நவீனுடனான திருமணப் பேச்சுக்களை தான் விரும்பாததற்கு படிப்புதான் முக்கியகாரணம் என்று கடந்த ஒருவாரமாய் எண்ணியிருந்தவளுக்கு காரணம் அதுவல்ல என்று தலையில் தட்டி புரியவைத்திருந்தது இக்கணம்
ஆடவனின் அவளுக்கான துடிப்புகள்.
காய்ச்சல் கண்டு ஏற்கனவே பலகீனமாய் இருந்தவளை யுகீ என்று அழைத்துப்பதறி அவன் பணிவிடைகள் செய்யச் செய்ய இதுபோலான பொழுதுகள் இனி தன் வாழ்வில் கிட்டுமா என்ற ஏக்கம் அவள் விழியில் கண்ணீராய் வெளியேறியது…
பெண்ணின் அந்த தவிப்பில் இத்துணை நாட்கள் அவனுள் அமிழ்ந்துகிடந்த அவனே உணராத ஆடவனின் ஆழ்ந்தநேசம் மொத்தமும் பீறிட்டுக்கிளம்பியதில் அதை அடக்கும் வழியறியாது முத்தத்தாலே அதற்கு முன்னுரை எழுதத்தொடங்கியிருந்தான் ப்ரித்திவ்ராஜ்.
நேசம்தான். நடைப்பயின்ற நாள்தொட்டு அவள் அன்பில் கரைந்து, அக்கறையில் உருகி, அருகாமையில் திளைத்து, அண்மையில் மகிழ்ந்து அவனே அறியாது அவனுள் ஆழமாக இறங்கிவிட்ட அத்தைமகளே நேசத்தின் நிழலாய் தன் மடியில் கிடப்பவளை ஆடவனின் இடக்கரம் ஏந்தியிருக்க, ப்ரித்திவின் வலக்கரமோ சம்யுவின் இடது கன்னத்தை அழுத்தமாகப்பற்றி தன் முகம் நோக்கி உயர்த்தியிருந்தது.
இத்துணை தினங்கள் அவளுக்காகவே மூச்சுவிட்டு வாழ்ந்தவன் இனி வாழ்நாள் முழுமைக்குமான உயிர்மூச்சே அவள்தான் என்று கண்டுகொண்ட நொடியாய் அந்நொடி மாறிப்போக, சமீபநாட்களின் குழப்பங்கள் தவிப்புகள் எல்லாம் அவள் விழிநீர் கலந்து தெளிந்த நீரோடையாய் கண்முன்விரிய, அதற்குமேல் தன்னை கட்டுப்படுத்த முடியாதவனோ
தன் தடித்த இதழ்களை தன் இணையோடு இறுக்கமாக இணைத்தவன் அவ்வப்பொழுது மூச்சுக்குத்திணறும் பெண்ணவளை நொடிகள்பல தன் முத்தத்தாலே திணறவைத்தான்.
இதுவரை டீ காபியின் சுவை தவிர பாக்கின் போதையைக்கூட அறிந்திராத ஆணவனின் சிவந்த அதரங்கள் முதன்முறை பெண்ணவளின் முத்தச்சுவைக்குள் மூழ்கித் திளைத்திருக்க, அவனுக்கு எதிர்வினை புரியாது போனாலும் வருடங்கள் பல உள்ளத்தினுள்ளே ஊறிக்கனிந்த காதலை உதடுகளின் வழிச்செலுத்தும் வித்தைக்காரனை தடுக்கும் சக்தியற்றுத்தான் பெண்ணவளும் குழைந்தாளோ.
“யுக்தாமா…” என்ற அழைப்போடு உள்ளே நுழைந்த மலரைக்கண்டே தன்னிலை மீண்டவள் ‘என்ன காரியம் செய்தோம்?!’ என்று கலங்கி ப்ரித்திவை தன்னில் நின்றும் வேகமாகத் தள்ளிவிட முனைந்தாள் சம்யுக்தா.
ஆனால் முத்திரையின் முக்குளிப்பில் இருந்த திண்மை பொருந்திய ஆடவனை பெண்ணவளின் மெல்லிய மறுப்பில் விலக்க முடியாதுபோக, மேலும் பலத்தைக்கூட்டி அவனை அறைந்து தள்ளியவளின் செயலில்தான் உணர்ச்சிகள் அறுபட்டு கீழேபோய் விழுந்திருந்தான் ப்ரித்திவ்ராஜ்.
ஆணவன் விலகியப்பின்னரே நடந்துமுடிந்த காரியத்தின் வீரியம் நன்குபுரிபட, அதிலும் அன்னைபோல் அன்பு செலுத்தும் அத்தைமுன் தாங்கள் இருந்த கோலமும் உரைத்து குன்றலின் எல்லைக்குச் சென்றவள், “திவா ஏன்டா இப்டி பண்ண? ஏன்டா இப்டி பண்ண? அய்யோ அய்யோ கடவுளே இது என்ன சோதனை? நான் என்ன செய்வேன்” என்று நெற்றியிலே அறைந்துகொண்டு மடங்கி அமர்ந்து கதறத் தொடங்கியிருந்தாள் சம்யுக்தா.
ஜோதிடரிடம் செல்லும் வழியிலே ஜானுவிற்கு மருத்துவமனையில் இருந்து அழைப்புவரவும், இன்னொருநாள் செல்லலாம் என்று வேறுவழியில்லாது ஊர் திரும்பியவர்கள் ஜானுவையும் கதிரையும் மருத்துவமனையில் விட்டுவிட்டு வீடு திரும்பியிருக்க, காய்ச்சல் கண்டிருந்த சம்யுவின் நிலை அறிய அவள் அறைக்கு விரைந்தவள் இருமுறை தட்டியும் பதில் வராததால் யுக்தாமா என்று கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்திருந்தாள் மலர்விழி.
அறைக்குள் நுழைந்தவள் அங்கிருந்த படுக்கையை நெருங்கிய நொடி மகனின் முதுகை மட்டுமே பார்த்திருந்தாலும் ப்ரித்திவும் சம்யுவும் இருந்தநிலை கண்டும், இணைந்து பிரிந்திருந்த அவர்கள் இதழ்களின் சிவப்பைப் பார்த்தும், ஏகமாய் அதிர்ந்தவள்,
“இங்க என்ன நடக்குது ப்ரித்வி?” என்று கேட்டு தன்னை அறைந்து தள்ளிய சம்யுவையே அதிர்ந்து பார்த்திருந்த மகனின் சட்டையை கொத்தாகப் பற்றியவள், “யுக்தாவ என்னடா பண்ண?” என்று அவளும் அவனை கன்னம் கன்னமாக அறையத் தொடங்கினாள்.
மலரின் செயலில் மேலும் அதிர்ந்த சம்யு, ‘எத்துணை பெரிய தவறை செய்துவிட்டோம். கணவன் அல்லாது ஒரு ஆணுடன் அதிலும் தன்னைவிட பத்து மாதம் சிறியவனுடன் முத்தம். அதிலும் அவன் அன்னையின் முன்னிலே. அவர் தன்னைபற்றி என்ன நினைப்பார்’ என்று மென்மேலும் குன்றித் தவித்தவள் அவனை ஏறெடுத்தும் பாராமல், “ஏன்டா திவா?” என்று பெருங்குரல் எடுத்து அழுது கண்ணீர்த் துளிகளுக்கு கண்களை தாரைவார்த்துக் கொடுக்க, அன்னை அத்துணை அடித்தும் அசையாது நின்றிருந்தவன் பெண்ணவளின் வார்த்தையில் அடிபட்ட வேங்கையாய் அவளையே வெறித்துக் கொண்டு இருந்தான் ப்ரித்திவ்.
அவளின் கண்ணீரும், மகனின் அமைதியும் மலரின் வயிற்றில் மேலும் புளியைக்கரைத்திருக்க,
“இப்டி பேசாம நின்னா என்னடா அர்த்தம். அவ ஏன்டா இப்டி அழறா? விளையாட்டுப் பிள்ளையா இருந்தாலும் உன்னநான் ஒழுக்கமா வளத்துருக்கேன்னு இவ்ளோநாளா சந்தோசமா இருந்தேனே. அன்னிக்கு அந்த சுமதி பேசுனத நீ உண்மையாக்கப் பாக்குறியாடா. இதுக்குத்தான ஒட்டிப்பழக வேண்டாம்னு அன்னக்கி தலபால அடிச்சிகிட்டேன்” என்றும் அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து மகன்மேல் அடித்து தன் வாயிலும் வயிற்றிலும் அறைந்துகொண்டு அழுதவளின் பேச்சில்… சம்யுவின் மென்னுடலோ மேலும் தூக்கிப்போட்டு நடுங்க…
அதைப்பார்த்து “யுகீ ரிலாக்ஸ்டி” என்று பதறி அவளை நெருங்கினான் ப்ரித்திவ்.
அன்னை கத்திக் கொண்டிருப்பதெல்லாம் கருத்திலே கொள்ளாது மீண்டும் தன்னை நெருங்கியவனைக் கண்டு மேலும் கலங்கியவள் அவன் கைகளுக்குக்கிட்டாது பின்னோக்கிச் செல்ல, மகனின் செயலில் இன்னும் ரௌத்திரம் கொண்ட மலரோ
“டேய் அவளை விடுடா பொறுக்கி”
என்று மகனை இழுத்துப் போட்டு மேலும் மேலும் அடித்தாள்.
அச்சமயம் உள்ளே நுழைந்த நவீனும் சிற்றன்னையின் செயலில் அதிர்ச்சிக்குள்ளாகியவன்,
“நம்ம மோசம் போய்ட்டோம் நவீமா. இந்த பொறுக்கி பையன் யுக்தாகிட்ட யுக்தாகிட்ட தப்பா” என்று மேலும் சொல்ல முடியாது, “அய்யோ அய்யோ… இனி நான் எப்டி ஊருக்குள்ள தலகாட்டுவேன். இந்த விஷயம் உங்க சித்தப்பாக்குத் தெரிஞ்சா இவன கொன்னே போடுவாகளே. இவன டாக்டருக்கு படிக்கவச்சிட்டோம்னு எம்புட்டு சந்தோசப்பட்டேன். ஆனா இவன் இப்டி பொறுக்கிமாறி ஊர்மேய பாத்துட்டானே” என்றும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தவளின் பேச்சிலும் நவீனின் வரவிலும் கண்முன் விரிந்த நிதர்சனத்தில் சம்யுவிற்கு உயிரே வெறுத்து விட்டது.
மலர்விழி ப்ரித்திவை ஏசிய வார்த்தைகளை எல்லாம் தனக்குமாய் எண்ணி தன்னைத்தானே அருவருத்துக் கொண்டவளுக்கு மூச்சுத் திணறலின் வேகமும்கூடி பெண்ணின் நிலையை மிகவும் மோசமாக்கியது.
முதுகுகாட்டி அமர்ந்திருந்த சம்யுவின் நிலையை உணராமல் தன் போக்கில் கதறிக்கொண்டிருந்த மலரை,
“சித்தி கொஞ்சம் பொறுமையா இருங்க. இப்ப என்ன நடந்துச்சு? எதுக்கு இப்டிலாம் கண்டதையும் பேசறீங்க” என்று தேற்றிய நவீனோ அப்பொழுதுதான் கீழே கிடந்த சம்யுவின் உறுஞ்சிக்குழலைப் பார்த்தான்.
ஓடிச்சென்று அதை கைப்பற்றியவன், எந்த விஷயத்திற்கும் பெரிதாய் ஆர்ப்பாட்டம் செய்யும் சிற்றன்னையின் கூற்றையும் அத்தோடு இணைத்து பக்கென்று சிரித்துவிட்டவன், “சித்தி நீங்க நினைக்கிறபோல எதுவும் தப்பா நடந்துருக்காது. யுக்தாக்கு மூச்சுதிணறலுக்கு ப்ரித்வி ஏதாவது முதலுதவி பண்ணிருப்பானா இருக்கும். பேஷண்ட் வாய்ல குழல்போல கையமூடி வச்சு அதுக்குமேல டாக்டர்ஸ் வாயவச்சு ஊதி ஆக்சிஜன் கொடுப்பாங்க. அதுமாறி எதாவது ட்ரீட்மென்ட் பண்ணிருப்பான் அவசரப்பட்டு அவனப்போய் அடிக்கிறீங்களே” என்று மருத்துவத்தின் அரிச்சுவடிகூட அறியாமல் படங்களில் பார்த்ததை வைத்து நவீன் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, “யுகீ…” என்ற கூவலோடு ஓடிச்சென்று மயங்கிச் சரிந்தவளை கரத்தில் ஏந்தியிருந்தான் ப்ரித்திவ்.
ப்ரித்திவின் சப்தத்தில்தான் மற்ற இருவரின் கவனமும் சம்யுவிடம் பாய, அவளின் மயக்க நிலைகண்டு மூவரின் முகமும் பதட்டத்தைத் தத்தெடுக்க, “நவீன் வண்டிய எடுடா” என்ற ப்ரித்திவோ யாரைப்பற்றியும் கருத்தில் கொள்ளாது பெண்ணவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
“யுக்தாக்கு என்னாச்சுடா?” என்று பயந்த நவீனும் விரைந்து வாகனத்தைச் செலுத்த, மலரும் காயுவும்கூட மற்றொரு மகிழுந்தில் பதறி அடித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
சடுதியில் அனைத்தும் மாறிப்போக காய்ச்சலின் வீரியத்தோடு, பலவித கலக்கங்களும் சேர்ந்து உள்ளமும் உடலும் நடங்கி மயக்கத்தை தழுவியவளைத் தூக்கிவந்த ப்ரித்திவே ஒரு மருத்துவனாய் அவளுக்கு வேண்டிய சிகிச்சைகள் அளித்தான்.
சம்யுவின் தற்போதைய நிலையில் சற்று முன்னர் நடந்ததை எல்லாம் ஒதுக்கிய மலரும் நிமிடத்திற்கு ஒருமுறை மகனிடம் அவள் உடல்நிலைப் பற்றிக்கேட்க, அங்கிருந்த ஜானுவோடு காயுவும் அவளைத்தேற்ற, வீட்டு ஆண்களும் விஷயம் அறிந்துகூட, அடுத்துவந்த மணித்துளிகள் மட்டுமல்லாது அன்றையநாள் முழுதுமே அனைவருக்கும் மருத்துவமனையிலே கழிந்தது .
அன்று மட்டுமல்லாது அடுத்துவந்த நாட்களும் ஆள்மாற்றி ஆள் மருத்துவமனையே கதியாய் கிடக்க, அவர்களின் அன்புக்குரிய பெண்ணோ இன்னும் மருத்துவமனை படுக்கையில்தான் ப்ரித்திவின் கண்காணிப்பில் இருந்தாள்.
ஒருபக்கம் குலுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க, மறுபக்கம் மட்டுப்படாத காய்ச்சலால் உஸ்வாரின்றிக்கிடந்தவளின் கண்ணில் மட்டும் வற்றாத ஊற்றாய் உவரிநீர் வடிந்து கொண்டே இருந்தது.
மருத்துவனான ப்ரித்திவே அவளின் நிலைகண்டு கலங்கி அவளுக்கு இன்னும் காய்ச்சல் குணமாகாததைக்கண்டு பயந்து ஏதேதோ பரிசோதனைகள் எல்லாம் செய்து தெளிந்து,
“கன்னுகுட்டி… யுகீ… என்னாச்சுடி உனக்கு” என்று உருக, நோய் உடலில் இருந்தால் அல்லவோ அதை மருந்துகளால் குணப்படுத்த முடியும்.
இங்கே நோயை (காதல்) விதைத்ததே மருத்துவனாக இருக்க, அவனின் அண்மை மங்கையை மென்மேலும் மருகிஉருகிக் கரையவைத்தது.
சிறுபிள்ளையில் இருந்தே மூச்சுத்திணறல் பிரச்சனை இருப்பதால் எப்பொழுதும் சுதாரிப்பாக இருக்கும் சம்யுவிற்கு காய்ச்சல்கூட இரண்டு நாட்களுக்கு மேல் அவளிடம் இருந்ததில்லை.
ஆனால் இன்றோ ஒருவாரம் படுக்கையிலே இருந்துவிட்டு வாடியமலராகத்தான் வீடுவந்து சேர்ந்திருந்தாள் சம்யுக்தா.
தனக்காகத் தவித்து துடித்து மருத்துவம் பார்த்தவனின் முயற்சியில் பெண்ணவளின் உடல்நலம் சற்றுதேறி வீடு வந்திருந்தாலும், அவள் முகத்தில் மகிழ்ச்சியின் சாயல்மட்டும் வந்திருக்கவே இல்லை. பெரும் தவறுசெய்ததைப்போலும் தனக்கு தகுதியில்லா ஒன்றிற்கு ஏங்கிவிட்டோமோ என்றும் மென்மேலும் கலங்கித்தவித்திருந்தாள் பெண்.
அன்றைய நாளில் ப்ரித்திவின் செயல் மருத்துவரீதியானது என்ற நவீனின் விளக்கத்தை ஏற்று மலர்விழி சற்று சமாதானம் அடைந்தாலும், உரியவர்கள் மட்டுமே உணர்ந்த உண்மை உள்ளத்தைச் சுட்டுப்பொசுக்கியது பெண்ணிற்கு.
‘ஒரு தமிழ்பெண்ணாகவும் ஊருக்குள் எத்துணை மதிப்போடு உலவும் மாமனுக்குப் பிடித்த மருமகளாகவும் இருந்துகொண்டு எத்துணை கீழ்த்தரமான காரியம் செய்துவிட்டோம். கணவன் அல்லாத ஆணுடன் இதழ் ஒற்றல் செய்தது சாதாரண விஷயம் அல்லவே??? அதிலும் தன்னைவிட பத்துமாதங்கள் இளையவனுடன் வெட்கமின்றி இழைந்தேனே…
அன்றைய நாளில் தவருக்கு துவக்கம் அவனாக இருந்தாலும்
அதற்குத் தூண்டுதல் தன்னுடைய நிலைதானோ, தான்தானோ’ என்று தவறை எல்லாம் தன்மீதே போட்டுக்கொண்டவள், ‘ஒரு ஆணான அவன்தான் என்னை நெருங்கினான் என்றால் அவனிடமிருந்து நான் ஏன் விலக முயற்சிக்கவில்லை? ஒரு ஆணின் சிறு தொடுகையில் கிறங்கி என்னைவிட சிறியவனுடன் இழையும் அளவு நான் அத்துணை பலகீனமானவளா?’ என்று பலவாறு எண்ணி தீயில் இட்ட மெழுகாய் தனக்குள்ளே உருகித் தவித்தாள் பாவை.
போதாதற்கு, “இப்போ எப்டி இருக்கு யுக்தா…” என்று தினமும் வந்து தன் நலன் அறிந்து செல்லும் நவீனின் நற்குணமும், அவன் தங்கள்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் சேர்ந்து அவளை நெருப்பில் நிறுத்த, இப்பொழுது நினைத்தாலும் ஊனோடு உள்ளத்தையும் சிலிர்க்க வைக்கும் ஆழ்ந்த முத்தமதில் அன்று ப்ரித்திவ் உணர்த்திய உரிமைச்செய்தியோ அவளுக்கு இதயமே நின்றுவிடும்போல் இருந்தது.
மருத்துவத்தை விரும்பிப் படித்தவள் அந்த மருத்துவனாலே நோயாளியாய் மாறிப்போக, மருத்துவமனையில் அவன் கவனிப்பில் இருந்தபொழுது மட்டுமல்லாது வீட்டிற்கு சென்றப்பின்னும்கூட சம்யு ப்ரித்திவின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை ஒருவார்த்தைகூட அவனிடம் பேசவேஇல்லை.
வீட்டிற்கு வந்தபின்னும் சீக்கு
வந்த கோழியாய் அறைக்குள்ளே முடங்கிக்கிடந்தவளை பார்த்துச் சென்ற மலரின் புலம்பல்கள் மீண்டும் தலைதூக்க, அங்கே ப்ரித்திவும் சம்யுவிடம் சென்று பேசவும் முடியாது, தன் உள்ளக்கிடக்கை யாரிடமும் கொட்டவும் இயலாது இருதலைக்கொள்ளியாய் தவிக்கத் தொடங்கியிருந்தான்.
சம்யுவின் உடல்நிலையிலும், நவீனின் விளக்கத்திலும் அன்றைய நிகழ்வை மலர்விழி சற்று ஒதுக்கிவைத்திருந்தாலும், கடந்த இருப்பத்திஎட்டுவருட திருமணவாழ்வில் கணவனின் திகட்டாத அன்பில் திகட்ட திகட்ட தாம்பத்தியவாழ்வு வாழ்பவளுக்கு ப்ரித்திவ் சம்யுவின் இந்த மௌனம் மேலும் அவளுள் கலக்கத்தை விதைக்க, அவள் மீண்டும் திருமணப்பேச்சுக்களை ஆரம்பித்து இருந்தாள்.
ஒருவீட்டின் குடும்பத்தலைவியாய் சம்யு நவீனுக்கானவள் என்று வெகுநாட்களாய் அவர்களுள் இருக்கும் முடிவே அவளிடம் மேலோங்கி இருக்க, ப்ரித்திவ் சம்யுவின் வயது வித்தியாசமும் அவர்களுக்குள் எந்தவித தப்பான எண்ணங்களும் வந்துவிடக்கூடாது என்று கடவுளிடம் அவளை வேண்டவைத்ததோடு ஜானுவிடமும் திருமணம் பற்றி பேசவைத்திருக்க, அதில் மீண்டும் கலங்கிய சம்யுவோ வேறுவழியில்லாது நவீனின் உதவியை நாடிவிட்டாள்.
படிப்பு, பயிற்சி அனைத்தும் முடிந்து சுகவீனம் காரணமாகவும் தற்சமயம் வீட்டிலே இருந்த சம்யுவிற்கு அவள் வாங்கி வரச்சொல்லி இருந்த ஒரு மருத்துவக் குறிப்பேடு புத்தகத்தை திருநெல்வேலியில் இருந்து அன்று வாங்கி வந்து அவளிடம் கொடுத்த நவீனோ, அவள் உடல்நிலை பற்றியும் விசாரித்துவிட்டு வெளியேற எத்தனிக்க,
“மாமா உங்கட்ட கொஞ்சம் பேசனும்” என்று அவன் நடையை நிறுத்தியிருந்தாள் சம்யுக்தா.
அவனும், “என்னமா வேற புக்ஸ் எதுவும் வேணுமா?” என்று கேட்டுத் திரும்ப…
“எனக்கு எனக்கு இந்தக்கல்யாணம் இப்போதைக்கு வேணாம் மாமா” என்றாள் பெண் பெரும் தயக்கத்திற்கு மத்தியிலே.
அதில் அதிர்ந்து அவளைப் பார்த்தவன், “ஏன் யுக்தா. அன்னிக்கு சரின்னியே?” என்றுவிட்டு, “இப்போ வேணாமா இல்ல எப்பவுமே வேணாமா?” என்றும் வினவ…
அதில் “மாமா” என்று பதறியவள்,
“நான் நான் மாஸ்டர் பண்ணனும்னு ஆசைப்படுறேன் மாமா” என்று அவன் முகத்தைப் பார்க்க முடியாது குனிந்து கொண்டவளுக்கு கண்ணில் நீரே கட்டிவிட்டது.
அவள் கண்ணீரைப் பார்த்து உருகி விட்டவனும், “ஹேய் யுக்தா… பயந்துட்டியா… நான் சும்மா கேட்டேன்மா. இப்போ என்ன நீ மேல படிக்கணும். அதுவரை கல்யாணத்த தள்ளி வைக்கனும் அவ்ளோதான” என்று இலகுக்குரலில் கேட்டவன் வார்த்தையிலே சற்றுத் தெளிந்தவளும், “ம்ம்ம் ” என்பதுபோல் தலையாட்டி வைத்தாள்.
அதில் அவள் தலையை தடவிவிட்டுச் சிரித்தவனும்,
“எப்பவும் உன் தங்கச்சி பண்ற வேலைய இன்னிக்கு நீ பண்ற. கண்ணத்துட யுக்தா” என்றவன், “நான் சித்தப்பாகிட்ட பேசி கல்யாணத்த தள்ளி வைக்கிறேன். நீ சந்தோசமா படி யுக்தா. ஒன்னும் பிரச்னை இல்ல” என்றும் கூறி எழுந்து கொண்டவனிடம் அவனையும் அறியாது ஒரு பெருமூச்சு வெளியாகியது.
தன் பேச்சு நவீனுக்கு எத்துணை பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்று அவளும் உணர்ந்தே இருந்தாலும், அன்றைய நிகழ்வுக்குப்பின் தங்கள் திருமணம் பற்றி யோசிக்கும் நிலையில்கூட பெண்ணவள் இச்சமயம் இல்லை.
ப்ரித்திவுடன் முத்தம் வரை சென்றுவிட்டு நவீனை மணந்து கொள்வதா என்று அவளின் பெண்மனதும் தரையில் இட்ட மீனாய்த்துடிக்க…
அன்று ப்ரித்திவால் உண்டான தாக்கத்தில் இருந்துமீள, ‘அதுமுடியுமா?’ என்றொரு கேள்வி இருந்தாலும் குறைந்த பட்சம் அதற்கு கால அவகாசமாவது வேண்டும் என்று நினைத்தவள், அவன் கண்ணெதெரில் இருந்தால் அதற்கு சாத்தியமே இல்லை என்றும் உணர்ந்து மீண்டும், “மாமா…” என்று நவீனை அழைத்தவள்…
“எனக்கு இன்னொரு உதவியும் பண்ணுங்க மாமா. நான் நான் வெளியூர்ல எங்கையாவது போய் மாஸ்டர் பண்றேன். அதுக்கும் மாமாட்ட பேசி சம்மதம் வாங்கித் தாங்க” என்றும் கரகரத்த குரலில் சொல்ல…
அவனுக்கோ பெண்ணவளின் பேச்சில், “ப்ரித்திவ் சம்யுவிற்குள் இருப்பது தான் நினைத்திருப்பது போல் சாதாரண ஊடல் அல்லவோ. அன்று ஏதோ பெரிதாக அவர்களுக்குள் நடந்திருக்கிறதோ?” என்ற சந்தேகமும் துளிர்விடத் தொடங்கியது.
அவளின் கூற்றிற்கு எந்த பதிலும் சொல்லாமல் கூர்ந்த பார்வையோடு வெறுமனே தலையாட்டிவிட்டு வீட்டிற்கு வந்தவன் தம்பியின் முன் சென்று நின்று, “டேய் ப்ரித்வி உங்களுக்குள்ள என்ன பிரச்னைடா. யுக்தா ஏன் இப்போல்லாம் நம்ம வீட்டுக்கு வரமாட்டிறா. இன்னிக்கு
நான் படிக்கணும் மேரேஜ் இப்போ வேணாம்னு அழறா. பத்தாததுக்கு வெளியூர்கு போய் மாஸ்டர் பண்றேன். மாமாட்ட பேசி சம்மதம் வாங்கி குடுங்கன்னு சொல்றாடா. ஒருத்தர்கூட ஒருத்தர் பேசிக்காம இருக்களவு உங்களுக்குள்ள என்னதான்டா பிரச்சனை” என்று பொரிந்து தள்ளியவனின் வார்த்தையில்…
“என்னது… வேற ஊருக்குப்போய் மாஸ்டர் பண்றேன்னு சொல்றாளா” என்று மட்டும் அதிர்ந்தவன், “அவகிட்ட நான் பேசிக்கிறேன் நீ கல்யாணம் விஷயம் மட்டும் அப்பாட்ட பேசிக்கோ” என்றுவிட்டு மறுநாளே சம்யுவின் வீட்டில் சென்று நின்றான் ப்ரித்திவ். வலிக்க வலிக்க எடுத்த முடிவோடு.
கிட்டத்தட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்திருந்த மருமகனை, “என்னடா இப்போதான் அத்தவீட்டுக்கு வர்ற வழி திறந்ததா. யுக்தாவ ஹாஸ்பிடல்ல இருந்து கூட்டிவந்து விட்டுட்டுப் போனவன் இப்போதான் வர்ற” என்று கிண்டலாய் வரவேற்றாள் அவனின் அத்தை ஜானு.
‘என்ன பாக்கவே கூடாதுன்னுதான உங்கமக வெளியூருக்கு போறவரை யோசிச்சுருக்கா. நான் வந்தா மட்டும் தாவிவந்து கட்டிக்கவா போறா’ என்று உள்ளுக்குள் இருந்த ஆசையை முணுமுணுப்பாய் எண்ணியவன்,
“அது வந்துத்த பீடியாட்ரிக்ல மாஸ்டர் பண்ணலாம்னு இருக்கேன் அதான் அது சம்மந்தமா கொஞ்சம் வேலை” என்று மட்டும் அத்தையிடம் சொன்னான்.
அதற்கு அவளோ, “எவ்ளோ வேலை இருந்தாலும் உன் யுகியைப் பாக்காம நீ இருக்க மாட்டியேடா” என்று அவனை அறிந்தவளாகக் கேட்டவள், “என்னடா சண்டையா ரெண்டு பேத்துக்கும்?” என்றும் அவர்களை அறிந்தவளாக வினவ…
அவனோ, “அப்டிலாம் ஒன்னுமில்லத்த. உண்மையிலே வேலைதான்” என்று ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அதற்குமேல் அங்குநின்றால் அத்தை தன் வாயாலே அனைத்தும் உதிர்க்க வைத்து விடுவார் என்றும் எண்ணியவனாய்,
“யுகீ யுகீ ” என்ற கூவலுடன் அவள் அறைநோக்கி விரைந்தவன் அவள் அறைக்குள்ளும் நுழைந்திருந்தான்.