கண்ணப்பனை பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும்போது, சிவமித்ரா திடீரென “சாரி,” என்று கூற, சக்திவாசனோ எதற்கு என்று புரியாமல் பார்த்தவன்,
“எதுக்கு சாரி?” என்று கேட்டான்.
“நேத்து நைட் நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. நீங்க சொன்னதுக்குப்பிறகுதான் முதல் இரவு என்பதுக்கான அர்த்தம் புரிஞ்சுது. அதான் சாரி.” என்று அவள் விளக்கமாக கூற,
“ஏதாவது புரியாம பேசிட்டு, அப்புறம் சாரி கேட்கிறதே உனக்கு வேலையாப் போச்சு,” என்ற அவனது பதிலைக் கேட்டு,
“நானாச்சும் சாரி சொல்றேன். ஆனா நீங்க அதுகூட சொல்றது கிடையாது.” என்று அவள் வாய்க்குள்ளேயே முனகவும்,
“என்ன முனகுற?” என்று கேட்டான். அதற்கு அவள் ஒன்றுமில்லை என்று தலையசைக்கவும்,
“இந்த கல்யாணத்தை நம்ம ரெண்டுப் பேராலயும் உடனே ஏத்துக்க முடியாது தான், அதுக்காக நாம இப்படி ஏட்டிக்குப் போட்டியா பேசிட்டு இருக்கணும்னு கிடையாது, நாம பழைய விஷயங்களை மறந்துட்டு சுமூகமா போறது தான் நமக்கு நல்லது. நாம சந்தோஷமா வாழணும்னு அப்பா, அம்மா அத்தை எல்லாம் நினைக்கிறாங்க, அது உடனே முடியாதுன்னாலும், நாம அதுக்கேத்தது போல நடந்தா அவங்களும் சந்தோஷப்படுவாங்க,” என்று அவன் கூற,
அவனோடு ஏட்டிக்கு போட்டி பேச வேண்டுமென்ற எண்ணம் அவளுக்குமே இல்லை. ஆனால் முன்பு அவனை மோசமாக பேசிவிட்டாள். இப்போது அவள் இருக்கும் நிலையில் அதை சொல்லிக் காட்டுவானோ என்ற நினைப்பு தான் இப்படியெல்லாம் அவளை பேச வைக்கிறது. இப்போது அவன் சொல்வது அவளுக்கு சரியென்றுபடவும்,
“இனி அப்படி பேசாம இருக்க முயற்சி செய்றேன்.” என்றவள்,
“ஃப்ரண்ட்ஸ்,” என்று கை நீட்டினாள்.
அவளது இந்த உடனடி மாற்றத்தை எதிர்பார்க்காது அவன் வியப்பானாலும், ‘இப்போத்தான் ஃப்ரண்ட்ஸே வா, அதுக்குப்பிறகு அவளுக்கு என்னை பிடிச்சு எப்போ என்னை ஹஸ்பண்டா பார்க்க ஆரம்பிச்சு, எங்க வாழ்க்கையை எப்போ ஆரம்பிக்கறது? சக்தி உன்னோட பாடு திண்டாட்டம் தான் டா,’ என்று மனதில் சொல்லிக் கொண்டாலும்,
தன்னை தோழனாகவாவது ஏற்றுக் கொண்டாலே என்பதில் மகிழ்ந்து, அவளுக்கு கைக்குலுக்கியபடி, “ஃப்ரெண்ட்ஸ்” என்றான்.
அடுத்து அவர்கள் பயணம் மௌனமாகவே கழிய கோவிலும் வந்தது. பூஜைக்கு தேவையான அர்ச்சனை பொருட்கள் வாங்கும் போது “தலைக்கு பூ வாங்கிக்கோங்கம்மா” என்று விற்பனை செய்யும் பெண்மணி கூற, சிவமித்ராவோ வேண்டாம் என்று மறுத்தாள்.
அதற்கு சக்தியோ, “ஏன் பூ வேண்டாம்னு சொல்ற, என்று கேட்டவன்,
“முன்ன நீ தலை நிறைய பூ வச்சு நான் பார்த்து இருக்கேன். அப்போ நீ ரொம்ப அழகா இருப்ப, ஆனா கொஞ்ச நாளா இந்த சமூக அமைப்பு காரணமா உனக்கு பூ வைக்க முடியாது சூழ்நிலை இருந்தது. இப்போதான் நீ பூ வச்சுக்கலாமே அப்புறம் ஏன் வேண்டாம்னு சொல்ற,” என்றான்.
எப்போதும்போல சிறிதுகால வழக்கத்தில் தான் பூ வேண்டாமென்று மறுத்தாள். இப்போது அதற்கான தகுதி தனக்கு இருக்கிறது என்பது அவன் சொல்லி உணர்ந்தாலும், “எப்போதும் போல வேண்டாம்னு சொல்லிட்டேன் தான், ஆனா ஸ்கூலுக்கும் அதிகமா பூ வச்சுட்டு போகவும் முடியாது. அது நல்லாவும் இருக்காது.” என்று அவள் பதில் கூற,
“புதுசா கல்யாணம் ஆகியிருப்பதால கொஞ்சமா வச்சுட்டு போனா தப்பு கிடையாது.” என்றவன், பூவை வாங்கி அவள் கையில் கொடுக்க, அவளும் அதை வாங்கி தலையில் சூடிக்கொண்டாள்.
அடுத்து கோவிலுக்குள் சென்றவர்கள் முதலில் ஈஸ்வரனை வழிபட்டுவிட்டு பின் அம்மன் சன்னதிக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு அர்ச்சனை செய்து முடித்ததும், குருக்கள் கொடுத்த குங்கும பிரசாதத்தையும் சிவமித்ரா வழக்கம்போல் வாங்கிக் கொள்ளவில்லை.
அதை கவனித்த சக்தியோ, “அம்மா நாம கிளம்பும்போதே உன்னை ஒருமாதிரி பார்த்தாங்க, குங்குமம் வைக்காததுக்கா இருக்கும்னு இப்போத்தான் எனக்கு தோனுது. இதையும் வழக்கமான விஷயமா நீ மறந்துட்ட போல, ஆனா அவங்களால அப்படி நினைக்க முடியாது. இந்த கல்யாணத்தை நீ மனசார ஏத்துக்கலன்னு நினைப்பாங்க, அதுக்காகவாவது நீ குங்குமம் வச்சிக்கணும், என்னைக்கேட்டா சின்ன வயசுல இருந்து வைக்கும் பூ, குங்குமம், கண்ணாடி வளையல் இதையெல்லாம் கணவனை இழந்தா இழக்கணுமா என்ன? படிச்ச பொண்ணான நீயும் அதை ஃபாலோவ் செய்தது எனக்குப் பிடிக்கல, ஆனா இந்த சமுதாயத்தில் சிலரோட பேச்சுக்கு பயந்து இப்படி இருக்க வேண்டியதா இருக்கு, சிலருக்கு அவங்க மனசு சார்ந்த விஷயமா கூட இது இருக்கலாம்,
ஆனா நீ குங்குமம் வச்சா பெரியவங்களுக்கு சந்தோஷம், பூவும் குங்குமம் இல்லாம உன்னை பார்க்க எனக்குமே இத்தனைநாள் கஷ்டமாகவும் இருந்துச்சு, இதுக்கும் இனி தடை கிடையாது தானே, அதனால இனி வச்சுக்கோ,” என்று அவனே குருக்களிடம் வாங்கிய குங்குமத்தை அவள் நெற்றியிலும் நெற்றி வகிட்டிலும் இட்டு விடவும், அவளுக்கு உண்மையாகவே அப்போதும் எதுவும் பேச தோன்றாமல் அவனது செய்கையை அனுமதித்தாள்.
பின் கோவிலை சுற்றி வந்தவர்கள் ஒரு இடம் பார்த்து அமர்ந்தபோது, “ஹே சக்தி,” என்று ஒரு குரல் கேட்க, இருவரும் குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்க, இவர்களை போல் ஒரு இளம் தம்பதியினர் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர். முதலில் சக்திக்கு தன்னை அழைத்த அந்த நபரை அடையாளம் தெரியாதது போல் பார்த்தவன், பின் அவர்கள் அருகே வரவும் தான் அடையாளம் கண்டு கொண்டான்.
அந்த தம்பதியர் அருகில் வந்ததும், “என்ன சக்தி, எப்படி இருக்க? என்னை அடையாளம் தெரியுதா?” என்று கேட்டவன், இவனுடன் கல்லூரியில் படித்த ரமேஷ்.
“ம்ம் தூரமா பார்த்தப்ப தெரியல, ஆனா இப்போ அடையாளம் தெரியுது ரமேஷ். ஆளே அடையாளம் தெரியாம மாறிட்ட அதான்,” என்றான் சக்தி.
பின் ரமேஷ் அவன் மனைவியிடம், “இது சக்தி, என்னோட காலேஜ்ல ஒன்னா படிச்சவன்,” என்று அறிமுகப்படுத்தியவன், அவனது மனைவியை சக்திக்கு அறிமுகப்படுத்த, சக்திவாசனும் சிவமித்ராவிற்கு ரமேஷை அறிமுகம் செய்தான்.
அப்போது தான் சிவமித்ராவின் கழுத்தில் புது தாலி இருப்பதை கவனித்த ரமேஷ், “உனக்கு நேத்து தான் கல்யாணம் முடிஞ்சுது இல்ல சக்தி, நீ வாட்ஸ் அப் காலேஜ் க்ரூப்ல இன்விடேஷன் ஷேர் செய்திருந்தல்ல, சாரி சக்தி, இன்விடேஷன் பார்த்தப்போ நான் துபாய்ல இருந்தேன். இப்போ ஊருக்கு வந்து ரெண்டு நாள் தான் ஆச்சு, ஆனா கல்யாண தேதி ஞாபகமில்ல, அதான் கல்யாணத்திற்கு வரல சாரி.” என்று ரமேஷ் திருமணத்திற்கு வர முடியாததற்கு விளக்கம் கொடுக்கவும்,
சக்தி அனுப்பியிருந்தது அவனுக்கு முதலில் ஏற்பாடு செய்த திருமணத்திற்கான அழைப்பிதழ். அவனே ஒரு கட்டாயத்தின் பேரில் அந்த திருமணத்திற்கு சம்மதித்திருக்க, யாரையும் குறிப்பிட்டு அழைக்க விரும்பாமல், தன் திருமண அழைப்பிதழை கல்லூரி நண்பர்களுக்கென்று இருந்த வாட்ஸ் அப் குழுவில் பொதுவாக அனுப்பியிருந்தான். அதிலும் ரமேஷ் உடன் படித்தானே தவிர அவ்வளவு நெருக்கம் கிடையாது. அதனால் ரமேஷ் திருமணத்திற்கு வராததற்கு சக்தி வருந்தவுமில்லை. இப்போதும் அவன் திருமணத்தில் நடந்த திருப்பத்தை சொல்ல விருப்பமும் இல்லை. அதனால், “பரவாயில்லை ரமேஷ்,” என்பதோடு முடித்துக் கொண்டான்.
அடுத்து சிறிதுநேரம் பேசிவிட்டு இவர்களிடம் அந்த தம்பதியர் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பியவர்கள், ஒரு பத்தடி தூரம் தான் சென்றிருப்பர். “அந்த பொண்ணு அழகா இருக்குல்ல, கருப்பா இருக்க இவரை எப்படி கல்யாணம் செய்துக்கிட்டாளோ,” என்று ரமேஷிடம் அவனது மனைவி கேட்டுக் கொண்டு சென்றது சக்திவாசன் காதிலும் நன்றாக விழுந்தது.
உடனே அவன் சிவமித்ராவை பார்க்க, அவள் எங்கே அவர்கள் பேசியதை கவனித்தாள். அவள்தான் ரமேஷ் தன்னுடன் கல்லூரியில் படித்தவன் என்று சக்தி அறிமுகப்படுத்தியதிலேயே நின்றிருந்தாளே, அதனால் அவர்கள் சென்றதும், “நீங்க காலேஜ்லாம் போய் படிச்சீங்களா?” என்று அவனிடம் கேட்டாள்.
அந்த கேள்வியே அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது என்று சொல்லலாம், ‘இவளுக்கு என்னைப்பற்றி எதுவுமே தெரியாதா?’ என்று தான் அந்தநேரம் மனதிற்குள் நினைத்தான். அந்த கேள்வி அவனுக்கு அப்போது கோபத்தைக் கூட வரவழைத்தது. ஆனால் காரில் வரும்போது இருவரும் சுமூகமாக பழக வேண்டுமென்று அவன் தான் கூறியிருந்தான். அதுவுமில்லாமல் அவளை அவன் நேசித்தான். அதனால் அவளைப்பற்றி ஒன்றுவிடாமல் அறிந்து வைத்திருந்தான். ஆனால் அவளுக்கு தான் அப்படி ஒன்றும் இருந்ததில்லையே அதனால் அவள் தன்னைப்பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்பதும் அதிக்கப்படி தானே, அதுவுமில்லாமல் சிறிது நேரத்திற்கு முன்பு தான் ஃப்ரண்ட்ஸ் என்று கைக்குலுக்கியிருந்தாள். அவனும் பூ வாங்கி தந்தது. குங்குமம் வைத்தது என்று உரிமையாக பழக ஆரம்பித்திருந்தான். அதனால் அவளை கோபமாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்று நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொண்டான்.
அவள் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டதும் அவன் முகம் போனப் போக்கைப் பார்த்து, தான் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்க கூடாதோ? என்று சிவமித்ராவிற்கு தோன்றியது. இதற்கு தன்னை என்ன சொல்வானோ? என்று அவள் அவனை பரிதாபமாக பார்க்க,
அவன் பதிலைக் கேட்டு வியப்படைந்தவள், “எம்.பி.ஏ முடிச்சிருக்கீங்களா? நான் நீங்க ஸ்கூல் தான் முடிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன். எம்.பி.ஏ. படிச்சிட்டு ஏன் சர்க்கரை மில்லை நடத்திக்கிட்டு இருந்தீங்க? ஏதாவது நல்ல வேலைக்குப் போயிருந்திருக்கலாமே?” என்று அவள் கேட்க,
“ஏன் எங்களுக்கு சொந்தமான சர்க்கரை மில் இருக்கப்போ, ஏன் நான் வெளியே சம்பளத்துக்கு வேலைக்குப் போகணும், வெளியே போனா நான் இந்த வயசுக்கு எவ்வளவு சம்பாதிப்பேனோ அதைவிட நிறையவே நான் இப்போ சம்பாதிக்கிறேன். என் வியாபாரத்தை எப்படி உயர்த்தலாம் என்று யோசிப்பதை என் படிப்பு எனக்கு கொடுத்ததுன்னு சொல்லலாம்,
அதுவுமில்லாம சின்ன வயசில் தாத்தாவோட அடிக்கடி சர்க்கரை மில்லுக்கு போவேன். அப்பாக்கு டீச்சரா ஆகணும்னு அவர் கவனம் அங்கப் போயிடுச்சு, அதனால எனக்குப்பிறகு இந்த சர்க்கரை மில்லை யாரு பார்த்துக்கப் போறான்னு அடிக்கடி தாத்தா கவலைப்படுவாரு, அப்போல்லாம் தாத்தாக்குப் பிறகு நான் இந்த மில்லை பார்த்துக்கணும்னு தோனும், தாத்தாவிடமும் சொல்லியிருக்கேன். அதனால தான் அந்த சர்க்கரை மில்லை நானே எடுத்து நடத்துறேன்.” என்றவன்,
“ஆனா உனக்கும் ஒருவிதத்தில் நன்றி சொல்லணும்,” என்று சொல்லவும், சிவமித்ரா அவனை கேள்வியாகப் பார்த்தாள்.
“படிப்பு முடிஞ்சதும் அந்த சமயம் எனக்கு சர்க்கரை மில்லை எடுத்து நடத்தணும் என்பது மட்டும் தான் ஐடியாவா இருந்தது. ஆனா நீ சாதாரண சர்க்கரை மில்லுன்னு சொல்லும்போது தான், இன்னும் நாம ஏதாவது செய்யணும், செய்யணும்னு மனசுல தோனிட்டே இருந்தது. அப்படித்தான் இந்த உர தொழிற்சாலை, சினிமா தியேட்டர், கல்யாண மண்டபம் எல்லாம் அடுத்தடுத்து வரிசையா நடத்த ஆரம்பிச்சேன். என் தரத்தை உயர்த்திக்கிறதால நீ எனக்கு திரும்ப கிடைக்க மாட்டேன்னு தெரியும்,
ஆனாலும் நீ சாதாரண சர்க்கரை மில்லுன்னு சொல்லும்போது எங்களுக்கு அப்போ வசதி இல்லாம இல்லை. ஆனா அதெல்லாம் அப்பா, தாத்தா சம்பாதிச்சு சேத்து வச்ச சொத்து. எனக்குன்னு ஏதாவது இருக்கணும், என் தரத்தை உயர்த்தணும்னு ஒரு எண்ணத்தை தோன்ற வச்சது உன்னோட பேச்சு தான்,” என்று அவன் சொல்லி முடிக்கும்போது, அவளுக்கு அந்த பேச்சு குற்ற உணர்வை கொடுக்கவும், அதற்கு பதில் பேச முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.