திரையரங்கம் கட்டுவதைப் பற்றி சக்திவாசன் அன்று பேசியது தான், அதன் பிறகு அவன் அதைப்பற்றி யாரிடமும் எதுவும் பேசவில்லை. வீட்டில் உள்ளவர்களும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அதுவும் இல்லாமல் தேவிகா சொன்னது போல் அந்தநாளே கோபத்தை விட்டு அவன் எப்போதும் போல அனைவரிடமும் சகஜமாக தான் இருந்தான். ஆனால் அவளிடம் மட்டும் அவன் சகஜமாக இல்லாதது போல் சிவமித்ராவிற்கு தோன்றியது.
அந்த பேச்சு வார்த்தை நடந்து பத்து நாட்கள் ஓடி இருக்க, அன்று இரவு மறுநாள் நடத்த வேண்டிய பாடத்திற்கான குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தாள் சிவமித்ரா. அப்போது சக்தி அறைக்குள் வந்தவன், “நாளை மறுநாள் ஸ்கூலுக்கு லீவ் போட முடியுமா மித்ரா?” என்று கேட்க,
“ஏன் ஏதாச்சும் முக்கியமா?” என்று அவள் கேட்கவும்,
“அன்னைக்கு ஒரு இடம் வருது, அதை வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தேன் இல்ல, அந்த இடத்தை அன்னைக்கு தான் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யலாம்னு இருக்கேன்.” என்றான்.
“அப்போ அந்த இடம் வாங்கி, அங்க சினிமா தியேட்டர் கட்ட தான் போறீங்கல்ல,” என்று அவள் கோபமாக கேட்க,
“என்னைப்பத்தி எப்போதும் நலலதாகவே நினைக்க மாட்டீயா? அந்த அளவு சமூக பொறுப்பில்லாத ஆள் இல்லை நான், அப்போ அந்த இடம் வாங்கி தியேட்டர் கட்டணும் நினைச்சேன் தான், ஆனா நீங்கல்லாம் சொன்னதும் எனக்குமே அங்க சினிமா தியேட்டர் கட்றது நல்லதில்லன்னு பட்டுச்சு, ஆனா அதுக்காக அந்த இடத்தை வாங்காம இருக்கணும்னு இல்லை. இடத்தை வாங்கி அங்க ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டலாம்னு தோனுச்சு, அங்க நிறைய கடைகள் வந்தா, பக்கத்தில் பஸ் ஸ்டாப் இருக்கறதால நல்லா பிக்கப் ஆகிடும், கடைக்கு வாடகை வந்தா அதுவும் நமக்கு லாபம் தானே,” என்று அவன் கூறவும், அவளுக்கும் அந்த யோசனை சரியாகவே தோன்றியது.
“ம்ம் நீங்க சொல்றது நல்ல ஐடியா தான், ஆனா உங்க திட்டத்தை மாத்திக்கிட்டும் எதுக்கு என்மேல கோபமா இருந்தீங்க?” என்று அவள் கேட்க,
“கோபமா இருந்தேனா? அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே,” என்று அவன் சொல்லவும்,
“இல்லை கோபமா தான் இருந்தீங்க, அப்படித்தான் எனக்கு தெரிஞ்சுது.” என்றாள் அவள்.
உண்மையிலேயே அவனுக்கு அந்தநேரம் கூட அவள்மீது தனிப்பட்ட கோபம் என்று எதுவும் இல்லை. இருந்தாலும் அவன் கோபம் அவளை பாதித்திருக்கிறது என்பதில் அவனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது.
“அப்போ அந்தநேரம் நீ பேசினதுக்கு கோபம் வந்தது உண்மை தான், ஆனா அதுக்குப்பிறகு யோசிச்சுப் பார்த்தப்போ நீ சொன்னது சரின்னு பட்டுது. கூட உன்னை நினைச்சு பெருமையாகவும் இருந்துச்சு,” என்று அவன் கூறவும்,
“பெருமையா எதுக்கு?” என்று அவள் புரியாமல் கேட்டாள்.
“நம்ம பொண்டாட்டிக்கு மூளை கொஞ்சம் கம்மியாச்சே, இவளுக்கு எப்படி டீச்சர் வேலை கொடுத்தாங்கன்னு யோசிச்சிருக்கேன். ஆனா அன்னைக்கு தான் பொறுப்பா டீச்சர் போல பேசினீயா? அதை நினைச்சு தான் பெருமை.” என்று அவன் கூறவும்,
“இங்கப்பாருங்க, என் வேலையைப் பத்தி பேசாதீங்கன்னு சொல்லியிருக்கேன் இல்ல,” என்று அவனிடம் கோபப்பட்டாலும், அவன் பொண்டாட்டி என்று பேசியது உள்ளுக்குள் அவளுக்கு இனிக்கவே செய்தது.
அவள் கோபத்தைக் கண்டு, “சாரி சாரி,” என்றவன்,
“அப்போ நாளை மறுநாள் லீவ் எடுக்கிறீயா?” என்று கேட்க,
“அதுக்கு எதுக்கு நான் லீவ் எடுக்கணும்?” என்று அவள் பதில் கேள்விக் கேட்டாள்.
“அந்த இடத்தை உன்னோட பேரில் தான் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப் போறேன்.” என்று அவன் கூறவும்,
“என் பேரிலா? எதுக்கு அதெல்லாம், உங்கப் பேரிலேயே வாங்குங்க,” என்று அவள் கூற,
“அப்பா அரசாங்க வேலையில் இருக்காது, அதுவுமில்லாம இந்த வீடும் சர்க்கரை மில்லும் அப்பா பேரில் தான் இருக்கு, அதனால வழக்கமா நான் இடம் வாங்கினா அம்மா பேரில் தான் வாங்கிட்டு இருந்தேன். ஆனா போனமுறை கல்யாண மண்டபம் கட்ட இடம் வாங்கின போது, சீக்கிரம் கல்யாணம் முடிச்சு உன் பொண்டாட்டி பேரில் இடம் வாங்கப் பாரு, அதுவரை உன் பேரிலேயே வாங்குன்னு சொல்லி என் பேரிலேயே ரிஜிஸ்டர் செய்ய சொல்லிட்டாங்க, இப்போ அதுக்கு அவசியமில்லாம உன் பேரிலேயே ரிஜிஸ்டர் செய்துக்கலாம்னு முடிவு செய்துட்டேன்.
நீயும் அரசாங்க வேலையில் இருக்கத்தான், ஆனாலும் இதுவரை உன் பேரில் சொந்தமா எந்த இடமும் இல்லை தானே, அதனால இதை உன் பேரிலேயே வாங்கலாம்னு இருக்கேன். அரசு விதிமுறைக்கு உட்பட்ட எல்லாம் நான் சரியா செய்திடுவேன். அதனால இந்த இடம் உன் பேரில் வாங்கறதில் எந்த பிரச்சனையும் இருக்காது.” என்று அவன் விவரமாக கூறினான்.
“இதைப்பத்தி வீட்டில் அத்தை, மாமாவிடம் சொல்லிட்டீங்களா? அவங்க இதுக்கு என்ன சொன்னாங்க?” என்று அவள் கேட்க,
“இல்லை முதலில் உன்னிடம் தான் சொல்றேன். இனி தான் அம்மா, அப்பாவிடம் சொல்லணும்,” என்று அவன் கூறவும்,
“அய்யோ அத்தை மாமாவிடம் கேட்காமலே முடிவு செய்துட்டீங்க, அவங்க தப்பா நினைச்சுக்கப் போறாங்க, முதலில் அவங்களிடம் விஷயத்தை சொல்லுங்க,” என்றவளிடம்,
“அம்மா, அப்பாக்கு தெரிஞ்சா சந்தோஷம் தான் படுவாங்க, வேணும்னா இப்பவே சொல்றேன். அவங்க என்ன சொல்றாங்கன்னு நீயே தெரிஞ்சுக்க,” என்று அவன் வெளியே செல்ல, அவளும் உடன் சென்றாள்.
வெளியே வரவேற்பு கூடத்திலேயே கண்ணப்பனும் தேவிகாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அவர்களிடம் வந்தவன், “அம்மா, அப்பா, அன்னைக்கு ஒரு இடம் வாங்கற விஷயமா நான் சொல்லிட்டு இருந்தேனே, அந்த இடத்தை வாங்கி முன்ன சொன்ன மாதிரி அங்க சினிமா தியேட்டர் கட்டப்போவதில்லை. அதுக்கு பதிலா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டலாம்னு இருக்கேன். அதில்லாம அந்த இடத்தை நான் மித்ரா பேர்ல வாங்கலாம்னு இருக்கேன்.” என்று அவன் இருவரிடமும் சொல்லவும்,
“நல்ல முடிவு தான் சக்தி, சிவா இந்த வீட்டுக்கு வந்து முதல் முதலா ஒரு இடம் வாங்குறோம், அதை அவள் பெயரில் வாங்குவது தான் சரி.” என்று கண்ணப்பன் கூற,
“இப்படி ஒரு காலம் எப்ப வரும்னு நான் தவமா தவம் இருந்தேன். அந்த நேரம் இப்ப வந்ததுல எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? என் வேண்டுதல் வீண் போகல, எப்படியோ என் பையனுக்கு ஒரு நல்லது செஞ்சுட்டாரு கடவுள்,” என்று தேவிகாவும் பேசுவதைக் கேட்டு சிவமித்ரா அவரை வியப்பாக பார்த்தாள்.
அன்னையும் தந்தையும் சம்மதம் கூறியதும், “பார்த்தீயா அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்கன்னு நான் சொன்னேன் இல்ல, நீதான் ரொம்ப பயந்த,” என்று சக்தி சிவமித்ராவிடம் கூற,
“எதுக்கு பயம்?” என்று கண்ணப்பன் கேட்க, தேவிகாவும் அவர்களை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
“இல்ல மாமா, உங்களிடம் முதலில் சொல்லாம, அவங்களா முடிவு செய்து என்னிடம் வந்து சொல்லவும், நீங்க ரெண்டுப்பேரும் கோபப்படுவீங்கன்னு நினைச்சேன்.” என்று மித்ரா சொல்லவும்,
“சக்தி அவனோட சுய சம்பாத்தியத்தில வாங்கற இடம் அதை அவன் மனைவி பேர்ல வாங்கணும்னு நினைக்கிறான். இதில நாங்க கோபப்பட என்னமா இருக்கு, இதில் எங்களுக்கு கோபப்படவோ, பொறாமைப்படவோ எந்த அவசியமும் இல்லை. எங்களுக்கு இதில் ரொம்ப சந்தோஷம் தான், தேவிகா சொன்னமாதிரி இதைத்தான் நாங்க ரொம்ப காலமா எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்கோம், எங்க மகனோட வாழ்க்கை இப்படியே போய்டுமோன்னு நாங்க கவலைப்படாத நாளே கிடையாது. அந்த குறை தீர்ந்து போச்சு,” என்று கண்ணப்பன் நெகிழ்ச்சியாக பேச,
“முன்ன மனசு சங்கடப்படுவது போல என்ன வேணா நடந்திருக்கலாம், ஆனா இனியாவது நீங்க ரெண்டுப்பேரும் சந்தோஷமா குடும்பம் நடத்தணும், அதைத் தவிர வேற எங்களுக்கு என்ன சந்தோஷம் இருக்கு,” என்று தேவிகாவும் கூறினார்.
இன்னுமே வியப்பு குறையாமல் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை சிவமித்ரா கேட்டப்படி நின்றிருக்க, “எப்போ ரிஜிஸ்ட்ரேஷன் சக்தி?” என்று கண்ணப்பன் கேட்கவும்,
“நாளை மறுநாள் ப்பா, அதுக்குதான் மித்ராவை லீவ் போடச் சொல்லி கேட்டுட்டு இருந்தேன்.” என்று சக்தி பதில் கூற,
“அன்னைக்கு நல்ல நாளான்னு பார்த்தீயா சக்தி,” என்று தேவிகா கேட்டார்.
“அன்னைக்கு நல்ல முகூர்த்த நாள் தான் ம்மா, அதுவுமில்லாம அன்னைக்கு மித்ராவோட பிறந்தநாள் வேற, அதனால அன்னைக்கே அந்த இடத்தை மித்ரா பேரில் ரிஜிஸ்டர் செய்யலாம்னு நினைச்சேன்.” என்று சக்தி கூறவும், இப்போது சிவமித்ரா அவனை வியப்பாக பார்த்தாள்.
“அடடே ஆமா இந்த மாசம் தான் சிவா பிறந்தநாள் இல்ல, இப்போதான் ஞாபகத்துக்கு வருது. நீ சொல்றது போல அன்னைக்கே ரிஜிஸ்ட்ரேஷனை வச்சுக்க,” என்று கண்ணப்பன் கூற,
“என்னங்க, அன்னைக்கு நம்ம ஊர் கோவிலில் பூஜைக்கு சொல்லிடுவோம்,” என்று கணவரிடம் கூறிய தேவிகா,
“அன்னைக்கு கோவிலில் பூஜையை முடிச்சிட்டு, அப்புறம் நீங்க ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப் போங்க,” என்று மகனிடமும் மருமகளிடமும் கூற, இருவரும் அதற்கு தலையசைத்தார்கள்.
பின் இருவரும் அவர்கள் அறைக்கு வந்த போது, வெளியில் நடந்த பேச்சு வார்த்தையில் சிவமித்ரா நெகிழ்ச்சியான மனநிலையில் இருந்தவள், “என் பிறந்தநாள் உங்களுக்கு எப்படி தெரியும்? அம்மா சொன்னாங்களா?” என்று சக்தியிடம் கேட்க,
“உன் அம்மா சொல்லித்தான் உன்னோட பிறந்தநாள் எனக்கு தெரியணும்னு இல்லை. எனக்கு உன்னோட பிறந்தநாள் நல்லாவே ஞாபகம் இருக்கு,” என்ற அவனது பதிலைக் கேட்டு, அவள் மனதிற்குள் குற்ற உணர்வு கூடிக் கொண்டு போனது தான் உண்மை.
“எனக்கே ரெண்டு வருஷமா என் பிறந்தநாள் ஞாபகத்தில் இருக்காது. வழக்கமா அம்மா தான் ஏதாவது ஸ்வீட் செய்து காலையில் பிறந்தநாளை ஞாபகப்படுத்துவாங்க, அப்புறம் என் காலேஜ் ஃப்ரண்ட் ஒருத்தி மறக்காம வாழ்த்து சொல்வா, அப்படித்தான் என் பிறந்தநாள் ஆரம்பிக்கும், அதேபோல என் பிறந்தநாளை ஞாபகம் வச்சிருக்கும் 3 வது நபரும் இருக்கீங்கன்னு இப்போத்தான் தெரியுது,” என்று அவள் கூறவும்,
சிறிய வயதில் பிறந்தநாளென்றால் இருக்கும் மகிழ்ச்சி வளர வளர குறைந்துவிடுகிறது தான், ஆனாலும் சிவமித்ரா பேசுவது ஏதோ பிறந்தோம் வாழறோம் என்ற விரக்தியில் அவள் இருந்திருப்பது போல் தோன்றவும்,
‘எவ்வளவு எதிர்பார்ப்புகளும் கனவுகளும் இருந்த இந்த பெண்ணிற்கு ஏன் இப்படி ஒரு நிலையை தந்தாய் இந்த வழியிலாவது அவளை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்காக தான் இப்படியா? இதற்கு முன்பே அவளை என்னுடன் சேர்த்து வைத்திருந்தால், அவளை எத்தனை மகிழ்ச்சியாக வைத்திருந்திருப்பேன்.’ என்று விதியை கேள்விக் கேட்டவன்,
இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எங்கள் வாழ்க்கையில் எழுதி வைத்திருந்தால் என்ன செய்ய முடியும்? ஆனால் இப்படியாவது விதி இவளை என்னுடன் சேர்த்து வைத்து விட்டதே, இனிமேல் இவளை வாழ்க்கையில் வருந்த விட மாட்டேன் அவளது எதிர்பார்ப்புகளை என்னால் முழுமையாக நிறைவேற்ற முடியுமா? என்று தெரியவில்லை. ஆனாலும் என்னால் முடிந்த அளவு அவளை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்று மனதில் சொல்லிக் கொண்டவன்,
“இந்த ரெண்டு வருஷம் நீ இந்த பூமியில பிறக்கவே இல்லன்னு நெனச்சு அந்தநாளை விட்டு தள்ளு, இப்போ நீ இந்த வீட்டுக்கு வந்து இது உன்னோட முதல் பிறந்தநாள். இதை நாம சூப்பரா கொண்டாடலாம், எப்படியோ அன்னைக்கு ரிஜிஸ்ட்ரேஷன்க்காக லீவு போட தானே போற, ரிஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சதும் அன்னைக்கு ஃபுல்லா உன்னோட பிறந்தநாளை கொண்டாடறோம்,” என்று அவன் கூறவும்,
அவன் கூறியதை கேட்டு, மறக்க வேண்டுமென்று நினைத்தாலும் ஏனோ அசோக் உடன் கொண்டாடிய அவளது பிறந்தநாள் ஞாபகத்திற்கு வந்தது. அவனுக்கு இவளது பிறந்தநாள் தேதி எல்லாம் தெரியவே இல்லை இவளாக சொல்லித்தான் இங்கே போகணும் அங்க போகணும் இப்படி கொண்டாடணும் என்று அவனைக் கேட்டு கேட்டு அந்த நாளை இனிமையாக மாற்றி இருந்தாள். அடுத்த பிறந்த நாளுக்கு அவன் இந்த உலகத்திலேயே இல்லை அதை நினைக்கும் போது மனம் கொஞ்சம் வருந்த தான் செய்தது.
‘இந்த நேரத்தில் எதுக்கு இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்,’ என்று அந்த நினைப்பை ஒதுக்கியவள்,
சக்தியின் விருப்பத்திற்காக அவளது பிறந்த நாளை கொண்டாட நினைத்தவள், “உங்க இஷ்டம்’ என்று கூற,
அவள் யோசிப்பதைக் கண்டு அவள் இதற்கு மறுப்பு தெரிவிப்பாலோ என்று நினைத்து பயந்தவன் அவள் சரி என்றதும் அதற்கே பெரிதாக மகிழ்ந்தான்.
மறுநாள் ராஜலஷ்மியிடம் நாளை அவளது மகளின் பிறந்தநாளுக்காக கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறி காலையில் எல்லாம் சேர்ந்து கோவிலுக்கு செல்லலாம் என்று தேவிகாவே வீட்டிற்கு வந்து சொல்லியிருந்தார்.
இதில் சிவமித்ராவும் என்னத்தான் அன்னை பக்கத்து வீட்டில் இருந்தாலும், தனியாக இருப்பதாக அவருக்கு தோன்றிடக் கூடாதென்று அவ்வப்போது வந்து அவருடன் சிறிதுநேரம் பேசிவிட்டு செல்வாள். இன்றும் அப்படி பேசும்போது சக்தி அவள் பெயரில் இடம் வாங்கவிருப்பதை கூறவும், ராஜல்ஷ்மிக்கு அதைக்கேட்டு மிகவும் மகிழ்ச்சியாகிவிட,
“நீ அந்த வீட்டு மருமகளா போனா உன்னை மகாராணி மாதிரி நடத்துவாங்கன்னு நான் சொன்னேனா இல்லையா? இப்போ நான் சொன்னது நிஜமாகிடுச்சு பார்த்தீயா மித்து, அவங்க உன் பேரில் இடம் வாங்கப் போறாங்க என்பதற்காக மட்டும் சொல்லல, அவங்க எல்லோர் மனசும் தங்கம். இதை நானும் உன் அப்பாவும் உணர்ந்ததால தான் சக்தியை உனக்கு மாப்பிள்ளையா முடிவு செய்தோம்,
கையில் வெண்ணெயை வச்சுக்கிட்டே நெய்க்கு அலையறது போல, சக்தி என்கிற பொக்கிஷத்தை வேண்டாம்னு சொல்லி, போயும் போயும் ஒரு குடிகாரனை கல்யாணம் செய்துகிட்ட, அவன் குடிகாரனா இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஏமாத்துக்காரனாகவும் இருந்திருக்கிறானே,” என்று ராஜலஷ்மி கூறும்போது, சிவமித்ரா பதில் பேச முடியாமல் தலைகுனிந்தபடி இருக்க,
“உன்னை கஷ்டப்படுத்த இதை சொல்லல மித்து, இந்த உலகத்தை புரிஞ்சுக்காம இருந்திட்டீயேன்னு தான் சொன்னேன். இந்த கல்யாண விஷயத்தில் உன்னை மட்டும் தப்பு சொல்லவும் முடியாது. உனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிச்சிடுச்சுன்னு நாங்களும் கட்டிக் கொடுத்திட்டோம், இதுக்கும் உங்க அப்பா ஆள் வச்சு நல்லா விசாரிச்சும் என்ன புண்ணியம், நாம ஏமாந்து நிற்கிறோமே, ஆளை வச்சு விசாரச்சதில் சொத்துப்பத்து பத்தி தெரிஞ்சிக்க முடியலன்னா பரவாயில்லை. ஆனா கெட்டப்பழக்கம் இருக்கான்னு விசாரிச்சதில் திருப்தியான பதில் வந்ததா தான் உன் அப்பா சொன்னாரு, இதில் மாப்பிள்ளை வேலை செய்யும் ஆஃபிஸ்ல விசாரிக்க போனபோது மாப்பிள்ளையே அங்க இருந்ததால அவர் சொன்ன வேலைப்பத்திய விஷயம் உண்மையா இருக்கும்னு அப்பா நம்பிட்டாரு, கடைசியில் நாம ஏமாந்தது தான் மிச்சம். எங்களுக்கு நீ ஒரே பொண்ணு. எங்க காலத்துக்குப் பிறகு இந்த வீடு நிலமெல்லாம் உனக்குத்தான்னு நல்லா தெரிஞ்சு நம்மளை ஏமாத்தியிருக்காங்க,
ஏதோ கொஞ்சமாச்சும் நாம புண்ணியம் செய்திருக்கும்போல, அதான் கடவுளா பார்த்து அந்த வாழ்க்கையில் இருந்து உனக்கு விடுதலை வாங்கி தந்துட்டாரு, இல்ல அவனோட உன் வாழ்க்கை எப்படி இருந்திருக்குமோ, அதுக்குப்பிறகும் உன்னை நினைச்சு நான் கவலைப்படாத நாளே இல்லை. நாம இந்த ஊருக்கு வந்து கண்ணப்பன் அண்ணன் இந்த கல்யாண விஷயமா கேட்டு இல்லன்னாலும் கொஞ்சநாளில் உன் கல்யாணத்தை பத்தி நானே பேசியிருந்திருப்பேன். ஆனா அப்பா இருந்து பேசி முடிச்ச சம்பந்தமே இப்படி ஆகிப் போச்சு, இதில் திரும்ப இப்படி நாம ஏமாந்து போகக் கூடாதேன்னு மனசுல கொஞ்சம் பயம் இருந்துட்டு தான் இருந்துச்சு,
ஆனா இப்போ எனக்கு எந்த பயமும் இல்லை. உன்னை ஒரு நல்ல பாதுகாப்பான இடத்தில் தான் சேர்த்திருக்கேன். இனி எனக்கு ஏதாச்சும் ஆனாலும் கவலையில்லை.” என்று ராஜலஷ்மி உணர்ச்சிவசப்பட்டு பேசவும்,
“அம்மா, ஏன் ம்மா இப்படியெல்லாம் பேசற,” என்று அன்னையை கடிந்தாள் சிவமித்ரா.
“உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்ச நிம்மதியில் பேசறேன் மித்து, இப்போதும் நான் அதிகமா அவங்களை புகழறதா கூட உனக்கு தோனலாம், கல்யாணமாகி நான் இந்த ஊருக்கு வந்ததில் இருந்து அவங்களோட பழகுறேன். நாம செஞ்ச காரியத்துக்கு இன்னும் வேற யாராச்சும் இருந்திருந்தா நம்ம முகத்தை கூட பார்த்திருக்க மாட்டாங்க, ஆனா இவங்க எப்படி நடந்துக்கிட்டாங்கன்னு நான் சொல்லித்தான் உனக்கு தெரியணும்னு இல்லை. அதை புரிஞ்சிக்கிட்டு சக்தியோட சீக்கிரம் சந்தோஷமா குடும்பம் நடத்தப்பாரு, அப்போத்தான் எங்க மனசும் நிறையும்,” என்று அவர் கூறவும்,
அன்னை இந்த குடும்பத்தை பற்றி சொல்லும் போதெல்லாம் கொஞ்சம் அதிகமாக சொல்கிறாரோ என்று தான் ஆரம்பத்தில் சிவமித்ரா நினைத்திருக்கிறாள். அவளும் அந்த அளவுக்கு முன்னர் அவர்களோடு பழகி இருக்கவில்லை தான்,ஆனால் இப்போது அவர்களுடன் இருந்து பார்க்கும்போது, அன்னை சொல்வது நூறு சதவீதம் சரி என்று தான் அவளுக்கு தோன்றியது. ஆனால் அப்படி ஒரு குடும்பத்திற்கு மருமகளாகும் தகுதி தனக்கு இருக்கிறதா என்பதுதான் இப்போது அவள் சந்தேகமே,
முன்பு அவள் நடந்து கொண்டதை நினைக்கும்போதும், இப்போது அதை மறந்து அவர்கள் இவளிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்வதை பார்க்கும்போதும், ஒருவேளை கண்ணப்பன் மாமா இந்த திருமண முடிவை எடுத்திருக்கவில்லை என்றால் அந்த வீட்டிற்கு இன்னும் நல்ல மருமகளும் சக்திக்கு நல்ல மனைவியும் கிடைத்திருக்கலாம் என்பதாகத்தான் அவன் நினைத்தாள்.
ஆனால் எவ்வளவு நல்ல மனைவி கிடைத்திருந்தாலும் சக்தியால் மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியுமா? என்று கேட்டால் சக்தியிடம் கண்டிப்பாக அதற்கு பதில் இருக்காது. அவனுக்கு இந்த உலகத்திலேயே சிறந்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருந்தாலும், அவன் இவளைத்தான் நேசித்தான். முன்பு என்ன நடந்திருந்தாலும் இப்போது இவளை திருமணம் செய்ததில் தான் அவன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான் என்பது அவளுக்கு இன்னுமே புரியவில்லை. அவன் காதல் புரிந்திருந்தால் தானே இதுவும் அவளுக்கு புரியும்.