சிவமித்ரா ஊருக்கு வரும் விஷயம் தெரிந்து சக்திவாசன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். இன்னும் சிறிது நாளில் அவர்களின் நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது என்பதில் அவனுக்கு தலைகால் புரியவில்லை. இதில் சிவமித்ரா அவனை தனியாக பார்த்துப் பேச வேண்டும் என்று சொல்லவும், அவர்களின் எதிர்கால வாழ்க்கையைக் குறித்து இருக்கும் என்று தவறாக புரிந்து கொண்டவன், அவளிடம் தன் மனதில் இருக்கும் நேசத்தை சொல்லி விட வேண்டும் என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக சென்றான்.
அவனிடம் பேச வேண்டும் என்று அவர்கள் ஊரில் உள்ள கோவிலுக்கு தான் அவனை அழைத்து இருந்தாள். அவனும் அவள் வருவதற்கு முன்பே அங்கு சென்று அவளுக்காக காத்திருந்தான். பல பல கற்பனைகளும் கனவுகளோடும் அவள் வருகையை எதிர்பார்த்து இருக்க, அங்கு வந்த சிவமித்ராவோ, “ப்ளீஸ் இந்த நிச்சயத்தை நிறுத்திடுங்க, என்று எடுத்ததுமே கூறினாள்.
அவள் சொன்னதை ஏற்று கொள்ள முடியாமல் அதிர்ச்சியாக பார்த்திருந்தவன், “என்ன மித்ரா சொல்ற,” என்று கேட்க,
“சொன்னது உங்க காதுக்கு கேட்கலையா? இல்லை கேட்காத மாதிரி நடிக்கிறீங்களா? இந்த நிச்சயம் வேண்டாம்னு நான் சொன்னேன்.” என்றாள் கோபமாக,
“ஆனா ஏன்?” என்று அவள் புரியாமல் கேட்க,
“ஏன்னு கேட்டா நான் என்ன சொல்றது? வேணாம்னா நிறுத்திடுங்களேன்.” என்றாள் மீண்டும்,
“இது பெரியவங்க பேசி ஏற்பாடு செய்த நிச்சயம். அதை நிறுத்தணும்னு சொன்னா எப்படி மித்ரா?” என்று அவன் கேட்கவும்,
“பெரியவங்க பேசி முடிவு செய்தா போதுமா? நமக்கு விருப்பம் இருக்க வேண்டாமா?” என்று அவள் கேட்க,
“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் மித்ரா, நான் உன்னை நேசிக்கிறேன். கல்யாணம்னு செய்துக்கிட்டா உன்னை தான் செய்துக்கணும்னு இருக்கேன். ஆனால் என்னால அதை உன்னிடம் வெளிப்படையா சொல்ல முடியல மித்ரா. இப்போ பெரியவங்களா இப்படி ஒரு முடிவெடுத்திருக்கும் போது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நீ என் வாழ்க்கை துணையா வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.” என்று அவன் மனதில் இருந்ததை வெளிப்படுத்திவிட்டான்.
ஆனால் அவளோ, “உங்களுக்கு பிடிச்சா மட்டும் போதுமா? எனக்கு உங்களைப் பிடிக்க வேண்டாமா? என்னைக்காவது கண்ணாடியில் உங்க முகத்தைப் பார்த்து இருக்கீங்களா? உங்க கலருக்கும் என் கலர்க்கு பொருந்துமான்னு என்னைக்காவது யோசிச்சுப் பார்த்து இருக்கீங்களா? தொட்டா ஒட்டிக்கும் போல உங்க கருப்பு. அந்த கலரில் இருந்துக்கிட்டு உங்களை எனக்கு பிடிக்கும்னு நீங்க எப்படி நினைச்சீங்க? இந்த ஏற்பாட்டுக்கு முன்ன என்னிடம் சம்மதம் கேட்கணும்னு உங்களுக்கு தோணலையா?” என்று அவள் கேள்விகளை அடுக்கி கொண்டு போக, அவன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.
“எனக்குன்னு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு, எனக்கு இந்த கிராமத்தில் வாழ்க்கையை ஓட்ட சுத்தமா விருப்பமே இல்லை. என்னை கல்யாணம் செய்துக்கப் போறவர் அழகா இருக்கணும்? நல்லா படிச்சு நல்ல வேலையில் இருக்கணும், இந்த எதிர்பார்ப்பில் ஏதாவது ஒன்று உங்க கிட்ட இருக்கா? நீங்க சாதாரண ஒரு சக்கரை மில்லை தானே நடத்திட்டு இருக்கீங்க, உங்களை கட்டிக்கிட்டு இந்த கிராமத்துல குப்பை கொட்டணும்னு எனக்கு என்ன கட்டாயம் இருக்கு சொல்லுங்க,
என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ற மாதிரி எங்க வீட்ல நடந்துப்பாங்கன்னு நினைச்சா, அவங்க உங்க கூட நிச்சயம் ஏற்பாடு செய்திருக்காங்க, நான் மறுத்தா பெரியவங்க எடுத்த முடிவுக்கு கட்டுப்படுன்னு சொல்றாங்க, ஆனா இப்படி ஒரு முடிவை ஏத்துக்கிட்டு என்னால காலம் முழுக்க கஷ்டப்பட முடியாது. அதனால தயவு செஞ்சு புரிஞ்சுகிட்டு இந்த நிச்சய ஏற்பாட்டை நீங்களே நிறுத்திடுங்களேன். இல்லைன்னா ஊர் மொத்தமும் கூடி இருக்க சபைக்கு முன்னாடி எனக்கு உங்களைப் பிடிக்கலன்னு சொல்ல வேண்டியிருக்கும்,” என்ற அவளின் தீர்மானமான பேச்சைக் கேட்ட பிறகும், அவளிடம் மேற்கொண்டு பேசுவதிலோ, இல்லை அவளை இந்த நிச்சயத்திற்கு சம்மதிக்க வைப்பதிலோ எந்த பலனும் இல்லை என்பதை சக்திவாசன் நன்றாக உணர்ந்தவன்,
“இப்போ என்ன நிச்சயத்தை நிறுத்தணும் அதானே, நீ வீட்டுக்கு போ. இதை நான் பாத்துக்கிறேன், என்று அவளிடம் கூறிவிட்டு, அடுத்து அவள் சொல்லப் போகும் பதிலை கூட கேட்க விரும்பாமல் விறுவிறுவென்று அங்கிருந்து சென்றுவிட்டான்.
இப்போது அதை நினைத்து பார்த்தால் கூட அந்த வலி மறைய மாட்டேன் என்று அவனுக்குள் இருந்து கொண்டிருக்கிறது. நான் ஏன் கருப்பாக பிறந்தேன்? என்று அவன் ஒரு நாளும் வருத்தப்பட்டது இல்லை. ஆனால் அந்த நிறத்தை கொண்டு அவளுக்கு தன்னைப் பிடிக்கவில்லையே என்ற வலி தான் அவனுக்கு எப்போதும் இருக்கும், இப்போதும் அதே காரணம் அவளுக்கு இருக்கும் தானே, ஆனாலும் அவளை மணக்கும் சூழ்நிலை எனக்கும், என்னை மணக்கும் சூழ்நிலை அவளுக்கும் வந்துவிட்டதே என்று யோசித்தபடி அவன் மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்க,
இப்போது கேட்டாலும் அன்றைய அவளது எதிர்பார்ப்பு தவறு என்றோ அப்படி எதிர்பார்த்திருக்கக் கூடாது என்றோ சிவமித்ரா என்றுமே நினைத்ததில்லை. ஆனால் அதற்காக அவனை, அவன் நிறத்தைக் கொண்டு, அவன் வேலையை கொண்டு காயப்படுத்தி பேசி இருக்கக் கூடாது. அது அவனை எவ்வளவு வேதனை படுத்தியிருக்கும் என்பது மட்டும் இப்போது அவளுக்கு புரிகிறது. ஆனால் அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கியது அனைவரும் தானே, அன்றே அவளுக்கு விருப்பமா? என்று கேட்டிருந்தால், இப்படி ஒரு சங்கடத்தை தவிர்த்திருக்கலாம் தானே, அதைவிடுத்து இவளை மட்டும் குறை சொன்னால் என்ன நியாயம்?
ஆனால் நிச்சயத்தை நிறுத்துகிறேன் என்று சொல்லிவிட்டு போனவன், வீட்டில் என்ன பேசினானோ, சிறிது நேரத்திலேயே கண்ணப்பன் அவர்கள் வீட்டிற்கு வந்தவர், “இந்த நிச்சயம் நடக்காது.” என்றார்.
சிவமித்ரா பெரியவர்கள் சொன்னால் ஒத்து கொள்வாள் என்று ராஜவேலு அவரிடம் சொல்லிவிட்டு சென்றாலும், இந்த நிச்சய ஏற்பாட்டைப் பற்றி மகளிடம் பேசியிருப்பார் என்று நினைத்து தான் கண்ணப்பன் நிச்சயத்துக்கான தேதியை குறித்தார்.
ஆனால் எங்கோ வெளியில் போய்விட்டு வந்த மகன், “இந்த நிச்சய ஏற்பாட்டை நிறுத்துங்க ப்பா,” என்று கூற,
“என்ன சக்தி, நிச்சயத்தை நிறுத்தணுமா? என்ன இதெல்லாம் விளையாட்டா போச்சா உனக்கு?” என்று அவர் மகனிடம் கோபம் காட்ட, அவர்களின் பேச்சை கேட்டு தேவிகாவும் வந்தவர்,
“அதானே சக்தி, ஊரை கூட்டி நிச்சயத்துக்கு சொல்லியாச்சு, இப்போ நிச்சயத்தை நிறுத்தணும்னு சொல்லிட்டு இருக்க, நீ இப்படி பேசற ஆள் கிடையாதே, என்னாச்சு உனக்கு, மித்ராவை உனக்கு பிடிச்சதால தானே இந்த நிச்சயம் ஏற்பாடு செய்தோம்,” என்று குழப்பத்தோடு மகனை கேள்விக் கேட்டார்.
“எனக்கு பிடிச்சா போதுமா ம்மா, மித்ராக்கு பிடிக்க வேண்டாமா? அவளுக்கு என்னைப் பிடிக்கலையாம், இந்த நிச்சயத்தை நிறுத்தணுமாம்,” என்று அவன் சாதாரணமாக சொல்ல நினைத்தாலும், சொல்லும்போதே அவன் குரல் வேதனையோடு வெளிப்பட்டது.
“ஏன் அவளுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையாம்?” என்று தேவிகா குழப்பத்துடன் கேட்க,
“ஏன்னா அவளுக்கு என்னை பிடிக்கலையாம், அவள் எதிர்பார்த்த மாதிரி நான் அழகா இல்லையாம், நல்ல வேலையில் இல்லையாம், அவளுக்கு என்னை கட்டிக்கிட்டு இந்த கிராமத்தில் இருக்க வேண்டாமாம்.” என்று அவன் சொல்லிக் கொண்டே போக,
“உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு பெரிய ராஜாவா பார்த்து கல்யாணம் செய்துக்க போறாளாமா? எந்த மகாராஜா இவளுக்காக காத்திருக்கானாம்,” என்று தேவிகா கோபத்துடன் கூறவும்,
“தேவிகா, அந்த பொண்ணு பிடிக்கலன்னு வெளிப்படையா சொல்லிட்டதுக்கு பிறகு மேற்கொண்டு பேசிட்டு இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. நிச்சயத்தை நிறுத்திடுவோம்,” என்றார் கண்ணப்பன்.
“என்னங்க ஊரை கூட்டி எல்லோருக்கும் சொல்லியாச்சு, நீங்க என்னடான்னா நிச்சயத்தை நிறுத்த சொல்றீங்க,” என்று தேவிகா அதிர்ச்சியாக கேட்க,
“பின்ன என்ன செய்ய சொல்ற தேவிகா, வேண்டாம்னு சொல்ற பொண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைக்கிறது நல்லாவா இருக்கும், அப்படிப்பட்ட வாழ்க்கை அவங்களுக்கு சந்தோஷத்தை தான் கொடுக்குமா? சிவாவுக்கு பிடிக்காத பட்சத்தில் அந்த பொண்ணை கல்யாணம் செய்துக்கிட்டு நம்ம மகன் கஷ்டப்படணும்னு நீ நினைக்கறீயா? அதுக்கு நாம ஊர் முன்ன அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை. அதனால இந்த நிச்சயத்தை நிறுத்துவது தான் நல்லது.” என்று கண்ணப்பன் தீர்மானமாக கூறினார்
அதே வேகத்தில் ராஜவேலு வீட்டிற்கும் சென்றவர் “சிவாக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்றது ரொம்ப தப்பு. நாம முன்னமே சிவாவிடம் அவ விருப்பத்தைக் கேட்டு இருக்கணும்,” என்று அவர்களை குறிப்பிட்டு சொல்லாமல், பொதுவாகவே நடந்த தவறை பேசியவர்,
“அதனால இந்த நிச்சயத்தை நிறுத்திடலாம்,” என்று அவர்களிடமும் கூறினார்.
அதற்கு ராஜவேலு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க, நண்பனின் நிலை புரிந்த கண்ணப்பனோ, “நாம ஆசைப்பட்டது நடக்காம போச்சு, அதுக்காக நமக்குள்ள எதுவுமே மாறப் போறதில்லை ராஜவேலு, நாம எப்போதும் போலத்தான் இருப்போம்,” என்று நண்பனுக்கு சமாதான வார்த்தைகள் கூற,
“என்ன ண்ணா, மித்ரா சின்ன பொண்ணு, உலக நடப்பு புரியாம பேசிட்டு இருக்கா, அதை நீங்களும் பெருசா எடுத்துக்கிட்டு நிச்சயத்தை நிறுத்தலாம்னு சொல்றீங்க, நாம சக்தியை தான் கல்யாணம் செய்துக்கணும்னு சொன்னா நம்மளை மீறி அவ என்ன செய்திடப் போறா, கொஞ்சநாள் வீம்பு காட்டிட்டு இருப்பா, அப்புறம் சரியாகிடுவா, அதுக்கு இப்படி பேசிட்டு இருக்கீங்க,” என்று ராஜலட்சுமி கூறவும்,
“இல்ல ராஜிம்மா, சிவாவுக்கு பிடிக்கலன்னா அவளை கட்டாயப்படுத்த கூடாது. அப்படி கட்டாயப்படுத்தி அவங்களுக்கு கல்யாணம் செய்து வச்சா, நாளைக்கு அவங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்காது. சிவமித்ராவுக்கு அவளுக்கு பிடிச்ச பையனா பார்த்து கட்டி வைப்பது தான் நல்லது.” என்று அவர்களிடமும் உறுதியாக கூறினார்.
அப்படிப்பட்ட தந்தை இப்போது மட்டும் ஏன் இப்படி ஒரு கட்டாய திருமணத்தை செய்து வைத்தார்? அந்த கேள்விக்கான விடை தான் சக்திவாசனுக்கு தெரியவே இல்லை.
அடுத்து உடனே சிவமித்ராவிற்கு வேறு வரன் தேட ஆரம்பித்தார்கள். அப்படி தேடி அவளுக்குப் பார்த்த வரன் தான் அசோக். அவள் எதிர்பார்த்தது போல் அழகாக, நன்கு படித்த, ஐடி கம்பெனியில் வேலை செய்யும் அசோக் உடன் அவளுக்கு திருமணம் முடிவு செய்து நிச்சயமும் நடந்தது. அடுத்த இரண்டு மாதத்தில் திருமணமும் நடக்கவிருந்த நேரத்தில், “நாம சிவாவுக்கு என்ன சீர் செய்றது தேவிகா,” என்று கண்ணப்பன் கேட்கவும்,
“இது ஒன்னு தான் இப்போ குறைச்சல், எப்படிங்க எதுவும் நடக்காத மாதிரி உங்களால இருக்க முடியுது?” என்று தேவிகா கேட்க,
அவருக்கும் மட்டும் மகனை குறித்து வருத்தம் இல்லையா? “ராஜவேலுவுக்காக பார்க்கணும் தேவிகா, நாம சுத்தமா ஒதுங்கிட்டோம்னு தெரிஞ்சா அவன் மனசு கஷ்டப்படும்,” என்றார் மனைவியிடம்,
“ஏதோ செய்துக்கோங்க போங்க,” என்று தேவிகா சொல்லிவிட, சிவமித்ரா திருமணத்திற்கு 5 சவரனில் நகை வாங்கி பட்டுடவையோடு சீர் செய்தார் அவர், தேவிகாவும் கடமைக்காக இதில் கலந்து கொள்ள, இதெல்லாம் தெரிந்தும் சக்திவாசன் எதிலும் தலையிடாமல் சுற்றிக் கொண்டிருந்தான்.
ஆனால் அவளது திருமண தேதி நெருங்கவும், அவள் இன்னொருவனுக்கு சொந்தமாக போகிறாள் என்ற உண்மையை உணரும்போது அவனுக்கு எப்படி இருந்தது தெரியுமா? அனைத்தையும் விட்டுவிட்டு எங்காவது போய்விடலாம் என்று தோன்றியது. ஆனால் அவன் பெற்றோருக்கு அவன் ஒரே மகன். அவனது வேதனையில் அவர்களை ஏன் வருத்தப்பட வைக்க வேண்டும் என்று அனைத்து கஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டான். அது மட்டும் இல்லாமல் அவன் நிறத்தை மாற்ற முடியாது தான், ஆனால் அவன் தரத்தை உயர்த்த முடியும் தானே, சாதாரண சர்க்கரை ஆலை என்று தானே கூறினாள். அதனால் தனது தொழிலில் எப்படி முன்னேற்றம் காணலாம் என்பதில் கவனத்தை வைக்க முடிவு செய்தான்.
சிவமித்ராவிற்கு அசோக் உடன் திருமணமாகி மிகவும் மகிழ்ச்சியாக அவள் புகுந்த வீட்டிற்கு சென்றாள். அதற்குப் பிறகு அவளை கண்ணால் கூட பார்க்கக் கூடாது என்று தான் அவன் நினைத்தான். ஆனால் அவனையும் மீறி ஓரீரு சமயம் அவளை கணவனோடு ஜோடியாக பார்க்க நேர்ந்தது. அப்போது அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவளை யாரோவாக நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சி செய்வான். அவள் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்துவிட்டது. அவள் கணவனோடு மகிழ்ச்சியாக வாழட்டும் என்று மனதார நினைத்து கொண்டான். கடைசியாக அவளை அவன் பார்த்தது ராஜவேலுவின் மரணத்தின் போது தான்,
நண்பனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படவே ராஜவேலு மனதளவில் குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருந்தவர், அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அவர் உடல் நிலை மோசமாகி திடீரென நெஞ்சுவலி என்று வீட்டில் நெஞ்சைப் பிடித்து விழ, அப்போது சக்திவாசன் தான் அவரை மருத்துவனைக்கு அழைத்து சென்றான். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அந்த வீட்டில் அவரோடு அன்னியோன்யமாக குடும்பம் நடத்திய ராஜலஷ்மிக்கு கணவர் இல்லாத வீடு நரகம் போல் தோன்றவே அவரால் அங்கு இருக்க முடியவில்லை. அவரது நிலை உணர்ந்த சிவமித்ரா அவரை தன்னுடன் சென்னைக்கே அழைத்து சென்றாள்.
அதுதான் கடைசியாக அவள் அந்த ஊருக்கு வந்தது. அதன்பின் இப்போது தான் இங்கு வந்திருக்கிறாள். அதுவும் கணவனை இழந்த நிலையில், அவள் எதிர்பார்த்த வாழ்க்கை சிறிது காலமாகவே இருந்தாலும், அவள் அதை மகிழ்ச்சியாக தானே வாழ்ந்திருப்பாள். அப்படி இருக்கும்போது அவள் மனதில் அந்த நினைவுகள் அப்படியே தானே இருக்கும், அதை எல்லாம் மறந்து இவனோடு எப்படி அவளால் இணக்கமாக வாழ முடியும்? என்று சக்திவாசன் யோசிக்க,
அவன் நினைத்தது போல் சிவமித்ரா அந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தாளா? என்று கேட்டால் அவளால் அதற்கு பதில் சொல்ல முடியாது. திருமணம் ஆன புதிதில் அவளுக்கு எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்ததில் மகிழ்ச்சியில் சுற்றி திரிந்தாள். அவள் ஆசைப்பட்ட நகரத்து வாழ்க்கை. அதிலும் மாமியார் நாத்தனார் எல்லாரும் இருந்தும் இவர்கள் மட்டும் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தார்கள். அங்கேயே அருகில் இருந்த ஒரு பள்ளியில் வேலைக்கும் சேர்ந்து கொண்டாள். சில மாதங்கள் வரை அவள் விருப்பத்திற்கு வாழ்ந்தாள் என்று சொல்லலாம்,
ஆரம்ப காலங்களில் அசோக் நன்றாக தான் இருந்தான். அதன்பின்பு பார்ட்டிக்கு செல்வதாக கூறி வீட்டிற்கு வரும்போது மது அருந்திவிட்டு வருவது. வீட்டிலேயே புகைபிடிப்பது என்று இருந்தான். அவளது தந்தைக்கு இந்த பழக்கமெல்லாம் இருந்ததே கிடையாது. அசோக்குடன் அலைபேசியில் பேசும்போது கூட அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்றுதான் கூறினான். திருமணத்திற்கு முன்பும் அவன் வேலை செய்யும் அலுவலகத்தில் அவனைப்பற்றி விசாரித்து அவன் நல்ல மாதிரி என்று தெரியவே தான் அவனுக்கு இவளை மணம் முடித்து வைத்தார்கள். ஆனால் இப்போது அவனிடம் இப்படியான கெட்ட பழக்கங்களை கண்டுக் கேட்டால்,
“சிட்டி லைஃப்னா இப்படித்தான் மித்து, பார்ட்டிஸ்ல போய் எனக்கு குடிக்கிற பழக்கம் இல்லன்னு சொன்னா தான் ஒருமாதிரி பார்ப்பாங்க, நான் என்ன தினமுமா குடிக்கிறேன். எப்போயாச்சும் தானே,” என்பான்.
புகைப்பிடிப்பதையாவது விட்டுவிட கூறினால், “என் வேலையில் எவ்வளவு ஸ்ட்ரெஸ் தெரியுமா? அதை போக்க கத்துக்கிட்டது தான், கொஞ்சம் கொஞ்சமா விட்டுட்றேன்.” என்றான்.
இந்த நேரத்தில் தான் அவளது தந்தை இறந்து விட, அன்னையை இங்கு தன்னுடன் அழைத்து வந்தவள், வீட்டில் பெரியவர் ஒருவர் இருந்தால் மாறுவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் பழக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. ராஜலஷ்மிக்கு தெரிந்து, “இப்படியே விட்றாத மித்து, கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தை மாத்து,” என்றார்.
அவளும் எப்படியாவது கணவனை திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் தான் இருந்தாள். ஆனால் கொரானா இரண்டாம் அலை அவள் வாழ்க்கையில் அதற்கான சந்தர்ப்பத்தை அவளுக்கு கொடுக்கவேயில்லை. அவனிடம் கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் அவளிடம் அன்பாக தானே நடந்து கொண்டான். அதனால் அவனது இழப்பை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் அழுது கரைந்தாள்.
அவனது சிகிச்சைக்காக கையிலிருந்த சேமிப்பு முழுவதும் கரைந்து விட, அவள் நகைகள் சிலதை சிகிச்சைக்காக விற்க வேண்டியதாக போனது. சொந்த வீடாவது இருக்கிறதே என்று அவள் நினைக்க, அசோக் மரணத்திற்கு பிறகு தான், அந்த வீடு அவன் நண்பனுடையது என்றும், அசோக் வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவன் உயர் பதவியில் இருப்பதாக கூறியிருந்தவன், அப்படி இல்லை என்பதும் அவளுக்கு தெரிய வந்தது. திருமணத்திற்கு முன்பே இதெல்லாம் கூறி ஏமாற்றியிருக்க, திருமணத்திற்கு பின்பும் இந்த பொய்யை தொடர்ந்திருக்கிறான். அப்படியிருக்க அவன் காட்டிய அன்பும் காதலும் மட்டும் உண்மை என்று எப்படி நினைக்க முடியும்? அசோக்கை நினைத்து அவள் மனம் மரத்து போனது தான் உண்மை.
அடுத்து அப்படியே தேங்கி நிற்காமல் அவளின் வாழ்வாதாரத்தை பார்க்க வேண்டிய சூழல். ஏமாற்றுக்காரர்கள் என்று தெரிந்து மீண்டும் மாமியார் வீட்டில் அடைக்கலம் தேட அவளுக்கு விருப்பமில்லை. “ஊரில் நமக்கு சொந்த வீடு இருக்கு, கொஞ்சம் நிலம் இருக்கு, எனக்கு அப்பாவோட பென்ஷன் வருது, உனக்கு ஏதாவது ஸ்கூலில் வேலை கிடைச்சாப் போதும், வர வருமானத்தை வச்சு நம்ம காலத்தை ஓட்டிடலாம், நாம ஊருக்கே போயிடலாம் மித்து,” என்று ராஜலஷ்மி எவ்வளவோ சொல்லி பார்த்தார்.
அப்போதெல்லாம் அவளுக்கு சக்திவாசன் முகம் தான் கண்முன் வந்து போகும், கணவனை இழந்த நிலையில் அவன் முன் சென்று நிற்பது கூட அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. வாழ்வில் தோற்று போய் நிற்கிறோமே என்பது தான் அவளுக்கு பெரிதாக தெரிந்தது. அதனால் இங்கேயே இருந்து கொள்ளலாம் என்று நினைத்தாள்.
திருமணம் ஆகி வந்த சில மாதங்களிலேயே அவளின் முதுநிலை படிப்பை தொலைதூர கல்வி மூலம் படித்துக் கொண்டிருந்தாள். வேலைக்கு சென்றப்படியே அதை படித்து முடித்தவள், அவ்வப்போது அரசாங்க வேலைக்காக தேர்வுகளையும் எழுதிக் கொண்டிருக்க, அவளுக்கு வேலையும் கிடைத்தது. ஆனால் அவள் ஊரிலேயே கிடைத்து தான் அவளுக்கு அதிர்ச்சியே,
ஆனால் இப்போதைய அனுபவம் அவளுக்கு நிறைய பக்குவங்களை தந்திருக்க, யார் நம்மை பற்றி என்ன நினைத்தால் என்ன? நாம் உழைத்தால் தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற புரிதலில் ஊருக்கு சென்றாள்.
அதுவுமில்லாமல் சக்திவாசனுக்கு இந்நேரம் திருமணம் முடிந்து அவனுக்கு குடும்பம் அமைந்திருக்கும் என்று நினைத்திருந்தாள். ஆனால் அவள் இங்கு வந்த நேரம் அவனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்ததை பார்த்து, இதுவரை அவனுக்கு திருமணம் ஆகவில்லையா? என்று ஒருபக்கம் அதிர்ச்சியென்றால், இன்னொருபக்கம் அவன் திருமண ஏற்பாட்டை குறித்து நிம்மதியும் ஏற்பட்டது. ஆனால் இங்கு வந்த சில நாட்களில் என்னென்னவோ நடந்து இப்போது அவனையே அவளின் கணவனாக மாற்றியிருக்கிறது விதி.