அவளின் நாய் என்ற வார்த்தையில் சீண்டப்பட்ட மாணவனும், “என்னடி சொன்ன நான் நாயா? நாய் என்ன பண்ணும் தெரியுமா? அதுக்கு பிடிச்ச இடத்துல எல்லாம் கைய இல்ல வாயவே வைக்கும். வைக்கட்டுமா?” என்று அவளை நோக்கி தன் முகத்தை கொண்டு செல்ல…
“அப்டி ஏதும் பண்ணா செருப்பு பிஞ்சிடும் ஜாக்கிரதை” என்று அவனிடமிருந்து பின்னடைந்தாள் சம்யுக்தா.
அதற்குள், “என்னாச்சு சம்யு என்ன பிராப்லம்?” என்று அவள் நண்பர்களும் அங்கு வந்து கூடி விட… சம்யுவின் நண்பர்களோடு தூரத்தில் வந்த ஆசிரியரையும் கண்டு, “அப்றம் பேசிக்கிறேன்டி உன்ன” என்று சம்யுவை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு கலைந்து சென்றனர் அந்த மாணவர்கள்.
அவன் பார்த்த பார்வையும் சம்யு அவன் பேசியதாய் கூறிய வார்த்தைகளுமே அவள் நண்பர்களுக்கு சரியில்லாது பட்டதில் ப்ரித்வி கடையிலிருந்து வந்த சிறிது நேரத்திலே அங்கு நடந்த விஷயத்தை அவனிடம் கூறியவர்கள், “ஏதொன்னுக்கும் சார்கிட்ட போய் சொல்லி வைப்போமா ப்ரீ?” என்றும் கேட்க…
அவர்களுக்கு பதில்கூறும் நிலையில் ஆணவன் இருந்தால்தானே.
“சம்யுகிட்ட டேட் வேணும்னு கேட்டதோட அவ கையவேற பிடிச்சிருக்கான்டா அந்த கன்னியாகுமரி காலேஜ் சீனியர்” என்று அவர்கள் சொன்னக் கணமே ப்ரித்வியின் விழிகள் தீயாய் தகதகக்க, அவன் உடலோ இரும்பாய் இறுகியது.
“அதுமட்டும் இல்லடா. உன்ன நான் அப்றம் பேசிக்கிறேன்டின்னு வேற சொல்லிட்டு போனான்டா. அவன்” என்று சொல்லிக்கொண்டிருந்த தோழி முடிக்கும் முன்னவே…
“இத ஏன்டா இவ்ளோ லேட்டா சொல்றீங்க?” என்று சீறிவிட்டு மாணவர்கள் அனைவரும் தங்கியிருந்த பகுதிக்கு விரைந்தவன், “எவன்டா அது எவன்டா என் யுகிட்ட டேட் கேட்டவன்.?” என்று கன்னியாகுமாரியில் இருந்து வந்த மாணவர்கள் எல்லாரையும் அடிக்க ஆரம்பித்து விட்டான்.
அதில் பயந்த மாணவர்களோ உரியவனைக் கைக்காட்டியதும் வெறி கொண்ட வேங்கையாய் அவன்மீது பாய்ந்தவன், “உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னோட யுகிட்டயே டேட் கேட்டிருப்ப? போதாதுக்கு அவ கையவேற பிடிச்சியாமே. பொறுக்கி நாயே” என்று கேட்டு கேட்டே அவன் வாயிலே குத்தி ரத்தம் கொட்ட வைத்திருந்தான் ப்ரித்திவ்.
ஆறடிக் காற்றாய் சுழன்று தாக்கியனின் இடி போன்ற அடிகளைத் தாங்காது, கத்திக் கொண்டிருந்தவனைப் பார்த்து முன்னே வந்த அவன் நண்பர்களும்,
“ஒரு பொண்ணுகிட்ட டேட் கேக்குறது அவ்ளோ பெரிய தப்பா? அவனுக்கு அவள பிடிச்சிருக்குபோல” என்று சொல்லி முடிக்கும்முன் அவர்கள் மூக்கையும் உடைத்தவன்…
“பிடிச்சிருந்தா என் யுகிய கையபிடிப்பானா இவன்?. நான்வந்து உன்வீட்டுப் பொண்ணு கையப்பிடிக்கவா? பத்தாததுக்கு வாயவேற வைக்கவான்னு கேட்டியாமே” என்று நிறுத்தியவன், “இருடா உனக்கு சோறு திங்ககூட வாயே இல்லாம ஆக்குறேன்” என்று இன்னும் இன்னும் ஏதேதோ கேட்டு அவனை புரட்டி எடுத்தவனைப் பார்த்து ப்ரித்வியின் நண்பர்களுக்கே அவனிடம் ஏன்டா சொன்னோம் என்றாகி விட்டது.
சம்யுவிற்கு ஒன்றென்றால் அவன் சாதாரணமாக விட்டுவிட மாட்டான் என்று தெரியும்தான். ஆனாலும் இப்படி வெறி பிடித்தவன்போல் அவர்களை போட்டு அவன் துவைத்து எடுப்பான் என்று அவர்களும் எதிர்பார்க்கவே இல்லை.
அடிவாங்குபவனுடைய நண்பர்களோடு அவனுடைய நண்பர்களும் “ஹேய் வேண்டாம்டா நிறுத்துடா” என்று கத்துவதைக்கூட காதில் வாங்காது, “அப்றம் உன்ன பேசிக்கிறேன்னு யுகிட்ட சொன்னியாம்லடா? என்னடா பேசப்போற? என்கிட்ட பேசுடா இப்போ பேசுடா” என்று வாயிலே குத்தியும் ஆத்திரம் அடங்காது அவன் கையை முறித்து பின்னே வளைத்தவனைத் தடுக்க முடியாமல் சம்யுவிடம் விரைந்தனர் அவன் நண்பர்கள்.
விஷயம் கேள்விப்பட்டு,
“உங்கள யாருடா அவன்கிட்ட சொல்லச் சொன்னது” என்று திட்டியவள் சண்டை நடந்த இடத்திற்கு வந்து “நிறுத்துடா திவா” என்று கத்தி அவனை இழுத்து வந்தப் பின்னர்தான் சற்றே நிதானம் கொண்டான் ப்ரித்திவ்.
“என்ன பண்ணி வச்சுருக்க திவா? உனக்கு என்ன பைத்தியமாடா?” என்று அவன் அடியில் சுருண்டு கிடந்தவர்களைப் பார்த்த சம்யு சீற…
“அதுக்குன்னு இப்டியா காட்டுத்தனமா அடிப்ப. நீ மனுஷன்தான? அத்தோட நீ ஒரு மெடிக்கல் ஸ்டூடென்ட் டா” என்று சொன்னவளின் வார்த்தையில் தான் தன்னிடம் அடிவாங்கியவர்களைப் பார்த்தவனுக்கும், “கொஞ்சம் ஓவராதான் அடிச்சுட்டோம் போல” என்று தோன்றியது.
அவனும் சம்யு புத்தி சொல்லும் பொழுதெல்லாம் இனிமேல் பொறுமையாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறான். ஆனால் அவள் சார்ந்த விஷயங்களில் அவனது உள்ளம் அவன் கட்டுக்குள்ளே அடங்க மறுக்கிறதே அவனும் என்னதான் செய்வான்.
கண்மண் தெரியாது அடிக்கும் அளவிற்கு அந்த மாணவர்கள் செய்தது மிகப்பெரிய தவறில்லை என்றாலும் யுகியின் கையைத் தொட்டான் என்ற ஒருவிஷயமே அவனது கோவம் மொத்தத்தையும் கிளப்பி இருந்தது.
“அவன் எப்டி யுகி, உன்கிட்ட அப்டி மிஸ் பிகேவ் பண்ணலாம்?. அதக்கேட்டப் பின்னயும் நான் எப்டிடி சும்மா இருக்க முடியும்?” என்று இன்னமும் ஆத்திரம் அடங்காது குதித்தவனிடம்…
“நா என்ன பெரிய இவளாடா. என்ன ஒன்னு சொல்லிட்டா இவருக்கு கோவம் பொத்துக்குமாக்கும்.
இப்டி தொட்டதுக்கெல்லாம் கோவப்பட்டா நீ டாக்டர் ஆகமுடியாதுடா. ரவுடி தான் ஆகப்போற?” என்ற சம்யு எரிச்சலாகச்சொல்ல…
அவனோ, “நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நீ எனக்கு ஸ்பெஷல்தான்டி. உனக்காக ரவுடி என்ன கொலைகாரனாக்கூட ஆவேன்” என்று அலட்டாது சொன்னான் ப்ரித்திவ்.
அவன் பேச்சில் மேலும் கடுப்பாகியவள்,
“போடா போ போய் அவன குத்தி கொன்னுட்டு கொலைகாரன் ஆகு. அதுக்குத்தான மாமா அவ்ளோ கஷ்டப்பட்டு உன்ன படிக்க வைக்கிறாங்க” என்று சப்பென்று அவனை அறைந்துவிட்டு நேற்று அவள் வீட்டிற்கு சென்றவளுக்குத்தான் இரவு முழுதும் கணக்கில்லா அழைப்புகளும் குறுஞ்செய்தியுமாக அனுப்பியிருந்தான் ப்ரித்திவ்.
கைபேசி திரையில் சிரித்தவனின் முகத்தைப்பார்த்த நொடியே அவளின் கோபம் எல்லாம் அர்த்தமில்லாததாகிவிட, அதில் குவிந்த குறுஞ்செய்திகள் அனைத்தும் திரும்பத் திரும்பப் படித்து, “டேய் திவா. நீ ஒரு யூனிக் பீஸ்டா. என்மேல ஏன்டா இவ்ளோ பாசம் உனக்கு” என்று கேட்டுக்கொண்டே எழுந்தமர்ந்தவளுக்கு நொடியும் தாமதியாது இக்கணமே அவனைப் பார்க்க வேண்டும் என்று அப்படி ஒரு உந்துதல்.
“ச்சே நேத்து அவனை அவ்ளோ திட்டி அடிச்சிட்டோம்… குறைஞ்சபட்சம் நைட் சாப்டாவது வந்துருக்கனும். நான் பேசலைன்னு அவனும் சாப்டாமையே தூங்கிருப்பான். உனக்கு அறிவேயில்லடி” என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் குளித்து முடித்துத் தயாராகியவள் காலை காபியைக்கூட அன்னையிடம் மறுத்துவிட்டு மாமன்வீடு சென்றவளுக்கு,
“இன்னிக்கும் புறாசெக்ட்டு இருக்கா யுக்தா? இம்புட்டுசீக்கிரம் வந்துட்ட” என்ற மலரின் வார்த்தைகளுக்கு நின்று பதில் கூறும் பொறுமை கூட இல்லவே இல்லை.
வழக்கமான சிட்டுக்குருவியின் சிறகடிப்பில்லாது கழுகின் வேகத்தில் படிகளில் பாய்ந்தேறியவள் வெறுமனே சாத்தப்பட்டிருந்த அறைக்கதவைத் திறக்க, அங்கோ மெத்தையில் மட்டமல்லாந்து வலதுகையை மடித்து கண்ணை மறைத்து நெற்றியின் மீது வைத்துப் படுத்திருந்தான் ப்ரித்திவ்ராஜ்.
அவனின் சீரான மூச்சுக்காற்றின் சப்தமே அறைக்குள் நுழைந்தவளை வரவேற்க,
மெல்ல அவனை நெருங்கி அவன் தலைமாட்டில் அமர்ந்து கொண்டவள், “ஏன்டா… நேத்து உன்ன திட்டிட்டோமேன்னு நான் காலங்காத்தால அடிச்சு பிடிச்சி ஓடிவந்தா அய்யா இங்க ஹாயா தூங்கிட்டிருக்கியா?” என்று மென்குரலில் கேட்டபடியே நேற்று சண்டையில் காயம் பட்டிருந்த அவன் விரல்களையும் மெல்ல வருடினாள் பெண்.
அதில் சட்டென்று அவள் கையை தட்டிவிட்டவனும், “நாங்க ஒன்னும் தூங்கல. மேடம்தான் நைட் முழுசும் நல்லா தூங்கி எந்திரிச்சி போனா போகுதுன்னு காலைல வந்துருக்கிங்க. நைட்டு சொல்லாமக்கூட போனல்லடி. இப்போ எதுக்குடி வந்த?” என்று குப்புற அடித்துப் படுத்துக்கொண்டான் ப்ரித்திவ்.
இன்னும் சில மாதங்களில் டாக்டர் பட்டம் வாங்கப் போகிறவனின் அந்த சிறுபிள்ளை செயலில் பெண்ணின் உள்ளமோ பாகாய் கரைய, “டேய் திவா அப்டி இல்லடா. நேத்து ஏதோ கோவத்துல… சாரிடா” என்று அவன் தோளைப்பற்றித் திருப்ப முனைய…
அவனோ, “பேசாம போயிர்றி. நான் ஏற்கனவே கடுப்புல இருக்கேன் இதுல சாரி அது இதுன்னு சொன்ன எந்துருச்சு கடிச்சாலும் கடிச்சுடுவேன்” என்று பெண்ணின் முகம் பாராமல்
கோவம் போலவே பேசினாலும் அவள் முயற்சி புரிந்து அன்னிச்சையாக திரும்பிப் படுத்தது ஆடவனின் தேக்குமரத்தேகம்.
அதில் மெலிதாய் சிரித்துக்கொண்டவள், “சரி… சாரி கேக்கல. இத மட்டும் பாருடா” என்று அவன் முகத்தின் முன்னே கையை விரித்துக்காட்ட…
அவனும், “என்னடி” என்று அசட்டையாகப் பார்த்தவனின் விழிகள் விரிந்து கொள்ள சட்டென்று அவள் கையைப் பற்றி அருகில் இழுத்து உள்ளங்கையை கூர்ந்து பார்த்தான் ப்ரித்திவ்.
என்று பல மொழிகளில், பலவண்ண மைகள் கொண்ட பேனாக்களின் வடிப்பில் பெண்ணவள் மன்னிப்பை வேண்டியிருக்க…
அதைப்படித்தவனது இதழ்கள் அவனைக் கேளாது மலர்ந்து விரிந்தது.
அடுத்த நொடியே தலையணையை உதறிவிட்டு அவள் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டவன் அவள் உள்ளங்கையில் எழுதியிருந்த அவன் நாமங்களை வருடியபடி
“இதெல்லாம் உன்கிட்ட யாருடி கேட்டா? இப்டிலாம் பண்ணா என்கோவம் போயிருமா?” என்று அவளை முறைக்க முயன்று தோற்றவனை…
“கோவமா? அப்டி ஒன்னு வருமா என் திவாக்கு என்மேல?” என்று மடியில் படுத்திருந்த ஆடவனின் கன்னத்தை நிமிண்டினாள் பெண்.
அதற்கு, “ம்ம்ம் சரிதான். ஆனா உனக்காக யாருமேல வேணாலும் வரும்” என்றவன், “உன் கையப் பிடிச்சான்னு தெரிஞ்சபின்னும் அவன் கையை உடைக்காம வந்ததுக்கும் நீதான் காரணம். நீ பீல் பண்ணக்கூடாதுன்னுதான் பொறுமையா வந்தேன்” என்றான் நேற்றைய செயலுக்கு விளக்கமாய்.
சட்டென்று இறுகிவிட்ட ஆணின் குரலிலே இன்னும்கூட அவன் கோபம் தணியவில்லை என்று புரிந்து கொண்டவள், “எனக்காக பொறுமை கடைபிடிக்கிறதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி ஐயா” என்று நாடகபாணியில் பேசியவள், “இதே பொறுமையோட மிச்சம் இருக்க மூனு மாசத்த மட்டும் ஓட்டி எக்ஸாம் முடிச்சிட்டீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும்” என்றும் கிண்டல் குரலில் சொல்லி கையெடுத்து கும்மிட்டாள் சம்யு.
அவன் கூறியதுபோல் கை கால் உடையவில்லை ஆனாலும் ஒருமாதத்திற்கு
எழமுடியாதபடி அவனை அடித்து நொறுக்கியிருந்த ப்ரித்திவ் இப்பொழுது வந்து உனக்காக பொறுமையாக இருந்தேன் என்று சொன்னால் அவளுக்கு எரிச்சல்தான் வந்தது.
அதைக் கிண்டலாக அவள்காட்ட,
“ஹேய் அகைன் கோச்சுகிட்டியா பப்ளி?” என்று எழுந்தமர்ந்தவன், “சரி சரி… இனிமேல் எந்த தப்பும் பண்ணமாட்டேன். ஒழுங்கா இருக்கேன். கொஞ்சம் சிரிடி. சும்மாவே உன் முகத்தை பாக்க சகிக்காது. இதுல முறைச்சின்னா சுத்தம்” என்க…
அதில், “திவ்வா…” என்று நெற்றிக் கண்ணைத் திறந்தவளிடம், “சாரிடி” என்று உக்கிபோடுவதுபோல் செவியைப்பற்றி அவன் கெஞ்சியதில், “போடா காட்டெருமை உன்ன வச்சுட்டு கோபம்கூட ஒழுங்கா படமுடியல” என்று பக்கென்று சிரித்துவிட்டாள் சம்யுக்தா.
அவள் சிரிப்பதையே விழி எடுக்காது பார்த்திருந்தவன் சேஷ்டைகளில் ஒருவழியாக சமாதானம் அடைந்தவள், “திவ்வா…” என்று மீண்டும் அழைத்து அவன் தோளில் சாய்ந்துகொள்ள…
பக்கவாட்டாகக் குனிந்து அவள் முகம் பார்த்தவனும், “இன்னும் என்னடி? நேத்து ஒரு கன்னத்துல அறைஞ்சது பத்தலியா?
ஏசுநாதர் மாதிரி இன்னொரு கன்னத்தையும் காட்டவா?” என்று சிரிக்காது கேட்டான்.
அதில் மீண்டும் கண்ணில் நீர்வரச் சிரித்து முடித்தவள், “சாரிடா திவா” என்று உண்மையான வருத்தத்தோடு அவன் கன்னத்தை வருடிவிட்டு, “காலேஜ்ல இன்னிக்கு முக்கியமான வேலை இருக்குடா கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும்டா” என்று மழலையாய் மிழற்றினாள் மலரையொத்த பாவை.
அதைக்கேட்டு, “அப்போ, என்ன பாக்க நீ சீக்கிரம் வரல?” என்று ஏகமாய் முறைத்தவன், “நினைச்சேன்டி….
கொஞ்சம் முன்ன அவ்ளோ குழையறப்போவே நினைச்சேன். உனக்கு டிரைவர் வேல பாக்கதான் விழி என்ன பெத்து போட்டிச்சா” என்றவன் “மேடம்கு டிரைவர் வேல பாக்கதான் புதுசா ஆள் கிடைச்சிருக்கதா கேள்விப்பட்டேனே. அவனோடவே காலேஜ்க்கும் போகவேண்டியது தான” என்று அவள் நேற்று நவீனோடு வீடு சென்றதை குறிப்பிட்டு சிலிர்த்துக்கொண்டான் ப்ரித்திவ்.
அவன் கோபத்தை ரசித்தவளும்,
“ம்ம்ம்… போலாம்தான்”
என்று யோசிப்பது போல் பாவனை செய்தவள், “ஆனா அவர்கிட்ட எனக்கு பிடிச்ச பைக் இல்லியே. அது எனக்கு பிடிச்சமாறி ஓட்டுற ஆளும் அவரில்லையே. என் திவா தோள் தவிர யார் தோளும் பிடிச்சிக்கிட்டு நான் இதுவரை போனதில்லையே. மொத்தத்துல என் திவாக்கு நிகர் என் திவா மட்டும்தான. அதனால காலம் முழுசும் என் தொல்லையை நீ தாங்கித்தான் ஆகனும்” என்று ஆடவனின் கூர்நாசியைப் பற்றி ஆட்டியவள் கூறியதுபோலவே…
அவனது வாழ்க்கை முழுமைக்குமான அழகிய, தொல்லையாய் மாறப்போவதை அக்கணம் பெண்ணவள் அறிந்திருக்கவில்லையோ???