மருத்துவப்படிப்பின் இறுதி மாதங்களில் இருந்த மாணவமாணவிகளுக்கு
அன்றைய மருத்துவவிழா நாட்களுக்குப்பின் பயிற்சிகள் செயல்திட்டவகுப்புகள், செமினார்வகுப்புகள் என்று ஒவ்வொரு நாளும் நிற்கக்கூட நேரமில்லாது நிமிடங்களாகத்தான் கழிந்தது.
இறுதி வருடத்தின் இறுதித் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் இதுவரை கற்று முடித்திருந்த குழந்தைகளுக்கான படிப்பு (Pediatrics), தோல் மற்றும் பாலியல் நோய்கள் (Dermatology and Venereology) ஆகியவற்றிர்கான தீர்வுகள், மற்றும் பயிற்சிவகுப்புகளோடு
அடுத்துவந்த நாட்களில் மனநலமருத்துவமும்(Psychiatry), கதிர்வீச்சு சிகிச்சைகளும் (Radiation therapy) மயக்கவியல் மருத்துவம் பற்றியும் (Anesthesiology) பயிலத் தொடங்கியிருந்தனர்.
காலை ஒன்பதில் தொடங்கி மாலை ஐந்துவரை கற்றலின் பின்னேயே ஓடிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு மதியஉணவு வேளையில்தான் சற்றே மூச்சுவிட நேரம் கிடைக்க, அந்நேரத்தை அங்கிருந்த மஞ்சள்கொன்றை மரத்தடியில்தான் கழிக்கப் பழகியிருந்தனர் சம்யுவும் ப்ரித்திவும்.
அன்றைய பௌர்ணமி நாளின்
இனிமையோடு அப்பொழுதைய நினைவுகள் கொடுத்த நெருக்கமும் சேர,
கல்லூரியில் வகுப்புகள் இல்லா பொழுதுகள் எல்லாம் அவர்களையும் அறியாது இருவரும் கொன்றை மரத்தடியே நாடினர்.
விரும்பி எடுத்த படிப்பில் தான் கொண்ட ஆர்வத்தை திட்டுக்களும் கெஞ்சல்களும் சேர்த்து ப்ரித்திவிடமும் தூண்டிவிட்டவள் எந்நேரமும் எழுத்து படிப்பு கற்றல் செயல்திட்டங்கள் (பிராக்டிக்கல்) என்று அவனையும் ஒருவழியாக்கிக் கொண்டிருந்தாள்.
அன்றைய நாள் மனநலமருத்துவம் பற்றிய செயல்திட்ட வகுப்புகள் முடித்து
எறும்புக்கூட்டம் போல் வெளியே வந்த மாணவ மாணவியர்கள் பாடப்பையும், ஸ்டெதஸ்கோப்புமாய் ஆங்காங்கே நின்றும் அமர்ந்தும் அரட்டை அடித்துக்கொண்டிருக்க…
அச்சமயம் ப்ரித்திவ் அழைப்பதைப் பார்த்து அவனை நெருங்கிய நண்பனோ, “என்ன மச்சி நீ மட்டும் நிக்கிற சம்யு எங்கடா?” என்றான். எந்நேரமும் இரட்டைகள் போல் சம்யுவுடன் திரிபவன் தனியே நிற்பதைக் கவனித்து.
“லேப்வரை போயிருக்காடா” என்ற ப்ரித்திவும் அவள் அவனிடம் கேட்டு வைக்கச் சொன்ன குறிப்பேடுப்புத்தகம் பற்றிக் கேட்க…
அவனும் அதைப்பற்றி விளக்கியபடி அந்தப் புத்தகத்தையும் கொடுத்தான்.
அப்படியே பாடம் பற்றி பேசிக்கொண்டிருந்தவர்களோடு வேறுசில மாணவர்களும் வந்து கலக்க, ஆய்வகத்திற்கு சென்றிருந்த சம்யுமட்டும் இன்னும் வந்திருக்கவில்லை.
ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை மணியைப் பார்த்தபடியே நண்பர்களோடு அளவளாவியவன் முக்கால்மணிநேரம் கடந்தநிலையில், “லேட் ஆச்சுடா. யுகிய இன்னும் காணோம். நான் போய் பாக்குறேன்” என்று சொல்ல…
மாணவர்களும், “பாய்டா நாளைக்கு பேசலாம்” என்று வாகனம் தரிக்குமிடம், நூலகம், உணவகம்(கேண்டின்) என்று நாலாபுறமும் கலைந்து சென்றனர்.
இவனும் கையில் இருந்த அவளது உடமைகளையும் பிடித்துக்கொண்டு, “போய் இவ்ளோ நேரம் ஆச்சு இன்னும் லேப்ல என்ன செய்றா?” என்று ஆய்வகத்தை நெருங்க, அதன் உள்கதவைப் பூட்டிக்கொண்டிருந்தார் அங்கிருக்கும் காவலாளி.
அதைப்பார்த்து அதிர்ந்தவன், “அண்ணே என்ன அதுக்குள்ள பூட்டிட்டிங்க?. என் கசின் இங்க வந்தாளே” என்று கேட்க…
அவர் கூற்றில் மேலும் அதிர்ந்தவன், “எல்லாரும் போய்ட்டாங்கன்னா யுகிய எங்க காணோம். லேப்க்கு தான போறேன் சொன்னா” என்று கேட்டுக்கொண்டு சுற்றிமுற்றியும் பார்த்தவன் மீண்டும் தங்கள் வகுப்பிற்கும் சென்று பார்த்து அங்கு அவள் இல்லாதுபோக, கைபேசியில் அவளுக்கு முயற்சித்தபடியே பெண்கள் குளியலறை பகுதிக்கும் ஓடி தேடிவிட்டு வந்தான்.
அவனின் அழைப்புக்கு அவளின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாய் பதில் வந்ததோடு குளியலறை பகுதியிலும் அவளைக் காணாது சிறு பதட்டமும் வந்து அவன் முகத்தில் அமர்ந்தது.
அந்த பதட்டத்தோடே மீண்டும் சென்றவழியே வந்தவனைப் பார்த்து, “என்னடா யுகிய கூப்புட லேப்க்கு போன இந்தப்பக்கம் இருந்து வர்ற?” என்று சற்று முன்னர் அவனுடன் பேசிக்கொண்டிந்தவன் கேட்க… ப்ரித்திவும் சற்று படபடப்பாகவே விஷயத்தைச் சொன்னான்.
அதில் நெற்றியை சுருக்கியவனும், “ஹேய் மச்சான் இதுக்கா இவ்ளோ பதட்டம். போன்பண்ணியா அவளுக்கு? லேப்ல இல்லன்னா, லைப்ரரி கேண்டின் எங்காவது போயிருப்பாடா. வா பாக்கலாம்” என்று அக்கறைப்பட்டு நடந்தவனிடம்…
“இல்லடா என்கிட்ட சொல்லாம அப்டிலாம் போகமாட்டாடா. போன்வேற சுவிட்ச்ஆப்ல இருக்கு” என்று சொன்னாலும் அவனின் கால்கள் அவனைக் கேளாமலே நண்பனுடன் நடந்தது.
அவர்கள் சென்று பார்த்த இடங்களிலும் பெண்ணவள் இல்லாது போக, “யுகி எங்கடி போன” என்று புலம்ப ஆரம்பித்து விட்டான் ப்ரித்திவ்.
திருநெல்வேலி மாவட்டத்திலே அது ஒரு பாதுகாப்பான மருத்துவக்கல்லூரிதான். அவளும் இன்னும் சில மாதங்களில் மருத்துவராகப் போகும், விபரம் அறிந்த பெண்தான். பயப்படும்படி எந்த துன்பமும் அவளுக்கு நேர வாய்ப்பில்லை என்று அவன் அறிவுக்குத் தெரிந்தாலும்
அவன் மனம் என்னவோ அவளுக்கு “என்னாச்சோ” என்று வெகுவாகத் துடிக்கத் தொடங்க, அதற்கு ஒரு காரணமும் இருந்தது.
அக்காரணம் இல்லாவிடினும்
கூட அவளுக்கான அவனின் உணர்வுகள் என்றுமே எல்லைக்கு அப்பாற்பட்டவைதான்.
“அய்யோ… யுகி எங்க இருக்கா? என்ன செய்றானு தெரியலையே?” என்று மீண்டும் கலங்கித் தவித்தனைக்கண்டு,
“டேய் இது காலேஜ்டா இங்க பயப்புடுறமாதிரி ஏதும் நடக்காது. எதுக்கு இவ்ளோ பதட்டம். ரிலாக்ஸ்டா” என்று அவனின் நண்பன் தேற்ற…
அவனோ, “இல்லடா… உனக்கே தெரியும்ல அவளுக்கு சைல்ட்வுட்ல இருந்து கொஞ்சம் வீசிங் ட்ரபிள் இருக்கு. ஸ்ட்ரெஸ், பயம், கோல்டு டஸ்ட் இதெல்லாம் அதிகம் ஆனாக்கூட யுகிக்கு மூச்சுதிணறல் வரும்டா. அதான் கொஞ்சம் பயமாயிருக்கு” என்றவன் குரலோ அழுதுவிடுவான் போல இருக்க. பெண்ணின் நிலை அறியாது ஆணின் கால்களும் இற்றுவிடுவது போல் நிற்கவே தள்ளாடியது.
கடந்த நான்கு வருடநட்பில் சம்யுவின் வீசிங் (மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுத்திணறல்) உடல்நலக்குறைபாட்டை அவனும் அறிந்தே இருந்தாலும் ஒரு மருத்துவனான அவனுக்கு ப்ரித்திவின் பதற்றம் அதிகப்படியாகத்தான் தோன்றியது.
ஆஸ்துமாவை ஒத்த ஆனால் ஆஸ்துமா அல்லாத நுரையீரல் சம்மந்தப்பட்ட ஒருவகை உடல்நலக்குறைபாடுதான் சம்யுவிற்கும் உள்ளது. பருவநிலை மாற்றங்கள், வேகமாக ஓடுதல், படியேறுதல், தூசிபுகை போன்ற சிறுநச்சுக்கிருமிகள் மூச்சுக்குழலுக்குள் செல்லும் சமயங்களில் எல்லாம் இப்பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூச்சுவிடுவதற்கு சிரமப்பபடுவர். அந்த சமயங்களில் அதற்குண்டான “Salbutamol, ethiophilin, Dexamethasone, theophilin மாத்திரைகளினாலோ, அல்லது வென்டர்லின் இன்கேலர் உறுஞ்சியில் உள்ள “Asthalin, terbutalin” மருந்தை உபயோகிப்பதின் மூலமாகவோ அடுத்த இரண்டே நிமிடங்களில் மூச்சுத்திணறல் சரியாகி அவர்கள் இயல்பு நிலைக்கும் திரும்பி விடுவர். அவற்றை உபயோகிக்காது, அல்லது வேறு எந்த சிகிச்சையும் பெறாது காலம் தாழ்த்தப்படுமாயின் சற்று ஆபத்தான நிலைக்குக்கூட இழுத்துச் செல்லும் வீரியம் கொண்ட இந்த மூச்சுத்திணறல் குறைபாடு மரபு ரீதியாகக்கூட வரும் என்று சொல்லப்படுகிறது.
அன்று மருத்துவ விழாவில் வாட்டசாட்டமாக இருந்த அத்துணை மாணவர்களை அடித்து துவைத்தவன் இன்று சிறுபிள்ளை போல் கலங்குவதை சிறு ஆராய்ச்சியோடு பார்த்தவனோ
“டேய் ஒரு டாக்டரா இருந்துகிட்டு சாதாரண வீசிங்க்கு ஏன்டா இவ்ளோ எமோஷனல் ஆகுற? அவளுக்கு வீசிங் ட்ரபிள் இருக்கதால அவகிட்ட எப்பவும் இன்கேலரும் (நுரையீரலுக்குள் காற்றுப்பாதைகளின் தசைகளை தளர்த்தும் மருந்து நிரப்பப்பட்ட கருவி) இருக்குதான” என்று கேட்டு ப்ரித்திவின் தலையாட்டலையும் பெற்றுக்கொண்டவன், “அப்போ பயப்புடவேண்டாம் ப்ரீ… இருட்டவேற தொடங்கிடுச்சு. வா இன்னொரு டைம் லேப்க்கு போய் நல்லா செக் பண்ணிட்டு அப்றம் டீன்கிட்ட போய் சொல்லலாம்” என்று யோசனை சொன்ன நண்பனுடன் மீண்டும் ஆய்வகம் நோக்கி ஓடினான் ப்ரித்திவ்.
இருவரும் ஆய்வகத்தின் அருகில் சென்று “சம்யு, யுகி, யுகி” என்று மீண்டும் மீண்டும் கூவியபடி நுழைவாயிலை கடக்கவும் உள்ளே இருந்த பெரியகதவு பலமாகத்தட்டப்பட்டது.
அதில் ஒருவரை ஒருவர் அதிர்ந்து பார்க்க, “யுகி யுகி யுகி உள்ளதான்டா” என்று மேலும் பதறிய ப்ரித்திவ்வோ, “வாட்ச்மேன் வாட்ச்மேன். சாவி” என்று காவலாளியைத் தேட, கேண்டின் சென்றிருந்தவரோ இன்னும் வந்திருக்கவில்லை.
அதில் இன்னும் பதட்டமானவன், “டேய் யுகி யுகி உள்ள மாட்டிக்கிட்டா போலடா. இந்த வாட்ச்மேனுக்கு அறிவே இல்லியாடா. அவள உள்ள வச்சு பூட்டிருக்கானே” என்று அங்கிருந்த மேசையில் குத்தவும் சூழலை உணர்ந்த நண்பனோ, “டேய் இரு இரு சாவி இங்கதான் எங்காவது இருக்கும். நான் பாக்குறேன்டா” என்று சமாதானம் செய்தவன் மேசை இழுப்பறைக்குள் சாவியை தேடினான்.
அதற்குள் ப்ரித்திவின் குரலைக் கண்டுகொண்ட சம்யுவும், “திவா திவா…வந்துட்டியாடா. பயமாயிருக்குடா. சீக்கிரம் கதைவைத் துறடா” என்று உள்ளிருந்தே மீண்டும் சப்தமாகத் தட்டத் தொடங்கினாள் கதவை.
அதைக்கேட்டு “யுகி யுகி. நான் வந்துட்டேன்டி. கொஞ்சம் பொறுடி கொஞ்சம் பொறுடி. இப்ப திறந்துருவோம்” என்று அவனும் சப்தமாய் கத்தியவன் நண்பன் எடுத்துக் கொடுத்த சாவிகள் சிலதை வாங்கி பூட்டில் செலுத்தி செலுத்தி திறவாது எடுத்தான் கோபத்தோடு.
இறுதியாக ஒற்றை சாவி மட்டுமே அவன் கையில் எஞ்சியிருக்க, “கடவுளே இதாச்சும் சேரணும்” என்ற அவசர வேண்டுதலோடு போர்க்கால அவதியாய் அச்சாவியை பொருத்தி பூட்டை விடுவித்தவன், “யுகீ…” என்று ஆய்வகத்தின் கதவையும் அகலத்திறக்க…
அடுத்தநொடி உண்டிவில்லில் புறப்பட்ட சிறு கல்லாய், “திவ்வா…” என்ற கூவலுடன் ஓடிவந்த பெண்ணவளோ அவன் என்ன ஏதென்று உணரும் முன்பே பூஞ்செண்டாய் அவன் நெஞ்சில் பாய்ந்து அவன் முதுகை வளைத்து இறுக அணைத்திருந்தாள் சம்யுக்தா.
விரும்பி எடுத்த படிப்பினாலோ அல்லது மருத்துவத்துறையில் உள்ள பிடிப்பினாலோ பாடம் வகுப்புகள் என்று வந்து விட்டாள் தனை மறந்து மூழ்கிவிடும் பழக்கம் சம்யுவிடம் அதிகமாகவே இருந்தது.
அதுபோல்தான் சற்று முன்னர் ஆய்வகத்தில் ஆசிரியர் ஒருவர் செய்யும் ஆராய்ச்சிக்கு உதவிக்கு வந்தவள் தனை மறைந்து வேலையில் மூழ்கிவிட, ஆய்வகத்தின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவும்தான் தன்னிலை உணர்ந்தாள் சம்யுக்தா.
போதாதற்கு கைபேசியும் செயலிழந்து போக இருட்டில் தடவித்தடவி வாயில் கதவை நெருங்கியவள் பூட்டிய கதவைக் கண்டு அதிர்ந்துதான் போனாள்.
இருந்தும் தைரியத்தைக்கூட்டி கதவைத் தட்டத் தொடங்கியவளை உரசிக் கொண்டு மரப்பல்லி ஒன்று கீழே விழுந்து வைக்க அதில் கண்ணை மூடிக்கொண்டு “திவா திவா பயமாயிருக்குடா” என்று கத்தத்தொடங்கியவள் ப்ரித்திவ் கதவைத் திறந்த மறுநிமிடம் ஓடிவந்து அவனை அணைத்திருந்தாள்.
பெண்ணவள் அப்படி வந்து அணைப்பாள் என்று எதிர்பாராதவன் நொடிநேரம் திணறினாலும், திவா என்று நெஞ்சில் புகுந்தவளை ப்ரித்திவின் கரங்கள் அன்னிச்சையாக அணைத்துக்கொள்ள அவனின் ஒருகரமோ, “ஒன்னும் இல்ல கன்னுகுட்டி. பயப்படாதடி” என்று அவள் முதுகை நீவத் தொடங்கியது.
“திவா திவா” என்று நடுங்கிய இதழ்களும், முகம் முழுதும் வேர்த்து வடிய, குலுங்கும் முதுகும், ஒவ்வொரு மூச்சிற்கும் மேலும்கீழும் ஏறிஇறங்கிய பெண்ணின் நெஞ்சுக்கூடுமே அவள் நிலையைப் பறைசாற்ற, அவன் பயந்தது போலவே சிறிதான மூச்சுத்திணறலிலும் திணறிக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.
இன்னும் உடல் நடுங்க நின்றிருந்தவளை விலக்கத் தோணாது அரவணைத்து நின்றிருந்தவன் அவள் மூச்சுக்குத் தவிப்பதைக் கண்டு, “இன்ஹேலர் எங்கடி?” என்று அவள் உடையின் பையில் வேகமாகத் துழாவி வென்டார்லின் இன்ஹேலரை எடுத்து அவள் வாயிற்குள் பாய்ச்சினான்.
இருட்டறையில் தனியே மாட்டிக்கொண்டதோடு பல்லியைக் கண்டும் ஏகமாய் பயந்தவள்
“திவா பயமாயிருக்குடா. அங்க. அங்க பல்லிடா. பல்லிடா” என்று இன்னும் படபடப்புடனே இருக்க…
அதைக்கண்டு அவளை விடவும் பதறியவன், “ஒன்னுமில்லடி, ஒன்னுமில்லடி அதான் நான் வந்துட்டேன்ல. பல்லிய அடிச்சுடலாம் கன்னுகுட்டி. கூல்டி கூல்டி.” என்று அவளைக் கைவளைவிலேயே வைத்து ஆசுவாசப்படுத்த, அவர்களையே பார்த்திருந்த அவன் நண்பனுக்கோ, “என்னடா நடக்குது இங்க?’ என்ற கேள்விதான் மண்டையைக் குடைந்தது.
ஒருவன் தங்களையே பார்த்திருப்பதைக்கூட அறியாமல் அவர்கள் உலகத்தில் இருந்தவர்களை வேறு வழியில்லாது, “சம்யு ஆர் யூ ஓகே நவ்?” என்று அவர்கள் நண்பனே வழியச் சென்று அழைத்தான்.
அப்பொழுதுதான் சுற்றம் உணர்ந்த சம்யுவும் சட்டென்று
ப்ரித்திவிடமிருந்து பிரிந்தவள்,
“ஹான் வருண். ஐம் ஐம் ஓகே” என்று சொல்ல… ப்ரித்திவும் நண்பனுக்கு நன்றி சொன்ன சமயம்…
கேண்டின் சென்றிருந்த காவலாளியும், “இங்க என்னப்பா கூட்டம்?” என்று வந்து சேர்ந்தார்.
பெண்ணவள் விலகவும் நடப்பிற்கு வந்த ப்ரித்திவும் சாவகாசமாக வந்து நின்ற காவலாளியைப் பார்த்ததும், “ஒரு பொண்ணு உள்ள இருக்குது கூட தெரியாம கதவு பூட்டிட்டு எங்க போனீங்க?” என்று அவர் மீது அடிக்கப் பாய்ந்தான்.
அதில் பயந்து பின்வாங்கியவரோ, “அய்யோ நான் உள்ள போய் கூப்ட்டு பாத்துட்டுதான தம்பி பூட்டினேன்” என்று அலற…
சம்யுவும், “நான் ஹெட்போன் போட்டு இருந்தேன்டா. அதான் கேக்கலபோல. அவர விடு திவா” என்று ப்ரித்திவை அடக்கினாள்.
அதற்குள் நூலகத்திலிருந்த அவர்கள் நண்பர்கள் சிலரும் அங்குவந்து சேர, சோர்வாக அமர்ந்திருந்த சம்யுவிடம்
“என்னாச்சுடி?” என்று கதைக்கக் கூடிவிட்டனர் அவளின் வகுப்புத் தோழிகள்.
சம்யு அவர் மீது தவறில்லை என்று சொல்லியும் இன்னும் காவலாளியை முறைத்துக் கொண்டிருந்த ப்ரித்திவிடம், “விடுடா ஏதோ தெரியாம தப்பு நடந்துருக்கு. நாம நாலு வருஷமா அவர பாக்குறோம். அவர் அப்டி கேர்லஸ்ஸா இருக்க மாட்டாருடா” என்று அவனை சமாதானம் செய்து நகர்த்திவர…
அவனும், ” இப்படி நடக்கிறது இதான் லாஸ்ட்டா இருக்கனும்” என்று எச்சரித்துவிட்டு இயல்புக்குத் திரும்பினான்.
காவளாலியும், “சரிங்க தம்பி இனிமேல் இப்டி நடக்காது. மன்னிச்சுடுங்க” என்றுவிட்டு சம்யுவை விசாரிக்கச் செல்ல… ப்ரித்திவையே பார்த்திருந்த அவனின் நண்பன் வருணோ, “டேய் மச்சான். நீ சம்யுவ லவ் பண்றியா என்ன?” என்று சமீபகாலமாய் தன் மூளையை குடைந்து கொண்டிருந்த கேள்வியைக் கேட்டே விட்டான் ப்ரித்திவிடம்.
நண்பனின் கூற்றில் ப்ரித்திவோ,
“டேய் ஏன்டா? நான் நல்லா இருக்கது உனக்குப் பிடிக்கலியா” என்று கலகலவென்று நகைக்கத் தொடங்க…
அவர்களோடு நின்றிருந்த மற்ற நண்பர்களும் கூட, “டேய் உனக்கு என்னாச்சுடா? ஏன்டா திடீர்னு இப்டி கேக்குற? சம்யு அவனவிட பெரியவடா” என்று ஞாபகம் செய்தனர்.
ஆனால் அந்த வருணோ, “அது தெரிஞ்சனாலதான்டா இப்போ கிளாரிபை பண்ணிக்கிறேன்” என்றவன், “நீ சம்யுக்காக கோவப்படுறது, கொஞ்சமுன்ன துடிச்சதெல்லாம் பாக்குறப்போ
நீ அவள லவ் பண்றியோன்னு தோணுது மச்சி” என்று ப்ரித்திவிடமே சொல்ல…
“டேய்… இதக்கேட்டா என் அண்ணன் நவீனுக்கு இதய நோயே வந்துடும்டா” என்று இன்னும் அகலச் சிரித்தவன்…
அதற்கு, “இல்லடா” என்று நண்பனின் கையைப்பற்றிய வருணும், “ஒரு ஆணும் பெண்ணும் நட்பா இருக்கிறதோ காதலிக்கிறதோ அவங்கவங்க விருப்பம்தான். அதில் தப்பு சொல்ல எதுவும் இல்லை. ஆனா நீயும் சம்யுவும்…” என்று நிறுத்தி “உங்க வீட்டு சூழல், உங்களுக்கு இருக்க ஏஜ் டிப்ரண்ட் எல்லாம்தான் இப்போ இந்தக் கேள்விய கேக்க வைக்குது. நீ சம்யுவ லவ் பண்ணாக்கூட தப்பில்ல. அத இப்போவே கிளாரிபை பண்ணிக்கோ. அதுதான் உங்களுக்கும் உங்க பேமிலிக்கும் நல்லது” என்று உண்மையான அக்கறை கொண்டு முடித்தவனை…
“என்னடா… நீ சைக்யாக்ரிஸ்ட் ஆகப்போறதுக்கு என்னவச்சு பிராக்ட்டிஸ் பண்றியா. அட்வைஸ்லாம் பலமாஇருக்கு. ஆனா எனக்கு அது தேவைப்படாதுடா” என்றவன்…
“அவள நான் லவ் எல்லாம் பண்ணல. ஆனா அவ எனக்கு உயிருக்கும் மேலானவடா” என்று மீண்டும் காதைச்சுற்றி மூக்கைத் தொட்டுவிட்டு சம்யுவை நோக்கி நகர்ந்தான் ப்ரித்திவ்.
அதில் அவனை மேலும் குழப்பமாகப் பார்த்த வருணோ “இவன புரிஞ்சுக்கவே முடியலயே” என்று ஒரு பெருமூச்சை வெளியேற்றிய வண்ணம் கல்லூரியில் இருந்து செல்ல, இப்பொழுது நன்கு தெளிவாகிவிட்ட சம்யுவுடன் ப்ரித்திவும் தங்கள் வீடு நோக்கிப் பயணித்தான்.
வெகு நாளைக்குப்பிறகு ஏற்பட்ட உடல் உபாதையால் சற்று சோர்வாய் இருந்தவளை மருத்துவரான அவள் அன்னையின் கவனிப்பில் விட்டுவிட்டு, “ரெப்பரஷ் பண்ணிட்டு வர்றேன்த்த” என்று தன்வீடு வந்தவன் கண்ணாடியின் முன்னே நின்று சட்டையின் பித்தான்களை அவிழ்க்க அவன் கையில் தட்டுப்பட்டது நீளமான கார்குழல் ஒன்று.