள் வாழ்வின் அடுத்த நிலைக்குப் போதுமானதாக இருக்குமா. அப்படியே கடமைக்காக வாழ்க்கையைத் தொடங்கினாலும் அது தங்களை காதலில் இணைக்குமா?’ என்றெல்லாம் பலவித குழப்பத்தில் தத்தளிக்கத் தொடங்கியிருந்தவன் பெண்ணவளின் காதல் அவனையும் தொற்றிக் கொண்டதை அறியாமல்தான் இருந்தான்.
வினாடிகள் பல இருவரும் அவரவர் சிந்தனைகளில் உலன்று இருக்க தீவிர யோசனையில் இருந்தவனின் முன்னே கையை ஆட்டிய பெண்ணோ, “நவீத்தான்… என்ன உக்காந்துட்டே தூங்குறீங்க. வாக்கிங் கிளம்பலையா?” என்று வினவினாள்.
அதற்கு அவனோ, ‘நைட்முழுசும் கைய கால தூக்கிப்போட்டு மனுசன தூங்கவிடாம பண்ணிட்டு பேச்சுமட்டும் நல்லா பேசுவடி’ என்று உள்ளூற சலித்துக்கொண்டவன்,
“ம்ம்ம்… நைட்டுல பாடரதாண்டி வந்த பச்சக்கிளிய பதமா பிடிச்சி அதோட கூட்டுல விடுறதுக்கே எனக்கு காலைல நேரமெல்லாம் போயிடுது. அப்றம் எங்கிட்டு நான் வாக்கிங் போறது. இன்னிக்கும் சித்தப்பா போயிட்டு ரிடர்னே வந்துருப்பாங்க சந்தனா” என்று சொன்னபடியே சுவரில் இருந்த கைக்கடிகாரத்தை சுட்டியவனின் வார்த்தைகளுக்கு மாறாக ஆடவனின் குரலிலோ அத்துணை குழைவு.
இருந்தும் அவன் வார்த்தைகள் கொடுத்த தாக்கத்தில், “என்னாலதான் நீங்க டெய்லியுமே வாக்கிங் போகமுடியாம போயிடுதுல நவீத்தான். சாரித்தான். சாரித்தான். இனிமேல் தூங்கப்போறமுன்னாடியே கையகால அட்டென்ஷன்ல வச்சி முருகன வேண்டிகிட்டு தூங்குறேன்த்தான்” என்று அவன் கையைப்பற்றி தலையாட்டி சொன்னவளைக் கண்டு…
‘கடவுளே…. என்ன இது… என்ன ஏன் இப்டி சோதிக்கிற? இப்போல்லாம் இவ பக்கத்துல வந்தாலே ஏதேதோ எண்ணமெல்லாம் தோணுதே. ஆனா அவ நான் பச்சைக்கிளின்னு கொஞ்சனதுகூட புரியாம சின்னபுள்ளயா இருக்காளே.
இவ அக்காவ பாக்குறப்போகூட எனக்கு இப்டிலாம் தோணுனதே இல்லையே. ஆனா இவளோட சின்னூண்டு கண்ணும், குருவிபோல வாயும், அது என்ன நவீத்தான்னு கூப்பிடுறதும் என்ன என்னென்னவோ பண்ணுதே’ என்று மேலும் புலம்பியவன்…
“ம்ம்ம்… சரி சரி… உன்னோட அந்த சீனப்பெருஞ்சுவர் என்ன பாடுபடப் போகுதுன்னு நாளைக்கு பாக்கலாம்” என்று மட்டும் கூறிவிட்டு விரைந்து சென்று குளியலறைக்குள் நுழைந்தவன் சவருக்கடியில் நின்று கொண்டான்.
அவன் ஓடோடிச் செல்வதைப் பார்த்தவளும் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றிவிட்டு,
‘நானும்… பாடர், சீனப்பெருஞ்சுவர்னு எவ்ளோ இறங்கிவர்றேன். குறைஞ்சபட்சம் அந்த பாடர் வேணாம்டி பச்சக்கிளின்னு சொல்லக்கூட உங்களுக்கு இன்னும் மனசுவரலியா? நவீத்தான்’ என்று சோர்வாகவே எழுந்து கொண்டவள் அடுத்துவந்த மணித்துளிகளை அவனின் தர்மப் பத்தினியாய் கழித்து அவனைத் தொடர்ந்து அவளும் குளித்து முடித்துக் கீழேவர…
அவர்களுக்காக காத்திருந்தனர் காயுவும் மலரும்.
வழக்கத்தைவிட இன்று சற்று தாமதமாகிவிட்டதால் அகல எட்டுக்களை வைத்து கணவனோடு நடந்துவந்த சந்தனா கடைசிப்படியில் கால்வைத்த நொடி புடவைதட்டி விழப்போனவளை, “ஹேய் பாத்து சந்தனாமா” என்று தாங்கிப்பிடித்த நவீனோ, “அடி ஏதும் படுச்சாடா?” என்று பிடித்த கையை விடாமலே உணவுமேசை வரை அழைத்து வந்தவனின் முகத்தையும், “இல்லத்தான் அடிலாம் படல” என்று அவனை ஒட்டியவாறே நடந்துவந்த சந்தனாவையும் தலைமுதல் கால்வரை ஆராய்ந்து, ‘இவ்ளோ லேட்டா எழுந்து வருதுகளே. இன்னிக்காச்சும் நடக்கவேண்டியது நடுத்துருக்குமா?’ என்று அன்னையாய் மகனின் மகிழ்ச்சியை அறியமுற்பட்டது காயுவின் கண்கள்.
ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா என்பதுபோல் இரு அன்னைகளைப் பார்த்ததும் மனைவியின் கையை சட்டென்று விட்டவன், “சித்தப்பா, பேக்டரிக்குப் போய்ட்டாங்களா சித்தி?” என்று தங்களையே பார்த்திருந்த மலரிடம் வினவியபடியே உணவுன்ன அமர்ந்தான்.
அவன் சந்தனாவின் கையை விட்டதின் காரணம் கூச்சமாக இருந்தாலும் திருமணம் முடிந்த மாறுமாதமே மழலையின் வரவை அறிவிப்பதுதான் ஒரு திருமணத்தின் வெற்றியாக எண்ணியிருக்கும் காயுவோ மகனின் அந்தச்செயலில்,
‘என் மருமக… என் மகனுக்கு வாக்கப்படுவான்னு சின்னபுள்ளையிலிருந்து அவள நான் எப்படியெல்லாம் சீராட்டி வளத்தேன். ஆனா கொஞ்சம்கூட அந்த நன்றியில்லாம என் மகன் வாழ்க்கையவே வீணாக்கிட்டுப் போய்ட்டாளே அந்த யுக்தா. அவள்ளாம் நல்லா இருப்பாளா? இவன் எப்ப அவள மறந்து இவள ஏத்துக்கிட்டு நான் எப்போ என் பேரப்புள்ளைய கொஞ்சுவேனோ?’ என்று தங்கையின் முன் வெளிப்படையாகக்கூட ஆதங்கப்பட முடியாது உள்ளூற புலம்பிக்கொண்டவள் சட்டென்று சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டாள் காயத்ரி.
தமக்கையின் வருத்தம் மலருக்கும் புரிந்திருந்தாலும் இந்த உலகத்தில் எதுவும் நம்மால் முடிவு செய்யப்படுவதில்லையே அனைத்தும் கடவுளின் சித்தம்தானே, நம் வாழ்வில் நடக்கின்ற ஒவ்வொன்றிற்கும் காரண காரியங்களும் கால நேரங்களும் இருக்கிறதே என்று வாளாவிருந்து விட்டவள் தமக்கை மகனின் கேள்விக்கு, “ஆமா நவீமா ஏதோ ஆடிட்டிங் இருக்குன்னு சீக்கிரம் போய்ட்டாக. உன்னையும் எழுந்ததும் வரச்சொன்னாக” என்று சொல்லிவிட்டு காலை உணவுக்கான தட்டை வைத்தவளிடம், “குடுங்க அத்த நான் பரிமாருறேன்” என்று பாத்திரத்தை வாங்கிக் கொண்டாள் அவன் இணையாள்.
அதன்பின் இருவருமே சுற்றம் மறந்து போனவர்களாய் அவன் போதும் போதும் மட்டும் பெண்ணவள் பரிமாற, அவன் வேணாம் வேணாம் என்று சொல்லிக்கொண்டே அவள் வைத்ததெல்லாம் சாப்பிட என்று அழுங்காது அரங்கேறிய அழகான காதல் காட்சியைப்பார்த்து பெரிதான உறுத்தலில் இருந்த மலருக்கும் சற்று இதமாக இருந்தது.
ஒருவழியாக காலை உணவை உண்டு முடித்த நவீன் சமையல் அறைக்குள் எட்டிப்பார்த்து அன்னையிடம் சொல்லிக்கொண்டு மனைவியிடமும் அழகான நகை ஒன்றை உதிர்த்துவிட்டு வெளியேறியவன், அவள் என்ன அடக்க முயன்றும் தன் மகன் தன்னோடு இல்லையே என்ற ஏக்கம் விழிகளில் அப்பட்டமாக வழிய நின்றிருந்த சிற்றன்னையை நெருங்கி,
“ஏன் சித்தி முகம் டல்லாஇருக்கு. ப்ரித்வி நெனச்சு பீல் பண்றிங்களா?” என்று அவள் கரத்தினை பற்றிக்கொண்டான்.
தன் வயிற்றில் பிறக்காது போனாலும் தன்மூத்த புதல்வனாகவே தன்மேல் அன்பு செலுத்தும் அந்த அன்பனை வாஞ்சையாகப் பார்த்தவளும்,
“அவனும் யுக்தாவ கூட்டிட்டு
வரமாட்டிறான். நம்மையும் பண்ணை வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டானே. அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு நவீமா” என்று கணவனிடம்கூட வெளிகாட்ட முடியாத வருத்தத்தை தமக்கைமகனின் கரத்தில் கொட்டியவளை, “சீக்கிரம் எல்லாம் சரியாகும் சித்தி. கவலைப்படாதீங்க” என்று அணைத்து ஆறுதல் படுத்தியவன், “இந்த மாசத்துல யுக்தாக்கு பிறந்தநாள் வருதுல்ல. அன்னிக்கு நாம எல்லாரும் சர்ப்ரைஸா போய் ரெண்டு பேரையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம். நீங்க சித்தப்பாவ மட்டும் கன்வின்ஸ் பண்ணுங்க. சரியாசித்தி” என்று அன்றைய பொழுதில் நடக்கப்போவதை அறியாமலே சிற்றன்னையை தேற்றிவிட்டு தன் வாகனத்தில் ஏறி புறப்பட்டான் நவீன்.