விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அவர்களின் சொந்த ஊரான அந்த கிராமத்திற்குள் கார் நுழையும்போதே அங்கங்கே ஸ்பீக்கர் வைத்து அதில் மேளச்சத்தம் காதை கிழிக்கவும், “ஊரில் ஏதாச்சும் விசேஷமா ம்மா? மேளச்சத்தம் ரொம்ப பெருசா கேட்குது?” என்று சிவமித்ரா கேட்க,
“தெரியலையே மித்து, இந்த சமயம் இந்த ஊர் கோவிலில் கூட ஏதும் திருவிழா இல்லையே, இது கல்யாண மாசமில்லையா? யார் வீட்டிலோ கல்யாணம் போல, அதுக்காக தான் இந்த மேளச்சத்தமா இருக்கும்,” என்று ராஜலஷ்மி பதில் கூறவும்,
‘அன்னை சொன்னது போல் கல்யாண சடங்குக்காக தான் இந்த மேளச்சத்தம் போல்,’ என்று சிவமித்ராவும் நினைத்து கொண்டவள், கிட்டத்தட்ட மூன்று வருடம் கழித்து இந்த ஊருக்கு திரும்பி வருவதால், பெரிதளவில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும், அந்த ஊரின் சின்ன சின்ன மாற்றங்களை வேடிக்கை பார்த்தப்படி வந்தாள்.
அன்னை, மகள் இருவரும் யூகித்தது சரியே, கண்ணப்பன் வாத்தியார் வீட்டில் அவர் மகன் திருமணம் குறித்து முகூர்த்த கால் ஊன்றியிருக்கவே அங்கு மேளச்சத்தம் காதை கிழித்து கொண்டிருந்தது.
முகூர்த்த கால் நட்டு முடித்திருக்க, அடுத்து மணமகனுக்கு நலங்கு வைக்கவும், அத்தை முறை, மாமன் முறை உள்ளவர்களெல்லாம் சீர் கொடுப்பதற்காகவும் பரபரப்போடு வேலையாய் சுற்றி கொண்டிருந்தனர்.
“ராகு காலம் ஆரம்பிக்கறதுக்குள்ள நலங்கு வச்சி முடிக்க வேண்டாமா? சக்தி ரெடியாகிட்டானா? யாராச்சும் போய் கூட்டிட்டு வாங்க,” என்று உறவினர் ஒருவர் குரல் கொடுக்கவும்,
“தேவிகா, சக்தி ரெடியான்னு பாரு,” என்று கண்ணப்பன் மனைவியிடம் கூற,
“இதோ பார்க்கிறேன் ங்க,” என்று தேவிகாவும் மகனை பார்க்கச் சென்றார்.
அன்றைய விசேஷத்தின் நாயகனான சக்திவாசன் வெளிர் நீல சட்டையும் அதே நிற கரை வைத்த வெள்ளை வேட்டியும் அணிந்து தயாராகி, ஒருமுறை கண்ணாடியை பார்த்து கொண்டவனுக்கோ, “டெய்லி உங்க முகத்தை கண்ணாடியில் பார்க்கறீங்க தானே, உங்க கலருக்கும் என் கலருக்கும் பொருந்துமா? அது உங்களுக்கே தெரிய வேண்டாம்?” என்ற குரல் தேவையில்லாமல் அந்தநேரம் ஞாபகத்திற்கு வந்தது.
எப்போதும் போல அந்த குரலும், வார்த்தைகளும் அவனது இதயத்தில் வலியை கொடுக்க, “என்ன சக்தி இது, புது வாழ்க்கைக்குள்ள போகப் போற, அப்புறம் எதுக்கு பழசை நினைச்சிட்டு இருக்க, அதை மறக்க முயற்சி செய்,” என்று வாய்விட்டு கூறி அவனே அவனை சமாதானப்படுத்தி கொண்டான்.
அப்போது, “சக்தி ரெடியா ப்பா, நலங்கு வைக்கணுமே,” என்றழைத்தப்படி தேவிகா அங்கு வந்தவர்,
மகன் தயாராகி நிற்பதை பார்த்து, அதிலும் ஏற்கனவே மகனது திருமணம் நடக்கவிருக்கும் மகிழ்ச்சியில் இருப்பவர், “கல்யாண களை வந்துடுச்சு என் மகனுக்கு, யார் கண்ணும் பட்டுடக் கூடாது.” என்று மகனை தொட்டு திருஷ்டி கழித்தார்.
அன்னையின் சொல் கேட்டவனோ வெறும் புன்னகையை மட்டுமே அவருக்கு பதிலாக கொடுத்தான். “சரி நேரமாச்சு வா போகலாம்,” என்று அவனை வீட்டு முற்றத்தில் பந்தல் போட்டிருக்க அந்த இடத்திற்கு அழைத்து வந்தார்.
“இதோ சக்தி வந்தாச்சு ப்பா, மச்சான் முறை யாரு, அவனை அழைச்சிட்டு வந்து மனையில் உட்கார வைங்க,” என்று உறவினர் ஒருவர் சொல்லவும், சக்தியின் அத்தை மகன் அவனை அழைத்து வந்து அமர வைக்க, அவனுக்கு நலங்கு வைக்க ஆரம்பித்தனர்.
அத்தனையையும் ஒரு நாற்காலியில் அமர்ந்தப்படி பார்த்து கொண்டிருந்தார் கண்ணப்பன் வாத்தியார். தனது ஒரே மகனது முகம் வெளிப்படையாக மகிழ்ச்சியை காட்டவில்லையென்றாலும் இந்த திருமணம் குறித்து அவன் தெளிவோடு இருப்பதையும், மனைவி மகிழ்ச்சியாக வலம் வருவதையும் பார்த்தவருக்கு, இந்த திருமணம் நல்லப்படியாக நடந்து முடிய வேண்டும், இவர்களும் இதே மனநிலையோடு இருக்க வேண்டுமென்று மனதளவில் அவர் கடவுளுக்கு வேண்டுதல் வைத்து முடிக்கும்போது அவர்கள் வீட்டு வாசலின் முன் ஒரு கார் வந்து நின்றது.
காரிலிருந்து இறங்கிய ராஜலஷ்மியையும் சிவமித்ராவையும் கண்ட கண்ணப்பன் ஒரு நொடி அதிர்ந்தார். ஏன் அவர்களுக்குமே கொஞ்சம் அதிர்ச்சி தான், மேளச்சத்தம் கேட்டு யார் வீட்டிலோ திருமணம் என்று அவர்கள் நினைத்திருக்க, கண்ணப்பன் வாத்தியார் வீட்டு திருமணம் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த நேரத்தில் இங்கு வந்திருக்க கூடாதோ? என்று நினைத்து அன்னையும் மகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.
கண்ணப்பனும் நொடி அதிர்ச்சியை மறைத்து கொண்டவர், “அடடே ராஜி ம்மா, சிவா ம்மா, வாங்க வாங்க,” என்று குரல் கொடுத்தப்படி வாசலுக்கு விரைய, அவர் அழைத்த பெயரை கேட்டு வாசலை பார்த்த சக்திவாசனுக்கோ அங்கு நின்றிருந்தவளை கண்டு அவனது முகம் மாறியது.
அவனை போலவே கண்ணப்பனின் குரலில் மற்றவர்களும் வாசலை பார்க்க, “இவங்க என்ன இந்த நேரம் வந்திருக்காங்க,” என்று நினைத்த தேவிகா அவர்களது வரவை எதிர்பார்க்கவுமில்லை. அதை விரும்பவும் இல்லை.
“இது பக்கத்து வீட்டு ராஜலஷ்மி தானே, ராஜவேலு இறந்துட்டதும் மெட்ராஸ்க்கே போயிட்டதா சொன்னீங்க, கல்யாணத்துக்கு அவங்களுக்கும் பத்திரிக்கை வச்சீங்களா?” என்று உறவினர் ஒருவர் வியப்போடு கேட்க,
“இல்லை, அவங்க முன்ன இருந்த வீட்டில் அவங்க இல்லைன்னு கேள்விப்பட்டோம், அதனால அவங்களுக்கு பத்திரிக்கை வைக்கல, அவங்க எதுக்கு வந்திருக்காங்கன்னு தெரியல,” என்று தேவிகா அதற்கு பதில் கூறியவர்,
“நீங்களெல்லாம் நலங்கு வைங்க,” என்று சொல்லிவிட்டு அவரும் வாசலுக்கு விரைந்தார்.
அதற்குள் முன்னே சென்ற கண்ணப்பனோ, “திடுதிடுப்புன்னு வந்து நிக்கறீங்க, உங்களை இந்தநேரம் இங்க எதிர்பார்க்கல, நல்ல நேரத்துக்கு தான் வந்திருக்கீங்க, நம்ம சக்திக்கு 4 நாளில் கல்யாணம்.” என்று அவர்களிடம் கூற, மீண்டும் அன்னையும் மகளும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.
“ஊருக்குள்ள வரும்போதே மேளச்சத்தம் கேட்டு யார் வீட்டிலோ கல்யாணம்னு நினைச்சோம், நம்ம சக்திக்கா இருக்கும்னு நினைக்கல, ரொம்ப சந்தோஷம் அண்ணா,” என்று ராஜலஷ்மி மகிழ்ச்சியை வெளிப்படுத்த,
“நீங்க முன்ன இருந்த வீட்டில் இப்போ இல்லை போல, நம்ம ஊரு திருவிழாவுக்கு சொல்ல வந்தவங்க நீங்க அங்க இல்லன்னு திரும்பி வந்துட்டாங்க, போன் நம்பரும் மாத்திட்டீங்க போல, அதான் எங்களுக்கு உங்களைப்பத்தி எந்த விவரமும் தெரியல, இல்லன்னா சக்தி கல்யாணத்துக்கு பத்திரிக்கை வச்சிருப்போம்,” என்று கண்ணப்பன் கூறவும்,
“ஆமாம் வீடு மாத்திட்டோம், நம்பரும் தான்,” என்று ராஜலஷ்மி மேலோட்டமாக பதில் கூறினார்.
“சரி வெளியவே நிக்கறீங்க, உள்ள வாங்க” என்று கண்ணப்பன் அவர்களை வரவேற்க, உடன்நின்ற தேவிகா மௌனமாக நிற்பதிலேயே இவர்கள் வரவை அவர் விரும்பவில்லை என்பது அன்னைக்கும் மகளுக்கும் தெளிவாக தெரிந்தது.
“நம்ம மித்ராக்கு நம்ம ஊர் ஸ்கூலில் வேலை கிடைச்சிருக்கு ண்ணா, அதனால் நாங்க இனி இங்க தான் தங்கப் போறோம், அதான் எங்க வீட்டு சாவி உங்களிடம் தானே இருக்கு, அதை வாங்க தான் வந்தோம்,” என்று ராஜலஷ்மி வந்த விஷயத்தை கூற,
“அடடே சிவா ம்மா, நம்ம ஊருக்கே நீ டீச்சரா வரப் போறீயா? ரொம்ப சந்தோஷம் ம்மா,” என்று கண்ணப்பன் சிவமித்ராவை வாழ்த்தியவர்,
“வீட்டில் விசேஷம் நடக்கும்போது வீட்டுக்குள்ள வராம போனா எப்படி? அதுவுமில்லாம ரொம்ப நாள் புழங்காம இருக்க வீடு, ஆளை வரச் சொல்லி சுத்தம் செய்ய சொல்றேன். அப்புறம் வீட்டுக்கு போகலாம், இப்போ உள்ள வாங்க,” என்று அவர் சொல்லவும், அதற்குமேலும் மறுக்க முடியாமல் இருவரும் வீட்டிற்குள் வந்தனர்.
சக்திவாசன் மாலை அணிந்தப்படி அமர்ந்திருந்ததை சில நொடிகள் கவனித்த சிவமித்ரா உடனே அவனிடமிருந்து பார்வையை அகற்றி கொண்டாள். ஆனால் அவள் உள்ளே வந்ததிலிருந்து சக்தி அவளைத்தான் கவனித்து கொண்டிருந்தான். முன்பு பார்த்ததை விட அவளிடம் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை உணர்ந்தவன், அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்திருந்தான்.
வந்தவர்களை இடம் பார்த்து அமர சொன்ன கண்ணப்பன், “தேவி வந்தவங்களுக்கு குடிக்க கொண்டு வா,” என்று மனைவியிடம் கூற, தேவிகாவும் உள்ளே சென்றார்.
“நம்ம வீட்டிலேயே குளிச்சுட்டு ரெண்டுப்பேரும் முதலில் சாப்பிடுங்க, அதுக்குள்ள வீட்டை சுத்தப்படுத்திடுவாங்க,” என்று கண்ணப்பன் கூற,
சக்தி தன்னை பார்த்து கொண்டிருப்பதை பார்க்காமலேயே உணர்ந்த சிவமித்ரா, “அம்மா நம்ம வீட்டுக்கே போயிடலாம் ம்மா,” என்று ராஜலஷ்மியிடம் ரகசிய குரலில் கூறினாள்.
“போலாம் இருடி,” என்று ராஜலஷ்மி சொல்லி கொண்டிருக்கும்போதே,
“ஆமாம் நீங்க மட்டும் வந்திருக்கீங்க,” என்று கண்ணப்பன் பேச்சை ஆரம்பிக்கும்போது, அவரது உறவினர்கள் ராஜலஷ்மியை விசாரிக்க அவர் அருகே வந்தனர். ராஜலஷ்மியும் அவர்களுடன் பேசி கொண்டிருக்க, கண்ணப்பன் சிவமித்ராவிடம் வேலையை பற்றி விசாரித்து கொண்டிருந்தார்.
தேவிகா குடிப்பதற்கு கொண்டு வந்து அவர்களுக்கு கொடுக்க, அதற்குள் சக்திவாசனுக்கு நலங்கு வைத்து முடித்து, உறவுமுறை சீர் கொடுப்பதற்காக அனைவரும் அங்கு சென்றுவிட்டனர்.
“விடியற்காலையே கிளம்பியிருப்பீங்க, போய் ரெண்டுப்பேரும் குளிச்சு சாப்பிட்டு இங்கேயே கொஞ்சநேரம் ஓய்வெடுங்க,” என்று கண்ணப்பன் மீண்டும் அதையே கூற,
“இல்ல மாமா, நாங்க வீட்டுக்கு போய் பார்த்துக்கிறோம்,” என்று சிவமித்ரா பதில் கூறினாள்.
“புழங்காத வீடு, உபயோகிக்காத கிணறு, அங்க போய் உங்களுக்கு கஷ்டம் தான், நாங்க யாரோவா? நீங்க தினம் வந்து போய் பழகின வீடு தானே இது, இங்க எதுக்கு உங்களுக்கு தயக்கம்? எங்க ரூம்ல தான் அட்டாச்ட் பாத்ரூம் இருக்கே, அப்புறம் என்னம்மா?” என்று கண்ணப்பன் கூற,
இவ்வளவு நடந்தும் எதுவும் நடக்காதது போல் பேசும் அவரிடம் மேலும் மறுத்து பேச மனம் வராமல், “சரி மாமா,” என்று ஒத்து கொண்டவள், கொண்டு வந்த பையிலிருந்து மாற்று துணியை எடுத்து கொண்டு வீட்டினுள் சென்றாள்.
சக்திக்கு உறவினர்கள் சீர்முறையெல்லாம் செய்து முடித்திருக்க, “ஏய்யா சக்தி, ஆள் யாரையாச்சும் வரவச்சு இவங்க வீட்டை சுத்தம் செய்ய சொல்லு,” என்று கண்ணப்பன் அவனுக்கு உத்தரவு போடவும்,
அவனும் “சரி ப்பா,” என்று உடனே யாரிடமோ அலைபேசியில் பேசினான்.
திரும்ப ஞாபகம் வந்தவராக, “என்ன நீங்க ரெண்டுப்பேர் மட்டும் வந்திருக்கீங்க, மாப்பிள்ளை உங்களோட வரலையா? பாத்திர பண்டமெல்லாம் எப்போ வருது? மாப்பிள்ளை அந்த வண்டியில் வராரா?” என்று கண்ணப்பன் ராஜலஷ்மியிடம் கேள்விகள் எழுப்ப,
“பாத்திர பண்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடும், ஆனா மாப்பிள்ளை வர மாட்டாரு,” என்ற ராஜலஷ்மியின் பதிலை கேட்டு கொண்டிருந்த சக்திவாசன் நெற்றியை சுருக்க,
கண்ணப்பனுமே ஒன்றும் புரியாமல், “என்ன ராஜி ம்மா சொல்ற? மாப்பிள்ளை வரமாட்டாரா? ஏன் என்னாச்சு?” என்று கேட்டார்.
“மாப்பிள்ளை இப்போ உயிரோட இல்ல ண்ணா, கொரானா ரெண்டாவது அலை அவரோட உயிரை பலி வாங்கிடுச்சு,” என்ற ராஜலஷ்மியின் பதிலை கேட்டு அதிர்ச்சியில் சக்திவாசன் கையில் இருந்த அலைபேசியை நழுவ விட்டான்.
சிவமித்ராவிடம் உள்ள மாற்றம் என்ன என்பது இப்போது அவனுக்கு புரிந்தது. இதற்கு முன்பு அவளை அவள் கணவனுடன் பார்க்கும்போது நெற்றி வகிட்டில் குங்குமம், தலை நிறைய பூ, கை நிறைய வளையல்கள் இப்படியான அலங்காரத்தில் பார்த்திருக்கிறான். இப்போது சின்னதாக ஒரு ஸ்டிக்கர் பொட்டு மட்டுமே வைத்திருந்தாள். பயணம் செய்து வந்ததால் பெரிதாக அலங்காரம் இல்லை போலும் என்று நினைத்தானே தவிர, இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கும் என்று சத்தியமாக அவன் எதிர்பார்க்கவில்லை.
கண்ணப்பன், தேவிகாவிற்குமே இந்த செய்தி அதிர்ச்சி தான், ஏன் உடனிருந்த உறவினர்களும் அந்த செய்தியை கேட்டு அதிர்ந்தனர். கண்ணப்பனோ, “என்ன ராஜி ம்மா சொல்ற, இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு எங்களுக்கெல்லாம் தெரிய படுத்தலையே, அந்த அளவுக்கு நாங்க வேண்டாத ஆளா போயிட்டோமா?” என்று ஆதங்கப்பட,
“எங்க ண்ணா, கடைசி நிமிஷத்தில் நாங்களுமே அவரோட முகத்தை பார்க்கலையே, பிணத்தை கட்டிக்கிட்டு அழற வாய்ப்பை கூட இந்த கொரோனா தரலையே, அவர் சீரியஸா இருக்கும்போது அந்த கொரோனா ட்ரஸ் போட்டுக்கிட்டு நம்ம மித்து ஒரே முறை பார்த்துட்டு வந்தா அவ்வளவு தான், அடக்கம் செய்ய கூட பிணத்தை வீட்டுக்கு அனுப்பல, இதில் ஊரடங்கு வேற, அப்படியிருக்க உங்களுக்கெல்லாம் எப்படி தகவல் சொல்ல, அதுக்குப்பிறகும் மித்து யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டா,
சீரியஸா இருக்கவரை எப்படியும் காப்பாத்திடலாம்னு பணத்தை தண்ணீயா செலவழிச்சது தான் மிச்சம். அவரை பிழைக்க வைக்க முடியல, அவருக்கு குடிக்கிற பழக்கம் மட்டுமில்ல, சிகரெட்டும் பிடிப்பாரு போல, அதுதான் அவரை காப்பாத்த முடியாம போச்சு, அவரோட ட்ரீட்மென்ட்க்காக கையில் சேமிப்பா இருந்த பணமெல்லாம் செலவாகிடுச்சு, நாங்க இருந்த வீடு அவங்களுக்கு சொந்தமான அப்பார்ட்மென்ட்னு நினைச்சோம், ஆனா மாப்பிள்ளை இறந்ததுக்கு பிறகு தான் அது அவரோட ஃப்ரண்டோட அபார்மென்ட்னு தெரிய வந்துச்சு,
மாப்பிள்ளையோட அம்மா இருந்தது அவங்களுக்கு சொந்தமான வீடு தான், ஆனா அங்க அவங்க பொண்ணு குடும்பத்தோட இருக்கா, இவளை அவங்களோட தனியா இருக்க விடவும் மனசில்ல, நானும் அவளோட அங்க இருக்க முடியாது. அதுக்குப்பிறகு மித்து வேலைப் பார்த்த ஸ்கூலுக்கு பக்கத்திலேயே வாடகைக்கு வீடு எடுத்து இருந்தோம், எனக்கு அதுக்கு மேலேயும் அங்க இருக்க பிடிக்கல, ஊரோட போயிடலாம்னு சொல்லிட்டு தான் இருந்தேன். ஆனா மித்து தான் இங்க வர ஒத்துக்கல,
அப்பப்போ டீச்சர் வேலைக்கு வர பரிட்சையெல்லாம் எழுதிட்டு இருந்ததில் அவளுக்கு நம்ம ஊரிலேயே வேலை கிடைச்சுது, இங்கேயே வேலை கிடைச்சதில் மித்ராக்கு அந்த அளவு விருப்பம் இல்லை தான், ஆனா அரசாங்க வேலையை விட வேண்டாம்னு ரெட்டை மனசா தான் இங்க வந்திருக்கா, கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷத்திலேயே வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கறாளேன்னு தான் அவளை நினைச்சு கஷ்டமா இருக்கு,” என்று ராஜலஷ்மி கண்ணீர் சிந்த,
“அப்படி நினைக்காத, சிவாக்கு இப்போ வயசு 26 இருக்குமா? கண்டிப்பா அவளுக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சு கொடுப்போம், இப்போதைக்கு ஊர் மாற்றமும், புது வேலையும் அவ மனசுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று கண்ணப்பன் ஆறுதல் கூறினார்.
சிவமித்ராவிற்கு நடந்ததை நினைத்து தேவிகாவிற்கும் வருத்தமாக தான் இருந்தது. ஆனாலும் ‘மகனுக்கு நல்லது நடக்கும் சமயத்திலா இவங்க இங்க வரணும், அதுவும் நல்லது நடக்கப் போற வீட்டில் உட்கார்ந்து அழுதுட்டு இருக்காங்க,” என்று மனதில் நினைத்து கொண்டார்.
ராஜலஷ்மிக்குமே அது புரிந்தது போலும், “நல்லது நடக்கற வீட்டில் உட்கார்ந்து அழறேன் பாருங்க, இந்த நேரம் இதை சொல்லியிருக்க கூடாது தான், ஆனா சொல்லாமலும் இருக்க முடியாதே, இந்த நேரம் பார்த்து நாங்க இங்க வந்து உங்களையும் சங்கடப்படுத்திட்டோம், ஆனா மித்ரா நாளைக்கு வேலைக்கு சேரணும்னு தான் நாங்க இன்னைக்கு வந்தோம்,” என்று அவர் சங்கடத்துடன் கூற,
“ஆமா நடந்ததை சொல்லாமலா இருக்க முடியும், இதனால எங்களுக்கு ஒன்னுமில்ல, யார் என்ன நினைச்சு என்னாக போகுது. நடந்து முடிஞ்சதை மாத்தவா முடியும்,” என்று கண்ணப்பன் கூறினார்.
அதற்குமேலும் அங்கு நின்று அவர்கள் பேசுவதை கேட்க முடியாமல் சக்திவாசன் அவனது அறையில் இருக்கலாம் என்று சென்றவன், விட்டினுள் நுழைந்து அவன் அறைக் கதவை திறக்கும்போது அந்த அறையின் குளியலறையிலிருந்து சிவமித்ரா வெளியே வந்தாள்.
சக்தி அந்த அறைக்குள் நுழைந்ததில் முதலில் அவள் அதிர்ச்சியானவள், அதன்பின் தான் அது அவனது அறை என்பதையே கவனித்தாள். ‘நல்லவேளை வேற ஒருத்தர் வீடு என்பதால் சுடிதார் பேன்ட்டை பாத்ரூம்லயே போட்டுட்டு வந்துட்டோம்,” என்று நினைத்து நிம்மதியானாள்.
“சாரி, இது அத்தை, மாமா ரூம்னு நினைச்சு வந்துட்டேன்.” என்று அவளும்,
“சாரி நீ உள்ள இருக்கன்னு தெரியாம வந்துட்டேன்.” என்று அவனும் ஒரே நேரத்தில் மன்னிப்பு கேட்டு கொண்டனர்.
“பரவாயில்லை தப்பு என்னோடது தான், முதலில் இது அத்தை மாமாவோட ரூமா தானே இருந்துச்சு, அந்த ஞாபகத்தில் வந்துட்டேன்.” என்று அவள் சொல்ல,
“ஆமா அப்பாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாம போன போது அந்த ரூம் கொஞ்சம் காற்றோட்டமா இருக்கும்னு ரூமை மாத்திக்கிட்டோம்,” என்று அவன் பதில் கூறினான்.
சரியென்று தலையசைத்தவள் அறையிலிருந்து வெளியே செல்லும்போது, “ஒருநிமிஷம்,” என்று அவளை தடுத்து நிறுத்தினான்.
என்னவென்று அவள் கேள்வியாக பார்க்கவும், “உன்னோட அம்மா இப்போ தான் நடந்ததை சொன்னாங்க, கேட்டு ரொம்ப கஷ்டமா போச்சு, உனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்க வேண்டாம்,” என்று அவன் சொல்ல,
அவன் எதை சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டவள், “நடந்திருக்க வேண்டாம் தான், ஆனா நடந்துருச்சு, என்ன செய்ய முடியும்?” என்று சொல்லிவிட்டு,
“ஆனா இதுக்காக உண்மையா வருத்தப்பட்டீங்களா? இல்லை இவளுக்கு இப்படி நடந்தது தான் சரின்னு உள்ளுக்குள்ள சந்தோஷப்பட்டீங்களா?” என்று கேட்டாள்.
அவளின் கேள்வி அவனுக்கு கோபத்தை உண்டாக்க, “உனக்காக வருத்தப்பட்டேன் பாரு, என்னை சொல்லணும்? நீ யார் எனக்கு? உனக்கு என்ன நடந்தா எனக்கென்ன? முதலில் என்னோட ரூமை விட்டு போ.” என்று அவன் கோபமாக கத்த,
அப்போது தான் அதிக்கப்படியாக பேசிவிட்டோம் என்பதை உணர்ந்தவள், “சாரி,” என்றாள்.
“உன்னோட சாரியை தூக்கி குப்பையில் போடு. முதலில் இங்க இருந்து போ.” என்று அவன் மீண்டும் கத்த, இதுவரை அவன் அப்படி கோபப்பட்டு பார்த்திருக்காததால், அந்த கோபத்தில் சிவமித்ரா பதறி போனாள்.