தொலைவில் இருந்ததால் அவன் பேசியதைக் கேட்க முடியாதவர், “என்ன சொன்ன?” என்று வினவ…
அவனோ, “அது ஒண்ணுமில்ல சார். அம்மா இன்னிக்கு அரிசிப் பாயசம் கொடுத்து விட்டாங்க. அதான் உங்களுக்கு கொடுக்கலாமான்னு கேட்டுட்டிருக்கேன்” என்றவன் அங்கு மேஜைக்கடியில் வைத்திருந்த உண்டிப் பாத்திரத்தை தேடி எடுத்து மேஜையின் மீது வைத்தான்.
அவனருகில் இருந்த சம்யுவோ, “டேய் இது பிளட் டொனேசன் போஸ்டர்ஸ ஒட்டுறதுக்கு காச்சிட்டு வந்த மைதாமாவு கம்டா” என்று அதைப் பறிக்க முனைய…
அவனோ, “என்ன சொல்ற யுகீ?… சாருக்கு சுகர் இருக்கா? பாயாசம் கொடுக்க வேணாமா?” என்றவன், “அதனால என்ன யுகீ ஒரு டேப்லட் எக்ஸ்ட்ரா போட்டா சரியாப் போச்சு” என்று திரும்பியவன் “நான் சொல்றது சரிதானே சார்?” என்று அந்தப் பாத்திரத்தை சுழற்ற ஆரம்பித்தான்.
அதற்குள், “ஆமா ஆமா சுகர்லாம் ஒரு விஷயமா…” என்று அவன் மேஜை அருகில் வந்து விட்டிருந்தவரோ, “பாயசம் அம்மாவே செஞ்சதா தம்பி?” என்று எச்சில் ஊற அதைக் கைப்பற்ற எத்தனிக்க…
சாப்பாட்டு ராமனான அந்த ஆசிரியரும், “அத விடுப்பா… நீ க்ளாஸ்லயே எவ்ளோ நல்ல பையன். நேத்து ஏதாவது அவசர வேலை இருந்துருக்கும் போயிருப்ப. இன்டர்னல் மார்க் நாங்க போடுறதுதானே. பாத்துக்கலாம்” என்று சற்று முன் பேசியதற்கு முற்றிலும் எதிர்ப்பதமாகப் பேச…
சம்யுவோடு சேர்ந்து வகுப்பு மாணவர்கள் அனைவருமே வாயைப் பொத்தி சிரிப்பை அடக்கியபடி ப்ரித்திவியின் அலப்பறையைக் கண்டு கழித்திருந்தனர்.
அவனோ அப்பொழுதும் பாயசப் (பசை) பாத்திரத்தைக் கொடுக்காமல், “அப்போ எனக்கு இன்டர்னல் மார்க் கிடைக்கும்னு சொல்றீங்களா?” என்று கேட்க…
அவரோ, “அதென்ன கிடைக்கும்?. கிடைசிச்சுடுச்சுன்னு வச்சுக்கப்பா” என்றவர் அங்கே இருந்த ரேங்க் பட்டியலை எடுத்து ப்ரித்திவியின் பெயருக்கு நேரே தேர்ச்சி என்று கிறுக்கி கையெழுத்தும் இட்டார்.
அதை எக்கிப்பார்த்து விட்டு சம்யுவிடமும் கண்ணடித்துக் கொண்டவன், “இந்தாங்க சார் க்ளாஸ் முடிச்சுட்டு போய் பொறுமையா சாப்பிடுங்க” என்று அந்தப் பாத்திரத்தை அவரிடம் கொடுத்து விட்டே அமர…
அதைப்பார்த்த சம்யுவோ, “டேய் வேணான்டா பாவம்டா” என்று அவன் தோளில் அடித்தாள்.
வகுப்பில் நடந்தேறியதைப் பார்த்த மற்ற மாணவர்களும், “சார் எங்கம்மாவும் அரிசி பாயாசம் நல்லா செய்வாங்க சார்” என்று கத்திக்கூச்சலிட…
நாக்கையும், வயிரையும் கட்டுப்படுத்தும் வித்தையை மனிதன் அறிந்திருந்தால் இவ்வுலகில் கொலை கொள்ளைகளுக்கெல்லாம் அவசியமே இருந்திருக்காதோ என்னவோ.
யுவா வீட்டு சமையலுக்கு நாக்கை அடிமையாக்கி இருந்தவரோ அதையெல்லாம் செவியில் ஏற்றாமலே, மைதாமாவு பசை நிரம்பிய பாத்திரத்தை ஏதோ கோவில் பிரசாதம் போல் கொண்டு போய் தன் பைக்குள்ளே வைத்து விட்டு,
“கீப் கொய்ட் ஸ்டுடென்ட்” என்று பாடப்புத்தகத்தைக் கையில் எடுத்தார்.
ஆசிரியர் பாடப்புத்தகத்தை எடுத்தப் பின்னரே, “மனுஷன் இப்பாவாச்சும் ஆரம்பிச்சாரே” என்ற சம்யு குறிப்பேடைத் திறந்து வைக்க…
“ஆ ஆ ஆ” என்று ஒரு கொட்டாவியை வெளியேற்றிய ப்ரித்திவோ, “யுகீ டிபன திறந்து பாக்குறவர நான் என்ன பண்ணாலும் அந்த சொட்டத்தலை கண்டுக்காது. நான் கொஞ்சநேரம் தூங்குறேன். பாடத்தை நீ கேப்ச்சர் பண்ணிக்கோ” என்றவன் கண்ணில் ஒரு கூலர்சை மாட்டிக் கொண்டு சம்யுவின் தோளிலும் லேசாகச்சாய்ந்து கொண்டான்.
பாடம் நடக்கும் பொழுது அவனை ஒன்றும் சொல்ல முடியாமல்,
“ஈவ்னிங் அவர்ட்ட நல்லா மாட்டப்போறடா நீ. இப்டி பிராட் பண்ணி மார்க் வாங்குறதுக்கு பதிலா ஒழுங்கா கிளாச கவனிக்கலாம்ல” என்று கிசுகிசுத்து விட்டு அவனிடம் எந்த பதிலும் இல்லாது போக அவனுக்கும் சேர்த்து பாடத்தை கவனிக்கத் தொடங்கினாள் சம்யுக்தா.
இரவு அவனுக்கு நெஞ்சு வலிக்க விளக்க வேண்டுமல்லவா.
மனித உடலின் எலும்புகள் மற்றும் தசைகள் கூடும் இடங்களில் ஏற்படக் கூடிய காயங்கள், தொற்றுகள், கட்டிகள் மற்றும் பிறவி கோளாறுகளுக்கும் கூட அறுவை சிகிச்சை மூலமும் அறுவைசிகிச்சை அல்லாத பிசியோதெரபி முறையும் பயன்படுத்தி எவ்வாறெல்லாம் சிகிச்சை அளிக்க முடியும் என்பதை அவர் விளக்கப் பாடமாக சொல்லிக் கொடுத்து விட்டுச் செல்லவும், அடுத்து நுண்ணிய கருவிகள் கொண்டு செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் (Surgery) பற்றிய விளக்க வகுப்பும் நடந்து முடிக்க மணி மாலை ஐந்தையும் தொட்டிருந்தது.
வகுப்புகள் முடிந்ததற்கான மணியும் ஒலிக்க அனைவரும் மெல்லக் கலைந்து சென்ற நேரம் ப்ரித்திவியை நெருங்கிய நண்பர்களோ, “டேய் ப்ரீ… நமக்கு நாள் அதிகம் இல்லைடா. பிளட் டொனேசன் போஸ்டர இன்னிக்கு பாதி நாளைக்கு பாதின்னு ஒட்டி முடிச்சுடலாம். பசையக் கொண்டு வந்தியா?” என்று கேட்க… அப்பொழுது தான் ப்ரித்வி சம்யு இருவருக்குமே அந்த ஆசிரியரின் ஞாபகம் வந்து ஆசிரியர்கள் ஓய்வறையை நோக்கி ஓடினர்.
அங்கே பணி எல்லாம் முடிந்து ஆசுவாசமாக அமர்ந்திருந்தவரோ பசையை பாயாசம் என்று நினைத்து இரு கரண்டிகள் அள்ளி வேகவேகமாக வாயில் திணித்தவர் மூன்றாவது கரண்டியை வைக்க வாயைத் திறக்க அந்தோ பரிதாபம் அது திறப்பேனா என்று பசை போட்டது போல் ஒட்டிக் கொண்டது.
போட்டதும் பசைதானே…
“ஆ ஆ…” என்று வாயைத் திறக்க முடியாது தவித்தவருக்கு அப்பொழுது தான் மழுமழுவென்ற அதன் சுவையும் புத்தியில் உரைத்து, “என்ன பாயசம் இனிப்பாவே இல்லை?” என்று எண்ணிய சமயம் சரியாக அறைக்குள் நுழைந்த சம்யு ப்ரித்திவிற்கும் கூட அவர் நிலையைக் கண்டு சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது.
இருந்தும் சூழ்நிலை கருதி அதை அடக்கிக் கொண்டு அவரருகில் சென்ற சம்யுவோ, “சார் சார் ஒரு சின்ன தப்பு நடந்துடுச்சி சார். ப்ரித்வி தெரியாம பசைய பாயசம்னு கொடுத்துட்டான். சாரி சார்” என்க
அவரோ, “கொஞ்சம் முன்ன வந்து இத சொல்லிருக்கக் கூடாதாம்மா?” என்பது போல் அவளைப் பாவமாகப் பார்த்தவர் ப்ரித்திவியை ஏகத்துக்கும் முறைத்தார்.
இரு கையையும் இரு புற கடவாயில் வைத்து வாயைத் திறக்க முயற்சி செய்து தவித்தவரைக் கண்டு ப்ரித்திவிற்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.
ஆனாலும் அவர் தோற்றம் தோற்றுவித்த சிரிப்பை அடக்க முயன்றவனோ, “சாரி சார் டிபன மாத்திக் கொடுத்திட்டேன். நீங்க சாப்புடறதுக்குள்ள தடுக்கலாம்னு ஓடோடி வந்தேன். ஆனா அதுக்குள்ள சோலி முடிஞ்ச்சு சார்” என்று உண்மையும் பொய்யும் கலந்து கூறியவனை இப்பொழுது சம்யுவும் சேர்ந்தே அப்பட்டமாக முறைக்க…
பெண்ணவளின் முறைப்பில் தான் நிலைமையின் தீவிரம் உணர்ந்தவனும், “ஓகே பப்ளி முறைக்காத. நான் சிரிக்கல” என்று விட்டு அங்கிருந்த ஜெல் ஆயில் போன்ற மருந்துப் பொருட்களை வைத்து அவரின் வாயைத் திறப்பதற்கு உதவி செய்யத் தொடங்கினான் ப்ரித்திவ்ராஜ்.
அத்துணை நேரம் விளையாட்டுப் பாலகன் போல் இருந்தவன் நொடியில் மருத்துவனாய் உருமாறி அவர் வாயில் உள்ள பசையெல்லாம் அகற்றி அவருக்கு வாய் கொப்பளிக்க நீரையும் கொடுத்து விட்டு, “இப்போ ஓகே வா சார். ஏதும் பிரச்னை இல்லையே? தாடை வலிக்கு ஏதும் டேப்லெட் எடுக்கவா சார்?” என்று அக்கறைக் குரலில் வினவியவனை விழி எடுக்காது பார்த்திருந்தாள் சம்யு.
சக உயிரின் வேதனையைப் புரிந்து குரலில் கூட அக்கறை காட்டுவது வைத்தியனின் முக்கிய அம்சத்தில் ஒன்றல்லவா. ப்ரித்திவியின் குறும்பு ஒரு அழகென்றால் அவன் படித்த படிப்பின் வெளிப்பாடோ தனி அழகாய் மிளிர்ந்தது.
அவன் அவளுடனே இருப்பதற்காக மருத்துவத்துறையை தெரிவு செய்திருந்தாலும் நிச்சயம் ஒரு சிறந்த மருத்துவனாய் வருவதற்கான தகுதிகளை இப்பொழுதெல்லாம் அவனிடம் அதிமாகவே கண்டு வருகிறாளே சம்யு.
ப்ரித்திவியின் மேல் கோபம் இருந்தாலும் அவன் செய்த உதவிக்கு நன்றி கூறியவர்,
“இத மொதோ எடுத்துட்டு கிளம்பு” என்று பசைப் பாத்திரத்தை தள்ளி வைக்க…
அவனும், “தேங்க்ஸ் சார்” என்று விட்டு அதை எடுத்துக் கொண்டு அறை வாசலை நோக்கி நடந்தான்.
“டேய் பாவம்டா அவரு” என்று சொல்லிக்கொண்ட சம்யுவும் சிரிப்பும் முறைப்புமாய் அவன் பின்னோடே நடக்க… அவர்கள் வெளியேறப் போன நேரம் அவர்களை கைதட்டி அழைத்தவரோ, “பாயச டிபன் மாறிருச்சுன்னு சொன்னியே. மாறுன அந்தப் பாயாசம் எங்க?” என்று தாடையைப் பற்றிக் கொண்டே வினவ…
“இவ்ளோ பட்டும் திருந்தலையா இவரு” என்று சம்யுவே இப்பொழுது தலையில் அடித்துக் கொண்டாள்.
“இன்னும் பாயசத்த விடுறாரான்னு பாத்தியா. சரியான அரிசி குடோன்” என்று முணுமுணுத்துக் கொண்ட ப்ரித்திவும்…
“அது வந்து சார்… அது சார்… பாயச டிபன பசைன்னு நினச்சு தொறந்தோமா. திறந்த வேகத்தில, வேகத்தில பாயசம் பூராம் கீழ கொட்டி பாலா போய்டுச்சு சார்” என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டவனைப் பார்த்து…
“எல்லாம் போச்சா?” என்று அவர் முகமும் தொங்கிப் போக…
“டேய் போதும்டா திவா…வா” என்று அவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வெளியே வந்த சம்யுவோ வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்கி விட்டாள்.
சிரிப்பினூடே, “திவா உன்ன… நீ பண்றது ரொம்ப ஓவர்டா” என்று பாடப் பையைக் கொண்டு அவனை அடித்தவளோடு இணைந்து சிரித்தவனும், “அவர் வாய்க்குள்ள இருந்த பசைக்கி ரெண்டு நாளைக்கு தண்ணி கூட குடிக்க முடியாம எரியும். அப்பவும் அடங்காம அந்த வழுக்கை பாயசம் கேட்டத விடவா நான் பண்ணது ஓவர்” என்று அவளின் அடிகளைப் பெற்றுக் கொண்டே நின்றவனோடு தோழர்களும் வந்து இணைய… அடுத்து வந்த ஒரு மணி நேரம் அவர்களின் கலகலப்பிற்குப் பஞ்சமில்லாது நகர்ந்ததோடு அவர்கள் எடுத்துக் கொண்ட வேலையையும் சிறப்பாகவே செய்து முடித்திருந்தனர் இளைஞர் பட்டாளம்.
இன்னும் பத்து நாட்கள் கழித்து இறுதிவருட மாணவர்கள் அனைவரும் இணைந்து ரத்த தான முகாம் ஒன்று நடத்த வேண்டி இருந்தது கல்லூரியின் சார்பாக.
அந்த நாளில் பெண்கள் ஆண்கள் அனைவரும் இணைந்து பொதுமக்களுக்கு ரத்ததானம் பற்றிய விழுப்புணர்வை ஏற்படுத்தி, முடியும் மட்டும் குருதி சேகரித்து அந்தக் கல்லூரியோடு இணைந்த மருத்துவமனைக்குக் கொடுக்க வேண்டும் என்பது அக்கல்லூரியின் விதி. அதற்கு அவர்களுக்குத் தனியான மதிப்பெண்களும் (கிரேடு) கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கான விளபம்பர சுவரொட்டியைத் தான் நகரத்தின் முக்கிய இடங்களில் ஒட்டி முடித்தவர்கள், “பாய்டா மச்சான். சீயு சம்யு” என்று விடைபெற்று வீட்டிற்குக் கிளம்பினர்.
மணி இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருக்க, “அந்த வழுக்க தல வாத்தி இன்னிக்காச்சும் இம்போர்ட்டண்ட்டா ஏதும் சொல்லிக் கொடுத்துச்சா யுகி?” என்று கேட்டவனின் பிளாக்கியும் அவர்களின் ஊர் எல்லையைத் தாண்டி இருந்தது.
“ம்ம்ம் ஹியூமனோட ஒவ்வொரு போன் சென்சிட்டிவிட்டியும் எப்டி சர்க்குலேசன் ஆகுதுன்னு செம்மையா க்ளாஸ் எடுத்தார்டா. நீதான் மிஸ் பண்ணிட்ட” என்று அவன் தோளில் ஒரு அடியை வைத்தவளிடம்…
“நீ இருக்கும் போது எனக்கு என்ன கவல யுகி. அவர விட நீ நல்லாவே சொல்லித்தருவதான். என்ன ஒன்னு சொல்லித்தர்றப்போ பெரிய லெக்சரர் மாதிரி சீன் போடுறது தான் கொஞ்சம் ஓவரா இருக்கும்” என்று உரக்கவே சிரித்துக் கொண்டான் ப்ரித்திவ்.
அதற்கு, “ம்ம்ம்… பாவமே சின்னபையனாச்சே. கடவுள் மூளைக்கு பதிலா களிமண் வச்சு படச்சிட்டாறேன்னு பரிதாபப்பட்டு உனக்கு பாடம் சொல்லிக்குடுத்தா நான் சீன் போடுறனா?. கொரில்லா. இனிமேல் க்ளாஸ் கட்டடிச்சுட்டு யுகின்னு வா. வாய்மேலயே போடுறேன்” என்று அவன் காதைத் திருகியவள், “அப்பா வீட்டுக்கு போடா. இன்னிக்கு லெஸ்ஸன்ல கொஞ்சம் டவுட் இருக்கு. அம்மாட்ட கிளியர் பண்ணிட்டு நைட் இங்கயே சாப்ட்டு நீ வீட்டுக்கு போவியாமாம்” என்றும் சொன்னாள்.
அவள் கூற்றில், “ஏய் யாரப்பாத்து? நானா சின்னப் பையன். அய்யாவோட ஹைட்டுக்கே காலேஜ்ல எவ்ளோ கேர்ள் பேன்ஸ் இருக்காங்கன்னு தெரியும் தான?” என்று அவளிடம் விடாது வம்பு வளர்த்தவன் அவள் வார்த்தைக்கு மாற்றே இல்லை என்பது போல் அடுத்த ஐந்து நிமிடத்தில் அத்தை ஜானுவின் வீட்டின் முன்னால் தன் வாகனத்தை நிறுத்திய சமயம் அங்கே ஏற்கனவே நின்றிருந்த யுவாவின் ராங்குலரோடு, “இதுதான் காலேஜ் முடிஞ்சு வர்ற நேரமா?” என்று அவனின் கம்பீரக் குரலும் வீட்டின் உள்ளிருந்து உரக்க வெளிவந்தது.