திருநெல்வேலி செல்லும் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டமில்லாது சென்று கொண்டிருந்தது நவீனின் பி எம் டபிள்யூ மகிழுந்து.
மகனுக்கு இருசக்கர வாகனம் வாங்கும் முன்னரே நவீன் படிப்பை முடித்து உணவுத் தொழிற்சாலைக்கு வரத்தொடங்கிய இரண்டாம் வாரம் அண்ணன் மகனுக்கு அம்மகிழுந்தை வாங்கிக் கொடுத்திருந்தான் யுவா.
அமைதியே உருவாய் சொன்னதை அப்படியே கேட்டு தங்கள் குடும்பத்தொழிலில் கால் பதித்திருக்கும் அண்ணன் மகனை அவனுக்கோ அத்துணை பிடிக்கும்.
மிதமான வேகத்தில் சாலையில் செல்வதே தெரியாது வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தவன் அருகில் ஜன்னலோரம் இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்த சந்தனாவை பக்கவாட்டாகப் பார்த்து, “ஏன் சந்தனாமா சீட் நுனில உக்காந்துருக்க? நல்லா உக்காரு” என்று சொல்ல…
அவளோ திடீரென்று கேட்ட ஆடவனின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
அதில் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவனும், “பர்ஸ்ட் டைம் கார்ல வர்ற மாறி ஏன் இவ்ளோ பதட்டமா இருக்க? நான் கார் ஓட்டுறது உனக்கு பயமா இருக்கா?” என்று வினவ…
அவளுக்கோ அப்பொழுது தான் சீரான வேகத்தில் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்ற மகிழந்தின் இனிமையான பயணம் புத்தியில் உரைத்து அவள் சிரம், “இல்லை” என்பதைப் போல் இடமும் வலமும் ஆடியது.
அவளுக்குக் கார்பயணம் புதிது இல்லை என்றாலும் நவீனுடனான இன்றைய பயணம் புதிது தான்.
பயணம் மட்டுமல்ல. மாமன் மகன்களானாலும் இளைய ஆண்களுடனான அவள் பழக்கமும் மிகவும் அரிதே.
சம்யு எந்நேரமும் மாமன் வீடே கதி என்று இருந்ததில் பெற்றோரின் முழுச் செல்லமாக வளர்ந்து விட்டவளை மாமன் வீட்டிலும் இன்னும் சிறு குழந்தையை போலத்தான் பார்த்து வந்தனர்.
பண்டிகை காலங்கள் தவிர்த்து ஓரிரு சமயங்கள் மட்டுமே தந்தையுடனோ அன்னையுடனோ மாமன் வீட்டிற்கு சென்று வருபவளிடம் அத்தை மகள் என்ற முறையிலும் வீட்டிலேயே சிறு பெண் என்ற முறையிலும் நவீன் ஒரு இதழ் மலர்ந்த புன்னகையோடு இரு வார்த்தை பேசிவிட்டு விலகி விட, ஆண்களிலே சிறியவனான ப்ரித்திவோ அவனை விடச் சின்னப் பெண்ணான சந்தனாவை கொட்டுவதும் அடிப்பதும் ஜடையை இழுத்து விடுவதும் என்று வம்பிழுத்து சில சமயங்களில் அவளை அழுகக் கூட வைத்து விடுவான்.
பனிரெண்டாம் வகுப்புவரை பூஞ்சோலை கிராமத்து மேல்நிலைப் பள்ளியிலே படித்து முடித்தவள் கடந்த இரண்டு மாத காலமாகத்தான் திருநெல்வேலியில் இருக்கும் கல்லூரிக்குச் சென்று வருகிறாள்.
அந்த இரண்டு மாதமும் தந்தையின் மகிழுந்திலும் அல்லது மாமன் யுவாவின் மகிழுந்தில் மட்டுமே சென்று வந்தவள் நவீனின் மகிழுத்திலும் ஓரிரு முறை சென்றிருக்கிறாள் தான். ஆனால் அப்பொழுதுகள் அவள் தந்தையும் உடன் வந்த பொழுதுகளே.
சம்யு போல் அல்லாது அமைதியான சுபாவம் கொண்டவளுக்கு இன்று ஒரு ஆடவனுடன் தனிமையில் செல்வதாலோ என்னவோ சற்று படபடப்பாக இருக்க அதை கண்டு கொண்டவனோ, “மாமா கூடத் தானேடா வர்ற சந்தனா. அதுக்கு ஏன் முகத்தை இப்டி வச்சிருக்கு? என்னப் பாத்தா சிங்கம் புலி மாறி இருக்கா? இல்ல நான் கார் ஓட்டுறது அவ்ளோ பயமா இருக்கா?” என்று சிறு சிரிப்புடனே தொடர் கேள்விகளை அடுக்கினான் நவீன்.
அவன் இவ்வளவு பேசுவானா என்று இமைகளை படபடத்தவளுக்கு தமக்கையை பின்னே ஏற்றிக் கொண்டு ப்ரித்திவ் இருசக்கர வாகனத்தை தாறுமாறாய் செலுத்தும் காட்சி வேறு கண் முன் தோன்றி மறைய,
“நீங்க ப்ரித்தி மாமா மாறி இல்ல மாமா. கார மெதுவா சூப்பரா ஓட்டுறீங்க மாமா” என்று வேகவேகமாகச் சொல்லி முடித்தவாறே இருக்கையில் கொஞ்சம் சாய்ந்து அமர்ந்தாள் சந்தனா.
அதில், “எத்தனை மாமா?” என்று மேலும் சிரித்தவன், “ப்ரித்விக்கு எல்லாத்திலும் வேகம் தான். டாக்டர்க்கு படிக்கிறான் தான் பேரு ஆனா இன்னும் சின்னப்பையன் மாறியே இருக்கான். அவன் வம்பிழுக்கறதெல்லாம் நீ பெருசா எடுக்காதமா” என்று நாளை அவனை மணம் புரிய வேண்டியவள் அவன் செயல்களைப் பார்த்து மிரண்டு விடக்கூடாதே என்ற அக்கறையில் தம்பிக்காகப் பேசியவன் தொடர்ந்து, “அப்றம் காலேஜ்லாம் உனக்கு பிடிச்சிருக்கா? பாடம்லாம் புரிஞ்சுக்க முடியுதா?” என்றும் சகஜமான உரையாடலைத் தொடங்க…
அவளும் தயக்கத்தை விடுத்து, “ம்ம்ம் பிடிச்சிருக்கு மாமா. ஓரளவு புரியுது” என்று பதில் கொடுக்கத் தொடங்கினாள்.
அப்படியே பேச்சினூடே விரைந்த அவர்களின் மகிழுந்து திருநெல்வேலி நகரத்திற்குள் நுழைந்திருக்க நுழைவாயிலை ஒட்டிய கடைத்தெருவின் முன் மகிழுந்தை நிறுத்தியிருந்தான் நவீன்.
அவள் அவனைக் கேள்வியாகப் பார்க்க…
அவனோ, “பேனா வாங்கணும் சொன்னியேமா இறங்கு” என்று சொல்ல அப்பொழுது தான் சற்று முன்னர் தான் சொன்னது ஞாபகம் வந்தவளும் வேகமாக மகிழுந்தை விட்டு இறங்கினாள்.
இறங்கியவளின் கையில் நூறு ரூபாய் தாளை வைத்தவன் நான்கடி தொலைவில் இருந்த கடையைக் காட்டி, “உனக்கு எந்த பேனா வேணுமோ நீயே பாத்து வாங்கிட்டு வா. நான் ஒரு போன் பேசிட்டு வர்றேன்” என்று சொன்னவன் அவள் பதிலையும் எதிர்பாராது மறுபுறம் சென்று கைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருக்க, அவளோ கடைக்குச் செல்லாது பிடித்து வைத்த பிள்ளையாராய் அங்கேயே நின்றாள்.
ஐந்து நிமிடம் கைபேசியில் உரையாடி விட்டு வந்தவன் அப்பொழுதும் அங்கேயே நின்றவளைப் பார்த்து, “என்னமா இங்கயே நிக்குற? பேனா வாங்கலியா?” என்று கேட்க…
அவளோ கையை பிசைந்தப்படி மருண்ட விழிகளால் கடையின் முன்னே நின்ற ஆட்களைப் பார்த்தாள்.
அங்கோ ரவுடிகள் தோற்றத்தில் நின்ற மூன்று பேர், போகும் வரும் பெண்களை கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
அவள் பார்வை போன திசையை வைத்தே பெண்ணவளின் பயத்தைப் புரிந்தவன், “என் கூட வா” என்று விட்டு கடையை சமீபித்துச் செல்ல, அவளும் அவன் பின்னோடே ஓடினாள்.
ஆறடி உயரத்திற்கும் மேல் ஆஜனுபாகுவாய் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கடைக்குள் நுழைந்தவன்,
“புது மாடல்ல ஹீரோ பேனா எடுத்துக் காட்டுங்க” என்று விட்டு அந்த ரவுடி தோற்றத்தில் இருந்தவர்களையும் திரும்பி ஒரு முறை முறைத்தவனைப் பார்ப்பதற்கு அச்சமயம் ஒரு ஆக்சன் பட ஹீரோவைப் போலத்தான் இருந்தான்.
அவனோடு வந்த சந்தனாவோ கடைப்பையன் எடுத்து காட்டிய பேனாவைப் பார்த்துக் கொண்டிருக்க…
அவனோ கடை முதலாளியிடம், “அப்றம்ணே ஏவாரம்லா எப்டி போகுது. ஏதாச்சும் பிரச்னைனா சொல்லுங்க. நம்ம பிரண்ட் போலீஸ்லதான் இருக்கான். பிரிச்சு மேஞ்சுடுவான்” என்று சற்று உரக்கவே சொன்னான்.
அடித்து விடுபவன் போல் அவன் வந்த தோற்றத்திலே ஏற்கனவே பீதியாகி நின்ற ரவுடிகள், அவன் போலீஸ் என்ற நொடி சிட்டாகப் பறந்திருக்க, அதை பார்த்த கடைக்காரருக்கு மட்டுமல்லாது சுத்தி பொருள் வாங்க நின்ற பெண்களுக்கும் கூட முகமெல்லாம் நிம்மதி.
பேனா வாங்கி முடித்த சம்யுவும், அவனை மெச்சுதலாகப் பார்த்திருக்க…
அவனோ, “வேற எதுவும் வேணுமாமா?” என்று விட்டு கடைக்காரரிடம் பணத்தை நீட்டினான்.
அவரும் மீதி சில்லறை கொடுத்தபடி “ரொம்ப நன்றிங்க தம்பி” என்று சொல்ல…
சந்தனாவும் வேறு ஒன்றும் இல்லை என்பது போல் தலையாட்டியதைப் பார்த்தவன்
கடைக்காரரிடம் ஒரு தலையசைப்போடு வெளியேறினான்.
முகம் முழுதும் அப்படி ஒரு புன்னகையோடு, “ஆ ஊன்னு சண்டை போடல. பன்ச் டைலாக் பேசல. எந்தப் பொருளும் உடைக்கல. அஞ்சே நிமிஷத்துல அந்த ரவுடிங்கள துரத்திட்டிங்களே மாமா” என்று ஆர்ப்பரித்தவாறே தன் பின்னோடே ஓட்டமும் நடையுமாக வந்த சந்தனாவைத் திரும்பிப் பார்த்தவன், “நிறைய ஆக்சன் படம் பாத்துருப்ப போல” என்று விட்டு “இதப்பாரு சந்தனா நம்மளோட பிரச்சனைய நாமளே தீத்துக்கற அளவு பொம்பள புள்ளைக எப்பவும் தைரியமா இருக்கணும். நமக்காக ஒருத்தன் வந்து சண்டை போடுவான்லாம் எதிர்பார்க்கக் கூடாது. ரோட்டுல குறைக்கிற நாய பாத்து எப்டி பயப்படக் கூடாதோ. அது மாறிதான் இது போல பொறுக்கி நாய்ங்களுக்கும் பயப்படத் தேவையில்லை. ஒரு பொண்ணுக்கு அவளோட தைரியம் தான் முதல் ஆயுதம். உன் அக்காவப் பாத்துக்கூட நீ இதெல்லாம் கத்துக்கலியா? சம்யுவா இருந்தா இந்நேரம் அவனுங்கள லெப்ட் அண்ட் ரைட் வாங்கிருப்பா” என்று சற்று கடுமையான குரலிலே நீண்ட உரையாற்றியவனை ஆச்சரியமும் பயமுமாகப் பார்த்திருந்தாள் பாவை.
அவனோ அதை எல்லாம் சட்டை செய்யாமல் மேலும் பேசியவன்,
“அப்றம் எது வேணும்னாலும் இனிமேல் மாமாவ தொந்தரவு பண்ணாத. என்கிட்டயே கேளு, நான் இந்தப் பக்கம் வர்றப்போ வாங்கிட்டு வந்து கொடுக்கறேன்” என்று சொன்னவன்…
“அப்றம் வேற எதுவும் வேணாம் தானே கிளம்பலாமா?” என்றும் கேட்க…
அவளோ அப்பொழுதும் எதுவும் சொல்லாமல் அங்கு கரும்புச்சாறு பிழிந்து விற்பனை செய்யும் இடத்தையே பார்த்தாள்.
இப்பொழுதும் அவள் பார்வையின் மொழியை சரியாக யூகித்தவன்,
“கரும்புச்சாறு வேணுமா? வா” என்று விட்டு விறுவிறுவென்று அவ்விடம் நோக்கி நடந்தவன் இரண்டு டம்ளர் சாற்றை வாங்கி அவளிடம் ஒன்று கொடுத்து விட்டு அவனும் ஒன்றை அருந்தத் துவங்கினான்.
சர்க்கரை தயாரிப்பிற்கும் சாறு எடுப்பதற்கும் விளைவிக்கக் கூடிய செங்கரும்பில் சிறிது இஞ்சியும் எலுமிச்சையும் சேர்த்து பிழிந்தெடுத்த குளிர்ந்த சாறு தொண்டையில் இறங்கியவுடன் தான் தொண்டையின் வறட்சி புத்தியில் உரைக்க, இன்னொன்று வாங்கிக் குடித்தால் என்னவென்று தோன்றியது நவீனுக்கு.
சந்தனாவும் அப்பொழுது தான் சாற்றை அருந்தி முடித்திருக்க,
“இன்னொன்னு சொல்லுவோமா?” என்று அவளிடம் கேட்டவனுக்கு…
“இல்ல மாமா எனக்கு போதும். ஆனா நீங்க தான் இன்னும் ரெண்டு மூனு கிளாஸ் குடிக்கணும். அவ்ளோ சூடா இருக்கீங்க” என்று சொல்லியவள் சொன்னப்பின்னர் தான் அவன் என்ன நினைப்பானோ என்று உதட்டைக் கடித்துக் கொள்ள…
அவள் கூற்றைக் கேட்டவனோ சட்டென்று சிரித்து விட்டான்.
சிறுவயதில் இருந்தே தனக்காக ப்ரித்திவை கடியும் நவீனின் மேல் மாமாமகன் என்று மரியாதை கலந்த பாசம் இருந்தது தான் என்றாலும் சற்று முந்தைய நவீனின் சமயோசித செயலும், ஆடவனின் சந்தனாமா என்ற சொல்லுக்கு மாற்றம் இல்லாத அனுசரணையான பேச்சுக்களும் பெண்ணவளின் ஒதுக்கத்தைக் குறைத்து வாய்பூட்டை அவிழ்த்திருந்தது.
பெற்றோரிடம் பேசுவது போல் முதல் முறை யோசியாது பேசியவளை ஆராய்ச்சியாகப் பார்த்தவனோ,
“உன்ன நான் சின்னப்புள்ளனு நினைச்சு உனக்காகப் பேசுனா என்னையே வார்றியா நீ?” என்று முறைப்போடு கேட்டவனுக்கு ‘சாரி மாமா’ என்ற முணுமுணுப்போடு தவறு செய்த குழந்தையாய் உதட்டைக் கடித்து நின்றவளின் தோற்றம் கண்டு மில்லி மீட்டர் புன்னகை செண்டிமீட்டராய் விரிந்தது.
அந்த சிறிய இடைவெளியில் தன்னைச் சுதாரித்துக் கொண்டவள், “காலேஜ்கு நேரமாச்சு மாமா போலாம்” என்று விட்டு ஓடிவந்து மகிழுந்தில் ஏறிக் கொள்ள, “யுக்தாவோட தங்கச்சி வேற எப்டிப் பேசுவா?” என்று மேலும் சிரித்துக் கொண்டவனும் இன்னொரு கரும்புச்சாற்றை வாங்கிப் பருகாமலே வந்து மகிழுந்தைக் கிளப்பினான் சந்தனாவின் கல்லூரியை நோக்கி.
“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்பது போல், “டுபு டுபு டுபு” என்ற சப்தத்தோடு அந்த கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது ப்ரித்திவின் பிளாக்கி.
“திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ்” என்ற கொட்டை எழுத்துக்கள் மின்னிய உயர்ந்து வளைந்திருந்த நுழைவாயிலிற்குள் புழுதி பறக்க நுழைந்த வாகனத்தின் சப்தத்தை வைத்தே வருவது அவன் தான் என்று அறிந்தது போல் அங்கிருந்த அநேகரின் பார்வை வாயிலை நோக்கிப் பாய, அவனோ வாகன நிறுத்துமிடம் சென்றே க்ரீச்சிட்டு வண்டியை நிறுத்தினான்.
வண்டி நின்றதும், “ஸ்சப்பா கொஞ்சம் மெதுவா ஓட்டுனா தான் என்னடா” என்ற சலிப்போடே சம்யு இறங்கிக் கொள்ள…
“ஹாய் டா மச்சான். ஹாய் மச்சி. மார்னிங் சம்யு” என்று அவர்களை வந்து சூழ்ந்து கொண்டனர் இருவருக்கும் பொதுவான நண்பர்கள்.
அவர்களும் நண்பர்களைப் பார்த்து, “ஹாய் மச்சீஸ்” என்று புன்னகைத்துக் கொள்ள…
ஒரு கல்லூரி மாணவன் தான் என்று சத்தியம் செய்தாலும் நம்ப முடியாதளவு உயரமும் அதற்கேற்ற உடற்கட்டும் கொண்டு மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறத்தில் அதிக அடர்த்தியில்லா மீசையோடும், அதன் கீழே கோவைப்பழமாய் சிவந்த இதழ்களில் வசீகரிக்கும் புன்னகையோடும் வண்டியின் திறப்பை எடுத்தபடியே இறங்கிய ப்ரித்திவ்வை சற்று தள்ளி நின்றிருந்த கன்னிப் பெண்கள் கூட்டமும் பார்வையாலே பருகத் தொடங்கியது.
அதில் சீனியர் ஜுனியர் என்று அனைவரும் இருந்தும் அவனோ அதை எல்லாம் சிறிதும் சட்டை செய்யவே இல்லை. என் சொர்க்கம் என்னருகில் என்பது போல் அவனுக்கு சம்யுவிடம் பேசவே நாளிற்கு 24 மணி நேரம் போதாமல் இருந்ததே.
வெள்ளை நிற மருத்துவ அங்கியை கனத்த கரத்தின் மணிக்கட்டில் தொங்கவிட்டுக் கொண்டு நண்பர்களுடன் அளவளாவியபடி தங்கள் வகுப்புக் கட்டிடம் நோக்கி நடந்தவனிடம், “டேய் ப்ரித்வி… நீ இன்னிக்கு காலேஜ் வரமாட்டேன்னு நினைச்சோம்” என்று நண்பன் ஒருவன் சொல்ல…
அவர்களுடனே இணைந்து நடந்த சம்யுவோ, “ஏன் வருண்?” என்று விழியாலே ப்ரித்திவியின் உடல்நிலையையும் ஆராய்ந்தாள்.
அதற்குள் ப்ரித்திவ் அவனை ‘சும்மா இருடா’ என்பது போல் முறைக்க அதைக் கவனியாத மற்றயவனோ, “பின்ன மியூசிக் ப்ரோக்ராம்க்கு டிக்கட் வாங்க நேத்து காலைலயிருந்து நைட் எட்டு மணி வரை கால்கடுக்க டிக்கட்காக வெயிட் பண்ணானே. அதான் காலைல எப்டி எந்திரிச்சான்னு கேக்கறான்” என்று நேற்று நடந்ததை பிட்டு பிட்டு வைக்க…
“திவா… ராக்கி சொல்றது உண்மையா?” என்று அவனை நிறுத்தி வைத்து வினவியவளின் விழியில் கோபத்திற்கு சமமான பரிதவிப்பும் அப்பட்டமாக வெளிப்பட்டது.
அதில் ப்ரித்திவோ, ‘இப்போ சந்தோசமாடா?’ என்பது போல் நண்பர்களை முறைக்க…
“சொல்லு திவா. ஆப்ட்ரால் ஒரு மியூசிக் சோ… டிக்கட்காக காலையிலிருந்து காத்துக் கிடந்தியா?” என்று அவனை பார்வையாலே எரித்தாள் சம்யுக்தா.
அவள் பார்வை தாங்காத நண்பர்களோ, “டேய் ஆனந்த்” என்று தூரத்தில் வந்த ஒருவனை அழைத்தபடி ஓடிவிட…
ஒரு மென்புன்னகையோடு சம்யுவை ஏறிட்ட ப்ரித்திவோ, “ஆப்ட்ரால் டிக்கட்காக இல்லடி. என்னோட யுகிக்காக. அந்த டிக்கெட்டப் பாத்ததும் என் யுகீ அவ்ளோ சந்தோசப்பட்டாளே. அதுக்காக” என்று சொன்னான் ஆடவன்.
அவன் பேச்சில் தன்னாலே மலரத் தொடங்கிய இதழ்களை அரும்பாடுபட்டு அடக்கியவள், “அதுக்கு… எனக்காக நீ இவ்ளோ கஷ்டப்படணுமா திவா? ஏன்டா” என்று மனம் கேளாது அங்களாய்த்தவளைக் கண்டு…
“நீ இப்டி பேசுறது தான் எனக்கு கஷ்டமா இருக்கு யுகி. உனக்கு முன்னால எனக்கு வேற எதுவும் பெரிசில்லனு உனக்கே தெரியும் தான. அப்றம் எதுக்கு இந்தப் பேச்சு. இதப்பத்தி தான் நாம மார்னிங்கே பேசி முடிச்சாச்சில்ல. க்ளாசுக்கு போலாம் யுகி. பெல் அடிச்சு டென் மினிட்ஸ் ஆச்சு” என்று அழுத்தமாய் சொல்லி பெண்ணின் கரம் பற்றி இழுத்துச் சென்றவன் அவளிடம் கொண்ட அன்பை நன்கு அறிந்திருப்பவள் தான் சம்யுக்தா.
ஆனாலும் அந்த அன்பால் அவனுக்கு எவ்வித இன்னலும் வந்து விடக்கூடாது என்ற ஆசையும் அவளிடம் அதிகமாய்.
ஆனால் அனைவரின் ஆசையும் நிறைவேறுவது சாத்தியம் இல்லாத ஒன்றல்லவோ.
இருவரும் பேசிக் கொண்டே தங்கள் வகுப்பிற்குள் நுழையும் சமயம் கல்லூரியில் இரண்டாவது மணியும் அடிக்க ஆசிரியர்களும் அவரவர் பணிகளைச் செய்ய ஆயத்தமாகிக் கிளம்பினர்.
அதற்குப் பின்னான நேரங்கள் பாடங்கள், பிராக்டிகள் வகுப்புகள் என்று நிமிடங்களாகக் கரைய மதியவேளை முடிந்தப் பின் எலும்பியல் (Orthopedic) சம்பந்தமான பாடத்தை எடுப்பதற்கு வகுப்பிற்குள் நுழைந்தார் பேராசியர் ஒருவர்.
எலும்பியல் என்பது மனித உடலின் தசைக்கூட்டு அமைப்பு சம்பந்தப்பட்ட நிலைமைகளுடன் தொடர்புடைய அறுவை சிகிச்சையின் அங்கம் ஆகும்.
மாணவர்கள் அனைவரும் மதியவணக்கம் உரைத்து முடிக்க, “ஹாய் எவ்ரிபடி” என்று வெள்ளைத் திரைக்கு மேல் இழுத்து விடப்பட்ட கரும்பலகையின் முன்னால் எழுதுகோலோடு நின்றவரின் விழிகள் மூன்றாம் வரிசையின் இருக்கையில் சம்யுவுடன் அமர்ந்திருந்த ப்ரித்திவியின் மீது படிய…
“ஹேய் ப்ரித்திவ் உன்ன தான் பாக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். நீ செய்றது உனக்கே நல்லா இருக்கா?” என்று குற்றம் சாட்டும் குரலில் கேட்டார்.
அதற்கு அவனோ, “நீங்க தான சார் நேத்து எல்போக்கு டைகிராம் போட சொல்லிருந்தீங்க. இப்போ நல்லா இருக்கான்னு கேக்கறீங்களே” என்று மேஜையில் இருந்த குறிப்பேடை எடுத்துக் காட்டினான்.
அதில் அவனை முறைத்துப் பார்த்தவரும், “நான் இதக் கேக்கலை மேன். நீ நேத்து எக்ஸாம் எழுதாம எங்கபோன? மெடிக்கல் பீல்ட்ல இன்டர்னல் மார்க் எவ்ளோ முக்கியம்னு தெரியுமா உனக்கு? உன் பாதர் யுவா மேல இருக்க மரியாதையால உன்னப்பத்தி நான் டீன் கிட்ட சொல்லாம இருக்கேன். ஆனா நீ அதையே அட்வான்டேஜ்ஜா எடுத்துக்காத” என்றும் எச்சரிக்கும் பாவனையில் சொன்னார்.
அவனோ மரியாதை நிமித்தம் எழுந்து நின்றிருந்தாலும் ஒரு விரலால் செவியைக் குடைந்து கொண்டே, “டீன்ட்ட சொல்லாட்டி என்ன. அதான் டானுக்கெல்லாம் டான்ட காலங்காத்தாலையே சொல்லி தூக்கத்துலயே நாதஸ்வரம் கேக்க வச்சது பத்தலியா” என்று அந்த ஆசிரியர் தன் தந்தையிடம் தன்னைப் பற்றிக் கூறியதைக் கூற…
அதைக் கேட்டிருந்த சம்யுவிற்க்கோ சிரிப்பை அடக்கவே முடியவில்லை.