அவளுக்கே அப்படி என்றால் அவனைப்பற்றி கேட்கவும் வேண்டுமா. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கழித்து இருவருமே ஒன்றாக இணைந்து நின்று ஒவ்வொரு பறவைக் கூடுகளாய்த் திறந்து பறவைகளைப் பறக்கவிட, திடீரென்று சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் இறக்கைகளைப் படபடத்து தங்களை திறந்து விட்டவர்களுக்கு நன்றி சொல்லி, ஆர்ப்பாட்டமாய் வானில் பறந்து சென்ற பறவைகளைப்பார்த்து இவர்களின் மனதும் அந்த பறவைகள் போலவே இறகே இல்லாது வானத்தில் பறந்தது.
அப்படியே இனிமையிலும் இனிமையாய் மணித்துளிகள் கரைய, ஆரம்பத்தில் அவளோடு இணைந்து அவனும் பறவைகளைத் திறந்து விட்டவன்,
“ஹேய் திவா அங்க பாருடா. அந்த ஸ்பாரோவ. என் கூட்ட மொதோ திறன்னு சொல்லி என்னமா கூண்டை தட்டுதுடா. சோ க்யூட்ல?” என்று சொன்னவளின் பேச்சில் பறவைகளின் மீதிருந்த பார்வையை பாவையின்மீது பதித்தவனின் விழிகளுக்கு குருவியின் அழகா கருத்தில் படியும்.
மாறாக அந்த குட்டிகுட்டிக் குருவிகளைப் போலவே வாயைக் கூட்டிவைத்து, “அச்சோ திவா… இங்கபாரு… திவா இதபுடிடா…” என்று தனைமறந்து அவனுடைய பழைய யுகியாகவே மாறி பறவையோடு பறவையாய் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தவளை இவன் உலகையே மறந்து பார்வையாலே கபளீகரம் செய்து கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லாது போனதில் அவன்புறம் பார்வையை திருப்பியவளுக்கு அப்பொழுதுதான் இங்கும் அங்கும் விழிகளை அசைக்காது
ஆளை உண்ணும் பார்வையாலே அவளை உண்ணத் தொடங்கியவனைக் கண்டு நொடியில் மருதாணியாய்ச் சிவந்த பாவயவளின் நேத்திரங்களும் தன்னாலே தரையை நோக்கியது.
அத்துணை நேரம் மழலையாய் ஆர்ப்பரித்தவளிடம் சமீப நாட்களில் சேர்ந்திருக்கும் அந்த புதிதான படபடப்பும் நாணமும் ஆடவனின் அடங்கிகிடந்த காதல் ஹார்மோன்களை மென்மேலும் தூண்டி விட்டிருக்க, அவன் பார்வை மாற்றம் உணர்ந்து அவள் பேச்சை நிறுத்தி பார்வையை தழைத்தாலும் அவன் பார்வையை மாற்றும் எண்ணமே இல்லாது பெண்ணின் விழிகளில் தொடங்கி, நாசி கன்னம் இதழ்கள் என்று மலரை மொய்க்கும் வண்டாய் முகம் முழுதும் கண்களாலே கைது செய்து நின்றவனை இப்பொழுது நடப்பிற்கு அழைத்து வந்தது என்னவோ அவர்களின் நண்பர்கள் பட்டாளம்தான்.
தங்களுடன் படித்து முடித்து, தங்களோடே பணியும் செய்யும் ஒரு சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமம் சம்யுவின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வருமாறு முதல்நாளே அழைப்பு விடுத்திருந்தான் ப்ரித்திவ்.
அவர்களின் திடீர் திருமணத்தில் வந்து மேலோட்டமாக கலந்துவிட்டுச் சென்றிருந்தவர்கள் அவன் அழைத்த உடனேயே ஆளுக்கொரு பரிசை வாங்கிக்கொண்டு, “ஹாய்டா ப்ரீ, ஹாய் சம்யு. ஹாய் மச்சான்… இன்னும் நீங்க இந்த பழக்கத்த எல்லாம் விடலியா?” என்றபடி அவரவர் வாகனங்களில் வந்து இறங்கிய நண்பர்களைக்கண்டு ஒருவழியாக தங்களை மீட்டுக் கொண்டவர்கள்,
“ஹேய் எல்லாரும் வாங்கடா… ஏன்டா இவ்ளோ லேட்?” என்று வரவேற்றனர்.
அவர்களும், “நியூ கபில்ஸ். தனியாவேற இருக்கீங்க. அதான் கொஞ்சம் லேட்டாவே போலாம்னு நினைச்சு வந்தோம்டா” என்று கண்ணை சிமிட்டிவிட்டு, “ஆனா நீங்க என்னன்னா பேர்ட்ஸ்ஸ போய் கொஞ்சிட்டிருக்கீங்களேடா. சோ சேட்” என்று வருந்தும் குரலில் கேலியில் இறங்க…
அதில் தன்னிச்சையாக இருவரின் விழிகளும் மீண்டும் இணைந்து விட்டுப் பிரிந்தாலும் அவர்கள் கேலியின் பொருளை உணர்ந்து கொண்ட சம்யுவிற்கு ஏனோ நாணத்தையும் மீறி முகம் வாட்டத்தைத் தத்தெடுத்தது.
அதைப் பார்த்தவுடன் அவன் உள்ளமும் சோர்ந்த பொழுதும் அவள் இந்த அளவு தன்னிடம் நெருக்கம் காட்டுவதே இப்போதைக்கு போதும் என்று எண்ணிய ப்ரித்திவோ,
“டேய் உங்களுக்கு புண்ணியமா போகும். வந்ததும் வீட்ட ரெண்டாக்கிடாதீங்கடா” என்று கேலிசெய்த நண்பனின் செவியில் முனுமுனுத்தவன், “கமான் காய்ஸ் எல்லாரும் வெளியவே நின்னா எப்படி உள்ளவாங்க பார்ட்டிய ஸ்டார்ட் பண்ணலாம்” என்று பேச்சை மாற்றி அனைவரையும் உள்ளே அழைத்துச் செல்ல…
அடுத்தடுத்து நகர்ந்த அவர்களின் நேரங்கள் கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாது சென்றது.
வந்திருந்த அனைவரும் மருத்துவம் படித்து பல பிரிவுகளில் மருத்துவப்பணியில் இருந்தபொழுதும் அனைவரும் இருவருக்குமே உற்ற நண்பர்களாக இருக்க, ப்ரித்திவோடு இணைந்தே சம்யுவின் பிறந்தநாளை, கேக் வெட்டவைத்து, ப்ரித்திவிற்கும் ஊட்ட வைத்து அவர்களும் ஊட்டிவிட்டு ஆடலும் பாடலும்
கூட நடத்தி புதுமணத் தம்பதியரை ஒருவழியாக்கிவிட்டனர் தோழர்கள்.
நண்பர்களின் விருப்பத்திற்கேற்ப அவள் கணவனாய் சம்யுவோடு நெருங்கி நின்றே அவள் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அவளே நினைக்காத வகையில் கொண்டாடித் தீர்த்தாலும், சற்று முன்னர் பேசிய கேலியால் அவள் முகம் சோர்ந்ததைப் பார்த்ததிலிருந்து எந்த இடத்திலும் அவளுக்குப் பிடிக்காத எதுவும் நடந்துவிடக் கூடாதென்று கவனமாக இருந்தவன், நண்பர்களை அதுபோன்ற பேச்சிற்கு மட்டும் அனுமதிக்கவில்லை.
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடியவும் உணவையும் இணையதளம் (online) மூலம் வரவழைத்து சாப்பிட்டு, அவர்களின் பண்ணை வீட்டோடு முப்பது நாற்பது ஏக்கருக்கு பறந்து விரிந்திருந்த பண்ணையும் அதையொட்டிய பகுதிகளையும் கால்கடுக்கச் சுற்றி ஒரு வழியாக்கிய நண்பர்கள், தங்கள் கல்லூரி கதைகள் பலதும் பேசிச்சிரித்து சம்யுவின் இந்தப்பிறந்தநாளை வாழ்விலே மறக்கமுடியாத நாளாக மாற்றி விட்டிருக்க, தன் வாழ்வில் தான் தொலைத்து விட்டதாக எண்ணிய நிமிடங்கள் எல்லாம் சமீப நாட்களில் மீண்டும் மீண்டும் தனக்கு மீட்டுக் கொடுக்கும் தன்னவனின் உச்சிதொட்டு பாதம்வரை அனைத்தும் களவாடி உள்ளமதில் பூட்டத் தொடங்கியது பாவையின் விழிகள்.
இதற்கிடையில் நவீன் சந்தனாவும், கூடவே மலரும்கூட அலைபேசியில் அழைப்பு விடுத்து சம்யுவிற்கு பிறந்தநாள் வாழ்த்தைக் கூறியவர்கள், தாங்கள் அனைவரும் மாலை பண்ணை வீட்டிற்கு வரவிருப்பதையும் சேர்த்தே கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ???
அவன் ஒன்றை முடிவு செய்தப்பின் அதை யாரால் மாற்றமுடியும்.
ஒருவழியாக ஆட்டம் பாட்டங்கள் எல்லாம் முடிந்து மாலை நெருங்கும் வேளை நண்பர் பட்டாளமும் நடையைக்கட்ட, அவர்களை அனுப்பி வைப்பவதற்காக வேண்டி அவர்கள் பின்னோடே வந்தனர் சம்யுவும் ப்ரித்திவும்.
அச்சமயம் ப்ரித்திவிற்கு ஏதோ அலைபேசி அழைப்பு வரவும்,
“சீயூ காய்ஸ். நாளைக்கு ஹாஸ்பிடல்ல பாக்கலாம்” என்றுவிட்டு அவன் வீட்டிற்குள்ளேயே நின்றுவிட,
அவர்களும், “ம்ம்ம் சரி மச்சி, ஓகே மச்சான். பாய் ப்ரீ” என்று விட்டு அவரவர் வாகனங்களை நெருங்கினர்.
நண்பர்களோடே வாகனம்வரை வந்த சம்யுவோ மகிழுந்தில் ஏறப்போன தோழி ஒருத்தியை, “ஹேய் திவ்யா… ஒரு நிமிஷம் நில்லுடி. உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்று அவள் கையைப்பிடித்து நிறுத்தி சற்றேதள்ளி அழைத்துச் சென்றவள், “டீ நீ நீ நீ வந்து இனிமேல் இனிமேல் திவாவ திவாவ மச்சான்னு கூப்பிடாத” என்று சற்றே உள்ளே போன குரலில் சொல்ல…
ப்ரித்திவும் சம்யுவும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாள்தொட்டே அவனை மச்சான் என்றே அழைத்துப் பழகிய அந்தத் தோழியோ, “என்னடி சொல்ற? ஏன் ஏன்டி நான் அப்டி கூப்பிடக்கூடாது?” என்று சம்யுவிடம் சண்டைக்கே சென்றுவிட்டாள்.
அதில், “ஏய் கத்தாதடி” என்று தோழியை அடக்கிய சம்யுவும், “இல்லடி இனிமேல், நான் அவன மச்சான்னு கூப்பிடப் போறேன். அதனால நீ அப்டி கூப்பிடாத” என்றும் மூக்கு விடைக்க சொன்னவளைப் பார்த்து,
“நீ கூப்டா கூப்பிடு. கூடவே நானும் கூப்பிட்டுக்கறேன்” என்று தோளை குலுக்கினாள் தோழி.
அதில் பல்லைக்கடித்த சம்யுவும், “ஏய் உனக்கு ஒருதடவை சொன்னா புறியாதா? நான் மச்சான்னு கூப்பிடும் போது நீயும் கூப்பிட்டா நல்லா இருக்காதுடி” என்றவள், “நீ வேணா ப்ரியா மாதிரி மச்சின்னு கூப்டுக்கோ” என்று சொல்ல…
அவளோ, “அதெல்லாம் முடியாது. நான் மச்சான்தான் கூப்பிடுவேன் என்று மல்லுக்கு நின்றாள்.
அதில் சட்டென்று அவள் கையைப்பற்றிக்கொண்ட சம்யுவோ, “என்திவிகுட்டில நான் சொன்னா கேப்பதான. நல்லா யோசிச்சுபாரு. நான் அவனோட ஒயிப். நான் மச்சான்னு கூப்பிடறப்போ நீயும் கூப்டா நல்லாவா இருக்கும்” என்றவளை ஒரு மார்க்கமாய் பார்த்தவளோ,
“ம்ம்ம் சரிடி. போனாப்போகுது என் ப்ரீ மச்சான் உன்னதான் உயிருக்குயிரா நேசிக்கிறான். அந்த ஒரு காரணத்துக்காக நான் என் மச்சான உனக்கு விட்டுத்தர்றேன்” என்று ப்ரித்திவையே விட்டுக் கொடுப்பதுபோல் கூறியவள், “டீ…. ப்ரீ ரொம்ப நல்லவன்கிறதவிட. அவன் உன்னவன்டி. நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இதே ஒற்றுமையோட சந்தோசமா இருக்கணும்டி” என்றும் கூறிவிட்டு மற்ற நண்பர்களோடு சென்றுவிட்டாள்.
தோழியின் வாழ்த்திலும், அவன் உன்னவன்டி என்ற வார்த்தையிலும் இதழ் மலர்ந்த புன்னகையோடே அவர்களுக்குக் கையாட்டிவிட்டுத் திரும்பிய சம்யுவிற்கோ அங்கே கதவருகில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு தூக்கிவாரிப்போட்டது.
அத்துணைநேரம் அவனை மச்சான் என்று கூப்பிடக்கூடாது என்று தோழியிடம் அவ்வளவு பேசியவள், நிலைப்படியில் சற்றே சாய்ந்து கால்களை பின்னியவாறு இருகைகளையும் மார்புக்குக்குறுக்காக கட்டிக்கொண்டு நின்றவனைக் கண்டவுடன், “அச்சோ இவன் எப்ப வந்தான். நான் பேசுன எல்லாத்தையும் கேட்டிருப்பானோ?’ என்று இதயம் அதிவேகத்தில் துடித்தது.
போதாதற்கு அவள் மெல்ல படிகளைக் கடந்து உள்ளே வந்தப்பின்னும் அவள் முகத்திலிருந்த ஆராய்ச்சிப் பார்வையை விலக்காது தொடர்ந்தவன், “எல்லாரும் போய்டாங்களா யுகி? குறிப்பா என்ன மச்சான் மச்சான்னு கொஞ்சுற திவிக்குட்டி போய்ட்டாளா?” என்று கேட்க…
அதைக்கேட்டு, ‘என்னது திவிக்குட்டியா?’ என்று உள்ளூற பொங்கினாலும், அவன் குரலில் இருந்த குறும்பிலே அவன் அனைத்தையும் கேட்டு விட்டதை உணர்ந்து கொண்டவள், “அது அது வந்து வந்து, நான் நான் இனிமேல் உன்ன மச்சான்னு கூப்பிட… அன்னிக்கு அன்னிக்கு நாம ஹவுஸ் சர்ஜனா ஒர்க் பண்றப்போ நீதான நீதான மச்சான்னு கூப்பிடசொன்ன. அதான் நான் திவிகிட்ட சொல்லிட்டிருந்தேன்” என்று மூன்று வருடங்கள் முன்பு நடந்ததை முந்தாநாள் நடந்ததைப்போல் சொன்னவளைக் கண்டு பனிக்கூலில் மூழ்கி மீண்டவனோ,
“அஹான் அப்படியா?” என்று உரக்க நகைத்தவன், “ஆனா நான் அதைப்பத்தி ஒன்னுமே கேக்கலியே. எல்லாரும் போய்ட்டாங்களான்னுதான கேட்டேன்” என்றான் புருவத்தை உயர்த்தி.
அதில் வழியப்போய் மாட்டிக்கொண்டவளாய் திருதிருத்து விழித்தவளும் அவன் புருவமத்தியிலே புதைந்துவிடத் துடித்த மனதையும் இழுத்துப்பிடித்து, “அது அது நீ கேக்காட்டியும் நான் சொல்வேன். அன்னிக்கு நீ கேட்டியேன்னுதான் நான் அப்டி கூப்பிடலாம் நினைச்சேன். அதசாக்காவச்சு நீ அட்வான்டேஜ்ஜா இமேஜின் பண்ணிக்காத” என்றும் சிலிர்த்துக்கொண்டவள் வேகவேகமாக அவள் அறை நோக்கிச் செல்லப்போக…
“டேய் கன்னுகுட்டி…” என்று அவள் கரத்தைப்பற்றி நிறுத்தியிருந்தான் ப்ரித்திவ்ராஜ்.
நின்றவளின் கையை விடாமலே அழுத்தமான எட்டுக்கள் வைத்து அவன் முன்னே வந்து நின்றவன்,
அவளின் மோவாயை மென்மையாகப்பற்றி நிமிர்த்தி தன்னை பார்க்கச்செய்து, “யுகீ… இந்த தயக்கமும் விளக்கமும், விலகளும் என்கிட்ட எதுக்குடி. நம்ம உறவு எல்லா எல்லைகளுக்கும் அப்பார்பட்டது. உன் திவாகிட்ட நீ நீயா மட்டும் இரு யுகி. நம்ம மேரேஜ் விஷயம் எப்டியோ, ஆனா இனிமேல் உனக்கு சங்கடம் தரக்கூடிய எதுவும் நமக்குள்ள நடக்காதுடி” என்று தொடர்ந்து, “கொஞ்சம் முன்ன அத்த போன் பண்ணாங்க. யாரோ குழந்தைக்கு பிட்ஸ் வந்து அட்மிட் பண்ணிருக்கதா சொன்னாங்க. நான் போயிட்டு என்னன்னு பாத்துட்டு வந்தர்றேன். நீ பத்திரமா இரு” என்றும் சொல்லி மெல்ல அவளைவிட்டு விலகினான்.
அதுவரை பந்தயக் குதிரையாய் ஓடிக்கொண்டிருந்த அவளின் இதயம் ஆடவனின் அனுசரணையான வார்த்தைகளில் அழுங்காது அவன் காலடியில் சென்று வீழ்ந்ததோடு தன்னைவிட்டு விலகியவனின் கரத்தையும்,
“திவா…” என்று பற்றிக்கொண்டவள்,
“சீக்கிரம் சீக்கிரம் வந்துடு திவா. இல்லன்னா நானும் உன்கூட வரவா?” என்று அவன் விழிகளைப் பார்த்து வினவினாள்.
அதற்கு அவனும், “இல்லடா நீங்க பர்த்டேபேபி. அதனால இன்னிக்கு உங்களுக்கு எந்த கமிட்மெண்ட்டும் கிடையாது. ஒன்லி என்ஜாய்மென்ட்தான்” என்று சிரித்தவன், “நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன்டா” என்றும் அவள் கரங்களை அழுத்திக்கொடுக்க…
ஏனோ அவனை அனுப்பும் எண்ணம் மட்டும் பாவைக்குத் துளியும் இல்லை.
பண்ணை வீட்டிற்கு வந்த இத்துணை தினங்களில் அவன் வீட்டில் இருக்கிறானா இல்லையா என்றுகூட அறியமுயலாத அளவு அவனிடம் விலகளை கடைப்பிடித்தவள் இன்று இக்கணம் அவன் தன் அருகிலேயே இருக்கவேண்டும், காலையில்போல அவனின் பரந்து விரிந்த மார்பிலே தன் முகத்தைப் புதைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை கொண்டாள். சற்று நேரத்தில் அந்த ஆசைகள் எல்லாம் தூள் தூளாய் சிதறப்போவதை அறியாமல்.
மனம் முழுதும் அவன் மேல் அத்துணை நேசம் இருந்தும் அதை வெளிக்காட்ட இயலாது தவித்து நின்றவளை சிறு தயக்கத்தோடு ஏறிட்டவனும் தன் கால்சராய் பாக்கெட்டுக்குள் கையைவிட்டு ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசுகளை வெளியே எடுத்தவன், “மெனிமோர் ஹாப்பிபர்த்டே டூ மை ஸ்பைசி பெட்டர்ஹாப்.” என்று அவள்முன்னே நீட்டினான்.
அவன் காலையிலிருந்து கொடுத்த பிறந்தநாள் பரிசுகளிலே திக்கு முக்காடி இருந்தவள் சிறிது சிறிதான அன்னப்பறவைகள் அலகை இணைத்தது போன்ற வேளைப்பாட்டில், வெள்ளைநிற கற்களும் பதித்து, அதிகமான சப்தம் எழுப்பாத வகையில் அளவான முத்துக்கள் வைத்த கொலுசுகளின் அழகில் விழிகளை விரித்தவள், ‘இதை மட்டும் ஏன் இப்போ கொடுக்கிறான்’ என்ற கேள்வியோடும் அதை வாங்கக்கூட தோணாது நிற்க…
அவள் முகத்தை பார்த்தே அவள் கேள்வியை புரிந்து நொடிநேரம் விழிகளை மூடி திறந்தவன்,
“யுகீ, யுகீ, இது இது இந்தக் கொலுச மத்த பரிசுபோல பிறந்தநாள் பரிசா நான் வாங்கலடி. சொல்லப்போனா
இத நான் சென்னைல இருக்கப்போவே வாங்கினது.” என்று நிறுத்தியவனின் வார்த்தையிலே அந்த கொலுசு வாங்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து கொண்டவளின் இமைகள் பட்டாம்பூச்சியாய் படபடத்து விழிகளும் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது.
அதை பார்த்தவாறே மேலும் தொடர்ந்தவன், “ஆனா இதுவரை இதை கொடுக்கறதுக்கான சந்தர்ப்பம் சூழல் நமக்குள்ள வரவேயில்லை. இன்னிக்கும் மத்த பரிசுகளோட பிறந்தநாள் பரிசா மட்டும் இத என்னால கொடுக்க முடியல. அதேநேரம் கொடுக்காம இருக்கவும் முடியலடி.” என்று சிறு இடைவெளி விட்டுத் தொடர்ந்தவன், “என்ன எப்போ உரிய இடத்தில சேக்கப்போறன்னு ரெண்டு வருஷமா இந்தக்கொலுசு உன் காலுக்காக காத்திட்டிருக்குடி. ‘எனக்குத்துணையா’ என்று உள்ளே சொல்லிக்கொண்டவன், “உன் திவாவோட காதல் பரிசையும் ஏத்துக்க கன்னுகுட்டி” என்று குரல் கரகரக்க முடிக்கும் முன் சட்டென்று அவன் கரத்தில் இருந்த கொலுசுகளை பறித்துக் கொண்டவள், “தாங்க்ஸ்” என்ற ஒற்றை வார்த்தை மட்டும் கூறிவிட்டு அவன் முகத்தைக்கூட பார்க்க இயலாதவள்போல் ஓடோடி தனதறைக்குள் நுழைந்து கொண்டாள்.
பெண்ணின் அந்தச்செயலில் உடம்பெல்லாம் குளிர்நீரை பாய்ச்சியதுபோல் மென்மேலும் உன்மத்தம் கொண்டவனோ
அவள் பின்னோடே ஓடி அப்படியே அவளை அள்ளி எடுத்து தூரதேசம் ஓடிவிடத் தூண்டிய கால்களை பிரயத்தனப்பட்டு அடக்கி வாயில் நோக்கி எட்டு வைத்தவன் தனக்குள் இருந்த மருத்துவனுக்கும் சிறிது நேரத்தை ஒதுக்கும் பொருட்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான்.
பெண்ணவளின் இன்றைய இணக்கத்தில் என்றுமில்லா மகிழ்ச்சியோடே மருத்துவமனைக்குச் சென்றவன்
தன் பணி எல்லாம் முடித்து இரண்டரை மணி நேரங்கள் கழித்து திரும்பியவனை இருளடைந்த வீடுதான் வரவேற்றது.
கொஞ்சம் முன்னர் அத்துணை அழகோடு ஆரவாரமாய் இருந்த வீடு இக்கணம் விளக்குகள்கூடப் போடாது மயான அமைதியாய் காட்சியளிக்க, “ஏன் வீட்ட இருட்டுல போட்டு வச்சிருக்கா” என்ற கேள்வியோடு மனைவியைத்தேடிச் சென்றான் ப்ரித்திவ்ராஜ்.
வீட்டைப்போலவே அவளது அறையும் இருளில் மூழ்கியிருக்க, அறையின் மூலையில் முதுகுகாட்டி அமர்ந்திருந்தாள் சம்யுக்தா.
“யுகி யுகி…” என்று வீடு முழுதிலும் அவளைத் தேடிவிட்டு இறுதியாகவே அவள் அறைக்குள் வந்தவன், இருளில் அமர்ந்திருந்த மனைவியை பார்த்து வேகமாக அவளை நெருங்கி, “யுகி ஏன் டா லைட்கூட போடாம இருட்டில உட்கார்ந்துருக்க” என்று அவள் தோளில் கையை வைக்க…
அடுத்தநொடி, “திவா…” என்ற கூவலோடு அவனை தாவி அணைத்துக்கொண்டவள்,
“காதலிக்கிறது அவ்ளோ பெரிய தப்பா திவா. காதலிக்கிறது அவ்ளோ பெரிய தப்பா திவா?” என்று மட்டும் கேட்டு கரகரத்த குரலில் அரற்றத் தொடங்கியவளுக்கு மூச்சுத்திணறலும் தொடங்கி இருந்தது.
அவள் கேள்வியில் தலையும் புரியாது வாலும் புரியாது விழித்தாலும் தன்னிச்சையாகவே அவளை அணைத்துக் கொண்டவன், “இல்லடா, யார்டா அப்டி சொன்னது. ஒருத்தர்மேல காதல் வர்றது நம்ம கைல இல்லடா. அது இறைவன் போட்ட முடிச்சுடா” என்று அவளை அணைத்தவாக்கிலே சென்று மேசையில் இருந்த இன்ஹேலரை எடுத்தவன், “ஏன்டா திடீர்னு இப்டிலாம் கேக்குற. வீசிங்வேற இன்க்ரீஸ் ஆகுது. எதாயிருந்தாலும் ரிலாக்ஸ்ஸா இருடா. ஒன்னும் பிரச்னை இல்லை” என்று அவள் மூச்சுத்திணறலை போக்கி அவள் முகத்தையும் பார்க்க முனைய…
ஆனால் அவளோ அவன் மார்பின் வாசம் மட்டுமே தன் கலக்கம் போக்கும் மருந்து என்பதுபோல், “திவா திவா திவா” என்று மீண்டும் மீண்டும் அவன் மார்புக்குள்ளே ஒன்றினாள்.
பெண்ணின் அந்தச் செயலில் அவன் முயற்சியோடு சேர்த்து அவன் தனக்குத்தானே இட்டிருந்த கரைகளும் உடைய, “கன்னுகுட்டீ ஏன்டா? என்னடா ஆச்சு?” என்ற கேள்விகளோடே
அணைப்பாய் இருந்த ஆடவனின் நெருக்கம் இறுக்கமாய்த்தழுவி முத்தங்களாய் அவளைச்சூழத் தொடங்கியது.
அவள் அக்கணம் இருந்த மனநிலைக்கு ஆடவனின் முத்தங்களும், இதழ் ஒற்றல்களும் காயத்தின்மீது ஒத்தடங்களாய்ப் பதிய, பதில் முத்தங்கள் வழங்காவிட்டாலும், அவனைத் தடுக்கவும் விளையாது விழிகளை மூடியவாறே நெற்றி இமைகள் நாசி காது கன்னம் என்று அவன் இதழ்கள் இறங்க இறங்க முகத்தை ஏந்தி ஏந்தி அவன் முத்தங்களைப் பெற்றுக்கொண்டாள் பாவை.
அதில் முற்றும் முழுதாய் தன் வசமிழந்தவன், அவள் தலை கொள்ளாது சூடியிருந்த குண்டு மல்லியின் வாசத்தோடு தன்னவளின் சுகந்த வாசத்தையும் முற்றும் முழுதாய் அறிய முனைந்தவனாய் தன் கரத்தில் கிறங்கி நின்றவளை அப்படியே கைகளில் வளைத்து அள்ளிக் கொண்டு கட்டில் நோக்கி நகர, அவர்களின் விதியும் அவன் பின்னோடே நகர்ந்தது.