சிலபல மாதங்களாகவே மகனின் பார்வையில் செயல்களில் ஏதோ மாற்றத்தை உணர்ந்த மலர்விழியோ சம்யு நவீனின் திருமணத்தை விரைவில் நடத்தவேண்டும் என்று நினைத்து இன்று முன்னுரை எழுதிஇருக்க…
அவள் மகனுக்கோ அந்தப்பேச்சுக்களை காதாலே கேட்கக்கூட முடியவில்லை.
முகம் கொள்ளாப்புன்னகையோடு அமர்ந்திருந்த நவீனைப்பார்த்து காரணமே இல்லாது அவனுக்கு கோபம் கோபமாக வந்தது.
அவன் பங்கிற்கும், “யுகிதான் மாஸ்டர் பண்ணனும் சொல்றாள்ளமா” என்று சொல்லிப்பார்த்தும் சின்னப்பையன் என்று அவன் பேச்சை யாரும் கேளாததால் பல்லைக்கடித்து நின்றிருந்தவன் அடுத்தடுத்த நாட்களிலும் பைத்தியம் பிடிக்காத குறையாகத்தான் சுற்றி வந்தான்.
“நவீன் யுகி மேரேஜ் சின்னப்புள்ளயிலே பேசுனதுதான. ஆனா இப்போ அது பத்தி பேசுனாலே எனக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது. யுகி எனக்கு மட்டுமே சொந்தம் அவள யாருக்கும் கொடுக்கக்கூடாதுன்னு இப்போல்லாம் ரொம்ப தோணுதே. எனக்கு என்னாச்சு” என்று ப்ரித்திவ் பலவித சிந்தனைகளில் உலன்று தவிக்க…
அவனுக்கு ஈடான கலக்கத்தில் ‘இப்போ இந்த திருமணப்பேச்சு அவசியமா?’ என்று உள்ளூற குமைந்தவளும் படிப்பின் காரணமாகத்தான் நாம் இப்படி எண்ணுகிறோம் என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டாள் சம்யுக்தா.
இப்படியே அடுத்த ஒரு திங்களும் (வாரம்) கடந்திருக்க, அன்றய ஞாயிறில் பெரியவர்கள் அனைவரும் முன்பு பேசியபடி அவர்களின் குடும்ப ஜோசியரை பார்க்கக் கிளம்பி இருந்தனர்.
கூடவே நவீனும் கிளம்பி இருக்க, சம்யுவிற்கு காய்ச்சல் என்று அவளையும், துணைக்கு சந்தனாவையும் ப்ரித்திவின் வீட்டில் விட்டுச்சென்றிருக்க, ப்ரித்திவும் வேலை இருப்பதாகவும் பெண்களுக்குத் துணை இருக்கிறேன் என்றும் வீட்டிலே இருந்துவிட்டான்.
சம்யுவிற்கு காய்ச்சலோடு சலி இருமலும் அதிகமாகவே இருக்க, பெற்றோர்கள் சென்றதுமே மாடியில் உள்ள அவளது அறையில் சென்று படுத்துவிட்டவள்
ப்ரித்திவின் முகத்தைக்கூடப் பார்க்கவில்லை.
இன்று மட்டுமல்ல கடந்த ஒருவார காலமாகவே இருவருமே ஒருவருடன் ஒருவர் சரியாக பேசிக்கொள்ளாமல் தான் இருந்தனர். அதன் காரணத்தைக்கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை.
இத்திருமண ஏற்பாடுகள் தங்களுக்குள் இடைவெளியை உண்டாக்குமோ என்ற குழப்பத்திலும், கலக்கத்திலும் அவர்களாகவே அவ்விடைவெளிக்கு பாதை அமைத்துக்கொடுத்தனர்.
தமக்கை மேலே சென்று உறங்கியதும் தனியாக இருந்த சந்தனாவும் என்னசெய்வது என்று புரியாமல் வீட்டு வேலைக்கு
இருந்த பெண்ணிடம் சொல்லிவிட்டு அடுத்ததெருவில் வசிக்கும் தோழியின் வீட்டிற்குச் சென்று படிப்பும் அரட்டையுமாய் அவள் நாளைக் கழித்தாள்.
அப்படியே அடுத்த சில மணிநேரங்கள் கடக்க மதியஉணவு வேளையும் தாண்டிக்கொண்டிருக்க, சமையலை முடித்த பணிப்பெண்ணும் ப்ரித்திவை சாப்பிட அழைத்தாள்.
அப்பொழுதுதான் மடிக்கணினியில் இருந்து பார்வையை விலக்கியவன்,
“யுகி சாப்பிட்டாளா அக்கா?” என்று முதல் கேள்வியைக்கேட்டவன், “சந்தனா எங்க?” என்று அவள் தங்கையையும் விசாரித்தான்.
அவரும், “பெரியபாப்பா மாத்தர போட்டு நல்லா தூங்குது. சின்னபாப்பா தோழிப்புள்ள வீட்டுக்கு படிக்க போறேன்னு போச்சுதம்பி. அங்கயே சாப்டுக்கறேன்னும் சொல்லிருச்சு” என்று விளக்க…
அவனும் நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழுந்தான்.
கையிரண்டும் தூக்கி நெட்டிமுறித்துவிட்டு உணவுமேசை வரை நடந்துவந்தவனுக்கு சம்யு இல்லாது உணவு இறங்கிவிடுமா என்ன.
நிமிடநேரம் யோசித்தவன்,
“நீங்க சாப்பாட தட்டுல போட்டு கொடுங்கக்கா நான் யுகியோட சேந்து சாப்டுக்கறேன். நீங்களும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கறதுன்னா எடுங்க.” என்று சொன்னவன்
பணிப்பெண் கொடுத்த உணவையும் வாங்கிக்கொண்டு சம்யு இருந்த அறை நோக்கிச்செல்ல…
அவளோ, “ம்ம்மா… திவா…” என்ற சிறிதான அனத்தலோடு குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தாள்.
கதைவைத்திறந்து அவள் நிலைகண்டவனுக்கு அடுத்தநொடி அவன் நெஞ்சை அழுத்தும் பாரம் எல்லாம் பின்னுக்குச்சென்று அவனுள் இருந்த மருத்துவனும் விழித்துக்கொள்ள,
“யுகீ யுகீ என்னாச்சுடி. என்ன செய்யுது” என்று ஓடி அவளை நெருங்கியவன் பெரிய கம்பளி எடுத்துப்போர்த்திவிட்டு கைகால்கள் எல்லாம் தேய்த்துவிட்டவன் அவசரத்திற்கு இருந்த ஊசிமருந்தையும் காய்ச்சல் குறைய போட்டுவிட்டான்.
பின்பு அவளருகிலே அமர்ந்து நெற்றியில் ஈரத்துணி கொண்டு துடைத்தபடியும், கையைத்தேய்த்து தேய்த்து குளிரைப்போக்க முயன்றபடியும் இருந்தான்.
அவனது விடாமுயற்சியால் காய்ச்சல் சிறிது குறையவும் மெல்ல கண்விழித்துப்பார்த்தவள்,
“திவா…” என்று அழைக்க…
அவனும், “என்னடா கன்னுகுட்டி? என்ன செய்யுது? ரொம்ப முடிலைன்னா ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடுவோமா?” என்று வினவ…
அவளோ பதில் எதுவும் சொல்லாமல் மீண்டும், “திவா…” என்று மட்டும் அழைத்து அவன் மடியில் கவிழ்ந்து தலையைப் புதைத்துக்கொண்டாள்.
காய்ச்சல் கண்டால் அவள் இப்படித்தான் உலளுவாள் என்று அறிந்திருந்தவன், “யுகி… ஒண்ணுமில்லடி. சரியாப்போகும்டி. வைரல் பீவர்மாதிரிதான் இருக்கு” என்று முடிக்கற்றைகளை காதோரம் ஒதுக்கிவிட அவன் கையில் சிறிதான ஈரம் தட்டுப்பட்டது.
ஈரம் வந்த இடத்தை உணர்ந்து அதிர்ந்து, “யுகீ அழறியா?” என்று அவளைத்திருப்பியவன்,
“ஆனா ஏன்டி? சாதாரண பீவர்தானடி. எங்கையும் வலிக்குதா?”என்று அவள் கண்ணில் வடிந்தநீரைத் துடைக்க… அதுவோ நிற்காமல் மீண்டும் வழிந்தது.
அதைக்கண்டு பதறியவன்,
“யுகீ…என்னடி பண்ணுது?” என்று அவளை இன்னும் இழுத்து மடியில் கிடத்தியவன் கன்னம் கழுத்து என்று தொட்டுப்பார்க்க, அதற்குள் அவளுக்கு மூச்சுத்திணறலும் அதிகமாகவே வந்துவிட்டிருந்தது.
அதில் இன்னும் படபடப்புக்கூட, “யுகி வீசிங்க்வேற இன்க்ரீஸ் ஆகுது. எதுக்குடி அழற. என்ன பண்ணுதுன்னு சொல்லுடி” என்று அவளின் இன்கேலரை எடுத்து அவள் வாயிற்குள் பீய்ச்சியவனையே விழிகள் எடுக்காது பார்த்திருந்தவள் அவனின் ஒரு கேள்விக்குக்கூட பதிலே சொல்லவில்லை.
ஏன் அழுகிறோம், எதற்கு அழுகிறோம், தனக்கு என்னவேண்டும் என்று அவளுக்கே புரியாதபோது அவனுக்கு எப்படி விளக்குவாள் பேதை.
பெண்ணின் இதழ்கள் சொல்லாததை அவளின் நீர் நிரம்பிய கண்களும், மீண்டும் “திவா…” என்ற விளிப்போடு அவன் கரத்தை இறுக்கிப்பிடித்த விரல்களும் ஆடவனுக்கு உணர்த்தியதோ???
விழிநீர்வடிய, தன் மடியில் மூச்சுவாங்கிக் கிடந்தவளுக்கு, உறுஞ்சியில் இருக்கும் (Asthalin, terbutalin) மருந்துகளை விடவும் வேறு எதுவோ தேவை என்று ஆடவனின் உள்ளம் உணர்ந்ததோ???
அதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது,
“கன்னுகுட்டீ…” என்ற கூவலோடு, அவள் முகம்நோக்கிக் குனிந்தவன் தன் மூச்சைக் கொடுத்து பெண்ணவளின் மூச்சை ஆற்றுப்படுத்த முனைய…
அவன் கரத்தில் இருந்த மூச்சுத்திணறலை சீராக்கும் உறுஞ்சியோ, ‘தன் தேவை இனி இல்லையோ’ என்று வருந்தியது போல் துள்ளிக்குதித்து கீழே தெறித்து அறைவாயிலில் போய் விழுந்தது.