அறைக்குள் வந்த சிவமித்ராவிற்கு தேவிகா பேசிவிட்டு சென்றது சரியாக புரியாமல் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும், அவர் மகன் மகிழ்ச்சியாக இல்லை. இயல்பாக இல்லை என்று சொல்கிறார். அதற்கு இவள் என்ன செய்வாளாம்? நடக்கவிருந்த திருமணத்தை குறித்தும், இந்த இரவை குறித்தும் அவனுக்கு பல கற்பனைகள் இருந்திருக்கும் என்று அவளுக்கு புரிகிறது. என்ன இருந்தாலும் அவனுக்கு இது முதல் இரவு. ஆனால் இவளுக்கு அப்படியில்லையே, காலையில் சாதாரணமாக திருமணத்திற்கு சென்றவளை மணப்பெண்ணாக்கி விட்டனர். உடனே அந்த திருமணத்தை ஏற்று வாழ வேண்டுமென்று கூறினாள் அது எப்படி முடியும்?
அவளின் கடந்த கால வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்ததா? அதை அவள் மகிழ்ச்சியாக வாழ்ந்தாளா? என்று கேட்டால் அவளுக்கே அதை சொல்ல தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும், ஆனால் திடீரென உருவான புது வாழ்க்கையை ஏற்க அவள் மனம் தயாராக வேண்டும் தானே,
தேவிகா சொன்னதுபோல் பிடிக்கவில்லை என்று சொன்னவனையே இப்போது அவள் வாழ்க்கை துணையாக மாற்றியிருக்கும் விதியை என்னவென்று சொல்வது? அவனை பிடிக்கவில்லை என்று சொன்னதால் தான் அவளுக்கு இப்படியெல்லாம் நடந்ததா? ஆனால் நம் மனதிற்கு பிடித்தாற்போல் வாழ்க்கை நமக்கு அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது பெரிய தவறா? அதுவும் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அதற்காக மற்றவரை காயப்படுத்துவது தவறு என்பது இப்போது அவளுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. ஆனால் அதற்கு இவள் மட்டுமே காரணம் என்று எப்படி சொல்ல முடியும்? அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கியது இவர்கள் அனைவரின் தவறு தானே அது யாருக்கும் புரியாமல் போனால் இவளால் மட்டும் என்ன செய்ய முடியும்?
கண்ணப்பனுக்கும் ராஜவேலுவிற்கும் இந்த கிராமம் தான் அவர்களது பிறந்த ஊர். பிறந்ததிலிருந்தே அவர்கள் அதே வீட்டில் தான் வசிக்கின்றனர். இருவருமே அவரவர் வீட்டிற்கு ஒற்றை பிள்ளைகள். பக்கத்து பக்கத்து வீடு என்பதால் நல்ல நண்பர்கள். அதேபோல் இருவருமே ஆசிரியருக்கான பயிற்சிப் படிப்பை படித்து அரசு பள்ளியில் ஆசிரியராகவும் வேலைக்கு சேர்ந்தார்கள்.
ராஜவேலுவிற்கு திருமணத்திற்கு பெண் பார்க்கும்போது கண்ணப்பனுக்கும் தேவிகாவிற்கும் திருமணம் ஆகி சக்திவாசன் பிறந்திருந்தான். ராஜவேலுவிற்கு பல பெண்கள் பார்த்து கடைசியாக ராஜலஷ்மியை நிச்சயம் செய்திருந்தனர். அவர் பிறந்ததோ திருச்சி மாநகரம். மகளை இப்படி ஒரு கிராமத்தில் திருமணம் செய்து கொடுக்க ராஜலஷ்மியின் அன்னைக்கு விருப்பமேயில்லை. ஆனால் மகளும் கணவனும் விரும்பவே அரை மனதாக இந்த திருமணத்திற்கு சம்மத்தித்திருந்தார். ராஜலஷ்மியும் ராஜவேலுவை மணந்து அந்த கிராமத்து மருமகளாக வந்தார். ஆரம்பத்தில் அவருக்கு அந்த கிராமத்து வாழ்க்கை முறை கஷ்டமாக இருந்தபோது தேவிகா தான் அவருக்கு உதவியாக இருந்தார். இரண்டு குடும்பமும் திருமணத்திற்குப் பிறகும் நல்ல நட்போடு இருந்தனர்.
திருமணத்திற்கு பின் இரண்டு முறை ராஜலஷ்மி கருவுற்று சில மாதங்களிலேயே அந்த கரு கலைந்தும் போய் பின் நான்கு வருடம் கழித்து தான் சிவமித்ரா பிறந்தாள். ஏற்கனவே மகள் கிராமத்தில் வாழ்வது பிடிக்காத ராஜலஷ்மியின் அன்னை, இந்த முறை எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாதென்று மகள் கருவுற்ற இரண்டு மாதத்திலேயே திருச்சிக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார். ராஜவேலுவிற்கும் அப்போது தந்தை மட்டுமே இருக்க, அவரும் மனைவி திருச்சியில் இருப்பது நல்லது என்று ராஜலஷ்மியின் அன்னை விருப்பத்திற்கு விட்டார்.
குழந்தை பிறந்து ஏழு மாதத்திற்கு பிறகு தான் ராஜலஷ்மியை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அவரது அன்னை. அதன்பிறகும் பேத்தியை அடிக்கடி அவர் வீட்டில் வைத்து கொள்வார். அதனால் சிவமித்ரா அவள் பாட்டியோடு ஒட்டி கொண்டதால். பள்ளி படிப்பையும் அங்கேயே பாட்டி வீட்டில் தங்கி படித்தாள். அதனால் அவளது பாட்டியைப் போலவே அவளுக்கும் அந்த கிராமத்து வாழ்க்கை முறை பிடிக்காமல் போனது.
பாட்டி இறந்தபிறகும் கூட அவள் திருச்சியில் விடுதியில் தங்கி தான் அவளது இளநிலை படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பு இரண்டையும் படித்தாள். அதனால் இந்த கிராமும் சரி, இங்கிருப்பவர்களும் சரி அவளுக்கு அந்த அளவுக்கு நெருக்கமே இல்லை. அவ்வப்போது விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தாலும் அவளும் யாருடனும் அத்தனை நெருக்கம் காட்ட மாட்டாள்.
இதில் அவளது எதிர்கால துணை பற்றி வேறு அதிக எதிர்பார்ப்புகள் வைத்திருந்தாள். ஆனால் அவள் படிப்பு முடிந்து ஊருக்கு வரும்போது அவளுக்கும் சக்திவாசனுக்கும் சில நாட்களில் நிச்சயதார்த்தம் என்று கூறினால் அவளுக்கு எப்படி இருக்கும்? அவளின் எதிர்பார்ப்புகளுக்கு அப்படியே எதிர்மாறாக இருந்தான் சக்திவாசன். அவன் தான் மாப்பிள்ளை என்று சொல்லி நிச்சயம் குறித்து அவளிடம் சம்மதமா என்று அவளது பெற்றோர்களும் கேட்கவில்லை. சக்திவாசனும் கேட்கவில்லை. அவனது பெற்றோர்களும் கேட்கவில்லை. முன்பே கேட்டிருந்தால் அவளும் நாசூக்காக அவர்களிடம் அவளது மறுப்பை வெளிப்படடுத்தியிருப்பாள். ஆனால் அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டு சொன்னால் அவள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன?
“யாரை கேட்டு இப்படி ஒரு முடிவெடுத்தீங்க? கல்யாணம் செஞ்சுக்க போறது நானா இல்லை நீங்களா? எனக்கு இந்த கல்யாணத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.” என்று அன்னை தந்தையிடம் அவளது கோபத்தைக் காட்ட,
“அப்பாவும் அம்மாவும் உனக்கு தப்பா ஏதாவது செய்வோமா சிவாம்மா, சக்தி ரொம்ப நல்ல பையன். கண்ணப்பன் குடும்பம் நல்ல குடும்பம். நம்மளை விட நல்ல வசதியானவங்களும் கூட, அதிலும் முக்கியமா கல்யாணத்துக்குப் பிறகு நீ எங்க பக்கத்திலேயே இருக்கலாம், இத்தனைநாள் பாட்டி வீடு, ஹாஸ்டல்னு எங்களை விட்டு தள்ளியே இருந்துட்ட, கல்யாணத்துக்கு பிறகாவது எங்க பக்கத்திலேயே நீ இருந்தா, அதைவிட வேற எங்களுக்கு சந்தோஷம் இருக்கு சொல்லு, அரசாங்க வேலைக்கான பரிட்சை எழுதி வேலை கிடைக்கும் வரை இங்க பக்கத்தில் ஏதாவது ஒரு ஸ்கூலுக்கு வேலைக்கும் போகலாம், இதைவிட பெருசா என்ன வேணும்னு சொல்லு,” என்று ராஜவேலு கூறவும்,
“உங்களுக்கு வேணும்னா பெருசா எதிர்பார்ப்பு இல்லாம இருக்கலாம், ஆனா எனக்கு இருக்கு, கல்யாணம் செய்து நான் இந்த கிராமத்தில் குப்பை கொட்டணும்னா எதுக்குப்பா என்னை சிட்டியில் படிக்க வச்சீங்க? இதுக்கு என்னை இப்படியே விட்ருக்கலாமே,” என்றாள் அவள் கோபமாக,
“நீ பிறந்த ஊரையே கேவலமா நினைக்காத மித்து,” என்று ராஜலஷ்மி அதற்கு கோபமாக பதில் கூற,
“நான் பிறந்த ஊருன்னு என்னை கலயாணம் செய்து கொடுக்காம இங்கேயே வச்சிருப்பீங்களா? கல்யாணம் செய்து இன்னொரு வீட்டுக்கு தானே அனுப்புவீங்க, அது நல்லா படிச்ச நல்ல வேலையில் இருக்க, முக்கியமா அழகா இருக்க சிட்டி மாப்பிள்ளைக்கு என்னை கல்யாணம் செய்து கொடுத்தா நான் சந்தோஷமா இருப்பேன். என் சந்தோஷம் உங்களுக்கு முக்கியம் இல்லையா?” என்று சிவமித்ரா கேட்கவும்,
“சக்திக்கு என்னடி குறைச்சல்?” என்றார் ராஜலஷ்மி.
“அதை என் வாயால சொல்லணுமா? என் எதிர்பார்ப்பே வேற ம்மா, சக்தி அதுக்கு ஆப்போசிட்டா இருக்காங்க, என் எதிர்பார்ப்பை நான் சொல்லியும் இப்படி கேட்டா நான் என்ன செய்றது?” என்று அவள் கேட்க,
“அப்பா, அம்மா எடுக்கும் முடிவுக்கு நீ ஒத்துப்ப என்கிற நம்பிக்கையில் நான் நிச்சயத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்லிட்டேன். இப்போ போய் வேண்டாம்னு சொன்னா ரெண்டு குடும்பத்துக்கும் அது அவமானம் சிவா ம்மா, அப்பாக்காக ஒத்துக்கோடா,” என்று ராஜவேலு கெஞ்சவும்,
“அதுக்காக என் வாழ்க்கையை நான் விட்டு கொடுக்க முடியுமா? பிடிக்காத ஒருத்தரை நான் எப்படி கல்யாணம் செய்துக்க முடியும்?” என்று அவள் முடிவில் அவள் விடாப்படியாக இருந்தாள்.
“சக்திக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் மித்து, அதனால நீ அவனை கல்யாணம் செய்துக்கிட்டா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும், அதனால நாங்க சொல்றதை கேளு,” என்று ராஜலஷ்மி கூற,
“சக்திக்கு என்னை பிடிக்கும்னா எனக்கு அவங்களை பிடிக்க வேண்டாமா? நீங்க சொல்லிட்டீங்க என்பதற்காக எனக்கு பிடிக்காத கல்யாணத்தை நான் செய்துக்கணுமா?” என்று கேட்டாள் அவள்.
“உன் பாட்டி இஷ்டத்துக்கு உன்னை விட்டது தப்பா போச்சு, அதான் இப்படி எங்களுக்கு எதிரா நிக்கற, இங்கப்பாரு மித்து, ஊரை கூட்டி எல்லோருக்கும் நிச்சயத்துக்கு சொல்லியாச்சு, சொன்னமாதிரி நடக்கலன்னா நாங்க எல்லோர் முன்னாடியும் அசிங்கப்படணும், அதனால இந்த முடிவுக்கோ ஒத்துக்கோ,” என்று ராஜலஷ்மி அவளை கட்டாயப்படுத்தவும்,
“உங்களுக்கு ஊர் முன்னாடி அசிங்கப்படணுமே என்கிற கவலையே தவிர, உங்க ஒரே பொண்ணு வாழ்க்கையைப்பத்தி கவலை இல்லையில்ல, அதுக்காக நான் என் விருப்பத்தை விட்டு கொடுக்க முடியாது. உங்களால சொல்ல முடியலன்னா நானே சக்தியிடம் போய் பேசறேன். இந்த நிச்சய ஏற்பாட்டை நிறுத்த சொல்றேன்.” என்றாள்.
அவள் இவ்வளவு பிடிவாதமாக இருக்கவும், ராஜவேலுவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மகள் தங்களது விருப்பத்திற்கு சம்மதிப்பாள் என்று நம்பினார். ஆனால் இந்த ஏற்பாட்டிற்கு முன்பு அவளையும் கேட்டிருக்க வேண்டுமென்று இப்போது தான் புரிந்தது. மகளுக்காக நின்றால் நண்பனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாது. அவருக்கு அடுத்து என்ன செய்ய வேண்டுமென்றே புரியவில்லை.
“இவ என்ன பேசிட்டு இருக்கா பாருங்க,” என்று ராஜலஷ்மி சொல்லும்போது கூட அவர் பதில் பேசாமல் இருந்தார்.
பெற்றவர்களிடம் தன் முடிவை கூறினால் அவர்கள் முடிவிலிருந்து இறங்கி வருவார்கள் என்று அவள் நினைக்க, தந்தை அமைதியாக இருந்ததை பார்த்து பொறுத்து கொள்ள முடியாமல், ஒரு பேச்சுக்காக சக்திவாசனிடம் பேசுவதாக கூறியவள், இப்போது நிஜமாகவே அவனிடம் பேசினால் என்ன என்ற முடிவிற்கு வந்தாள்.
ஆனால் அவனிடம் பேசும் விதத்தில் பேசியிருக்கலாம், அவளை கேட்காமல் அனைவரும் எடுத்த முடிவும் அவளை புரிந்து கொள்ளாமல் பெற்றவர்கள் அவளுக்கு எதிராக நின்றது அனைத்தையும் அவனிடத்தில் காட்டி விட்டாள். இப்போதும் அந்தநாள் அவளுக்கு நன்றாகவே ஞாபகத்தில் இருந்தது.
பேசிய அவளுக்கே இருக்குமென்றால், அதை வலிக்க வலிக்க கேட்டுக் கொண்டிருந்த சக்திவாசனுக்கு மட்டும் அந்தநாள் ஞாபகம் இல்லாமல் இருக்குமா? அந்தநாளையும் அதற்கு முன்பான காலங்களையும் அவனும் தான் யோசித்தப்படி மொட்டை மாடியில் நின்றிருந்தான்.
அருகே அருகே வீடு. ராஜலஷ்மியையும் ராஜவேலுவையும் அத்தை மாமா என்று அழைத்து கிட்டத்தட்ட சொந்தம் போல் பழகினாலும் சிவமித்ராவுடன் அந்த அளவு நெருக்கம் இருந்தது கிடையாது. ஒருவேளை அப்படி நெருக்கம் இருந்திருந்தால் கூட அவன் மனதில் அவள் சலனத்தை ஏற்படுத்தியிருந்திருக்க மாட்டாளோ?
விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும்போது, “அம்மா இதை கொடுக்க சொன்னாங்க, அதை கேட்டாங்க” என்று இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவாள் தான், அப்போது இவனுமே அவளை பெரிதளவில் கண்டுக் கொண்டது கிடையாது. அப்படியே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று எத்தனையோ முறை நினைத்திருக்கிறான். ஆனால் அதுதான் நடக்கவில்லையே,
அவள் பள்ளிப்படிப்பை முடித்திருந்த காலம் அது, ஒருமுறை அவர்கள் ஊர் கோவில் திருவிழாவிற்காக வந்திருந்தவள், பாவாடை தாவணி அணிந்திருந்தாள். அந்த தோற்றத்தில் அவளைப் பார்த்தபோது தான் முதல் முதலில் அவன் மனதில் சலனம் உண்டானது. அன்றிலிருந்து தான் அவளை நன்றாக கவனிக்க ஆரம்பித்தான். அவளை யாருக்கும் தெரியாமல் ரகசியப் பார்வைப் பார்ப்பான். அவளை கொஞ்சம் கொஞ்சமாக நேசிக்க ஆரம்பித்திருந்தான். ஆனால் ஏனோ அவளிடம் தன் நேசத்தை வெளிப்படுத்த அவனுக்கு மிகவுமே தயக்கம். அவனுக்கு சிவமித்ராவை பிடிப்பது போல அவளுக்கும் தன்னை பிடிக்குமா என்று ஒரு பெரிய சந்தேகம் அவனுக்கு இருந்தது. அவன் தோற்றத்தை பற்றி அவனுக்கு தெரியாதா? ரோஜா வண்ணம் போல அவள் நிறம் எங்கே? தார் வண்ணம் போல இவன் நிறம் எங்கே? இரண்டிற்கும் பொருந்தி வருமா? கருப்பு நிறத்தில் இருக்கும் அவனை அவளுக்குப் பிடிக்குமா? என்ற தயக்கத்திலேயே தன் மனதில் உள்ளதை மனதிற்குள்ளேயே மறைத்து வைத்திருந்தான்.
தன் மனதில் உள்ளது யாருக்கும் தெரியாது என்று தான் நினைத்திருந்தான். ஆனால் அவன் மனதை அவன் தந்தை அறிந்து வைத்திருப்பார் என்பது அவனுக்கு தெரியவில்லை. சிவமித்ராவை அவன் அடிக்கடி ரகசியப் பார்வை பார்ப்பதும், அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவன் முகம் பிரகாசமாவதும் கண்ணப்பன் நன்கு அறிந்து வைத்திருந்தார்.
ஒரு நாள் சக்தி வீட்டில் இருக்கும் போது ராஜவேலு கண்ணப்பனை பார்க்க வந்திருந்தார். இருவரும் வேலை சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தனர். அந்த பேச்சு முடிந்ததும், “ நம்ம சிவாக்கு இன்னும் ரெண்டு மாசத்துல படிப்பு முடியுது இல்ல ராஜவேலு. அவளுக்கு இப்போ வயசு இருபத்தி ரெண்டு இருக்குமா?;அவளுக்கு எப்ப கல்யாணம் செய்யலாம்னு இருக்க ராஜவேலு.” என்று கண்ணப்பன் கேட்க, சக்தி அவர்கள் பேச்சில் கவனம் வைக்கலானான்.
“நானும் அதைப்பத்தி தான் இப்பல்லாம் யோசிச்சிட்டு இருக்கேன் கண்ணப்பா. சிவாக்கு படிப்பு முடியப்போகுது. அப்புறம் அரசாங்க வேலை பரிட்சைக்கு எழுதி அவளுக்கு வேலை கிடைக்க கொஞ்சம் காலம் ஆகலாம் அதுவரைக்கும் எதாவது ஒரு ஸ்கூல்ல வேலை பார்க்கட்டும், அப்படியே அவளுக்கு மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பிச்சா சீக்கிரம் கல்யாணம் முடிச்சிடலாம்னு பார்க்கிறேன்.” என்று ராஜவேலு பதில் கூறினார்.
“உனக்கு சம்மதம்னா நம்ம சிவாவை நீ சக்திக்கு கல்யாணம் செஞ்சு கொடுப்பியா?” ராஜவேலு என்று கண்ணப்பன் கேட்டதும், ராஜவேலு கண்ணப்பனை வியப்பாக பார்த்தவர்,
“என்ன கண்ணப்பா இப்படி கேட்குற? இதைவிட பெரிய சம்பந்தம் எனக்கு கிடைச்சிடுமா? சிவா உன் வீட்டு மருமகளா ஆனா அதை விட பெரிய கொடுப்பினை என்னடா இருக்கு, எங்களுக்கும் அதைவிட பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்கு சொல்லு? இது எனக்கு தோனல பாரேன். நீ கேட்டு நான் வேணாம்னு சொல்லுவேனா?” என்றார் ராஜவேலு.
“நான் கேட்டா நீ மறுப்பு சொல்ல மாட்டேன் எனக்கு தெரியும், இருந்தாலும் இது நாம மட்டும் முடிவு செய்யும் விஷயம் இல்லை. நம்ம வீட்டில் எல்லோரும் இதுக்கு ஒத்துக்கணும், முக்கியமா சிவாவும் சக்தியும் ஒத்துக்கணும், சக்திக்கு சிவா மேல விருப்பம் இருக்கிறதா தான் எனக்கு தோணுது,” என்றவர் மகனைப் பார்க்க, அவனும் அவர்கள் பேசுவதை கவனிக்காதது போல் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.
“அதேபோல சிவாவுக்கும் சக்தியை பிடிக்கணுமில்ல அவளிடமும் ராஜலஷ்மியிடமும் கலந்து பேசிட்டு உன் முடிவை சொல்லு,” என்று கண்ணப்பன் கூற,
“ராஜி இதை கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவா, சிவா என்ன சின்னப் பொண்ணு தானே, அப்பா, அம்மா நமக்கு நல்லது தான் யோசிப்பாங்கன்னு அவளுக்கு தெரியாதா? சக்தி தான் உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளைன்னு சொன்னா ஒத்துக்க போறா, இதுக்கு மேல என்னடா இருக்கு, சிவா படிப்பு முடிச்சிட்டு வந்ததும் நாம உடனே நிச்சயத்தை வச்சுப்போம், என் பொண்ணு தான் உன் வீட்டு மருமக, இதை நான் கொடுத்த வாக்கா நினைச்சுக்கோ,” என்று ராஜவேலு சொல்லிவிட்டு செல்லவும், கண்ணப்பனுக்கும் மகிழ்ச்சியாகி விட்டது.
“பெரியவங்க நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சரிதான் ப்பா,” என்றான்.
தேவிகா வேலையாக இருந்ததால் இவர்கள் பேசி கொண்டது தெரியவில்லை போலும், அப்போதுதான் அங்கு வந்தவர், “என்ன முடிவுங்க, எதுக்கு சம்மதம் சொல்றான் சக்தி,” என்று கணவரிடம் கேட்க,
“நம்ம சக்திக்கு 26 முடிஞ்சு 27 நடக்குது. அவனுக்கு கல்யாணம் செய்ய வேண்டாமா? அதைப்பத்தி தான் கேட்டுட்டு இருந்தேன்.” என்று கண்ணப்பன் கூறவும்,
“நானே இது விஷயமா பேசணும்னு நினைச்சுட்டு இருந்தேன் ங்க, நம்ம சிவமித்ராக்கும் படிப்பு முடியப் போகுதுன்னு ராஜி சொல்லிட்டு இருந்தா, அவளையே நம்ம சக்திக்கு கேட்டா என்ன?” என்று தேவிகா கேட்டார்.
அதற்கு கண்ணப்பன் சிரித்து கொண்டவர், “நானும் இதைப்பத்தி தான் ராஜவேலுவிடம் பேசிட்டு இருந்தேன். அவனுக்கு இதில் முழு சம்மதமாம், சிவா வந்ததும் நிச்சயத்தை வச்சுக்கலாம்னு சொல்லிட்டான்.” என்று விவரத்தை சொல்லவும்,
“நான் சொல்லலாம்னு நினைச்சா நீங்க செஞ்சே முடிச்சிட்டீங்க, எப்படிங்க?” என்று தேவிகா வியப்பானார்.
“இதில் நம்ம விருப்பத்தை விட நம்ம மகனோட விருப்பம் தான் ரொம்ப முக்கியம். சக்திக்கு சிவாவை ரொம்பப் பிடிக்கும், அது தெரிஞ்சதால தான் இந்த கல்யாண விஷயமா நான் ராஜவேலுவிடம் பேசினேன். என்ற கண்ணப்பனுக்கு, அதேபோல் சிலமித்ராவின் விருப்பமும் முக்கியம் என்பது அப்போது அவருக்கு புரிந்திருந்தாலும், அவர்கள் சார்பாக அவளின் விருப்பத்தை கேட்க வேண்டுமென்று தோன்றவில்லை.
ஆனால் சக்தி அதை யோசித்தான். தன் அன்னையும் தந்தையும் தனது விருப்பத்தை மனதில் வைத்து யோசித்து இந்த திருமணத்தை முடிவு செய்கிறார்கள். அதேபோல் சிவமித்ராவிற்கு இதில் விருப்பம் இருக்குமா? அவளிடம் தன் மனதில் உள்ள நேசத்தை பற்றி சொல்லலாமா? என்று யோசித்தவனுக்கு, ஒருவேளை தன்னைப் பிடிக்கவில்லை என்று அவள் கூறிவிட்டாள் என்ன செய்வது? என்று நினைத்து அஞ்சியவன், இது பெரியவர்களாக பேசி முடித்த திருமணம் ஆகவே அமையட்டும், அவளின் பெற்றோர்களே அவளிடம் இது குறித்துப் பேசட்டும் என்று அமைதியாகிவிட்டான். ஆனால் அதுதான் இங்கு தவறாகி போனது.