அதைக் கண்டவனோ, “உன்னை குத்தம் சொல்லவோ, காயப்படுத்தவோ இதை சொல்லல, ஏதோ சொல்லணும்னு தோனுச்சு சொன்னேன். அது உன்னை கஷ்டப்படுத்தியிருந்தா சாரி. அதுக்காக நீ வருத்தப்படணும்னு அவசியமில்ல, எனக்கு உன்னைப் பிடிச்சது போல, உனக்கு என்னைப் பிடிக்கணும்னு கட்டாயம் இல்லையே, என் மனசுல இருப்பதை உன்னிடம் சொல்லியிருக்கணும், இல்லையா அந்த கல்யாண ஏற்பாட்டை குறித்து உன்னிடம் சம்மதமான்னு கேட்டாவது இருக்கணும், எங்கப் பக்கமும் தப்பு இருக்கு தானே,
அதுவுமில்லாம ஒருவிதத்தில் உன் எதிர்பார்ப்பு என்ன? என்பதை நீ வெளிப்படையா சொன்னதும் நல்லது தான், பெரியவங்க பேச்சை மீற முடியாம இப்போ அந்த பொண்ணு செய்தாலே அப்படி ஏதாவது விபரீத முடிவோ, இல்லை பெரியவங்க பேச்சை மீற முடியாம கட்டாயத்தின் பேரில் கல்யாணம் செய்துக்கிட்டு கஷ்டப்படாம இருந்ததும் நல்லது தானே,” என்றவனுக்கு,
‘இப்போது நடந்ததும் கட்டாயத் திருமணம் தானே, இப்போதும் பிடிக்காத என்னை திருமணம் செய்து கொண்டதில் இவளுக்கு கஷ்டம் தானே,” என்ற எண்ணம் மனதில் தோன்ற,
‘ஆனால் முன்பு ஊரைக் கூட்டி பிடிக்கவில்லை என்று சொல்வேன் என்றவள், இப்போது அவளாக தானே சம்மதித்து மணமேடை ஏறினாள். எதிர்பார்த்த வாழ்க்கை முழுமை பெறாமல் போகவும், ஏதோ ஒரு வாழ்க்கை என்ற மனநிலைக்கு வந்துவிட்டாளோ?’ என்று நினைத்தான்.
பேசிக் கொண்டிருந்தவன், திடீரென அமைதியாகிவிடவும், “நீங்க என்னத்தான் சமாதானம் சொன்னாலும், நான் சொன்ன சொல் மாறாது இல்லையா? அது உங்களை எவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கும்னு எனக்கு அப்போ புரிஞ்சுதோ இல்லையோ, இப்போ நல்லாவே புரியுது. எனக்கு உங்களைப் பிடிக்கல என்பதை மறைமுகமா கூட சொல்லியிருக்கலாம், ஆனா வெளிப்படையா சொல்லி உங்களை கஷ்ட்ப்படுத்திட்டேன். இதுக்கு மன்னிப்பு கேட்டாலும், அந்த காயம் உங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் மறையாது தானே, அதேபோல உங்க வேலையையும் நான் அலட்சியமா சொல்லியிருக்கேன். ஆனா அதை உங்க முன்னேற்றமா மாத்தியிருக்கீங்க, உங்களை நான் இப்போ பிரம்மிப்பாகவும் வியப்பாகவும் தான் பார்க்கிறேன். அதேசமயம் நான் பேசினதுக்கு என்னை நானே கீழிறக்கமா நினைக்கிறேன். உண்மையை சொல்லணும்னா இப்போ இருக்க பக்குவம் எனக்கு அப்போ இல்லை.” என்ற அவளின் பேச்சைக் கேட்டு,
‘இப்போ மட்டும் என்ன பக்குவம் வந்துடுச்சாம் இந்த டீச்சரம்மாவுக்கு,’ என்று அவள் ஏட்டிக்குப் போட்டியாக பேசியதை நினைத்து வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டவன்,
“சரி விடு, கார்ல வரும்போது நான் என்ன சொன்னேன். பழசையெல்லாம் மறந்துடுவோம்னு தானே சொன்னேன். அதெல்லாம் பேசி திரும்ப நமக்குள்ள சங்கடங்கள் எதுக்கு? யாரும் யாரையும் உயர்த்தியும் சொல்ல வேண்டாம், இறக்கமாகவும் நினைக்க வேண்டாம், அதெல்லாம் அப்படியே விட்டுவிடுவோம், நான் முன்ன சொன்ன மாதிரி இனி சுமுகமா நடந்துக்க முயற்சி செய்வோம்,” என்றவனுக்கு, அவள் மௌனத்தையே சம்மதமாக தெரிவித்தாள்.
“அப்புறம், உன்னோட மொபைல் நம்பர் கொடு. நான் என் மொபைலில் சேவ் செய்து வச்சிருக்கிறேன். அதேபோல நீயும் என்னோட நம்பரை சேவ் சேஞ்சு வச்சுக்கோ, ஏதாவதுன்னா உடனே பேசுறதுக்கு உதவியா இருக்கும்,” என்றான். பின் இருவரும் அவரவர் எண்களை பரிமாறிக் கொண்ட பின்,
“அப்போ கிளம்பலாமா? உன்னை ஸ்கூல்ல விட்டதுக்கப்புறம் எனக்கும் கொஞ்சம் வேலையெல்லாம் இருக்கு,” என்று அவன் கூற,
“ம்ம் போலாம்,” என்று அவள் தலையசைக்கவும், இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
அவளை பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு கிளம்பியவன், முன்பு கூறியது போல் மாலை அவனே சென்று அவளையும் கண்ணப்பனையும் பள்ளியிலிருந்து அழைத்து வந்தான். வீடு வந்ததும் சிவமித்ரா நேராக அவர்கள் அறைக்கு செல்ல, உள்ளே ஏற்கனவே இருந்த கட்டிலை எடுத்துவிட்டு இருவர் படுக்கக் கூடிய பெரிய கட்டில் ஒன்றை புதிதாக வாங்கி மாற்றியிருந்தான் சக்தி. அதுமட்டுமில்லாமல் அவள் வேலையை மனதில் வைத்து மேசையும் நாற்காலியும் ஒரு பக்கம் வாங்கி போடப்பட்டிருக்க, அவள் சங்கடமில்லாமல் உடை மாற்றுவதற்காக ஒரு ஓரத்தில் மரத்தால் ஆன தடுப்பும் அமைத்திருந்தான். அவள் அலங்காரம் செய்வதற்காக கண்ணாடியுடன் கூடிய மேசை (dressing table) ஒன்றும் வாங்கி வைத்திருந்தான்.
காலையில் தான் கண்ணப்பன் தேவையானதை வாங்க சொல்லி கூறியிருந்தார். ஆனால் இன்றே அனைத்தையும் அவன் வாங்கி வைத்திருப்பான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. இதெல்லாம் தேவை என்று அவள் நினைத்த அத்தனையையும் அவள் சொல்லாமலேயே அவன் வாங்கி வைத்திருந்ததில் அவனைப் பற்றிய பிரமிப்பு இன்னும் அவளுக்கு கூடி கொண்டே தான் போனது.
அதேபோல் இரண்டு நாளில் அவளது வண்டிக்கான ரிஜிஸ்ட்ரேஷனும் முடிந்ததில் சிவமித்ரா அவளது வண்டியிலேயே பள்ளிக்குப் போக ஆரம்பித்திருந்தாள். இப்படியே ஒருவாரம் ஓடிவிட, சக்திவாசன் சொன்னதுபோல் ஏட்டிக்குப் போட்டியாக பேசுவதை குறைத்து இருவரும் சுமூகமாகவே பழகிக் கொண்டிருந்தனர். இது பெரியவர்களுக்கும் புரிந்து தான் இருந்தது. அவர்களாகவே காலப்போக்கில் அவர்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுவார்கள் என்று அவர்கள் இருவரின் வாழ்க்கையில் தலையிடாமல் அமைதியாக இருந்தனர்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் இருக்க, காலை உணவு வேளையின் போது, “அப்பா, நம்ம ஸ்கூல் பக்கத்தில் இருக்க மெயின்ரோட்ல ஒரு இடம் விலைக்கு வருது. அந்த இடத்தை வாங்கி அங்க ஒரு சினிமா தியேட்டர் கட்டலாம்னு யோசிக்கிறேன். அங்க இருந்து பஸ் ஸ்டாப்பும் பக்கம் தான், அதான் அங்க தியேட்டர் கட்டினா நல்லா போகும், நீங்க என்ன சொல்றீங்க?” என்று சக்திவாசன் தந்தையிடம் கேட்க,
கண்ணப்பன் பதில் சொல்வதற்கு முன்பு சிவமித்ராவே, “வேண்டாம் இது சரிவராது.” என்று பதில் கூறவும்,
“ஏன் சரிவராது?” என்று சக்திவாசன் அவளைப்பார்த்து கேட்டான்.
“அங்க பக்கத்தில் ஸ்கூல் இருக்கு, நிறைய பிள்ளைங்க அந்த பஸ் ஸ்டாப்ல போய் தான் பஸ் ஏறிப் போறாங்க, அப்போ அங்க ஒரு சினிமா தியேட்டர் இருந்தா அது அந்த பிள்ளைங்க மனசில் சலனத்தை ஏற்படுத்தாதா? அதில்லாம பக்கத்திலேயே தியேட்டர் இருந்தா ஸ்கூலை கட் அடிச்சிட்டு படத்துக்கு போகணும்னு பிள்ளைங்களுக்கு தோனும்,” என்று சிவமித்ரா கூறவும்,
“இல்லன்னா ஸ்கூல் பிள்ளைங்க யாரும் சினிமாக்கு ஸ்கூல் கட் அடிச்சிட்டு போறதில்லையா? டவுன்ல இருக்க நம்ம தியேட்டர்ல எத்தனை பசங்க படம் பார்க்க வராங்க தெரியுமா? பசங்க பொண்ணுங்கன்னு எல்லாம் சேர்ந்து கூட வருவாங்க, ஏன் நம்ம வயசுல நாம அப்படி படம் பார்த்ததில்லையா? சினிமா தியேட்டர் நடத்தினாலும் நான் பொறுப்பில்லாம எல்லாம் கிடையாது. ஏ சர்டிஃபிகேட் படம்னா பிள்ளைங்களை ஸ்டிர்க்டா உள்ளே விடமாட்டேன்.” என்று அவன் சொல்லவும்,
“நீங்க சொல்றதெல்லாம் சரிதான், நான் இல்லன்னு சொல்லல, சில வீட்டில் அவங்க பேரண்ட்ஸே அதுக்கெல்லாம் அனுமதி கொடுப்பாங்க, ஆனா சில வீட்டில் இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க, அதுக்கு கட்டுப்பட்டு பிள்ளைங்களும் அப்படி செய்யாம இருப்பாங்க, ஆனா ஸ்கூல் பக்கத்திலேயே சினிமா தியேட்டர் வந்தா, ஸ்கூலுக்கு கிளம்பி வருவது போல வந்து, வீட்டுக்கு தெரியாம திருட்டுத்தனமா பார்க்கும் தைரியம் வரும் அவங்களுக்கு, எப்படி ஸ்கூல் பக்கத்தில் டாஸ்மாக் வரக் கூடாதோ, அதேபோல சினிமா தியேட்டர் வருவதும் நல்லதில்ல என்பது தான் என் கருத்து.” என்று அவள் தீர்மானமாக கூற,
“எனக்குமே மித்ரா சொல்றது சரின்னு தான் படுது சக்தி,” என்று தேவிகாவும் அதை ஆமோதித்தார்.
தேவிகா இதுவரையிலுமே அவளிடம் பட்டும் படாமல் தான் நடந்துக் கொண்டிருக்கிறார். அப்படியிருக்க இப்போது தனக்காக பேசுவார் என்பதை எதிர்பார்க்காத சிவமித்ரா அவரை வியப்போடு பார்த்தப்படி இருக்க,
“நானும் நம்ம சிவா சொன்னதை தான் சொல்ல இருந்தேன் சக்தி, ஸ்கூல் பக்கத்தில் சினிமா தியேட்டர் இருப்பது நல்லதில்ல, அப்படி நீ ஆரம்பிக்க நினைச்சா, அதை முதலில் எதிர்ப்பது நானா தான் இருப்பேன்.” என்று கண்ணப்பனும் திட்டவட்டமாக கூறினார்.
மாமனார், மாமியார் இருவரும் தன் கூற்றை ஆமோதிப்பது போல் பேசவும், ‘இப்போ என்ன செய்யப் போறீங்க?’ என்பதுபோல் அவள் சக்திவாசனை ஒருபார்வை பார்க்க,
“என்னமோ உங்களுக்கு தான் சமூக அக்கறை இருக்கு, எனக்கு அதைப்பத்தி துளி கூட இல்லை என்பதுபோல மாமியார், மாமனார், மருமகன்னு எல்லாம் ஒன்னு கூடிட்டிங்கல்ல, நான் அந்த இடமே வாங்கல போதுமா?” என்று சக்தி கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
அவனிடம் இந்த கோபத்தை எதிர்பார்க்காத சிவமித்ரா, “என்ன மாமா, இப்படி கோபமா போறாங்க, இதுபோல ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் என் கருத்தை சொல்லியிருந்திருக்கவே மாட்டேன். ஆனா நான் சொன்னதும் தப்பு கிடையாதே மாமா,” என்று சிவமித்ரா கவலையோடு கூற,
“கண்டிப்பா தப்பு கிடையாதும்மா, அவன் புரிஞ்சுக்காம நடந்துக்கிறான். அதுக்காக நீ கவலைப்படாத,” என்று கண்ணப்பன் ஆறுதல் கூறினார்.
“நாம எல்லாம் ஒரேமாதிரி பேசவும் அவனுக்கு கோபம் வந்துடுச்சு, ஆனா நம்ம சொன்னது சரின்னு அவன் சீக்கிரம் புரிஞ்சிப்பான். அவன் கோபம் ஒருநாள் கூட தங்காது.” என்று மகனிம் மனம் புரிந்து தேவிகாவும் பேச,
அவர் சொல்வது புரிந்தாலும் இந்த ஒருவாரம் அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருக்க, இப்போது அவன் காட்டிய கோபம் அவளை உள்ளுக்குள் ஏதோ செய்தது.