இருநூறு வருடங்கள் பழமைவாய்ந்த யுவாவீட்டு குலதெய்வம் கருமாரிஅம்மன் கோவில் பூஞ்சோலை கிராமத்தின் மேற்குஎல்லையில் இருந்தது.
யுவா ஊர்த்தலைவர் ஆனப் பின்னர்தான் பாழடைந்ததுபோல் இருந்த கோவிலின் பழமையை மாற்றாது மராமத்துப் பணிகள் பார்த்து அதை புதிய கோவில் போல் தோற்றம் கொள்ளச் செய்திருக்க, யுவாவீட்டினர் வருகிறார்கள் என்று சொன்னாலே கோவில் பூசாரியிலிருந்து பொறுப்பாளர் வரை அனைவருக்கும் அத்துணை சந்தோசம் தான்.
ப்ரித்திவின் பிளாக்கியோடு
ஒன்றன் பின் ஒன்றாக நான்கு வாகனங்களும் கோவில் முன்னே வந்து நிற்க, முதலில் ஆண்களும்
அவர்களைத் தொடர்ந்து இறங்கிய பெண்களும் கோவில் உள்ளே சென்றனர்.
“ம்ம்ம்… பூ, பழம், தேங்காய், அம்மனுக்கு காணிக்கை எல்லாம் இருக்குத்தான். மாலை மட்டும் நவீன் வாங்கப் போயிருக்கான்” என்று சொன்ன மலர்விழியும் அவன் பின்னோடு நடந்தாள்.
அவளைத் தொடர்ந்து தனா காயு கதிர் ஜானுவும் ப்ரித்திவ் சம்யு மற்றும் சந்தனாவும் கோவில் சந்நிதானத்திற்குள் நுழைய, அவர்கள் பின்னோடே நவீனும் மாலையோடு வந்து சேர்ந்தான்.
“வாங்க வாங்க வாங்க, ஐயா இப்டி குடும்பத்தோட கோவில் வந்து ரொம்பநாள் ஆச்சே” என்று அங்கிருந்த கோவில் அர்ச்சகர் அனைவரையும் வரவேற்க,
அவருக்கு தலையசைத்து புன்னகையோடு பதில் கூறிவிட்டு பயபக்தியாய் கடவுளின் முன்னே நின்றவர்கள் மனமுருக தெய்வத்தை வணங்கினர்.
கொண்டுவந்த பூஜைப் பொருட்களையும் பூசாரியிடம் கொடுத்து பூஜைமுடிய பிரசாதமும் வாங்கிக்கொண்டு வெளியேவந்தவர்கள் சிறிதுநேரம் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து அளவலாவிக் கொண்டிருக்க,
“வாக்கா அப்டியே மலைக்கோவிலுக்கும் போய்ட்டு வந்துடுவோம்” என்று காயுவிடம் சொன்னாள் மலர்விழி.
பெரியவர்களில் யுவாவும் தனாவும் கோவில் அலுவலகத்தில் வேலை இருப்பதாகச் சென்றுவிட, மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருப்பார்கள் என்று கிளம்பிய ஜானுவை அழைத்துக்கொண்டு கதிரும் கிளம்பிவிட்டான்.
எஞ்சியிருந்த இளையவர்கள் நால்வரோடு இரு அன்னைகளும் மலைக்கோவில் படிகள் நோக்கி நடக்க, “மலைக்கோவிலுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சுல திவா?” என்று வினவியபடி ப்ரித்திவோடு நடந்து வந்தாள் சம்யுக்தா.
சம்யுவின் கேள்விகூட செவியில் நுழையாது பெண்ணவளின் அருகாமையில் கிட்டிய இனம்புரியா இன்பமும் திடீரென்ற இவ்வின்பம் எதனால் என்ற குழப்பமும் கலந்து அமைதியாகவே நடந்து வந்தான் ப்ரித்திவ்ராஜ்.
ஆடவனின் அமைதியில் அவன் கையைப்பற்றி இழுத்தவள், “ஹே உனக்கு என்னாச்சு திவா நீ காலைல இருந்தே ஏதோ வித்தியாசமா இருக்க. கேக்குற எதுக்கும் பதிலே இல்ல?” என்று வினவ…
அவனோ, “ஹான் என்ன கேட்ட யுகி?” என்றான். அப்பொழுதுதான் கனவில் இருந்து விழித்தவன்போல்.
இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தவளும், “ம்ம்ம் கோவில்ல கிண்டுன புளியோதரைக்கு உப்பு பத்தலியாம் போய் போட்டு வர்றியா?” என்றவள்…
“போனதடவ மலைக்கோவிலுக்கு போனது ஞாபகம் இருக்காடா. ரெண்டு பேரும் நீ பஸ்டா நான் பஸ்ட்டான்னு போட்டிபோட்டு ஏறுனோமே?” என்றாள் அன்றைய நாள் நினைவில் இதழ் பிரித்துச் சிரித்தவாறே.
அதைக்கண்டு ஆடவனின் அதரப்பூக்களும் தன்னாலே விரிய,
“ம்ம்ம் அதெல்லாம் மறக்க முடியுமாடி” என்றவன், “என்ன முந்தரேன்னு போட்டி போட்டு ஏறிட்டு பாதிபடில போய் கால்வலின்னு உக்காந்து அழுதியே அதுவும் ஞாபகம் இருக்கு” என்று சொன்னவன், “அன்னிக்கு எப்டி அழுத? என்னால ஏற முடிலதிவா. நீ மட்டும் வேணா ஏறி பஸ்ட்டா வந்துக்கோன்னு
ஊ ஊ ஊன்னு ஊளையிட்டியே” என்று அவள் அன்று செய்தது போலவே பாவனை செய்து கலகலத்துச் சிரித்தவனை…
“திவா உன்ன… நான் என்ன நரியாடா ஊளையிட” என்று அருகில் கிடந்த தென்னம்மட்டையை எடுத்து அடிப்பதற்கு துரத்தினாள் சம்யுக்தா.
“ஹேய் வேணாண்டி” என்று அவளிடமிருந்து தப்பித்து ஓடியவன் மலைக்கோவில் படிகள் துவங்கும் இடத்தில் போய்நிற்க…
அவன் பின்னோடு ஓடியவளும் அவனருகில்போய் மூச்சுவாங்கி நின்றாள்.
அவள் மூச்சு வாங்குவதைக்கண்டு, “ஹேய் மெல்லடி” என்று பதறி அவள் கையைப் பற்றியவன், “இன்ஹேலர் எடுக்கவா?” என்க…
“வேணான்டா” என்றவளோ தன்முகம் பார்த்து நின்றவனின் கரத்தைப்பற்றி, “மாட்டுனியா” என்று அவன் தலையில் நன்கு குட்டிவிட்டுச் சிரிக்க…
அவனோ, “இதெல்லாம் போங்குடி” என்று பொங்கினான்.
அவர்கள் பின்னோடே மற்றவர்களும் அங்குவந்து சேர,
“ரெண்டும் டாக்டர்கு படிச்சு முடிச்சுருக்குகன்னுதேன் பேரு. ஆனா இன்னும் சின்னப்புள்ளகமாறி ஓடிப்புடிச்சு விளையாடுதுக” என்று நொடித்துக்கொண்டாள் மலர்விழி.
அச்சமயம் மலைக்கோவில் படியில் இருந்து இறங்கி வந்த உறவுப்பெண் ஒருத்தியோ,
சற்றுமுன்னர் அவள் பற்றியிருந்ததை விடவும் அப்படியொரு அழுத்தமான பற்றல்.
அவர்களைத் தொடர்ந்து மற்றவர்களும் கோவில் படிகளில் ஏற, ப்ரித்திவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத சம்யுவோ,
“திவா மெல்லடா. மெதுவா நட” என்று அவனோடு ஓட்டமும் நடையுமாகவே படிகளைக் கடந்தாள்.
அறுபதுக்கும் மேற்பட்ட படிகளைக் கொண்ட மலைக்கோவில் படிகளில் பாதிப்படிகளைக் கடந்தபின்னேதான் சம்யுவின் வேகம் குறைவதை உணர்ந்து நிதானித்தவன் அவள் மேல் மூச்சு கீழ் மூச்சுவாங்குவதைக்கண்டு,
தன்னைத்தானே நிந்தித்தவனாய்,
“யுகி என்னடி செய்து. இப்டி மூச்சுவாங்குது அய்யோ இங்க உக்காரு. தண்ணிகுடிக்கிறியா?” என்று பதறி படியின் ஓரத்திலே அவளை அமரவைத்து இன்ஹேலரையும் எடுத்து அவளிடம் கொடுத்தான்.
அவனோ, “அந்தம்மா ஏதோ சொன்னுச்சுன்னு நீ ஏன் என் கையவிட்ட” என்று சம்பந்தமே இல்லாது மல்லுக்கு நின்றான்.
அதற்கு என்ன பதில்கூறவென்று புரியாது பெண்ணவள் விழிக்க, அதற்குள், “என்னாச்சும்மா?. என்னாச்சுக்கா? ஏன் யுக்தா உக்காந்துட்ட?” என்று மற்றவர்களும் அவர்களை நெருங்கினர்.
அதற்கு சம்யுவும் மூச்சுவாங்குவதாகவும் கால்வலிப்பதாகவும் சொல்ல, “இப்போ என்ன செய்றது கோவிலுக்கு வந்துட்டு பாதிலயும் இறங்கக்கூடாதே யுக்தா” என்று புலம்பிய அன்னையரிடம் நவீனோ, “ம்மா நான் வேணா யுக்தாவ கைதாங்களா பிடிச்சி கூட்டிட்டுஏறவா?” என்று கேட்டு முடிப்பதற்குள் அவன் வாயால் சொன்னதை அவன் தம்பி செயலால் செய்யத் தொடங்கியிருந்தான்.
பங்குனிமாதத்து வெயிலும், முப்பதுக்கும் மேற்பட்ட படிகளில் கிட்டத்தட்ட ஓடிவந்ததுமாய் வியர்வைவடிய சோர்ந்து அமர்ந்திருந்தவளின் தோற்றமோ, அல்லது சற்றுமுன்னர் அந்த உறவுக்காரப்பெண் சொன்ன தொட்டு பழகக்கூடாது என்ற வார்த்தைகளின் தாக்கமோ, இல்லை தன்னுடைய யுகியை நவீன் எப்படி தொட்டு அழைத்துச் செல்லக்கேட்கலாம் என்ற இனம்புரியா உரிமை உணர்ச்சியோ நவீன் கேட்டுமுடிக்கும் முன்னரே,
“நானே கூட்டிட்டுப்போறேன். வா யுகி” என்று அவளை இடையோடு வளைத்துத் தூக்கி அவளின் மொத்தபாரமும் தன் நெஞ்சில் படியும்படி சாய்த்துப் பிடித்துக்கொண்டவன் நிமிடமும் நில்லாமல் அவளோடு படிகளில் ஏறத் தொடங்கிவிட்டான் ப்ரித்திவ்ராஜ்.
அவன் செயலில் ஏகமாய் அதிர்ந்தவளுக்கு சற்றுமுன்னர் கேட்ட வார்த்தைகளும் சேர்ந்து இது சரியோ தவறோ என்ற தவிப்போடு வருங்காலக் கணவனான நவீனைத் திரும்பிப்பார்க்க, அவனும் விழியில் தெரிவது ஏமாற்றமோ என்று எண்ணும் வகையில் அவர்களைத்தான் பார்த்திருந்தான்.
குடும்பத்தில் அனைவரையும் நேசிக்கும் பெண்ணிற்கு நவீனின் அந்தப்பார்வை சிறிதான குற்ற உணர்ச்சியை வேறு கொடுக்க அதில் மேலும் தவித்தவள், “திவா என்ன விடுடா. நானே தனியா வர்றேன்டா” என்று மலைப்பாம்பாய் தன்னை அணைத்துச் செல்பவனின் கரத்தை எடுத்துவிட முனைந்தாள் சம்யுக்தா.
ஆனால் பெண்ணின் இடையோர இடைவெளியில் உடும்பாய் படிந்திருந்தவனின் கரமோ ‘அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை’ என்பதைப்போல் மேலும் அழுத்தம் கொடுத்து இறுக, ஆடவனின் இன்றைய விசித்திர செயலில் செய்வதறியாது திகைத்து அவன் கைவளைவில் படிகளைக்கடந்தாள் பாவை.
ப்ரித்திவ் திடீரென இப்படி செய்வான் என்று சம்யு நவீன் மட்டுமல்ல அங்கிருந்த மலர், காயத்ரி, சந்தனாவும் கூட எதிர்பார்க்கவேஇல்லை.
மருத்துவம் படித்திருந்தாலும் கிராமத்திலே பிறந்து வளர்ந்த ப்ரித்திவும் அன்னை தந்தையின் போதனைகள் இல்லாவிடினும் கிராமத்து ஆட்களின் வாழ்க்கை முறையைப் பார்த்தே ஒரு பெண்ணிடம் எந்த எல்லையில் பழக வேண்டும் என்று அறிந்துதான் இருந்தான்.
ஆனாலும் இன்று இருந்த சூழலும் சம்யுவின் மேல் புதிதாய் முளைவிட்டுள்ள அளவில்லா உரிமை உணர்ச்சியும் அவளை வெறும் பெண்ணாக எண்ணாது தன்னுடைய யுகியாய் மட்டுமே பார்த்தவன் எதைப்பற்றியும் யோசியாது அவளை அணைத்துக்கொண்டு அழைத்துச்செல்ல அதைக்கண்டு இரு அன்னைகளும்கூட வாய்பிளந்து நின்றனர்.
நாகரிகம் என்ற பெயரில் நம் தமிழர் பண்பாட்டை மறக்கடிக்கும் மேலைநாட்டுப் பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாத கிராமத்துப் பெண்களாகத்தான் இருந்தனர் காயத்ரியும் மலரும்.
அண்ணன் மனைவியான காயத்ரியை மதனி என்ற சொல்லுக்குமேல் நிமிர்ந்துகூடப் பார்க்காத சின்னமாமனைக் கண்டு வளர்ந்த சந்தனாவிற்கும் அந்த மாமனின் மகனான ப்ரித்திவின் செயல் சிறிது அதிர்ச்சியையே கொடுத்தது.
அத்தோடு குச்சிமிட்டாயை பறிகொடுத்த சிறுவனாய் விழித்து நின்ற நவீனின் தோற்றம் ஒருபுறம் சிரிப்பைக் கொடுத்தாலும் “இருந்தாலும் ப்ரித்திவ் மாமா இப்டி செஞ்சிருக்கக்கூடாது” என்று நவீனைப் பார்க்க பாவமாகவும் இருக்க, உறைந்து நின்றவனை விரைந்து நெருங்கியவள், “மாமா இனிமேல் உங்களுக்கு ஒன்னு வேணும்னா யார்கிட்டயும் பர்மிசன் கேட்டுட்டு இருக்காதீங்க. நீங்களே எடுத்துக்கங்க. இல்லனா இப்படித்தான் மாமா ஏமாந்து நிக்கனும்” என்று மனதில்பட்டதைக்கூறி அவனுக்காக வருந்தினாள் சந்தனா.
பெண்ணவளின் வார்த்தையில் சட்டென்று தன்னை சுதாரித்துக்கொண்டவன்
‘ச்சே… சிறுபெண், புத்தி சொல்லும்படி உணர்வுகளை வெளிக்காட்டிவிட்டேனே’ என்று தன்னைத்தானே கடிந்து,
“சந்தனா நீ சின்னப்பொண்ணு இப்டிலாம் பேசக்கூடாது” என்று அவளையும் முறைத்தவன், “ப்ரித்வி இன்னும் விளையாட்டுப்பிள்ளையாவே இருக்கான்மா. நீங்க ஏன் நிக்கிறீங்க வாங்க போலாம்” என்று தம்பிக்காகப் பரிந்து அன்னைகளையும் இயல்பாக்கியவன் அவர்களையும் அழைத்துக்கொண்டே படிகளில் ஏறத் தொடங்கிவிட்டான் நவீன். பின்னாளில் அந்த தம்பி அரங்கேற்றப்போகும் விளையாட்டை அறியாது.
இது எதையும் கண்டுகொள்ளாது சம்யுவை அழைத்துக்கொண்டே கோவில்படிகளைக் கடந்தவனோ கோவிலில் சாமி கும்மிடும் பொழுதும், ஏன் வீட்டிற்கு வரும் வரையிலும்கூட
அவள் கையை இம்மியும் விடவில்லை.
என்னதான் நவீன் தமக்கை மகனாக இருந்தாலும் தன் மகனுக்கு நிகரான பாசம் வைத்திருப்பவனின் நொடிநேர முகமாற்றத்திலே அவன் ஏமாற்றத்தைக் கண்டு கொண்ட மலரோ அவனுக்கும் மணம் புரியப்போகிறவளிடம் உரிமை உள்ளதே என்று எண்ணியவள் வீட்டிற்கு வந்த ப்ரித்திவிடம் கோவிலில் அந்த உறவுக்கார சுமதி சொன்னதையே சற்று நயமாகச் சொல்ல…
அவனோ, “நீங்க எப்டி அப்டி சொல்லலாம்? அவ என்னோட யுகி. கோவில்ல அவங்கதான் லூசுத்தனமா பேசுனாங்கன்னா நீங்களும் ஏன் இப்டி பேசுறீங்க” என்று எதற்கு கோபப்படுகிறோம் என்று புரியாமலே ஏகத்துக்கும் அன்னையிடம் எகிறினான் மகன்.
அதில் அரண்டு விழித்த மலர்விழியும், ‘அப்பாவுக்கும் மகனுக்கும் எதுலையும் ஒத்துப்போகாது. ஆனா என்கிட்ட கத்துறதுல மட்டும் அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்துருக்கான்’ என்று வழக்கம்போல் புலம்பிக்கொண்டவள்,
“இல்லை ப்ரித்வி… முன்ன நீங்க சின்னப்புள்ளயா இருந்தீங்க. அடிச்சு பிடிச்சி விளையான்டிங்க. ஆனா இப்போ அப்டியில்லப்பா. இன்னும் கொஞ்ச நாள்ள நவீனுக்கும் யுக்தாக்கும் கல்யாணம் ஆகப்போகுது. அதனால அதனால நீ இன்னிக்கு நடந்துகிட்டதுபோல இனிமேல் தொட்டுகிட்டு பழகாதப்பா” என்று அன்னையாய் எடுத்துக் கூறினாள் மலர்விழி.
ஆனால் அன்னையின் வார்த்தைகள் அவனது கோபத்தைக் குறைப்பதற்கு பதிலாக, ‘நவீனுக்கும் சம்யுவிற்கும் மணமாகிவிட்டால் சம்யு தன்னைவிட்டு விலகி விடுவாளோ? இன்னிக்கு கோவில்லகூட அந்தம்மா அப்டி சொன்னதும் என்கைய சட்டுன்னு விட்டாளே’ என்ற சிறிதான அச்சத்தையும் படபடப்பையும் கொடுக்க, இந்தப்பயம் எதனால் என்று சிந்திக்கும் பக்குவம் மட்டும் ஆடவனுக்கு இல்லை.
தன்னையே பார்த்திருந்த அன்னையிடம்,
“நவீனுக்கும் யுகிக்கும் இன்னும் மேரேஜ்ஜே ஆகல அதுக்குள்ளயே இப்டிலாம் சொல்றீங்க. நாளைக்கு அவங்க கல்யாணம் நடந்தா அவகூட பேசவே கூடாதுன்னு சொல்வீங்கபோல?” என்றவன், “நவீன் சம்யு மேரேஜ்தான்
உங்கள இப்டி பேச வச்சுருக்குன்னா அவனுக்கு வேறபொண்ண பாத்து கட்டிவைங்க. யுகி என்கூடவே இருந்துக்கட்டும்” என்றும் அழுங்காது சொன்ன ப்ரித்திவ்ராஜின் வார்த்தையில்…
‘அடப்பாவிதம்பி அடிமடிலயே கையவக்கிறியேடா?’ என்று கோவிலில் அதிர்ந்ததை விடவும் பலமாக அதிர்ந்தபடி ப்ரித்திவின் அறைக்குள் நுழைந்தான் நவீன்.
அறைக்குள் நுழைந்த நவீனைப் பார்த்ததும்,
“ம்ம்ம் வாடா… உனக்கும் யுகிக்கும் கல்யாணம் ஆகப்போறதால நான் அவகூடப் பேசக்கூடாதாம் பழகக்கூடாதாம். என்னால அப்டிலாம் யுகிய விட்டுத்தர முடியாது. அதனால நீ அவள கட்டிக்காத. அந்த அடுக்குமாடி அருக்கானிய வேண்ணா கட்டிக்க” என்றும் படபடபட்டாசாய் பொரிந்தவனைக் கண்டு சிரிப்புதான் வந்தது அவன் தமையனிற்கு.
யுக்தாவின் மேல் எத்துணை அன்பிருந்தால் அவன் இப்படியெல்லாம் பேசக்கூடும் என்று தம்பியைப்பற்றி சரியாகவே கணித்திருந்தான் நவீன். ஆனால் அந்த அன்பிற்கு என்ன பெயர் என்று அவனும் அச்சமயம் அறிந்திருக்கவில்லை.
“அருக்காணி பிடிக்காட்டி மாடிவீட்டுக்கு வந்துருக்க மருதாயி உனக்கு பொருத்தமா இருப்பா” என்று இன்னும்விடாது தனக்கு மணப்பெண் தேடியவனை முறைப்பும் சிரிப்பும் கலந்தே பார்த்தவன்,
“டேய் டேய் நிறுத்துடா… நீ ஒரு டாக்டர்டா. சாதாரண விஷயத்துக்குபோய் நீயே இவ்ளோ எமோஷனலான உன் பேஷண்ட்கு எப்டிடா வைத்தியம் பாப்ப” என்று அவன் பேச்சை நிறுத்தியவன்,
“இப்போ என்ன உன் பிரச்னை… யுகிகூட நீ எப்பவும் போலவே இரு. இனிமேல் யாரும் உன்ன எதுவும் கேக்கமாட்டாங்க. நான் உட்பட. எங்க கல்யாணம் நடந்தாக்கூட நீங்க இதே அன்போட இருங்கடா. அதுதான் எனக்கும் சந்தோசம். இதுக்கெதுக்கு ஏதேதோ உளறிட்டு இருக்க நீ” என்றுவிட்டு சிற்றன்னையின் புறம் திரும்பியவன் பிரித்திவிடம் கூறியதையே அவன் அன்னையிடமும் அவளுக்கு ஏற்றார் போல் கூறி, “இனிமேல் இதுபத்தி யாரும் எதுவும் பேசவேண்டாம் சித்தி. அவங்க எப்பவும் அவங்களாவே இருக்கட்டும்” என்றும் முடித்தான்.
அவர்கள் இருவரையும் சற்று குழப்பமாகவே பார்த்திருந்த மலரும், “ரெண்டு பேரும் ஏதேதோ சொல்றீங்க. ஆனா எனக்குத்தேன் எதுவும் சரியாப்படல்ல. என்னவோ பண்ணுங்க. நான் போய் சமையலையாவது கவனிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுச்செல்ல…
“ஹேய் சித்தியப்பத்தி தெரியும்தான. மனசில தோணுனது அப்டியே பேசிடுவாங்க விடுடா” என்று இன்னும் சிலிர்த்துக்கொண்டு நின்ற தம்பியின் தோளில் கைவைத்தவன், “ஆனா இந்த சாதாரண விஷயத்துக்குப்போய்
நீ ஏன்டா எனக்கு ப்ரோக்கர் வேலபாத்த?” என்று பாதி கிண்டலும் மீதி ஆற்றாமையுமாய் கேட்டு அவனை இயல்பாக்க முயன்றான் நவீன்.
அவன்கேட்ட தொனியில் சட்டென்று சிரித்து விட்டவனுக்கும் கொஞ்சம் அதிகமாகத்தான் பேசிவிட்டோம்போல என்ற எண்ணம் தோன்றியதோ???
“என்னடா அருக்காணின்னு சொல்லவும் கோபுரங்கள் சாய்வதில்லை சுகாசினி ஞாபகம் வந்து பயந்துட்டியோ?” என்று கிண்டல் குரலில் அண்ணனை வாரினான் ப்ரித்திவ்ராஜ்.
அதில் தலையாட்டிச் சிரித்துக்கொண்டவனும், “பின்ன இல்லியா… அந்த ஸ்பிரிங் ஜடைய மறக்கமுடியுமா. ” என்று தம்பியோடு இணைந்து கொண்டவன், “ம்ம்ம் அப்றம் எப்போ உங்களுக்கு லீவ் முடியுது?. என்னிலருந்து ஹவுஸ் சர்ஜனா ஜாயின் பண்ணப்போறீங்க
நீயும் யுக்தாவும்?” என்றும் உரையாடலைத் தொடங்க…
தமையனின் முயற்சியில் அவன் உரையாடலில் கலந்தாலும், அன்னையின் வார்த்தைகளில் ப்ரித்திவின் நெஞ்சோரம் சிறிதான குழப்பமும், கலக்கமும் கூடவே உறுத்தலும் உற்பத்தியாகி ஆடவனின் மனதைக் குடைந்தது. நாளாக நாளாக அது விஸ்பரூபம் எடுத்து வளர்ந்து சம்யுவிடம் அவனின் நெருக்கத்தை மேலும் மேலும் அதிகமாக்கவும் செய்தது.
மகனிடம் பேசி வாங்கிகட்டிக்கொண்ட மலர்விழி சம்யுவிடமும் இரண்டொரு வார்த்தை இனிமேல் சின்னப்புள்ளகபோல தொட்டுப்பழக வேணாம்மா என்று பதவிசாக சொல்லிவைத்திருக்க பெரிவர்களின் பேச்சை அப்படியே ஏற்கும் சம்யுவிற்கும் அந்த வார்த்தை ஒருபுறம் வருத்தத்தைக் கொடுத்தாலும் நிதர்சனம் உணர்ந்து ப்ரித்திவிடம் சற்றே விலகி இருந்தாளோ அல்லது அவளை முற்றும் முழுதாய் தனக்கே தனக்கு என்று நினைத்திருப்பவனுக்கு அப்படி தோன்றியதோ.
இப்பொழுதெல்லாம் சம்யு அவனிடமிருந்து சற்று ஒதுங்கி இருப்பதுபோல் ஒருமாயை ஆடவனின் நெஞ்சில் துளிர்விட்டிருக்க, அதை ஈடும்செய்யும் வகையில் அவளிடம் மென்மேலும் நெருக்கம்கொண்டு நெஞ்சாங்கூட்டிலே அவளை புதைக்க விளைந்தான் ப்ரித்திவ்.
ப்ரித்திவ் சம்யு இருவரும் ஒருவழியாக விடுமுறையும் முடிந்து பயிற்சி மருத்துவர்களாக (house surgen) தங்கள் மருத்துவப்பணியும் தொடங்கி இருக்க, அன்றைய நாளுக்குப்பிறகு ப்ரித்திவின் அலப்பறைகளும் சற்று அதிகமாகவே இருந்தது.
வீட்டில் இருக்கும்பொழுதும் சரி வேலையிடத்திலும் சரி இவள் என்னவள் என்ற உரிமை உணர்ச்சியை ஒவ்வொரு நிமிடமும் பறைசாற்றிக் கொண்டிருந்தான் ஆடவன்.
அதிலும் அவளோடு நெருக்கம் வேண்டாம் என்று சொன்ன அன்னையின் முன்னிலையில் வேண்டுமென்றே அவள் கையைபற்றி நடப்பதும் அவளை இடித்துக் கொண்டு அமர்வதும் தொட்டதுக்கெல்லாம் அன்னைக்குப்பதிலாய் அவளையே அழைப்பதுமாய் அன்னையைச் சீண்டும் சாக்கில் தனக்குள் புதிதாய் முளை விட்டிருக்கும் பயிருக்கு நீர் ஊற்றி வளர்த்தான் ப்ரித்திவ்.
(அடேய் அந்தப்பயிருக்கு மொதோ பேரவைடா. அப்றம் நீர் உரம் எல்லாம் போடலாம் அதான மக்களே)