நெஞ்சுப்பகுதியை ஒட்டிய சட்டையின் மூன்றாவது பித்தானில் நன்கு சுற்றியிருந்த குழல் கற்றையைக்கண்டு, “என் சட்டையில எப்டி முடி?” என்று புருவத்தைச் சுருக்கியவனுக்கு அதன் பக்கத்தில் ஒட்டியிருந்த சிகப்பு வண்ண ஸ்டிக்கர் பொட்டும் கருத்தில் படிய…
அடுத்தநொடி அது யாருடையது என்றும் மூளை மனதுக்கு செய்திகள் அனுப்பியதில் அழகாய் விரிந்த ஆடவனின் சிவந்த இதழ்கள் “யுகீ…” என்று அழுத்தமாக உச்சரித்தது.
“பல்லியப்பாத்தா அப்டி என்னதான் பயமோ? அதட்டல் உருட்டல் எல்லாம் என்கிட்ட மட்டும்தான்” என்று இருபுறமும் தலையாட்டி தனக்குள்ளே பேசிக்கொண்டவன் பித்தானில் சிக்கியிருந்த ஒற்றைகுழலை அதற்கு வலித்து விடாது மெதுவாய் விடுவித்து மென்மையாய் அதை உள்ளங்கையில் தாங்கினான்.
அதனருகில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டையும் பூப்போல எடுத்தவன், “பயத்துல ஓடிவந்து கட்டிக்கிட்டதுல இவங்க வந்து என்கிட்ட ஒட்டிக்கிட்டாங்கபோல” என்று புன்னகையோடு சொல்லிக் கொண்டவனுக்கு சற்று முன்னர் பெண்ணவளை அணைத்து நின்ற நொடிகள் தற்சமயம் கண்முன் விரிந்து அவன் உடலோடு உள்ளத்தையும் சிலிர்க்க வைத்தது.
அது அவர்களுக்கான முதல் அணைப்பு இல்லைதான். புஜங்களைப் பற்றிக் கொள்வதும், தோளில் தொற்றிக் கொள்வதும் அவர்களுக்கு தண்ணீர் பட்ட பாடுதான் என்றாலும் இன்று கிட்டிய சம்யுவின் நெஞ்சார்ந்த அணைப்பும், சற்றுமுன்னர் தன் நெஞ்சும் கைகளும் உணர்ந்த பெண்ணவளின் மென்மையும் அவனுள் இதுவரை அவன் அறியாத ஏதோ ஒன்றை தூண்டி விட்டிருந்தது.
அவளை அணைத்து நின்ற பொழுதில்கூட அவனுள் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்கவில்லை.
ஆனால் இக்கணம் அந்த அணைப்பின் நினைவோ அவனுள் குளிர்ந்த பனியாய் இறங்கத் தொடங்கியது.
கூடவே அது இன்னும் இன்னும் வேண்டும்படியான இன்ப அலைகளையும் அவனுள் அளவின்றி உற்பத்திசெய்ய, அவ்வின்ப அலைகளில் மிதந்தவாறே கையில் ஏந்தியிருந்த பாவையவளின் ஒற்றை முடியோடும், நெற்றிப் போட்டோடும் மேசை இழுப்பறையைத் திறந்தவன் ஓவியம் என்கிற பெயரில் தான் கிறுக்கி வைத்திருந்த பல படங்களுக்கு மத்தியில் இருந்த பெண்ணின் வண்ணப்படத்தை எடுத்து அப்படத்தின் தலைப்பரப்பில் அம்முடியை நீளவாக்கில் ஒட்டவைத்தான்.
படத்தின் மேல் பகுதியில் இருந்து ஒட்டியும் இன்னும் பாதி முடியளவு நீளம் எஞ்சியிருக்க, “உன் முடி இவ்ளோ நீளமா பப்ளி?” என்று மீண்டும் கீழிருந்து மேலாய் அர்ரோமத்தை ஒட்டியவன், வெறும் ஓவியத்தில்கூட நறுக்கிவைத்த நிலாத்துண்டாய் மிளிர்ந்த பெண்ணின் பிறைநெற்றியின் மையத்தில் அவளின் கூம்புவடிவ ஸ்டிக்கர் பொட்டையும் வைத்துவிட்டான்.
இத்துணை தினங்கள் வெற்று ஓவியமாய் இருந்த அப்படமோ இக்கணம் ஆடவன் செயலில் உயிர்கொண்ட பூவாய் தலையசைத்துச் சிரிக்க, அதைப்பார்த்து இன்னும் கிறங்கியவன் அப்பொட்டின் மேலேயே சிறு முத்தமொன்றை பதித்தான் தன்னையும் அறியாமல்.
முத்தமிட்டு நிமிர்வதற்குள்ளாகவே அப்பொட்டில் இருந்த வாசம் சற்றுமுன் தன் கைவளைவில் உணர்ந்த பெண்ணின் மென்மைகளை மீண்டும் உணரமாட்டோமா என்ற ஏக்கத்தை அவனுள் எழுப்ப, “இன்னிக்கு ஏன் எனக்கு இப்டிலாம் தோணுது. காய்ச்சல் வேற வர்றமாறி இருக்கே” என்று முனுமுனுத்துக் கொண்டவனின் சிந்தனையை வழக்கம்போல் கம்ப்யூட்டர்கரடி (கைபேசி) அழைத்து தனதாக்கிக் கொண்டது.
மனநோயோ
உடல்நோயோ
உதிரம் கொட்டி
உணர்வுகள் மரித்து
உயிர்பிரியும் வேளையில்
தங்கள் உயிர் கொண்டு பேணி
அவ்வுயிரை உடலிடம் சேர்க்கும்
மருத்துவப்பணிக்கு கற்றலின் இறுதியில் இருந்த மாணவர்கள் அளவுக்கு அதிகமாகவே உழைக்க வேண்டிஇருந்தது.
இன்னும் சில தினங்களில் இறுதித்தேர்வு என்னும் நிலையில் சம்யுவின் ஆர்ப்பாட்டமோ சற்று அதிகமாகவே இருந்தது.
நான்கரை வருட உழைப்பின் பலனாய் மருத்துவர் என்ற பட்டத்தை தங்கள் கையில் சேர்ப்பிக்கப்போகும் அந்த இறுதிப்பரீட்சைக்கு தான் படித்தாளோ இல்லியோ தங்களை மருத்துவம் சேர்த்து விட்ட மாமனின்முன் மாமன் மகனை மருத்துவனாய் நிறுத்த வேண்டும் என்ற முனைப்பில்
“படி எழுது” என்று ப்ரித்திவை தலையாலே தண்ணி குடிக்க வைத்துவிட்டாள் அவனின் யுகி.
அத்தைமகள் செய்யும் அலப்பறையில் சுகமாய் நனைந்தபடியே, மருத்துவனாயும் சிரமேற்று படித்து முடித்து இறுதிப்பரீட்சைகளையும் எழுதிவிட்டு வந்தவனுக்கு இத்துணை தினங்கள் சற்றே ஒதுங்கி இருந்த அந்த புதுவித உணர்வு மீண்டும் தலைதூக்கத் தொடங்கியது.
இப்பொழுதெல்லாம் ப்ரித்திவ் அடிக்கடி சம்யுவின் அந்த ஓவியப்படத்தை எடுத்து பார்க்கத் தொடங்கியிருந்தான்.
ஆரம்பத்தில் வெறும் பார்வையாக இருந்த அந்தப்பழக்கம் சமீபநாட்களில் ரசிப்பாக மாறி, விரல்தீண்டலாய் தொடர்ந்து இறுதியில் ஓவியத்தின் நெற்றியில் இதழ் ஒற்றியப்பின்னரே அவன் உள்ளத்தின் ஆர்ப்பரிப்பு சற்றே மட்டுப்பட, தான் ஏன் இப்படி எல்லாம் செய்கிறோம் என்ற காரணம் மட்டும் அவனுக்கு தட்டுப்படாது இருந்தது.
ப்ரித்திவோடு சம்யுவும் மருத்துவப்படிப்பின் இறுதிப்பரீட்சையை சிறப்பாக எழுதிமுடித்திருக்க அவர்களின் விடுமுறைகாலமும் தொடங்கியிருந்த சமயம் அது.
குடும்பத்தின் பரம்பரை தொழிலான உணவு தொழிற்சாலையை தந்தையுடனும் சித்தப்பனுடனும் சேர்ந்து கவனிக்கத் தொடங்கிய நவீன் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு சில புதிய யோசனைகளை கூறியிருந்தான்.
இதுவரை பெரியளவு பலசரக்குக் கடைகள், சாப்பிங்மால்கள் போன்ற கடைகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்து வந்த தங்கள் தயாரிப்புகளை திருநெல்வேலியில் உள்ள பெரிய பெரிய உணவகங்கள், பெரிய பெரிய கம்பெனி, கல்லூரிகேன்டின்கள் போன்ற இடங்களில் எல்லாம் பொருட்களின் இலவசமாதிரிகள் கொடுத்து அறிமுகப்படுத்தி மொத்தவியாபாரம் பிடிக்கலாம் என்ற யோசனையை முன்வைத்தவன், அது சரியான வழியில் சென்றால் அப்படியே மற்ற ஊர்களிலும் அதைத் தொடர்ந்தால் தொழில் அதிக வளர்ச்சி அடையும் வாய்ப்பு நிறைய இருக்கிறது என்று தன் திட்டங்களைக் கூறியிருந்தான் நவீன்.
அதற்கு பெரிய ஆண்களும் பலமான வரவேற்புத் தெரிவித்திருக்க, முதல்கட்ட நடவடிக்கையாக அவனே அவனுக்குத் தெரிந்த உணவகங்களில் சென்று மாதிரிகள் கொடுத்திருந்தான்.
அதன்மூலம் பெரிய வியாபாரம் ஒன்று போனவாரம் அவர்கள் தொழிற்சாலைக்கு ஒப்பந்தம் ஆகியதோடு முன்பணமாக ஒரு தொகையும் வந்திருந்தது.
அந்த மகிழ்ச்சிக்கு நன்றி கூறும் வகையில்தான் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் வெகுநாளைக்குப் பிறகு அன்று குலசாமி கோவிலுக்குக் கிளம்பி இருந்தனர்.
அன்று அதிகாலை வேளையிலே கைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலியில் விழிப்புத்தட்டிவிட்டது ப்ரித்திவிற்கு.
அதில், “கோவிலுக்குப் போனும் திவா. சீக்கிரம் எந்திரிச்சு கிளம்பு. நான் கிளம்பி வரலேட் ஆகும். நான்வந்து எழுப்புவேன்னு தூங்கிட்டிருக்காத” என்று மிரட்டல் எமோஜிகளோடு சம்யு அனுப்பிய ஒலிக்கற்றைகளைக் கேட்டவன் கைபேசி திரையில் ஒளிர்ந்த பெண்ணவளின் பூமுகத்தையும் பார்த்து, “சரிங்க மேடம்” என்று சிரித்துக்கொண்டே கீழே இறங்கிச்செல்ல…
அங்கே அவன் தந்தை யுவாவோ உணவு மேசையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “ஸ்ஸ்ஸ் விழி, டீ மொசக்குட்டி” என்று அவன் எதிரில் அமர்ந்து காய் நறுக்கிக் கொண்டிருந்த மனைவியை அழைத்தான்.
அதில் சட்டென்று நிமிர்ந்தவள், “என்னத்தான்” என்று எழுந்து அவன் அருகில்வரவும்,
“கோவிலுக்கு போறப்போ அன்னிக்கு நான் காஞ்சிபுரத்திலிருந்து வாங்கிட்டு வந்த பட்டுச்சேலைய கட்டிக்கிட்டுவாடி. உனக்கு எடுப்பா இருக்கும்” என்று சொல்ல…
நரைகூடிப் போனபின்னும் தனை இத்துணை ரசிக்கும் கணவன் வார்த்தையில் சடுதியில் சிவந்துவிட்ட முகத்தோடு “சரிங்கத்தான்” என்றவள் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
மனைவியின் அந்த வெக்கத்தில் குளிர்ந்தவனும், “வெக்கப்பட்டு வெக்கப்பட்டே என்ன ஒரு வழியாக்கிட்டிருக்கா மொசக்குட்டி. இவ்ளோ வயசாகி முடியெல்லாம் நரச்சும்கூட, அந்த வெக்கம்மட்டும் அப்டியே வச்சுருக்காளே” என்று புன்னகையூடே சலித்துக்கொண்டு உள்ளே செல்ல…
மாடிப்படியின் வளைவில் இருந்து அவர்கள் சாம்பாசனையைக் கேட்டிருந்த அவர்கள் மகவிற்கோ அவனின் யுகிதான் கண்முன் வந்து குதித்தாள்.
‘யுகிக்கும் பட்டுசேலை கட்டுனா நல்லா இருக்கும்ல’ என்று எண்ணிக்கொண்டவன் விரைந்துசென்று கைபேசியில் அவளை அழைத்து வீடியோகாலில் வரச்சொல்ல…
அவளோ, “காலங்காத்தால ஏன்டா இம்சைபண்ற. நெய்வேத்தியம் பண்ண அம்மாக்கு ஹெல்ப் பண்ணிட்டிருக்கேன்டா” என்று சலித்துக்கொண்டாலும் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் சொன்னதை செய்திருந்தாள்.
குளித்துமுடித்து தலையில் கட்டிய துவாலையோடு நைட்டியில் இருந்தவளை நிமிடநேரம் பார்த்துவிட்டு, “யுகி கோவிலுக்கு என்ன ட்ரெஸ் போட்டு வரப்போற?” என்று கேட்க…
அவளோ, “சுடிதார் தான்டா. ஏன்?. இதக்கேக்கத்தான் வீடியோகால்ல வரச்சொன்னியா” என்று பொரிந்தாள்.
அதில், “கொஞ்சம் பொறுடி” என்றவன், “நீ இன்னிக்கு பட்டுச்சேலை கட்டு” என்று சொல்ல…
அவளோ, “என்னாது பட்டுசேலையா? அய்யோ என்னால முடியாது. என்கிட்ட நல்ல சேலையும் இல்ல. சீர்க்கு எடுத்ததுதான் இருக்கு. அதோட பிளவுசும் இப்போ பத்தாது” என்றாள்.
அதற்கு “ப்ச் பட்டுசேலை இல்லியா?” என்று யோசித்தவன், “சரி உன்கிட்ட பட்டு பாவாடைதாவணி இருக்குதான. அதுல போன பொங்கலுக்கு எடுத்த பச்சைக்கலர் பாவாடை, ம்ம்ம் ரோஸ்கலர் தாவணி அத இன்னிக்கு கட்டிக்கோ” என்க…
அவன் கூற்றில் அதிர்ந்தவளோ, “உனக்கு என்னாச்சு திவா. எப்பவும் உனக்கே நான்தான் ட்ரெஸ் எடுத்து வைப்பேன். இன்னிக்கு என்னடா நீ புதுசா பண்ற?” என்றாள்.
எப்பொழுதும் அவன் அணியும் உடையே என்ன வண்ணம் என்று அறிந்திராதவன் அவள் போன பொங்கலுக்கு அணிந்த உடையை ஞாபகமாய் சொன்னது சம்யுவிற்கு அத்துணை ஆச்சர்யம் தான்.
கூடவே அதே உடையை கோவிலுக்கு அணிந்துவா என்று வேறு சொல்லவும், “திவா ஆர் யூ ஓகேடா?” என்றுதான் கேட்டாள் சம்யு.
அதில் அவளை முறைத்துப்பார்த்தவன் “நான் நல்லாத்தான்டி இருக்கேன். நான் சொன்னத நீ மறந்துடாத. அப்டியே அன்னிக்கு போலவே நிறைய பூவும் வச்சுக்க. அப்றம் அதே கலர்ல வளையலும் போட்டுக்கோடி. ம்ம்ம் கண்ணாடி வளையல்” என்றுபடபடவென்று மொழிந்துவிட்டு கைபேசியை அணைக்க,
அங்கே சம்யுவோ ‘இவனுக்கு இன்னிக்கு என்னாச்சு? புதுசு புதுசா பண்றான். சொல்றான்’ என்று சலித்துக் கொண்டாலும் அவன் கூறியதுபோலவே தயாராகி வந்தவளை அனைவருமே ஆவென்றுதான் பார்த்தனர். அதில் நவீனின் பார்வையும் அடக்கமே.
மரகதப்பச்சை வண்ண காஞ்சிபுரபட்டுப் பாவாடைசட்டையும், புதிதாய் பூத்த மொட்டுத்தாமரை வண்ண ஷிபான் தாவணியும் அணிந்து அதற்குத் தோதான அதே பச்சை நிறத்தில் மரகதக்கற்கள் பதித்த காதணியும், கழுத்தணியும் மின்ன, தலைகொள்ளாப்பூவும் தோளின் இருபுறம் வழியவிட்டு அவன் கூறியதுபோல் பச்சையில் கண்ணாடி வளைகளும் குலுங்க கோவில் சிற்பம் போல் தந்தையின் மகிழுந்தில் இருந்து இறங்கியவளைப் பார்த்து இமைக்க மறந்து நின்றுவிட்டான் ப்ரித்திவ்ராஜ்.
அவன் பிளாக்கியில் அமர வசதியென்று எப்பொழுதும் சூரிதார் உடையிலே இருப்பவளின் இன்றைய அலங்காரத்தைக்கண்டு அவள் மாமன் மனைவிகளோ,
“இன்னிக்கும் கொழாய மாட்டிட்டு வராதன்னு நானே சொல்லலாம்னு நினைச்சேன்” என்றும், “பாவாடதாவணில அம்மன் சிலையாட்டம் ரொம்ப அழகா இருக்க யுக்தாமா.” என்றும் சிலாகித்துக் கொண்டனர்.
அவர்களுக்கு ஒரு புன்னகையை பரிசாகக் கொடுத்தவளோ பெண்ணவளின் சிலை போன்ற அழகில் சிலையாகி நின்றவனை நெருங்கியவள், “டேய் திவா கேட்டியா… நீ சொன்னதெல்லாம் போட்டு வந்ததால நான் அம்மன் சிலைமாறி இருக்கேன்னு அத்தைஸ் சொல்றாங்க.
ஆனா நீ ஒன்னுமே சொல்லாம பேன்னு முழிக்கிற” என்று முழங்கையால் அவன் இடையில் இடித்தாள் சம்யுக்தா.
அதில் தலையை உலுக்கியவன், “யுகி யுகி நீ நீ இவ்ளோ அழகாடி?” என்று திணற…
அவன் திணறல் புரியாதவளோ, “என்னடா சொன்ன?” என்று மீண்டும் வினவியதில் தன்னை மீட்டுக்கொண்டவன், “அது அது அத்தமக அழகுல மாமன்மகன் அப்டியே சாக்காயிட்டேன்டி” என்று உண்மையையே ஹாஷ்யமாய் சொன்னவனை மேலிருந்து கீழ் ஒருமாதிரியாகப் பார்த்து, “இதான் அழகுல மயங்குறதா மச்சி?” எனக்கேட்டு பக்கென்று சிரித்தாள் பெண்.
அதில் மேலும் மயங்கிய மருத்துவனோ மீண்டும் மொழி மறந்து நிற்க, “இந்தா யுக்தா இத தலைல வச்சுக்கோ. உன் தாவணிக்கலருக்கு பொருத்தமா இருக்கும். நானே பறிச்சுட்டு வந்தேன்” என்று ரோஜா ஒன்றை நீட்டி அவர்கள் மௌனத்தைக் கலைத்தான் நவீன்.
சம்யுவும், “தாங்க்ஸ் மாமா” என்று அதை வாங்கி தலையில் சூடிக்கொள்ள, நொடிகள் சில அவளையே பார்த்திருந்த நவீனோ அருகில் இருந்த ப்ரித்திவிடம்,
முன்பெல்லாம் இதுபோல் பேச்சுக்களில் அவனும் கலந்து கொண்டு அண்ணனை கிண்டலாலே கிண்டி எடுப்பவனுக்கு இக்கணம் நவீனின் பேச்சும் செய்கையும் ஒருவித எரிச்சலைத்தான் கொடுக்க, “என் யுகிக்கு அவன் எப்படி பூ கொடுக்கலாம்” என்று சிறிதான கோபமும் எட்டிப்பார்த்தது.
அச்சமயம் சந்தனாவும் சம்யுவைப்போலவே பாவாடை தாவணியில் அங்குவர, “சந்தனாமா இங்கவா” என்றழைத்த நவீனோ, “இந்தா வச்சுக்கோ” என்று அவளிடமும் ஒரு ரோஜாவைக் கொடுக்க, அதைப்பார்த்தபின்னர்தான் ப்ரித்திவின் உள்ளம் சற்றே சாந்தமடைந்தது. அத்தைமகள் என்ற முறையில்தான் அவன் பூ கொடுத்துள்ளான் என்று.
ஆனால் ‘நவீனுக்கு யுகி வெறும் அத்தை மகள் மட்டும்தானா. கூடியவிரைவில் அவனுக்கும் அவளுக்கும் திருமணம் என்ற பேச்சு இப்பொழுதெல்லாம் வீட்டில் அடிக்கடி எழுகிறதே’ என்ற மூளையின் நினைவுறுத்தல் அவனுக்கு எட்டிக்காயாய் கசக்க…
தன் உள்ளம் போகும் போக்கை எண்ணி அதிர்ந்து குழம்பியவனை தோளில் தட்டி அழைத்த சம்யுவோ, “என்னடா… கோவிலுக்கு வர ஐடியா இருக்கா இல்லையா? எல்லாரும் போயாச்சுடா” என்று சொல்லவும்…
“ம்ம்ம் வர்றேன்டி” என்று விரைந்து வந்து வண்டியில் ஏறிக் கொண்டான் ப்ரித்திவ்.