தந்தையின் வாகனத்தை அத்தை வீட்டு வாயிலில் பார்த்ததுமே, “என்னடி… எட்டுமணிக்கே காட்பாதர் காத்து பாசமலர் வீட்டுல வீசுது” என்று சொல்லிக்கொண்டே தன் பிளாக்கியை சம்யு வீட்டு போட்டிக்கோவில் சொருகினான் ப்ரித்திவ்.
வாகனம் நின்றதுமே வேகமாக இறங்கியவளும், “இன்னிக்கு மாசக்கடைசி திவா. தோட்டத்துல தேங்கா வெட்டிருப்பாங்க. மறந்துட்டியா?” என்று மாமன் வரும் பொழுதுகளை சரியாக கணித்தவளிடம்,
“அட ஆமால்ல” என்று சொல்லிக்கொண்டவனும்
“அது எப்ட்றி உங்க மாம்ஸ் அவரையே மறந்தாலும் அவரோட பாசமலருக்கு செய்றத மட்டும் டைமிங் மிஸ்ஸாகாம செய்றாரு. அம்புட்டு பாசமா?” என்று வினவியபடியே போர்ட்டிக்கோவைத் தாண்டிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
“டேய் கத்திமூக்கா எங்க மாமாவக்கிண்டல் பண்ணாத. நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அவங்க பாசமலர் சிவாஜி தான்டா” என்று சண்டைக்கு நின்றவள், “அப்புறம் அய்யா மட்டும் என்னவாம்? ராஹிஅண்ணி, சாஹிஅண்ணியோட (ப்ரித்திவின் இரட்டை சகோதரிகள்) பிறந்தநாள், கல்யாணநாள்னு எல்லாத்துக்கும் எங்க இருந்தாலும் தவறாம கிப்ட் அனுப்புறவன் என் மாமாவ கிண்டல் பண்றியா?” என்று பதில் கொடுத்தவளும் ப்ரித்திவியை பின் தொடர்ந்து வீட்டினுள் நுழைய…
“இது தான் காலேஜு முடிஞ்சு வர்ற நேரமா?” என்று மகனை முறைத்துக் கொண்டே கேட்டான் அங்கு நடுநாயகமாக வீற்றிருந்த யுவராஜ்.
அவன் கேட்ட தோரணையில் சற்றே சினம் துளிர்த்தவனும்,
“என்னவோ ஊர் சுத்திட்டு வர்றபோல கேக்கறீங்களே. காலேஜ்க்கு தான போயிட்டு வர்றோம்” என்று தகப்பனுக்குக் குறையாத முறைப்பில் சொல்ல…
அதற்குள், “எப்ப வந்திங்க மாமா…” என்று யுவாவிடம் ஓடி அவனருகில் அமர்ந்து கொண்டாள் சம்யுக்தா.
மாமன் மீதான பாசத்தோடு தந்தை மகனின் வாக்குவாதத்தை தடுக்கும் மார்க்கமும் அவள் செயலில் தெரிந்தது.
அவனும், “இப்போ தான் வந்தேன் யுக்தாமா” என்று முறைப்பை மறந்து மருமகளின் தலையைத் தடவ…
அதற்குள், “வா ப்ரித்விமா… வா மாப்புள” என்று சம்யுவின் பெற்றோரும் சமையலறையில்
இருந்து வெளிவர, அவர்கள் பின்னோடே கையில் தேநீர் குவளையுடன் வந்து சேர்ந்தான் நவீன்.
அத்தைக்கும் மாமனுக்கும் தலையசைத்த ப்ரித்திவோ,
‘நீயும் இங்கதான் இருக்கியாடா?’ என்பது போல் நவீனையும் பார்த்து விட்டு சம்யுவின் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்து கொள்ள, அண்ணனுக்கு கொண்டு வந்த தேநீரை யுவாவிடம் கொடுத்த ஜானுவும், “உங்களுக்கும் டீ கொண்டு வரவாப்பா” என்று சிறியவர்களிடம் கேட்டாள்.
அதற்கு ப்ரித்திவும், “ஏழு மணி தாண்டுனா யுகீ டீ குடிக்க மாட்டாள்ளத்த. அவளுக்குப் பால் எனக்கு மட்டும் டீ” என்று சொல்ல…
தம்பியின் அருகில் வந்தமர்ந்த நவீனோ, “டேய் அவங்க தான் யுக்தாவ பெத்தவங்கடா. அவங்களுங்குத் தெரியாதா” என்று கிண்டல் குரலில் ஞாபகப் படுத்தினான்.
அதற்கு, “சோ வாட்? அத்த ஒர்க் டென்ஷன்ல மறந்துருப்பாங்கன்னு சொன்னேன்” என்று சிரித்துக் கொண்டவனும் அமர்ந்திருந்த இருக்கையில் கையை காலை பரத்தி ஒய்யாரமாக சாய்ந்து கொண்டவனை மீண்டும் முறைத்து விட்டு சம்யுவிடம் திரும்பிய யுவாவோ, “மணி எட்டாகுதே. ஏன்டாமா இவ்ளோ லேட்டு? ஸ்பெஷல் கிளாஸ் ஏதும் இருந்துச்சா?” என்று வாஞ்சையாக வினவினான்.
அதைப்பார்த்து தொண்டையை செருமிக் கொண்டவன், “கொஞ்சம் முன்ன என்கிட்ட பேசுறப்போ மட்டும் இந்த குளு குளு குரல ஏதாவது இசைக்குழுவுக்கு வாடகைக்கு விட்டிருந்தாரா உங்க சித்தப்பு” என்று நவீனின் காதைக் கடித்த ப்ரித்திவின் வார்த்தையில்
அருகில் இருந்த சம்யுவிற்கும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
தன் முகத்தையே பார்த்திருந்த மாமனை மனதில் வைத்து சிரிப்பைக் கட்டுப்படுத்தியவள் தாங்கள் தாமதமாய் வந்ததற்கான காரணத்தைக் கூற, அதைக் கேட்டு “ரொம்ப நல்லதுடா” என்று சொல்லிக்கொண்டவனோ,
“வெளி வேலைக்குலாம் பொம்பள புள்ளைய ஏன்டா கூட்டிட்டு சுத்துற? நீ மட்டும் போகவேண்டியது தான. நைட் நேரம் ஏதாவது பிரச்னைன்ன என்ன செய்றது” என்று மகனிடம் காய்ந்தவனுக்கு ப்ரித்திவ் பதில் கூறும் முன்னே, “திவா கூட இருக்கப்போ எந்த பிரச்சனையும் வராது மாமா” என்று மாமனிடமே மாமன் மகனிற்கு வக்காலத்து வாங்கினாள் சம்யு.
அவர்கள் மீண்டும் வாக்குவாதம் துவங்கிவிடக் கூடாதே என்ற அவசரத்தோடு.
மருமகளை அறிந்த மாமனாய் அவள் கூற்றில் சிரித்துக் கொண்டாலும், “ம்ம்ம்… நீ சொல்றதும் சரிதான் யுக்தாமா. அவனே போதும் போதும் மட்டும் பிரச்னை பண்ணிடுவானே. வெளிப்பிரச்சனைக்கு வாய்ப்பு கம்மிதான்” என்று அப்பொழுதும் மகனையே வாரி விட்டு, “சரிம்மா நான் கிளம்புறேன்” என்று எழுந்து கொண்டவன் நவீனையும் திரும்பி பார்த்து, “புள்ளைகளுக்கு இளநி சீவிக் கொடுத்துட்டு நீயும் அவன் கூடவே வந்துடுறியாப்பா?” என்று கேட்க…
அதற்காகவே காத்திருந்தார் போல் நவீனும் பூம்பூம் மாடாய் தலையை ஆட்டினான்.
யுவா கிளம்பிச் செல்லவும்,
“அத்த உங்க அண்ணாத்தைக்கு இருந்தாலும் இவ்ளோ தெனாவட்டு ஆகாது. பெத்த புள்ளைன்னு கொஞ்சமாச்சும் பாசம் இருக்கா? ஏதோ கொலை குற்றவாளிட்ட பேசுற ஜெயிலர் போலவே பேசுறாரு” என்று தேநீரோடு வந்த அத்தையிடம் சலித்துக் கொண்டவனிடம்…
சம்யுவோ, “உன்னப்போல வாலில்லாத குரங்க பெத்தா யாரா இருந்தாலும் அப்டித்தான்டா இருப்பாங்க. எங்க மாமாவ குறை சொல்றது விட்டுட்டு ஒழுங்கா அவங்களுக்கு பிடிச்ச போல இரு” என்று கூறிவிட்டு தனதறைக்குள் புகுந்து கொள்ள… “யாரு நான் வாலில்லாத குரங்கா? நீ வெளியவாடி உனக்கு இருக்கு” என்று பூட்டிய கதவைப்பார்த்து சப்தமாகத் திட்டிக்கொண்டான் ப்ரித்திவ்.
தேநீரோடு மருமகனின் அருகில் அமர்ந்த ஜானுவும், “அண்ணன மாறி யாராலையும் பாசம் வைக்க முடியாது ப்ரித்விமா. எல்லாருக்கும் எல்லாம் பாத்து பாத்து செய்றவங்க எல்லாம் அவங்க விருப்பப்படி நடக்கனும்னு நினைக்கிறதும் தப்பில்லையே?.
நீ அவங்க பேச்சகேட்டு நடந்துருந்தின்னா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்” என்று மருமகனின் தோளை வருடினாள்.
எல்லா தந்தையரையும் போல
சில வருடங்கள் முன்னால் பன்னிரென்டாம் வகுப்பை முடித்த மகனிடம் யுவாவிற்கும் சில பல எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தது.
மகன் தன்னுடைய பிரதிநிதியாக தான் சொல்வதைக் கேட்டு, தான் படித்ததையே படித்து, தன்னுடைய தொழில் துறையிலே கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை கொண்டவனுக்கு “யுகியோடு சேர்ந்து நீட் தேர்வு எழுதப்போகிறேன்” என்று வந்து நின்ற மகனின் வார்த்தைகள் மிகுந்த ஏமாற்றத்தையே கொடுத்தது.
சில பல வாக்குவாதங்களுக்குப் பின்னர் ப்ரித்திவின் பிடிவாதமே வெற்றி பெற்றாலும், நீட் தேர்வு எழுதியவனோ தோல்வியைத் தான் சந்தித்தான்.
அப்பொழுதும் அடங்காமல் சம்யுவோடு தான் படிப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்றவனைக் கண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற சம்யுவே நான் வேறு படிக்கிறேன் மாமா என்று சொல்லவும் ஆசை மாமனுக்கோ மனசு கேட்கவில்லை.
சம்யுவோடு சேர்த்து மகனுக்கும் பல லட்சங்களைக் கட்டி திருநெல்வேலியிலே சிறந்த மருத்துவக் கல்லூரியில் சீட்டைப் பெற்றுக் கொடுத்தவனுக்கு அப்பொழுதில் இருந்தே மகனின் மீது சிறு அதிருப்தி இருந்து கொண்டு தான் உள்ளது.
இயற்கை வடிவமைத்து வைத்த தந்தை எனும் வடிவத்திற்குள் யுவாவும் விதிவிலக்கில்லாது பொருந்தி இருந்தான்.
போதாதற்கு ப்ரித்திவின் விளையாட்டுச் செயல்களாலும் மகனோடான யுவாவின் நெருக்கம் குறைந்து கொண்டே செல்ல, அன்றைய நாளுக்குப்பின் சம்யு ப்ரித்திவின் நெருக்கமோ அதிகரித்துக் கொண்டே இருந்தது.
அத்தை கொடுத்த தேநீரை அருந்தி முடித்தவன், “நான் டாக்டர்க்கு படிக்கணும்னு தான அத்த ஆசைப்பட்டேன் அது என்ன அவ்ளோ பெரிய தப்பா?” என்று ஜானுவிடம் விடாது வாக்குவாதம் செய்ய…
“இங்க தப்பு ரெண்டு பேரு மேலையுமே இல்லை. ஒரு தந்தையா அவர் ஆசைப்பட்டதும் சரிதான். ஒரு மகனா நீ உன்னோட பாதையை தேர்ந்தெடுக்க நினைச்சதும் சரிதான். ஆனா நீ யுக்தாக்காக மட்டும் இந்த பீல்ட் தேர்ந்தெடுத்ததா அண்ணா நினைக்கிறாங்க. மருத்துவ படிப்பும், மருத்துவமும் ஈஸியானது இல்லைன்னு அவங்களுக்கும் தெரியுமே. ஒரு சிறந்த டாக்டரா நீ உன்ன ப்ரூப் பண்றப்போ அவங்க தான் முதல்ல பெருமைப்படுவாங்க நீ வேணா பாரேன்” என்று அண்ணன் மகனை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினாள் ஜானு.
பல வருடங்களாய் மருத்துவத் துறையில் இருக்கும் அத்தையின் பேச்சை அமைதியாக கேட்டிருந்தவனும், “என்ன இருந்தாலும் நீங்க உங்க பாசமலர விட்டுக் கொடுக்க மாட்டிங்களே” என்று சொல்லிக்கொண்டே அவள் மடியில் தலையை வைத்துப் படுத்துக்கொள்ள, அப்பொழுது தான் குளித்து உடை மாற்றி வந்தவளோ, “என்னடா படுக்கைய போடுற. லெஸ்ஸன்ல டவுட் க்ளியர் பண்ணனும் சொன்னேன்ல. போய் மூஞ்சியாது கழுவிட்டு வாடா மூஞ்சீறு. அம்மா வேற டிபன் பண்ண போயிடுவாங்க” என்று கையோடு கொண்டு வந்த குறிப்பேடை வைத்தே அவன் தலையில் நங்கென்று ஒரு அடியை வைத்தாள் சம்யுக்தா.
அதில், “ஆ ஆ ஆ… வலிக்குதுடி” என்று தலையை தேய்த்தவாறே எழுந்தமர்ந்தவனோ, “கொஞ்சம் முன்ன குரங்கு இப்போ மூஞ்சீறா? இருடி வர்றேன்” என்று அவளை அடிப்பதற்குத் துரத்த…
“ஏய் வேணான்டா. இனிமேல் குரங்குன்னு சொல்லமாட்டேன். மங்கினு மட்டும் சொல்றேன்” என்றவளும் அவனிடமிருந்து தப்பித்து வீட்டைச் சுற்றி ஓடத் தொடங்கினாள்.
அவள் அடித்த அதே குறிப்பேடை வைத்துக் கொண்டு, “நீயே ஒரு வெள்ளெலி. என்ன மங்கினு சொல்றியா உன்ன நான் சும்மா விடப்போறதில்லடி. நில்லுடி குள்ளவாத்து” என்று கத்தியவாறு வீட்டின் வரபேற்பறை, சமையலறை, படுக்கை அறை என்று அத்தனை அறைக்குள்ளும் புகுந்து புகுந்து வெளியேறியவளை, அடிப்பது போல் பாவனை செய்தாலும் ஒரு அடிகூட அவள்மேல் விழாது துரத்தியவனின் செல்லச் சண்டையை கதிர் ஜானுவோடு சேர்த்து உதட்டில் உறைந்த புன்னகையோடே நவீனும் அவர்களை ரசனையாகப் பார்த்திருந்தான்.
அதிலும் ஒரு படி மேலே போய், “இவர்கள் எப்பொழுதும் இதே மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். தனக்கும் சம்யுவிற்கும் திருமணம் முடிந்தாலும் கூட அவர்களுக்கான அந்த இடத்தில் தான் குறுக்கிடக் கூடாது” என்றெல்லாம் நிமிடத்தில் பல திட்டங்கள் வகுத்த நவீனுக்கு மேலே இருப்பவன் வகுத்திருக்கும் திட்டம்பற்றி அறிந்திருக்க நியாயம் இல்லைதானே.
ப்ரித்வி, சம்யுவின் கூச்சலோடு மேலும் சிறிதுநேரம் கரைய, “இப்போ நீங்க ரெண்டு பேரும் வர்றிங்களா. நான் போய் கிச்சன் வேலைய பாக்கவா?” என்று ஜானு உரக்க வினவிய பின்னர் தான் இருவரும் சண்டையை கைவிட்டு அவள் முன்னே வந்து அமர அடுத்து வந்த மணித்துளிகள் ஜானுவின் அழுத்தக் குரல் தவிர்த்து எள் விழுந்தாலும் கேட்குமளவு அமைதியாகக் கழிய, ப்ரித்திவும் கூட சம்யுவின் கேள்விக்கான ஜானுவின் விளக்க உரையில் கட்டுண்டு அமர்ந்திருந்தான்.
அவர்களையே பார்த்தபடி கதிரிடம் உரையாடிக் கொண்டிருந்த நவீனோ மணி ஒன்பதை நெருங்குவதைப் பார்த்து விட்டு, “இளநி சீவி எடுத்துட்டு வர்றேன்த்த. வச்சு குடுச்சா சளி பிடிக்கும்” என்று கூறிவிட்டுச் சென்றவன் கைதேர்ந்த இளநீர் வியாபாரி போல் லாவகமாக அங்கிருந்த இளநீர்கள் சிலதை சீவத் தொடங்கினான்.
உடுத்தியிருந்த வெள்ளை வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அணித்திருந்த நீலநிற பருத்திச் சட்டையையும் மடித்து விட்டு நின்றவாக்கிலே, பணியாள் எடுத்து கொடுத்த சில பல இளநீர் குடுவைகளை அழகாக சீவி எடுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தவன் அத்தை, மாமனிடம் ஆளுக்கொன்றாய் கொடுத்து விட்டு, “இந்தா யுக்தா. இந்தா ப்ரித்வி இத குடிச்சிட்டு தெம்பா படிங்க” என்று அவர்களிடமும் இரண்டு இளநீர் குடுவைகளை நீட்டினான்.
“தாங்ஸ் மாமா” என்ற சம்யு இளநீரை வாங்குவதற்குள்ளாகவே, “வாத்துலாம் இளநி குடிக்காதுடி” என்று இரண்டையும் கைபற்றி ஒரே மூச்சில் குடித்து முடித்த ப்ரித்திவோ, “இளநி செம்ம டேஸ்டுடா ப்ரோ” என்று நவீனைப் பார்த்துச் சொல்ல…
‘நீலாம் நல்லா வருவடா’ என்று எண்ணிக் கொண்ட நவீனோ மீண்டும் இரண்டை சீவி வந்து சம்யுவிடம் நீட்டினான்.
ப்ரித்திவோ அவற்றையும் அபகரித்து குடித்து முடித்து ஏப்பம் விட்டவனை இப்பொழுது வெளிப்படையாகவே முறைத்த நவீனை ஒரு ஜோடி விழிகளோ ரசனையாகப் பார்த்திருந்தது.
அவனோ அதை எல்லாம் கருத்திலே கொள்ளாமல் மீண்டும் ஒரு இளநீரை சீவி எடுத்து வந்தவன், “டேய் இதையாவது யுக்திவ குடிக்கவிடுடா. அவளுக்கு செவ்வெழநின்னா ரொம்ப பிடிக்கும்” என்று கெஞ்சலாகவே கேட்க…
“காலைல யாரோ அத்த மகள இம்ப்ரெஸ் பண்ணலாம் அவசியமே இல்லன்னு அடிச்சு விட்டாங்க. இப்போ வெளிப்படையாவே இப்டி வழியிராங்க” என்று கிண்டலாய் கிசுகிசுத்தவன், “இந்தா வாய தொடச்சிக்கிட்டு உன் ரீல ஓட்டு” என்று தன் கைகுட்டையும் அண்ணனிடம் கொடுத்தான்.
அதில் தம்பியை வெளிப்படையாக முறைத்தாலும் அவனை அறியாது இதழ் ஓரம் லேசாக விரிய கையில் இருந்த இளநீரை சம்யுவிடம் கொடுக்கப்போன நேரம் அவள் அறையில் இருந்து புயல் போல் வெளியே வந்த சந்தனாவோ,
“மாமா எனக்கு இளநீ?” என்று அவனை நோக்கி கையை நீட்ட அவனோ சம்யுவை பாவமாகப் பார்த்தான்.
அவர்கள் கொண்டு வந்ததிலே அது தான் கடைசி இளநீர் என்று அந்த பார்வை சொன்னாலும், எப்பொழுதும் இளநீர் வேண்டாம் என்று சொல்லும் தங்கை இன்று அவளாகவே வந்து இளநீர் வேண்டும் என்றதில் சம்யுவும், “பரவாயில்ல மாமா அவளுக்கே கொடுங்க. நான் இன்னொரு நாள் குடுச்சிக்கறேன்” என்று இலகுவாகச் சொன்னாள்.
நவீனும் வேறு வழியில்லாது அதை சந்தனாவின் கையில் கொடுக்க அவளோ அதை வாங்கி வேகவேகமாக பருகத் தொடங்கினாள்.
அதில் நவீனோ மீண்டும் ப்ரித்திவியின் புறம் திரும்பி, “இப்போ சந்தோசமாடா” என்பது போல் முறைக்க…
சம்யுவிற்கென்று கொண்டு வந்த இளநீர்களை அவளுக்கு கொடுக்க முடியாது போனாலும் அதற்கான வருத்தம் எல்லாம் அவன் முகத்தினில் இல்லவே இல்லை. நவீனின் குணமும் அதுதான். எது வந்தாலும் அலட்டிக்கொள்ளாது இயல்பாய் ஏற்கும் குணம். எவரையும் முகம் சுணங்க வைக்காத பேச்சும் செயல்களும் கொண்டவன் அவன். பெரிதான எதிர்பார்ப்புகள் இல்லாது கிடைத்ததை வைத்து சந்தோசம் அடைந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷப்படுத்த நினைப்பவன்.
நவீனிடம் பேசிக் கொண்டே எதற்சையாக திரும்பிய ப்ரித்திவோ குடிப்பதில் பாதி இளநீரை கழுத்தடியில் வழிய விட்டுக் கொண்டிருந்தவளைக் கண்டு பல்லைக் கடித்தவன்,
“ஹேய் ஹேய் குள்ளச்சி ஒரு இளநியக் கூட உனக்கு ஒழுங்கா குடிக்க தெரியாதா?” என்று வழக்கம் போல் எழுந்து சென்று சந்தனாவின் தலையில் ஒரு குட்டை வைக்க…
அதைப் பார்த்து, “இப்போ எதுக்குடி அழப்போற எது தெரியுதோ இல்லியோ அழ மட்டும் நல்லா தெரிஞ்சு வச்சுருக்க” என்று மேலும் அவள் செவியைப் பற்றித் திருகிய ஆடவனின் செயலில் வலி தாங்காது நீர்மணிகள் திரளத் தொடங்கியது பாவையவளின் பன்னீர் திராட்சை விழிகளில்.
அதைப் பார்த்துப் பதறி, “டேய் டேய் விடுடா அவள” என்று அவர்களை நெருங்கிய நவீனோ, “எப்ப பாத்தாலும் ஏன்டா சந்தனாவ அழ வச்சுட்டே இருக்க” என்றபடி அவள் செவியில் இருந்த அவனின் கரத்தை எடுத்து விட்டவன் அவ்விடத்தை தேயத்தும் விட்டு,
“நீ அழாதமா இளநிய எப்டி குடிக்கணும்னு நான் உனக்கு சொல்லித் தர்றேன்” என்று அவளை சமாதானம் செய்ய…
அதைப் பார்த்த ப்ரித்திவோ, “எப்போ பாத்தாலும் நீ அவளுக்கே சப்போர்ட் பண்ணுடா. காலேஜ் போற பொண்ணு மாறியா இருக்கா. ஆ ஊன்னா ஊளையிட்டுக்கிட்டு” என்று சலித்துக் கொண்டவன்
சம்யுவோடு சேர்ந்து பாடத்தில் மூழ்கி விட, ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர் கதிரும் ஜானவியும்.
ப்ரித்திவியின் பேச்சை எல்லாம் சிறிதும் சட்டை செய்யாத சந்தனாவோ அவன் முதுகின் பின்னே கொன்னை வைத்துவிட்டுத் திரும்பியவள், “மாமா இளநிய எப்டி குடிக்கணும்னு நீங்க எனக்கு குடிச்சு காட்டுங்க” என்று தான் குடித்துக் கொண்டிருந்த இளநீரை நவீனிடம் நீட்ட, அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான் நவீன்.
‘அவள் குடித்ததை தான் எப்படி குடிக்க முடியும், இவ என்ன சொல்றா?’ என்ற அதிர்வில் பெண்ணவளின் முகத்தை ஏறிட்டு நோக்கிய பின்னர் தான் பால் குடிக்கும் மழலை போல் இன்னும் தேம்பிக் கொண்டிருந்தவளின் கள்ளம் இல்லாச் செயலை உணர்ந்து மூச்சை இழுத்து விட்டவன், “அது அது அது வந்து இன்னொரு நாள் மாமா உனக்கு சொல்லிதர்றேன்மா. இப்போ நீ ஸ்ட்ராவுலயே குடிக்கிறியா” என்று தான் முன்பே வாங்கி வந்திருந்த நெகிழிக் குழல் ஒன்றை அவளிடம் தந்தான்.
அவளும், “ம்ம்ம்” என்று தலையாட்டிவிட்டு அதை வாங்கி இளநீருக்குள் இட்டு சப்புக் கொட்டி குடித்தவள், “உங்கள மாறியே இளநியும் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு மாமா. இனிமேல் எனக்கும் சேர்த்து கொண்டு வாங்க” என்று சொல்லிக்கொண்டு துள்ளிக் குதித்து ஓடி விட, அவளையே பார்த்திருந்த நவீனோ, ‘ப்ரித்வி சொன்ன மாறி இன்னும் சின்னப்புள்ளயாத்தான் இருக்கா’ என்று இருபுறமும் தலையாட்டிச் சிரித்துக் கொண்டான்.
அப்படியே நேரமும் மெல்ல நகர்ந்து பேச்சுக்களும் அரட்டைகளும் தொடர அங்கேயே இரவு உணவையும் முடித்தவர்கள் பத்துமணி தாண்டியே தங்கள் வீட்டிற்குக் கிளம்பினர் நவீனும் ப்ரித்திவிராஜும்.
அடுத்து வந்த நாட்களும் மின்னலெனக் கழிய, ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த சம்யுவின் ஆஸ்தான இசையாமைப்பாளரின் நேரலை நிகழ்ச்சிக்கும் அந்தவார இறுதியில் அவளை அழைத்துப் போய் திரும்பியிருந்தான் ப்ரித்திவ். ஆட்டமும் பாட்டும் என்று அன்றையநாள் அத்துணை குதூகலமாகச் சென்றது இருவருக்கும்.
மறுநாள் திங்களன்று காலையும் இனிமையாகப் புலர, தங்களின் வழக்கமான பணிகளை எல்லாம் முடித்துக் கொண்டு வேகவேகமாக கல்லூரிக்குக் கிளம்பியிருந்தனர் ப்ரித்திவ்வும் சம்யுவும்.