புல்லினங்கள் உறங்கும் அதிகாலை வேளையில் வழக்கமான அலார சப்தத்தில் விழிப்புத்தட்டியதும் அன்னிச்சையாக அருகில் இருந்த கைபேசியை தேடி எடுத்து அதன் சப்தத்தை நிறுத்தினாள் அரை உறக்கத்தில் இருந்த சம்யுக்தா.
நேற்றிரவு வெகுநேரம் கழித்தே உறங்கியவள் கண்களை நன்கு கசக்கி விட்டுக்கொண்டே கைபேசியை கீழே வைக்க முயன்றவளின் மிச்ச மீதி உறக்கமும் அதன் தொடுதிரையில் சிரித்துக்கொண்டு நின்றவன் மீது படிந்த நொடி இருந்த இடம் தெரியாது காணாது போனது.
அவள் கைகள் மீண்டும் அன்னிச்சை செயலாய் அவன் நிழல் படத்தை வருட இப்பொழுது பெண்ணின் அகன்ற விழிகளுக்குப் போட்டியாக பாவயவளின் பவள இதழ்களும் அழகாய் விரிந்து இளம்நகை ஒன்றை உதிர்த்தது.
அதிலும் அந்த நிழல் படத்தில்
அவன் நின்றிருந்த தோற்றத்தில் இளம் புன்னகை கிண்கிணி சிரிப்பாய் மாற, “மங்கி, கொரில்லா, பஃப்பல்லோ, ரினோசரஸ்” என்று தன்னையும் அறியாமல் அவனை வையத் தொடங்கிவிட்டாள் பாவை.
மூன்று வருடங்கள் முன்பு ஏதோ தவறு செய்துவிட்டு அவளிடம் மாட்டிக்கொண்டவனை அவள்
ஒரு கையால் விரல் நீட்டி எச்சரித்து, மறுகையால் அவன் காதைப்பிடித்துத் திருகி திட்டிக் கொண்டிருந்த தருணம் தான் அதில் நிழல் படமாய் இருந்தது.
அவனின் தோள் அளவே உயரம் உள்ளவளின் உயரத்திற்கு ஏற்ப குனிந்து, அவளுக்கு பயந்தது போன்ற பாவத்தில் அவள் வசவுகளை வாங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தில் தான் எத்துணை ஒரு மகிழ்ச்சி.
நீ எனக்கு என்ன கொடுத்தாலும் நான் உனக்கு புன்னகை மட்டுமே கொடுப்பேன் என்பது போன்ற பாவம். அவள் ஏசினாலும், அடித்தாலும், அவனுக்கு அது வலித்தாலும் அவளிடம் அன்பையும், சிரிப்பையும் மட்டுமே காட்டும் உறவு அது.
அவள் ஏதோ அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பது போல் இதழ்களோடு கண்களும் சிரிக்க “சாரிடி சாரிடி” என்ற முனுமுனுப்புடன் சிரிக்கும் விழிகளைச் சுருக்கிக் கெஞ்சியபடி அவளை ஒட்டி நின்றிருந்த ப்ரித்திவிராஜோடு அவளையும் சேர்த்து அன்று புகைப்படமாக்கியிருந்தான் நவீன்.
அன்றிலிருந்து அவர்கள் கைபேசியின் திரைப்படமாக அப்படம் தான் உள்ளது.
அப்பொழுது நவீனும் படித்துக் கொண்டிருந்த தருணம் தான். அவ்வப்பொழுது அவர்களோடு சேர்ந்து அவனும் சிறு சிறு சேட்டைகள் செய்துவிட்டு மாட்டிக் கொள்ளாது நழுவிக்கொள்ளும் காலம் அது. அதன்பின் படிப்பை முடித்து தொழிலில் இறங்கிவிட்ட நவீனிடம் மெல்ல மெல்ல குறும்புகள் மறைந்து பொறுப்புகள் புகுந்திருக்க, இவர்களும் மருத்துவப் படிப்பில் மூழ்கத் தொடங்கினர்.
கண்ணெடுக்காமல் கைபேசியிலே பார்வை பதிந்திருந்தவளின் உதடுகள், “நான் நேத்து உன்ன ரொம்ப திட்டிட்டேன்ல திவா?” என்று முனுமுனுக்க அவள் மனசாட்சியோ, ‘நேத்து மட்டுமில்ல ரொம்ப நாளாவே நீ இதைத்தான் பண்ணிட்டிருக்க’ என்று அவளுக்கு ஞாபகம் செய்தது.
அதில், “ம்ம்ம்… நான் வேற என்னதான் பண்ணட்டும்?” என்று சலித்துக் கொண்டவள் அவன் தந்தையின் வார்த்தைகளை மீறி மருத்துவப் படிப்பில் கால்பதித்த நாளில் இருந்தே அவனிடம் சற்று கடுமைதான் காட்டுகிறாள்.
ஏற்கனவே சுமூக உறவில்லா மாமனுக்கும், மாமன் மகனுக்கும் அவன் விளையாட்டு புத்தியால் இன்னும் விரிசல் வந்துவிடக்கூடாது என்ற முனைப்போடு இருப்பவளுக்கு அவ்வப்பொழுது ப்ரித்திவிடம் முறைப்பைக் காட்டுவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது.
மாமனுக்கும் மாமன் மகனுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழிப்பவள் என்னதான் முறைப்பைக் காட்டினாலும், பதிலுக்கு அளவில்லா அன்பையே அவளிடம் கொட்டுபவன் இதோ நேற்று அவள் அவனை அத்துணை திட்டி அடித்துவிட்டு வந்தும்கூட இரவு முழுதும் அவளுக்கு ஏகப்பட்ட அழைப்புகளும், குறிஞ்செய்திகளுமாக அனுப்பித் தள்ளியிருந்தான்.
கைபேசியை உயிர்பித்ததும் வந்து குவிந்த முப்பதுக்கும் மேற்பட்ட அழைப்புகளும், “யுகி சாரிடி. போன் அட்டண்ட் பண்ணுடி. இனிமேல் இவ்ளோ கோபம் படமாட்டேன் டி. மெஸ்ஸஜ்கு ரிப்ளை ஆச்சும் பண்ணுடி. அதுகூட வேணாம் சாப்டியானாவது சொல்லு. அதுவும் இல்லாட்டி ப்ளீஸ் எனக்காக சாப்ட்டாவது படுடி” என்று அவன் தொடர்ச்சியாக அனுப்பியிருந்த குறுஞ்செய்திகளைப் பார்த்தவளுக்கு கடந்த சில தினங்களாய் அவர்கள் கல்லூரியில் நடந்து முடிந்த “கல்லூரிகளுக்கிடையே ஆன மருத்துவ விழா (Intercollege medical festivel)” நாட்களும் அதைத்தொடர்ந்த
சம்பவங்களும் ஞாபகம் வந்தது.
திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி, தென்காசி போன்ற நாலு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் இணைந்து நடத்திய விழாதான் நான்கு நாட்களாக அவர்கள் கல்லூரியில் நடந்து கொண்டிருந்தது.
வருடம் முழுதும் படிப்பு, செயல்திட்டங்கள் பயிற்சகள் என்று மூளை சூடாகிப் போன மாணவர்கள், மற்றும் அவர்களோடு மல்லுகட்டி அவர்களை மருத்துவர்களாக்கி அனுப்பும் ஆசிரியர்களின் மன மாறுதல்களுக்காக நடக்கும் அவ்விழாவிற்கான பொறுப்புகளை இந்தவருடம் அவர்கள் கல்லூரி ஏற்று இருந்தது.
மாணவ மாணவியர்கள் ஒருவரோடு ஒருவர் நட்பு பாராட்டவும், படிப்பல்லாத மற்ற பல ஆர்வங்களை வெளிப்படுத்தி மகிழவும், அவ்விழா நாட்கள் அவர்களுக்கு பெரிதும் உதவியது.
மாணவ மாணவியரின் தனிப்பட்ட திறமைகளான
ஓவியம் வரைதல்(Painting)
குறும்படம் இயக்குதல்(Short film)
இசை இயக்குதல் (Music, guitar, violin, keyboard, piano etc)
நடனம்(Dance)
பாடல்(Singing)
புகைப்படம் எடுத்தல் (Photography)
சமையல் கலை
உணவுத் திருவிழா (Food festivel)
போன்ற எண்ணற்ற திறமைகளை வெளிக்கொண்டுவர பலவித போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் கொடுக்கப்பட மாணவர்களோடு மாணவர்களாய் ப்ரித்திவும் சம்யுவும் கூட அக்கொண்டாட்டங்களில் கலந்து குதூகலமாய் நாட்களைக் கடத்தினர்.
முதல்முறை அவர்கள் கல்லூரியில் நடக்கும் மருத்துவவிழாவில் இறுதி ஆண்டு மாணவர்களாய் அவர்களுக்கும் சிறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்க, அந்த நான்கு நாட்களும் அவர்கள் கல்லூரி விடுதியிலே தங்க நேரிட்டதால் வீட்டில் சம்மதம் வாங்குவதற்குள் ப்ரித்திவ்தான் படாதபாடு பட்டுப்போனான்.
பின்னர் மருமகளுக்காக ஒருவழியாக சம்மதித்த யுவா, “உன் வாலைச் சுருட்டிக்கிட்டு யுக்தாமா கூடவே இருக்கணும். ஆம்பள பசங்ககூட சுத்தாம புள்ளைய கண்ணுமுன்ன வச்சு பத்திரமா பாத்துக்க. புள்ளைக்கு கண்டதையும் வாங்கி குடுக்காத. ஏதாவது பிரச்சனைனா உடனே கிளம்பி வந்துருங்க. சரியா புரிஞ்சுதா?” என்று மகனிடம் பல பத்திரங்கள் கூறி அவர்களை அனுப்பி வைக்க, அது ப்ரித்திவியின் பொறுப்பைக்
கூட்டி இருந்ததோ என்னவோ.
“இவ்ளோ கண்டிஷன் போடுறதுக்கு இவரு போகவேணாம்னே சொல்லிருக்கலாம்” என்று தந்தையின் கூற்றிற்கு முனுமுனுத்துவிட்டு வந்திருந்தாலும், எப்பொழுதும் அவள் மேல் தனி அக்கறை கொண்டுள்ளவன் அவர்கள் கல்லூரியில் தங்கிய அந்த நான்கு நாட்களும் அத்தைமகளுக்கு அரண்போலத்தான் இருந்தான்.
நான்கு நாட்களில் உறங்கும் நேரம் தவிர்த்து ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து நண்பர்களின் மத்தியில் பேசிச் சிரித்தவண்ணம் கேளிக்கைகளில் கலந்து கொண்டது, பிறமாணவர்களின் திறமைகளை கண்டு களித்தது இருவருக்குமே புதுவித அனுபவமாக இருந்தது.
மூன்று நாட்கள் இப்படியே கழிய மூன்றாம் நாள் இரவு கல்லூரி வளாகத்தின் பெரிய மேடையில் வெள்ளித்திரை ஏற்பாடு செய்து திரைப்படம் ஒன்றை ஓடவிட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் என்று அனைவரும் மண்தரைகளில் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருக்க
“உணவுத் திருவிழா” என்ற கொட்டை எழுத்துக்கள் ஒளிர்ந்த பகுதிக்குள் இருந்து இரவு உணவை முடித்துக் கொண்டு வெளிவந்தனர் ப்ரித்வியும் சம்யுவும்.
மார்கழி மாதத்து குளிர்ந்த காற்றில் பறந்து திரிந்த சூரிதார் துப்பட்டாவை இழுத்து பிடித்த சம்யு, “இடியாப்பமும் சொதியும் செம்மையா இருந்துச்சுல திவா?” என்று வினவியபடி வர…
“ம்ம்ம் அதான் மேடம் ஒரு பிடி பிடிச்சிட்டிங்க போல” என்று சிரித்தவன், “எத்தனை ஊர் சாப்பாடு சாப்பிட்டாலும் நம்ம நெல்லை சாப்பாடு டேஸ்ட்டே டேஸ்ட்டுதான” என்று அவள் துப்பட்டாவை இழுத்து அவள் கழுத்தைச் சுற்றி போட்டுவிட்டான் ப்ரித்திவ்ராஜ்.
“ம்ம்ம் கரெக்ட்டா திவா. நம்மூர் சொதிக்கும் சம்பலுக்கும் எந்த நாட்டு புட் உம் ஈடாகாதுடா” என்று சொல்லிக்கொண்டே அவனோடு நடந்தவளை அப்படியே குளியலறை பகுதிக்கும் அழைத்துச் சென்றவன் அவள் உள்ளே சென்று வரும்வரை அங்கேயே காத்திருந்து கையோடு அழைத்துவர அவர்களை பார்த்த நண்பர்களோ, “இன்னிக்குதான் பெஸ்டிவலோட லாஸ்ட் நைட்பா. கொஞ்ச நேரம் படம் பாக்கலாமா?” என்று அழைக்க, அவர்களும் “ம்ம்ம் சரி” என்று அமர்ந்து சிறிதுநேரம் படத்தைப் பார்த்தனர்.
அது ஏற்கனவே அவர்கள் கைபேசியிலே பார்த்த ஒரு நகைச்சுவைப்படம் ஆதலால் அரைமணி நேரம் கடந்த நிலையில், “போரடிக்குது திவா” என்று சம்யு சிணுங்க…
“அப்போ தூங்கப்போலாமா? வா ஹாஸ்டல்ல விடுறேன்” என்று எழுந்தான் ப்ரித்திவ்.
“தூக்கம் வரலியே” என்று மீண்டும் சினுங்கியவள், “அங்க போலாம்டா” என்று பௌர்ணமி நிலவொளி பட்டுத்தெறித்த கொன்றை மரத்தடியை கைகாட்டினாள்.
இயற்கை அழகில் அவள் கொண்ட ரசனையை அறிந்தவனும் அவள் காட்டிய இடத்தைக் கண்டு, “ஓ… பௌர்ணமியா? இன்னிக்கு தூங்குன மாதிரிதான்” என்று சிறிதே சலித்துக் கொண்டாலும் அங்கு தோட்டம் போல் இருந்த பகுதிக்கு அவளை கைப்பற்றி அழைத்துச்செல்ல…
கொன்றை மலர்களின் மேல் பட்டுத்தெறித்த வெண்ணிலா வெளிச்சம் அவ்விடத்தையே அத்துணை ரம்யமாக்கி இருந்தது.
குளிர்காற்றோடு வந்த கொன்றை மலர்களின் வாசமும் மனதிற்கு ஒரு இதத்தை கொடுக்க, “ம்ம்ம் இன்னிக்கு கிளைமேட்டும், நிலா வெளிச்சமும், ஸ்மெல்லும் சான்ஸே இல்லைல திவா” என்று சொன்னவள் கீழே குனிந்து அப்பொழுது தான் விழுந்திருந்த மஞ்சள்நிற கொன்றை மலரை கையில் எடுத்தாள்.
“இனி… பூ மழை மண்வாசம்னு உளற ஆரம்பிச்சுடுவா” என்று எண்ணிக்கொண்டவனும், அவள் பேச்சிற்கு “ம்ம்ம்” மட்டும் கொட்டியபடி அங்கிருந்த கல் இருக்கையில் அமர,
கையில் எடுத்த மலரை நிலவுக்கு நேரே ஒளி படும்படி பிடித்துக்கொண்டவள், “திவா இதப் பாருடா நிலா வெளிச்சத்துல இந்த பூ தங்கம் மாதிரி மின்னுதுல்ல?” என்று ஆர்ப்பரித்தாள்.
தங்கத்தோடு வைரத்தையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் மினுமினிப்பில் ஒளிர்ந்த பெண்ணவளின் முகவடிவிற்கு முன் அந்த அழகிய மலர் ஆடவனை ஈர்க்கவில்லையோ.
அதற்கும் “ம்ம்ம்” மட்டுமே கொட்டிய ப்ரித்திவ் சம்யுவை மட்டும்தான் பார்த்திருந்தான்.
அவனது சுரத்தில்லா பதில்களில், “உன்கிட்ட போய் சொன்னேன் பாரு” என்று பெண்ணவள் நொடித்துக் கொள்ள, அவர்களைப் போலவே படம் பார்த்தல் சலித்துப்போன அவர்களின் நண்பர்களும் அவர்களோடு வந்து இணைந்தனர்.
எல்லாரும் வரவும் சூழல் இன்னும் குதூகலமாக, நேரம் போவது தெரியாது பேசிச் சிரித்திருந்தனர் இளைஞர் பட்டாளம்.
அவர்களைத் தொடர்ந்து வேறு சில கல்லூரி மாணவர்களும் அங்கு வந்து அமர வந்தவர்களில் ஒருவன், “ஒவ்வொன்னும் லட்டு மாறி இருக்குடா. நம்ம காலேஜுலையும் இருக்குகளே வத்தலும் தொத்தலுமா” என்று உடன் வந்தவனிடம் கிசுகிசுத்துச் சிரித்தான்.
அவர்கள் அருகில் இருந்த சம்யுவிற்கும் அவர்கள் பேச்சுக் கேட்க… அவள் சட்டென்று திரும்பி ப்ரித்திவைப் பார்த்தாள்.
அவன் முகம் போன போக்கிலே அவனும் அப்பேச்சை கேட்டுவிட்டதை உணர்ந்தவள் வேகமாக அவனை நெருங்கி, “போலாமா திவா?” என்று அவன் கரத்தினைப்பற்ற, அது இறுகிப்போய் இருந்தது.
அவர்கள் பொதுவாக அனைத்து பெண்களையும் குறிப்பிட்டுப் பேசியிருந்தாலும் இதுபோல் பேச்சுக்கள் ப்ரித்திவிற்கு பிடிக்காது என்று அறிந்த சம்யு அதற்குமேல் அங்குநிற்க வேண்டாம் என்று எண்ணியிருக்க…
அவனோ, “நீதான பௌர்ணமி நிலா பாக்க கூப்ட. இப்போ ஏன் போலாம் சொல்ற?” என்று அவள் கையை இன்னும் இறுக்கியவாறு எழுந்து நின்றான்.
அந்த இறுக்கமே இன்னும் சிறிது நேரம் அங்கு நின்றால் ஒரு ரணகளம் உண்டு என்று சொல்லாமல் சொல்லியதில், “இல்ல திவா ரொம்ப குளிருதுடா. போலாம் வா” என்று மீண்டும் அவன் கையை பிடித்து இழுத்தவளிற்கும் அவர்கள் பேச்சை கேட்டபின் அங்கு நிற்க விருப்பமில்லாது போனது.
அங்கு நின்ற ஒருசில பெண்தோழிகளும் முகம் சுளிக்க வைத்த அந்த பேச்சினாலோ என்னவோ அங்கிருந்து சென்றிருக்க… அவள் கூற்றிற்கு “ம்ஹூம். குளிர்தான உன் பிரச்சனை?. இரு” என்று தலையாட்டி மறுத்தவன் வேகவேகமாக தன் சட்டையைக் களைந்து அவள் மேல் போர்த்திவிட்டவாறே…
“தப்பான பார்வை பாக்குறவங்களே தைரியமா நிக்கிறப்போ நிலாவ ரசிக்க வந்த நீ ஏன் ஓடி ஒழியனும் யுகீ?” என்றவன், “நம்மகிட்ட தப்பில்லாதப்போ யாரோட பார்வைக்கும் பேச்சுக்கும் நீ ரியாக்ட் பண்ண தேவையில்லை” என்றும் சொல்லி அவள் அருகிலேயே நின்று போதும் போதும் மட்டும் நிலவை ரசிக்கவைத்துவிட்டே நிலாப்பெண்ணவளை அங்கிருந்து அழைத்துச் சென்றான் அவளின் திவா.
அறைக்கு வந்தப்பின்னரே, “ஷப்பா… நல்லவேளை அந்த பசங்க அப்றம் ஏதும் பேசாததால சரியா போச்சு” என்று பெருமூச்சு விட்டு, “இவன டாக்டராக்குறதுக்குள்ள நான் பேஷண்ட் ஆகிடுவேன் போல. எப்போ என்ன பிரச்னை வருமோன்னு பக்கு பக்குன்னு இருக்கு” என்று சொல்லிக்கொண்டே அவன் சட்டையை கழட்டப்போனவள்,
“இன்னும் குளிராத்தான இருக்கு இருந்துட்டு போட்டும். அவன்தான் வேற போட்டுக்கிட்டான்ல” என்று பெண்கள் விடுதி அறையின் படுக்கையில் விழுந்து உறக்கத்தை தழுவினாள் சம்யுக்தா.
நான்காம் நாள் காலையும் இனிமையாகப் புலர்ந்து மருத்துவவிழா இறுதியை நெருங்கிக் கொண்டிருக்க, முதல்நாள் நடந்த போட்டிளுக்கு அன்று மதியம் பலவித பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டது.
அப்பொழுது பரிசுப்பொருட்கள் போதவில்லை என்று அவர்கள் ஆசிரியர் ஒருவர் ப்ரித்திவோடு இன்னும் சில மாணவர்களையும் அழைத்து கடைத் தெருவிற்கு சென்று வரச்சொல்ல,
அவனும் சம்யுவிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.
அச்சமயம் நேற்று இரவு கொன்றை மரத்தடியில் பார்த்த அந்த இரு ஆண்களும் சம்யுவை நெருங்க அதில் ஒருவன், “ஹாய் பியூட்டி. ஐம் வருண். வாட்ஸ் யூர் நேம்?” என்க…
அவளுக்கோ நேற்றிரவு அவன் பேசிய வார்த்தைகள்தான் ஞாபகம் வந்து அவன்மீது ஒரு அருவருப்பைத் தந்தது.
“கேன் ஐ ஹெல்ப் யூ?” என்றும் அக்கல்லூரி மாணவியாய்க் கேட்க…
அதில் ஒரு மாதிரிச் சிரித்தவனும், “உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வில் யூ கம் ஆன் எ டேட் வித் மீ?” என்றான் காதல் செய்யும் நோக்கத்தோடு.
அதில் அவனை உக்கிரமாய் முறைத்தவளும், “ஐம் நாட் இன்ட்ரெஸ்டட்” என்று அங்கிருந்து நழுவப்பார்க்க…
சட்டென்று அவள் கையை எக்கிப்பிடித்தவன், “ஹேய் பேபி… வெயிட் வெயிட்… நான் யாரு, என்னோட பேக்ரௌண்ட் என்னன்னு தெரிஞ்சா நீ இப்டி பேசமாட்ட. என்னோட ஸ்டேட்டஸ் பாத்தே எத்தன பொண்ணுங்க என்பின்னாடி வர்றாங்க தெரியுமா” என்று திமிராகவே சொன்னான் அந்த மாணவன்.
அதில் அவனை நக்கலாகப் பார்த்தவளும், “என் திவாவப் பத்தி தெரிஞ்சா நீயும் இப்டி என் கையப் பிடிச்சிருக்க மாட்ட. உன் நல்லநேரம் அவன் இங்க இல்ல.” என்றவள், “நீ யாரா இருந்தாலும் எவனா இருந்தாலும் எனக்கு தேவையில்ல. மொதோ என் கைய்யவிடுறா நாயே” என்று அவனிடமிருந்து கையை இழுத்து உறுவிக் கொண்டாள் சம்யு.