இன்று கல்லூரியில் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் (Obstetrics and Gynecology) மருத்துவம் பற்றி சிறப்பு விளக்க வகுப்பு நடத்தப் போவதாக இரு நாட்கள் முன்னரே அதற்கான ஆசிரியர் சொல்லியிருக்க அனைத்து மாணவ மாணவியரும் மிகுந்த ஆவலுடனே அன்றைய வகுப்பிற்குள் கூடியிருந்தனர்.
மகப்பேறியல் என்பது கர்ப்பம், பிரசவம் மற்றும் மகப்பேற்றுக்கு பிறகான காலம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆய்வுத் துறையாகும். மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் (OB/GYN) எனப்படும் துறையின் கீழ் மகப்பேறியல் மகளிர் மருத்துவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அறுவை சிகிச்சையுடன் இணைந்த துறையும் ஆகும்.
மகப்பேறு மருத்துவம் என்பது பெண்களின் நோய்களுக்கான சிகிச்சையை உள்ளடக்கிய மருத்துவப் பகுதி, குறிப்பாக இனப்பெருக்க உறுப்புகள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் தொற்றுகள், நோய்கள் பற்றி அறிந்து, அதற்கு தீர்வு காண்பதாகும். இது பெரும்பாலும் மகப்பேறியல் துறையுடன் இணைந்து மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தின் ஒருங்கிணைந்த பகுதியை உருவாக்குகிறது.
அன்றைய வகுப்பிற்கு வந்த பேராசியர் ஒருவர் பெண்ணின் பேருகாலம் அதாவது ஒரு பெண்ணின் கருப்பையில் கரு எப்படி தங்குகிறது அது சதைப்பிண்டமாய் உருவாகி எப்படி வளர்ச்சி அடைகிறது. பின்னர் அந்த சிசு பெண்ணின் வயிற்றுக்குள் எப்படி எல்லாம் உருமாறி அப்பெண்ணின் இனப்பெருக்க அவயம் வழியே எப்படி பூமியை வந்தடைகிறது. என்றெல்லாம் ப்ரொஜெக்டர் மூலம் காட்சியாகவும் சில இடங்களை வரைபடமாகவும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க, அதைக் கவனித்து உள்வாங்கிக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களுக்குமே கடவுளின் மகிமையையும் அவன் படைத்த பெண் எனும் பொக்கிஷத்தையும் மெச்சாமல் இருக்க முடியவில்லை.
இறைவனின் படைப்பினிலே மற்ற எந்த படைப்பையும் விட மனிதப் படைப்பான ஆண் பெண்ணின் உடல் அமைப்புகளும் அதன் செயல்பாடுகளும், அதன் மூலம் மனிதன் தன் சந்ததிகளை உருவாக்கிக் கொள்வதும் மிக மிக ஆச்சர்யத்திற்குரிய விஷயமே அன்றி வேறன்றோ.
அப்படி ஒரு ஆச்சரியமான விஷயத்தையும் அவை எப்படி எல்லாம் நிகழ்கிறது என்பதையும் மருத்துவப் படிப்பின் மூலம் அக்கு வேறு ஆணிவேறாக அறிந்து ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்ட ப்ரித்திவிராஜுக்கு அவனையும் அறியாது அவனின் கரங்கள் மெல்ல மெல்ல அருகில் அமர்ந்திருந்த சம்யுவின் கரங்களைத் தேடி அவள் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டது.
அதிலும் ஒன்பதிலிருந்து பத்துமாத காலக்கெடுக்கள் அன்னையின் வயிற்றிக்குள்ளேயே சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து முழுமையான குழந்தையாய் ஒரு உயிர் வெளியே வரும் பிரசவம் எனும் நேரத்தில் அந்த பெண்ணின் உடல் எப்படியாப்பட்ட சூழ்நிலையை சந்திக்க நேரிடும், அச்சமயம் நேரக்கூடிய இன்னல்கள் என்னென்ன. அவைகளை எப்படித் தீர்ப்பது, குழந்தை வெளியேற்றத்தால் பெரினியல் (perineal) பகுதியில் உண்டாகும் கிழிசல், அதற்காகப் போடப்படும் தையல், பின்னர் நஞ்சுக்கொடி அகற்றப்படுதல் சுகப்பிரசவம் என்று வாய்வார்த்தையாய் சொல்லி விட்டாலும், அது ஒரு பெண்ணிற்கு மறுபிறவி போலத்தான் என்று ஆசிரியர் ஒவ்வொன்றாய் விளக்க விளக்க இங்கே சம்யுவின் கரத்தைப் பற்றி இருந்த ப்ரித்திவியின் பிடியிலோ மென்மை கலந்த அழுத்தம் கூடிக் கொண்டே சென்றது. ஒரு சக மனுஷிக்கு இயற்கை அளித்த வலியுடன் கூடிய பெருமை மிகும் பக்கங்களை அறிந்து கொண்ட மென்னுள்ளம் படைத்த ஆணின் மெச்சுதலும் இனம்புரியா தவிப்பும் அப்பிடியினில்.
மென்மையே உருவான பெண் எனும் பேராண்மை அவள் உயிரோடு கலந்து விட்ட ஆணின் உயிரை இப்புவியில் உதிக்கச் செய்ய பல மாத காலங்கள் அவள் சந்திக்கும் பல வித பிரச்சனைகள், உடல்உபாதைகள், அதற்கான தீர்வுகள் என்று ஒவ்வொன்றும் விளக்கி முடித்த ஆசிரியர், “சைல்ட் பெர்த்க்கான ப்ரோசீஜர் இதுதான் எவ்ரிபடி. நெக்ஸ்ட் வீக் பிராக்டிகள் கிளாஸ்ல இன்னும் விரிவா தெரிஞ்சுப்பீங்க. அப்றம் சிசேரியன் பத்தியும் அடுத்தடுத்த க்ளாஸஸ்ல பாக்கலாம். நௌ யூ வில் ஹவ் மோர் பிராக்டிகல் கிளாஸ்ஸஸ். இப் யூ ஹவ் எனி டவுட் எனிடைம் காண்டாக்ட் வித் மீ” என்றுவிட்டு வகுப்பறையில் இருந்து வெளியேற, அப்பொழுதும் சம்யுவின் கரத்தை விட்டு விடும் எண்ணமே இல்லாது பற்றியிருந்த ப்ரித்திவோ,
“யுகீ கொஞ்ச நேரம் வெளிய போலாம்டி” என்று மட்டும் சொன்னான்.
அவளும் அடுத்த வகுப்பு என்னவென்று பார்த்துவிட்டு, “நெக்ஸ்ட் ஒன் அவர் ஸ்டடி அவர்ஸ்தான் திவா. வா போலாம்” என்றவள், “கேண்டின் போலாமா?” என்று கேட்க, அவனோ இல்லை என்பது போல் தலையை ஆட்டியவன் அங்கு கல்லூரியின் மத்தியில் தோட்டம் போல் தோற்றம் அளித்த பகுதியை நோக்கி அவளை அழைத்துச் சென்றான்.
அங்கே சென்றதும் அங்கிருந்த கல் இருக்கையில் அமைதியாக அமர்ந்து கொண்டவனின் தோளில் கை வைத்த சம்யுவோ, “டேய் என்னாச்சு திவா. ஏன் ரொம்ப நேரமாவே ஏதோ போல இருக்க?” என்று கேட்க…
அவனோ, “வெரி ப்ரௌட் ஆப் யுவர்செல்ப் யுகி. ஐ மீன் யூ அண்ட் யூர் ஜெண்டர்” என்று மீண்டும் அவள் கரத்தைப் பற்றினான்.
அதற்கு அவளோ, “ஹேய் என்னாச்சுடா ஏன் திடீர்னு இப்டி பேசுற? எதுக்கு இவ்ளோ எமோஷனல்லா இருக்க?” என்று மீண்டும் வினவியவளின் வடிவான வதனத்தையே வாஞ்சையாகப் பார்வையிட்டவன், “என்னமோ தெரியல யுகி. பிபோர் இயர்ல கைனோ பத்தி நிறைய தெரிஞ்சிருந்தாலும் இன்னிக்கு லெசன்ல டீப்பா தெரிஞ்சிகிட்ட விமன் பத்தின விஷயங்கள் என்ன ரொம்ப பிரமிக்க வைக்குது. ஒரு விமன்ன விட மென் தான் போல்ட்ன்னு நான் நினைச்சிருக்கேன். ஆனா ஒவ்வொரு பிரசவத்தப்போவும் அவங்க பேஸ்பண்ற வலி, வேதனை, உடல் மாற்றங்கள் அதை எல்லாம் பொறுத்துக்கிட்டு ஒரு உயிர இந்த பூமிக்கு கொண்டு வந்து, அந்த உயிர் மேல அவங்க உயிர் இருக்க வரை உயிரா இருக்க ஒவ்வொரு மதரும் பெருமைக்கு உரியவங்கதான் இல்லியா யுகி? ஆனா அந்த மதர்க்கு எந்த ஒரு ரிடர்ன் கிப்ட்டும் நாம செய்றதில்லல” என்று தலையாட்டிக் கேட்டவனைக் கண்டு அவள் மனக்கண்ணிலும் “யுக்தாமா” என்று நெற்றி முத்தம் வைக்கும் அவள் தாயின் முகம் மின்னி மறைந்தது.
பேச்சினூடே வாலட்டில் இருந்த பெற்றோரின் திருமண புகைப்படத்தை எடுத்து அன்னையின் முகத்தையும் வருடியபடியே,
சாப்டியாமானு கேட்டிருக்கோம் யுகி? நான்கூட இதுவரை விழிமாகிட்ட அப்டி ஒரு வார்த்தை கேட்டதா ஞாபகமே இல்லடி. ஆனா இனிமேல் கேக்கணும்னு தோணுது. நம்மையே சுத்திவர்ற அம்மாக்குன்னு ஒரு டென் மினிட்ஸாவது டெய்லி ஒதுக்கனும்னு ஆசையா இருக்கு யுகி” என்றும் நீண்ட உரையாய் பேசிக்கொண்டே சென்றவனை இப்பொழுது பிரமித்துப் பார்ப்பது அவள் முறையாயிற்று.
ஆணும் பெண்ணும் பின்னிப் பிணையும் படைப்பாய் படைக்கப் பட்டிருந்தாலும் உலகில் பெரும்பாலான ஆண்களுக்கு பெண்ணின் உடற்க்கூறுகள் பற்றியோ, அவர்களின் நுண்ணிய உணர்வுகள் பற்றியோ அறிந்து கொள்ளும் வாய்ப்பு மிகவும் அரிதே.
அப்படியே அவர்களைப் பற்றி எல்லாம் அறிந்து கொண்டாலும் அதை எத்துணை ஆண்கள் பெரிதாக எடுத்து அவளுக்குறிய மதிப்பையும், அன்பையும், அரவணைப்பும் கொடுக்கிறார்கள் என்றால் அது ஆயிரத்தில் ஒன்றாகக் கூட இருக்கலாம்.
அப்படி ஆயிரத்தில் ஒருவனாகத்தான் தெரிந்தான் அவள் முன்னே சிறுபிள்ளையென அமர்ந்து தாயின் படத்தை வருடிக் கொண்டிருந்த ஆறடி ஆண்மகன்.
மாணவர்கள் அமர்ந்து படிக்கவும், இளைப்பாறவும் என்று புங்கை மரங்களின் அடியில் காற்றோற்றமான சூழலில் போடப்பட்டிருந்த நீளக் கல்விருக்கையில் அமர்ந்திருந்தவனையே நொடிகள்சில விழி எடுக்காது பார்த்திருந்தவள் அவன் கலங்குவது தாளாது சட்டென்று அவனை ஒட்டிக்கொண்டு அமர்ந்தவாறே, “உன்னோட பீலிங்ஸ் நூறுக்கு நூறு கரெக்ட்டா திவா. நீ மட்டும் இல்லை என்னோட சேத்து கிட்டத்தட்ட எல்லாருமே பெண்கள, அம்மாவ வேலை செய்யுற மிசின் மாதிரி தான் பாக்குறோம். அவங்களுக்குன்னும் பலவித ஆசைகள் உணர்வுகள் இருக்கும்னு கூட யாரும் யோசிக்கிறதில்ல. நான்கூட ஜானும்மாட்ட நீங்க சாப்பிட்டீங்களா தூங்குனீங்களான்னு கேட்டதே இல்லடா” என்றவளின் குரலும் சற்றே தழுதழுத்தபடி வெளியேற…
இப்பொழுது அவன் உணர்வுகளை மறந்து “யுகீ என்னடி இது. இதுக்கு ஏன் அழப்போற?” என்று அவளை தேற்றுவதில் இறங்கி விட்டான் ப்ரித்திவ்.
இத்துணை நேரம் அவன் உணர்வுக் குவியலாய் இருந்த பொழுது உரைக்காத சுற்றுச் சூழலையும் அப்பொழுதுதான் உணர்ந்தவன், “ஹேய் நான்தான் மாங்கா மடையனாட்டம் இது காலேஜ்ங்கறத மறந்து என்னென்னவோ பேசறேன். நீயும் தேங்காய் மடச்சியாட்டம் அழறியே” என்று அவளோடு சேர்த்து தன்னையும் இயல்பாக்க முயன்றவனின் முயற்சி புரிந்து…
“தேங்காய் மடச்சியா? யாரு நானா? நீ மாங்கா மடையன்னு உண்மைய ஒப்புக்கறதுனா ஒப்புக்கோ. என்ன ஏன்டா உன்னோட கூட்டு சேக்குற?” என்று இடுப்பில் கைவைத்து முறைத்தவள் தொடர்ந்து, “கில்ட்டியா இருக்குடா திவா” என்று வருத்தமும் கொண்டாள் முந்தைய பேச்சையும் விடாமல்.
அவள் பதிலடியில் தோன்றிய முறுவலோடு, “ம்ம்ம் நம்ம கில்ட்டிய போக்க இன்னிக்கு ஒரு வேலை செய்வோமா யுகி?” என்று சடுதியில் குரலை துள்ளலாக்கிக் கேட்டவனின் எண்ணவோட்டத்தைப் படித்தவளோ,
“மூனு மாம்ஸ்க்கும் என்னடா வாங்கிக் கொடுக்கலாம்?” என்று வினவினாள்.
அதில், “நீ தேங்கா மடச்சி மட்டுமில்லடி அந்த தேங்கா மேல வச்சு சாமிக்கு காட்டுற கற்பூரமும் கூட” என்ற வாரலோடே அவள் கன்னம் கிள்ளியவன், “உன்கிட்ட எவ்ளோ இருக்கோ குடு. நான் என்கிட்ட இருக்க பணம் எல்லாம் எடுக்கறேன். காலேஜ் முடிச்சிட்டு கடைக்குப் போறோம். விழிமா, பெரியம்மா, அத்தக்கினு கண்ல படுற எல்லாம் வாங்குறோம். அத அவங்ககிட்ட கொடுத்து அவங்க கூடவே இன்னிக்கு முழுசும் டைம் ஸ்பென்ட் பண்றோம்… என்ன யுகி சொல்ற” என்று பெரிய திட்டமே தீட்டிவிட்டான் ப்ரித்திவ்.
“ம்ம்ம் டீல்டா திவா. அப்டியே மாமாக்களுக்கும், அப்பாக்கும் கூட ஏதாவது வாங்கலாம்டா. கோல்டன் பிஷ் வாங்க வச்சிருக்க மணியையும் எடுத்துப்போம். அப்றம் வருஷ வருஷம் இதேபோல செலிபிரேட் பண்லாம்டா” என்று தலையாட்டிச் சிரித்தவளை “ம்ம்ம் செஞ்சிட்டாப் போச்சு” என்று கைகொடுத்து தூக்கி விட்டவன் அவளோடு இணைந்து வகுப்பறை நோக்கிச் செல்ல, அடுத்து வந்த மணித்துளிகளை அவர்களின் கல்வி கற்றல் தனதாக்கிக் கொண்டது.
திட்டமிட்டது போலவே மாலை கல்லூரி முடிந்து சென்றவர்கள் தங்கள் இருவரின் பெற்றோரோடு நவீனின் பெற்றோருக்கும் சில பொருட்களை வாங்கிச் சென்று கொடுத்து கூடவே “ஐ லவ் யூ… லவ் யூ” என்று சொல்லி சிலபல முத்தங்களும் பதித்து, ஒரு பெரிய கேக் ஒன்றும் வைத்து மூவரையும் ஒன்றாக வெட்டவைத்து ஊட்டிவிட மூன்று அன்னையரின் முகத்திலும் அத்துணை ஒரு மகிழ்ச்சியும், பூரிப்பும்.
“என்ன இங்க ஆர்ப்பாட்டம்?” என்று மகனை முறைத்தபடி அங்கு வந்த நின்ற யுவாவும், “மாமா இது உங்களுக்காக” என்று மருமகள் கொடுத்த “டைட்டன் மென் பிரின்டட் டைல்” கைக்கடிகாரத்தை மறுக்காது பெற்றுக் கொண்டவன் அதை மணிக்கட்டில் வைத்து அழகும் பார்க்க, அதை தேர்ந்தெடுத்து வாங்கியவனோ தந்தையை தனைமறந்து பார்த்திருந்தான்.
மூன்று பெற்றோரோடு நவீனும் கூட அவர்களின் திடீர் செயலுக்கான காரணத்தை அறியாவிட்டாலும், ‘என்றும் இவர்கள் இதேபோல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’ என்று எண்ணிக்கொள்ள…
அவர்களைப் பார்த்து தன் வழக்கமான சிரிப்பைச் சிந்தினார் கடவுள்.