பனிநிலவின் ஆளுமை முடிந்து பகலவனின் வெம்மை கதிர்கள் பூமியை ஆக்கிரமிக்கத் தொடங்கிய வைகறை வேலையிலே விழிப்புத் தட்டிவிட்டாலும் அன்று ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் செல்லும் அவசியம் இல்லாததால் சற்று சோம்பல் பீடித்ததைப்போல் படுக்கையைவிட்டு எழமனமில்லாது புரண்டு படுத்தவளின் சிந்தையை வழக்கம்போல் அவளவனின் புன்னகை முகம் தாமாக வந்து தழுவிக்கொண்டது.
கூடவே கடந்தநாட்களில் அவன் அன்பில் உருகிக்கரைந்து, வார்த்தைகளாய் இருந்த உரையாடல்கள் வரிகளாய் மாறி மீண்டும் தங்கள் பழைய நெருக்கத்தை மீட்டு எடுக்கத் தொடங்கிய தருணங்களும் அவள் கண்முன் விரிந்து பாவையவளின் அதரங்களையும் தன்னாலே மலர வைத்தது.
அவனைப் பற்றிய சிந்தனை தோன்றியதுமே சட்டென்று தன் அலைபேசியை எடுத்து அதில் சிரித்துக்கொண்டிருந்த ஆடவனின் நிழற்படத்தை கண்களால் வருடியவள்,
கூடவே இதழ்களாலும் நெருடச் சொன்ன உள்ளமதை, “ம்ஹும்…” என்று முறைத்து அடக்கிவிட்டு,
“இப்போல்லாம் அடிக்கடி இப்டி தோணுது. யுகி யுகின்னு குழைஞ்சே என்ன ஒரு வழியாக்கிட்டிருக்கான். கிடைச்சதே சாக்குன்னு அன்னிக்கு எப்டி அலேக்கா தூக்கிட்டான் பொறுக்கி” என்று வார்த்தையில் இருந்த சினத்திற்கு மாறாக நாணப் புன்னகையோடே அலைபேசியை தூர வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தவள், அறை முழுதிலும் பலவித வண்ணங்களில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகளைப் பார்த்து சிலநொடிகள் மூச்சுவிடவே மறந்துவிட்டாள்.
கூடவே அறையின் மூலையில் கண்ணாடி மேசைமேல் இருந்த பெரிய பரிசுப் பேழையையும் பார்த்து வேகமாக அதை சமீபித்து கண்கள் மின்ன அதை விரித்துப் பார்த்தவள் அதில் இருந்த பரிசைக்கண்டு மேலும் திகைத்தாள்.
சுற்றி ஆறு பச்சைக்கற்களும் நடுவில் மட்டும் ஒரு சிவப்புக்கல்லும் பதித்த அழகிய வைர மூக்குத்தி ஒன்று அந்த பரிசுப் பேழையினுள் நாகத்தின் மாணிக்கமாய் கண்ணைப்பறிக்க அதனோடு, “அத்தைக்கு பிறந்தவளுக்கு. ஆளாகி நின்றவளுக்கு. பருவம் சுமந்துவந்து என்னை பாடாய் படுத்தும் இனிய அன்பிற்கு உன் அன்பனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று முத்துமுத்தான கையெழுத்தில் கிறுக்கப்பட்ட சிறுகாகிதம் ஒன்றும் இருந்தது.
இத்துணை மெழுகுவர்த்திகளுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த பரிசு பேழையை பார்த்தவுடனே அது தன்னவனின் செயல்தான் என்று கண்டு கொண்டவளுக்கு உள்ளே இருந்த பிறந்தநாள் வாழ்த்தோடு பரிசையும் பார்த்தபின்பே
இன்று தன் பிறந்தநாள் அல்லவா என்றும் உணர்ந்து அவள் இதழ்கள் தன்னாலே மலர்ந்து விரிந்தது.
விபரம் அறிந்தகாலம் தொட்டு அவள் பிறந்தநாளின் விடியல்கள் எல்லாம் ஆடவனின் பரிசுகளிலும் வாழ்த்துக்களிலும் தானே தொடங்கும். அவள் சார்ந்த விஷயங்களை அவளே மறந்தாலும் அவன் என்றாகிலும் மறக்கக்கூடுமோ என்ற எண்ணத்தில் உள்ளம் மலர உருகி நின்றாள் சம்யுக்தா.
அவள் அவன் மேல் கொண்ட கோபத்தில் இரண்டு வருடங்கள் அவளைப் பிரிந்து சென்னையில் இருந்த பொழுதுகள் கூட அவள் அன்னையின் மூலமாகவே அவனின் முதல்பரிசை வழங்கி இருந்தவனின் அன்பை அசைப்போட்டு நின்றவளின் செவியில், “நான் எப்பவும் உன்னோட திவாடி” என்ற ஆணின் வார்த்தைகளே ரீங்காரமிட்டது.
முன்பிருந்த அன்பிற்கு இம்மியும் மாறாது சொல்லப்போனால் இக்கணம் தோழனோடு காதல்கணவனின் உரிமையும் சேர்ந்து அவன் அவளுக்கென்று அளித்த பிறந்தநாள் பரிசான ஏழுகல் மூக்குத்தியை முன்னும்பின்னும் திருப்பிப்பார்த்து ரசித்தபடி நின்றவளை திறந்திருந்த கதவின் வழியாக வரவேற்பரையில் தெரிந்த மெழுகுவத்தி வெளிச்சம் கவனம் ஈர்க்க…
வேகமாக ஓடி அறையை விட்டு வெளியேறியவளை வரவேற்றது அங்கிருந்த மேசையின்மீது வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பரிசுப்பேழை.
அவளது அறைக்குள் மட்டுமல்லாது அந்த வரவேற்பறை முழுதிலும்கூட மெழுகுவர்த்தியால் நிறைத்து பகல் நட்சத்திரங்களை உருவாக்கியிருந்தவன் அங்கிருந்த இன்னொரு பரிசுப் பேழைக்குள் அவளுக்காகவே அளவெடுத்துச் செய்யப்பட்டதுபோல் பச்சையிலும் சிவப்பிலும் எனாமல்கள் வரைந்த தங்கத்தால் ஆன கழுத்தணி, காதணிகளோடு ஒரு ஜோடி வளையல்களையும் அடக்கி, “உலகமூச்சை முதன்முதலில் சுவாசிக்கும் பொழுதே உன் மூச்சையும் சேர்த்தே கொடுத்து காலமெல்லாம் என் மூச்சோடே நிறைந்துவிட்ட என் நேசப்புறாவிற்கு உன் நேசனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று வரையப்பட்டிருந்த வரிகளைக் கண்டு, “திவா என்னடா இது ஒரு பிறந்தநாள்குபோய் எதுக்கு இவ்ளோ வாங்கியிருக்க?. என்னென்னவோ கிறுக்கிவேற வச்சுருக்க?” என்ற பெண்ணின் நீள நயனங்கள் ஆச்சரியத்தோடு மகிழ்ச்சியிலும் சாசராய் விரிந்து அவளவனையும் தேடியது.
ஆனால் பெண்ணவள் தேடும் ஆடவன் அங்குமட்டுமில்லாது சமையர்கட்டு, பின்கட்டிலும்கூட இல்லாது போகவும் அவன் கொடுத்த பரிசுகளைச் சுமந்தபடியே, அவன் அறையை நெருங்கி, “திவா…” என்று கதவைத்தட்டியவளுக்கு பதில் வார்த்தைகள் இல்லாததால் நொடிநேர தயக்கத்திற்குப் பின்னேயே மெல்ல அவனது அறைக்குள் நுழைந்தவளை மீண்டும் வரவேற்றது அங்கே படுக்கையில் இருந்த பெரியதோர் பரிசுப்பெட்டகம்.
பண்ணை வீட்டிற்கு வந்த தினம் தொட்டே அவன்மேல் உள்ள கோபத்தில் அவன் அறைக்குள் எட்டிக்கூட பார்த்திராதவள் தற்சமயம் அவன் படுக்கையிலும் ஒரு பரிசுப்பேழையை கண்டவுடன் துள்ளி குதிக்கும் மானாய் ஓடி அதையும் பிரித்துப்பார்த்தாள்.
அதனுள்ளோ மிளகாய்ப்பபழ வண்ண ஜார்ஜெட் புடவையில், வெள்ளைநிறக் கற்களாலே பெரிய பெரிய ரோஜாக்கள் வரைந்து அதனுள் பச்சைவண்ண ஜர்தோசி மற்றும் குந்தன் வேளைப்பாடுகள் செய்யப்பட்ட டிசைனர் புடவையும் அதற்குத்தோதான மேல்அங்கியும், உள்ளாடைகள் சகிதம் இருக்க, “இவ்ளோ வெய்ட்ல ஒரு புடவையா? இது புடவையா இல்லை வேற ஏதுமா இப்டி கண்ணை பறிக்குது!” என்று கையிலிருந்த நகைகளுக்கு போட்டியாக மின்னிய அந்தப் புடவையை ஆச்சர்யமாக வெளியே எடுத்தவள் அதன் அடியில் இருந்த உள்ளாடைகளைக் கண்டு, “அச்சோ என்ன இதெல்லாம் வாங்கி வச்சுருக்கான். அதுவும் நா யூஸ்பண்ற அதே பிராண்ட்ல. இதெல்லாம் எப்படித்தான் தெரிஞ்சிகிட்டானோ?” என்று நொடியில் முகமெல்லாம் குங்குமாய் சிவப்பேறி,
உதட்டைக்கடித்தபடியே அதனோடு இருந்த கடிதத்தையும் படித்தாள் பாவை.
அதிலோ, “இதழ்கள் வேண்டுமானால் முத்தமிட இடைவெளியைக் கேட்கலாம். ஆனால் நம் இதயங்கள் நம் இடைவெளியை ஏற்குமாயின் அதன் நிறுத்தத்தையும் ஏற்கநேரும் என்று அறிந்தும் அவ்விடைவெளியை நீடித்திருக்கும் என் இதயத்தாமரைக்கு உன் இதயமானவனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று இருந்த வார்த்தைகளைப் படித்ததும்,
“திவா இல்லடா…” என்று
அவளையும் அறியாது அவள் கண்ணில் இருந்து கண்ணீர்த்துளிகள் இறங்க ஆரம்பித்தது.
எத்துணை நொடிகள் என்று தெரியாமலே, ‘அவன் கூறியது போல் இதயத்தையே இரண்டாக்கும் இப்பிரிவு தங்களுக்குள் ஏன் வந்தது. இதைப்போக்கும் நிலையில் தான் இருந்தும் ஏன் அதைச் செய்யாது என்னோடு சேர்த்து அவனையும் வதைத்துக் கொண்டிருக்கிறேன். உள்ளம் ஒன்று பட்டுப்போனப்பின் பத்துமாத வயது வித்தியாசம் அத்துணை பெரிய தவறா? அதற்காக அவனை விலக்கி வைத்திருப்பதும் முறையா?’ என்ற பலவித ஆற்றாமையோடு. அவன் அவளுக்கென்று வாங்கி வைத்திருந்த பரிசுகளை எல்லாம் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நின்றவள்
குளியல் அறை திறக்கப்படும் சப்தத்தில்தான் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
பெண்ணவள் தன்னறையில் நிற்பாள் என்று சிறிதும் எண்ணியிராததால் குளித்து முடித்து வெளியேறியவன் குனிந்தவாக்கிலே தலையைத் துவட்டியவாறு நான்கெட்டில் இருந்த படுக்கையை நெருங்கிவிட்டிருக்க அவளை தொட்டுவிடும் தூரம் வந்தப்பின்னேயே நிமிர்ந்து அவளைக்கண்டவன் நொடியில் சுதாரித்து விலகி நின்றான்.
அவன் கையெட்டும் தூரத்திலே நின்று விட்டாலும் அவன்மேல் மோதி விடுவோமோ என்று எண்ணி பின்னே நகர்ந்தவள் கட்டிலில் மோதி விழப்போக, அவள் விழப்போவதை யூகித்த ஆடவனின் வலக்கரமோ தன்னிச்சையாகவே நீண்டு நொடியில் அவள் இடைவளைத்து தன்னோடு சேர்த்து நிறுத்தியிருந்தது.
நொடிநேரத்தில் நிகழ்ந்த எதிர்பாரா அணைப்பில் நிமிடங்கள் பல தங்களை மறந்து நின்றவர்களின் விழிகள் நான்கும் விலக்க முடியாது பிணைந்து கொள்ள, அவன் மார்பளவு மட்டுமே இருந்தவளை மாரோடு அணைத்து நின்றிருந்தவனின் பிடியில் எந்தவிகல்பமும் இல்லாது அவள் விழுந்து விடக்கூடாதே என்ற அக்கறையை மட்டுமே உணர்ந்தவளோ ஆணவனின் அணைப்பிலே காலம் முழுதும் தொலைத்து விடமாட்டோமா என்று ஏங்கியவள்போல் அவனை விட்டு விலகும் எண்ணமே இல்லாது அவன் மார்பிலே முகம் புதைத்து அவன் கைவளைவுக்குள்ளேயே கட்டுண்டு நின்றாள்.
அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்திருந்த ஆறடி ஆணவனின் மேனி கதகதப்பிலும் அவன் அணைப்பின் இறுக்கத்திலும் ஆழிபோன்ற நேசத்தோடு அளவில்லா பாதுகாப்பையும் உணர்ந்த பெண்ணவளுக்கு விலகும் எண்ணம் சிறிதும் இல்லாது போனாலும் அவள் விழக்கூடாது என்பதற்காகவே அவளை அணைத்து இருந்தவனோ ஒருகட்டத்தில் தன்னிலை அடைந்து, தன்னில் இருந்து அவளை விலக்கி நிறுத்தியவன் “யுகி ஆர் யூ ஓகே?” என்று வினவ, ஆடவனின் கேள்விக்கு பதில்கூறும் நிலையில் பெண்ணவள் இருந்தால் தானே.
பிறந்ததில் இருந்தே நிலவும் வானுமாய் வளர்ந்தவர்களின் உறவில், அத்துணை நெருக்கத்தில் அப்படி ஒருகோலத்தில் அவனை முதல்முறையாகப் பார்க்கிறாள் என்றெல்லாம் சொல்ல முடியாதுதான்.
சொல்லப்போனால் அரைகுறையாய் குளித்துக் கொண்டிருப்பவனுக்கு துவாலை எடுத்து கொடுப்பதும், குளித்து முடித்து வந்தவனிற்கு தலையை துவட்டி விடுவதும்கூட அவர்கள் உறவில் சகஜமான நிகழ்வுதான்.
ஆனால் அப்பொழுதுகளில் எல்லாம் பெண்ணின் கண்ணைத்தாண்டி கருத்தைக்கூட கவர்ந்திராத ஆடவனின் விம்மித் திரண்டிருந்த முறுக்கேறிய புஜங்களோ முன்பு எப்பொழுதோ படித்த கழுகினங்களின் அரசனான ராஜாளிக்கழுகின் இறக்கைகைகளை தற்சமயம் பெண்ணவளுக்கு ஞாபகம் செய்ய, லேசான ரோமக்கற்றைகள் படர்ந்து பறந்து விரிந்திருந்த ஆணவனின் வெற்றுமார்போ மழலைகள் கூடிக்கழிக்கும் விளையாட்டுத் திடலாய் காட்சி தந்து பெண்ணின் விழிகளை வசியம் செய்தது.
அதற்கும் கீழே வரிசையாக செதுக்கி வைத்தார்போல்
இருந்த படிக்கட்டுத்தேகமதோ, ‘இதுக்குத்தான் அந்த தம்பில்ஸ்ஸ போட்டு அப்டி சுத்திருப்பான்போல’ என்று அவள் அவ்வப்பொழுது கண்டிருந்த அவனின் உடற்பயிற்சி நேரங்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
அவன் அழைத்ததைக்கூட கருத்தில் கொள்ளாது, ‘ஒரு ஆணின் தேகம்கூட இத்துணை கவர்ச்சியாக இருக்கக் கூடுமா? அடுக்கிவச்ச செங்கல்போல திட்டு திட்டா உடம்ப வச்சிருக்கானே அது தொட்டுப்பாக்கவும் செங்கல்மாதிரி ஹார்டாதான் இருக்குமா? இல்லையே கொஞ்சம் முன்ன நான் சாஞ்சு நின்னப்போ பஞ்சுபோல என்ன தாங்குச்சே’ என்றெல்லாம் எங்கெங்கோ பயணித்த எண்ணத்தில் விழி விரித்து நின்றிருந்தவளின் கரங்களில் இருந்த பரிசுப்பொருட்களைக் கண்டே அவள் வருகைக்கான காரணத்தை ஊகித்துக் கொண்டவன்,
“யுகி கிப்ட் எல்லாம் நீயே எடுத்துட்டியா? நான் குளிச்சுட்டு வந்து உன்ன சர்ப்ரைஸ் பண்லாம்னு இருந்தேன்” என்று அவள் முகத்தின் முன்னே கையாட்டி வினவினான்.
அவனின் நீண்ட கேள்விக்குப் பின்னரே ஒரு வழியாய் தன்னிலை அடைந்தவள், ‘ச்சே என்ன காரியம் பண்ணிட்டு இருக்கோம்?’ என்று சட்டென்று அவனின் நின்றும் பார்வையை விலக்கி, “ம்ம்ம் ம்ம்ம் இன்னிக்கு இயர்லியாவே முழிப்பு வந்துடுச்சி. நானே கிப்ட் எல்லாம் பாத்துட்டேன் திவா. பாத்த பின்ன நீயா தருவன்னு வெயிட் பண்ண முடியாம நானே பிரிச்சுட்டேன்” என்றும் திக்கித்திணறிக் கூறியவளின் தடுமாற்றத்தைத் தவறாகப் புரிந்து கொண்டவனோ, “அதுக்கென்ன பப்ளி. எல்லாம் உனக்காக வாங்குனதுதானே. எல்லாத்தையும் நீ அக்சப்ட் பண்ணிகிட்டாலே எனக்கு ரொம்ப சந்தோசம்டி” என்றவன்
“பிடிச்சிருக்கா? கட்டிக்கிறியா?” என்றும் கேட்க…
அதில் சற்றுமுன் இருந்தநிலை ஞாபகம் வந்து குப்பென்று முகம் சிவந்தவளோ, “எது… எது… யாரக் கட்டிக்கனும்?” என்று மேலும் திணறினாள்.
அதில் அவளை குழப்பமாய் பார்த்தவனும், “சேரிதான் கன்னுகுட்டி., ஜ்வெல்ஸ், அப்றம் அந்த மூக்குத்தி. நீ இதுவரை ஒருகல் வச்சதுதான போட்டிருக்க. ஆனா இதப்பாத்ததும் உன் மூக்குக்குன்னே செஞ்சபோல தோணுச்சு. அதான் வாங்கிட்டேன்” என்று நிறுத்தியவன் மீண்டும்,
“பிடிச்சிருக்கா?” என்று வினவ…
அவளுக்கோ, “பிடிச்சிருக்குடா.
நீ கொடுத்த கிப்ட் மட்டுமில்ல. இப்போல்லாம் உன்னையும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கிதுடா. நீ கொடுத்த சேரி மட்டுமில்ல உன்னையும்…” என்று தன் எண்ணம் செல்லும் பாதையைக்கண்டு அதிர்ந்து விழித்தவள் இனியும் இங்கு நிற்பது சரியில்லை என்று எண்ணி, “எல்லாம் நல்லாயிருக்கு திவா. ரொம்ப தாங்க்ஸ்” என்று மட்டும் கூறிவிட்டு வாசல் நோக்கி எட்டுவைத்தாள்.
அதற்குள் அவள் முன்னே வந்து கையை விரித்து வழியை மறித்து நின்றவனோ, “அப்போ இன்னிக்கு நான் வாங்குன எல்லாத்தையும் போட்டுக்கறியா பப்ளி? பர்த்டே செலிப்ரேசனுக்கு” என்றும் கண்ணில் ஒரு ஏக்கத்தோடு கேட்க…
அவளுக்கோ, “நான் எல்லாத்தையும் போடுறது இருக்கட்டும். நீ மொதோ போய் சட்டையப் போடுடா.” என்று எக்கி அவன் தலையில் ஒரு குட்டு வைக்க வேண்டும்போல இருந்தது.
அவள் சற்றே அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் வெறுமனே இடையில் கட்டிய துவாலையோடு தன்முன்னே கைவிரித்து நின்றவனைக்கண்டு, ‘ஆள்தான் பனைமரம் மாதிரி வளந்துருக்கானே ஒழிய ஒரு பொம்பளப்புள்ள முன்னாடி இப்டி நிக்கிறோமேன்னு கொஞ்சமாச்சும் கூச்சம் இருக்கா? ஏதோ குஸ்தி போட்டிக்கு போறபோல நெஞ்சை நிமித்திட்டு நிக்கிறான். ஆனா எனக்கு ஏன் இப்டி அவன பாக்க இன்னிக்கு இவ்ளோ கூச்சமா இருக்கு?’ என்று பல்லைக்கடித்து அவன் முகத்தை ஏறிட்டவளுக்கு ஆடவனின் விழிகள் கொட்டிய நேசத்தில் தன் விழிகளை தழைக்க இயலாதவள் அவளையும் அறியாது அவன் கேட்டதற்கு சரி என்று தன்னியல்பாய் கூறிவிட்டு தனதறைக்கு வந்து சேர்ந்தவள் அடுத்த ஒருமணி நேரத்தில் குளித்து முடித்து அவன் கொடுத்தவைகள் எல்லாம் நேர்த்தியாக அணிந்து கொண்டு அறையைவிட்டு வெளியேறினாள்.
அவளைத் தன் அறையில் பார்ப்பதற்கு முன்னர்வரை அவள் தன் பரிசுகளை எல்லாம் ஏற்பாளோ, அல்லது முதல் இரவில் பால் சொம்பை வீசியதுபோல் அனைத்தும் முகத்தில் விட்டெறியப் போகிறாளோ என்று கலங்கி இருந்தவனின் கற்பனைகளுக்கெல்லாம் எட்டா வகையில் அவள் ஆயத்தமாகி வெளியேறிவர…
ஐந்து நட்சத்திர விடுதியை விடவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த வரவேற்பறையின் நாலுமூளையிலும் பொருத்தப்பட்டிருந்த ஹோம் தியேட்டரில்…
“என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்”
என்று அவளின் ஆஸ்தான இசையமைப்பாளரின் பாடல்வரிகள் ஒலித்துக்கொண்டிருந்தது.
அவன் அவளுக்காக தேடித்தேடி வாங்கிய மிளகாய்ப்பழ வண்ண டிசைனர் புடவையிலும், அதற்குத் தோதான அணிமணிகளிலும் அந்த வெண்ணிலவையே தோற்கடிக்கும் அழகுடன் தனை நோக்கி நடந்து வந்த மனைவியைக் கண்டு
ஆடவனின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.
அப்பொழுதுதான் குளித்திருந்ததால் பின்னலிடாதுவிட்ட குழல்கற்றைகள் அவள் பிறைநெற்றியில் மையம் கொண்டிருக்க, அதன் நடுவில் அவள் புதிதாக இடத்தொடங்கியிருக்கும் நெற்றித்திலகமும்… அதன் கீழே வில்லாய்வளைந்த புருவங்களும், அதன் மத்தியில் சிவப்பு வண்ணத்தில் வெள்ளைகற்கள் பதித்த நெற்றிப்பொட்டும் அவள் பேரழகி என்று கட்டியம்கூற,
அதற்கும்கீழே கோழிக்குண்டாய் உருண்ட விழிகளும் அத்தோடு இணைந்த கத்திமுனை நாசியும் அதில் தற்சமயம் வீற்றிருந்த அவன் வாங்கிக்கொடுத்த பச்சைக்கல் மூக்குத்தியும், ஆடவனின் விழிகளோடு உள்ளத்தையும் வசியம் செய்து அவன் இதயத்துடிப்பை அதிகமாக்கியது.
“என்ன இன்னிக்கு இவ்ளோ அழகா இருக்கா. அவளை விட்டு கண்ண எடுக்கவே முடியலியே” என்று இதற்கே மூச்சுமுட்டிப்போன ஆடவனை பப்பாளிபழம் போல் செதுக்கி வைத்த கன்னங்களும், செர்ரிப்பழமாய் சிவந்த சின்னஞ்சிறு இதழ்கள் அவனைக்கண்டதும் லேசாகப்பிரிந்து புன்னகைத்ததும் அவனை எச்சில்கூட்டி விழுங்கவைக்க, அதில் பின்னந்தலையைக் கோதிக்கொண்டே
சட்டென்று பார்வையை மாற்றிக்கொண்டவனின் கண்ணில் அவன் கட்டிய மாங்கல்யம் பட்டநொடி
பெண்ணவளின் மார்பைத் தாண்டித் தொங்கும் மஞ்சள் மணம் மாறாத மாங்கல்யத்தைக் கண்டதும் இவள் என்னவள், எனக்கே எனக்கானவள் என்ற புதுவித உணர்வு உயர் வேகத்தில் அவன் மேனியெங்கும் பரவிய சமயம்…
“இளையவளின் இடையொரு நூலகம்…
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்…
இடைவெளி எதற்கு சொல் நமக்கு…
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன…
என்னைத் தீண்டக் கூடாதென
வானோடு சொல்லாது வங்கக்கடல்…
என்னை ஏந்தக் கூடாதென…
கையோடு சொல்லாது புல்லாங்குழல்…
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே…
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே…
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே…
உனைவிட வேறு நினைவுகள் ஏது…”
என்று பாடலின் வரிகளும் மாறி ஒலிக்க அதைக்கேட்டப்படியே அவனை நெருங்கி நின்றவளின் விழிகளும் சொல்லொணாத உணர்வுக்குவியலாய் மாறி
ஆடவனைச் சூழ, அதில் மேலும் பித்துக்குளியாகியவன்,
“யுகி யுகி யூ லுக் கார்ஜியஸ்டி. இந்த புடவைல செம்ம அழகாஇருக்க. அதும் இந்த மூக்குத்தி நான் நெனச்சதவிட உனக்கு ரொம்ப எடுப்பா இருக்குடி” என்று குழைந்த குரலில் கூறியவன்,
பெண்ணின் கோபம்கருதி இத்துணை நாள் கட்டிக்காத்த கட்டுப்பாடுகளையும் மீறி அவளை பார்வையாலே பருகத் தொடங்கியிருந்தான் ப்ரித்திவ்ராஜ்.
பின்னணி இசையும், மகிழ்ச்சியான மனநிலையும் சேர்ந்து அத்துணைநேரமும் அவள் புடவைக்குப் பொருத்தமான வண்ணத்தில் அவன் அணித்திருந்த வேஷ்டிசட்டை உடையில் நின்றவனின் கம்பீர அழகை ஓரக்கண்ணால் ரசித்தபடி இருந்தவள் அவனின் வெளிப்படையான பாராட்டிலும், அடிமுதல் நுனிவரை இனம் விளங்கா சிலிர்ப்பை உண்டாக்கும் ஆடவனின் பார்வைவீச்சையும் தாங்கஇயலாது
விழிகளைத் தழைத்துக்கொள்ள, பெண்ணின் அந்த நாணமோ ஆடவனின் ஆணிவேரையே ஆட்டம்காண வைத்தது.
நிமிடங்கள் பல எதற்கு பார்க்கிறோம் என்றே அறியாது ஒருவர் பாராத பொழுது ஒருவர் அடுத்தவரை பார்ப்பதும், அப்படிப் பார்க்கும்பொழுது அடுத்தவர் விழிகளைச் சந்திக்க நேர்ந்தால் சட்டென்று பார்வையை தழைத்து கொள்வதுமாய் மொழியால் உரைக்க முடியாததை விழியால் உணர்த்த முயன்று கண்ணாமூச்சி ஆடினர் அந்த காதல்புறாக்கள்.
இத்துணை வருடங்களாய் நண்பர்கள்போல் இருந்தவர்களுக்கு மத்தியில் எத்துணையோ செல்லச் சண்டைகள், மகிழ்ச்சி ஆரவாரங்கள், கோபத்தால் ஏற்படும் மௌனங்கள்கூட கணக்கில்லாது இருந்திருக்கிறது.
ஆனால் கண்கள் மட்டுமே கதைத்துக்கொள்ளும் காதலர்களின் மொழியை முதல்முதல் கற்றுக் கொண்டவர்கள் யாரோ தங்களை கட்டிவைத்ததுபோல்
புதுவித மந்திரக்கட்டுக்குள் கட்டுப்பட்டு அசையாது நிற்க, அவர்கள் மோனநிலையை களைக்கவென்றே சம்யுவின் அலைபேசி மெல்ல கிணுகிணுத்தது.
அலைபேசி சப்தத்திலே முதலில் தன்னை மீட்டுக்கொண்டவன், ‘யுகீ… என்ன பார்வைடி இது. தென்னமரத்து வண்டுமாதிரி இதயத்தை அப்டியே குடையுது. நீ பொறுக்கினு காரித்துப்பினாலும் பரவாயில்லன்னு உன்கிட்ட கபிவை கேக்கச்சொல்லுதுடி.’ என்று இன்னும்கூட மீளவிரும்பாது தன் முகத்தையே பார்த்திருந்த பெண்ணவளின் பேராழி விழிகளுக்குள் கரையத் தொடங்கிய மனதை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடித்தவன், “யுகி போன் அடிக்கிது பாரு. மாமாவாதான் இருக்கும். எடுத்துப்பேசு” என்று முயன்று வரவழைக்கப்பட்ட இலகுக்குரலில் சொல்ல…
‘அச்சோ எனக்கு என்னாச்சு? நான் ஏன் அவனைப்போய் இப்டி பாக்குறேன்?’ என்று யோசித்தபடியே அலைபேசியை எடுத்து செவியில் பொருத்தினாள்.
அவன் கூறியதுபோலவே அலைபேசியில் பேசிய அவன் தந்தையோடு அன்னையும் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக்கூற,
அவர்கள் நேரில் வரவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் திருமண விஷயத்தில் அவள் செய்த செயலால் இன்னும் கோபத்தை பிடித்துவைத்துக்கொண்டு இருந்த பெற்றவர்கள் அலைபேசியில் வாழ்த்து கூறியதே அவளுக்கு சிறு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
“ரொம்ப தாங்க்ஸ்மா தாங்க்ஸ்ப்பா. நீங்க என்னோட பேசினதே எனக்கு ரொம்ப சந்தோசம்” என்று பெற்றோரிடம் பேசிவிட்டு திரும்பியவளின் இதழில் புன்னகை இருந்தாலும், அவள் விழியில் இருந்த ஏக்கத்தை சரியாகவே கண்டுகொண்டவன் அவளை இயல்பாக்கும் பொருட்டு,
“ஹேய் யுகி. என்னோட வா உனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு” என்று அழைக்க…
அவன் முயற்சியை புரிந்து சினேகமாக சிரித்துக் கொண்டவளும், “காலையிலிருந்து கொடுத்ததெல்லாம் பத்தலியா? இன்னும் என்னடா வச்சிருக்க?” என்று வினவியபடியே அவன் பின்னோடு பண்ணை வீட்டின் வெளியே வந்தவள் அங்கு ஆலமரத்தின் அடியில் இருந்த 50க்கும் மேற்பட்ட பறவை கூண்டுகளையும் அதனுள் கீச்சிட்டுச் படபடக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளையும் கண்டு…
“திவ்வா…” என்று விழிகள் விரிய நின்றுவிட்டாள் சம்யுக்தா.
அவள்முகம் காட்டிய இன்ப அதிர்ச்சியில் இவன் முகமும் அளவில்லா மகிழ்ச்சியோடு விகசிக்க,
“நாம ரெண்டுபேரும் ஒன்னா நின்னு பேர்ட்ஸ் பறக்கவிட்டு ரொம்ப நாள் ஆகுதுல்ல யுகி. அதான் நாம மிஸ் பண்ண டேஸ்கும் சேர்த்து இன்னிக்கு எல்லாமே அன்லிமிடெட்” என்று சொன்னவன் சற்று தயங்கித் தயங்கியே தன் கரத்தை அவள்புறம் நீட்டி, “ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றும் வினவ…
அதைக்கண்டு ஒருகணம் தயங்கினாலும், “ம்ம்ம்” என்றபடி மெல்ல மெல்ல நீண்டு அவன் கரத்தின்மீது தன் கரத்தை வைத்த பெண்ணவளுக்கோ அடுத்துவந்த மணித்துளிகள் எல்லாம் சொர்க்கத்தில் சேரும் தருணங்கள் மட்டுமே.